6.23.2014

மனக்கோலம்




விலங்கொன்று ஊளையிடுவது போலவேயிருந்தது அந்த ஓசை. கனவு காண்கிறோம் என்று உள்ளுணர்வுக்குத் தெரிந்து கண்டுகொண்டிருக்கும் கனவொன்றிலிருந்து அவ்வோசை மிதந்து வருவதாக முதலில் சாந்தன் எண்ணினான். மது அவனை மெதுவாகத் தொட்டு ‘என்னாலை நித்திரை கொள்ள முடியேல்லை’என்றதும்தான், அந்த ஓசை அக்காவின் அறையிலிருந்து வருகிறது என்பதை உணர்ந்தான்.

மது எழுந்து அமர்ந்து, “என்னாலை முடியேல்லை”என்று முனகியபடி மேடிட்டிருந்த வயிற்றைத் தடவிக்கொண்டிருந்தாள். வயிற்றினுள்ளிருந்து பதட்டப்படும் குழந்தையை ஆசுவாசப்படுத்துமாப் போலிருந்தது அந்தத் தடவல். உயிரின் மூலத்தைத் தேடி உருக்கும் விசித்திரமான ஓசையை சற்றைக்கு நிறுத்திய ராசாத்தி இப்போது அனுங்கத் தொடங்கியிருந்தாள். தாங்கொணாத வேதனையை வேறுவழியின்றி தாங்கிக்கொண்டிருப்பதிலிருந்து பிறந்த அனத்தலாயிருந்தது அது. நிறைந்து சரிந்த வயிற்றைத் தூக்கிக்கொண்டு எழுந்திருக்க முயன்ற மதுவைக் கையமர்த்திவிட்டு எழுந்து வெளியில் போனான் சாந்தன். நிலாவெளிச்சம், அடைப்பற்ற யன்னல் வழியாகவும் இன்னமும் செப்பனிடப்படாத ஓடுகள் வழியாகவும் விறாந்தையில் இறங்கியிருந்தது. ஐப்பசி மாதத்துக் குளிரில் தரை சில்லிட்டிருந்தது. ராசாத்தியின் அறைக்கதவருகில் போய் நின்று கூப்பிட்டான்.

“அக்கா…!”

“ம்…..”

“நித்திரை கொள்ளேல்லையா?”

‘க்றும்… ரும்’என்று புரிபடாத ஓசையொன்று பதிலாக வந்தது.

மதுவும் எழுந்து வந்துவிட்டிருந்தாள். அவளது வயிற்றைப் பார்க்கும்போதெல்லாம் அபிக்குட்டி ஞாபகத்தில் வந்தாள். முள்ளிவாய்க்காலை நோக்கி நெருக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருந்த இறுதிநாட்களில், சாப்பாட்டுக்கு நின்ற சனங்களின் வரிசையில் ஷெல்விழுந்ததில் அபி செத்துப்போனாள். அப்போது அபிக்கு இரண்டரை வயது. மதுவின் இடதுதோள்பட்டையிலிருந்து முழங்கைவரை நீளமான சப்பாத்து வடிவில் சதை பிய்ந்த அடையாளம் இருக்கிறது. வெளியில் போகும்போது கையை மறைப்பதற்காக சேலையை இழுத்து இழுத்து விட்டுக்கொள்வாள். இந்த நான்கு ஆண்டுகளில் அவள் அபியை நினைத்து அழாத நாளே இல்லை. இப்போது நிறைமாதப் பிள்ளைத்தாய்ச்சி. இரத்த அழுத்தம் வேறு அதிகமாக இருந்தது. இந்நிலையில் இரவு தூக்கமில்லாதிருப்பது மதுவின் உடல் நலத்திற்குக் கேடானது என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால், அக்கா எழுப்பும் அமானுஷ்ய ஓசைகளால் உறங்கமுடிவதில்லை.

“அக்கா…!”

“ம்…”

“நித்திரையைக் கொள்ளுங்கோ…”

“நித்திரைகொள்ள விடமாட்டாங்களாம்”

அவனுக்கு கதவை உடைத்துக்கொண்டு வெளியே ஓடி வானத்தை நோக்கிக் கதறியழவேண்டும் போலிருந்தது. மூச்சு விடச் சிரமப்பட்டான். மதுவின் கைகள் அவனது தோளைத் தடவின.

