5.17.2012

அமைதிப் படை: அழிவின் நாட்களும்… அழியா ஞாபகமும்….



ஜெயமோகனுக்குச் சமர்ப்பணம்

இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அது நிகழ்ந்தது. இன்றுபோல உலகம் இவ்வளவு கிராமமாகச் சுருங்கியிருக்கவில்லை. இத்தனை நாடுகள் மூளைக்குள் குந்தியிருக்கவுமில்லை. அவற்றின் அரசியல் முகமோ நிறமோ அறியாதவளாக நானிருந்தேன். யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு மைதானத் திடலில் அந்த வானூர்தி ஒரு மாயப்பறவையின் வசீகரத்தோடு தரையிறங்கியது. அதன் விசிறி சடசடவென்று பேரோசை எழுப்பியபடி சுற்றித் தணிய, புற்கள் நளினமாக மடங்கித் தலைசாய்த்திருக்க, ‘நியாயத்தின் திருவுரு’க்களாக அவர்கள் இறங்கிவந்த அந்தக் காட்சியை மாணவர்களாகிய நாங்கள் முண்டியடித்துக்கொண்டு பார்த்தோம். ‘இதோ எமது பாதுகாவலர்கள்’என்று மனம் குதியிட்டது. அந்தப் பாதுகாவலர்களின் துப்பாக்கிகள், சில மாதங்களிலேயே எங்களுக்கு எதிராகத் திரும்பவிருக்கின்றன என்று, அப்போது யாராவது எதிர்வு கூறியிருந்தால் எள்ளி நகையாடியிருப்போம்.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானதைத் தொடர்ந்து, இந்திய இராணுவம் ஈழமண்ணில் கால்பதித்தது. ‘இனி இந்த மண்ணில் போர் இல்லை’என்ற நினைவு எத்தகைய ஆசுவாசம் தரக்கூடியது! ‘இனி எங்கள் தெருக்களில் விடுதலையடைந்தவர்களாக நாங்கள் உலவமுடியும்’என்ற நம்பிக்கை எத்தகைய புளகாங்கிதத்தைப் பரத்தக்கூடியது!  தொடர்ந்து வந்த நாட்களில், ஒளிரும் விழிகளுடன் திருநெல்வேலியின் பரமேஸ்வராச் சந்தியிலும் அதனையொட்டிய வீதிகளிலும் நாங்கள் கூட்டம் கூட்டமாக நின்று கதைபேசினோம்.  பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த போராளிகள் சாதாரண உடைகளில் இராணுவ பயமற்று உலவித் திரிந்தார்கள். துப்பாக்கி தாங்கிய இராணுவத்தினரும் (அது எந்த நாட்டு இராணுவமாக இருந்தபோதிலும்) போராளிகளும் ஒரே இடத்தில் உலவியதானது காட்சிப்பிழையாகவே எங்கள் கண்களுக்குத் தோன்றியது.

அவர்கள்தாம் (அமைதிப்படையினர்) எவ்வளவு அழகாகப் புன்னகைக்கவும், குழந்தைகளைப் பார்த்துக் கையசைக்கவும் செய்தார்கள்! இந்தியாவைப் பற்றி எங்கள் மூதாதையர்களால் அதுநாள்வரை கட்டியெழுப்பப்பட்டிருந்த புனித பிம்பங்கள் மேலும் கொஞ்சம் ஊதிப் பெருத்தன. ‘காந்தி தேசம்’, ‘கலாச்சாரத் திருநிலம்’, ‘புத்தரின் பூமி’, ‘இரண்டாவது தாய்நாடு’, ‘தொப்பூள் கொடி உறவு’ இன்னபிற அடைமொழிகள் உருவேற்ற உணர்ச்சிப் பெருக்கில் (நன்றி ஒரு துளி தூக்கலாக) மிதந்து திரிந்தோம்.

ஆகஸ்ட் 4ஆம் திகதியன்று (ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஆறு நாட்களின் பின்) சுதுமலையை நோக்கி பெருந் திரளாய் சனங்கள் போய்க்கொண்டிருந்தார்கள். அவ்வளவு சனத்திரளை என் வாழ்நாளில் கண்டதில்லை. (நான்கு இலட்சம் பேர் என்று பிறகு தெரிந்துகொண்டேன்.) எங்கெங்கோவிருந்தெல்லாம் மக்கள் வந்து குவிந்துகொண்டிருந்தனர். கூட்டம் நடக்கும் இடம்வரை செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. நாங்கள் வெகு தொலைவில் இறக்கிவிடப்பட்டு சுதுமலை அம்மன் கோயிலை நோக்கி நடந்து போனோம். கூட்டம் நடைபெறும் இடத்தை நெருங்க நெருங்க ஒருவரோடொருவர் தட்டுப்படாமல் நடக்கமுடியாத அளவிற்கு அடர்த்தியாயிற்று சனத்திரள். அவ்வளவு கூட்டத்தில் மேடையைச் சரிவரப் பார்க்க முடியாதென்பதனால் அருகிருந்த மரங்களிலும் வீடுகளின் கூரைகளிலும்கூட இளைஞர்கள் ஏறியிருக்கக் கண்டோம். அன்றுஇ இந்தியாவிடம் ஆயுதங்களை ஒப்படைத்து (முழுமையாக அல்ல) ‘நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்’என்ற தலைப்பில் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் உரையொன்றை ஆற்றினார். அந்த உரையில், “எமது மக்களைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பை எங்களிடமிருந்து (விடுதலைப் புலிகள்) இந்திய அரசு கையேற்றுக்கொள்கிறது”என்ற வாசகம் இடம்பெற்றது. மேலும், “மிகப் பெரிய வல்லரசொன்று எங்கள் மக்களின் அரசியல் விதியை முடிவுசெய்யத் தீர்மானித்துவிட்டிருக்கும்போது, அதை மீறி எதையும் செய்வதென்பது எமது இயலுமைக்கு அப்பாற்பட்டது.”எனவும் கூறியிருந்தார் (ஆனால், மிகப் பெரிய வல்லரசை அவர்களால் தோற்கடிக்க முடிந்தது என்பது வரலாறு.)

போர் அல்லது போராட்டம் நடைபெறும் நாடுகளில் வாழும் எவரும் அரசியல் கலவாத தன்வரலாறுகளையோ சம்பவங்களையோ எழுதுவதென்பது சாத்தியமேயில்லை. அமைதிப் படையின் அநீதிக் காலத்தில் நான் அங்கே இருந்தேன் என்பதனால் ‘என்’, ‘நான்’என்று பிரயோகிக்க வேண்டியுள்ளது. அரசியலில் நேரடியாகப் பங்கேற்காத ஒருவரது கண்களில் அமைதிப் படையினர் எங்ஙனம் தோன்றினார்கள் என்பதைப் பதியவேண்டிய அவசியம் உள்ளது.

ஈழத்தமிழர்கள்பால் ‘கருணை’கூர்ந்து இலங்கை சனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும்
1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள். இதில் நகைமுரண் என்னவென்றால், எந்த இனம் துடிக்கப் பதைக்க படுகொலை செய்யப்பட்டதோ, தமது வாழ்விடங்களிலிருந்து அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டதோ, பெரும்பான்மையாளர்கள் ஆட்சியாளர்களாக இருந்த காரணத்தால் கல்வி உள்ளடங்கலான உரிமைகளில் எவருக்குப் பாரபட்சம் காட்டப்பட்டதோ, அவர்களைக் கலந்தாராயாமல், ஒருதலைப்பட்சமாக அந்த ஒப்பந்தம் எழுதப்பட்டு, தமிழர்களது விருப்பத்திற்கு முரணாக அவர்கள்மீது திணிக்கப்பட்டது என்பதுதான்.


‘ஈழமுரசு’பத்திரிகைக் காரியாலயத்தின் அச்சகப் பகுதியும் அச்சியந்திரமும் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதாக ஒரு நாள் (ஒக்டோபர் 10, 1987) காலையில் நாங்கள் அறிந்தோம். அன்றே ‘முரசொலி’பத்திரிகையின் அச்சியந்திரமும் சிதைக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இதனிடையில்- குமரப்பா, புலேந்திரன் ஆகிய தளபதிகள் உட்பட பதினேழு பேரை இலங்கைக் கடற்படை கைதுசெய்து, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விதிகளை அடாவடித்தனமாக மீறினார்கள். இலங்கையின் அதிகாரத் தரப்பினைத் தட்டிக் கேட்க இந்தியத் தரப்பு தயங்கியது. விளைவு, சிறைப்பிடிக்கப்பட்ட பதினேழு பேரும் ‘சயனைட்’அருந்தினார்கள். பன்னிரு விடுதலைப் புலிகள் இந்திய-இலங்கை கூட்டுச்சதிக்குப் பலியாகப்பட்டார்கள். ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர்தப்பினார்கள். நிலைமை வரவர பதட்டமடைந்துகொண்டே சென்றது.

