அண்மையில் கனடாவுக்குப் போயிருந்தபோது எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தைச் சந்தித்தேன். ஒரு நிமிடம்கூட இடைவெளி இல்லாமல் தொய்வின்றித் தொடர்ந்த உரையாடல் அது. அந்த உரையாடலில் சொற்கள் தீர்ந்துபோனதாக உணர்ந்த தருணத்தில் இருவரும் எழுந்துவிட்டோம். அ.முத்துலிங்கம், ஜெயமோகனின் எழுத்தைப் பற்றிச் சொன்ன ஒரு வாசகத்தை வழியெங்கும் நினைத்தபடி வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். (இந்த வாசகத்தை எங்கோ வாசித்திருக்கிறேனே…)
“தமிழில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறத் தகுதி வாய்ந்தவராக ஜெயமோகனை வாசிக்கும்போது உணர்கிறேன். அவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டாலே அது சாத்தியம். தகுதியானவர்கள் முன்வந்து அதைச் செய்யவேண்டும்”என்றார்.
‘காடு’வாசித்திருக்கும் ஒருவர் அந்தக் கூற்றை ஆமோதித்தே ஆகவேண்டும். புனைவுகளில் ஜெயமோகனால் கையாளப்படும் உக்கிரமான மொழிப்பிரவாகத்தில் அமிழ்ந்து போனது பலருக்கும் நிகழ்ந்திருக்கலாம். ஒருவிதமான மன ஆழத்துக்குள் அழைத்துக்கொண்டு செல்கிற மொழி. பித்தின் களிப்பேருவகையும் பதட்டமும் ஒருசேர அளிக்கிற எழுத்து. அதை அவரது கட்டுரைகளில் கண்டதில்லை.
உலோகத்தை புத்தகக் கண்காட்சியில் பார்த்ததும் வாங்கவேண்டும் என்ற ஆவல் மேலிட்டதற்கு மேற்குறிப்பிட்ட ஈர்ப்பு மட்டும் காரணமாக இருக்கமுடியாது. மேலும், உலோகம் கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடு. ‘மேலான எல்லாவற்றையும் மேலோட்டமாக எழுதி விற்றுவிடுகிறார்கள்’என்றொரு எண்ணம் எனக்குள் இருந்துவருகிறது. ஆனால், உலோகத்தின் முன்னட்டையில் ஜெயமோகனின் பெயர் பெரிய எழுத்துக்களில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்க, கீழே இருந்த வாசகம் என்னை ஈர்த்தது. “ஈழப்போர் பின்னணியில் ஒரு திகைப்பூட்டும் திரில்லர்!”
திகிலை அல்லது மரணபயத்தை எப்படித் திரில்லாக்க முடிந்தது என்பதை அறியும் ஒரு சாதாரண ஆவலால் உந்தப்பட்டே அந்தப் புத்தகத்தை வாங்கினேன். ‘ஆவல் அறத்தைச் சாய்த்துவிட்டதா?’என்ற கேள்விக்கு, குற்றம் இழைத்துவிட்டதான ஒரு புன்னகையோடு ‘ஆம்’என்பதில் நான் ஒன்றும் குறைந்துபோய்விடப் போவதில்லை.
‘ஆட்டைக் குளிப்பாட்டி சந்தனம் பூசுவது வெட்டுவதற்குத்தான்’ என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உண்மையில் எந்த முன்முடிவும் இல்லாமல் உலோகத்தை வாசிக்கவேண்டும் என்று நினைத்தேன். அண்மைக்காலத்தில் கையில் எடுத்து கீழே வைக்காமல் (இந்த ஒரே மூச்சில் என்று சொல்வார்களே..) வாசித்து முடித்த நாவல் அல்லது திரில்லர் என்றால் உலோகந்தான். அவ்வளவு விறுவிறுப்பாகப் ‘பின்னப்பட்ட’ கதை. அல்லது உலோகத்தில் பல இடங்களில் ஜெயமோகனால் சாடப்படும் ‘கண்மூடித்தனமான’ வரலாறு.
கதை இதுதான்: ஈழத்திலிருந்து இயக்கத்தால் அனுப்பப்படும் ஒரு மனித ஆயுதம், (அது இலக்கிய ரசனையுடையது) இந்திய உளவுத்துறையால் பாதுகாத்துப் பராமரிக்கப்படும், முன்னாள் போராளியும் இந்நாளில் துரோகி என்று இயக்கத்தால் சொல்லப்படுபவருமான ஒருவரை எப்படிக் கொன்றது என்பதுதான் கதை. மேலதிகமாகஇ ஈழச்சிக்கலில் இந்திய உளவுத்துறையின் வகிபாகமும் பேசப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். இந்த ‘வகிபாகம்’என்ற சொல்லை தாம் உட்காரும் இடத்தின் கீழ் வைத்து சிலர் தேய்த்துவிட்ட காரணத்தால் நான் அதை வெறுக்கிறேன்.
“இந்த நாவலில் அரசியல் சார்ந்த ஏதும் இல்லை”என்று, நாவலின் முன்குறிப்பில் ஜெயமோகன் தற்காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், ஒருவருடைய புனைவுலகம் என்பதற்கும் அவருடைய அரசியல் நிலைப்பாட்டுக்கும் சம்பந்தம் இருக்கும் என்பதில் நமக்கெல்லாம் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது. ஷோபா சக்தி ‘குண்டு டயானா’ போன்ற ஒரு கதையை எழுதுவதில் எவரும் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஈழப்பிரச்சனையை முன்னிறுத்தி எழுதப்பட்டது சாருவின் ‘உன்னத சங்கீதம்’. அதிலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அந்தச் சிறுகதையில் இந்திய அமைதி (?) காக்கும் படை சிங்களப் பெண்ணொருத்தியை பாலியல் வல்லுறவுக்காளாக்கியிருக்குமாம். ‘சனதருமபோதினி’யில் அந்த வரலாற்றுப் புரட்டு வெளியாகியதாகவும் சொல்லப்படுகிறது.
ஈழவிடுதலைப் போராட்டம் வீழ்ச்சியடைந்த பிற்பாடு ஜெயமோகனது கட்டுரைகளில் மொழியப்பட்ட கருத்துக்களை வாசித்தவர்கள் உலோகம் எந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வார்கள். சாருகூட ஈழவிடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியின் பிறகு ‘வன்முறையின் தோல்வி’என்றொரு அதியற்புதமான கட்டுரையை எழுதியிருந்தார். அதில், அஹிம்சையால் பேரினவாதம் வெல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற போதனை இருக்கும். ராஜபக்ஷேயிடம் கொஞ்சம்போல அஹிம்சையைக் கேட்டு வாங்கத்தான் ஈழத்தமிழர்கள் நினைத்தார்கள். அதற்குள் இந்தியா என்ற வல்லாதிக்கம் தலையிட்டு கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் மண்ணில் சிதறடித்துவிட்டது. இந்த ‘வன்முறையின் தோல்வி’யைச் சிலாகித்து ஜெயமோகன் ‘சாருவுக்கு ஒரு கடிதம்’ எழுதினார். அதாகப்பட்டது, ‘நானும் இதைத்தாங்க சொல்றேன்… புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்க… நல்லாச் சொன்னீங்க’என்று பாராட்டியிருப்பார். மேற்கூறப்பட்ட இரு கட்டுரைகளும் வெளியான பிற்பாடு, ‘எந்த நேரத்தில் என்ன கதை பேசுகிறீர்கள்?’என்ற எரிச்சல் மேலோங்கியிருக்கும் கட்டுரை ஒன்றை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருந்தார். அதில், நடைமுறையைப் புரிந்துகொள்ளாத அதிமேதாவித்தனத்தை ‘அறிவு வேசைத்தனம்’என்று சாடியிருந்தார்.
இந்தியா என்ற தேசத்தின் இறையாண்மையில், அதன் ஜனநாயகப் பண்புகளில், ஒருமைப்பாட்டில், அது குறித்த விழிகசியும் பெருமிதத்தில் மிகுந்த பற்றுறுதி மிக்கவராயிருக்கிறார் ஜெயமோகன். அது அவரது நிலைப்பாடு. ஒருவர் தேசபக்தி மிகுந்தவராயிருக்கிறார் என்பதைக் குறைசொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. ஹிட்லரைப் பின்தொடர்ந்த ஜேர்மானிய மக்களைச் சாட இலாயக்கற்றவர்கள் போல, நாமும் இருந்துவிடுவதே நியாயம்.
ஆனால், வரலாற்றைப் புனைவாக கட்டவிழ்க்கும்போது அல்லது கொஞ்சம் கவித்துவமாகச் சொல்வதானால் மொட்டவிழ்க்கும்போது, அந்த வரலாற்றோடு தொடர்புடையவர்கள் அரங்கிற்கு வந்தாகவேண்டியிருக்கிறது. ‘ஆசிரியன் செத்துவிட்டான்’என்று இதற்குச் சப்பைக்கட்டுக் கட்ட வேண்டியதில்லை. ஈழம் என்ற சொல் அரசியல்வாதிகள் உட்பட எத்தனையோ பேருக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்திருக்கிறது என்பதன் அடிப்படையில், நாகர்கோவிலில் இருக்கிற, நாடறிந்த ஒரு எழுத்தாளருக்கு கதைக்கான கருவைக் கொடுத்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சிதான். வானக் கூரையின் கீழ் இருக்கும் அனைத்தைக் குறித்தும் (தமிழ்சார்ந்த, தமிழல்லாத) எழுதிவிடவேண்டும் என்ற அவரது ஆர்வத்தை மதிக்கிறேன். ஆயினும், கீழ்க்காணும் கருத்துக்களைத் தனது கட்டுரையில் விதைத்திருக்கும் ஒருவரால் ‘உலோகம்’எழுதப்பட்டிருக்கிறது என்பதை மறந்துவிட்டு அந்தத் திரில்லரை வாசிக்க முடியவில்லை.
அண்மையில், மிக அண்மையிலிருந்து ஆரம்பிக்கலாம். ‘மீனவர்கள் படுகொலைகள்’என்ற இடுகையில், ‘மீனவர்கள் கொல்லப்படுவதை இந்தியா கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறதே…’என்ற ஆதங்கத்திற்குப் பதிலளிக்கையில் இந்தியாவை அவர் இப்படித் தாங்கிக்கொள்கிறார்.
“இந்திய ஊடகத்துறையிலும், அறிவுத்துறையிலும் சீன ஆதரவு மனநிலை ஓங்கி ஒலிக்கிறது. இந்தியாவை ஒரு மாபெரும் அடக்குமுறை தேசமாக, ஜனநாயகமற்ற தேசமாக, எதிர்மறைச் சக்தியாக இந்திய மக்களிடையே சித்தரிக்கும் குரல்களே நம் ஊடகங்களில் நிறைந்துள்ளன. அவர்களுக்கு சீனாவின் ஆதிக்கப்போக்கு, சர்வாதிகாரம், தங்கள் மக்கள் மேல் அந்நாடு செலுத்தும் அடக்குமுறை எல்லாமே முற்போக்காகத் தெரிகின்றன.”
இது எனக்கு எதை ஞாபகப்படுத்துகிறதென்றால், நான் எனது அண்ணாவைப் பற்றிக் குறை சொன்னால், எனது அம்மா தனது மருமகளைப் பற்றிக் குறை சொல்ல ஆரம்பித்துவிடுவதை நினைவுபடுத்துகிறது. ‘அண்ணா பொறுப்பில்லாவர்’என்றால், ‘அவனுக்கு வந்த மனுசி சரியில்லை’என்ற தொனியில் அம்மா ஆரம்பிப்பார். ‘அவனை மொதல்ல நிறுத்தச் சொல்லு… நான் நிறுத்துறேன்’என்ற ‘நாயகன்’ குரலும் உங்களுக்கு நினைவில் வரலாம்.
இந்தியா ஒரு அடக்குமுறை தேசம் இல்லை. ஜனநாயகத்தைக் கண்ணேபோல் போற்றிப் பாதுகாக்கும் நாடு… இன்னபிறவற்றை காஷ்மீரும், ஈழமும், மணிப்பூரும், நாகாலாந்து, அஸ்ஸாமும் கிழிந்து தொங்குவதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளமுடியும்.
ஒடுக்கப்படும் மக்களுக்காக தன்னால் இயன்ற வழிகளில் எல்லாம் குரல்கொடுத்துவரும் அருந்ததிராயை, ‘அடிப்படையான வரலாற்று உணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததிராய் போன்ற குருவிமண்டைகள்’என்று இகழ்ந்த, தன்னையும் மீறித் தனது காழ்ப்புணர்வை வெளிக்கொட்டிவிட்ட ஜெயமோகன்தான் உலோகத்தை எழுதியிருக்கிறார் என்பதைக்கூட ஒரு வசதிக்காக நாம் மறந்துவிடலாம். ‘ஐஸ்வர்யா ராயும் அருந்ததி ராயும்’என்ற கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.
“அருந்ததிராயின் நிலைப்பாடுகளில் எப்போதும் மாறாமல் இருக்கும் இரு அம்சங்கள் உண்டு. இந்தியாவின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அவரது ஆதரவு உண்டு.”
சரி… அருந்ததிராய் மேலைத்தேய ஊடகங்களால் விளம்பரப் பவுடர் பால் ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு ஆரோக்கியமற்ற அரசியல் குழந்தை என்று (ஒரு பேச்சுக்காக) ஜெயமோகனை கொஞ்சம்போல ஏற்றுக்கொண்டு முன்னகரலாம்.
‘விடுதலைப் புலிகளை அழிக்கிறேன் பேர்வழி’என்று யுத்தசன்னதம் கொண்டு புறப்பட்ட ராஜபக்ஷவுக்கு முன்பலம், பின்பலம், பக்கபலமாக நின்று முள்ளிவாய்க்காலில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்று போட்ட இந்தியாவைப் பற்றி ‘எனது இந்தியா’என்ற கட்டுரையில் ஜெயமோகன் எப்படிச் சிலாகிக்கிறார் என்றால்….
“இந்த நாடு இன்னமும் ஜனநாயகத்தில் வேரூன்றியதாகவே உள்ளது என்றே நான் நினைக்கிறேன். இங்கே இன்னமும் கருத்துக்களின் குரல்வளை நெரிக்கப்படவில்லை. இங்கே இன்னமும் சிந்தனைக்கு உரிமை இருக்கிறது. இது இன்னமும் அடிப்படையான நீதியில் வேரூன்றியதாகவே உள்ளது. அந்த நீதி இந்நாட்டு எளிய மக்களின் நீதியுணர்வின்மீது நிலைநாட்டப்பட்டுள்ளது.
இந்த நாடு மானுட சமத்துவத்துக்கான வாய்ப்புகளை இன்னமும் முன்வைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதற்காக எல்லாப் போராட்டங்களுக்கும் இங்கே இடமிருக்கிறது. ஒடுக்குமுறைக்கும் சமத்துவத்திற்கும் ஊழலுக்கும் சுரண்டலுக்கும் எதிராக இங்கே இன்னமும் ஒன்றுதிரண்டு சமராட வாய்ப்பிருக்கிறது. இந்தத் தேசத்தில் தன் உரிமைக்காகக் கிளர்ந்தெழும் ஒரு குரல்கூட முற்றிலும் உதாசீனம் செய்யப்படுவதில்லை. இங்கே ஒருங்கிணைந்து எழுந்த உரிமைக் கோரிக்கைகள் அனைத்தும் சற்றுப் பிந்தியேனும் எவ்விதத்திலேனும் என்பதை ஐம்பதாண்டுகால இந்திய வாழ்க்கையை கூர்ந்து கவனிப்போர் அறியலாம். இப்போது அரவாணிகள் பெற்றுவரும் சட்ட அங்கீகாரத்தை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச்சூழலில், முத்திரை குத்தப்பட்டு, வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்றபோதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே…’வெல்க பாரதம்’”
இன்று இந்திய குடியரசு தினம். இப்பேர்ப்பட்ட ஒரு பொன்னாளில், மேற்கண்ட சொற்களைத் தட்டச்சவேண்டி நேர்ந்த உடனிகழ்வினையிட்டு உள்ளுக்குள் வியந்தபடி, மனம் நெகிழ்ந்தபடி எழுதிக்கொண்டிருக்கிறேன். கதராடையுடன் எளிமையான தோற்றத்தில் மேடையில் நின்றபடி தனக்கு முன்னால் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பார்த்து ‘வெல்க பாரதம்’என்று கையை உயர்த்தும் ஒரு தன்னலமற்ற தலைவனை (ஜெயமோகனின் சாயல்கொண்ட) மனக்கண்ணில் காண்கிறேன். அந்த தேசபக்தி என்ற பெருவெள்ளம் நான் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் இந்த மேசையின் விளிம்பை நனைத்தபடி மேலேறிக்கொண்டிருக்கிறது.
ஆனால்…
எளிய மக்களுக்கு இரங்கிப் பணியாற்றியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மருத்துவப் போராளி பினாயக் சென் மேற்கண்ட வாசகங்களை வாசிக்க நேர்ந்தால், தனது வேதனைகளையும் மறந்து தொண்டை கிழியும்படியாகச் சிரிக்கக்கூடும். தண்டகாரண்யாவில் உள்ளவர்கள் இதை வாசிக்க நேர்ந்தால் ஒருவருக்கொருவர் பொருள்பொதிந்த கசந்த புன்னகையுடன் கூடிய பார்வையைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளக்கூடும். மக்கள் தொகையில் ஐந்திற்கு ஒன்று என்ற விகிதாசாரப்படி இராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரிகளுக்கு மேற்கண்ட வாசகங்களை வாசித்துக் காட்டினால், ‘அடப் பாவிகளா’என்று அலமலந்துபோவது உறுதி. இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களால் பலிகொள்ளப்பட்ட பிள்ளைகளது நினைவை நெஞ்சில் சுமந்தபடி வன்னியில் நிராதரவாக அழுதுகொண்டிருக்கும் ஒரு தாயிடம் மேற்குறித்த வாசகங்களைப் பகிர்ந்துகொண்டால்…. மண்ணை அள்ளித் திட்டி கைநீட்டிப் பொரிந்து தள்ளும் சாபங்கள் நிச்சயம்.
‘ஒரு குரல்கூட முற்றிலும் உதாசீனப்படுத்தப்படாத நாடென’ப் ஜெயமோகன் புளகாங்கிதப்பட்டுக்கொள்ளும் சனநாயக நாடொன்றின் மாநிலமாகிய தமிழகத்தில்தான், உயிரோடு இருந்து சொல்லமுடியாத, அரசெதிர்ப்புக் குமுறல்களை எழுதிவைத்துவிட்டுத் தன்னையே கொழுத்திக்கொண்டு செத்துப்போனான் முத்துக்குமார் என்ற இளைஞன்.
தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மாமியார் வீட்டுக்குப் போகிற மருமகனைப் போல ‘நாம் தமிழர்’இயக்கத் தலைவர் சீமான் அடிக்கடி சிறைச்சாலைக்குப் போய் வந்துகொண்டிருப்பதற்குக் காரணம் என்னவென்கிறீர்கள்? கருத்துரிமைச் சுதந்திரந்தான்!
பெரியார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழருவி மணியன், கவிஞர் தாமரை, அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் தடியடி பட்ட ம.க.இ.க.வினர், நீதிமன்ற வளாகத்தில் தமது குருதியால் நீதியை எழுதிய வழக்கறிஞர்கள், ‘இனவழிப்புக்கான ஆயுதங்களை இலங்கைக்கு அனுப்பாதே’என்று கோவையில் போராடிச் சிறைசென்ற பெரியார் திராவிடக் கழக உறுப்பினர்கள்… இவர்களிடமெல்லாம் கேட்டால் சொல்வார்கள் ‘கருத்துரிமை’யின் முழுமையான கருத்தாக்கத்தை.
புனைவுகளின் அழகியல், நயம், தரத்திற்காக ஒருவரைக் கொண்டாட முடிகிற மனதால், புனைவுகளின் பின்னாலுள்ள அரசியலைக் கொண்டாட முடிவதில்லை. ‘உலோகம்’அத்தகைய அரசியலைத்தான் பேசுகிறது. இனிப்புக்குள் நஞ்சு பொதிந்திருப்பதைப்போல.
போராளிகள் மூளைச்சலவை செய்யப்பட்ட, கொலைவெறியேற்றப்பட்ட மனித ஆயுதங்களன்றி வேறில்லை. கண்ணுக்குத் தெரியாத இடங்களிலிருந்து வந்துசேரும் கட்டளைச் சொற்களால் செலுத்தப்படுபவர்கள் என்பதற்குமேல் அவர்கள் யாருமில்லை என்ற நஞ்சு பொதியப்பட்டிருக்கிறது.
‘இலக்கியவாதி-அரசியல்வாதி-அறிவுஜீவி’என்ற கட்டுரையில் (உயிரோசை இணைய இதழில் வெளிவந்தது) யமுனா ராஜேந்திரன் சொல்லியிருப்பதை பொருத்தப்பாடு கருதி இங்கு எடுத்துக் காட்டுகிறேன்.
“தமிழகத் தேர்தலை முன்வைத்து அவர் (ஜெயமோகன்) எழுதிய கட்டுரையில், பேரினவாதத்தால் ஈழத்தமிழர்கள் மீதாக சுமத்தப்பட்ட படுகொலைகள் மற்றும் வன்முறைகளை, இந்திய தமிழக ஆட்சியாளர்களின் கொள்கைகளால் விளைந்த தமிழகத் தமிழர்களின் வறுமையுடனும் பட்டினி வாழ்வுடனும் ஒப்பிட்டு எழுதுவது ஜெமோவின் நியாயமற்ற செயல்.
ஷோபா சக்தியின் ‘கொரில்லா’நாவல் குறித்த பதிவுகள், வலைத்தள விமர்சனம், ஈழத்தின் விடுதலைப் போராட்டம், அதனது ஆயுதப் போராட்டம் குறித்து முன்கூட்டியே ஜெயமோகனின் மனப்போக்கை முன்வைத்த ஆவணங்களாகும். மனிதனின் இயல்பான மிருகத்தனத்திற்கும் ஆயுதப் போராட்டத்தின் வன்முறைக்கும் பூடகமாக முடிச்சுப் போடப்பட்ட ஒரு விமர்சன மொழியை கொரில்லா நாவல் விமர்சனத்தில் ஜெமோ பாவித்திருப்பதை எம்மால் உணரமுடியும்.”-யமுனா ராஜேந்திரன்.