அக்கா திடீரென இரவைக் கிழித்துக்கொண்டு வீரிட்டுக் கத்தினாள்.

“அவளை விடுங்கோ….. பச்சைப் பாலன்…. அவளை விடுங்கோ…”

முன்புறத்தில் இறக்கப்பட்டிருந்த பத்திக்குள் படுத்திருந்த சிவலை திடுக்கிட்டு எழுந்து குரைக்கத் தொடங்கியது. யன்னலருகில்  மூக்கை வைத்து மூசித் தானும் விழித்திருப்பதாக அறிவித்தது. பின் ஒன்றும் நடவாததுபோல் மறுபடியும் உறக்கத்திலாழ்ந்துவிட்டது. ராசாத்தியின் அனுக்கத்திற்கும் அலறலுக்கும் அக்கம்பக்கத்தைப் போலவே சிவலையும் பழகிவிட்டிருந்தது. முன்னர் அவர்கள் வளர்த்த நாயின் பெயர் வீரன். இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து போன வழியில் வீரன் எங்கோ தொலைந்துவிட்டிருந்தது. வீரனின் கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு சிரித்தபடியிருக்கும் அபியின் புகைப்படம் மட்டும் அழிவுக்குத் தப்பி எஞ்சிவிட்டிருக்கிறது.

மது குசினிக்குள் போய் விளக்கைக் கொளுத்திக்கொண்டு வந்தாள். வலிப்பு வந்தாற்போல ராசாத்தியின் உடல் தூக்கித் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தது. கண்களும் உதடுகளும் துடித்துக்கொண்டிருந்தன. வாயிலிருந்து வீணீர் ஒழுகிக்கொண்டிருந்தது. கைகளை மார்புக்குக் குறுக்காக மறைப்புப்போல கட்டி, கால்களை இறுக்கி ஒடுக்கி தன்னைச் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தாள். மது அருகில் அமர்ந்து முதுகைத் தடவிக் கொடுத்தாள். விசும்பல் மெதுமெதுவாக அடங்கி ராசாத்தி உறங்கும்வரை தடவிக்கொண்டிருந்தாள். சாந்தனுக்கு மதுவைப் பார்க்கப் பாவமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. மதுவுக்கு வேறுவிதமாக இருக்கத் தெரியாது. அவளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து, அவளது அண்ணனிடம் அடிவாங்கி காதலித்துக் கலியாணம் கட்டியது அந்தக் குணத்திற்காகவுந்தான்.

“இப்பிடியே வீட்டிலை வைச்சுக்கொண்டிருந்து உபத்திரவந்தான். ஆஸ்பத்திரியிலை கொண்டுபோய்க் காட்டுங்கோ… உங்கடை அக்காவுக்கு மூளை பிசகிப் போச்சுதெண்டதை ஏன் மறைக்கிறீங்கள்?” என்று ஊரில் பலபேர் சாந்தனைக் கேட்டுவிட்டார்கள்.

தன் அக்காவுக்குப் பைத்தியம் என்பதை அவனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ‘தகப்பனைத்தின்னி’என்று பெயர் கேட்ட அவனது பத்தாவது வயதில் தாயையும் இந்திய இராணுவத்தின் ஷெல்லடிக்குப் பலிகொடுத்தான். அவனைவிட ஏழு வயது மூத்த ராசாத்தி இரண்டாந் தாயாகி அவனை வளர்த்தாள். மாமா வீட்டில் இடிசோறு கிடைத்தது; சீதனம் கிடைக்கவில்லை. ஊரில் ஒரு முதிர்கன்னிக்குரிய அத்தனை மரியாதைகளும் ராசாத்திக்கும் கிடைத்தன. ராசாத்திக்கு முப்பது வயதுக்குப் பிறகு, வயது நகர மறந்து நின்றுவிட்டாற்போலொரு தோற்றம். அதெல்லாம் பழைய கதை. 