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, நீரும் அருந்தாமல் திலீபன் உண்ணாவிரதமிருந்த நல்லூர்க் கோயிலுக்கு அண்மையிலேதான் நாங்கள் வாடகைக்குக் குடியிருந்தோம். ஆகவே ஒவ்வொரு நாட்களும் அங்கே போகக் கிடைத்தது. அந்த மெல்லிய உருவம் மேலும் உருக்குலைந்து ஈற்றில் சருகாக உதிர்ந்தபோது (செப்டெம்பர் 26, 1987) அங்கிருந்து பெரும் அழுகைச் சத்தம் கேட்டது. வீட்டிலிருந்து ஒரே பாய்ச்சலாக ஓடிச்சென்றேன். ‘காந்தி தேசம்’ எங்களைக் கைவிட்டுவிட்டது. ‘அஹிம்சைநெறியால் ஈழத்தை வென்றிருக்க முடியும்; ஆயுதப் போராட்டத்தால் மக்களைக் கொன்றுவிட்டார்கள்’என்று சொல்பவர்களின் மனச்சாட்சியை ‘திலீபன்’என்ற பெயரும் தொந்தரவு செய்வதில்லை என்பது வியப்பிற்குரியதே.

நல்லூர்க் கோயில் முன்றல் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கனன்றுகொண்டிருந்தது. கோபமும் கண்ணீரும் ஆற்றாமையும் ஆயாசப்பொருமலுமாய் மக்கள் அலைமோதிக்கொண்டிருந்தார்கள். ‘கண்கெட்டுப் போவார்’என்று, மண்ணை வாரியிறைத்து இந்திய அமைதிப் படையினரை பெண்கள் சபித்துக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் மேடையிலிருந்த திலீபனின் உயிரற்ற உடலை நோக்கிச் செல்ல முயன்றார்கள். தொண்டர்கள் சிலர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றார்கள்.

மீண்டும் மீண்டும் நாங்கள் ஏன் கைவிடப்படுகிறோம்? மீண்டும் மீண்டும் நாங்கள் ஏன் ஏமாற்றப்படுகிறோம்? என்ற கேள்விகள் எங்கள் மனங்களைக் குதறிக்கொண்டிருந்தன. இலங்கை இராணுவத்தின் இனவெறியாட்டத்திலிருந்து ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு உள்ளே வந்தவர்கள், இந்தியாவின் பிராந்திய நலனைப் பாதுகாக்க முற்பட்டனரேயன்றி, எளிய மக்களது உயிர்களையோ உரிமைகளையோ ஒரு பொருட்டாகக் கருதினார்களில்லை.

ஒக்டோபர் 21இ 1987 தீபாவளியன்று இந்தியப் படைகளால் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் நடத்தப்பட்ட நரவேட்டை இந்திய சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது! ‘இறுதிப் போர்’என்று சொல்லப்படுகிற முள்ளிவாய்க்கால் சண்டையின்போது இலங்கை இராணுவத்தினரும் வான்படையும் வைத்தியசாலைகளைக் குறிவைத்துத் தாக்குதல்களைத் தொடுத்தன. அந்தத் தாக்குதல்களுக்கெல்லாம் அடியெடுத்துக் கொடுத்ததாக, முன்னுதாரணமாக யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரி மீது இந்தியப் படைகளால் தொடுக்கப்பட்ட தாக்குதலைச் சொல்லலாம். வைத்தியசாலை வளவினுள் விடுதலைப் புலிகள் ஒளிந்திருப்பதாகக் கூறிக்கொண்டு உள்நுழைந்த ‘அமைதி’ப் படையினர்‘ வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், நோயாளிகள் உள்ளடங்கலாக 70 பேரைச் சுட்டுக்கொன்றனர். பிணங்களோடு பிணங்கள் போலவே கிடந்து உயிர்தப்பிய சிலரது வாக்குமூலங்கள் நெஞ்சை அதிரவைத்தன.

‘இப்படியெல்லாம் நடக்கக்கூடுமா?’என்ற அதிர்ச்சியிலிருந்து எங்களால் மீள முடியவில்லை. ‘ஒரு தாய் தன் குழந்தைக்கு நஞ்சூட்டிக் கொன்றாள்’ என்ற செய்தி எவ்வளவுக்கெவ்வளவு அதிர்ச்சியூட்டுமோ அதனிலும் அதிகமதிகமான அதிர்ச்சியில் திகைத்துப்போனோம்.

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் சண்டை தொடங்கிய பிற்பாடு, பொதுசனங்களெல்லாம் புலிகளானார்கள். பெரும்பான்மைச் சிங்களச் சிப்பாய்களுக்குப் பதிலாக, ‘இறையாண்மை’மிக்க இந்தியாவின் பன்மொழி பேசும் சிப்பாய்கள் இனவழிப்பைச் சிரமேற்கொண்டார்கள்.

நல்லூர்க் கோயில் ஞாபகத்திற்கு வரும்போதெல்லாம், பசியின் ஞாபகமும் கூடவே வந்துவிடுகிறது. இந்திய அமைதிப்படையின் அட்டூழியத்திற்கு அஞ்சி கோயிலுக்குள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்த பல்லாயிரக்கணக்கானோரில் நாங்களும் இருந்தோம். ஒரு துண்டு பாணுக்காக (தமிழகத்தில் ரொட்டி) ஏங்கிப் பசித்திருந்த அந்த நாட்கள் மறக்கப்படக்கூடியனவல்ல. ஓயாத பேச்சொலிகள், கைது செய்யப்படுவோம் என்ற பதட்டம், உயிர்ப்பயம், குழந்தைகளின் அழுகுரல், இரவுகளில் எப்போதாவது வெடித்தெழும் விசும்பல்கள், மூத்திர-மல நாற்றம் என்று கோயிலின் முகமே மாறிவிட்டது.

இது எங்கள் குடும்பத்தின் கதை மட்டுமன்று; அந்த மண்ணில் வாழ்ந்த ஒட்டுமொத்த சமூகத்தின் அவலம். அமைதிப்படை என்று வந்தவர்கள் சாதாரணர்களின் வாழ்வில் எத்தகைய கோரத்தாண்டவத்தை நிகழ்த்தினார்கள். அவர்களுடைய நம்பிக்கைகளின் மீது எப்படிக் காறியுமிழ்ந்தார்கள் என்பதைப் பேச விரும்புகிறேன். இந்தியா என்ற வல்லரசு எளிய மக்களின் வெறுப்புக்கு எவ்விதம் ஆளானது என்பதைப் பகிர விரும்புகிறேன். காரணமற்ற வெறுப்பை ஈழத்தமிழர்களோ தண்டகாரண்யவாசிகளோ நாகாலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர், காஷ்மீரைச் சேர்ந்தவர்களோ கொண்டிருக்கவில்லை என்பதை, இந்தியாவின் ‘தேசபக்தர்கள்’புரிந்துகொள்ள வேண்டும். முதலாளித்துவ சார்புடைய, மக்கள் விரோத அரசுகளன்று; மக்களே கரிசனைக்குரியவர்கள்.

பசி பொறுக்கமாட்டாத ஒருநாளில் எனது பெற்றோரும் நானும் நல்லூர்க் கோயிலை விட்டு வெளியேறி எங்கள் பெற்றோரின் கிராமத்துக்குப் போனோம். தெருவோரம் விழுந்து கிடந்த பிணமொன்றின் தலையை நாய் முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. எங்கெங்கோ எறிகணைகள் விழுந்து வெடிக்கும் ஓசை. துப்பாக்கி வேட்டுகளின் விடாத சத்தம். இந்தியப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுஞ்சமர் நடந்துகொண்டிருந்தது.

எனது பெற்றோரின் ஊரில் சில நாட்களே அமைதி நீடித்தது. ‘அமைதி’ப்படை நெருங்கி வந்த பிறகு அமைதி நிலவுதல் எங்ஙனம் சாத்தியம்? அவர்கள் ஊரை நோக்கி வருகிறார்கள் என்ற செய்தி அறிந்த அடுத்த நிமிடமே, புயலில் அலைக்கழியும் பறவைகள் போல தெருக்களில் அலைமோத ஆரம்பித்துவிட்டோம். உயிர்ப்பயம் எங்களை விரட்டியது. வீடுகளைப் பூட்டியும் பூட்டாமலும், ஓரிரு ஆடைகளுடனும் சொற்ப கையிருப்புகளோடும் வெளியேறி நடக்கத் தொடங்கினோம். எங்கே செல்வது என்ற சர்ச்சைகளின் பின் கோயில்களுக்குச் செல்வது என்று முடிவாயிற்று. சிலர் தேவாலயங்களை நோக்கிப் போனார்கள். வேறு சிலர் இந்துக் கோயில்களை நோக்கிப் போனார்கள். என் தாயார் ஒரு பானையில் அரிசியைப் போட்டுத் தலையில் சுமந்து வந்தார். அது எத்தகைய பெறுமதியானது என்பதை நாங்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.