ஜெயமோகன் ‘தேர்தல் முடிவுகள்’கட்டுரையில் செய்ததையே வேறொரு விதத்தில் ஆதவன் தீட்சண்யா மதுரையில் நடந்த ‘கடவு’கூட்டத்தில் செய்தார். அதாவது, ஈழத்தமிழர்கள் இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழகத் தமிழர்களின் வறுமையை ஜெயமோகன் பிரதியீடு செய்தாரெனில், ஆதவன் தீட்சண்யா சாதிக்கொடுமையைப் பிரதியீடு செய்து நிரவினார். புதைகுழிகளை, ‘அறிவுஜீவிகள்’ எதையெதையெல்லாம் வைத்து நிரவமுடியுமோ அதையதையெல்லாம் இட்டு நிரவுகிறார்கள்.
‘வெறுப்புடன் உரையாடுதல்’என்ற தலைப்பில், மே 26இ 2009 இல் ஜெயமோகனால் எழுதப்பட்ட கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒரு பங்கு இதேபோன்ற உள்நாட்டுப் போர்களில் அழிந்துகொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப் போர்களைக் கண்டும் நாம் என்ன செய்தோம் எனப் பேசுவதில்லை. அந்தப் போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுதவெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டி வளர்க்க முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒருசாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கு அறியப்படுகிறார்கள்.”
ஒடுக்கப்படும் சிறுபான்மை இன மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை ஜெயமோகன் ‘ஆயுதவெறி’என்ற சொப்புக்குள் அடக்கிவிடுகிறார்.
அந்தச் சொப்பிலிருந்து எடுத்த திரில் மற்றும் திகிலை ஊட்டும் சின்னச் சிமிழ்தான் இந்த ‘உலோகம்’.
------- ------ ------
இப்போது, மேலேயிருக்கும் கதை நூலேணியை கீழே இறக்கிப் பற்றிக்கொள்வதன் மூலம் சரசரவென மேலேறிச் செல்லலாம்.
கதை இதுதான்: ஈழத்திலிருந்து இயக்கத்தால் அனுப்பப்படும் ஒரு மனித ஆயுதம், (அது இலக்கிய ரசனையுடையது) இந்திய உளவுத்துறையால் பாதுகாத்துப் பராமரிக்கப்படும், முன்னாள் போராளியும் இந்நாளில் துரோகி என்று இயக்கத்தால் சொல்லப்படுபவருமான ஒருவரை எப்படிக் கொன்றது என்பதுதான் கதை.
உலோகத்தை வாசிப்பவர்கள் ஈழ அரசியலில் ஓரளவு பரிச்சயம் உடையவர்களாக இருந்தால் உடனடியாக இந்தப் ‘பலியுயிர்’, ஊகித்துவிடுவார்கள். இவ்வாறாக இயக்கத்தின் தேடுபொறியில் பலர் இருந்தாலும், சட்டென நினைவுக்கு வருவது வரதராஜப் பெருமாள்தான். இந்திய ‘அமைதி’காக்கும் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது, அவர்களது கைப்பொம்மையாகச் செயற்பட்டார் என்று விடுதலைப் புலிகளாலும் அவர்களது ஆதரவாளர்களாலும் குற்றஞ்சாட்டப்பட்டவரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா பிரிவு) யின் தலைவரும், அமைதி காக்கும் படையினரால் வடக்கு-கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டபோது அதன் முதல்வராக இருந்தவரும், இ.அ.கா.படையினர் திரும்பிச் சென்றபோது அவர்களோடு கூடவே போய் ஒரிஸ்ஸாவில் பல்லாண்டு காலம் தங்கியிருந்தவரும் (அல்லது தங்கவைக்கப்பட்டிருந்தவரும்), 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் வல்லாதிக்க சக்திகளாலும் சதிகளாலும் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பிற்பாடுஇ 2010 ஜூலையில், ‘தமிழ் மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக’ நாடு திரும்பியவருமாகிய வரதராஜப் பெருமாளே உலோகத்தில் ‘பொன்னம்பலத்தார்’என்ற பாத்திரமாக வருகிறார் என்று கற்பிதம் செய்துகொண்டு வாசித்தால் ‘வரலாறு’ தௌ்ளத்தெளிவாகிவிடுகிறது.
‘கொல்’என்ற ஒற்றைச்சொல் கட்டளையுடன் இயக்கத்தால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட மனித ஆயுதமான சார்லஸ் முதல் பலியெடுப்பை (சிறீ மாஸ்டரை) வெற்றிகரமாக நிறைவேற்றியபின் தனக்குள் சொல்லிக்கொள்கிறான்.
“எனக்கென எந்த வஞ்சமும் பகையும் இல்லை. நோக்கமும் இல்லை. எனக்கென எந்த இலக்கும் இல்லை”
சார்லஸ்க்கு நோக்கம் இருக்கிறதோ இல்லையோ ஜெயமோகனுக்கு இருக்கிறது. தன்னால் நிகழ்த்தப்பட்ட கொலையின் அழகை, மு.தளையசிங்கத்தின் ‘ரத்தம்’என்ற கதையுடன் பொருத்தி நினைக்கக்கூடிய ஒருவனை, இந்தியா வந்தால் சுந்தரராமசாமியைப் பார்க்கவேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்த ஒருவனை வெறும் மனித ஆயுதமாகச் சித்தரிக்க வேண்டிய தேவை எழுத்தாளருக்கு இருந்திருக்கிறது. ஜெயமோகனின் அழகியல் இங்கு இயங்கியிருக்கிறது. உக்கிரமான மொழியழகு.
“மாஸ்டரின் குருதி பெரிய பூ இதழ் விரிவதுபோல விரிந்தது. அதன் விளிம்புகள் தரையின் தூசியைப் பற்றிக்கொண்டு சுருண்டு வளைந்து முன்னால் நகர்ந்தன.”
இயக்கத்தால் அனுப்பப்பட்ட ஒருவன், இந்திய உளவுத்துறையின் கையாளாக நடித்து, அவர்களது உத்தரவிற்கிணங்க சிறீ மாஸ்டர் என்பவரைக் கொன்றபின் டெல்லிக்கு அனுப்பிவைக்கப்படுகிறான். அங்கு செல்வதன் முன் அவன் ஒரு வேலை செய்கிறான். அதாவது, ‘அண்ணை… அண்ணை’என்று தன்னை சகோதரனாகவே பாவித்து கூப்பிட்டபடி பின்னால் திரிந்த இயக்கப் பெடியன் ஒருவனின் மனைவியை டெல்லிக்குப் போவதற்கு முன் புணர்கிறான். இன்னும் கொஞ்சம் புரியும்படியாகச் சொன்னால், டெல்லியில் காத்திருக்கும் பொன்னம்பலத்தாரைப் ‘போடுவதற்கு’ முன்னால் கர்மசிரத்தையோடு நண்பனின் மனைவியைப் ‘போட்டு’விடுகிறான்.
‘உலோகம்’கிழக்குப் பதிப்பகத்தில் Paper pack வடிவத்தில் கிடைக்கிறது. மேலும், அது ‘ஈழப்போர் பின்னணி’யை அட்டைப்படத்தில் கொண்டிருக்கிறது. மேலும் அதன் விறுவிறுப்புக் காரணமாக புத்தகக் கண்காட்சியிலே நின்ற நிலையிலேயே வாசித்துவிட்டதாக ஜெயமோகனின் வாசகர் ஒருவர் அவருக்குக் கடிதம் போடுகிறார். மேலும், அவர் அதைத் தனது வலைத்தளத்திலே பிரசுரித்திருக்கிறார்.
ஆக, ஈழத்து நிலவரங்கள் அறியாத ஒரு எளிய வாசகனின் மனதில், சாகசங்களை எழுத்தில் தேடும் ஒரு இளைஞனின்- இளம்பெண்ணின் மனதில் ஒரு இயக்கத்தவனின் சித்திரம் எப்படி விழுத்தப்படுகிறது என்பதுதான் இந்த ‘அரசியல் சாராத’நாவலின் நுட்பம்.
சார்லஸ் டெல்லிக்குப் போகிறான். அங்கே சகல வசதிகளோடும் இந்திய உளவுத்துறையின் கண்காணிப்பின் கீழ் இருக்கும் தனது இலக்கான பொன்னம்பலத்தாரைச் சந்திக்கிறான். பொன்னம்பலத்தாரிடம் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் சார்லஸ் தனது ஊர் ‘அல்லைப்பிட்டி’என்றபோது, எனக்கு சுருக்கென்றது. பொன்னம்பலத்தாருக்குத் தெரியாது சார்லஸ் தன்னைப் ‘போட’வந்திருப்பது. அல்லது தனது மகளை ‘போட’வந்திருப்பது. அவர் சொல்கிறார். அல்லது அவரது உதடுகள் ஊடாக ஜெயமோகன் சொல்கிறார்.
“அப்ப நான் என்னை ஒரு நெப்போலியன் எண்டு நினைச்சுக்கொண்டு இருந்தனான். இயக்கத்திலே வேறே யாருக்குமே படிப்பு கிடையாது. இங்கிலீஷ் பேசத் தெரியாது. அமெரிக்க வரலாறோ, ஐரோப்பிய வரலாறோ தெரியாது. இந்தியாவிலே இருந்து டிப்ளமேட் வந்தா சந்திச்சுப் பேச அவங்களால முடியாது. சும்மா கள்ளக் கடத்தலுக்குத் தோணி ஓட்டி வளந்த பெடியள். ஆனா எனக்கு எல்லாமே தெரியும். அப்ப நான்தானே தலைவன்? எல்லாரும் என்னைத்தானே ஏத்துக்கிடணும்?”
ஆயிற்றா?
பொன்னம்பலத்தார் பரிதாபத்திற்குரியவர்தான்! அவருக்காக உண்மையில் வாசகர்கள் இரங்கத்தான் செய்வர். இயக்கத்தாலோ இராணுவத்தாலோ எவராலுமோ தேடப்பட்டுக்கொண்டே இருப்பதுஇ உயிருக்காகத் தப்பித்து ஓடிக்கொண்டே இருப்பது என்பதைப் போல மனக்கிலேசம் ஊட்டும் வாழ்வு பித்துநிலைக்கு இட்டுச்செல்லக்கூடியது. மூச்சுவிட இயலாத அந்தரம். தேடப்படுவதை விட தற்கொலை செய்துகொள்ளலாம். ‘கோவிந்தன்’வாசித்தபோதும்இ கவிஞர் செழியனின் இன்னொரு நாட்குறிப்புப் புத்தகமும் வாசித்தபோதும் உண்மையிலேயே மனம் வேதனைப்பட்டது.
வைஜயந்தி ஓரிடத்தில் சார்லஸிடம் சொல்வாள்.
“அப்பா சாகாம இந்த ஆட்டம் முடியாது. இது ஆரம்பிச்சு எட்டு வருஷம் ஆகுது அம்மான். ஒரு ஆயுள்தண்டனை எண்டாக்கூட அது இங்க பன்னிரண்டு வருசந்தான். ராஜீவைக் கொலை செய்தவங்களுக்குக் கூட இங்க ஆயுள் தண்டனைதான் குடுத்திருக்கினம். ஒண்டும் செய்யாம நாங்கள் ஏன் ஆயுள்தண்டனை அனுபவிக்கோணும்?”
நியாயமான கேள்விதான்; ஆயுள் தண்டனை மட்டும் கொடுக்கப்பட்டிருந்தால். வழக்கு மற்றும் தண்டனை விபரங்கள் வைஜயந்தி அறியாதவை. அவள் பாவம். ஜெயமோகனால் உருவாக்கப்பட்ட அப்பாவிக் கதாபாத்திரம். சார்லஸ் என்ற மனித ஆயுதம் அந்த அழகான, அப்பாவியையும் பிறகு திட்டமிட்டு படுக்கையில் சாய்த்துவிடுகிறது. இயக்கத்தில் இருப்பவனுடைய ஒரே உன்னத இலட்சியம் பார்க்கிற, பழகுகிற பெண்களை எல்லாம் படுக்கையில் சாய்ப்பதன்றோ…!
உலோகத்தில் பொன்னம்பலத்தாரைப் பார்த்து ஜெயமோகன் ஒரு நீளமான உரையை ஆற்றியிருக்கிறார். மன்னிக்கவும் சார்லஸ் ஆற்றியிருக்கிறான். அது நிறுத்தாமல் நாலரைப் பக்கம் நீண்டுசெல்வது.
“……..அதன்பின் பாபர், அதன்பின் அக்பர், அதன்பின் நெப்போலியன், அதன்பின் ஹிட்லர்… அத்தனை பேரும் ‘வரலாறு காத்திருக்கிறது’என்றுதான் கூவியிருப்பார்கள். ஆனால், இந்தப் பெரிய தலைகள்கூட வரலாற்றில் இல்லை. இருப்பது அவர்களின் பெயர் மட்டுமே. அவர்கள் யார் என்று நமக்கு எப்படித் தெரியும்? அவர்களின் கனவுகளும் பயங்களும் சஞ்சலங்களும் எதுவுமே வரலாற்றில் இல்லை. அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் அவர்களை எப்படிச் சித்தரித்தார்களோ அப்படி அவர்கள் வரலாற்றில் இடம்பெற்றார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் தாங்கள் மூழ்காமல் மிதக்க விழைந்தார்கள். அதற்கு, மேலும் விட்டில்களை வளர்க்க விரும்பினார்கள். ஆகவே அவர்களுக்கு முன்னுதாரணம் தேவைப்பட்டது. பாபர் வாளைத் தூக்கி ஜெங்கிஸ்கானின் பெயரைச் சொல்லி அறைகூவியிருப்பார். பாபரின் பெயரை அக்பர் சொல்லியிருப்பார். அவ்வளவுதான் அவர்களின் வரலாற்று முகம். அதற்கு மேல் ஒன்றுமே இல்லை. வரலாறு என்பது ஒரு மாயை. இன்றைய வரலாற்று நாயகர்கள் இன்று அவர்கள் தப்பிப் பிழைப்பதற்காக நேற்றைய வரலாற்றை உருவாக்குகிறார்கள்.”
புரிகிறதா வாசகப் பெருமக்களே…! எனக்கு நன்றாகப் புரிந்தது. வரலாறு என்று ஒன்றுமில்லை. பிரதியை எழுதி முடித்ததும் ‘ஆசிரியன் செத்துவிட்டான்’என்றாலும், சஞ்சீவி மருந்தையோ மாயத்தையோ கொண்டுவந்து ஆசிரியரை உயிர்ப்பித்து எழுப்பி நான் சொல்வேன்…”எனக்கு நன்றாகப் புரிகிறது.”
இந்த வரலாற்றிலிருந்து அற்றுப் போகும் விதி, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும் எங்கள் மதிப்பிற்கு உரியவராய் இருக்கிற மகாத்மா காந்தி அவர்களுக்கும் பொருந்துமா என்று அறிய விரும்புகிறோம்.
சார்லஸ் ஓரிடத்தில் சொல்கிறான்.
“குண்டடி பட்டபோது நான் நர்ஸிங் கூடத் தெரியாத இயக்கத்துப் பெண்களால்தான் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டேன். இங்கே ஒருவேளை ஒரு நல்ல டாக்டர் முள்ளை எடுப்பதைப் போல அதை எடுத்துவிடக் கூடும்”
அப்படியா?
பொன்னம்பலத்தாரின் மகள் வைஜயந்தி சார்லஸிடம் காதல் வயப்பட்டபின் நெருக்கமாக இருக்கும்போது சொல்வாள்.
“அப்பா சொல்லுவாங்கள். ஒரு நாளைக்கு மொத்த ஈழச் சனத்தையும் அவங்கள் துரோகி எண்டு சொல்லிப் போடுவாங்கள் எண்டு”
அங்கே என்ன ‘மியாவ்’என்று ஒரு சத்தம்… அது உங்களுக்குக் கேட்கிறதா? ஆம்… பூனை வெளியில் வந்துவிட்டது. இது ‘கொரில்லா’படித்த, இந்திய தேசபக்த, இறையாண்மையைக் கொண்டாடும் பூனை.
அது மேலும் என்ன சொல்கிறதென்று கேளுங்கள்.
இயக்கத்தால் மனித ஆயுதமாக அனுப்பப்பட்டவன்தான் சார்லஸ் என்று இந்திய உளவுத்துறைக்குத் தெரிந்துபோகிறது. அவர்கள் சார்லஸை மிகக் கடுமையாக மிகக் கொடுமையாகச் சித்திரவதை செய்கிறார்கள். அவன் கேட்கிறான்.
“நான் இயக்கத்திலை இருந்தா டீலுக்கு வருவேன் எண்டு நினைக்கிறியளோ…?”
அதற்கு அவர்கள் சொல்கிறார்கள்.
“அது நீங்க சின்ன ஆளா பெரிய ஆளாங்கிறதைப் பொறுத்தது. சின்ன ஆள் யாருமே டீலுக்கு வர்றதில்லை. பெரிய ஆள்னா டீலுக்குப் பிரச்சனையே இல்லை. உங்களுக்குத் தெரியாதுன்னு நெனைக்கிறேன். இந்த இயக்கத்திலே ஒரே ஒருத்தர் தவிர வேற எல்லாருமே எங்ககிட்ட எப்பவாவது பேரம் பேசினவங்கதான்.”
அந்த மட்டில் பிழைத்தோம்!
முப்பதாயிரம் போராளிகள் தங்கள் இளமை வாழ்வை மண்ணுக்காகத் துறந்து புதைந்துபோனார்கள். அந்தப் போராளிகளை ‘பேரம் பேசிய பேமானிகள்’என்கிறது இந்தப் புனைவு.
தங்களது அடிப்படை வாழ்வுரிமைகளுக்காகப் போராடும் எளிய மக்களை, உள்நாட்டினுள்ளும் கடல்கடந்தும் ஆயுதக் கரம் கொண்டு அடக்கி ஒடுக்குகின்றன அரசாங்கங்கள். அவற்றைத் தட்டிக் கேட்காமல், அதன் தாளத்திற்கு இயைபுறும் தேசபக்த கோசங்களையும் புனைவுப் புண்ணாக்குகளையும் எழுதிப் பெருக்கிக்கொண்டிருக்கிறார் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய ஒரு எழுத்தாளர். இத்தகையோரை வாசிக்கும்போது, பேரினவாத சிங்களச் சமூகத்தில் பிறந்தபோதிலும், ஒடுக்கப்படும் சிறுபான்மைச் சகோதரர்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்த காரணத்தால் கொன்று பழிதீர்க்கப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, காணாமலடிக்கப்பட்ட ஊடகவியலாளரும் கார்ட்டூனிஸ்டுமாகிய பிரகீத் எக்னெலிகொட, இலங்கையிலிருந்து தப்பியோடி மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் நிமல்கா ஃபெர்னாண்டோ மற்றும் ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே’என அறுதியிட்டுக் கூறும் நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோரின் ஞாபகம் வருகிறது. முத்துக்குமாரும் அவனோடு செத்துக் கரிந்த பதினொரு பேரும் நினைவில் வருகிறார்கள்.
சொந்த மக்களைப் பயங்கரவாதிகளாக்கி அந்நியப்படுத்தும் அரசாங்கங்களும், அந்த உண்மை தெரிந்தும் தெரியாதாராக கண்மூடித்தனமாக ‘சல்யூட்’அடிக்கும் தேசபக்தர்களும் திருந்தவோ தங்கள் மேல் தெறித்திருக்கும் அப்பாவி சனங்களின் குருதியையிட்டு வருந்தவோ போவதில்லை.
இதைத்தான்‘அறிவு வேசைத்தனம்’என்பது. (வார்த்தைக்கு நன்றி: எஸ்.ரா.)
83 comments:
நெத்தியடி.... இதுக்கெல்லாம் திருந்திற ஜென்மமா இதுகள். விடுங்கோ...
//சொந்த மக்களைப் பயங்கரவாதிகளாக்கி அந்நியப்படுத்தும் அரசாங்கங்களும், அந்த உண்மை தெரிந்தும் தெரியாதாராக கண்மூடித்தனமாக ‘சல்யூட்’அடிக்கும் தேசபக்தர்களும் திருந்தவோ தங்கள் மேல் தெறித்திருக்கும் அப்பாவி சனங்களின் குருதியையிட்டு வருந்தவோ போவதில்லை//
ம்... எம் குருதி ஆடைகளை விற்று பணம் சம்பாதிப்பவர்கள். ரத்தமும் சதையும் தொலைத்து எத்தனையோ வலிகளையும் தாங்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டத்தை எப்படி எப்படியல்லாமோ விமர்சித்து பொருள் பெருக்கும் இவர்கள் குறித்து வரலாறு நன்கறியும்.
//இதைத்தான்‘அறிவு வேசைத்தனம்’என்பது// நிட்சயமாக....
நல்ல பதிவு தோழி.
In my genuine view he is one of dangerous culprit in tamil people and culture.. and literary works.
தமிழ்நதி,
ஜெயமோகனது புனைவைக் கொண்டாடும் அளவுக்கு அவரது கட்டுரைகளை ஏற்க முடியாது என்ற உங்களது வாதத்தில் ஒரு முரண்பாடு இருக்கிறது.
உலோகத்தில் வெளிப்பட்டிருக்கும் அரசியலை உங்களால் கண்டுபிடிக்க முடியும். காரணம் நீங்கள் ஈழத்தோடும், அதன் போராட்ட வரலாற்றோடும் தொடர்புள்ளவர். ஆனால் இதே தொடர்பு இல்லாத மற்ற வாசகர்கள் அவரது மொழியின் உக்கிரத்தில் ஆழ்த்தப்பட்டு இந்த கதையை கொண்டாடுவார்கள்.
இந்த விதி அவரது மற்ற படைப்புகளுக்கும் உண்டுதானே? அதாவது ஈழம் தொடர்பற்ற அவரது மற்ற புனைவுகளும் ஏதோ ஒரு அரசியலை சார்ந்தே இருக்கின்றன. அந்த அரசியல் உங்களுக்கு பரிச்சியமில்லை என்பதால் அந்த புனைவை நீங்கள் கொண்டாடுகிறீர்கள் என்று கூட சொல்ல்லாமே?
காடு போன்ற நாவலில் கூட அரசியல் இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம். இந்த உலகில் எல்லா புனைவுகளிலும் அரசியல் உள்ளது. அதை நாம் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால் அது நமது குற்றமே அன்றி அது புனைவின் வெற்றியல்ல.
ஜெயமோகனது கட்டுரைகள், புனைவுகள் அனைத்திலும் ஒரு அரசியல்தான் இருக்கிறது.அதில் ஏதும் முரண்பாடு இல்லை. வாய்ப்பிருந்தால் என்றாவது எழுதுகிறோம். நன்றி
பின்னூட்டங்களை தொடர....
மணிப்பூர் - 60.000
நாகாலாந்து - 60.000
மிசோரம் - 70.000
திரிபுரா - 3.0000
அஸ்ஸாம் - 40000
இதெல்லாம் இந்த மாநிலங்களின் லாட்டரி சீட்டுகளுக்கு விழும் பரிசு தொகைகளல்ல ..