திரும்பிவந்த புதிதில் தன்பாட்டில் சுருண்டு சுருண்டு படுத்திருப்பாள் சாப்பிடுவதையும் உறங்குவதையும் விட மற்றெல்லாவற்றையும் மறந்துவிட்டவளைப் போலிருந்தாள். ஏதாவது கேட்டால் தலையைக் குனிந்தபடி மௌனம் சாதித்தாள். அவள் யாரையும் பார்ப்பதில்லை என்பதை, குறிப்பாக கண்களைத் தவிர்த்தாள் என்பதை சாந்தன் பலநாட்கள் கடந்தபின்பு கண்டுபிடித்தான். அவள் அநிச்சையாகச் செய்த செயல் ஒன்றே ஒன்றுதான்: அந்த அறையின் யன்னலை எத்தனை தடவைகள் திறந்துவிட்டாலும் அவசர அவசரமாக எழுந்து அதை இறுகச் சாத்தினாள். வெளிச்சத்தைக் கண்டு நடுங்கினாள். ஆரம்பத்தில், மதுவோ சாந்தனோ அவள் இருந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு உள்நுழைந்தால் அடிபட்ட மிருகம்போல கூச்சலிட்டாள். ஆகவே, அந்த அறையின் வாசலில் சாப்பாட்டை வைத்துவிட்டு குரல்கொடுக்கப் பழகினார்கள். விடிகாலையில் ஊர் விழித்தெழுவதற்குமுன் எழுந்து இயற்கைக் கடன்களையும் குளியலையும் முடித்துவிட்டு வந்து மீண்டும் அறைக்குள் புகுந்துகொண்டுவிடுவாள். இயல்புக்குத் திரும்பி கேட்ட கேள்விக்குப்பதிலளிக்கவே மூன்று மாதங்களுக்கு மேலாகின. அதுவும் ஒன்றிரண்டு வார்த்தைகள்தாம்.

சாந்தனும் மதுவும் செட்டிகுளம் முகாமிலிருந்து திரும்பிவந்தபோது பொட்டல்வெளியாகிப் போன வளவே அவர்களை எதிர்கொண்டது. தென்னைமரங்களை யானைகள் சு+றையாடியிருந்தன. கிணற்றடியினருகிலிருந்த பாக்குமரங்களும் பட்டுப்போயிருந்தன. பூச்செடிகள் இருந்தமைக்கான அடையாளமே இல்லை. அபிக்குட்டியின் ஞாபகத்தில் தின்னாமல் குடியாமல் கிடந்தாள் மது. சாந்தன்தான் சமையலிலிருந்து எல்லாம் செய்யவேண்டியிருந்தது.

விசாரணை நிலையத்திலிருந்து ராசாத்தியை யாரோ கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனார்கள். அவள் நேராக, கீறிவைத்த கோட்டில் தடம்பிசகாமல் நடப்பதுபோல நடந்துவந்தாள். கண்கள் பிணத்தினுடையவை போல நிலைகுத்தி நின்றன. உடலில் சதை என்று சொல்வதற்கு ஏதுமில்லாதபடிக்கு இளைத்துப்போயிருந்தாள். அப்படியே போய்ப் படுத்து உறங்கிவிட்டாள். உறக்கம் என்றால் உறக்கமில்லை! திடீரென்று அமானுஷ்யமாக ஊளையிடுவாள். இருந்தாற்போல எழுந்து வெளியில் ஓடுவாள். பெரும்பாலும் இராணுவமுகாமை நோக்கியே அவள் ஓடுவாள். எலும்பினால் செய்யப்பட்டதுபோலிருந்த அந்த உடலுள் எவ்வளவு சக்தி அடைபட்டிருந்தது என்பதை, அவளை இழுக்கமுடியாமல் இழுத்துக்கொண்டுவந்து வீடு சேர்க்கும் நாட்களில் சாந்தனால் உணரமுடிந்தது.

பகலில் வேகம் தணிந்து வேறு மனுசியாயிருப்பாள். எவரும் சொல்லாமலே தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் இழுத்து இறைத்தாள். வளவைக் கூட்டி அள்ளினாள். நாய்க்குட்டிக்குச் சாப்பாடு வைத்தாள். அதைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அதன் கண்களை உற்றுப் பார்ப்பாள். அது அவளது முகத்தை நக்கிக் கொடுக்கும். மனிதர்களது அடையாளங்களும் பெயர்களும் அவளது மனதிலிருந்து அழிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றியது.
பறவைகளோடும் விலங்குகளோடும் செடிகொடிகளோடும் நெருக்கம் காட்டினாள்.