வெளியில் குண்டுச் சத்தங்கள் தொடர்ந்துகொண்டேயிருந்தன. மூளாய் என்ற ஊர் வழியாக அமைதிப் படை உள்நுழைந்துகொண்டிருப்பதாகச் சிலர் சொன்னார்கள். நாங்கள் ‘கடவுளே… கடவுளே’என்று அரற்றியபடி தஞ்சம் புகுந்த இடங்களுள் தவித்தபடியிருந்தோம். ஈற்றில் இந்திய இராணுவம் பேராரவாரத்துடன் ஊர்மனைக்குள் நுழைந்தது.

கண்ணிமைத்து மூடும் நேரத்திற்குள் வானைக் கீறி மறையும் மிராஜ் விமானங்கள் பேரிடி போன்ற சத்தத்தோடு பறந்து அச்சுறுத்தின.  கோயில் அர்ச்சகரது கழிப்பறையை இளம்பெண்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. மற்றவர்கள் கோயிலைச் சுற்றவர இருந்த வயல்களுக்குள் மலங்கழித்தார்கள். கழிப்பறைக்கு இருக்கும்போது அங்கேயே குண்டு வீழ்ந்து இறந்துவிடலாகாது என்பதே எங்களது பிரார்த்தனையாக இருந்தது. ஆரம்பத்தில் அவரவர் கொண்டு வந்திருந்த அரிசியில் உணவு சமைத்து உண்டோம். இராணுவத்தினரால் ‘ரேஷன்’கணக்கில் எப்போதாவது அரிசி வழங்கப்பட்டது. பெரும்பாலும் பீற்றூட் கறியும் பருப்பும்தான். நல்ல உணவு என்பதைக் கனவில் மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. வீடுகளில் தானியங்கள் இருந்தபோதிலும் அங்கு சென்று எடுத்துவர எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், அப்படிச் சென்றுவருவது ஆபத்து மிகுந்ததாக இருந்தது. ஆகவே,  நாங்கள் எப்போதாவது அல்லது கிடைக்கும்போது உணவு உண்ண எங்கள் வயிறுகளைப் பழக்கப்படுத்திக்கொண்டோம்.

இருந்திருந்துவிட்டு எங்களை வரிசையாக கோயிலிலிருந்து வெளியே வரச் சொல்வார்கள். கைகளை உயர்த்திக்கொண்டு வெளிவரவேண்டும். அடையாள அணிவகுப்பு போல ஒன்று நடத்தப்படும். குற்றவாளிகளைப் போல நடத்தப்படுவது தாங்கமுடியாத அவமானத்தை அளித்தது. அப்போது ஒருவர் கண்களை மற்றவர்கள் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவோம். குறிப்பாக வயதானவர்களின் கண்களை நாங்கள் பார்ப்பதேயில்லை. மரியாதைக்குரிய அவர்கள் இழிவாக நடத்தப்படுவதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உள்ளுக்குள் கோபநெருப்பு கனன்றுகொண்டேயிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பல இளைஞர்களும் இளம்பெண்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். இந்திய இராணுவத்திடம் பிடிபடுவதைக் காட்டிலும் அது பாதுகாப்பானது என்று நினைத்தது மட்டும் போராட்டத்தில் தம்மை இணைந்துகொள்ளக் காரணமாக இருக்கவில்லை. ‘இழிவுசெய்யப்பட்டோம்’ என்ற சுடுநினைவும் அவர்களை போராட்டம் நோக்கி உந்தித் தள்ளியது.

அன்று மட்டுமென்றில்லை; காலகாலங்களாக ‘நீங்கள் மனிதர்களல்ல… மனிதர்களல்ல…’என்று இடைவிடாது ஒலித்த இனவெறி, பிராந்திய வல்லாதிக்கக் கூச்சல்களே  இளைஞர்களையும் பெண்களையும் களமாடத் தூண்டியது என்பதை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

அமைதிப் படை பலத்த தாக்குதலுக்கு ஆளாகும் நாட்களில் அந்தத் தாக்குதல் அகதி முகாம்களில் எதிரொலிக்கும். இரவுகளில் சப்பாத்துக் கால்கள் பேரோசையெழுப்ப அகதி முகாம்களுக்குள் நுழையும் படையினர், ஒவ்வொரு முகங்களாக ‘டார்ச்’வெளிச்சத்தில் பார்ப்பார்கள். துணியால் முகம் மறைத்து அவர்களோடு வந்திருக்கும் முகமூடி (காட்டிக் கொடுப்பவர்) விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்களை அடையாளங் காட்டுவார். (அந்தப் புண்ணிய கைங்கரியத்தை பெரும்பாலும் ஈ.பி.ஆர்.எல்.எப். இனரே செய்துவந்தனர்.) அடையாளங் காட்டப்பட்டவரை கூட்டத்திலிருந்து வெளியில் இழுத்தெடுப்பார்கள். அவரை அழைத்துச் செல்லவிடாமல் உறவினர்கள் காலைப் பிடித்து இழுப்பார்கள். அல்லது அமைதிப் படையின் கால்களில் விழுவார்கள். காலில் விழும் உறவினரை மிலேச்சத்தனமாகத் தாக்கிவிட்டு ‘சந்தேக நபர்’களை இழுத்துச் செல்வார்கள்.

இளம்பெண்களை வைத்திருக்கும் தாய்மார்கள் படையினரைக் கண்டு அஞ்சி நடுங்கினார்கள். ‘அமைதி’ப்படையினரின் தலையாய பணிகளுள் ஒன்றாக பாலியல் வல்லுறவும் அமைந்திருந்ததே அந்த அச்சத்திற்குக் காரணம்.
உரிமைகளுக்காகப் போராடும் சிறுபான்மை இனத்துப் பெண்களை வல்லுறவு செய்வதன் மூலமாக, அந்த நிலத்தையே வெற்றிகொண்டதாக இறையாண்மையுள்ள அதிகாரங்கள் மமதை கொள்ளும் ‘போர்நெறி’களை நாமறிவோம். இந்திய அமைதிப் படை ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள். பயணங்களின்போதும் சுற்றிவளைத்துத் தேடுதல் போன்ற நடவடிக்கைகளின்போதும் பெண்கள் தங்கள் உடல்களையே தமக்கு எதிரிகளாகக் கருதவேண்டியிருந்தது. சோதனைச் சாவடிகளில் பேருந்துகளிலிருந்து ஆண்கள் இறக்கிவிடப்படுவர். அது பெண்கள் என்ற இரக்கத்தின்பாற்பட்டதன்று; இராணுவத்தின் பாலியல் தினவின்பாற்பட்டதே. மார்புகளை அழுத்தி, ‘குண்டு இருக்கிறதா?’என்று பற்களைக் காட்டும்போதும், பையைச் சோதனையிடும் சாக்கில் பெண்களது முழங்கால்களில் தங்களது ‘ஆண்மை’யை அழுத்திப் பரிசோதிக்கும்போதும் நாங்கள் கண்களில் நீர்முட்டச் சகித்துக்கொண்டோம். அருவருப்போடு அழுத்தி அழுத்தித் தேய்த்தாலும் போகாத அழுக்கைப் போல அந்த ஞாபகம் காலம் முழுவதும் இருக்கும். அமைதிப் படையினர் தமது உணவுத் தயாரிப்பின்போது கடலை எண்ணெயையே பயன்படுத்தினார்கள். பாம்புகளின் அருகாமையை உழுந்து வாசனை மூலம் அறிந்துகொள்வதுபோல, (பாம்புகளின் கொட்டாவி உழுந்து வாசனையுடையது என்பார்கள்) கடலை எண்ணெய் வாசனை இந்தியப் படையினரது பிரசன்னத்தை அறிவித்துவிடும்.

ஒருவழியாக, அகதி முகாம்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டோம். ஊரின் முகமே மாறியிருந்தது. எறிகணை வீச்சினால் கட்டிடங்கள் சிதைந்திருந்தன. எங்களுக்குத் தெரிந்த பலர் கொல்லப்பட்டிருந்தார்கள். ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். எங்கெங்கு திரும்பினும் இந்திய இராணுவச் சிப்பாய்களே தென்பட்டார்கள். பல வீடுகள் அவர்களால் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டிருந்தன. தற்காலிகமாகத் தங்கவந்த இடத்திலிருந்து யாழ்ப்பாண நகருக்குத் திரும்பிவிட நாங்கள் தீர்மானித்தோம். அங்குதான் எங்களது உடமைகள் இருந்தன. மேலும், அந்தக் கடின காலத்தில் உறவினர்களது வீடுகளில் அவர்களுக்குச் சுமையாக நீண்ட நாட்கள் தங்கியிருப்பது உவப்பானதாகவோ நியாயமானதாகவோ இருக்கவில்லை.