வளரும் வல்லரசால் வாய்க்கரிசி போடப்பட்ட மக்களின் எண்ணிக்கை...
ஈழத்தை போல தேசிய இன போராட்டத்தில் அந்த மக்கள் இழந்த உயிர்களின் எண்ணிக்கை
வாழ்க இந்திய ஜனநாயகம்.
செருப்படி....ஜெயமோகன் போன்றவர்களை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும்,தொடருங்கள்...
அன்பின் தமிழ்நதி,
ஜெயமோகன் ஒரு இலக்கிய வியாபாரி. அவர் கொண்டுள்ள இலக்கியத் தகுதி, நீண்ட காலம் ஒரு துறையில் இருந்தால், காலப்போக்கில் கைவரப்பெரும் ஒரு தகுதி. அவ்வளவே. அவர் சொல்லும் தேசபக்தி... அகர்பத்தி... அடைவோம் முக்தி... காமெடிகளுக்கு அவரே உண்மையானவராக இருக்கப் போவதில்லை. அவற்றை அவர் ஏதோ ஒரு சுயநல - வருவாய்- புகழ் கருதி செய்து வருகிறார். இருக்கட்டும்.
சரியாய் அவர் உலோகம் எழுத ஆரம்பிக்கும் முன், என் நீங்கள் விவசாயம் - விவசாயிகள் பற்றி எழுதுவதில்லை? என்று கேட்டேன். விவசாயம் பற்றி எழுத தன்னால் முடியாதென்றும், ஏனென்றால் தனக்கு மாடு எப்படி மூச்சு விடும், அசை போடும், கால் மடக்கிப் படுக்கும் என்று தெரியாது. அடிப்படை நுண் தகவல்கள் இல்லாமல் ஒரு படைப்பை எழுதுவது தவறு என்று சொன்னார். அடுத்த வாரமே உலோகம் ஆரம்பித்தது. ஈழப்பண்பாடு, பழக்க வழக்கம், உணவு, மொழி உபயோகம் எதுவுமே தெரியாத ஒரு அரைகுறை குப்பையாக அந்தத் தொடர் தொடர்ந்து... பின் முடிக்கப்பட்டது. அடிப்படை நுண் தகவல்கள் எல்லாம் வேண்டாம் குறைந்த பட்சம் அடிப்படைத் தகவல்கள் கூட இல்லாத அந்தக்குப்பை ஒரு திரில்லர் நாவல் என்று அழைக்கப்படுவது கொடுமை. அதை அவர் ஏன் எழுத வேண்டும்? ஈழப் போராட்டம் நசுக்கப்படும் வேளையில் எழுதி அதன் மூலம் பணம், புகழ் சம்பாதிக்கத்தான். இவர் சேகுவேரா, லெனின், மார்க்ஸ், சுபாஷ், பெரியார், பிரபாகரன் என எல்லோரையும் விமர்சிப்பார். நீங்கள் கேள்வி கேட்டால் விவாத வளையத்தின் வெளியே நீங்கள் போய்விட்டதாக சொல்லி தப்பிப்பார். எது அவர் வளையம் என்றால், முட்டாள்தனமான தேசபக்தி, ஜாதி வேண்டும், எல்லோரும் சமம் கிடையாது இது போன்ற உளறல்கள்.
அவரை புறந்தள்ளிவிட்டு, உண்மையில் ஈழம் இழந்ததையும், பெற்றதையும், பெறவேண்டியதையும் பற்றிப் புலம்பெயர் தமிழர் எவராவது எழுதினால்தான் உண்டு. அதற்கான முயற்சி நடைபெறும் என்ற நம்பிக்கையுடன்,
-ஒரு சக மனிதன்.
வண்டார்யா வசவு ,
ஜெயமோகன் அருந்ததிராய் கட்டுரையிலிருந்து ஆரம்பித்து , மாவோயிசம், மருதைய பாட்டா வரை கிழித்து தோரணம் கட்டு தொங்கவிட்டுக் கொண்டுள்ளார் அதியதிதீவிர வசவு புரட்சியாளர்களை,
அதற்க்கு காத்திரமான ஒரு பதிலை எழுத மார்க்சிய படிப்பு தேவை , வினவு கோஷ்டியில் அது யாருக்கு இல்லை , பினாமியாக சூப்பர்லிங்ஸ் என்ற பெயரில் ஒரு வசை கட்டுரைதானே எழுத முடிந்தது ,
இதில் ஜெமோ படைப்புகளை விமர்சிக்க போகிறதாம் வினவு .
முதலில் ஜெயமோகனால் காற்றில் பறக்கவிடப்பட்ட மார்ச்சிய சித்தாந்தத்தை பிடித்து கட்டுங்கள் .
வசைகளை தவிர்த்து ஒரு கட்டுரை எழுதுங்கள் , உங்கள் மார்க்சிய ஞானத்தை நாங்களும் அறிந்துகொள்கிறோம் .
//இதெல்லாம் இந்த மாநிலங்களின் லாட்டரி சீட்டுகளுக்கு விழும் பரிசு தொகைகளல்ல ..
வளரும் வல்லரசால் வாய்க்கரிசி போடப்பட்ட மக்களின் எண்ணிக்கை...
ஈழத்தை போல தேசிய இன போராட்டத்தில் அந்த மக்கள் இழந்த உயிர்களின் எண்ணிக்கை
//
கம்யூனிச ரஷ்யா - 2,00,00,000 - 2 கோடி
கம்யூனிச சீனா - 1,20,00,000
கம்யூனிச போல்பர்ட் - 4,00,000
இதெல்லாம் என்ன தெரியுமா ? சொந்த நாட்டு மக்களை எதிரிகளாக்கி கம்யூனிஸ்ட்கள் கொன்று குவித்த மக்கள் தொகை .
இந்தியாவில் ஆயிரக்கணக்கில் இருக்க இங்கிருக்கும் ஜனநாகமே காரணம் . இந்த நாடாவது மிஞ்சியிருக்கடும் தவாரிஸி.
//சரியாய் அவர் உலோகம் எழுத ஆரம்பிக்கும் முன், என் நீங்கள் விவசாயம் - விவசாயிகள் பற்றி எழுதுவதில்லை? //
கரக்டுங்க , நீங்கள் ஏன் கேன்சரை பற்றி எழுதுவதில்லை , நீங்கள் ஏன் அணுவிஞ்ஞானத்தில் சோப்பு தயாரிப்பதில்லை என எழுதுவதில்லை , நீங்கள் ஏன் டிஎன் ஏவில் மாற்றம் செய்வதை பற்றி எழுதுவதில்லை .
கேளுப்பா கேளு , இந்த அண்ணங்கிட்ட கேக்காம .... என வடிவேலுவின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது .
அவர் தனக்கு தெரிந்ததைதான் எழுத முடியும் என்கிறார் , உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் எழுதுங்களேன்
உலோகத்தின் கதையில் உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் அதை நீங்கள் சொல்லலாம். அதற்கு உங்களுக்கு உரிமையிருக்கிறது. ஈழ அரசியலை போராட்டங்களை தமிழக/இந்திய எழுத்தாளர்களைவிட நீங்கள் அதிகம் அறிந்திருப்பீர்கள். எனவே அந்த முரண்பாடுகளை தகவல் பிழைகளை சுட்டிக்காட்டலாம். ஆனால், உங்கள் தரப்பை வலியுறுத்த நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள கட்டுரை வரிகள் திரிபு போலக் காட்சியளிக்கின்றன.
உதாரணத்திற்கு, தமிழக வரலாற்றைப் பற்றி பேசுகையில், ‘ராஜ ராஜ சோழன் கங்கை முதல் ஈழம் வரை ஆண்டான்’ என்று பெருமிதமாக பேசும்போது, ‘ஈழத்தில் இனமே அழிந்துவிட்டது, என்ன பெருமிதம் வேண்டிக் கிடக்கிறது?’ என்று கேட்பதுபோல் உள்ளது. ’எனது இந்தியா’ போன்ற கட்டுரைகள் எழுதப்பட்ட context-ஐ விட்டுவிட்டு அல்லது தெரியாததுபோல் காட்டிக்கொண்டு ஈழப்பிரச்சனையோடு அல்லது உலோகம் நாவலோடு தொடர்புபடுத்தி பேசுதல் என்பது.....??
காஷ்மீர் முதல் கூர்காலாந்து, அஸ்ஸாம், ஆந்திரப்பிரதேசம் வரை பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. அப்பிரச்சனைகளில் எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்று தெரியாமல் முழிக்கும் பொது ஜனத்திற்கு ‘இந்திய தேசியம்’ என்ற கருத்தாக்கமே நன்மைகளை அளிக்கக்கூடியது என்ற கருத்தினைதான் ஜெ.மோ. சொல்வதாக நான் நினைக்கிறேன். ‘இந்திய தேசியம்’ என்ற உணர்வு இல்லாமல் போனால் ‘அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவுக்கு கொடுத்துவிடலாமே, எதற்கு வீணாக சீனாவை எதிரியாக்கிக்கொள்ள வேண்டும்’ என கடைக்கோடி தமிழன் நினைக்க ஆரம்பித்துவிடுவான். சோவியத் துண்டுதுண்டாகி வீழ்ந்த கதை நமக்குத் தெரியும். ஈழப்பிரச்சனையில் இந்திய அரசின் நிலைப்பாட்டை மட்டும் தொடர்பு படுத்தி இந்திய தேசியத்திற்கு எதிராக பேசுவது மட்டும் எப்படி அறிவுஜீவித்தனமாகும்?
/* ‘காடு’வாசித்திருக்கும் ஒருவர் அந்தக் கூற்றை ஆமோதித்தே ஆகவேண்டும். புனைவுகளில் ஜெயமோகனால் கையாளப்படும் உக்கிரமான மொழிப்பிரவாகத்தில் அமிழ்ந்து போனது பலருக்கும் நிகழ்ந்திருக்கலாம். ஒருவிதமான மன ஆழத்துக்குள் அழைத்துக்கொண்டு செல்கிற மொழி. பித்தின் களிப்பேருவகையும் பதட்டமும் ஒருசேர அளிக்கிற எழுத்து. */
சமீபத்தில்தான் ’காடு’ பற்றி விமர்சனம் எழுதிமுடித்தேன். அதில் ‘காடு பெண்களுக்கு எத்தகைய வாசிப்பு அனுபவத்தைத்தரும் எனத்தெரியவில்லை’ என எழுதியிருந்தேன். பகிர்வுக்கு நன்றி.
http://nithyakumaaran.blogspot.com/2011/01/blog-post.html
மிகவும் ஆபத்தான மேதாவி. புறக்கணித்துச் செல்லாமல் தொடர்ந்து வாசித்து அம்பலப்படுத்தப் படவேண்டியவர்.
சாணக்யன் , நல்ல கேள்விகள்.
ஈழப்போர் தொடங்கியபோதே குடும்பத்துடன் இந்தியா வந்தவர் தமிழ்நதி. இந்த நாடு உங்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. வாழ்க்கை கொடுத்தது. ஆனால் இது ஃபாசிச நாடு. இந்த நாடு ஃபாசிச நாடென்றால் ஏன் இங்கே இருக்க வேண்டும்? ஏன் இங்கே குடியுரிமை வாங்கவேண்டும் ?
இந்தியாவந்து இந்த நாடு அளிக்கும் பாதுகாப்பில் உயர் நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழும் நீங்கள் இதுவரை என்ன பாசிசத்தை நேர்வாழ்வில் சந்தித்துவிட்டீர்கள் தமிழ்நதி ?
இந்த நாடு அழியவேண்டுமென்று சீன கைக்கூலிகளாக வாழ ஆசைப்படும் , நேர் வாழ்க்கையில் எந்த துயரையும் சந்திக்காத முட்டாள் அறிவுஜீவிகளுக்கு வேண்டுமானால் ஆசை இருக்கலாம் ,
இந்த தேசம் தந்த நிம்மதியான வாழ்வை வாழும் நீங்கள் எப்படி ஆசைபடுகிறீர்கள் இந்தியா அழிய வேண்டுமென்று ?
துயரத்துடன் , ஆத்திரத்துடன் ஒரு இந்திய தமிழன்
வேறு சில வேலைகளில் இருப்பதால் அவற்றை முடித்துவிட்டு நண்பர்களே உங்களோடு உரையாட வருகிறேன்.
அநிருத்தன்,
என்னைப் பற்றி நீங்கள் குமுறியிருக்கும் எதுவுமே உண்மையான தரவுகள் இல்லை. ஊகங்களின் அடிப்படையில் பேசவேண்டாம். நான் இந்தியப் பிரஜை அல்ல என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிச் செல்கிறேன்.
”துயரத்துடன், ஆத்திரத்துடன் ஒரு இந்தியத் தமிழன்”என்று முடித்திருக்கிறீர்கள். நல்லது. எனக்கு ஆத்திரம் இல்லை. துயரம் மட்டுமே. இந்தியாவைப் பற்றி எழுதியதற்கே கொதித்துப் போயிருக்கிறீர்கள். நாங்கள்...?என்ன செய்வதென்று சொல்லுங்கள்.மிகுதியை உங்கள் ஊகத்திற்கு விட்டுச் செல்கிறேன். வெளியில் சென்று திரும்பியதும் விரிவான பதிலைத் தருகிறேன். காத்திருங்கள்.
நன்றி வெண்காட்டான்
கருத்துக்கு நன்றி குருபரன். எனது வலைத்தளத்திற்குப் புதிதாக வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். முன்பு
பார்த்ததில்லை.
காமா, உங்கள் பெயரைத் தொடர்ந்தேன். உங்கள் பெயரில் வலைப்பூ இருக்கிறதாவெனப் பார்க்க.. இல்லை. நன்றி
நண்பரே.
வினவு,
”அதாவது ஈழம் தொடர்பற்ற அவரது மற்ற புனைவுகளும் ஏதோ ஒரு அரசியலை சார்ந்தே இருக்கின்றன. அந்த
அரசியல் உங்களுக்கு பரிச்சியமில்லை என்பதால் அந்த புனைவை நீங்கள் கொண்டாடுகிறீர்கள் என்று கூட
சொல்லலாமே?”
ஆம் சொல்லலாம். ஆனால், காடு போன்றதொரு நாவலிலும் அப்படியொரு அரசியல் இருக்குமா என்று எனக்கு
ஐயமாகவே இருக்கிறது. மிக அழகான, காடு சார்ந்த, நுட்பமான காதல் கதை அது.விரிவான கட்டுரையின் மூலம்
புனைவுகளின் அரசியலைத் தெளிவுபடுத்துவீர்கள் என நம்புகிறேன். ஆனால், அவ்வளவு பெரிய புத்தகங்களைப்
படித்து அதன் உள்ளரசியலை பகுத்தாய்ந்து எழுதுவதற்கு நீண்டகாலம் எடுக்கும்.
வாருங்கள் ஸ்டாலின் குரு,
தரவுகளே இருந்தாலும், ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
சரவணன்-சாரதி,
உலோகத்தில் பல மொழிப் பிரயோகங்கள் தவறாக இருந்தன. சில கலந்துகட்டி அடிக்கப்பட்டிருந்தன. அதாவது, நாகர்கோயில்-ஈழம்-தமிழகத்தில் பொதுவாக உலவுமொரு பேசுமொழி(எந்த மாவட்டத்திற்குள்ளும் அடக்கமுடியாதது)
மூன்றும் கலந்திருந்தது. நான் கவிஞர் சுகுமாரனின் “நாளைக்கு மழை பெய்தது“என்ற வரிகளை (ஒரு குழந்தை எழுதிய கடிதத்திலிருந்து) நினைத்துக்கொண்டேன். அதையும் கட்டுரையில் சேர்த்தால் மிக நீண்டுவிடும் என்ற
காரணத்தால் எழுதவில்லை. நன்றி.
அநிருத்தன்,
வினவை நோக்கி உங்களால் வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்களுக்கு அவர்களே பதில் சொல்வார்கள். நீங்கள்
உங்களது சொந்தப் பெயரில் வந்திருந்தால் உரையாட இலகுவாய் இருக்குமென்பது எனது கருத்து. எனினும் குறையொன்றுமில்லை.
என்னை நோக்கி உங்களால் முதல் பந்தியில் எறியப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களில் எதுவும் உண்மையில்லை.
நான் இந்தியா மட்டுமல்ல, எந்த தேசமுமே அழியவேண்டுமென்று நினைக்கவில்லை. அந்தக் கட்டுரையை நீங்கள்
திரும்பவும் படித்துப் பாருங்கள். எளிய மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படுவதில்லை, மாறாக அவர்களை அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒடுக்கவே முனைகிறது என்று எழுதியிருக்கிறேன்.
உங்கள் துயரம், ஆத்திரத்தைப் பார்த்து உண்மையில் நான் சிரித்தேன். அது கசப்பு வழியும் சிரிப்பு. உங்களுக்குப் பதில் எழுதுவதென்றால், ஒரு கட்டுரைக்கான விடயங்கள் என்னிடம் இருக்கின்றன. இந்தியா காலங்காலமாக
ஈழத்தமிழர்களை எப்படி வஞ்சித்தது என்பதைப் பட்டியலிட்டுத் தீராது.
வாசிக்கிறேன் நித்யகுமாரன்.
நன்றி கையேடு
---
சாணக்கியன்,
“எனது இந்தியா“கட்டுரையை நான் சொல் சொல்லாக வாசித்தேன்.
”இந்தியாவில் இன்று உருவாகியிருக்கும் மாவோயிசக் குழுக்கள் போன்றவை பத்துசதவீத உண்மையான மக்கள்
அதிருப்தியின் மீது தொண்ணூறு சதவீதம் சீன ஆயுத பணபலத்தால் கட்டி எழுப்ப்பபடுபவை. இங்குள்ள இஸ்லாமிய குழுக்கள் மதக்காழ்ப்பின்மீது பாகிஸ்தானிய ஆயுத பணபலத்தால் கட்டி எழுப்பப்படுபவை.” என்ற ஜெயமோகனின்
இரண்டு வரிகளுக்குள் அடங்கிவிடுகிறது விசயம்.
கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு தனது சொந்த மக்களது நலன்களை இந்திய அரசு
புறக்கணித்ததன் விளைவாகவே தாங்கள் போராடப் புறப்பட்டதாக மாவோயிஸ்டுகள் சொல்கிறார்கள். அதை சீனத்தின்
சதி என்கிறார் ஜெயமோகன். அதேபோல, காஷ்மீரிகளின் உரிமைக்கான போராட்டத்தை முஸ்லிம்
அடிப்படைவாதமாகத் திரிபுபடுத்துகிறார். “இப்படியொரு சுதந்திரமான தேசத்தை விட்டுவிட்டு, தாலிபானிய
ஒடுக்குமுறை அரசுதான் வேண்டுமென்று அவர்கள் கேட்கிறார்களே...“என்று வியக்கிறார். தங்களது
ஆட்சிமுறையை, ஆட்சியாளர்களைத் தேர்வது அந்த மக்களது விருப்பம். அதைத்தான் சனநாயகம் என்கிறார்கள்.
அந்தக் கட்டுரை முழுவதுமே இஸ்லாமிய எதிர்ப்பு விரவிக் கிடக்கிறது. முன்பொரு தடவை கிறிஸ்தவ பாதிரியார்
தன்னைத் தாக்கினார் என்று கிறிஸ்தவ மதத்தைச் சாடினார். மேற்கண்டவைகளைப் படிக்கிற, முழுப் புரிதல்கள்
இல்லாத வாசகன் “இது இந்து தேசம்“என்ற என்ற குறுகிய வழியைச் சென்றடைகிறான். பல்லினங்களும் பல மதங்களும் பல மொழிகளும் வாழ்கிற ஒரு நாட்டை இந்து தேசமாகக் குறுக்கவியலாது. அப்படிக் குறுக்க முயன்றதன்
விளைவுகளாகவே பாபர் மசூதி இடிப்பை, குஜராத், மும்பைக் கலவரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தனது சொந்த மக்களையே மதச்சகிப்பின்மையோடு நடத்தக்கூடிய ஒரு நாடாகிய இந்தியாவை ஜெயமோகன் கொண்டாடிவிட்டுப் போகட்டும். ஆனால், அப்படி ஒரு நாட்டிலிருந்துகொண்டு அதன் சனநாயகப் பிறழ்வுகளைத் தட்டிக் கேட்காதவர், ஈழத்தமிழர்களின் ஒரே நம்பிக்கையாகிய விடுதலைப் போராட்டத்தை வாசிப்பவர் மனதில் மதிப்பிறக்கும் விதத்தில் ஒரு புதினத்தை எழுதவேண்டிய தேவைதான் என்ன என்பதே எனது விமர்சனத்திற்குக் காரணம். மேலும், காலகாலமாக இந்தியா ஈழத்தமிழர்களுக்கு இழைத்துவந்த, வருகிற அநீதிகள் பட்டியலுக்குள் அடங்காதளவு நீண்டவை.
“இந்திய தேசியம்“என்ற ஒன்றை நம்புகிறீர்களா நண்பரே? அப்படி ஒன்று இருக்குமானால், 400க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கொல்லப்பட்டபோது அது எங்கு போனது? அவுஸ்திரேலியாவில் பஞ்சாப் மாணவர்கள் தாக்கப்பட்டபோது பதறிய இந்திய அரசு, தமிழர்கள் தாக்கப்படும்போது இலங்கையின் தாவாங்கட்டையைப் பிடித்துக்கொண்டிருப்பது எதனால்? நான் பிரிவினையை ஊட்டவில்லை. தமிழர்களை இந்தியர்களாக ஆட்சியாளர்கள் கருதவில்லை.
ஒரு தேசம் துண்டாடப்பட்டு விடக் கூடாதே என்பதற்காக, உரிமைகளை மறுத்துக்கொண்டிருந்தால், தானாகவே துண்டுபடும் என்பது மட்டும் உறுதி. நன்றி சாணக்கியன்.
“காடு“அருமையான நாவல். அதில் ஐயமொன்றுமில்லை.