மதுவும் சாந்தனும் தங்களது அறைக்குள் போய்ப் படுத்துக்கொண்ட சில நிமிடங்களில் ராசாத்திக்கு விழிப்பு வந்துவிட்டது. கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.

மூடிய விழிகளுக்குள் குறிகளாகத் தெரிந்தன. சமையலறையில் மரக்கறி வெட்டப் பயன்படுத்தும் கத்தியளவு நீண்ட, மெல்லிய, சதைப்பற்றான, தசையைத் துளைத்திறங்கும் கூரிய எலும்பு போன்ற குறிகள். இராணுவச் சீருடையினுள்ளிருந்து நீளும் குறிகள். சிலசமயங்களில் சிவில் உடையிலும் அவர்கள் வருவதுண்டு. விகாரமான இளிப்போடு, வாய்க்குள் திணிக்கப்படும் குறிகள். வியர்வை நாற்றமும் மூத்திரவாடையும் வீசும் குறிகள். தலையை ஆட்டி ஆட்டி அந்தக் குறிகளை நினைவிலிருந்து விலக்க முயன்றாள்.

“ராசாத்தி அக்கா! நான் செத்துப் போயிட்டனெண்டு அம்மாட்டைச் சொல்லுங்கோ.”

ராசாத்தி திடுக்கிட்டு விழித்து சுற்றுமுற்றும் பார்த்தாள். அறையின் மூலையில் துளசி நிற்பதை அவள் பார்த்தாள். துளசி பள்ளிக்கூடச் சீருடை அணிந்திருந்தாள். வெள்ளைநிறச் சீருடையில் அடர்ந்த செந்நிறக் குருதி திட்டுத்திட்டாகப் படிந்திருந்தது. நீளமான அவளது கண்களில் கண்ணீரும் கலவரமும் நிறைந்திருந்தன. அவள் நின்றிருந்த இடத்தில் காலருகில் குருதி கருநிறத்தில் தேங்கிநின்றது.

“என்னாலை நடக்கமுடியாமல் இருக்கு அக்கா!”அவள் அழுதாள்.

ராசாத்தி எழுந்து துளசியருகில் போனாள். துளசியின் தோள்பட்டையில் வைத்த கைகள் இருளுள் விழுந்தன. அவளைக் காணவில்லை. இப்போது அந்த அலைச்சத்தம் கேட்கத் தொடங்கியது. வர வர நெருங்கி வந்தது. கடலை அவள் கைவிரித்து வரவேற்றாள். அதனுள் புகுந்து தானுமொரு அலையாக மாறிவிட விரும்பினாள். அவள் நெருங்க நெருங்க கடலோ பின்வாங்கிச் சென்றது. இராட்சத நாகமொன்றின் படமென தலைவிரிந்து இடுப்பொடுங்கிய கரிய அலையொன்றின் நுனியில் நின்ற துளசி ‘அக்கா! நான் போறன்’என்றாள். அலையோசை அடங்கி றபான் ஒலிக்கத் தொடங்கியது.

ராசாத்தி செவிகளைப் பொத்திக்கொண்டாள். அவளது விரல்களையும் மீறி உள்நுழைந்தது பாட்டு. மதுவின் வாசனை வீசும் பாடல் நள்ளிரவு தாண்டியும் ஒலிக்கும். பிறகு, பெண்கள் அடைக்கப்பட்டிருக்கும் அறைகளை நோக்கித் தள்ளாடியபடி வரும்.

வினோதினி தனது மார்புச் சட்டையை விலக்கிக் காட்டினாள். பல் ஆழப்புதைந்த தடயம். புத்தரின் பல்! புத்தர் கடிக்கமாட்டார் என்றுதான் ராசாத்தி அதுகாறும் நினைத்திருந்தாள்.

ஊர் உறங்கிக்கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் விழித்திருந்தன.

ராசாத்தி எழுந்து வெளியில் வந்தாள். ஓசையெழுப்பாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினாள். சிவலை ஒற்றைச் செவியை உயர்த்தி அவளைப் பார்த்தது. முன்னங்கால்களை நீட்டி நெட்டுயிர்த்திவிட்டு தலையை உடம்புக்குள் புதைத்துக்கொண்டு உறங்கிப்போனது.