ஏறக்குறைய பத்து மைல் தூரத்தை கால்நடையாகவே நாங்கள் கடக்கவேண்டியிருந்தது. பேருந்துகள் ஓடவில்லை. பத்திரிகைகள் கிடைக்கப் பெறவில்லை. அஞ்சலகங்கள் உள்ளிட்ட எந்தவொரு அலுவலகமும் இயங்காத காரணத்தால் தனித் தனித் தீவுகளில் தொடர்பறுந்தவர்களாக நாங்கள் வாழவேண்டியிருந்தது. யாழ்நகருக்குத் திரும்பும் வழியெங்கும் நாட்பட்ட பிணங்களை நாங்கள் பார்த்தோம். அவற்றிலிருந்து எழுந்த துர்நாற்றம் தாங்கமுடியாததாக இருந்தது. கட்டிடங்கள் உருக்குலைந்து கிடந்தன. இடிபாடுகள் நிறைந்த நகரமொன்றினூடாக காலமற்ற காலமொன்றினுள் நடப்பதைப் போல நாங்கள் நடந்துபோனோம். எந்நேரமும் கொல்லப்படலாம் என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. துப்பாக்கிச் சன்னங்களை நினைத்து முதுகு கூசியது. வழிவழியே அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டோம்.

யாழ் நகருக்கு அண்மையிலிருந்த (பெயர் மறந்துபோய்விட்டது) மயானத்திற்கு அருகிலிருந்த இராணுவ முகாமில் ஒரு சீக்கிய இராணுவத்தினன் முதுகைக் காட்டியபடி நின்றுகொண்டிருந்தான். அப்படியொரு உயரமும் பருமனுமான மனிதனை நான் இன்னமுந்தான் கண்டதில்லை. வேற்றுலகவாசியோவென்று ஐயுறும்படியான தோற்றம். திடீரெனத் திரும்பி கண்களைப் பார்த்தபோது உயிரே உறைந்துபோனாற்போலிருந்தது. கட்டளை இன்றியே நின்றுவிட்டிருந்த எங்களைப் பார்த்து அதிசயிக்கத்தக்க விதமாகச் சிரித்தபடி ‘போ’என்று கையசைத்தான். நாங்கள் ஏறத்தாழ ஓடி அவ்விடத்தை நீங்கினோம். அன்றைக்கு மட்டுமல்ல; வேறு சில சூழ்நிலைகளிலும் இந்திய அமைதிப்படையிலிருந்த சீக்கியப் படையினர் தமிழர்களிடம் ஒப்பீட்டளவில் கருணையோடு நடந்துகொண்டதை அவதானித்திருக்கிறேன்.

நாங்கள் வாழ்ந்திருந்த தெருவே வெறிச்சிட்டிருந்தது. அயலவர்களில் பலர் எங்கேயென்றே தெரியாதபடி காணாமல் போயிருந்தார்கள். பக்கத்து வீடு இந்திய அமைதிப் படையின் இருப்பிடமாகியிருந்தது. ஒரு இரவுகூட அங்கு நிம்மதியாக உறங்க முடியுமென்று தோன்றவில்லை. பாலைவனத்தில் தன்னந்தனியாக மாட்டிக்கொண்டதாக உணர்ந்தோம். இவை போதாதென்று பக்கத்து வீட்டிலிருந்து அடிக்கடி எழுந்த அழுகுரல்கள் எங்களை நிலைகுலைய வைத்தன. “ஐயோ… ஐயோ””என்று பெண்கள் அலறியழும் ஓசைகளைக் கேட்டோம். “என்னை ஒன்றும் செய்யாதையுங்கோ…”என்று மன்றாடும் குரல்களைச் செவியுற்றோம். பாலியல் வதைகூடமொன்றின் அருகில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம் என்ற நினைவு பதைபதைக்கச் செய்தது. என் தாயின் முகம் பித்துப் பிடித்தாற்போல மாறியிருக்கக் கண்டேன். தந்தையோ இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தார். அந்த இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்தோம். அதிகாலையில் பேருந்து நிலையத்தில் இருந்தோம். எங்கள் குடும்பம் வவுனியாவை நோக்கிப் பயணப்பட்டது. அங்கு எனது அண்ணா இருந்தார். யாழ்ப்பாணத்தோடு ஒப்பிடும்போது,வவுனியாவில் நிலைமை சகித்துக்கொள்ளத்தக்கதாக இருந்தது. அதன் பிறகு எங்கள் உடமைகளை எடுத்துக் கொள்வதற்காகக் கூட நாங்கள் யாழ்ப்பாண வீட்டிற்குத் திரும்பிச் செல்லவில்லை.

ஆனால், ஞாபகங்கள் தசாப்தங்களைத் தாண்டிப் பயணிக்கின்றன. ‘ஐயோ… ஐயோ’என்ற அலறல் இன்னமும் மனசுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. எங்காவது கடலை எண்ணெய் மணத்தை நுகர நேர்ந்தால், இரு தசாப்தங்களுக்கு முந்தைய அந்தக் கொடிய காலத்துள் சென்று விழுந்துவிடுகிறேன். தலை பிய்ந்து கிடந்த அந்தப் பெயரறியாப் பிணத்தையும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கிணற்றில் வீசியெறியப்பட்டிருந்த பெண்ணின் நீரில் ஊறிச் சிதைந்த கண்களையும் எங்ஙனம் மறப்பது?

1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி ஈழத்திலிருந்து இந்திய ‘அமைதி’ப் படை வெளியேறிவிட்டதாக (அல்லது வெளியேற்றப்பட்டதாக) எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால்,அவர்கள் எப்போதும் வெளியேறவில்லை என்பதை நாமறிவோம்.

நன்றி: 'பறை' சஞ்சிகை, பொதியவெற்பன் ஐயா
25 நவம்பர், 2011

 

5.08.2012

பேரினவாதத்தின் போராயுதம்


மூன்றாவது முறையாக
மூர்ச்சித்துத் தெளிந்திருக்கிறாள்.
ஒரு மார்பு சிதைக்கப்பட்டும்
குண்டுகளைக் கண்டுபிடிக்க இயலவில்லை


அவர்கள் தேடுகிறார்கள்
உதடுகளில் சயனைட்டையும்
இரண்டு நாட்களாக ஆகாரம் வழங்கப்படாத
வயிற்றுக்குள்
கைத்துப்பாக்கியையும்.


அவளது பிறப்புறுப்பினுள்
குறிகளாலும் குண்டாந்தடிகளாலும்
ஒருவர் மாற்றி ஒருவர்
துளாவிப் பார்க்கிறார்கள்
சிறு தடயமும் இல்லை.


எதிரிகளின் ஆயுதக்கிடங்கைக் கொழுத்தும்
எக்களிப்போடு
சிகரெட்டால்
மறைவிடத்து (இப்போது திறந்திருக்கிறது)
மயிரைப் பொசுக்குகிறார்கள்.

வன்மத்தோடு
வயிற்றில் இறங்குகிறது
துப்பாக்கியின் ‘பயனைற்’


விரிந்த கால்களுக்கிடையில்
வடிந்து ஓடிப் பதுங்குகிறது
குருதி.


இராணுவச் சீருடையையும் நட்சத்திரங்களையும்
நேர்த்தியாகச் சரிசெய்தபின்
குறிப்பெழுத வேண்டியிருக்கிறது
ஒரு பயங்கரவாதியைப் பற்றி.



“போர்த் தந்திரோபாயங்களில் ஒன்றாக பாலியல் வல்லுறவு பிரயோகிக்கப்படுவது கொங்கோ, சூடான் போன்ற சில இடங்களில் எங்காவது எப்போதாவது நடக்கும் ஒரு விடயம் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், உண்மை அதனைக் காட்டிலும் மிக மோசமானது. பொஸ்னியா, பர்மா, சிறிலங்கா என பெரும்பாலான இடங்களிலும் பாலியல் வல்லுறவு போர்த் தந்திரங்களில் ஒன்றாகப் பிரயோகிக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். இத்தகைய கொடுமைகளை இழைப்பவர்கள் பல நாடுகளில், பல சம்பவங்களில் தண்டனையிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து அவர்களைத் தப்பிக்க விடுவதானது மேலும் வன்முறைக்கு இட்டுச் செல்கிறது.”

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனது மேற்கண்ட வாசகங்கள் இலங்கை அரச தரப்பைக் கொதித்தெழச் செய்தன. இலங்கை போன்ற, ஜனநாயகத்தை ‘கண்ணில் வைத்துப் போற்றும்’ ஒரு நாட்டை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தனது கூற்றின் மூலம் இழிவுபடுத்திவிட்டதாக கடுஞ்சினத்தோடு குற்றஞ்சாட்டினார்கள். பின்னர் வழக்கம்போல, ‘இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடும் நாடுகளைப் பட்டியலிடும்போது தற்செயலாக இலங்கையின் பெயரும் இடம்பெற்றிருக்கலாம்’என்ற தற்சமாதானத்தின் மூலம் இலங்கை அரச தரப்பு தனது கொதிப்பை ஆற்ற முயன்றது. மேலும், அது தொடர்பான கடிதப் பரிமாற்றங்களின்போது, ‘2006-2009க்கும் இடைப்பட்ட காலத்தில் அவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்றதாக அறியவில்லை’என்ற குளிர்ந்த வார்த்தைகளை அமெரிக்கத் தரப்பிடமிருந்து பெற்றதனோடு அடங்கினார்கள்.

