10.26.2009

எழுத்தும் வாசிப்பும்…


புத்தகங்களை உயிர்மூச்சென்று சொல்வது மிகைப்படுத்தலாகத் தோன்றினும், அதனோடு தொடர்புடையவர்களுக்கு சற்றேறக்குறைய அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே அவை இருந்துவருகின்றன. சிலருடைய அறைகளில் புத்தகங்கள் இருக்கின்றன. சிலர் புத்தகங்களின் அறைகளில் வசிக்கிறார்கள். மேசையில், கட்டிலுக்கு மேல், கட்டிலின் கீழ், பரண்களிலுள்ள அட்டைப்பெட்டிகளில், வரவேற்பறையின் இருக்கைகளில், குளியலறையில்… எங்கெங்கு திரும்பினும் புத்தகங்களாக இருக்கும் வாழ்விடங்களை நான் பார்த்திருக்கிறேன். பார்க்கும்போதெல்லாம், ‘இவ்வளவையுமா வாசித்திருப்பார்கள்?’என்ற கேள்வி எழுந்திருக்கிறது. வாசிப்பின் அளவிற்கேற்ப மௌனம் அவர்கள் மீது கவிந்துவிடுவதையும் அவதானித்திருக்கிறேன். (இதற்கு முரணான விதிவிலக்குகளும் இருக்கிறார்கள்) நிறையப் படிக்கிறவர்கள் தங்களை சாமான்ய உலகத்திலிருந்து விலக்கிக்கொண்டவர்களாக அன்றேல் விடுவித்துக்கொண்டுவிட்டவர்களாக, சாதாரண உரையாடல்களில் பங்கேற்காதவர்களாக இருப்பதையும் கவனிக்க முடிந்திருக்கிறது.
நூலகங்கள் மற்றும் புத்தகக் கடைகளின் மாயவசீகரம் இன்னதென்று இன்னுந்தான் புலப்படவில்லை। காலச்சக்கரம் அந்நேரங்களில் மட்டும் கடகடவென்று சுற்றுமாயிருக்கும். புத்தகத்தைக் கையிலெடுத்து புரட்டவோ ஒரு வரி வாசிக்கவோ கூட வேண்டியதில்லை. மின்விசிறிகள் மட்டும் அனத்திக்கொண்டிருக்கும் நூலகங்களின் அமைதியான அந்த நீள மண்டபங்களின் மர அலமாரிகளுக்கிடையில் புத்தகங்களின் பின்முதுகைப் பார்த்தபடி ஊடாடித் திரிதலே போதுமாயிருக்கும்.

அந்தக் கிறக்கம் குறைந்துவருவதுபோன்றதொரு கலக்கம். பிரபஞ்சன் அவர்களின் வார்த்தைகளின்படி ‘ஜீவித நியாயமாகிய’எழுத்தை சமகாலத்தில் ஆத்மார்த்தமாக நேசிக்கிறவர்கள் அருகிவருகிறார்களோ என்று தோன்றுகிறது. தொழில்நுட்ப விருத்தியின் நீட்சியென விரிந்த உலகமயமாக்கல் உலகை அதகளம் செய்துகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், மனிதர்களின் அகவுலகு சுருங்கி, புறவுலகு விரிந்துவருகிறது. நுகர்வுப்பைத்தியத்தில் தலை கிறுகிறுத்து நாம் அலைந்துகொண்டிருக்கிறோம். அச்சு ஊடகங்களின் இடத்தை கணினி விழுங்கிவிடுமோ என்ற கவலை மனதை மலைப்பாம்பைப்போல வளைக்கவாரம்பித்திருக்கிறது. இருந்தும் அச்சு ஊடகங்களின் இடம் அசைக்கப்படக்கூடியதல்ல என்று ஆறுதல் கூறுவாருமுளர்.

தமிழிலக்கியத்தில் அதிசயங்கள் நிகழ்ந்தாலொழிய ஒரு நூல் மறுபதிப்புக் காண்பது அரிதாகவே இருக்கிறது. கவிதைத்தொகுப்புகள், சிறுகதைகள், நாவல்கள் ஐந்நூறு அன்றேல் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் பதிப்பாவதில்லை. சில நூறு பிரதிகள் இழுத்துப் பறித்து விற்பனையாக, மிகுதி பதிப்பகங்களில் இடத்தை அடைத்துக்கொண்டு கிடப்பதைக் காண்கிறோம். ஒரு எழுத்தாளனின் நெஞ்சைக் குளிர்விக்கும் ஒரே விடயம் அவனுடைய-அவளுடைய நூல் மறுபதிப்புக் காண்பதாகவே இருக்கமுடியும். தன்னுடைய எழுத்து அநாதரவாகக் கிடப்பதைக் காண்பதைப் போன்ற துயரம் எழுத்தாளனுக்கு வேறில்லை. ‘எனக்காகவே எழுதுகிறேன்’என்ற பெரும்போக்காளர்கள் இதற்குள் அடங்கார்.