முன்னரெல்லாம் கழிப்பறையில் அமரமுடியாது. கால்களை அகட்டி அமர்ந்தபோதெல்லாம் வலி உயிர்பிடுங்கியது. மலத்திலும் சிறுநீரிலும் இரத்தம் கலந்திருந்தது. அவளது அறைக்கதவின் இடுக்கினூடாக நாட்பட்ட குருதியின் நாற்றம் கிளம்பி முகத்திலறைந்தது. மதுதான் வைத்தியரிடம் அழைத்துப் போனாள். வைத்தியரது அறை வாசலில் காத்திருந்தபோது அங்கிருந்த பெண்களிலொருத்தி ராசாத்தியை உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இவவுக்கு என்ன வருத்தம்?”

“காய்ச்சல்”என்றாள் மது.

அந்தப் பெண் ‘எனக்கு எல்லாம் தெரியும்’என்ற சிரிப்பைச் சிரித்தாள். அவள் ராசாத்தியைப் பார்த்த பார்வையில் அருவருப்பு தெரிந்தது.

ராசாத்தி கால்களை அகட்டிப் படுத்திருந்தபோது, வைத்தியர் அனிச்சையாகத் தன் மூக்கைத் தேய்த்தார். ஆனாலும் அவர் கருணையோடுதான் நடந்துகொண்டார். ஊரிலுள்ளவர்களைப்போல அவர் ஒதுங்கிப் போகவில்லை. அந்தப் பெண்போல விஷமூறிய கண்களால் சிரிக்கவில்லை.

ராசாத்தி வானத்தை உறுத்துப் பார்த்தாள். நிலவுக்குப் பெரிய வயிறு. மதுவைப்போல அதுவும் நிறைசு+லி. வயிற்றைக் கிழித்துக்கொண்டு சின்னஞ்சிறிய கையொன்று நீண்டது. அது அபிக்குட்டியின் கைகளைப் போல வெண்ணிறமான, குண்டுக்கை. இப்போது நிலவு செந்நிறமாகிவிட்டது. வெளிச்சம்போல இரத்தம் ஒழுகியது. இவள் தலையை ஆட்டினாள். பிறகு கடப்பைத் திறந்துகொண்டு வெளியில் ஓடினாள். அவள் ஓடிய திசையில் இராணுவ முகாம் இருந்தது.
…..

“மானம் போகுது”

சைக்கிளைப் பிடித்தபடி நின்ற மாமா உறுமினார். தேகம் கோபத்தில் நடுங்கியது.

“எதெண்டாலும் உள்ளுக்கை வந்திருந்து கதையுங்கோ மாமா”சாந்தன் அழைத்தான்.

அவரது கைகள் சைக்கிளின் மட்காட்டை இறுக்கிப்பிடித்திருந்தன. பெரிய பெரிய கறுத்த விரல்களில் உரோமம் அடர்ந்திருந்தது.

“நீ இவளைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலை கொண்டுபோய் விடு. இல்லையெண்டா நஞ்சைக் கிஞ்சைக் குடுத்து சாக்காட்டு. இப்பிடி வேசைப் பட்டம் கேக்கிறதிலும் சாகட்டும்.”

சாந்தன் அவரை முறைத்துப் பார்த்தான்.

“அவவுக்கு தான் எங்கை போறனெண்ட சுயநினைவு இல்லை”

“சுயநினைவு இல்லாதவள் அதெப்பிடியடா நேரா ஆமிக் காம்ப்புக்குள்ள போறாள்? ருசி கண்ட உடம்பு” மாமா காறித் துப்பினார்.

சாந்தன் மாமாவை சைக்கிளோடு தூக்கி வீதியில் எறிந்துவிடலாமா என்று நினைத்தான். அவரது சோற்றைத் தின்று வளர்ந்த நன்றி அவனது உடலில் மீதமிருந்தது. பிறகு பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னான்.

“நீங்க போங்கோ. அவ இனி எங்கையும் போகமாட்டா. அதுக்கு நான் பொறுப்பு”

“நல்லவேளையாக பற்குணம் தற்செயலாக் கண்டு பிடிச்சுக்கொண்டு வந்தான். இல்லையெண்டா நாறியிருப்பியள்”

மாமா கோபத்தோடு சைக்கிளை ஏறத்தாழத் தூக்கித் திருப்பினார். யாரையோ உழக்குவதுபோல உழக்கிக்கொண்டு வெகுவேகமாகப் போனார்.