/* “இந்திய தேசியம்“என்ற ஒன்றை நம்புகிறீர்களா நண்பரே? அப்படி ஒன்று இருக்குமானால், 400க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கொல்லப்பட்டபோது அது எங்கு போனது? அவுஸ்திரேலியாவில் பஞ்சாப் மாணவர்கள் தாக்கப்பட்டபோது பதறிய இந்திய அரசு, தமிழர்கள் தாக்கப்படும்போது இலங்கையின் தாவாங்கட்டையைப் பிடித்துக்கொண்டிருப்பது எதனால்? நான் பிரிவினையை ஊட்டவில்லை. தமிழர்களை இந்தியர்களாக ஆட்சியாளர்கள் கருதவில்லை. */
தமிழர்களை இந்தியர்களாக மத்திய அரசு கருதவில்லை என்கிறீர்கள். ஒரு பேச்சுக்கு அப்படியே வைத்துக்கொண்டாலும் தமிழக மீனவர்களை மனிதர்களாகவேனும் தமிழக அரசு கருதுகிறதா? கருதியிருந்தால் சும்மா இருப்பார்களா? இங்கு எல்லா ஆட்சியாளர்களும் சுய நல வாதிகளாக இருக்கிறார்கள். அதனால் எல்லாம் கெட்டுக்கிடக்கிறது. இந்தியாவில் ஜன நாயகம் தோற்றதால் ஜன நாயகம் என்ற வழியே தவறு என்பீர்களா? ராணுவ ஆட்சிக்கோ கருணாநிதியின் சர்வாதிகார ஆட்சிக்கோ நீங்கள் தயாரா?
அதுபோல்தான் இந்திய தேசியம் என்பதும். அதை நடைமுறைப் படுத்துவதில் தவறுகள் இருக்கலாம். ஆட்சியாளர்கள் ஒரு மாநிலத்தை குழுவை வஞ்சிக்கலாம். அதை எப்படி சரிசெய்வது என்றுதான் பார்க்கவேண்டுமே ஒழிய அப்படி ஒன்று தேவையே இல்லை என்பது தவறு.
‘அகண்ட பாரதம்’ பற்றி பேசும் பா.ஜ.க. ஆட்சியில் இருந்திருந்தால் தமிழ் மீனவர்களுக்கு இக்கதி இருந்திருக்குமா என நாம் யோசிக்கலாம். விஜயகாந்தோ, வைகோவோ, சீமானோ ஆட்சிக்கு வந்தால் அப்பொதும் மீனவர்கள் கொல்லப்படுவது தொடருமா? இது நடைமுறை சாத்தியம் இல்லாததுபோல் தோன்றினாலும் மக்கள் மனது வைத்தால் நடக்கக்கூடியதே. இந்த சாத்தியங்கள் இருப்பதனால்தான் ஜன நாயகம் ஓரளவு உயிர்ப்புடன் இருப்பதாகவே சொல்லபடுகிறது.
சீமானை சிறையிலடைத்து முடக்கப் பார்த்தாலும் அவரது பேச்சுகளும் பேட்டிகளும் வந்துகொண்டுதானே இருந்தன. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் உடனே ஜெயா டிவியில் பேட்டி கொடுக்க முடிகிறதே. பர்மாவிலும் சீனாவிலும் இது சாத்தியமாக இல்லையே? அதனால்தான் நாம் பரப்பும் அளவுக்கு speculate செய்யும் அளவுக்கு பேச்சு/எழுத்துரிமை பாதிக்கப்படவில்லை என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. அது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக. ஒப்பீட்டுக்காக. அந்த உரிமை இருப்பதால்தான் நீங்களும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். விக்கி லீக்கின் நிறுவனர் குட அமெரிக்காவால் கைது செய்யப்படுகிறார்.
ஒரு பேச்சுக்கு இங்கு எல்லா உரிமைகளையும் மக்கள் இழந்துவிட்டார்கள், இந்திய தேசியம் இல்லை என்று வைத்துக்கொண்டால், என்ன மாற்று வழி வைத்திருக்கிறீர்கள்? ஐரோப்பாவின் கூட்டமைப்பு போல மாநிலங்கள் தனி நாடுகளாக்கப்பட்டு அவற்றின் கூட்டமைப்பை ஏற்படுத்தலாம் என்கிறான் நண்பன். அது நடைமுறை சாத்தியமானதா? காவிரியில் நீர் விடவில்லையென்றால் அப்போது ஐ. நா. சபை வரும் என்கிறார்கள் ( நாடுகளுக்கிடையேயான பிரச்ச்னை). இது சாத்தியமா? அப்படியாயின் இந்தியாவில் எத்தனை எத்தனை பிரச்சனைகளுக்கு ஐ. நா. சபை வரும்? காஷ்மிர் பிரச்சனையிலும் இலங்கைப் பிரச்சனையிலுமே ஐ. நா. தூங்கிக்கொண்டுதானே இருக்கிறது? இந்திய தேசியத்திற்கு என்ன மாற்று இருக்கிறது? இந்த நாடு சுதந்திரப் போராட்டத்தின் போது ஒற்றுமையாக சகோதரகளாகத்தானே இருந்தது? ராஜாஜின் ஆட்சியின்போது வடக்கு மாநிலங்களில் வறுமை நிலவியதால் தமிழக அரசின் செலவுகளைக் குறைத்துக் கொண்டதாகச் சொல்கிறார்களே... அத்தகைய தேசியவாதிகள் வாழ்ந்த நாடுதானே இந்த நாடு?
அப்புறம் காஷ்மீர் பற்றியும் அருந்ததிராய் பற்றியும் மதக்காழ்ப்பு பற்றியும் எழுதியிருக்கிறீர்கள்.
காஷ்மீர் மக்கள் சுதந்திரமாகத்தானே இருந்தார்கள்-பாகிஸ்தான் படையெடுக்கும் வரை? இந்தியா ஆக்கிரமித்துள்ளதுபோல் ஏன் பேசுகிறீர்கள். ஏதோ ஒருகாரணத்துக்காகத்தான் பல்வேறு சமஸ்தானங்களும் இந்தியாவுடன் இணைந்தன. காஷ்மீர் கொஞ்சம் லேட்டாக சேர்ந்ததால் விட்டுவிட வேண்டுமா? காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் தான் இருக்க விரும்புகிறார்கள் என்று எதுவும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறதா? மக்களின் விருப்பத்திற்கு எதிராக என்று எப்படிச் சொல்கிறீர்கள்? referendum நடத்தி காஷ்மீர மக்கள் இந்தியாவுடன் இருக்கவிரும்புவதாக சொல்லிவிட்டால் பாகிஸ்தான் விட்டுவிடுமா? ஆக்கிரமிப்பு காஷ்மீரை கொடுத்துவிடுமா? இந்தியாவில் மதத்தீவிரவாதம் நின்றுவிடுமா? இல்லையெனில் அச்சூழலில் இந்தியா எப்படி நடந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறீர்கள்.
காஷ்மீர் மக்கள் விரும்பினால் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்கவேண்டுமென்றால், நாளை ஐதராபாத் மக்களும் பாகிஸ்தானோடு இருக்கவிரும்பினால் கொடுத்துவிடவேண்டுமா? கேரளத்தை அரபு நாட்டுடனும் வங்காளத்தை பங்களாதேசுடன் இணைத்துவிட வேண்டுமா? கிருத்தவர்கள் அதிகமிருக்கும் வடகிழக்கு மாநில மக்கள் விரும்பினால் அவற்றை வாடிகனுடன் இணைத்துவிடலாமா?
இந்தியாவில் என்ன மத உரிமை இல்லாமல் போய்விட்டது? கல்வி இல்லாமல் போய்விட்டதா, மருத்துவ வசதி செய்துதரவில்லையா? வழிபாட்டு உரிமை இல்லையா? கலைத்துறையில் விளையாட்டில் அரசியலில் சிறுபான்மையினர் இல்லையா? தினந்தோறும் மதமாற்றம் செய்கிறார்களே அது கூட தடுக்கப்படவில்லை. கோடிகோடியாக சொத்துக்களுடன் ‘கான்’கள் இங்கே வாழ முடிகிறது. இந்துக்கள் பாகிஸ்தானில் எப்படி வாழ்ந்தார்கள்/வாழ்கிறார்கள்? சுவிட்சர்லாந்து போன்ற நாட்டில் இந்துக்கள் ஒரு வீடு போன்ற கட்டிடத்தில் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இன்றிதானே தங்கள் மதவழிபாடுகளை வைத்துக்கொள்கிறார்கள்? இங்கே கிருத்தவர்களும் தேரோட்டம் நடத்தமுடிகிறதே? இஸ்லாமியர்களும் ஊர்வலம் போக முடிகிறதே? சீக்கியர்களும் சமணர்களும் புத்தமதக்காரர்களும் இந்துக்களுடன் எந்த பிரச்சனையும் இன்றிதானே இருக்கிறார்கள்?
மக்களுக்காகத்தானே மாவோக்கள் போராடுவதாகச் சொல்கிறீகள்- அப்புறம் ஏன் அவர்கள் ரயில்களைக் கவிழ்த்து பொதுமக்களைக் கொல்கிறார்கள்?
ஈழம் பற்றிய உங்கள் வலிகளை உணர்கிறோம். உங்கள் உணர்வுகளை மதிக்கிறோம். அதற்காக இந்நாட்டை போகிற போக்கில் இஷ்டத்திற்கு விமர்சிக்காதீர்கள்.
புறக்கணித்துச் செல்லாமல் தொடர்ந்து வாசித்து அம்பலப்படுத்தப் படவேண்டியவர்.
வழிமொழிகிறேன். தொடர்ந்து செய்யுங்க. நன்றி!
மற்றுமொரு கேள்வி. காஷ்மீர் பிரச்சனை சுதந்திரப் போராட்டம் மட்டுமே என்றால் இந்து-பண்டிட்கள் அங்கிருந்து விரட்டப்பட்டது ஏன்?
நான் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று. (பெயரிலி என்பவரும் இதை கணித்து இருப்பார்) அதனால் பெரிய அளவில் ஆச்சரியம் & சுவாரஸ்யம்இல்லை உங்கள் பதிவைப் பார்த்ததும.
நாங்கள் முன்னரே சொன்னோம் நீங்கள் அறநெறிப் படி இந்த மாதிரி புத்தகங்ககளை வாங்கக் கூடாது என்று.
ராஜீவ் கொலை வழக்கு என்று ஒரு புத்தகமும் வாங்கி இருக்கிறீர்கள். அதை படித்தும் ஒரு நீண்ட பதிவு வரும்.
இன்னும் அந்தப் புத்தகத்தை படிக்க தொடங்கா விடில், அப்படியே அந்தப் புத்தகத்தைக் தீயில் போட்டு எறியுங்கள்.
//ராம்ஜி_யாஹூ//
ராம்ஜியாகூ , ஜெமோ உங்களை தடுக்க இணைய வைரஸ் இல்லையா என புலம்பியது சரிதான் என்று தோன்றுகிறது
சாணக்கியன்,
உங்கள் பின்னுாட்டத்தைப் பார்த்தபோது எனக்கு தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று ஞாபகம் வந்தது. ”கேள்வி மேல
கேள்வி கேட்டு தொல்லை கொடுப்போம்”என்றபடி ஒரு சிறுவன் சிரிப்பான். என்னை இத்தனை கேள்விகள் கேட்கிறீர்களே... உங்களை நான் ஒன்று கேட்கலாமா? புதினம் என்ற பெயரில் எழுதியிருப்பதில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் சில வாசகங்களை ஜெயமோகன் எழுதியிருக்கிறாரே... வாசகர்களைத் தவறான புரிதல்களுக்கு இட்டுச் செல்கிறாரே... அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எங்களது உணர்வுகள்
புண்படுத்தப்பட வேண்டியவை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது வடிவேலு மாதிரி “இவன் எவ்வளவு
அடிச்சாலும் தாங்குவான்“னு நினைக்கிறீர்களா?
உங்கள் கேள்விகளுக்கு வருகிறேன். இவற்றுக்கெல்லாம் பதிலளிக்கிறேன் என்பதற்காக மேலும் கேள்விகளோடு வந்து நிற்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு வேறு வேலைகளும் உள்ளன.
”தமிழர்களை இந்தியர்களாக மத்திய அரசு கருதவில்லை என்கிறீர்கள். ஒரு பேச்சுக்கு அப்படியே
வைத்துக்கொண்டாலும் தமிழக மீனவர்களை மனிதர்களாகவேனும் தமிழக அரசு கருதுகிறதா?”
நான் மத்திய அரசு தமிழர்களைக் கண்டுகொள்ளவில்லை என்றால், தமிழக அரசு மீனவர்களைக் கண்டுகொள்கிறதா என்று பதில் கேள்வி எழுப்புகிறீர்கள். தமிழக அரசு சுயநலவாதியாக இருப்பதனால், மத்திய அரசும் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே என்கிறீர்களா? தமிழக அரசு தந்தி மட்டுமே கொடுத்துக்கொண்டிருப்பதால்தான் மக்கள் இந்த ஆட்சியின்மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.
”இந்தியாவில் ஜன நாயகம் தோற்றதால் ஜன நாயகம் என்ற வழியே தவறு என்பீர்களா?”
நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமென்றிருக்கிறேன். ஈழவிடுதலைப் போராட்டம் தோற்றுப்போனதால் அது
தவறாக முன்னெடுக்கப்பட்டது என்று உங்களால் சொல்லமுடியுமா? ஜெயமோகன் சொல்கிறார்”ஆயுதவெறி“என்று.
ஆனால், நான் அப்படிச் சொல்லப்போவதி்ல்லை. ஜனநாயகத்தை அரசுகளால் கடைப்பிடிக்க முடியாமற் போகலாம்.
அதற்காக அந்த வழி தவறென்று எப்படிச் சொல்லவியலும்? போராட்டமும் அப்படித்தான். இராணுவ ஆட்சிக்கு நான்
ஏன் தயாராக இருக்கவேண்டும்? அதிலிருந்து தப்பித்துத்தான் நாங்கள் உலகமெல்லாம் சிதறி ஓடினோம். ஆக, இந்தப் போக்கில் போனால் இராணுவ ஆட்சி வந்துவிடுமென்று நீங்கள் அஞ்சுகிறீர்கள் போலும்.
சாணக்கியனுக்கான பதிலில் தொடர்ச்சி... முழுவதையும் ஒரே பின்னுாட்டத்தில் புளொக்கர் அனுமதிப்பதாயில்லை.
”ஆட்சியாளர்கள் ஒரு மாநிலத்தை குழுவை வஞ்சிக்கலாம். அதை எப்படி சரிசெய்வது என்றுதான் பார்க்கவேண்டுமே ஒழிய அப்படி ஒன்று தேவையே இல்லை என்பது தவறு.”
“அப்படி ஒரு மாநிலத்தை வஞ்சிக்கிற இந்திய தேசியம்“துாக்கிப் பிடிக்கும்படியான, பெருமிதப்பட்டுக் கண்ணீர் வடிக்கும்படியான உயரத்தில் இல்லை;அதை இப்படியெல்லாம் உச்சிமுகரவேண்டியதில்லை என்று நான் சொன்னேனேயன்றி, அதைத் துாக்கி எறியுங்கள் என்று நான் சொல்லவில்லை.
”சீமானை சிறையிலடைத்து முடக்கப் பார்த்தாலும் அவரது பேச்சுகளும் பேட்டிகளும் வந்துகொண்டுதானே இருந்தன. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் உடனே ஜெயா டிவியில் பேட்டி கொடுக்க முடிகிறதே.”
என்னங்க சாணக்கியன் இது? சிரிப்பாக இருக்கிறது. சிறையிலிருந்து பேட்டி கொடுப்பதுதான் இந்திய ஜனநாயகப்
பண்பா? வெளியிலிருந்தபடி ஒருவரைப் பேச அனுமதிப்பதைத்தான் கருத்துச் சுதந்திரம் என்கிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால், கிளியின் இறக்கைகளை வெட்டி விட்டு “அங்கேதான் நீ பறந்துகொண்டிருந்தாய்“என்று
வானத்தைக் காட்டுவது போல இருக்கிறது.
”பர்மாவிலும் சீனாவிலும் இது சாத்தியமாகவில்லையே...”- ஒப்பீட்டளவில் இந்தியாவில் சனநாயகம் இருக்கிறது என்கிறீர்கள். முழுமையாக இல்லை. விக்கி லீக்ஸ் அசாஞ்சே வெளிப்படுத்திய தகவல்களும் நான் எழுதிக்கொண்டிருப்பதும் ஒன்றாகிவிடுமா? சனநாயகத்தை மறுக்கிறீர்கள் என குற்றச்சாட்டும் குரல்களுக்கு அரசாங்கங்கள் பெரும்பாலும் செவிடாகவே இருந்துவிடுகின்றன. விழுத்தினால் கைதுசெய்துவிடுகின்றன. எழுதுவதை விடுங்கள்... பினாயக் சென் செய்த குற்றந்தான் என்ன? போராடத் தள்ளப்பட்ட எளிய மனிதர்களுக்கு மருத்துவம் செய்தார். அதற்கு ஆயுள் தண்டனை! ஒப்பீட்டளவில் சனநாயகத்தைப் பேணுவதற்குப் பெயர் சனநாயகம் அல்ல. முற்றுமுழுதான கருத்துரிமையை உள்ளடக்கியதே சனநாயகம்.
எங்களுக்கே வழி தெரியவில்லை. இதில் உங்களுக்கு மாற்று வழியா? அதை நீங்கள்தான் கண்டடைய வேண்டும். எங்களது மண்ணில் தலையிட்டு வாழ்வைச் சீரழித்ததுபோல, நாங்கள் மற்றவர்களின் வாழ்வில் தலையிடுவதில்லை. அதற்கான பலமும் இல்லை. நாங்கள் எங்கே குறுக்கிடுகிறோமென்றால், எங்கள் மேன்மைகளை நீங்கள் கொச்சைப்படுத்தும்போது.
”ஐரோப்பாவின் கூட்டமைப்பு போல மாநிலங்கள் தனி நாடுகளாக்கப்பட்டு அவற்றின் கூட்டமைப்பை ஏற்படுத்தலாம் என்கிறான் நண்பன்.
எனது நண்பனும் அதைத்தான் சொல்கிறான். அவன் ஒரு தமிழகத் தமிழன்.
”இந்த நாடு சுதந்திரப் போராட்டத்தின் போது ஒற்றுமையாக சகோதரர்களாகத்தானே இருந்தது?”
பிரித்தாளப்பட்டபோது ஒன்றாகப் போராடினார்கள். ஒன்றுபட்டபோது ஆட்சியாளர்களது பாரபட்சங்களால் மக்கள் பிரிந்துபோனார்கள். மேலும், மக்கள் நலன்களை விட வல்லரசுக் கனவு, சந்தைக் கனவுகள் ஆட்சியாளர்களைச் செலுத்துகின்றன.
ராஜாஜி போல தமிழ்நாட்டிலும் இருந்தார்கள். காமராஜர், அண்ணா, பெரியார் என்று. அதுவே மக்களாட்சி. இன்று அனைத்து அரசுகளும் மக்கள் நலன்களை விட, முதலாளிகளின் நலன்களையே விழைகின்றன.
"அரம்போலும் கூர்மையரேனும்..." குறளுக்கு மிகப்பொருத்தமான இரு 'தமிழிலக்கிய' ஆளுமைகள் இந்த ஜெமோவும் சாருவும். இவர்களை நோக்கி விட்டில்பூச்சிகளாகப் பாயும் வாசகர்களுக்காகவாவது இந்தப் பதிவு அவசியமாகிறது.
@சாணக்கியரே!
வரலாற்றை முடிந்தால் புரட்டிப்பாருங்கள்... காஷ்மீர் என்ற தேசம் எப்படி வஞ்சகமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டதென்பதும், பாராளுமன்றத்திலும், ஐநா சபையிலும் காஷமீர மக்களுக்கு இந்திய(நேரு) அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் என்னவென்று தேடிப்பாரும்! தேசியம் என்பது மக்கள் மனதினில் பிணைக்கப்பட்டு இருக்கவேண்டும்... புவியியல் எல்லைக்கோடுகளில் அல்ல!
மிக அற்புதமான கட்டுரை தமிழ்நதி! வாழ்த்துக்கள்!
அரம்போலும் கூர்மையரேனும் என்ற குறளுக்கு வாழும் உதாரணம் இந்த ஜெமோ... சாருவும்கூடத்தான்! இந்த 'இலக்கிய' ஆளுமைகளை நம்பி விட்டில்பூச்சிகளாக வந்துசேரும் வாசகர்களின் மயக்கம் தெளிவிக்க இந்தப்பதிவு அவசியமாகிறது.
@சாணக்கியரே! கொஞ்சம் முடிந்தால் தேடிப்பிடித்து வரலாற்றைப் புரட்டிப்பாருங்கள். காஷ்மீர் என்ற தேசம் எப்படி குயுக்தியாக இந்தியாவால் விழுங்கப்பட்டது என்பதும், காஷ்மீர் இணைப்பின்போது நேரு அரசாங்கத்தால் பாராளுமன்றத்திலும், ஐநா சபையிலும் என்னென்ன உறுதிமொழிகள் வழங்கப்பட்டன என்பதும் தெரியவரும்.
அற்புதமான அவசியமான கட்டுரைக்கு வாழ்த்துக்கள் தமிழ்நதி!
தமிழ்..
ஜெயமோகனின் உலோகம் புதினத்தை நான் இன்னும் வாசிக்கவில்லை. எனவே அப்புதினம் குறித்து பேசுவது நாகரீகமல்ல. உங்கள் விமர்சனத்தை வாசித்ததிலிருந்து ஒன்றை பகிரவிரும்புகிறேன். ஒரு விஷயத்தை எதிர்கொள்வதில் அல்லது புரிந்துகொள்வதில் இரண்டு முறைகள் இருப்பதாக கருதுகிறேன். ஒன்று பார்ப்பனிய அறத்தோடும் மற்றது பார்ப்பனிய அல்லாத அறத்தோடும் [இங்கு பார்ப்பனிய அறம் என்பது சாதி பெருமை பேசும் எல்லோரையும் குறிப்பதே] இயங்குவதாக விளங்கிகொள்கிறேன். அதனால்தான் இனவிடுதலைப்போராட்டத்தை ஆயுதப்போராட்டமாக மட்டுமே ஜெயமோகனாலும் இயக்குனர் மணிரத்னத்தாலும் புரிந்துகொள்ளமுடிகிறது.
சாணக்கியன்,
”காஷ்மீர் மக்கள் சுதந்திரமாகத்தானே இருந்தார்கள்-பாகிஸ்தான் படையெடுக்கும் வரை? இந்தியா ஆக்கிரமித்துள்ளதுபோல் ஏன் பேசுகிறீர்கள்?”