ஆனால், ‘இலங்கை அரச படைகள் தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் எதையும் இழைக்கவில்லை; அமெரிக்காவும் ஐரோப்பாவின் சில ஊடகங்களும் மனிதவுரிமை அமைப்புகளும் தேவையற்ற குற்றச்சாட்டுகள் மூலம் இலங்கை போன்ற உன்னத தேசத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்’ என்ற வார்த்தைகளை, அதைச் சொல்லும் சிங்கள மேலாதிக்கமே நம்பவில்லை என்பதுதான் உண்மை.
விடுதலைப் புலிகளுடனான போர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவே இத்தகைய காடைத்தனத்தை இலங்கையின் அரச படைகள் கட்டவிழ்த்துவிட்டிருந்தன. 1958, 1971, 1983 எனத் தொடர்ந்த இனக்கலவரங்களின்போது தமிழ்ப் பெண்களிடம் தனது ‘ஆண்மை’யை நிரூபித்து வந்திருக்கிறது சிங்கள மேலாதிக்கம்.

‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்ற அனுமதிச்சீட்டின் மூலமாக எந்தவொரு அத்துமீறலுக்கும் அரசாங்கங்களால் துணிய முடிகிறது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், காஷ்மீரிலும், பொஸ்னியாவிலும், ருவாண்டாவிலும் கெயிட்டியிலும் கிழக்குத் திமோரிலும் என எங்கெங்கும் இருக்கும் பெண்கள், அரச மற்றும் அமைதிப் படைகளின் வக்கிரங்களுக்குப் பலியானதும் தொடர்ந்து பலியாகி வருவதும் அந்த அனுமதிச் சீட்டின் மூலமாகவே. ருவாண்டாவில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்க அறிக்கை கூறுகிறது. 1990இல் 5000 குவைத் பெண்கள் ஈராக்கியத் துருப்புகளால் வல்லுறவுக்காளாக்கப்பட்டனர்.  ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க இராணுவம் அதே சூறையாடலை ஈராக்கியப் பெண்கள் மீது நிகழ்த்தியது. பொஸ்னியப் பெண்களைச் சிறைப்பிடித்து அடைத்துவைத்து வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பந்தரிக்கச் செய்தபிற்பாடு சேர்பிய இராணுவம் சொன்னது: ‘இனக்கலப்பு செய்தாயிற்று. பொஸ்னியர்களின் தூய்மையைக் கெடுத்துவிட்டோம்’.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினையடுத்து, அமைதிப் படை என்ற பெயரில் ஈழத்தில் கால்பதித்த இந்திய இராணுவம் ஏறத்தாழ எட்டாயிரம் தமிழ்ப்பெண்களை தனது பாலியல் வெறிக்குப் பலியாக்கியிருக்கிறது. உலகெங்கிலும் பெண்ணுடல்களில் களமாடித் தங்கள் கொடியை ஊன்றியவர்கள் விருதுகளாலும் பதக்கங்களாலும் கௌரவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகளுக்கான- பாலியல் வதைகளுக்கெதிரான பெண்கள் அமைப்பு கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறது.
“சராசரியாக, இரண்டு வாரங்களுக்கு ஒரு தமிழ்ப் பெண் இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறாள். உண்மையான எண்ணிக்கை அதனிலும் அதிகமாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலான வல்லுறவுகள் அச்சம் காரணமாக வெளியிடப்படுவதில்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு தமிழ்ப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறாள்.”

1996ஆம் ஆண்டு மட்டும் 150 தமிழ்ப் பெண்கள் இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக ‘சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்’என்ற பத்திரிகை ஜனவரி, 1997 இல் செய்தி வெளியிட்டிருந்தது.

‘இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் இந்நாட்டின் குடிமக்களே’என்று தொடர்ந்து அழுத்திச் சொல்லிவருகிறது இலங்கை அரசு. மேலும், தன்னுடைய இராணுவத்தின் கட்டுப்பாடு, கடமையுணர்வு, தேசாபிமானம் குறித்தெல்லாம் உலக அரங்கில் பெருந்தன்மை பொங்கிப் பிரவகிக்கப் பேசி வருகிறது. மனிதவுரிமை அமைப்புகளோ பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்புடைய எவருமோ முறைப்பாடு செய்யும் வேளைகளில், ‘இது விடுதலைப் புலி ஆதரவாளர்களின் பொய்ப்பிரச்சாரம்’என்று ஒரேயடியாக மறுத்துவிடுகிறது. அல்லது, விசாரணை என்ற பெயரில் ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்த முயல்கிறது. மறுக்கவியலாத ஆதாரங்களோடு முன்வைத்தால், ‘நீ மட்டும் ஒழுங்கோ…?’என்ற அடாவடித்தனமான கேள்விகளோடு குற்றச்சாட்டுக்களைப் புறந்தள்ளுகிறது. இலங்கையில் நிகழ்ந்தேறிய பல்லாயிரக் கணக்கான பாலியல் வன்கொடுமைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படாமல் அதிகாரங்களால் மறைக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், அத்தகைய எத்தனங்களையும் மீறி வெளிவந்த சில கொடூர சம்பவங்கள் நெஞ்சை அதிர வைப்பனவாக இருக்கின்றன.

ஆகஸ்ட் 7, 1996 - கிருஷாந்தி குமாரசாமி 18 வயதே ஆன, எதிர்காலம் பற்றிய கனவுகள் நிறைந்திருந்த பள்ளி மாணவி. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் முதல் அமர்வை நிறைவுசெய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கிருஷாந்தியை யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலிலுள்ள கைதடி விசாரணைச் சாவடியில் இருந்த சிப்பாய்கள் விசாரணைக்கென்று கூறி உள்ளே அழைத்துச் சென்றார்கள். அந்தச் சம்பவத்தை வீதி வழியே சென்றுகொண்டிருந்த சிலர் அவதானித்திருக்கிறார்கள். நேரம் கடந்தும் வீடு திரும்பாத கிருஷாந்தியைத் தேடி அவரது தாயார் ராசம்மா, கிருஷாந்தியின் தம்பி பிரணவன், குடும்ப நண்பர் கிருபாமூர்த்தி மூவரும் போயிருக்கிறார்கள். அவர்களும் திரும்பி வரவில்லை. 45 நாட்களின் பின் கிருஷாந்தி உட்பட நால்வரது உடல்களும் இராணுவ முகாமின் எல்லைக்குட்பட்டிருந்த செம்மணியிலிருந்து சிதைந்த நிலையில் மீட்கப்பட்டன.
மனிதவுரிமை அமைப்புகளின் போராட்டங்கள், தமிழ் அரசியல்வாதிகள்-உறவினர்களின் (செல்வாக்கு உள்ளவர்கள்) பகீரதப் பிரயத்தனத்தின் பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுள் ஒருவனான கோப்ரல் தேவகே சோமரட்ண ராஜபக்சே என்பவன் தனது வாக்குமூலத்தில் கீழ்வருமாறு சொல்கிறான்:

“எங்களில் ஆறாவது நபர் கிருஷாந்தியோடு வல்லுறவு கொள்ள முயன்றபோது தனக்கு ஐந்து நிமிடங்கள் இடைவெளி அளிக்குமாறு கெஞ்சினாள். மேலும், தண்ணீர் தருமாறு விடாமல் கெஞ்சிக்கொண்டிருந்தாள். நாங்கள் அவளுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை.”

சோமரட்ண ராஜபக்சேயின் ஒப்புதல் வாக்குமூலம் ‘செம்மணி புதைகுழி’என பின்னர் அழைக்கப்பட்ட பாரிய புதைகுழிக்கு இட்டுச் சென்றது. அங்கே ஏறத்தாழ நானூறு தமிழர்களது உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் அரச படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனதாகச் சொல்லப்பட்டவர்களே அவர்கள். அவர்களது உடல்கள் சித்திரவதைகளால் சிதைந்து போயிருந்தன. கிருஷாந்தியினதும் அவரது சகோதரனதும் உடல்கள் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு கறுப்பு பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டிருந்தது. தாயினதும், குடும்ப நண்பரதும் கழுத்துகளிலும் உடலிலும் கயிறு இறுக்கப்பட்டிருந்தது. இறுதிக் கிரியைகளுக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட உடல்கள், இரண்டு மணி நேரத்துக்குள் தகனம் செய்யப்பட்டுவிட வேண்டும் என அரச தரப்பினரால் உறவினர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.
கிருஷாந்தியின் வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அது நிறைவேற்றப்படவில்லையாயினும், தன்னை உலக அரங்கில் நீதியின் பாதுகாவலனாக நிலைநிறுத்துவதற்கு அந்தத் தீர்ப்பை இன்றுவரை இலங்கை அரசு பயன்படுத்திவருகிறது.