மாமா கத்திவிட்டுப் போவதைப் பார்த்தபடி ராசாத்தி மாலுக்குள் அமர்ந்திருந்தாள்.

“அக்கா! ஏனிப்பிடிச் செய்யிறீங்கள்?”

அவள் சாந்தனை வெறுங்கண்களால் பார்த்தாள். பிறகு தலையைக் குனிந்துகொண்டாள்.

“ஊருக்கை எல்லாரும் என்னைத்தான் பேசுகினம் அக்கா”

நிமிர்ந்து பார்த்த விழிகளில் கண்ணீர் நிறைந்திருந்தது.

“எனக்கு…. தெரியாது தம்பி” குமுறிக்கொண்டு வந்து விழுந்தது பதில். கண்ணீர் தன்பாட்டில் வழிந்தது. அதைத் துடைப்பதற்கு அவள் முயற்சி எடுக்கவில்லை.

“இரவானதும்… இரவானதும்…”அவளால் முடிக்கமுடியவில்லை.

மது சாந்தனைப் பார்த்தாள். அவனது கண்கள் மகிழ்ச்சியில் மின்னிக்கொண்டிருந்தன. ‘தம்பி’என்ற வார்த்தை இத்தனை நாட்களுக்குப் பிறகு ராசாத்தியின் வாயிலிருந்து வந்ததைக் கேட்ட மகிழ்ச்சி அது.

“எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம்….”

ராசாத்தியின் கண்கள் வானத்திற்குப் போய்விட்டன. இறந்தகாலம் வானத்தில் இருந்தது. அங்கு துளசி இருந்தாள். வாணியும் தமிழ்ச்செல்வியும் இருந்தார்கள். விசாரணை என்ற பெயரில் அகதி முகாமிலிருந்து அவர்களை இழுத்துக்கொண்டு செல்லப்பட்டார்கள். அடைத்துவைக்கப்பட்ட இடத்தில் ஒவ்வொரு இரவும் ‘விசாரணை’ நடந்தது. நள்ளிரவு கடந்தபிறகு உடலில் உயிர் மட்டும் மிச்சமிருக்க திரும்பக் கொண்டுவந்து போட்டார்கள்.

“என்ரை கழுத்தை ஆராவது நெரிச்சுக் கொல்லமாட்டீங்களா? என்னாலை முடியேல்லை… என்னாலை முடியேல்லை…”வாணி இரவிரவாக அழுதாள். அவளது சின்ன உடலில் காய்ச்சல் பொழிந்துகொண்டிருந்தது.

ராசாத்தி சீற்றத்தோடு தரையை உதைத்தாள். சிவலை பயத்தோடு எழுந்து போய் வேறிடத்தில் படுத்துக்கொண்டது.

“அவங்களைக் கொல்லவேணும்”

மது பாய்ந்தோடி வந்து ராசாத்தியின் வாயைப் பொத்தினாள். அவளது உடல் பயத்தில் நடுங்கியது. சுற்றுமுற்றும் பார்த்தாள். காற்றுக்கும்கூட கண்களும் செவிகளும் இருந்தன. அவர்கள் எந்நேரமும் அவ்வழியாக வரக்கூடும். துப்பாக்கி முதுகுறுத்த கூட்டிச் செல்லப்படும் சாந்தனை மது மனக்கண்ணில் கண்டாள். சாந்தன் ராசாத்தியின் அருகில் வந்து அமர்ந்தான்.

“அக்கா! அபிக்குட்டி செத்துப்போச்சுது. நாங்கள்தான் மிச்சமிருக்கிறம்”மன்றாட்டத்தில் முடிந்த குரல் உடைந்துபோய் அழ ஆரம்பித்தான்.

“மதுவுக்குப் பிள்ளை பிறக்கப்போகுது. இந்நேரம் நீங்கள் இப்பிடி நடந்துகொண்டால் எங்களையெல்லாம் வந்து பிடிச்சுக்கொண்டு போயிடுவாங்கள்”குழந்தைக்குச் சொல்வதுபோல தொடர்ந்தான்.