எழுத்தாளர்களே வாசகர்களாக இருக்கும் பேறுபெற்றதாக இருக்கிறது சமகாலத் தமிழிலக்கியம். மறுவளமாக, யாரோ சொன்னதுபோல எழுத்தாளரல்லாத வாசகரைக் காண்பது அரிதாகி வருகிறது. அவ்விதம் இருக்கையில், எழுத்தின் மீதான மதிப்பும் வியப்பும் பிரமிப்பும் பெரிதாக எதிர்பார்ப்பதற்கில்லை. எழுத்தாளனே வாசிப்பவனாகவும் இருக்கும் பட்சத்தில் வாசிப்பிற்கு இணையான தர்க்கச்சரடு ஒன்று மனதினுள் ஓடிக்கொண்டிருக்கவே வாய்ப்பு அதிகம். வாசிப்புடன் தர்க்கிக்கும் தன்மை சிறுவயதில் குறைவாக இருந்ததனாலேயே நிறைய வாசிக்க முடிந்திருக்கிறது. அறியாமை அறிவுக்கு இட்டுச்சென்றது. மேலும், மனிதர்களின் குணாதிசயங்களை அது கட்டமைக்கவும் செய்தது. பொய்யே பேசாத, இரக்கமே உருவான, அறிவின் சுடரொளி கண்கூசவைக்குமொரு மனிதர்களாய் நம்மை நாம் கற்பனிக்கவும் அந்த அறியாமை வழிவகுத்தது. இப்போது ஒப்பீட்டின் மமதையால், ‘நான் அறியாததா?’என்ற தன்னுயர்ச்சியில் அன்றேல் பெருமிதத்தின் காரணமாகவும் புரட்டப்படாமல் தூசிபடிகின்றன புத்தகங்கள். நாம் நிறைய இழந்துகொண்டிருக்கிறோம். ஒரு எழுத்தாளனின் ஒரேயொரு புத்தகத்தைப் படித்துவிட்டு, குறிப்பிட்டவரைக் ‘கரைத்துக் குடித்ததாக’ப் பாவனை பண்ணுகிறவர்களையும் நாம் பார்க்கத்தான் பார்க்கிறோம். எழுத்தாளரின் பின்புலமும் வாசிக்கும் கண்களில் படிந்திருக்கிறது. அதற்கியைபுற எழுத்து கொண்டாடப்படவும் பின்தள்ளவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

கழிந்துபோன ஆண்டுகளில் வாழ்ந்த எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது நாவல்கள், சிறுகதைகள், வரிகள் பற்றிய சிலாகிப்புகளை வாசிக்கும்போது அந்த மகோன்னதக் காலங்களுக்கு ஏங்குகிறது மனம். அண்மையில் சந்தித்த ஒரு நண்பர் மஹாகவியின் கவிதை வரிகளை கடகடவென்று சொல்லிக்கொண்டே வந்தார். சமகால வாசிப்பு இத்தனை ஆழம்போகாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. பூரணி-அரவிந்தனும்(குறிஞ்சி மலர்) வந்தியதேவன்-குந்தவையும் (பொன்னியின் செல்வன்), வேதா-நச்சியும் (ஜீவகீதம்), தாரணி-சூர்யாவும்(அலையோசை) இன்னமும் என் நினைவில் இருக்கிறார்கள்.