“வீண் அவதூறை அள்ளிச் சொரிகிறார்கள்”என்று கண்கசக்கும் பேரினவாதிகளும் கிருஷாந்திக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அறிந்தே இருக்கிறார்கள். இந்த வழக்கு அதிர்ச்சி தரும் வகையில் மனிதப் புதைகுழிகளுக்கு இட்டுச் சென்றதானது, தடயங்களை துடைத்தழித்து குற்றங்களிலிருந்து தப்பிக்கும் பாடத்தை அவர்களுக்குக் கற்பித்தது.
இறந்தகாலம் கற்பித்த, தடயம் அழிக்கும் உத்தியை, காவற்துறையினர் கோணேஸ்வரி படுகொலையில் பிரயோகித்தார்கள். 

கோணேஸ்வரி முருகேசப்பிள்ளை என்ற 35 வயதான, நான்கு குழந்தைகளுக்குத் தாயான பெண், 1997 மே 17ஆம் திகதியன்று அம்பாறை மாவட்டத்திலிருந்து ‘சென்றல் காம்ப் கொலனி’யிலிருந்த பொலிசாரால் இரவு பதினொரு மணியளவில் கொடூரமான முறையில் கூட்டுப் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டபின் கொல்லப்பட்டார். நான்கு வயதான மகள் மட்டுமே அந்தக் கொடூர நிகழ்வுக்குச் சாட்சியாக இருந்தாள். அவரது ஏனைய மூன்று பிள்ளைகளும் உறவினர் ஒருவரது வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். கோணேஸ்வரி கொலை செய்யப்பட்ட விதம் ‘கசாப்புக்கடைத்தனமானது’என்று மனிதவுரிமை அமைப்புகளால் பதிவுசெய்யப்பட்டது. கோணேஸ்வரியின் பிறப்புறுப்பினுள் கைக்குண்டு ஒன்றைத் திணித்து அதை வெடிக்கவைத்து வல்லுறவின் தடயங்களை அழித்திருந்தார்கள் இலங்கையின் காவற்துறையைச் சேர்ந்த அந்த நான்கு பேரும்.

28 டிசம்பர், 1999 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் என்ற 29 வயதான பெண் (ஒரு பெண் குழந்தைக்குத் தாய்)அவரது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார். சாரதாம்பாளின் தந்தையையும் சகோதரரையும் கட்டிப் போட்டுவிட்டு அவரைத் தூக்கிச் சென்றவர்கள் புங்குடுதீவில் நிலைகொண்டிருந்த கடற்படையினரே. மறுநாட் காலை அந்தப் பெண்ணின் உயிரும் ஆடையுமற்ற உடல் புதர்களால் மூடியிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து நாடளாவிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. விசாரணை நடத்த அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு ‘நீதி’நிலைநாட்டப்பட்டது.

2001ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி சிவரஜனி, விமலாதேவி என்ற இரண்டு பெண்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதியில் வைத்து பொலிசாராலும் அந்த விடுதியின் ஊழியர்களாலும் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். முறைப்பாட்டைப் பதிவு செய்யச் சென்றபோது அவர்கள் வேசிகளெனத் தூற்றப்பட்டிருக்கிறார்கள்.
அதேபோலவே, குண்டு வைத்திருப்பதாகக் கூறி ஒரு பெண் நடுவீதியில் மக்கள் பார்த்திருக்கத் துகிலுரியப்பட்டார். (விசாரணையின் பிறகு அவர் ஒரு சிங்களப் பெண் என்பது தெரியவந்தது.) அவர் குண்டு வைத்திருக்கவில்லையென அறிந்தவுடன் அவரையும் வேசியாக்கிவிட்டனர். அதாவது, பாதுகாப்புப் படையினரை நிரபராதிகளாக்க வேண்டி சம்பந்தப்பட்ட பெண்களை வேசிகளாக்கினர். கவனிக்கவும்… அவர்கள் பாலியல் தொழிலாளர்களுமல்லர்; வேசிகள்! வேசிகள், பயங்கரவாதிகள் போன்றவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்ற  பொதுப்புத்தியை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். கோணேஸ்வரி, ஐடா கமாலிற்றா, சிவமணி, விஜிகலா கூட குற்றவாளிகளால் மறைமுகமாக அவ்வாறு பழிசுமத்தப்பட்டவர்களே.

இலங்கை போன்றதொரு நாட்டின் நீதிமன்றங்களும் அரசுசார்ந்த குற்றவாளிகளைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடுடையனவாக இருக்கின்றன. காரணம், அவர்கள் அரச இயந்திரத்தின் சக்கரங்கள். அவர்கள் மீது முற்று முழுதான குற்றஞ்சாட்டுதல்களைச் சுமத்தும்போது அரசும் அந்தக் குற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது. அதனால், குற்றவாளிகளை ஜாமீனில் விடுவித்துவிடுகிறார்கள். அல்லது, வழக்குகளை இழுத்தடிப்பதன் வழியாக சம்பந்தப்பட்டவர்களை சலிப்படையவும் பின்வாங்கவும் செய்துவிடுகிறார்கள். சாட்சிகள் மௌனமாக இருக்கும்படி மிரட்டப்படுகின்றனர். நாட்டை விட்டு வெளியேறும்படியாக அதிகாரங்களால் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அல்லது குற்றவாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டுவிடுகிறார்கள். அதாவது, பாலியல் குற்றத்தில் ஈடுபடக்கூடிய ஒரு புதிய இடம் அவர்களுக்கு அருளப்பட்டுவிடுகிறது.

2005ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதியன்று, தர்ஷினி இளையதம்பி என்ற 20 வயதான இளம்பெண், புங்குடுதீவில் நிலைகொண்டிருந்த கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டபின் கடற்படை முகாமுக்கு அருகிலிருந்த பாழடைந்த கிணறொன்றினுள் சடலமாகப் போடப்பட்டிருந்தார். கொல்லப்படுவதன் முன், அவர் பலரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதற்கான தடயங்களை அவரது உடல் கொண்டிருந்ததாக வைத்தியசாலைச் சான்றிதழ் கூறுகிறது. உடலின் பல இடங்களில் நகக்கீறல்கள், பற்கடிகளும் காணப்பட்டிருந்ததுடன், அவரது ஒரு மார்பு மிக மோசமாகச் சிதைக்கப்பட்டிருந்தது. தர்ஷினியின் கொலைக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கும்படி கடற்படை முகாமை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். வழக்கம்போலவே விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டன.

2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி, மன்னார் மாவட்டத்தின் வங்காலை என்ற இடத்தில் நடந்தேறிய கொடூரம் மனிதநேயமுள்ள எவராலும் மறக்கப்படக் கூடியதன்று. அந்தக் குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களும் (மேரி மெற்றலின் - மூர்த்தி மார்ட்டின், அவர்களது 9 வயதான மகள் லக்ஷிகா, 7 வயதான மகன் டிலக்ஷன் ஆகியோர் கொடூரமான முறையில் உளியாலும் துப்பாக்கியின் பின்புறமுள்ள கூர்முனையாலும் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். தாயைத் தவிர ஏனைய மூவரும் வெட்டுக் காயங்களுடன் கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கவிடப்பட்டிருந்தனர். மேரி மெற்றலின் பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் பெருகிய நிலையில் நிலத்தில் விழுந்து கிடந்தார். 9 வயதான லக்ஷிகாவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தார். அன்று காலையில் தேடுதல் சோதனை நடத்த வந்த இராணுவத்தினரே அந்தக் குரூரமான கொலைகளைச் செய்தவர்களென அந்தக் கிராமத்தினர் சாட்சியமளித்தனர்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் சில உதாரணங்களே. வெளிவந்தவை சில ஆயிரம். வெளிவராதவை பல்லாயிரம்.
‘ஆயிரத்தில் ஒரு சம்பவம் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக அல்லது கவனத்திற்குக்  கொண்டுவரப்படுவதாக’மனிதவுரிமை அமைப்புகள் கூறுகின்றன.