ராசாத்தி தலையை ஆட்டினாள். ஓசையெழும்படியாக பற்களைக் கடித்தாள். அவளது தேகத்திற்குள் நான்கு குதிரைகள் புகுந்துகொண்டாற் போலிருந்தாள்.

“அக்கா!”

“ஹ்ம்…”

“இனிப் பட எங்களாலை ஏலாது அக்கா!”

ராசாத்தியின் இமைகள் அவசரகதியில் மூடித் திறந்தன. மூடிய கண்களுக்குள் தோன்றிய முகங்களை கைகளைக் கொண்டு விலக்கப் பார்த்தாள். அப்படி அவள் செய்யும்போது காற்றைக் கைகளால் அறைவதுபோலிருந்தது. றபான் சத்தம் வேறு காதைக் கிழித்தது. உரு வந்தாற்போல தலையை ஆட்டினாள். பிறகு மயங்கிச் சரிந்தாள். மது தண்ணீர் எடுத்து வருவதற்காக உள்ளே போனாள்.

அன்றிரவு மதுவும் சாந்தனும் நீண்ட நாட்களுக்குப் பின் ராசாத்தியின் அமானுஷ்ய ஓசைகளின்றி ஆழ்ந்து உறங்கினார்கள். ராசாத்தி காணாமற் போனதை அவர்கள் கண்டுபிடித்தபோது வெயில் விறாந்தையில் ஏறியிருந்தது.



நன்றி-“உரையாடல்“-கனடாவில் வெளியாகும் சஞ்சிகை

6.21.2014

"பெண்கள் ஏதோ விளிம்பில் அமர்ந்து எழுதுவதுபோல எண்ணுகிறார்கள்” -அம்பை



சி.எஸ்.லஷ்மி என்ற இயற்பெயர் கொண்ட அம்பை அவர்கள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தன் எழுத்துக்களின் மூலமாக தமிழிலக்கியத்தில் பெண்ணிய சிந்தனைகளைத் தோற்றுவித்த முன்னோடிகளுள் ஒருவராவார். நந்திமலைச் சாரலிலே (குழந்தைகள் நாவல்-1962), அந்திமாலை (நாவல்-1966), சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1987), காட்டில் ஒரு மான் (2000), வற்றும் ஏரியின் மீன்கள் (2007), ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு (2013) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், The Singer and the Song (இசைத்துறையைச் சார்ந்த பெண்களுடனான உரையாடல்-2000), Mirrors and the  Gestures (நடனத்துறை சார்ந்த பெண்களுடனான உரையாடல்-2003) ஆகியவற்றோடு இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகளும் நாடகங்களும் எழுதியிருக்கிறார். பம்பாயில் வாழ்ந்துவரும் அம்பை, ‘ஸ்பாரோ’என்ற பெயரிலான, பெண்களது வாழ்வியல் தொடர்பான வரலாற்று ஆவணக் காப்பகத்தின் நிறுவனர்களுள் ஒருவரும் அதன் இயக்குநருமாவார். ‘அந்திமாலை’க்கு நாராயணசாமி ஐயர் விருது (கலைமகள் சஞ்சிகையால் வழங்கப்பட்டது), 2006இல் அமெரிக்காவாழ் தமிழர்களால் வழங்கப்பட்ட விளக்கு விருது, 2008 இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தினால் வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது, 2011இல் கலைஞர் பொற்கிழி விருது (சிறுகதைகளுக்காக வழங்கப்பட்டது) ஆகிய விருதுகளைப் பெற்றவர். ரொறன்ரோவில் நடைபெற்ற தமிழியல் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த அம்பை அவர்களை தாய்வீடு பத்திரிகைக்காகச் சந்தித்தோம்.

*******

ஆணாதிக்கம் வேரோடிப் போயிருக்கும் சமூகமனமானது பொதுவெளியில் இயங்குகிற பெண்களை வேறு கண்களால் பார்க்கிறது. நீங்கள் எழுத வந்த காலகட்டமாகிய அறுபதுகளில் நிலைமை இன்னமும் மோசமாக இருந்திருக்கும். ஒரு பெண்ணாக நீங்கள் அனுபவித்த சிக்கல்கள் எதிர்கொண்ட விமர்சனங்கள் பற்றிச் சொல்லமுடியுமா?