புதுமைப்பித்தன் ‘இதுதானையா பொன்னகரம்’என்று கசப்பு வழிய எத்தனை காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். தி.ஜானகிராமனின் யமுனா ‘இதற்குத்தானா பாபு?’என்ற வார்த்தைகளை குறுஞ்சிரிப்போடு நம்மைப் பார்த்து இன்னமும் உதிர்க்கவே செய்கிறாள். ஜெயகாந்தனின் கங்கா இத்தனை காலங்கழித்தும் நுரைசுழித்தபடி நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறாள். பாலமனோகரனின் பதஞ்சலி தண்ணீரூற்றில் வெள்ளந்தியாய் சிரித்தபடி இன்னமும் உலவித்திரிகிறாள். அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’நாற்காலிகளில் ஏறி உங்களுக்குள் குதிக்கவில்லையா? லா.ச.ரா.வின் அபிதா இப்போதும் பல விழிகளில் சுடரேற்றுகிறாள். ‘கங்கா! நான் உன்னை இழந்து போனேனேடி!’என்று கங்கைக்கரை ஓரத்தில்…. கலங்கியழுத செங்கை ஆழியானை ஒருபோதும் மறக்கமுடிவதில்லை. ஜனரஞ்சக எழுத்தென்றும் ஆன்மீகத்தில் இறங்கித் தொலைந்தார் என்றும் வர்ணிக்கப்படுகிற பாலகுமாரனின் ஸ்வப்னாவும் காயத்ரியும்கூட அவரவர் கம்பீரத்துடன் இருக்கத்தானே செய்கிறார்கள்! இப்போது உதிரியாக நிறையப் பேர் எழுதிக்கொண்டிருக்கிறபோதிலும், எஸ்.பொ. அம்பை, பிரபஞ்சன், ஜெயமோகன், அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், அ.முத்துலிங்கம், வண்ணநிலவன்… இவர்களுக்குப் பிறகான பட்டியலில் ஒரு தேக்கம் வந்து சேர்கிறது. எதிரிடும் வெறுமை திடுக்கிட வைக்கிறது. ஆக, கதைகளின் வரிகளை அருந்திக் கிறங்கியிருந்த வாசகன் இனி காலமூட்டத்தில் மறைந்துபோவானா என்று அச்சமாக இருக்கிறது.

இருந்தும், சென்னை போன்ற நகரங்களில் புத்தகக் கண்காட்சிகளில் கூட்டம் அலைமோதுகிறது। அந்தக் கூட்டத்தை எப்படிப் பொருள்கொள்வதென்று தெரியவில்லை. கடற்கரையையும் சினிமாவையும் தவிர்த்து சொல்லும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் அற்றதாக இருப்பதனால் வாராமல் வந்த கண்காட்சிகளில் கூட்டம் அள்ளுகிறதா? அன்றேல், நாம் நினைப்பது போலன்றி சனங்கள் இன்னமும் புத்தகங்களை நேசிக்கிறார்களா? ‘எப்படி எப்படி’களில் சனங்களுக்கு இன்னும் மயக்கம் இருக்கத்தான் செய்கிறது. மற்றும் பக்தி ஸ்டால்களையும் குறைசொல்வதற்கில்லை.

எது எப்படி இருந்தபோதிலும் புத்தகக் கண்காட்சி நெருங்க நெருங்க மனதுள் ஒரு பரவசப்படபடப்பு. புதிய புத்தகங்களின் வாசனை மோகாவேசம் தருவது. காலம் தன்னுணர்வற்றுக் கழிந்துபோகும் உன்னத தருணங்கள் புத்தகக் கண்காட்சிகளில்தான் வாய்க்கின்றன. தவிர, எழுத்தாளர்களின் முகதரிசனங்களுக்கும் குறைவில்லை. கடந்த தடவை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் ஈரவிழிகளுடன் வாசிப்புக்காக ஏங்கிக் கிடக்கும்போது, புதிய வெளியீடுகளையும் அள்ளிவருகிறோம்.

வாசிக்கப்படாத புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் குற்றவுணர்ச்சி பொங்குகிறது. ஒருநாள்… ஒருநாள்…. என்று காத்திருக்கிறோம். வாசிக்க ஆரம்பித்து முடிக்காமல் மூலை மடித்த புத்தகங்களும் நம்மோடு சேர்ந்து காத்திருக்கின்றன.

"மோகித்து ஒருதடவை சுகித்தபின்
முகம் திருப்பிக் கடக்கிற
நெஞ்சின் அதிர்வை நினைவுறுத்துகின்றன
கட்டிலில் காத்திருக்கும் புத்தகங்கள்…"

என்ற வரிகள் உண்மையிலேயே உணர்ந்து எழுதப்பட்டவை. நடைமுறை வாழ்வு நம்மைத் தின்று செரிக்கிறது. சிக்கல்கள் வண்டுகளாகித் தலைகுடைகின்றன. வியர்த்த விவாதங்கள் சிருஷ்டியின் தவனத்தைக் கலைக்கின்றன. நமக்கு அளிக்கப்பட்ட இந்த வாழ்வு அற்புதமானது; கண்டெடுக்கப்படவேண்டியவற்றின் கருவூலம் இதுவென்ற ‘ஞானோதயம்’ பளிச்சிடும் தருணங்களில் நாம் செய்யவேண்டியதைப் பட்டியலிடுகிறோம். ஆனால், வாழ்வின் குரூரங்களின் முன் மண்டியிட்டுத் தலைகவிழ்ந்து உன்னதங்களை இழந்துபோவதன்றோ நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது?