என்று கேட்டிருக்கிறீர்கள். வரலாறு முக்கியம் நண்பரே.. காஷ்மீர் பாகிஸ்தானுக்கோ இந்தியாவுக்கோ சொந்தமானதல்ல. அது காஷ்மீரத்து மக்களுக்கே சொந்தமானது. 1947ஆம் ஆண்டு இந்தியா பிரிட்டிஷாரின் ஆளுகையிலிருந்து விடுதலை பெற்றபோது அது தனிமாநிலமாக இந்து அரசர் ஒருவரின் கீழ் பெரும்பான்மை முஸ்லிம் மக்களைக் கொண்டதாக இருந்தது. 1947ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் திகதியன்று காஷ்மீர், இந்திய மத்திய அரசோடு செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கிணங்க பாதுகாப்பு, வெளியுறவுத் துறைகளை இந்திய மத்திய அரசிடம் கையளித்தது. அதன் பொருள் காஷ்மீரத்தையே கைகழுவிவிடுவது என்பதல்ல. ஆனால், அந்த ஒப்பந்தத்தைச் சாக்காக வைத்து மறுநாளே அதாவது 1947ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் திகதியே இந்தியா காஷ்மீரத்துக்குள் நுழைந்தது. காஷ்மீரத்தின் ஒரு பகுதியாகிய ஆஸாத் காஷ்மீரை பாகிஸ்தான் சுருட்டிக்கொண்டது. பாகிஸ்தானிலிருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் தீவிரவாதிகள் அந்த மண்ணுள் ஊடுருவினார்கள். இதர பகுதிகளில் இந்தியா கண்வைத்தது. அந்த மண்ணின் மக்கள் புறந்தள்ளப்பட்டார்கள். பாகிஸ்தான்-இந்தியா என்ற இரண்டு நாடுகளுக்கிடையில் இடிபட விதிக்கப்பட்டார்கள். அங்குள்ள மக்கள் இந்தியாவின் கீழோ பாகிஸ்தான் கீழோ இருக்க விரும்பாத காரணத்தால்தான் இத்தனை போராட்டங்கள், கொலைகள், கைதுகள். அவர்களை அவர்களாக வாழவிடுங்கள் என்பதுதான் மனிதவுரிமையாளர்கள் கேட்டுக்கொள்வது. அதைத்தான் அருந்ததி ராயும் கேட்டார். இந்திய தேசியம் கொதித்தது அதற்குத்தான். உங்களது கேள்விகளுக்கெல்லாம் வரலாற்றிலேயே விடை இருக்கிறது.
உங்கள் நண்பர் சொன்னதே சரி. பல மொழிகளும் இனங்களுமான இந்தியா பல மாநிலங்களாக சுயாட்சி கொண்டதாக பிரிந்துசெல்ல விரும்பினால்... அந்த மக்கள் அதை வலியுறுத்தினால் அது அவர்களது விருப்பம். இது எனது விருப்பமன்று. இந்தியா என்ற ஒருமைப்பட்ட தேசம் இதனால் வலிமை குன்றிவிடும் என்று நீங்கள் அஞ்சுகிறீர்கள். இந்த வலிமை என்பது எதற்காக? ஒரு வல்லரசாகத் தன்னை முன்னிறுத்த. ஒரு மிகப் பெரும் சந்தையாக வெளிநாடுகளின் முன்னிற்க.
”இந்தியாவில் என்ன மத உரிமை இல்லாமல் போய்விட்டது?”
நான் கேட்கின்றேன்..
”இந்தியாவில் ஏன் மதக்கலவரங்கள் வெடிக்கின்றன?”
”கல்வி இல்லாமல் போய்விட்டதா, மருத்துவ வசதி செய்துதரவில்லையா?”
அனைத்திலும் பாரபட்சங்கள். இங்கு இரண்டு சாதிகள்தாம் உண்டு. ஏழைகள், பணக்காரர்கள்.
”சுவிட்சர்லாந்து போன்ற நாட்டில் இந்துக்கள் ஒரு வீடு போன்ற கட்டிடத்தில் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இன்றிதானே தங்கள் மதவழிபாடுகளை வைத்துக்கொள்கிறார்கள்? இங்கே கிருத்தவர்களும் தேரோட்டம் நடத்தமுடிகிறதே? இஸ்லாமியர்களும் ஊர்வலம் போக முடிகிறதே?”
நீங்கள் எந்தக் குரலில் பேசுகிறீர்கள் சாணக்கியன்? இது இந்து நாடு என்ற தொனி உங்கள் கேள்விகளில் ஒலிக்கவில்லையா? அவை சலுகைகளாக இருக்கக்கூடாது. அது அவர்களது உரிமைகள். “நாங்கள் தேவாலயங்களை அனுமதிக்கவில்லையா? மசூதிகளை அனுமதிக்கவில்லையா?”என்கிறீர்கள்.
”ஈழம் பற்றிய உங்கள் வலிகளை உணர்கிறோம். உங்கள் உணர்வுகளை மதிக்கிறோம். அதற்காக இந்நாட்டை போகிற போக்கில் இஷ்டத்திற்கு விமர்சிக்காதீர்கள்.”
அப்படியா? இதை ஏன் நீங்கள் ஜெயமோகனிடம் சொல்லக்கூடாது? இதை நீங்கள் ஏன் ஆயுதங்களையும் ஆட்படைகளையும் அனுப்பி ஈழத்தமிழர்களை அழிக்க பேரினவாத அரசோடு துணைபோனவர்களுக்குச் சொல்லக்கூடாது?
ஒருவேளை “ஊருக்கு உபதேசம்... உனக்கல்லடி மகளே(னே)“என்பதைக் கடைப்பிடிக்கிறீர்களா?
காஷ்மீரில் இந்துப் பண்டிட்களை விரட்டியவர்கள் காஷ்மீர் மக்களல்ல, பாகிஸ்தான் ஆதரவுக் குழுக்கள்தான். அப்படி விரட்டியதை காஷ்மீரிலுள்ள ஆயுதக்குழுக்களும் மக்களும் மிதவாதப் போராட்ட அமைப்புகளும் எதிர்த்தன.
இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்காதீர்கள். எனக்கு பதில் சொல்ல களைப்பாகவும் சலிப்பாகவும் இருக்கிறது.
ஜெயமோகனின் ஈழம் பற்றிய புரிதல் அறிந்தவர்களுக்கு இது ஒண்ணும் ஆச்சரியப்படுத்தக் கூடியது இல்லை..
மீனவர்கள் உயிருக்கு பாதுகாப்பு கொடுங்கள்,,மாவோயிஸ்ட் குழுக்கள் வளருவதின் பின்னனி அறிந்து அந்த மக்களுக்கு வாழவழி செய்து கொடுங்கள் என்று சொன்னாலே இந்திய தேசியத்தை எதிர்த்து குரல் கொடுப்பதாக சிலர் நினைப்பதன் காரணம் மட்டும் விளஙக்வில்லை அதுவும் அவர்கள் எல்லோர்ரும் அதி மேதாவிகளாக வேறு இருந்து விடுகிறார்கள்..புரியாமல் இருக்க வழியில்லை..
நீங்கள் வாங்கி வாசித்து இந்தப் பதிவைப் போட்டதற்கு ந்ன்றிகள்.. ஈழப்பிரச்னை தெரியாத்வனும் இதை வாசிக்கும் நாளைய தலமுறையும் போராளிகள் பற்றி தவறான எண்ணம் ஏற்படுத்தக்கூடிய இந்தப் புனைவை அம்பலபபடுத்தியற்கு நன்றிகள்
தொடர்ந்து வாங்கிய புத்த்கம் அனைத்தும் படித்து பரிந்துரை செய்யுங்கள்
நண்பர்களே, நான் மனிதன், தமிழன் & இந்தியன்.
நான் இந்திய ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன், அதேபோல் இலங்கை ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன். நிற்க;
இபொழுது உள்ள கேள்வி எல்லாம், இந்திய ஒன்றாக இருக்க இந்திய ஆளும் வர்க்கம் என்ன செய்தது? இலங்கை ஒன்றாக இருக்க இலங்கை ஆளும் வர்க்கம் என்ன செய்தது என்பது ஆராய பட வேண்டியது.
காந்தி தேசமும், புத்தரை பூஜிக்கும் பூமியும் வன்முறையால் அனைத்தையும், இந்த ஒன்றாக வைத்திருத்தல் உள்பட என்றால் அது நடக்க போவது இல்லை.
இடையுள் இந்த அறிவு ஜீவிகள் எல்லாம் தாங்கள் அறிவாளிகள் என்று காட்டிக்கொள்ள இதுபோல்தான் செய்து கொண்டு இருப்பார்கள், அது இந்த மண்ணின் சாபம்!
அன்புடன்
வேலு சாந்தமூர்த்தி.
அநிருத்தன், நீங்கள் என்ன, தமிழக முதல்வரின் பக்கத்துக்கு வீடா?
அவர்தான் இங்கே பால் விலை அதிகம் என்றால், அங்கெ பார் இங்கே பார் என்பார்.
For many decades, we beleived that India is our motherland...we thought that Tamil Nadu is our land. we bonded with each and every cultural/ religoius/ phyloshophical aspects of Tamil Nadu. Its in our blood. Rather than supporting to Sri Lankan team, we automatically supported Indian cricket team without a second thought.It is a long long time bond, without any words. We never had a feeling like Thesa Bakthi as a Sri Lankan. Understanding this feeling is difficult to an Indian.
But.... India played its political game very carefully by abusing us for their own need.To build up their strenght in SAARC region, they influenced in Sri Lankan problem and supported LTTE, created political imbalance in Sri Lanka,,,then finally carefully palyed a game without considering poor tamil people.It happened like betrayed by our own mother. It is an ashame, if they speak about Ahimsai any more..
Miilion million years... we wont forget what happened to us. Now, only one thing we have to think is, never rely on Tamil Nadu or India, never expect a solution from them. We are from Eelam. We are separate. We have our own teritory.. our own culture..our own pride...
I agree there are a few activists in Tamil Nadu...but, it wont help to move anything.
Further, respect a writer by his/her writing is a foolish thing. these genious writers mentioned in your para are really fit to your last phrase.Here you can include Gnani, Kamal also. Speaking about their personal disires in pulically is not honesty or genoiusness. Its depends on how they move with the society and how they respect every public person. They are not theva Thootharhal with two literary horns. Really appreciate some humble writers who have got honesty in their life such as sujatha, S. Ramakrishnan and others.
உலோகம் பற்றிய சர்ச்சைகள் வலைகளில் அடிபட்டபோது ஜெமோவின் தளத்தில் முதல் அத்தியாயம் மட்டும் வாசித்தேன். அதன் பின்னர் வாசிக்கவே இல்லை. ஒரு வரலாற்றையே புனைவு என்ற பெயரில் வல்லுறவு செய்திருக்கின்றார். இதைவிட எனக்கு சோபாஷக்தியின் "ம்" மும் "கொரில்லா"வும் நடுநிலைமையான நாவல்கள் போல் தென்பட்டது.
என்ன செய்வது இவர்களின் பூனைக்குட்டி இப்படியாவது வெளிவந்ததே என சந்தோஷப்படவேண்டியதுதான்.
நியூட்டனின் மூன்றாம் விதிப்படி எதிர்த்தாக்கம் பாரத தேசத்துக்கு விரைவில் வரும் அப்போ ஜெயமோகன்களும் சாருநிவேதிதாக்களும் தங்கள் முகங்களை எங்கே கொண்டுபோய் வைக்கின்றார்கள் என்பதைப் பார்க்கவேண்டும்.
இவர் தனக்கு பிடிக்காத தமிழக தலைவர்களின் போராட்டங்களையும் பணியையும் திரித்து எழுதும் பணியை செய்பவர். சரியான தரவுகளை சுட்டிக்காண்பித்து யாரேனும் வினவினால் தகவல் பிழை, தான் ஒன்றும் ஆராய்ச்சியாளர் அல்ல ஒரு எழுத்தாளர் மட்டுமே என்பது போன்ற காரணங்களை காட்டி நழுவுவார். பெரும்பாலான இவரது கட்டுரைகள் முரண்கள் நிறைந்தது. விவாதிக்க வருபவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சிறுமைப்படுத்தி திசை திருப்புவார். சரியாக விவாதிக்க முடியாத தருணங்களில் எதிரியை (அருந்ததி ராய்) வசை பாடி தனது இயலாமையை வெளிப்படுத்துவார். இவரை படிப்பவர்கள் இவரது நோக்கத்தை பற்றிய புரிதலுடன் படிப்பது நல்லது.
எனக்கும் சலிப்பாகத்தான் இருக்கிறது தமிழ்நதி. நீங்களுமா இந்த சிருஸ்டிக்கப்பட்ட திணிக்கபட்ட கருத்துகளை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் என்று. உங்கள் வசதிக்கேற்ப என் கருத்துகளை வளைத்து பொருள்கொள்வது.
உதாரணத்திற்கு ஒன்று சொல்லவேண்டுமானால், எல்லா மதத்தவறும் எல்லா உரிமைகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கினால், ‘இந்து நாடு’ என்ற தொனி ஒலிப்பதாகச் சொல்கிறீர்கள். நான் ஏன் அதைச் சொல்லவேண்டியிருந்தது? நீங்கள் ஏதோ எந்த உரிமையும் இல்லாதது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி ஒப்பாரி வைத்ததனால் சொல்ல வேண்டியிருந்தது.
வேற்று மதத்தினருக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலாக ‘ஏழை பணக்காரன்’ என்ற இரண்டு சாதிகள் இருப்பதாகச் சொல்கிறீர்கள். இதிலிருந்தே உங்கள் கருத்துகள் எப்படி எந்த தருக்கமும் இன்றி இருக்கிறது என்பது தெளிவாகிறது.
இந்த நாட்டில், மாதவிலக்கின்போது பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டால் மத அடக்குமுறை என்று பேசுகிற கூட்டம் முழுஅங்கி அணிவதை அப்படிச்சொல்ல வக்கில்லாதது. தாழ்த்தப்பட்ட மக்களை சாதி பெயர் சொல்லி அழைத்தால் சட்டம் பாயும். அதையே ‘உயர்த்தப்பட்ட’ சாதியின் பெயரைச் சொல்லி எங்கும் வசைபாடலாம்,எல்லா ஊடகங்களிலும். இப்படி எல்லாவற்றிலும் இரட்டை நிலை.
இந்த நாட்டில் போலி மதச்சார்பின்மை, போலி பகுத்தறிவு போன்றவற்றிற்கு உங்களைப் போன்றவர்கள் மதியமயங்கிப் போயிருக்கிறீர்கள்...
ஒப்புமை அளவில் ஏன் பேச வேண்டியிருக்கிறது? உங்கள் கட்டுரையில் சீனா போன்ற தேசங்கள் குறிப்பிடப்பட்டுள்ளமையால். நோபல் பரிசு வாங்குபர் கூட அங்கு எதையும் பேச முடியாமல் சிறையில் இருக்கிறார். (அவருக்கு நோபல் பரிசு வழங்கியதே மேலை நாடுகளின் அரசியல்தான் என்றொரு கருத்தும் நிலவுகிறது). அருந்ததிராய் வெளியேதான் இருந்து கொண்டிருக்கிறார்.
இறுதியாக. உலோகம் வாசிக்கவில்லை. அதிலுள்ள சித்தரிப்புகள் தவறாக உங்களுக்குத் தோன்றினால் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதற்கு நீங்கள் சேர்த்துக்கொண்டுள்ள இந்திய பற்றிய அல்லது வேறு கருத்துகள் பற்றித்தான் விவாதம். ‘போராளிகள் அப்படி கிடையாது’ என்று நீங்கள் சொன்னால் மறுப்பதற்கு நான் யார்? எனக்கு என்ன தெரியும்... அதைத்தாண்டி வெளியே நீங்கள் பேசியதால் எனக்குத் தெரிந்ததை எந்நாட்டைப்பற்றி எந்நாட்டுக்கு எது நல்லது என்பது பற்றி நான் பேசுகிறேன்.
சாணக்கியன்,
எனக்கும் சலிப்பாகவே இருக்கிறது. சில கேள்விகளுக்கு தர்க்க அறிவோடும் சில கேள்விகளுக்கு தர்க்க முரணோடும் பதிலளித்துத் தொலைய வேண்டியிருக்கிறது.
"இறுதியாக. உலோகம் வாசிக்கவில்லை. அதிலுள்ள சித்தரிப்புகள் தவறாக உங்களுக்குத் தோன்றினால் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதற்கு நீங்கள் சேர்த்துக்கொண்டுள்ள இந்திய பற்றிய அல்லது வேறு கருத்துகள் பற்றித்தான் விவாதம். ‘போராளிகள் அப்படி கிடையாது’ என்று நீங்கள் சொன்னால் மறுப்பதற்கு நான் யார்? எனக்கு என்ன தெரியும்... அதைத்தாண்டி வெளியே நீங்கள் பேசியதால் எனக்குத் தெரிந்ததை எந்நாட்டைப்பற்றி எந்நாட்டுக்கு எது நல்லது என்பது பற்றி நான் பேசுகிறேன்."
இந்தியாவை ஒரு உன்னத தேசமாகக் கண்ணீர் மல்கிக் கரைந்து தனது கட்டுரைகளில் சித்தரிக்கிற ஜெயமோகனால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புனைவு அல்லது புரட்டு என்ற காரணத்தாலேயே நானும் இந்தியா பற்றிப் பேசவேண்டியேற்பட்டது. அவரால் விதந்து போற்றப்படுகிற அளவுக்கு அது சனநாயகப் பண்புகள் கொண்டதன்று என்று பேசத் தள்ளப்பட்டேன். மற்றபடி எனக்கென்ன? எனது நண்பர்களில் அநேகர் தமிழகத் தமிழர்கள்தாம். நன்றி சாணக்கியன்.
நெத்தியடி என்பார்களே அது இது தானோ? ஈழம் பற்றி உணர்வில்லாதவர்கள் எல்லாம் ஈழத்தை அடைப்புக் குறிக்குள் போட்டுவிட்டு தம் விருப்பத்துக்கு கதை, கட்டுரை எழுதும் போது உண்மையிலேயே வலிக்கத்தான் செய்கிறது. நீங்கள் கேட்ட மாதிரி வடிவேலு பாணியில் எங்களை "எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறானே, இவன் ரொம்ப நல்லவன்" என்று நினைக்கிறார்களோ? ஜெயமோகனின் ஈழம் மீதான பார்வை தெரிந்து கொண்டு இனி அவரது எழுத்துக்களைப் படிக்கும் போது எப்படி உணர்வேன் என்று யோசித்துக் கொண்டேன். எழுத்தாளர்களின் இலக்கியங்கள் பொய் அல்லது தெளிவற்ற அரசியல் கலக்கும் போது வேப்பெண்ணை கணக்காய் கசக்கிறது. ஜெயமோகன் தவிர்க்கமுடியாத இலக்கிய ஆளுமை என்று பார்த்த நினைவு. படித்துக் கொண்டே விலகிப் போவது தான் சரி.
இலக்கியம் அறிவுக்கும் உணர்வுக்கும் ஊடாக வாழ்வின் நுண்ணிய திருஷ்டிகளை அளித்து அகத்தின் திறவுகோலாக இருக்கும் என்பது இலக்கியவாதிகள் சொல்லுவது.
ஜெயமோகனும் அதைத்தான் சொல்லிக்கொள்ளுகிறார்.மனித குலத்துக்கு தான் விட்டுச்செல்லும் சொத்தாக இலக்கியங்களைக்கருதுகிறார் என்று அவர் கட்டுரைகள் சொல்லுகின்றன.
வரலாறு,நிகழ்வுகள் அவலங்களாய் தொடர்கின்ற வேளை ,இன்னுங்காயாத குருதி, வழங்கப்படாத நியாயங்களுக்காக மறுகிக்கொண்டிருக்கும் ஒரு கட்டத்தில்
ஈழப்போரின் ஒரு விளிம்பு நிலைச்சரட்டை எடுத்து புனைவென்று கயிறாகத்திரித்து வெளியிடுகிற லாகவத்தில் ஜெயமோகன் என்கிற இலக்கியவாதி இறந்துபோகிறார்.இலக்கியத்தின் நோக்கம் அங்கு செத்து இலக்கியப்பாப்பராசித்தனம் தெரிகிறது.
புனைவுகள் நுண்மையான போலித்தன்மையோடு அரசியல் புகுத்தப்பட்டு வரும்போது வாசகனின் மனதில் ஊடுருவி நியாயம் கடந்த ஒன்றை உணர்த்துகிற போது
இலக்கியத்தின் நோக்கத்தில் சந்தேகம் வந்துவிடுகிறது.
எது இலக்கியத்தின் உயர் நோக்கம் என்று சொல்லப்படுகிறதோ
அதை இலக்கியம் இலக்கியம் என்று சொல்பவர்களே மீறுகிறபோது இலக்கியத்தின் மீதான நம்பிக்கை அற்றுப்போகிறது.
ஏன் இப்படி நல்ல இலக்கியம் தெரிந்த ஜெயமோகனே குருடராயிருக்கிறார். இலக்கியம் பார்வைகளை அகலச்செய்யும் என்பது பொய்தானோ.ஜெயமோகன் இந்தப்பின்னணியை குருதி இன்னும் காயாத நேரத்தில் பேசவேண்டிய யாரும் பேசவே முடியாத நிலையில் இதை எடுத்து எழுதி வெளியிட வேண்டிய அவசரம் என்ன.
ஈழப்போரில் அதர்மத்தின் பக்கமே நின்ற பாரதத்தை நியாயப்படுத்த எடுத்த நுண்ணிய அஸ்திரமா?
இந்த இடத்தில் இலக்கியவாதி இறந்துவிடுகிறான்.
இன்றைக்கு தமிழுலகத்தில் இலக்கியம் பற்றி உரத்துப்பேசுபவர்களே இலக்கியத்தை விழுத்திவிடுகின்ற பரிதாபமான இரட்டை நிலை.
உலோகம் வந்துவிட்டதால் ஈழப்பின்னணி உண்மை நிலைகள் அடங்கிதெரியாமல் போகப்போவதில்லை. பேசக்கூடிய எழுதக்கூடிய பின்னணி நிலை எழும்வரைக்கும் வியட்நாம் போர் பற்றிய அமெரிக்கப்பார்வைகள்போல பல உலோகங்கள் சந்தைக்கு வரும்.
அறமற்ற இலக்கியவாதிகள் கொஞ்சமிருக்கிற இலக்கியம் பற்றிய பொது நம்பிக்கையையும் சிதைத்து நூல்களை மாத்திரம் விட்டுச்செல்வார்கள் .
ஜெமோ என்கிற இந்துத்துவ அறிவுஜீவிக்கு இப்போதெல்லாம் நாளைக்கு நாற்பது பக்கம் 'எளுதி'த் தொலைக்க வேண்டி இருக்கின்றது. ஒரு தோட்டாவின் பாய்ச்சலை பதினாறு பக்கத்துக்கு ஸ்லோ மோஷனில் விவரித்து 'விசியாந்து'க்கு அடுத்தபட வசனத்துக்கு 'எளுதுன' கதைதான் உலோகம். கொஞ்சம் மாத்தி விடுதலைப்புலிகள் கதையாக்கி சந்தைக்குக் கொண்டுவந்துவிடார். ஒரு 'நாயரி'டம் இதைவிட வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
தமிழ்நதிக்கு எனது பாராட்டுக்கள்
////இப்போதைக்கு பர்கா தத் போல எங்காவது மாட்டிக்கொள்ளும் வரை இந்த ஊடகபொம்மையை(அருந்ததி ராயை) நம்புங்கள் என்று சொல்லி நிறுத்துவதே எனக்கு வசதி////
இப்படி சொன்ன ஜெமோ , இப்போ வகையா மாட்டிருக்கார் தமிழ்'கிட்ட..