பாதுகாப்புப் (?) படைகளால் பாலியல் வதைக்கு ஆளாக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிருடன் விடப்படும் பெண்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ‘உனக்கு நேர்ந்ததை வெளியில் சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்றுவிடுவோம்’என்று மிரட்டப்படுகிறார்கள். ஆகவே, தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை உள்ளுக்குள் வைத்து மறுகியபடி காலமெல்லாம் கொடுங்கனவுகளால் துரத்தப்படுபவர்களாகவே பெரும்பாலான பெண்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

புஷ்பமலர் (கச்சாய்), பாலேஸ்வரி (கெருடாவில்), வாசுகி (யாழ்ப்பாணம்), தனலட்சுமி (கிளிவெட்டி, மூதூர்), லெட்சுமிப்பிள்ளை (திருகோணமலை-மகன்களுக்கு முன்னால் வைத்து வதையும் வல்லுறவும்) சிறீறஞ்சனி, புவனேஸ்வரி, இராஜேஸ்வரி (சரசாலை, தாய்-மகள்-சிறிய தாய் உறவு), சந்திரகலா கிருஷ்ணபிள்ளை (அளவை),  கணபதிப்பிள்ளை சொர்ணம்மா (கல்குடா), தேனுகா (10 வயது, பத்தமேனி, அச்சுவேலி), சிவசோதி (மண்டூர்), வனிதா (மயிலம்பாவெளி), நவமணி, ஜெயந்தி, மேகலா (ஜெயந்தியும் மேகலாவும் நவமணியின் மகள்கள் - தியாவெட்டுவான்), நூர் லெப்பை சித்தி உம்மா (ஓட்டமாவடி), அலி முஹம்மத் அதாபியா(ஏறாவூர்), காளிக்குட்டி ராகினி (பனிச்சங்கேணி), கிருபாதேவி (மட்டுவில் வடக்கு), விஜயராணி (அராலி), புவனேஸ்வரி (மந்துவில்-உறவினர் மூவர் கொலை செய்யப்பட்டபின்பு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டவர்), நாகலிங்கம் பவானி (திருநெல்வேலி), சின்னப்பு பாக்கியம் (மாவடிவேம்பு), ரஜனி (வாழைச்சேனை), பாலந்தி (6 வயது, அச்சுவேலி), பிறேமினி தனுஷ்கோடி, ரஜனி வேலாயுதப்பிள்ளை (உரும்பிராய்), தங்கநாயகி (அம்பாறை), சந்திரகலா (அல்வாய்), யோகலிங்கம் விஜிதா(நீர்கொழும்பு), சியாமளா (பளை), அமுதா (விடத்தல்தீவு, மன்னார்), சவரி மெடலின் (சொறிக்கல்முனை), ஐடா கமாலிற்றா (பள்ளிமுனை, மன்னார்), செல்வராணி (மீசாலை), அஜந்தனா (அரியாலை), ரஜனி (பனிச்சங்கேணி), பவானி (திருநெல்வேலி), விஜயலட்சுமி (கல்மடு, வாழைச்சேனை), ஆனந்தி (செட்டிப்பாளையம்).
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவை இலங்கை அரச படைகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சிலரது பெயர்கள். அவர்களுள் கொல்லப்பட்டவர்களும் ‘கருணை கூர்ந்து’தப்ப விடப்பட்டவர்களும் உள்ளடங்குவர்.


கொலைபடு களத்தில் வீழ்ந்தவர்கள் இலக்கங்களாக்கப்பட்டு விடுதல் போல, பாலியல் வெறிக்குப் பலியானவர்கள் காலவோட்டத்தில் வெறும் பெயர்களும் சம்பவங்களும் ஆக்கப்பட்டுவிட்டனர்.

மெல்லிய சோகம் கலந்த நீண்ட கண்களும் அழகான தமிழ் உச்சரிப்பும் கொண்ட இசைப்பிரியாவை விடுதலைப் புலிகளின் ‘நிதர்சனம்’தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். அவர் ஊடகம் மற்றும் தொடர்பாடல் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், இசை, நடனம், நடிப்புத்திறன் என பல்வகை படைப்பாளுமைகளும் கொண்ட பெண் எனவும் பின்னர் அறியக்கிடைத்தது. 2009 மே மாத பேரழிவிற்குப் பிறகு வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், கைகள் பின்னுக்குக் கட்டப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட தடயங்களோடு உயிரற்றுக் கிடந்த இசைப்பிரியாவின் உடலை உலகம் பார்த்தது. இசைப்பிரியா பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
“இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் வகையில் நாம் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி அமைந்துள்ளது”என்று முதன்முறையாக அந்தக் காணொளியை வெளியிட்ட பிரித்தானிய தொலைக்காட்சி நிலையமாகிய ‘சானல் 4’அறிவித்தது.
ஆனால், வழக்கம்போல, தனது பழக்கப்பட்ட ‘கனவான்’ வார்த்தைகளால் இலங்கை அரசாங்கம் அந்தக் குற்றச்சாட்டையும் மறுத்திருக்கிறது. இசைப்பிரியா அரசுக்கெதிரான போர் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அது கூறுகிறது. ‘அவ்வாறெனில், கைகள் பின்புறம் கட்டப்பட்டிருப்பது எதனால்?’என்ற கேள்விக்கு அதனிடம் பதில் இல்லை.

2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த பேரனர்த்தத்தின் பிற்பாடு காயங்களோடு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்களில் பலர் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டிருந்த நிலையில் இருந்ததாக அங்கு அவ்வேளையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 ‘விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்டுவிட்டோம்’என்ற ஆரவாரத்தோடு, இலட்சக்கணக்கான மக்களை விலங்குகளைப் போன்று- சுகாதார, உணவு, குடிநீர், இடவசதி அற்ற தடுப்புமுகாம்களில் அடைத்துவைத்திருந்தது இலங்கை அரசாங்கம். அவை பெயருக்குத்தான் தடுப்புமுகாம்களாக இருந்தனவேயன்றி, உண்மையில் அவை எஞ்சிய விடுதலைப் புலிகளை வடிகட்டுவதற்கான வதைமுகாம்களாகவே அமைந்திருந்தன. இன்னமும்கூட பல்லாயிரக்கணக்கான மக்கள், மீள்குடியேற்றப்படாமல், அடிப்படை வசதிகள் ஏதுமற்ற தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வவுனியாவின் தடுப்பு முகாமொன்றில் பணியாற்றிய ஒருவரின் வாக்குமூலம் இது:

“முகாமிலிருந்த பல பெண்கள் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் திரும்பி வரவேயில்லை. நான் இருந்த முகாமில், குளிக்கும் இடத்திற்கு அருகில் நான்கு பேரின் சடலங்களை நாங்கள் பார்த்தோம். அவர்களில் மூவர் பெண்கள். அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம். அங்குள்ள அதிகாரிகளிடம் நாங்கள் கேள்விகள் எதையும் கேட்க அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. நாங்கள் மௌனமாக அந்தச் சடலங்களைக் கடந்து சென்றோம்.”

முன்னாள் போராளிகள் மற்றும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள்  தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றி, தென்பகுதியிலுள்ள புனர்வாழ்வு முகாம்கள் என்று சொல்லப்பட்ட வதைமுகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த விபரங்கள் ஏதும் அறியப்படவில்லை. அவர்களுட் சிலர் அரசாங்கத்தின் கருணையால் ‘புனர்வாழ்வு’ அளிக்கப்பட்டு மீள்குடியேற்றப் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அத்தகையோருக்கு எந்தவொரு வாழ்வாதாரமும் இல்லை. இறந்தகாலத்தின் கொடுங்கனவுகளோடும் வறுமையோடும் ஏதிலிகளாக வாழ விதிக்கப்பட்டவர்களாயினர்.

மீள்குடியேற்றத்திற்குப் பிறகும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்கிறது. பெரும்பாலான ஆண்கள் போருக்குப் பலியாகிவிட்டார்கள். பெரும் எண்ணிக்கையானவர்கள் காணாமற் போய்விட்டார்கள். மேலும் பலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், தனியாக விடப்பட்ட பெண்கள் அரசபடைகளின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு தொடர்ந்து ஆளாகிவருகின்றனர்.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு இன்னபிற சொற்கள் ஈழமண்ணைப் பொறுத்தமட்டில் தம்மளவில் பொருளுடையவை அன்று. அல்லது அபத்தமானவை. மேற்கண்டவர்களில் பலர் சித்தம் கலங்கிப் பேதலித்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 

பாலியல் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு உயிரோடு விடப்பட்டவர்களின் மனதில் மீண்டும் மீண்டும் அந்தக் கொடூர சம்பவம் நிகழ்த்திப் பார்க்கப்படுவதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களால் ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்லவே முடிவதில்லை என்றும் அந்த மனவுளைச்சலையும் மீறி உறங்க நேர்கையில் தாம் துன்புறுத்தப்பட்ட, இழிவுசெய்யப்பட்ட, மரணத்திற்கு நெருக்கமாகக் கொண்டுசெல்லப்பட்ட சம்பவம் துர்க்கனவுகளாகத் தோன்றி நடு இரவுகளில் விழித்தெழத் தூண்டி விடுவதாகவும் சொல்கிறார்கள். பாலியல் வதையை எதிர்கொண்ட பலர் ஆழ்ந்த மௌனத்துக்குள் புதைந்து போய்விடுகிறார்கள். அவ்வாறு, சமூக மதிப்பில் தாழ்ந்துபோய்விடுவேனோ என்று அஞ்சி, தனக்கு நடந்ததை மற்றவர்களிடம் சொல்லாது மௌனத்துள் ஆழ்ந்திருந்த பெண்களில் பலர் தற்கொலையில், புத்தி சுவாதீனமிழப்பில் முடிந்திருக்கிறார்கள் என்பதற்கான உதாரணங்களை ஈழத்திலும் காணலாம்.