நன்றி: அம்ருதா
(அம்ருதாவில் தொடராக ஒரு பத்தி எழுதிவருகிறேன்)


10.11.2009

ஒரு குடிமகனின் சரித்திரம்


நமக்குத் தெரிந்தவர்களின், உறவினர்களின் பெயர்களைச் சொல்லி ‘எங்கே…? எங்கே…?’என்று தேடிக்கொண்டிருக்கும் இந்தக் கொடுங்காலத்தில், ‘அவர் கனடாவிலை’, ‘அவ கலியாணம் கட்டி கொழும்பிலை’என்பதையொத்த பதில்கள் ஆசுவாசம் அளிப்பனவாக இருக்கின்றன. ஷெல்லடியில் சிதைந்துபோன, காணாமல் போன, அங்கவீனர்களாகிய, சிறைப்படுத்தப்பட்ட, சுட்டுக் கொல்லப்பட்ட, முகாமில் இருக்கிற வகையிலான பதில்கள் வரக்கூடாதென்பதே எங்களது பிரார்த்தனையாக இருக்கிறது. அண்மையில் குருட்டு யோசனையோடு ‘அஸ்பெஸ்டாஸ்’ கூரையில் பல்லி பார்த்துக்கொண்டு சோபாவில் படுத்திருந்தபோது, ‘மணியம் மாமா என்னவாகியிருப்பார்?’ என்ற கேள்வி திடுதிப்பென்று எழுந்தது.

மணியம் மாமா எங்களுர் விதானையார் இல்லை. தபாற்காரர் இல்லை. விரல்களில் மினுங்கும் மோதிரங்களைக் காட்டவென்றே கைகளை வீசிக் கதையளக்கிற பணக்காரரும் இல்லை. என்றாலும் குழந்தைகளுக்குக்கூட அவரைத் தெரிந்திருந்தது. சாப்பாடு தீத்தும்போது- நிலவுக்கும் பிள்ளைபிடிகாரனுக்கும் மசியாத குழந்தைகள்கூட மணியம் மாமாவின் பெயரைக் கேட்டால் பெரிய வட்டக் கண்களை இன்னும் பெரிதாக்கி முழுசியடித்துக்கொண்டு, அம்மாமார் உருட்டித் தீத்தும் உருண்டைகளை வேண்டாவெறுப்பாக விழுங்கித் தீர்க்கத் தலைப்படும் அளவுக்கு மணியம் மாமாவின் பெயர் அவர்களுக்கு அதிபயங்கரமூட்டுவது.

அவர் ஒரு அருமையான குடிகாரர். அப்படித்தான் அவரைச் சொல்லமுடியும். நான் அவரைக் கவனிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து, ஊரை விட்டுப் பின்னங்கால் பிடரியில்பட ஓடிவரும்வரை, அவர் ஒரேமாதிரியான தோற்றத்தோடும் நடத்தைகளோடும்தானிருந்தார். சுகாதாரத் திணைக்களத்தில் வேலைபார்த்து ‘கட்டாய’ஓய்வு பெற்றிருந்த அவர், பகல் முழுவதும் தோட்டத்தில் எதையாவது கொத்திக்கொண்டும் கிளறிக்கொண்டும் குந்தியிருப்பார். இல்லையென்றால் அன்னபாக்கியம் மாமிக்குப் பக்கத்தில் அமர்ந்து ‘எணேய்… எணேய்…’என்று கூப்பிட்டு ஏதாவது கதைசொல்லிக்கொண்டோ கீரை ஆய்ந்து கொடுத்துக்கொண்டோ இருப்பார். அப்படியொரு புருசனை அயலுக்குள் காணமுடியாது. அவர் வைக்கும் பிலாக்காய்க்கறி அக்கம்பக்கத்தில் பிரசித்தம். குசினிக்குள் சர்வசதாகாலமும் எதையாவது அடுப்பில் வைத்துக் கிண்டிக்கொட்டிக்கொண்டிருக்கிற பெண்களது கைக்குக்கூட அந்த உருசியைக் கொணரத் தெரியாது. அவ்வளவு கைப்பக்குவம். மணியம் மாமா சமைக்கும் நாட்களில் ஏலமும் கராம்பும் வறுபடும் மணம் அயலெல்லாம் பரவும்.