வித்தியாசமான பார்வை உங்களது தமிழ்..,தொடருங்கள்..கிழித்து தொங்க விடுங்க...
\\‘காடு’வாசித்திருக்கும் ஒருவர் அந்தக் கூற்றை ஆமோதித்தே ஆகவேண்டும்.\\
காட்டில் பெய்வதுதான் மழை என்று ஜெயமோகன் காட்டைப்பற்றி சிலாகிக்கும்போது பாலையில் மஞ்சள் வெயிலில் பெய்வதும்தான் மழை என்று தோன்றியது. வறண்ட பகுதிலிருந்து வந்த ஒருவன் காட்டுக்குள் மாட்டிக்கொண்டு உயர்வாக நவிலும் உளறல்கள்தான் காடுமுழுக்க சிதறிக்கிடக்கின்றன.
இங்கு வந்து கருத்திட்ட அன்பு நண்பர்கள் தெகா, ராம்ஜி, சாணக்கியன், விந்தை மனிதன், விஷ்ணுபுரம் சரவணன், வெற்றிவேல், சாந்தமூர்த்தி, மாதுமை, வந்தியதேவன், அனானி நண்பர், மயூ மனோ, அங்கயன், கே.ஆர்.பி.செந்தில் அனைவருக்கும் நன்றி. நான் உங்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். கற்க வேண்டிய விடயங்களை நோக்கி என்னைச் செலுத்தியிருக்கிறீர்கள். அதற்கும் நன்றி. தேசம் என்ற கற்பிதத்தைக் காட்டிலும் சகமனிதன் முக்கியமானவன் என இப்போதெல்லாம் நினைத்துக்கொள்கிறேன். மறுவளமாக, சகமனிதனின் துயரம் கண்டு தாளமாட்டாமல் கிளர்ந்தெழுபவர்களின் நியாயமான போராட்டங்கள் புதிய தேசங்களை உருவாக்குகின்றன. தேசம் என்ற கற்பிதத்துக்கும் தனிமனிதனின் உரிமைகளுக்குமான கடல்-கரை விளையாட்டுத்தான் இதுவும்.
சாணக்கியன் காஷ்மீர் பிரச்சனையைப் பற்றிப் பேசியிருந்தார். கே.ஆர்.பி.செந்திலின் பக்கத்தில் கும்மி இணைத்திருந்த சுட்டியில் நேரு அவர்களின் வாசகங்கள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தது. அதிலிருந்து ஒரு பகுதி...
"the people of Kashmir do not wish to remain with us, let them go by all means. We will not keep them against their will, however painful it may be to us. I want to stress that it is only the people of Kashmir who can decide the future of Kashmir. It is not that we have merely said that to the United Nations and to the people of Kashmir, it is our conviction and one that is borne out by the policy that we have pursued, not only in Kashmir but everywhere."-Nehru
கீழ்க்காணும் சுட்டியில் விந்தை மனிதன் எழுதியிருந்த பதிவையும் வாசிக்க வேண்டுகிறேன்.
http://vinthaimanithan.blogspot.com/2010/08/blog-post_22.html
நன்றி
அன்பார்ந்த தமிழ்நதி,
உங்கள் விமர்சனம் படித்தேன். கதைக்குள்ளிருக்கும் அரசியலை சரியாக குரல்வளையைப் பிடித்து நெரித்து எடுத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சாணக்கியன் போன்றவர்களின் ஆவேச மறுமொழிகள் என் நினைப்பை உண்மையாக்குகின்றன.
சாணக்கியனுக்கு நீங்கள் தந்த பதில்களும் சரியானவை. ஆனால் அவற்றை ஜீரணித்துக் கொள்ள இயலாத இந்துத்வா பிராமணர் அவர் என்று தோன்றும்படியாக அவருடைய பின்னூட்டங்கள் உள்ளன.
இந்தியா, தேசியம், இறையாண்மை, புண்ணாக்கு, என்று பேசுபவர்கள் மறந்து விடுவது 'தேசியம் என்பது ஒரு மனக் கற்பிதம்' என்பதை. இந்தக் கற்பிதம் எந்த அளவிற்கு மக்களுக்கு பயனளிக்கிறதோ அந்த அளவிற்கே அது மதிப்பளிக்கப்பட வேண்டும். தமிழனை எவன் சுட்டுக் கொன்றாலும் லட்டர் தான் போடுவேன் என்று நிற்கும் ஒரு நாட்டின் கீழ் தமிழன் இந்தியனாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்வதில் என்ன புண்ணியம் ? இன்னிக்கு மீனவன் செத்தான்; உனக்கு கவலையில்லை; தேசியம், இறையாண்மை முக்கியம். நாளைக்கு கச்சத்தீவில் ராணுவ தளம் அமைத்தால் கல்பாக்கம் வரை பாயும் ஏவுகணை. அன்னிக்கும் கடிதம் தான் எழுதுவியளோ?
இந்தியா என்கிற தேசிய உணர்வு ஊட்டி வளர்க்கப்பட்டது. வெள்ளைக்காரனை எதிர்த்த வட இந்தியன் அப்போதும் கூட தமிழனை மதராஸி என்று தான் வன்மமாகப் பார்த்தான். இப்போதும் அப்படித்தான் பார்க்கிறான். நம்ம அழகிரி அண்ணனை பாராளுமன்றத்தில் வைத்து கேலி செய்து எல்லோரும் சிரித்ததை நீங்கள் மறந்துவிட்டீர்களா? அருகருகே இருக்கும் இரு வீட்டுக்காரர்கள் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் ஒன்றுபட்டு தீயை அணைப்பது 'தெருப் பற்று' அல்ல. தீ பரவினால் இருவரின் உடமைகளுக்கும் ஆபத்து என்கிற யதார்த்தம் முக்கிய காரணம். 'நம்ம தெருக்காரன்' என்கிற வரிகளை சேர்த்துக் கொள்வது ஒன்று பட்டு நிற்கும் உணர்வை வளர்க்கும் ஒரு உத்தியே தவிர வேறொன்று மில்லை. தேசபக்தியும் ஒரு தெரு பக்திதான்.
ஒரு எல்லைக் கோட்டுக்குள் அடங்குவதா மனித மனம்? ஒரே மொழி, இனம், மதம், கலாச்சாரம், அருகருகே யமைந்திருப்பது போன்ற விஷயங்கள் தான் பிரதேச ஒற்றுமையை ஏற்படுத்துகின்றன. தேசியம் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்துகின்றன. அப்படி இருந்தும் ஒரு பத்து கிலோமீட்டர் நடுவில் கடல் வந்ததால் பிரிவுபட்ட இலங்கையின் தமிழனை ஏதோ அந்நிய நாட்டவன் போல் நினைக்கும் மனப்பான்மை தமிழகத் தமிழனுக்கு வந்ததற்குக் காரணம் என்ன? லட்சம் பேர் செத்த போதும் மானாட மயிலாட பார்த்து லயித்ததின் காரணம் என்ன? ஐபிஎல், ட்வெண்டிட்வெண்டி, சச்சின், தோனி, பெப்ஸி, கோக், அசின், பரத், கமல்ஹாசன் (உபோல்ஒருவன்), மணிரத்னம் போன்ற புண்ணாக்குகள் வழியாக கட்டமைக்கப்படும் புண்ணாக்குத் தேசியம் தான் இதன் காரணம் என்றால் அந்தத் தேசியப் புண்ணாக்கு எனக்குத் தேவையில்லை.
பெப்சி, கோக் போன்றவர்களுக்கு நாடு முழுவதும் ஒற்றை காண்ட்ராக்ட் போட்டு வளைக்க ஒரே ஆளிடம் (அதாங்க நம்ப ஆக்ஸ்போர்ட் புகழ் பிரதமர்) பேசினால் போதும். Federal setup இருந்திருந்தால் 28 மாநிலங்களுக்கும் மன்மோகன், கருணாநிதி மாதிரி இருபத்தெட்டு ஆட்களை அமர்த்த வேண்டியிருக்குமல்லவா ஆமாஞ்சாமி போட? அதனால தான் தேசபக்தி வாசனை பெப்சியிலும், கோக்கிலும் அடிக்குது. ஆப்பிரிக்காவில் விற்கும் பெப்சியில் ஆப்பிரிக்க தேசபக்தி வாசம் அடிக்கும். புரிஞ்சதா?
பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், இலங்கை என்று எல்லோரும் மாத்தி மாத்தி ஒருவரை ஒருவர் பூச்சாண்டி காட்டிக் கொண்டு அவரவர் மக்களை ஆள வைத்திருக்கும் மூடு மந்திரம் தான் 'எதிரி நாடு' என்கிற பீதி கிளப்பும் வார்த்தையும் தேச பக்தி மந்திரமும்.
மாவோயிஸ்ட்=சீனாவாம். ஐயா சாணக்கியரே, 1.5 ட்ரில்லியன்(ஒரு லட்சம் கோடி) டாலர் மதிப்புள்ள பாக்சைட் மலைகள் ஒரு லட்சம் தாண்டேவாடா பழங்குடியினரின் குடிசைகளுக்கு அடியில் இருப்பதை டாடாக்களும், பிர்லாக்களும் கண்டு பிடித்தது தான் 'operation green hunt' என்கிற அரசின் அழித்தொழிப்பு நடவடிக்கையும் அதற்கெதிராக மாவோயிஸ்ட்டுகள் வழிநடத்தலில் மலைவாழ் மக்களின் ஆயுதந்தாங்கியப் போராட்டம் தான் அவர்களின் தற்போதைய போராட்டம் என்கிற முழுப் பூசணிக்காயை நகக்கண்ணுக்குக் கீழே மறைக்கிற வேலையை யார் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்கள் ?
சாணக்கியன் மெய்யாலுமே அறிவுபூர்வமாகத்தான் பேசறார். ஆனால் அவருக்கு ஒரு பாராவால் பதில் அளித்துவிடமுடியாது அவர் வரலாற்றை சரியாக படிக்கவேண்டும். காஷ்மீர் மக்களுக்கு நேரு தலைமையிலான அரசு கொடுத்த வாக்குறுதிகளை எதை நிறைவேற்றியது. அங்கு போராடிக்கொண்டிருந்த தலைவர்களுக்கு ஆசை மொழி தூண்டில் அல்லவா போட்டது ஒத்துகொள்ளாவிட்டால் மிரட்டவும் செய்ததே.. வாக்கெடுப்பு நடத்துவதாக இவர்கள் கொடுத்த வாக்குறுதிஒன்றை நிறைவேற்றினாலே பாதிபிரச்சினை தீரும். முனைவர் த.செயராமனின் இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை பற்றிய புத்தகத்தை முழுவதும் வாசிக்க பரிந்துரைப்பதைதவிர வேறு வழியில்லை. இந்தியதேசியம் யாருக்கு பாதுகாப்பாக இருக்கிறது. விஜயகாந்த்,சீமான் ஆட்சி வந்தாலும் மீனவன் சாவான் என்றால் தவறு எங்கிருக்கிறது. நெய்வேலி மின்சாரத்தை பங்கிடதெரிந்த அரசுக்கு காவேரி நீரை பங்கிட மறுப்பதென்றால் தவறு எங்கிருக்கிறது. இந்திய சனநாயகம்
விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறது. பி.டி விதைகளை கொண்டுவருவதற்கு இடைஞ்சலாக போராடுவதை தடுக்க சட்டம் கொண்டுவர முனைகிறது.. இந்திய சனநாயகம் தலித் மக்களுக்கான நிதியில் தாராளமாக செலவிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்துகிறது. இந்தியசனநாயம் விநாயகர் ஊர்வலத்தை முகமதியர் தெருவிற்குள் நுழைந்து கலவரத்திற்கு ஆதரவாக இருக்கிறது. இந்து மதகொடுமைகளிலிருந்து வெளியேற நினைக்கும் ஒடுக்கப்பட்டவர்களை மதமாற்றச்சட்டம் கொண்டுவந்து மதத்தை காக்கிறது. குஜராத் கலவரங்களை கொஞ்சம் கூட நினைவில் கொள்ளாமல் கான் களை பற்றியெல்லாம் எழுதமுடிகிறது இந்திய சனநாயகத்தில் . மாலேகாவில், தென்காசியில் இந்து குடியிருப்புகள் அருகே இந்து தீவிரவாதிகளே குண்டுவைத்து அந்த இஸ்லாமியர் மீது தூக்கிபோட முடிகிறது இந்திய சனநாயகத்தில்.பம்பாயிலும் கர்நாடகாவிலும் இந்தியர்களை தமிழர்களாக்கி விரட்டியடிக்கமுடிகிறது இந்திய சனநாயகத்தால். சரி யாருக்கு ஆதரவாய் நிற்கிறது இந்த் சனநாய்கம். பார்ப்பனியர்களைத்தவிர வேறு யாருக்கு ஆதரவாய் இருக்கிறது இது. அதனால்தானே அதை கேள்வி கேட்டால் உடனே மூக்கில் வியர்த்து கோபம் வந்து கொட்டித்தீர்க்கிறீர்கள். மறைமுகமாக தமிழ்நதிக்கு என்ன சொல்லவ்ருகிறீர்கள் இது எங்கள் நாடு; நீ யார் எங்கள் நாட்டை பற்றி அவதூறு சொல்ல என்றுதானே. இதை நீங்கள் யாருக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே அவரிடம் கேளுங்கள் . அந்த நாட்டு இனவிடுதலைபோராட்டம் மீது அவதூறு தெளிக்க நமக்கு என்ன......... இருக்கிறது என்று.
//இந்த நாடு இன்னமும் ஜனநாயகத்தில் வேரூன்றியதாகவே உள்ளது என்றே நான் நினைக்கிறேன். இங்கே இன்னமும் கருத்துக்களின் குரல்வளை நெரிக்கப்படவில்லை. இங்கே இன்னமும் சிந்தனைக்கு உரிமை இருக்கிறது. //
அவருக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்று நினைத்தேன். இதை படித்த உடன் அதை மாற்றிக் கொண்டேன்.
இந்த நாட்டில் ஈழ மக்களை பற்றி பேசுபவர்கள் இந்திய இறையன்மையைக்கு எதிரானவர்கள்.
ஜெயமோகன் எப்பொழுதும் தன் இருத்தலை காட்டிக் கொள்ள அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகும் கருத்துக்களை வெளியிடுபவர் . இதுவும் அதை போன்றதே. ஈழ மக்களுக்கு இந்தியாவும் தமிழ் மக்களும் செய்த துரோகம் நிச்சயம் மன்னிக்க முடியாதது.
தொடர்ந்துவரும் பின்னூட்டங்களால், எனது கருத்துகள் சில தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதால் சில விளக்கங்கள்.
/* அப்படி விரட்டியதை காஷ்மீரிலுள்ள ஆயுதக்குழுக்களும் மக்களும் மிதவாதப் போராட்ட அமைப்புகளும் எதிர்த்தன.
*/
இது எனக்குப் புதிய செய்தி.
/*என்னங்க சாணக்கியன் இது? சிரிப்பாக இருக்கிறது. சிறையிலிருந்து பேட்டி கொடுப்பதுதான் இந்திய ஜனநாயகப்
பண்பா?
*/
நிச்சயம் நான் அப்படி எண்ணவில்லை. இங்கே ஒரு அரசியல்வாதி அவரை சிறையிலடைத்தால் ஒரு அரசியல்வாதியால் அவரை வெளியே கொண்டுவரமுடியும். அரசு தவறு செய்தால் நீதிமன்றத்தால் கண்டிக்க முடியும். அப்படி அதிகாரம் பிரிந்து பிண்ணி பரவியுள்ளது. அது ஒரு முக்கிய ஜன நாயகப் பண்பு. சீமானை சிறையிலடைத்தது தவறு என்று ஒரு பத்திரிக்கையால் எழுத முடியும். அதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்பினேன். ஏன் சுட்டிக்காட்ட விரும்பினேன் என்றால் ஒப்புமை வந்ததால்தான். சீனாவில் அரசுக்கு எதிராக ஒரு வலைப்பதிவு கூட எழுதமுடியாது. அரசுக்குப் பிடிக்காத ஒரு உண்மைச்செய்தியை ஒரு தேடுபொறியால் கூட தர முடியாது. அதனால்தான் கூகுள் அங்கிருந்து விரட்டப்பட்டது. ஆனால் இங்கு பழங்குடியினருக்கு எதிராக அருந்ததிராயல் கட்டுரையை பிரசுரிக்க முடிகிறது. அது போதுமா என்றால் , நிச்சயம் போதாது. எப்படி முழு பேச்சுச் சுதந்திரம் என்பது இல்லையோ அப்படி முழுமையாக பேச்சுச்சுதந்திரமே இல்லை என்று சொல்வதும் உண்மையில்லை. உங்கள் கட்டுரை அப்படிப்பட்ட கருத்தை சொல்வதாக எனக்குப்பட்டதால் அதை சுட்டிக்காட்ட விரும்பினேன்.
/*தமிழக அரசு சுயநலவாதியாக இருப்பதனால், மத்திய அரசும் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே என்கிறீர்களா?
*/
ஓஹோ... இப்படிக்கூட புரிந்துகொள்ள முடியுமா? என்னங்க தமிழ்!
the best person to take care of one is self என்பார்கள். நம்மக்களை பற்றி நாமே கவலைப்படாதபோது நமது மாநில
அரசே கண்டுகொள்ளாதபோது மத்திய அரசு எப்படி கண்டுகொள்ளும் என்பதுதான் என் கேள்வி. மத்திய அரசை தாய் எனவும் தமிழகத்தைக் குழந்தை எனவும் கொண்டால்கூட ‘அழுதபிள்ளைதான் பால் குடிக்கும்’. தானாகவே தேடிவந்து பால்கொடுக்குமளவுக்கு தமிழகம் ஒன்றுமறியாத பச்சைக்குழந்தை அல்ல. இது இன்றைய யதார்த்த நிலை. ஆனால் மத்திய அரசு எப்படி இருக்கவேண்டும் என்று கேட்டீர்களானால் நீங்கள் சொல்வது போல் யாரும் முறையிடாமலேயே தானே வந்து தமிழக மீனவர்களை காப்பதாகத்தான் இருக்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அது ஒரு லட்சியவாத அரசு. அறிவியலில் ideal machine doesn't exist என்பார்கள்.
கனிமவளங்களுக்காக மலைகளை கொள்ளை அடிப்பதும் மலைவாழ்மக்களை விரட்டுவதும் இந்த அரசாங்கத்தின் குற்றங்களிலேயே மிகக்கொடியது எனலாம். அந்த மக்களுக்காக அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திய போராட்டம் வருதும் இயல்பானதே.அதை நானும் மானசீகமாக ஆதரிக்கிறேன். சாம,பேத,தாண,தண்டம் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்திய சுதந்திரமே நேதாஜின் மூலம் கிடைத்திருந்தால் பெருமையாக இருந்திருக்கும் என்றுதான் எனது பதிவில் எழுதியிருக்கிறேன். அதே சமயம் அந்தப்போராளிகள் மக்களுக்கு எதிராகவே பின்னர் செயல்படும்போது அவர்களுக்கு எதிரான கருத்துகள் வருதும் மக்கள் ஆதரவை படிப்படியாக இழப்பதும் இயல்பானதே!
/* உங்கள் நண்பர் சொன்னதே சரி. பல மொழிகளும் இனங்களுமான இந்தியா பல மாநிலங்களாக சுயாட்சி கொண்டதாக பிரிந்துசெல்ல விரும்பினால்... அந்த மக்கள் அதை வலியுறுத்தினால் அது அவர்களது விருப்பம்.
*/
இது சற்றும் நடைமுறை சாத்தியமற்ற லட்சியவாத மேலோட்டமான கருத்து. தமிழ் நாட்டைச் சார்ந்த தெலுங்கு பேசும் இந்தியனான நான் கன்னட தேசத்தில் பொருளீட்டி சொத்துசேர்த்து வாழ்கிறேன். தனித்தனி நாடுகளானால் என்னாகும்? இது மிகச்சிரிய உதாரணம். தனித்தனி நாடுகளாக பிரிக்கப்படவேண்டும் என்று சொல்பவர்களுள் பலருக்கும் இதே கதிதான். வடகொரியா தென்கொரியா போன்று நமக்குள்ளேயே சண்டைபோட்டு பாழாவதுதான் நடக்கும். இங்கே தனித்தனி சமஸ்தானங்கள் இருந்தபோது அதுதானே நடந்தது! எப்போதும் அரசர்களுக்குள்ளாக சண்டையிட்டு மனிதவளமும் பொருளாதாராமும் வீணடிக்கப்பட்டன. அப்படி பிரிந்துகிடந்ததால் தானே அந்நியர்களுக்கு இந்த தேசம் அடிமைப்பட்டுக் கிடந்தது? இப்படி எதையும் யோசிக்காமல் பலரும் பேசுகிறார்கள். ஒருவேளை அப்படி தமிழகம் பிரிந்துகிடந்தால் சீனா உதவியோடு இலங்கைகூட தமிழகத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கலாம். இதுபற்றி முழுமையாக விவாதிக்கும் களம் இதுவல்ல என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.
/* இந்தியாவை ஒரு உன்னத தேசமாகக் கண்ணீர் மல்கிக் கரைந்து தனது கட்டுரைகளில் சித்தரிக்கிற ஜெயமோகனால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புனைவு அல்லது புரட்டு என்ற காரணத்தாலேயே நானும் இந்தியா பற்றிப் பேசவேண்டியேற்பட்டது. அவரால் விதந்து போற்றப்படுகிற அளவுக்கு அது சனநாயகப் பண்புகள் கொண்டதன்று என்று பேசத் தள்ளப்பட்டேன்.