“நான் எனது கணவருடன் வாழும் தகுதியிலிருந்து இறங்கிவிட்டேனோ என்று அஞ்சுகிறேன்.”என்று, பாதிக்கப்பட்ட பல பெண்கள் உளவியலாளர்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் பல பெண்களும் இளைஞர்களும் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இந்நிலையில், பிரித்தானியாவில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றும் ஒருவர் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

“யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் இரவில் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து அலறுகிறார்கள். சிலரது பிறப்புறுப்புகளில் சிகரெட்டால் சுடப்பட்ட காயங்கள் இருக்கின்றன. சிலர் எவரையும் (ஆண்களோ பெண்களோ) அருகில் நெருங்க விடுவதில்லை. அருகில் போனால் பயந்துபோய் உரத்த குரலில் கூச்சலிடுகிறார்கள். துர்நினைவுகள் அவர்களைத் துரத்துகின்றன. என்னிடம் பேசிய ஒரு பெண், 18 மாதங்களாகத் தொடர்ந்து தன்னை இராணுவத்தினர் பாலியல் வதைகளுக்குட்படுத்தி வந்துள்ளதாகச் சொன்னார். இந்த விடயத்தை வெளியில் சொன்னால் அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார்கள்.”

போரில் கடைப்பிடிக்கப்படவேண்டிய சில அறங்கள், விதிமுறைகள் உள்ளன. போர்க்கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டவர்களது மனிதாபிமான உரிமைகள் பற்றிய விளக்கப் பகுதியில், நான்காவது ஜெனிவா உடன்படிக்கையில் (27வது ஆவணம்) கீழ்க்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது.

“போரில் சிறைப்பிடிக்கப்பட்ட பெண்கள், அவர்களது கௌரவத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறிப்பாக பாலியல் வல்லுறவு, வலுக்கட்டாயமான விபச்சாரம் மற்றும் சுயமதிப்புக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு தாக்குதல்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.”

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த பெண் போராளி ஒருவர் சொல்வதைக் கேளுங்கள்:
“உயிரற்ற சக பெண்போராளியின் உடலை எதிரி கையகப்படுத்த விட்டுச் செல்வது மிகவும் அபாயகரமானது. முடிந்தவரையில், எனது உயிரைப் பணயம் வைத்தேனும் நான் களத்திலிருந்து அந்த உடலைத் தூக்கிச் செல்லவே முயல்வேன். காரணம், அந்த உடல் எவ்விதம் இழிவுசெய்யப்படும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.”

மேற்குறிப்பிடப்படும் வார்த்தைகளை இணையத்தில் காணக் கிடைக்கிற காணொளிகளோடு நாம் பொருத்திப் பார்க்கலாம். கோணேஸ்வரி போன்ற பெண்களது பிறப்புறுப்புகளே கைக்குண்டுகளால் சிதறடிக்கப்படும்போது, பெண் போராளிகள் எத்தகைய சித்திரவதைகளுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதும் கலங்கடிப்பதுமாகும். போரில் காயம்பட்ட காரணத்தால் அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாமல் போன பெண் போராளிகள் சிலரது தலைகள் மண்வெட்டிகளால் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. குற்றுயிராகக் கிடந்த அவர்களை இலங்கை இராணுவம் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியும் பிறப்புறுப்புகளில் துப்பாக்கியால் சுட்டும் கொன்றிருக்கிறது. ஆடைகள் அகற்றப்பட்ட உடல்களில் மறைவிடங்கள் குதறப்பட்டிருக்கின்றன. உதடுகள் துண்டாடப்பட்டிருக்கின்றன. மார்புகள் கடிக்கப்பட்டும் அரியப்பட்டுமிருக்கின்றன. பாலுறுப்புகளுள் போத்தல்களும் கம்பிகளும் செலுத்தி குடையப்பட்டிருக்கின்றன. நிர்வாணமான உடல்களை இராணுவத்தினர் கால்களால் உதைத்துக் களிகூரும் காட்சிகளைக் காணும்போதில், போராளிகளின் அந்தரங்கப் பகுதிகளைப் பற்றி ஆபாசமான வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்படுவதைக் கேட்கும்போதில், இறந்துபோன மிருகங்களின் உடல்களுக்கு அளிக்கப்படும் மரியாதை கூட மறுக்கப்படும்போதில், ‘இக்கணமே இவ்வுலகம் வெடித்துச் சாம்பலாகி விடக்கூடாதா?’என்று சபிக்கவே தோன்றுகிறது.

சமூகத்தின் பாரபட்சமான கண்களில் பெண் என்பவள் ஏற்கெனவே இரண்டாவது பிரஜையாகவே பார்க்கப்பட்டு வருகிறாள். ஒப்பீட்டளவில் ஆணுக்குள்ள சமூக மதிப்பு அவளுக்குக் கிடைப்பதில்லை. பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் மேலும் ஒரு படி சமூகத்தின் கண்களில் இறங்கிவிடுகிறாள். சமூகத்தின் கண்களில் அவள் ‘களங்கப்பட்டவள்’. ஆகவே, பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டதை வெளிப்படுத்துவதற்குத் தயங்குகிறாள். சில விதிவிலக்குகள் தவிர்த்து குடும்ப உறுப்பினர்களும் அவ்வாறான வெளிப்படுத்தலை அவமானமாகவே கருதுகிறார்கள். காலகாலமாகக் கட்டி வளர்க்கப்பட்ட கலாச்சார மதிப்பீடுகளிலிருந்து சரிந்துவிடுவோமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

ஒரு இனத்தை இழிவுசெய்ய நினைக்கும் எதிரிகளுக்கு எளிய கருவியாக அமைந்துவிடுகிறது பெண்ணுடல். அதிலும், நிலத்தையும் பெண்ணையும் சொத்துடமையாகக் கருதும் சமூகத்தின் பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்குவதன் வழியாக அந்த இனத்தையும் அதன் ஆண்களையும் வெற்றிகொண்டுவிடுவதாக நினைக்கிறார்கள் ஆக்கிரமிப்பாளர்கள். பொஸ்னியப் பெண்களது உடல்களுள் தங்கள் வக்கிரத்தை ஊற்றியபின் சேர்பியப் படைகள் சொன்ன வார்த்தைகள் அந்த அடிப்படையிலிருந்து எழுந்தவையே. காஷ்மீர் போராளிகளது விடுதலை உணர்வை அவர்தம் பெண்ணுடல்களுள் நுழைந்ததன் வழியாக இந்திய இராணுவம் சிதைக்க முயன்றது. வியட்நாமிலும் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் உள்ள பெண்கள் மீது களமாடிய அமெரிக்க இராணுவத்தை இயக்கியது பாலியல் வெறி மட்டுமன்று. ஒரு இனத்தின் உளவுறுதியைச் சிதைக்கும் ஆயுதமாகவும் வல்லுறவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஈழத்தமிழர்களின் ஆன்மா பேரினவாதத்தின் கொடுங்கரங்களால் நசுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் பேதலிப்பின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறார்கள். வதைகளின் மூலம் வாகை சூடுவதே பேரினவாதத்தின் நோக்கம். தங்களது வக்கிரத்தை, வெறியை பலவந்தமாக பெண்ணுடலுள் ஊற்றுவதன் வழியாக அவர்தம் சுயமதிப்பையும் விடுதலை வேட்கையையும் பண்பாட்டையும் கலாச்சார விழுமியங்களையும் எதிர்காலம் குறித்த கனவுகளையும் அழித்துவிட வேண்டுமென்பதே ஆக்கிரமிப்பாளர்களின் திட்டம். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்திலுள்ள மனிதர்கள் எவ்விதம் மனித நிலைக்குக் கீழ்ப்பட்டவர்களாகப் பார்க்கப்படுகிறார்களோ, அவ்விதமே பெண்களும் பாலியல் பண்டங்களாக ஆக்கிரமிப்பாளர்களால் பார்க்கப்படுகிறார்கள்.

பலியுயிர்களாக்கப்பட்ட பெண்கள் உன்னதமான உலகத்தை இழந்தவர்களாக, செய்யாத குற்றத்திற்கான குற்றவுணர்வோடு எஞ்சியுள்ள காலம் முழுவதும் வாழ விதிக்கப்பட்டிருக்கிறார்கள். (நமது சமூகம் அப்படித்தான் கற்பித்திருக்கிறது.) இனி அவர்களது கனவுகளில் என்ன தோன்றக்கூடும்…? சீருடைகள், குண்டாந்தடிகள், வெறி வழியும் கண்களுடன் குனியும் பேய்கள், வாய்க்குள் திணிக்கப்பட்ட உள்ளாடைகள், காலிடுக்கில் வழிந்த குருதி…

இந்தியா, சீனா போன்ற வல்லாதிக்கங்களின் ஒத்துழைப்பினால் மட்டுமன்றி, பேரினவாதிகளின் குறிகளாலும் வெல்லப்பட்டிருக்கிறது-இலங்கையின் ‘பயங்கரவாதத்திற்கெதிரான’ போர்!

நன்றி -'தீராநதி 'மே மாத இதழ்