பின்னேரம் ஐந்து மணியானதும் அவர் வேறொரு ஆளாகிவிடுவார். கண்கள் பரக்குப்பரக்கென்று விழிக்கவாரம்பித்துவிடும். மேளச்சத்தத்திற்கு உருவேறி ஆடுபவரின் முகபாவம் தொற்றிவிடும். அள்ளிக் குளித்துவிட்டு மொட்டைத் தலையுட்பட உடல் முழுவதும் பவுடரை அப்பிப் பூசியபடி சைக்கிளையும் எடுத்துக்கொண்டு கனசுதியாய் வெளிக்கிட்டாரென்றால், கவர்னரே வீட்டுக்கு வந்தாலும் கால்தரித்து நிற்கமாட்டார். அப்படியொரு வேகம். கேற்றுக்கு வெளியில் நின்று சிநேகிதப்பேய் கூப்பிடுமாப்போல ஒரே பார்வையோடு ஒரே இலக்கை நோக்கிப் போவார். போகும்போது அவர்தான் சைக்கிளைக் கொண்டுபோவார். திரும்பி வரும்போது சைக்கிள் அவரைக் கொண்டுவரும். ஆகிலும் கைவறண்டு போகிற நாட்களில் சைக்கிள் சாராயக்கடைக்காரரின் வீட்டில் சார்த்திவைக்கப்பட்டிருக்கும். சைக்கிள் அடைவில் இருக்கும் இரண்டு நாட்களும் அன்னபாக்கியம் மாமியின் முறைப்புக்குப் பயந்து தோட்டத்துக்குள்ளேயே நாள் முழுவதும் குந்திக்கொண்டிருப்பார். இரண்டொரு நாட்களில் மாமி கத்திக் குளறி சண்டை பிடித்து யாரிடமாவது காசு கொடுத்தனுப்பி சைக்கிளை மீட்டுவரச் செய்வா.

மணியம் மாமா குடிக்கப் போகும்போது அவரது வீட்டுப் பூனைகூட அவரைக் கவனியாது. குடித்துவிட்டுத் திரும்பிவரும்போது ஊரே அமர்க்களப்படும். தெரு நாய்களெல்லாம் சேர்ந்து கோரஸாகப் பாடும். இவர் ‘அடிக்… அடிக்…’என்று அடிக்கொரு தடவை நாய்களை வெருட்டியபடி தெருவெல்லாம் காறித்துப்பிக்கொண்டே வருவார். பத்தாததற்குப் பாட்டு வேறு. பெரும்பாலும் ‘பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக… நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக’என்ற பாட்டு கதறிக் கதறி ஓடக்கூடிய அளவுக்கு அதைக் ‘கதைத்துக் கதைத்து’தேய்த்துவிட்டார். வேலிகளும் அவரும் கடுஞ் சிநேகிதம். எங்கள் ஊர் ஒழுங்கைகள் அகலம் குறைந்தவை. இந்த வேலியில் முட்டி அந்த வேலியில் கொஞ்சி கனகுதூகலத்தோடு வெகுநேரமாக வீடுதிரும்பிக்கொண்டிருப்பார். தெருநாய்களுக்கு அவரது பாட்டுப் பிடிப்பதில்லை. அதனால், அவை குரோதத்தோடு எதிர்ப்பாட்டுப் பாடுவது வழக்கம். சிலவேளை அவர் தேய்ந்துபோன ‘ரெகார்ட்’ போல ஒரே பாட்டைத் திருப்பித் திருப்பிப் பாடியது பிடிக்காமலிருந்திருக்கும்.

மணியம் மாமா மிதமாகக் குடித்திருக்கும்போது ஒருமாதிரியும் அதிகமாகக் கவிழ்த்து ஊற்றியிருந்தால் வேறொரு மாதிரியும் நடந்துகொள்வார். அவரது உடலுக்குள் அன்றைக்கு எவ்வளவு சாராயம் ஊற்றப்பட்டிருக்கிறதென்பதைப் பொறுத்து அன்னபாக்கியம் மாமியின் இரவுகள் அமையும். நீங்கள் கனக்க கற்பனை செய்யக்கூடாது. அளவாகக் குடித்திருந்தால் அன்னபாக்கியம் மாமி தெய்வமாகிவிடுவா. ‘நீ என்ரை தெய்வம்’என்பார். ‘நீ இல்லாட்டி நான் எப்பவோ செத்துப்போயிருப்பன்’என்று வாய்கோணி அழுவார். குடிவெறியில் அழும்போது மூக்கு இன்னும் பெரிதாக விடைத்துவிடும். கடைவாயால் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ‘சரியப்பா… சாப்பிட்டிட்டுப் படுங்கோ… படுங்கோ…’என்று மாமி எழுபத்தேழாவது தடவையாகச் சொல்வது அந்த இரவில் எங்கள் வீடுவரைக்கும் கேட்கும்.