*/
இதை நீங்கள் உண்மையிலேயே நம்புவதனால் அதை நான் மதிக்கிறேன். இந்தத் தெளிவு உங்கள் கட்டுரையில் இருப்பதாகத்தெரியவில்லை. உங்களுக்கு ஆதரவான பல பின்னூட்டங்களும் அப்படி புரிந்துகொள்ளப்படவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன. இங்குதான் நான் context பற்றிப் பேசினேன். அடுத்த தலைமுறையினரிடையே நல்லுறவு ஏற்பட, சகோதர எண்ணம் ஏற்பட, பழம்பெருமை பேசினால் தவறில்லை. இந்தியாவின் உன்னதங்களை அது உலகுக்கு வழங்கிய கொடைகளை நாளந்தா பல்கலைக்கழகம் நடத்தியதை சொன்னால் தவறில்லை என்பதுதான் என் வாதம். நாம் எல்லாம் ஒன்றாய் இருந்தவர்களப்பா... அதனால் நீ அவனுக்கு தண்ணீர்கொடு அவன் உனக்கு மின்சாரம் தருவான் என்று வழி நடத்துவதே சரியானதாக இருக்கும். மாறாக பிரிவினை பேசினால் இருவருக்கும் மாபெரும் இழப்புதான். அதற்காக இழிச்சவாயர்களாக இருக்கச்சொல்லவில்லை. தமிழகத்தில் சர்வக்ஞர் சிலையும் பெங்களுரில் திருவள்ளுவர் சிலையும் திறந்ததுபோல சமரச வழிகள் எத்தனையோ இருக்கலாம். மாறாக உணர்ச்சிவயப்பட்டு சண்டைக்கோழியாக இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.
சீமான் ஆட்சிக்கு வந்தால்கூட தமிழக மீனவர்களை காப்பாற்றமுடியாது என்ற தொனியில் நான் எழுதியிருப்பதாக நண்பர் ஒருவர் புரிந்துகொண்டு பின்னூட்டமிட்டிருக்கிறார். அப்படி இல்லை, அவர் வந்தால் தடுக்கமுடியும் மத்திய அரசை வற்புறுத்தி காப்பாற்றமுடியும் என்ற தொனியில்தான் எழுதியிருக்கிறேன்.
சில தவறான பின்னூட்டங்களை அனுமதித்திருக்கிறீகள். அவற்றில் நீங்கள் மாறுபடும் கருத்துகளை அவர்களுக்கு சொல்லாவிடில் அது உங்கள் ஆளுமைக்கு ஒரு கரும்புள்ளியாகத்தான் இருக்கும்.
பதில்களுக்கு கருத்துப்பகிர்வுக்கும் நன்றி, தமிழ்நதி!
மீனவர் படுகொலைகள் (http://www.jeyamohan.in/?p=11866) கட்டுரையிலிருந்து
அதன் இறுதியில் அவர் சொல்லும் கருத்துகள் உங்கள் கருத்துகளுடன் ஒத்துப்போவதாகவே இருக்கிறது.
/*
உண்மையில் இந்தியாவுக்கு அக்கறை இருந்தால் அந்த ராணுவக்குழு மீது இலங்கை என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேட்கவேண்டும். அந்த ராணுவ வீரர்களையும் அவர்களுக்கு பொறுப்பாக உள்ள
அதிகாரியையும் கோர்ட்மாஷியல் செய்து தண்டிக்கச்செய்யவேண்டும். அதன்பின் இலங்கை ராணுவம் இந்தியாமேல் கையை வைக்குமா? இன்று அவர்கள் அங்கே கைவிடப்பட்டு கிடக்கும் இந்த
மாபெரும் தேசத்தை எண்ணி சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா அதன் ஐம்பதாண்டுக்கால ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் பொருளியல் நலன்களை அறுவடைசெய்யும் நேரம் இது. இந்நேரத்தில் இத்தகைய சோதாக்களின்
செயலின்மையால் இந்நாடு அழிவை நோக்கிச் செல்கிறது. தன் வயிறு கிழிக்கப்படுகையில் அதை வேடிக்கைபார்க்கும் ஆமைபோல வலியுணராத தேசமாக இது ஆகிவிட்டிருக்கிறது.
குடியரசு தினத்தில் இந்த நாட்டின் எதிர்காலம் பற்றிய அச்சமே மனதைக் கவ்வுகிறது
*/
காந்தியம் ஒரு கடிதம் (http://www.jeyamohan.in/?p=11419)
/*
அன்புள்ள ஜார்ஜ் லிங்கன் அவர்களுக்கு
உங்கள் கடிதம் குறித்து பலகோணங்களில் சிந்தனை செய்தேன். உண்மை. எல்லாப் போராட்டமும் எல்லா தருணங்களிலும் வெல்ல முடியாது. அது வரலாற்றின் பலநூறு சக்திகளால்
நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் வெற்றிவாய்ப்பு ஆயுதப்போராட்டத்தைவிட வன்முறைப்போராட்டத்திற்கு மிகவும் குறைவு. மேலும் தோல்விக்குப்பிந்தைய பேரழிவு வன்முறைப்போராட்டத்தில் மிக
அதிகம். திபெத்தையும் ஈழத்தையும் ஒப்பிட்டு பார்த்தாலே போதும் இல்லையா?
வன்முறை அரசியலில் உள்ள இரு அம்சங்களே என்னை அச்சுறுத்துகின்றன. அது ஆயுதமேந்திய சிறுபான்மையினரின் ஏதேச்சாதிகாரம் நோக்கி மக்களை செலுத்தும். அவர்களின் வாழ்க்கை அவர்கள்
கைகளில் இருந்து முழுமையாக விலகிச்செல்லும். அவர்கள் கையறுநிலை கொள்வார்கள். அழிவார்கள்
வன்முறை அரசியலில் அதிகாரச்சமநிலை வன்முறை மூலமே தக்கவைக்கப்படும். மனித குணம் என்றுமே அதிகார நாட்டம் உடையது. ஆகவே அதில் உள்ளழிவு நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
தன்படை வெட்டிச்சாதல் நிகழாத ஆயுதப்போரே இல்லை
*/
இந்துத்துவத்திற்கு (அது என்று எடுத்துக்கொள்ளப்படும் எதிர்மறைப்பொருளில்) ஆதரவாளரில்லை எனச்சொல்லும் ஜெ.மோ.வின் கட்டுரைகள்
இந்துத்துவம்:ஒரு கேள்வி (http://www.jeyamohan.in/?p=611)
/*இந்துத்துவ அமைப்புகள் காட்டி வரும் பொறுமையோ சகிப்புத்தன்மையோ இல்லாத உணர்ச்சிகர அரசியல் இந்தியாபோன்ற பன்முகப் பண்பாட்டுச் சமூகத்தில் பேரழிவை உருவாக்கக் கூடியது
என்று நினைக்கிறேன்.
*/
/* இன்றைய இந்துத்துவ அரசியல் அல்லது ‘இந்துமுல்லாத்தனம்’ ஒட்டுமொத்த இந்துஞானமரபையே நிராகரிக்கும் இடத்துக்கு நம் ‘சுதந்திரஜனநயக சிந்தனையாளர்’களில்
பெரும்பாலானவர்களக் கொண்டுசென்றுசேர்க்கிறது என்பதே இதில் மிகமிக துரதிருஷ்டவசமானது. இந்துமரபு மீது மேலை ஊடகங்கள் உருவாக்கும் அனைத்து அவதூறுகளுக்கும் வலுவான ஆதாரமாக
அமைகிறது இந்துத்துவ முச்சந்தி அரசியல். இங்குள்ள சிறுபான்மையினர் நடுவே ஐயங்களை உருவாக்கி அவர்களைத் தனிமைப்படுத்துகிறது. இந்தியப்பண்பாட்டின் உள்ளிருந்து வளரும் புற்றுநோய்
என்றே இன்று வளர்க்கப்பட்டுவரும் ‘முச்சந்தி’ ‘வசைபாடல்’ இந்துத்துவ அரசியலை நான் மதிப்பிடுகிறேன்.
ஆனால் இந்துத்துவ அரசியலையும் இந்து ஞானமரபையும் ஒன்றாகக் காண்பவர்கள் ஒருபோதும் தோற்கடிக்க முடியாத மகத்தான ஆயுதம் ஒன்றை இந்துத்துவர்களுக்கு தாங்களே தூக்கி
வழங்குகிறார்கள்.
*/
சாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது? (http://www.jeyamohan.in/?p=5256)
தனிப்பட்ட முறையில் நான் சாதியை நம்பாதவன். சாதியடையாளத்தை துறந்தே தனிவாழ்க்கையை அமைத்துக்கொண்டவன். ஆனால் இன்றைய சூழலில் சாதியமைப்பு வலுவாகவே நீடிக்கும்
என்றே நினைக்கிறேன். நானறிந்தவரை தமிழில் சாதியைப் பற்றிச் சொல்லும்போதே பாய்ந்து சாதிக்கு எதிராக கர்ஜனைசெய்யும் எவருமே தனிவாழ்க்கையில் சாதியை விட்டு விலகாதவர்கள்.
இந்திய உலகின் மிகப் பெரும் சனநாயக நாடு என செயமோகன் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. அவன் மீன்காரன் குப்பம் பக்கம் போயிருக்கமாட்டார் ஏன்னா அவாள் சைவாள். தமிழக பொலிஸ் நிலையங்களில் காத்துக் கிடக்கும் ஈழ தமிழன் கூட சில நிமிடங்கள் கூட நின்றிருக்க மாட்டார். நாகலாந்தில் உள்ள கிராமங்களை அறிந்திருக்க மாட்டார் எனெனில் அவர் ஒரு இந்தியன். மணிபூரில் நிர்வாணமாக தெருவில் போராட்டத்தை கண்டிருக்க மாட்டார் ஏனெனில் அவர் படுக்கையிலேயே அந்த நிர்வாணத்தைப் பார்க்க விரும்புவார்..ஏனெனில் ......இது போது அவருடைய இந்தியா சனநாயக நாடு. 12 நட்களின் வீர காவியமான திளிபன் அவர் கண்களிலே தட்டுப் ப்டப் போவதில்லை.....கேவலங்கெட்டா.......கே புற....பன்.....கம்மு....ஈத்...சா ... பே... கா.... ஏத்ஹாவது கெட்ட வார்த்த பேசினடப் போறன்.
சாணக்கியன்,
நீங்கள் தொடர்ந்து உரையாட விரும்பினால்... நல்லது. நாம் உரையாடலாம். ஆனால்,வலைமனையில் மினக்கெடுவதனோடு வேறு சில வேலைகளும் இருக்கின்றன. மாலைக்குள் வந்துவிடுவேன். நாம் பேசலாம்.
சோமி, உங்கள் கோபத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. (நீங்கள் ஒரு ஈழத்தமிழராக இருப்பதனால்) ஆனால், நமது வார்த்தைகள் பூமராங் போல நமக்கே எதிராகத் திருப்பி எறியப்படலாம். மரியாதையில்லாமல் பேசுகிறார்கள் என்பார்கள்.
கொஞ்சம் இளநீர் குடித்தால் கோபம் அடங்கும்:)))
you anti indian refugeee get out of from my nation. get lost.
"புறக்கணித்துச் செல்லாமல் தொடர்ந்து வாசித்து அம்பலப்படுத்தப் படவேண்டியவர்."
That is right. And I too say the same thing.
"’வெல்க பாரதம்’” He is revealing his identity often and stands naked.
// “இந்த நாடு இன்னமும் ஜனநாயகத்தில் வேரூன்றியதாகவே உள்ளது என்றே நான் நினைக்கிறேன். இங்கே இன்னமும் கருத்துக்களின் குரல்வளை நெரிக்கப்படவில்லை " //
அவருக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்று நினைத்தேன். இதை படித்தவுடன் அந்த என்னத்தை மாற்றிக் கொண்டேன்
இந்த நாட்டில் ஈழ மக்களை பற்றி பேசுபவர்கள் இந்திய இறையன்மையைக்கு எதிரானவர்கள்.
ஜெயமோகன் எப்பொழுதும் தன் இருத்தலை காட்டிக் கொள்ள அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகும் கருத்துக்களை வெளியிடுபவர் . இதுவும் அதை போன்றதே. ஈழ மக்களுக்கு இந்தியாவும் தமிழ் மக்களும் செய்த துரோகம் நிச்சயம் மன்னிக்க முடியாதது.
செல்லையா முத்துசாமி,
“காடு“எனக்குப் பிடித்திருந்தது. இப்போது உள்ள மனநிலையில்... தெரியவில்லை... பிடிக்காமலும் போகலாம்.
காட்டில் பொழியும் அடர்மழையும் அதைப் பொருட்படுத்தாமல் அவன் காதல் பித்தேறி ஓடுவதும்... அந்த
வனநீலியின் மௌனமும் மறக்கமுடியவில்லை.
சின்னப்பயல்,
என்னிடம் யாரும் மாட்டவேண்டாம். நான் யாரிடமும் மாட்டாமல் இருந்தாலே போதும்:))
அம்பேதன்,
”இந்தியா, தேசியம், இறையாண்மை, புண்ணாக்கு, என்று பேசுபவர்கள் மறந்து விடுவது 'தேசியம் என்பது ஒரு
மனக் கற்பிதம்' என்பதை. இந்தக் கற்பிதம் எந்த அளவிற்கு மக்களுக்கு பயனளிக்கிறதோ அந்த அளவிற்கே அது மதிப்பளிக்கப்பட வேண்டும்.”
என்று சொல்லியிருந்தீர்கள். நன்றி. நான் கட்டுரை நெடுகிலும் சொன்னது மேலுள்ள இரண்டு வரிகளையே.
சரவணன்,
”இந்திய சனநாயகம் தலித் மக்களுக்கான நிதியில் தாராளமாக செலவிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்துகிறது.
இந்தியசனநாயம் விநாயகர் ஊர்வலத்தை முகமதியர் தெருவிற்குள் நுழைந்து கலவரத்திற்கு ஆதரவாக இருக்கிறது.
இந்து மதகொடுமைகளிலிருந்து வெளியேற நினைக்கும் ஒடுக்கப்பட்டவர்களை மதமாற்றச்சட்டம் கொண்டுவந்து
மதத்தை காக்கிறது. குஜராத் கலவரங்களை கொஞ்சம் கூட நினைவில் கொள்ளாமல் கான் களை பற்றியெல்லாம்
எழுதமுடிகிறது இந்திய சனநாயகத்தில் . மாலேகாவில், தென்காசியில் இந்து குடியிருப்புகள் அருகே இந்து
தீவிரவாதிகளே குண்டுவைத்து அந்த இஸ்லாமியர் மீது தூக்கிபோட முடிகிறது இந்திய சனநாயகத்தில்.பம்பாயிலும்
கர்நாடகாவிலும் இந்தியர்களை தமிழர்களாக்கி விரட்டியடிக்கமுடிகிறது இந்திய சனநாயகத்தால்.”
என்ற வரிகளைப் பிரதி செய்வதன் வழியாக சாணக்கியனுக்குப் பதிலளிக்கிறேன்.
Yoursaths,
நன்றி. மன்னிக்க வேண்டாம் நண்பரே.. அந்த மக்களை இன்னும் பாடாய்படுத்தாமல் இருந்தால் போதாதா?
சாணக்கியன்,
காஷ்மீரில் இந்து பண்டிட்கள் விரட்டப்பட்டபோது அங்குள்ள மக்களும் மிதவாதப் போராட்ட அமைப்புகளும் எதிர்த்தன.
போராட்டங்கள் நடத்தின என்பது உண்மை.
அரசும் நீதியும் தனித்தனியாப் பிரிந்து கிடப்பதன்று ஜனநாயகம். அரசு தவறிழைத்தால் நீதிமன்றம் தட்டிக் கேட்கும், அதனால் அரசு தன்னைத் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கும், அதனால் அரசு தவறு இழைக்கலாம்... இப்படியான இழைகளால் ஒரு தொடர்சங்கிலியாக நீண்டுசெல்வதல்ல ஜனநாயகம். அது அதனளவில் முழுமை வாய்ந்தது. பேச்சுரிமையையும் எழுத்துரிமையையும் உள்ளடக்கியது. மேடையில் பேசியதற்காக சிறையில் அடைக்கப்படுமொருவரைப் பற்றி எழுத பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் இருக்கிறதே என்கிறீர்கள்? பேச்சுரிமையைக் கழித்த எழுத்துரிமை. ஆனால், உங்களுக்குத் தெரியாதா சாணக்கியரே... ஆளுங்கட்சியை அளவுக்கதிகமாகத் தட்டிக்கேட்டால் ஆட்டோ வருமென்பது. ஞாநியிடம் கேளுங்கள் சொல்வார்.. இங்குள்ள எழுத்துரிமை பற்றி. மேலும், “காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமாக எந்தக் காலத்தில் இருந்தது?”என்ற அருந்ததிராயின் கேள்விக்குக் கொதித்துப் போனவர்களை நீங்கள் அறியீர்களா? அதுதான் ஊடக சுதந்திரம்.
பேச்சுச் சுதந்திரத்தை முழுமையான பேச்சுச் சுதந்திரம், அரைகுறையான பேச்சுச் சுதந்திரம் எனப் பிரித்துக்கொள்ளமுடியாதல்லவா? கடுப்பேற்றுகிறவர்களை விட்டுவிடுகிறார்கள். அதிகடுப்பேற்றுகிறவர்களைப் பிடித்து அடைத்துவிடுகிறார்கள். இதுதான் ஜனநாயகம். “சீனாவில் கூகுள் தேடுபொறியை அனுமதிக்கவில்லை“என்கிறீர்கள். ஒரு ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் ஒப்பிட்டுக் கொண்டிருப்பதே தவறு என்கிறேன் நான்.
மீனவர் விடயத்தில் கேள்வியும் நீங்களே... பதிலும் நீங்களேயாக இருக்கிறீர்கள். நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. கடலுக்குப் போகும் தனது குடிசனங்களைக் காப்பாற்றவேண்டியது மத்திய அரச கடற்படையினது பொறுப்பு. அதைச் செய்யத் தவறும்போது, அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது மாநில அரசினது பொறுப்பு. இது குழந்தைகூட அறியும். ஆனால், இரண்டு அரசுகளும் கடமையிலிருந்து தவறுகின்றன. மாமன்-மச்சான்-சம்பந்தக்குடி கூட்டணியால். இலங்கை அரசின் தாவாங்கட்டையைப் பிடித்து “சுடாதேங்கப்பா“என்று கெஞ்சுவதா ஒரு வல்லசு நாடு என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கும் இந்தியா போன்றதொரு நாடு தனது குடிமக்களைக் காப்பாற்றும் இலட்சணம்?
ஓய்வெடுத்துக்கொண்டு மிகுதிப் பதில்களுடன் மாலை வருகிறேன் சாணக்கியன். ஆனால், ஒவ்வொரு கேள்வியாகப் பிடித்து வைத்துக்கொண்டு பதிலளிக்கச் சலிப்பாக இருக்கிறது. ஏதோ, பரீட்சைத்தாளில் விடையெழுதுவதுபோல... ”ஜெயமோகன் போராளிகளைப் பற்றியும் போராட்டத்தைப் பற்றியும் தவறான புரிதல் கொண்டிருக்கிறார். அது எங்கிருந்து வருகிறதென்றால், அவர் இந்தியாவின் மீது கொண்டிருக்கும் தேசப் பற்றுறுதியிலிருந்து வருகிறது. அப்படி அவர் உன்னதமாகக் கொண்டாடும் தேசம்தான் எங்கள் மக்களது வாழ்வையும், வேறு சில ஒடுக்கப்படும் மக்களது வாழ்வையும் சீரழித்தது.”இதுதான் விடயம். இதைத்தான் நான் எழுதினேன். நீங்கள் மீண்டும் மீண்டும் வந்து இந்தியாவை நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள். ”தன்னால் முழுமையாக உணர்ந்துகொள்ளப்பட முடியாத ஒரு போராட்டத்தைப் பற்றி தரக்குறைவாக ஒரு புதினத்தை எழுத அவருக்குத் தகுதி இல்லை”என்பது உங்களுக்கு ஏன் புரியமாட்டேன் என்கிறது? அதை ஒரு ஆயுதவெறியாகச் சித்தரிக்க அவரால் எப்படி முடிகிறது? ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதை அவர் அறிவாரா?
நீங்கள் ஒருபக்க நியாயம் பேசுவதானால், தயவுசெய்து எனது வலைத்தளத்தைப் படிக்கவேண்டாம். “இஸ்லாமியர்கள் எங்கு இருந்தாலும், தங்களைத் துருத்திப் பிரிந்துசெல்லவே விரும்புகிறார்கள். அது ஒரு மதம் அல்ல”என்ற வரிகளை வாசித்துவிட்டு மனங்கசந்து அந்த வலைத்தளத்தை விட்டு மௌனமாக விலகிச் செல்லும் ஒரு இஸ்லாமியரைப் போல நீங்கள் எனது பக்கத்தை மூடிவிட்டுப் போகலாம். வாதத்திற்கும், விதண்டாவாதத்திற்கும் வித்தியாசம் உண்டு.
நான் உண்மையைப் பேசுகிறேன், அதன் பக்கலில் நிற்கிறேன் என்று நுாறு சதவீதம் நம்புகிறேன். அது எனக்குப் போதும். நன்றி நண்பரே.
சாணக்கியன்,
மக்கள் பிரிந்துசெல்ல விரும்புகிறார்கள் என்றால்.... என்று சொன்னது நினைவிருக்கிறதல்லவா? அது எனது கருத்தன்று. உங்களது நண்பரும் எனது நண்பரும்கூட இந்தியக் குடிமக்களே.(ஒருவேளை இல்லையா?) அவர்களது
கருத்தும் கணக்கிலெடுக்கப்பட வேண்டியதல்லவா?
சர்வக்ஞர் சிலை, திருவள்ளுவர் சிலை பற்றிப் பேசும் நீங்கள் ஏன் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகா, முல்லைப் பெரியாறு, தமிழனை “பாண்டி“என்று பேசும் கேரளத்தவர் பற்றிப் பேச மறுக்கிறீர்கள்?
“சகோதர எண்ணம் வளர பழம்பெருமை பேசினால் தவறில்லை”த்தான். பழம்பெருமை மட்டுந்தானே தமிழர்கள் நாம்
பேசிக்கொண்டிருக்கிறோம்? இந்தளவு இலஞ்சமும் ஊழலும் அதிகாரத் துஷ்பிரயோகமும் தமிழகத்தை எங்கு கொண்டு சேர்க்கும் என்கிறீர்கள்? பெரியார் பேசிய பகுத்தறிவு என்பது சில நுாறு பேர்களின் தலைக்குள் மட்டும் குடியிருக்கிறதே...! இந்த நாட்டின் அரசாங்கத்தை மக்களா தீர்மானிக்கிறார்கள்? கடந்த தேர்தலில் தமிழகத்தின் சிவகெங்கைத் தொகுதி நினைவில்லையா? தொடுப்பாளர் நீரா ராடியாவும் டாடா இன்னபிற கார்ப்பரேட் கம்பெனிகளைப்
பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சாமான்ய மக்களின் அரசாக மத்திய அரசு இருக்கிறதென்று உங்களால் அடித்துச் சொல்லமுடியுமா?
”சில தவறான பின்னூட்டங்களை அனுமதித்திருக்கிறீகள். அவற்றில் நீங்கள் மாறுபடும் கருத்துகளை அவர்களுக்கு
சொல்லாவிடில் அது உங்கள் ஆளுமைக்கு ஒரு கரும்புள்ளியாகத்தான் இருக்கும்.”
உங்களுக்கே பதில் சொல்லி மாளவில்லை. இதில் அவர்கள் சொல்வதற்குமா? அவரவர்க்கு கருத்துச் சுதந்திரம் உண்டு
என்பதை நினைவில் வைத்திருங்கள். மிக மோசமான, தனிப்பட்ட தாக்குதல்களைக் கொண்ட பல பின்னு
ாட்டங்களை நான் பிரசுரிக்கவில்லை. அது என்னளவில் நான் கைக்கொண்டிருக்கும் அறம். எனது ஆளுமைக்கு
கரும்புள்ளி? நான் ஆளுமையே இல்லைங்க. அதற்கெல்லாம் வேறு சில ஆட்கள் இருக்கிறார்கள். நான் சாதாரண மனுசி. எங்கள் போராட்டத்தை இழிவுசெய்யும்போது கொஞ்சம் சொரணை வந்து பேசுவேன். அவ்வளவுதான்.
கரும்புள்ளி என்ன பெரும்புள்ளிகளது தனியுடமையா? எனக்கும் இருந்துவிட்டுப் போகட்டுமே!
ஜெயமோகனது வலைத்தளத்திலிருந்து உங்களால் எடுத்துப் போடப்பட்டிருக்கும் வரிகளை நானும் வாசித்திருக்கிறேன்.
கட்டுரை எழுதும்போது உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் போய் வாசித்தேன். மொத்தக் கட்டுரையின் சாராம்சத்தைப்
பாருங்கள். ஒட்டுமொத்தமான அவரது கருத்துக்களைப் பாருங்கள். மதச்சகிப்பின்மையைப் பாருங்கள்.
”ஆனால் வெற்றிவாய்ப்பு ஆயுதப்போராட்டத்தைவிட வன்முறைப்போராட்டத்திற்கு மிகவும் குறைவு. மேலும்
தோல்விக்குப் பிந்தைய பேரழிவு வன்முறைப்போராட்டத்தில் மிக அதிகம். திபெத்தையும் ஈழத்தையும் ஒப்பிட்டு பார்த்தாலே போதும் இல்லையா?”
என்பதை நீங்களே எடுத்துக்கொடுத்திருக்கிறீர்கள். எங்களது ஆயுதப்போராட்டம் இல்லையாம். வன்முறைப்
போராட்டமாம்!
--
நன்றி தன்ராஜ்,
பரவாயில்லையே... தவறாமல் வந்து வாசித்துப் போகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி.
Yoursaths,
உங்கள் ஆதங்கத்தை, கோபத்தைப் புரிந்துகொள்கிறேன். உங்களது இரண்டாவது பின்னுாட்டத்தைப்
பிரசுரிக்கவில்லை.மன்னிக்கவும். காரணம், நாம் தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுக்கும்போது, நமது பக்க நியாயத்தை எடுத்துரைக்கும் தகுதியை இழந்துவிடுகிறோம். உங்களைப் புரிந்துகொள்கிறேன்... நன்றி நண்பரே.
Hello Anony,
”you anti indian refugeee get out of from my nation. get lost.”என்று கொதித்திருக்கிறீர்கள்.
This is the kind of hatred i am talking about. This is what you people (few only)
are doing to the minorities inside and outside the country.
plus, i am not a refugee and I am not staying in a place which is called refugee camp where people are illtreated.
yea, I am getting out. Not because of your hatred; but for personal reasons which i can't reveal to a narrow minded and faceless person like you.
"you anti indian refugeee get out of from my nation. get lost."
This statement once again disproves the general notion created by some people that India is a great country and its people are the most tolerant. It is a total bullshit.
தமிழ்,
நீங்களும் நான் சொல்வது எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள் என்று நானும் சொல்லலாமல்லவா?
வேண்டாம். உங்களுக்கு மட்டுமல்ல.எனக்கும் வேறு வேலைகள் இருக்கின்றன. இப்போது தேர்வுக்கு வேறு படித்துக்கொண்டிருக்கிறேன்.
உங்கள் தளத்தைப் படிக்கவேண்டாம் என்கிறீர்கள். அப்படிப்பார்த்தால் ஜெ.மோ.வின் வலைத்தளத்தையோ புத்தகத்தையோ நீங்களும் படிக்கவேண்டாமே? ‘படித்தாகிவிட்டது. அதனால் பேசவேண்டியிருக்கிறது’ என்பது நம் இருவருக்குமே பொருந்தும்தானே...(கேள்விக்குறி இங்கே போடவில்லையம்மா :))
கேள்விமேல் கேள்வி கேட்பதாகச் சொல்லியிருந்தீர்கள். அந்தக்கேள்விகள் எனக்குப் பதில் சொல்வதற்காக அல்ல. உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்!
கருத்தொருமிக்கும் கட்டுரை அல்லது உங்களது படைப்பு ஒன்றைக்கொண்டிருக்கும் வேறு பதிவில் சந்திக்கலாம்...
வணக்கம்!
சாணக்கியன்,
”உங்கள் தளத்தைப் படிக்கவேண்டாம் என்கிறீர்கள். அப்படிப்பார்த்தால் ஜெ.மோ.வின் வலைத்தளத்தையோ புத்தகத்தையோ நீங்களும் படிக்கவேண்டாமே?”
பொறுக்கமுடியாதபடி கருத்து வேறுபாடுகள் இருந்தால், எனது வலைத்தளத்தை நீங்கள் படிக்கவேண்டாம் என்றேன். ”ஜெயமோகனை நீங்கள் படிக்காமல் விடுங்களேன்”என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவருக்காக அல்லது அவராகவே நின்று நீங்கள் பேசுகிறீர்கள். இதிலிருந்தே தெரிகிறது நீங்கள் ஜெயமோகனின் எழுத்துக்களின் மீது சாய்ந்திருக்கிறீர்கள் என்பது. சாய்வுநிலை நடுநிலைக் கருத்தை முன்வைக்காது.
”கருத்தொருமிக்கும் கட்டுரை அல்லது உங்களது படைப்பு ஒன்றைக்கொண்டிருக்கும் வேறு பதிவில் சந்திக்கலாம்...”
நிச்சயமாக. கருத்தொருமிக்க வேண்டியதில்லை. உண்மைக்கு நெருக்கமாகப் பேசலாம். உங்களை நான் கோபித்துக்கொண்டேன் என்றா நினைக்கிறீர்கள்? நிச்சயமாக இல்லை.
தன்ராஜ்,
”This statement once again disproves the general notion created by some people that India is a great country and its people are the most tolerant. It is a total bullshit.”
நன்றி. சில பின்னுாட்டங்கள் வெளியிடவே முடியாத பயமுறுத்தல்களை உள்ளடக்கியிருந்தன.
இந்தியா என்று ஒரு வாந்தி அதை நாறாமல் பார்த்துக்கொள்ளும் ஜெயமோகன்போன்ற சில வாசனை திரவியங்கள்.
/* என்பதை நீங்களே எடுத்துக்கொடுத்திருக்கிறீர்கள். எங்களது ஆயுதப்போராட்டம் இல்லையாம். வன்முறைப்
போராட்டமாம்!
*/
உங்கள் உணர்ச்சிக்கொந்தளிப்புகள் கொஞ்சம் அடங்கியிருக்கின்றனவா தோழி? அப்போது உங்களுக்கு சில விசயங்கள் புலனாகும் வாய்ப்பு உள்ளது. ஆயுதப் போராட்டம்-வன்முறைப்போராட்டம் என்று வார்த்தை விளையாட்டு விளையாடினால் நல்ல அரசியல்வாதி ஆகலாம்! சிந்தனைத்தளத்தில் முன்னகர முடியுமா என்று தெரியாது!
பொதுவாக நம் வடமொழியிலிருந்து பெற்றாலும் அஹிம்சை என்ற சொல்லைத்தான் தமிழிலும் பயன்படுத்தி வந்திருக்கிறோம். அது ஹிம்சை என்ற சொல்லிலிருந்து பிறக்கிறது. ஆங்கிலத்திலும் non-violence என்பது violence என்பதிலிருந்து பிறக்கிறது. ஹிம்சை-வயலென்ஸ் ஆகியவற்றை நேரடியாக மொழிபெயர்த்தால் ’வன்முறை’ என்றுதான் நம்மில் பலரும் சொல்லுவோம். ஒரு திரைப்படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகம் இருந்தால் ஆங்கில நாளிதழ் வயலென்ஸ் என்றும் தமிழ் நாளிதழ்கள் ‘வன்முறை’ அதிகமுள்ள படம் என்றும்தாம் எழுதும். இப்படிப்பட்ட சூழ் நிலையில் ‘ஆயுதப்போராட்டம்’ என்ற சொல்லாட்சியைத்தான் பயன்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் அதில் உள் நோக்கம் இருக்கிறது என்று நீங்கள் சொல்வது, எதையுமே தவறாகப்பார்க்கும் அந்த கொந்தளிப்பு மன நிலையின் தற்காலிக நிலை என்று நினைக்கிறேன்.
அந்த சுட்டியைக் கொடுத்ததற்கு காரணம் வேறு. அமைதிப் போராட்டமே சரி என ஜெ.மோ. எழுதுகிறார். ஒரு வாசகர் வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டி எப்போதுமே அஹிம்சை வெற்றி பெறாது, ஆயுதப் போராட்டமும் வெற்றிகளைத் தந்துள்ளன என்று சொல்கிறார். தீவிர யோசனைக்குப்பின் ஜெ.மோ. அக்கருத்தை ஒப்புக்கொள்கிறார். இப்படி மாற்றுக்கருத்துகளை உள்வாங்கி சிந்தனைத்தளத்தில் முன்னகர தயாரகவே உள்ளதோடு அதைத் தோல்வியாக கருதாமல் பொதுத்தளத்தில் ஒப்புக்கொள்ளவும் செய்கிறார். இதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்பினேன். எத்தனை எழுத்தாளர்கள் இப்படி ஒப்புக்கொள்வார்கள். நம்மில் எத்தனைபேர் இப்படி சிந்தனையை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று யோசிப்பது நமக்கும் நல்ல உதாரணம் என்று நினைக்கிறேன்!
நீயா நானவில் உங்களைப் பார்த்தேன். நான் உங்கள் கட்சிதான் :). காதலுக்கு அவ்வளவு முக்கியத்துவமோ உன்னத இடமோ தேவையில்லை!
நல்ல பதிவு சகோதரி அந்த புத்தகம் பார்க்க இப்போது அவலாயிருக்கிறது உண்மையிலேயே எம் ஊர் உணர்வை பிரதிபலித்தாரா என பார்க்க அவலாயிருக்கிறேன்....
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன
//இந்தியா என்று ஒரு வாந்தி அதை நாறாமல் பார்த்துக்கொள்ளும் ஜெயமோகன்போன்ற சில வாசனை திரவியங்கள்.//
எவனுக்கு பிடிக்கலையே அவனெல்லாம் “ஈழத்துக்கு” கப்பல் பிடிச்சு போங்க .
என்னுடைய கடைசி பின்னூட்டத்தைக் கானோமே? விலக்கப்பட்டதா இல்லை வந்து சேரவே இல்லையா...
விடுதலை புலிகளின் ஃபாசிசத்தை, விவேகமில்லாமல் பல சந்தர்பங்களை இழந்ததை பற்றி ஒரு வரி கூட பேசாமல், தொடர்ந்து சிங்கள் பேரிணவாத அரசு, உலக ஏகாதிபத்திய முதலாளிகளின் சதிகளின் காரணமாகத்தான் புலிகள் அழிந்தார்கள் என்பது சரியான பார்வையல்ல.
உணர்சிவசப்பட்டு பார்பதை விட அறிவுபூர்வமாக பார்பதே realistic ஆன பார்வையை அளிக்கும். இதை பற்றி 2009இல் உங்கள் பேச்சு மூலம் எழுந்த சர்ச்சையை மீண்டும் இங்கு தொடர வேண்டாம் தான்.
80களின் ஆரம்பங்கள் முதல் ஈழப்பிரச்சனைகளை அவதானித்து கொண்டு, போராளிகளுக்கு பல உதவிகள் செய்த குடும்பதில் இருந்து வந்தவன் என்ற முறையில் சொல்கிறேன் : புலிகள் அழிந்ததே மிக நல்லது. இனி ஈழத்தமிழர்கள் வாழ்வு மேம்படும். போர் மற்றும் உயிரிழப்புகள் இருக்காது. ஜனனாயகம் கொஞ்சம் கொஞ்சமாக மலரும். ஒரு வேளை புலிகள் வென்று ஈழம் உருவாக்கியிருந்தால், சர்வாதிகாரத்தில் தமிழன் தமிழனுக்கே அடிமையாக வாழ் வேண்டியிருக்கும். ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றி இருப்பதை போல war lordism and brutal dictatorship with no chance for opposition, freedoms, etc. மேலும் போதை மருந்து, ஆயுத கடத்தல் பெரும் அளவில் புலிகள் செய்து நிதி திரட்டிய முறைகள், legalஆக தொடர்ந்திருக்கும். அன்னிய செலவாணிக்காக. இன்றைய வட கொரியா போல. சீரழிந்திருக்கும்.
இதை புரிந்து கொள்வது உங்களுக்கு சிரமம் தான்.
ஜெயமோகனின் பல கருத்துக்களில் முரண்படுகிறேன். ஆனால் மாவோயிஸ்டுகளின் போர் பழங்குடியினரின் நலனுக்காகதான் என்பது over simplification. அது அவர்களுக்கு ஒரு சாக்கு. உண்மையில் பழங்குடியினருக்கு அவர்கள் என்ன பாதிப்பை ஏற்படுத்தியிருக்கினர் என்பதை பற்றி ஒரு விரிவான ஆய்வு :
(EPW ஒரு மிக மதிக்கப்படும் இடதுசாரி ஏடு)
https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B-zhDOdupGDUNGYyOWI0OTItMWNmZi00MGRiLWEyMGMtOWIxZmVhMTRiMjE3&hl=en
அன்பு நண்பர்கள் கே.ஆர். அதியமான், சாணக்கியன், ம.தி.சுதா மற்றும் அனானி யாவருடைய கருத்துகளுக்கும் நன்றி.
ஒரு குடும்ப நிகழ்வு காரணமாக இணையத்திலிருந்து ஒதுங்கியிருக்கிறேன். மூன்று வாரங்களின் பிறகு உங்கள் கருத்துக்களோடு உரையாட வருவேன். சிலசமயம் இதைவிடுத்து வேறு விடயம் பேசவும் போய்விடலாம். காரணம், எனக்குச் சரியென்று தோன்றுவதை நான் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாதபோது, உங்களுக்குச் சரியென்று தோன்றுவதை நீங்கள் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாதபோது, பேசி என்னதான் பயன்? நாம் சந்திக்கும் புள்ளிகள் குறைவல்லவா? அவரவர் கருத்துடன் வாழ்ந்து மடிந்துவிடலாமே...?
சாணக்கியன், உலகே காதல் மயம் என்கிறார்களே:))) நீயா நானா இத்தனை பேரைச் சென்றடையுமென்பதை அறியாதிருந்திருந்தேன். நன்றி.
நேற்றுதான் உலோகத்தை வாசித்தேன். நீங்கள் எழுதியிருப்பதில் இருநூறு விழுக்காடு உடன்படுகிறேன். ஒன்றரை லெட்சம் தமிழின மக்கள் கொல்லப்பட்டபோது திறக்காத ஜெயமோகனின் பேனா வரதராஜ பெருமாளின் மேல் கழிவிரக்கம் உண்டாக்க திறப்பதன் அரசியல் கேவலமானது. மெளனத்தால் இதனை புறக்கணிப்பது மேலும் அசிங்கம்
இது குறித்து தனிப் பதிவொன்றை எழுதனும் எழுதுவேன்...
தமிழ்....உலோகம் போனவாரம்தான் கைக்குக் கிடைத்தது. இன்றுதான் உங்கள் இந்த விமர்சனமும் படிக்கக் கிடைத்தது. உலோகம் படித்து முடித்த அந்தக் கணம் எனக்கு வந்த விசருக்கு, இப்போது இந்த விமர்சனத்தைப் பார்த்தல் உங்கள் காட்டம் மிகவும் குறைவோ என்று தோன்றுகிறது. தேசபக்தன் ஜெமோவின் மண்டையில் ஏதாவது உலோகத்தால் ணங்கென்று கொட்டினால் என்ன?
காசு கொடுத்து இதை வாங்குவது கோலை கொடுத்து அடி வாங்குவதற்கு சமம்.
வாங்குவதற்கு நீங்கள் தயாராக இருந்தால் விற்பதற்கு மோகனும் , கிழக்கும் தயாரகதான் இருப்பர்
இலக்கிய 'ராமகோபாலன்' செயமோகன், அவரது நாறும் தினமல{ம்}ர் வாசகர் கடிதம் போன்ற கட்டுரைகள் கதைகள் எல்லாம் அர்ஜூன் விசயகாந்த் திரைப்படங்கள் காட்டும் தேசபக்தி மசாலாக்கள்தான்.
அன்புள்ள தமிழ்நதி
தம்உயிரை விடுதலைக்காக அர்ப்பணித்த
போராளிகளின் குருதியை பேனாவில் நிரப்பி அதைகாசாக்க நினைக்கும் ஜெயமோகன் போன்றவர்களுக்கு எங்கள் வலி எப்படி புரியப்போகிறது? நாம் சிறுவயதாக இருக்கும்பொழுது சென்றலுக்கும் சென்ஜோன்ஸ்க்கும் நடைபெறும் கிறிக்கற் விளையாட்டில் எப்படி சென்றல் வெல்லவேண்டுமென்று ஆசைப்படுவோமோ அப்படித்தான் இலங்கையும் இந்தியாவும் விளையாடும்பொழுது இந்தியா வெல்லவேண்டுமென்று எதிர்பார்த்திருப்போம்.யாராவது தங்கள் நாடு தோற்கவேண்டுமென்று ஆசைப்படுவார்களா? நாங்கள் அப்படித்தான் அன்றும் இருந்தோம் இன்றும் இருக்கின்றோம். எமது அழுகையை பார்த்து மகிழ்ந்தநாடு இந்தியா. ஆனால் நாங்கள் சில நாட்களுக்கு முன்பு கூட இந்தியாவின் வெற்றியில் பங்கு கொண்டோம் இதை சாணக்கியன் போன்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
நானும் ஜெய மோகனின் உலோகம் வாங்கிப் படித்தேன். உங்களது பதிவைப் படிப்பதற்கு முன்பே. ஒரு நல்ல இயக்கத்திலிருந்த வந்த ஒரு போராளியை ஏதோ சிகப்பு ரோஜா கமல் மாதிரி சித்தரித்திருக்கிறார். ஒழுக்கம் நிறைந்த ஒரு இயக்கத்தின் போராளியை கதையின் நாயகனாக்கி, அவன் பார்வைகள் பாலியல் சார்ந்தது என்று காட்டியிருக்கிறார். ஜெயமோகனிடம் இருந்து இப்படியொரு நாவலை நான் எதிர்பார்க்கவில்லை. உன்னதமான ஒரு போராட்டத்தைக் காசு பார்க்கும் ஒரு விசயமாகப் பார்க்கும் முதலாளித்துவ மனப்பாங்கு தெரிகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் பத்திரிக்கையாளர்( மன்னிக்கவும் பெயர் நினைவில் இல்லை) விடுதலைப் புலிகளைச் சந்திக்க சென்றிருந்தார். அங்கு சென்ற பின் விடுதலைப்புலிகளின் இளம் போராளிகளுடன் ஒரே அறையில் தங்க நேர்ந்தது. தங்கி முடித்து விட்டு திரும்பிய பின் அவர் சொன்னது "நான் ஒரு அறையில் ஐந்தாறு இளம் போராளிகளுடன் ஒரே அறையில் தங்கியிருந்தேன் அவர்களது பார்வையில் ஒரு சிறு கண்ணியக் குறைவு கூட கிடையாது. அவர்கள் என்னைப் பெண் என்றே நினைக்கவில்லை. அந்த அறையில் இருந்த மற்ற பொருட்களைப் போலவே என்னையும் நடத்தினார்கள். ஆனால் நான் இந்தியத் தலை நகரான தில்லியின் வீதியில் நடந்து வந்தபோது பலர் என்னைப் பார்வையிலேயே பலாத்காரம் செய்து விட்டனர்" என்று சொன்னார். ஜெய மோகன் ஒரு உயர்ந்த இலட்சியமும் ஒழுக்கமும் உள்ள ஒரு போராளி இயக்கத்தில் ஒருவனை கதாநாயகனாக்கி விட்டு இப்படிஎழுதியிருக்கக் கூடாது. ஜெயமோகனின் மோசமான நாவல் இது. கழுத்தில் சயனைடு குப்பி அணிந்து கொண்டு போராடும் ஒரு இயக்கத்தின் போராளியைக் கேவலப்படுத்தி வியாபாரம் செய்வது இழிவானது. அதற்குப் பதிலாக ஜெயமோகன் குமுதத்தில் கதையாசிரியாராக சேர்ந்து கொள்ளலாம்.
சாணக்கியன் சரியான வாதங்களை எடுத்து கூறியுள்ளார், தமிழ்நதி உங்களால் தான் எதுவும் கூறமுடியவில்லை. உங்களை பற்றி அதீத கற்பனை செய்துகொள்வதும் தவறாகவே முடியும்.
ஐயா அனாமதேயம் அவர்களே, உங்கள் பின்னுாட்டம் பிரசுரிக்கப்படுமா என்ற ஆவலில் இருப்பீர்களே... பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
”உங்களைப் பற்றி அதீதமாகக் கற்பனை செய்து கொள்வதும் தவறாகவே முடியும்”
“அதீத“கற்பனைகள் எல்லாம் உங்களைப் போன்றவர்களுக்குத்தான். எனக்கு என் எல்லைகள், இயலுமைகள் தெரியும். சிலரைப் போல என்னை நானே “ராஜாதிராஜ ராஜ கம்பீர மார்த்தாண்ட பராக் பராக்“என்றெல்லாம் சொல்லிக்கொள்வதில்லை.
’உலோகம்’ படித்துவிட்டேன். ஒற்றை வரியில் சொல்வதானால் இதை ஜெயமோகன் எழுதியிருக்கத் தேவையில்லை. மற்றபடி, ராஜேஷ்குமாரின் ஒரு துப்பரியும் கையடக்க நாவலை மிகச்சற்றே உளவியல் ரீதியில் அனுகியிருக்கும் இப்புத்தகதுக்க&