மணியம் மாமாவைச் சாராயம் குடித்திருக்கும் நாட்களில் அவர் கொம்பேறிமூர்க்கனாகிவிடுவார். வஞ்சகமில்லாமல் அன்னபாக்கியம் மாமியையும் பிசாசாக்கிவிடுவார். ‘எடியேய்….’என்று அழைத்து தூஷணங்களை ‘இந்தா பிடி’என்பதாய் அள்ளிச்சொரிவார்.

“நீ அண்டைக்கு என்ன சொன்னனீ…” திடீரென்று ஞாபகம் வந்தாற்போல கேட்பார்.

“என்ன சொன்னனான்?”-இது மாமி

“என்ன சொன்னனி எண்டதுகூட மறந்துபோச்சோ… அவ்வளவு கொழுப்பாடி உனக்கு”

கடைசிவரையில் மாமி என்ன சொன்னவா என்பதை அவருஞ் சொல்லமாட்டார். மாமியும் கேட்கமாட்டா.

‘இண்டைக்கு என்ன கிழமை?’என்று பதினைந்து தடவையாகிலும் கேட்பார். அப்படிக் கேட்பதைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ‘இவர் நாளைக்கு விடிய வேலைக்கு எழும்ப வேண்டிய ஆள்’என்று நிச்சயம் நினைக்கத்தோன்றும். மாமி மூன்று தடவைக்கு மேல் பதில் சொல்ல மாட்டா. அவரது கேள்வி இடுப்பிலிருக்கும் சறத்தைப் போல அனாதையாகக் கிடக்கும். “பொக்கற்றுக்குள்ள அறுபத்தாறு ரூபா முப்பத்தைஞ்சு சதம் இருக்கு”என்பார் கவனமாக. எண்ணிப்பார்த்தால் சரியாகத்தானிருக்கும். அதிலெல்லாம் ஆள் வலுநிதானம்.

மாமா ஊருக்கு வெளியில் தீர்த்தமாடப் போகும் நாட்களில் பெரும்பாலும் அவர் குழந்தையாகிவிடுவார். யாராவது போய்த் தூக்கிக் கொண்டுதான் வரவேண்டும். தூக்கிக்கொண்டு வந்து விறாந்தையில் கிடத்தும்வரை கண்ணை மூடிக்கொண்டிருப்பார். தனது விறாந்தைச் சூடு தனியாக அவருக்குத் தெரியும் போலும். கிடத்தியவுடன் கண்ணைத் திறந்து மாமியைப் பார்த்து குழந்தைகளுக்கேயுரிய தெய்வீகப் புன்னகை ஒன்றை வழியவிடுவார். மாமி தனது தலையெழுத்தை நொந்து தலையிலடித்துக்கொள்வா.

அவருக்கு எப்போதோ செத்துப்போன தனது தாயின் ஞாபகம் திடீரென வந்துவிடும். விம்மி விம்மி அழுவார். தங்கச்சிமார் ஞாபகம் பொங்கிப் பொங்கி வரும். ‘உன்னைப் போய்க் கட்டினன் நாயே…நாயே’என்று வீட்டுக்குள்ளேயே காறித்துப்புவார். வாசலில் படுத்திருக்கும் சீசர் நாய்க்குத் தெரியும்… அவர் தன்னைச் சொல்லவில்லையென்று. அதனால், அது மாமியை ஒரு கண்ணை உயர்த்திப் பார்த்துவிட்டுப் பேசாமல் (குரைக்காமல்) படுத்திருக்கும். முப்பது கிலோவுக்கு மேலிருக்கும் சீசரைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சுவார். ‘என்னை யாராவது விடுவிக்கமாட்டீர்களா?’என்பதான பரிதாபப் பார்வையோடு சீசர் அவரது மடியில் பொதுக்கென்று அமர்ந்திருக்கும். மாமிக்குத் தன்னை அவர் ‘நாய்’என்று விளிப்பது பிடிக்காது. வாயை வைத்துக்கொண்டிராமல் பதிலுக்கு ஏதாவது சொல்லிவிடுவா. பிறகென்ன… மணியம் மாமா கெம்பிக் கிளம்பிவிடுவார். தும்புத்தடியை எடுத்துக்கொண்டு அடிக்க ஓடுவார். பிள்ளைகள் இப்போது அரங்கத்திற்கு வந்தாகவேண்டும். அவர் அடிக்கத் தூக்கிக்கொண்டு போகும் பொருட்களை அவர்கள் வாங்கி வாங்கி ஓரிடத்தில் வைப்பார்கள். இவரும் கொடுத்துக்கொண்டேயிருப்பார். செருப்பு, தும்புத்தடி, கதிரை, கோப்பை, ஈசிச்செயார் தடி இப்படிச் சில ஆயுதங்கள் விறாந்தையில் ஓரிடத்தில் குவிந்து கிடக்கும். பாசுபதாஸ்திரத்தை ஒருமுறைக்குமேல் பிரயோகிக்க மாட்டேன் என்று யாருக்கோ யாரோ சத்தியம் செய்துகொடுத்ததுபோல இரண்டாந் தடவை அவர் அந்தப் பொருட்களை அடிப்பதற்காகப் பிரயோகிக்கமாட்டார். மணியம் மாமா வீட்டு அமளிகளை றேடியோவில் ‘இரவின் முடிவு’ பாடல்களைக் கேட்பதுபோல நாங்கள் கேட்டுக்கொண்டு படுத்திருப்போம். அவர் சன்னதம் முற்றி அந்த இரவில் வீட்டை விட்டு வெளிக்கிட்டு வீதிக்கு ஓடமுயலும் தருணங்களில் மட்டும் எங்களது வீட்டிலிருந்து யாராவது ஒரு ‘ஆம்பிளை’ மணியம் மாமாவைப் பிடித்துவரப் போகும் பிள்ளைகளுக்குத் துணையாக, ‘இந்தாளுக்கு வேறை வேலையில்லை’என்று புறுபுறுத்துக்கொண்டு வெளியே போவார்.

விடிந்ததும், ‘இந்த மனிதரா இரவு இப்படிச் சன்னதமாடியது?’என்று வியக்கும்படியாக முன் விறாந்தையில் அமர்ந்து ஆங்கிலப் புத்தகங்களிலொன்றை ஏந்திப் படித்துக்கொண்டிருப்பார். உண்மையிலேயே அவருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். ஊரிலுள்ளவர்களுக்கு காசு வாங்காத மொழிபெயர்ப்பாளராகவும் அவரே இருந்துவந்தார். அப்படியான நாட்களில் நாங்கள் பச்சை மிளகாய், வெங்காயம் கேட்டு வேண்டுமென்றே மணியம் மாமா வீட்டுக்குப் போவோம். போர்க்களம் முடிந்த அடுத்தநாள் மாமாவின் முகத்தைப் பார்க்காமல் தேத்தண்ணிக் கோப்பையைக் கொண்டுவந்து டங்கென்று ஓசையெழ வைத்துவிட்டு மாமி விறுக்கென்று போவா. மணியம் மாமா கண்சிமிட்டிக்கொண்டே எங்களிடம் கேட்பார்:

“தேத்தண்ணி ஏன் பிள்ளை இப்பிடிக் கொதிக்குது”

நாங்கள் மாமியைப் பார்த்துச் சிரிப்போம். அவவுக்கும் கொடுப்புக்குள் சிரிப்பு பொத்துக்கொண்டு வருவது தெரியும். எங்களுக்கு மட்டும் தெரியும்படியாக இரகசியமாக ஒரு புன்னகையை வீசுவா. மாமாவின் பக்கம் திரும்பும்போது மட்டும் கெருடன் பார்வையை எறிந்துவிட்டுப் போவா. மணியம் மாமா மிகுந்த நகைச்சுவை உணர்ச்சி உடையவர். அது அவ்வப்போது வெளிப்படும். அதிலும் மாமி கோபமாக இருக்கும்போது கிண்டுவதென்றால் அவருக்கு தொதல் சாப்பிடுவதுமாதிரி.

“இந்த மணிக்கூடு இண்டைக்கு ஒரே சத்தமாக் கிடக்கு. பற்றியைக் கழட்டி வைக்கவேணும்”

திருகோணமலையில் இருந்த தனது சொந்தக்காரர் ஒருவரைப் பார்க்கப் போன மாமா சில நாள் கழித்து அம்மன் கோயிலடிக் கிணற்றுக்குள்ளிருந்து வெளிப்பட்ட கதை ஊருக்குள் பிரசித்தம். இரவு நேரம் கிணற்றுக்குள் யாரோ விழுந்த சத்தம் கேட்டு வயலுக்குள் நின்ற சில பெடியள் ஓடிப்போய்ப் பார்த்தார்கள். யாரோ தண்ணீருக்குள் கீழ்நோக்கிப் போய்க்கொண்டிருந்தது தெரிய குதித்து மீட்டிருக்கிறார்கள். மேலே கொண்டு வந்து பார்த்தால்…. அது மணியம் மாமா.

“மணியத்தார் நீங்கள் திருகோணமலைக்கெல்லோ போனனீங்கள்… திடீரெண்டு கிணத்துக்குள்ளாலை இருந்து வாறியள்?”என்று தூக்கிய பெடியங்களில் ஒருவன் கேட்டிருக்கிறான்.

“திருகோணமலையிலை தொடங்கிற குறுக்கு வழி இஞ்சைதான் வந்து முடியுது”என்று அவர் ஈரம் சொட்டச் சொட்ட நின்ற நிலையில் சொல்லியிருக்கிறார். தூக்கிவிட்ட பெடியங்கள் கோபித்துக்கொண்டு போய்விட்டார்களாம்.

“என்ன நடந்தது மாமா?”நாங்கள் கேட்டோம்.

“லேற்றாத்தான் பஸ் கிடைச்சுது. வழியிலை இறங்கித் ‘தேத்தண்ணி’குடிச்சனான். சந்தியிலை இறங்கி குறுக்குவழியாலை வீட்டை போவமெண்டு வந்தால் இருந்தாப்போலை ‘பாக்’தோளிலை கொழுவினபடி இருக்க தண்ணிக்குள்ளை போய்க்கொண்டிருக்கிறன். இருட்டு.. வழியிலை கொஞ்சம் மாட்டி வேற போட்டன்… அறுவார் கிணத்துக்கு கட்டும் கட்டேல்லைப் பிள்ளை”

“மாமியைக் காதலிச்சா கலியாணம் கட்டினனீங்கள்?”ஒருநாள் கேட்டுவைத்தோம்.

“அதையேன் கேக்கிறாய் பிள்ளை…”என்று ஆரம்பித்து கதைகதையாகச் சொன்னார்.

“நான் ஒருநாள் இரவு இவையின்ரை வீட்டு ஓட்டைப் பிரிச்சு இவ படுத்திருந்த அறைக்குள்ளை இறங்கீட்டனெல்லோ…” சாகசம் செய்துவிட்ட பெருமிதம் விழிகளில் மிளிரச் சொன்னார்.

“மாமி பயந்துபோய்க் கத்தேல்லையா?”

“அவவேன் கத்திறா… சத்தம் போடப் போன தங்கச்சியாரையும் ‘அது கொத்தானடி’எண்டு சொல்லி அடக்கின ஆளெல்லோ”

மாமியின் சுருக்கம் விழுந்த முகத்தில் அப்படியொரு வெட்கம் வந்துவிடும். முகம் கனிந்த பழம் போலாகிவிடும். அத்தகைய பொன் பொழுதுகளில் மாமியைப் பார்க்கும் மாமாவின் கண்களில் காதலானது ‘பென்சன்’ நாளன்றைய சாராயம்போல பெருக்கெடுத்தோடும். அந்த வயதான காலத்திலும் அவர்கள் ஒருவர் மீதொருவர் அவ்வளவு காதலோடிருந்தார்கள். மாமா அளவுக்கதிகமாகக் குடித்துவிட்டுச் சாப்பிடாமல் படுக்கும் நாட்களில் மாமி அவருக்கு அருகில் அமர்ந்திருந்து பச்சை முட்டையை உடைத்து உடைத்து மாமாவின் வாயில் ஊற்றிக்கொண்டிருப்பாவாம்… கடைவாயால் முட்டை வழிய அவர் அடுத்த நாளுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருப்பாராம் என்று அவர்களது பிள்ளைகள் சிரித்தபடி சொல்வார்கள்.

இழந்துபோனோம். எல்லாவற்றையும்… எல்லோரையும்… ஞாபகங்கள் மட்டுந்தான் மிச்சம்.

பெயர்ந்து பெயர்ந்து பெயர்ந்து இடைத்தங்கிய ஊரொன்றின் வீட்டில், கண்ணிக்குத் தப்பி விதை பொறுக்கும் பறவையென இரகசியமாகப் போய் நிற்கும் நாட்களில் இரவுகளில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்கும். இராணுவம் ரோந்து போவது மனக்கண்ணில் தெரியும். மணியம் மாமா நினைவில் வருவார். இருளடர்ந்த வீதிகளில் அவரது சைக்கிள் அந்த வேலிக்கும் இந்த வேலிக்குமாக உலாஞ்சுகிற காட்சி விரியும். கதைப்பதுபோல கரகரத்த குரலில் அவர் பாடுவது கேட்கும்.

“பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக
பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக”

பல்லாக்குகளெல்லாம் பாடையில் போகுமென்று யார் கண்டது?


ஈழநேசனுக்காக எழுதியது…

நன்றி:eelanesan.com