அந்த அனுபவங்களைக் குறித்துப் பெரிதாக நான் பேசுவதில்லை. காரணம், அவை கசப்பான அனுபவங்களாக இருந்தமைதான். ‘சிறகுகள் முறியும்’ 1976இல் வெளிவந்த பத்து ஆண்டுகளில் ஒரேயொரு விமர்சனக் கட்டுரை வந்திருந்தது…அதுவொரு ஆண் எழுத்தாளரால் எழுதப்பட்டது…. பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. “சில கதைகளைப் படிக்கிறபொழுது நாம் இந்தக் கதைகளை எழுதியிருக்கக்கூடாதா என்று தோன்றும்; சில கதைகளைப் படிக்கிறபொழுது நல்லவேளை நாம் இந்தக் கதைகளை எழுதவில்லை என்று தோன்றும். அம்பையின் கதைகளைப் படிக்கிறபொழுது நல்லவேளை நாம் இந்தக் கதைகளை எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது” என்று எழுதியிருந்தார். இந்த விமர்சனக் கட்டுரையை ‘சதங்கை’பத்திரிகை முதற்பக்கத்தில் பிரிசுரித்திருந்தது. யாருமே முதற்பக்கத்தில் புத்தக விமர்சனக் கட்டுரையைப் பிரசுரிக்கிற வழக்கமில்லை.

‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’வெளிவந்தபிற்பாடு, தான் அதற்கொரு விமர்சனம் எழுதவிருப்பதாக மங்கை சொன்னபோது “சிறகுகள் முறியும்“க்கே இன்னும் யாரும் விமர்சனம் எழுதவில்லை”என்று வேடிக்கையாகச் சொன்னேன். அதை நான் ஒருவகையான பெண்வெறுப்பாகத்தான் பார்க்கிறேன். பெண்ணானவள் இன்னின்னவற்றைப் பற்றித்தான் எழுதலாம் என்று இவர்கள் ஒரு வரையறை வைத்திருந்தார்கள். ஆனால், அந்த வரையறையை முறியடித்த பல பெண்கள் முன்னாடியும் இருந்தார்கள். கௌரி அம்மாளால் எழுதப்பட்ட ‘கடிவாளம்’என்ற நாவலை எடுத்துக்கொண்டீர்களானால், அதில் தாயில்லாத ஒரு குடும்பம் உறவுமுறையில் எப்படிச் சிதிலமடைந்துபோகிறது என்பதை எழுதியிருப்பார். தாயில்லாத காரணத்தால் அந்தக் குடும்பம் எப்படிச் சிதிலமடைந்தது என்று வெளிப்படையாகக் குறிப்பிடாமல் அவ்வளவு நுணுக்கமாக எழுதப்பட்ட நாவல் அது. சரஸ்வதி அம்மாள் ‘கன்றின் குரல்’என்றொரு நாவல் எழுதியிருந்தார். அதில் ஒரு சின்னப் பையன், மணமான ஒரு பெண்ணை அட்மைர் பண்ணியிருப்பான்…. ஆனா அவன் என்ன நினைச்சுப்பான்னா தான் அவளைக் காதலிக்கிறதா நினைச்சுப்பான். மனோதத்துவ நோக்கோடு அந்த நாவல் எழுதப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் பெண்களெல்லாம் ‘குடும்பப் பெண்கள்’என்ற நிலையில் குடும்பத்தை நடத்திக்கொண்டே இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டிருந்தார்கள்.. எழுதினார்கள்… இலக்கியப் பத்திரிகைகள்; நடத்தினார்கள். ஆனால், நான் அந்த வரையறைக்குள் வரவில்லை. அந்தச் சட்டகத்தினுள் என்னை நுழைக்க முடியவில்லை.

நான் அப்போது படித்துக்கொண்டிருந்தேன்… எனக்குத் திருமணமாகியிருக்கவில்லை… தனியாக இருந்தேன்… ஆகவே, எனது எழுத்தை அவர்கள் வேறு கண்ணோட்டத்தோடு பார்த்தார்கள். நான் சென்னையில் தங்கியிருந்து முறையாகத் தமிழ் பயிலாமல், பெங்களுரில் தங்கி தமிழை இரண்டாம் மொழியாகப் படித்துக்கொண்டிருந்தேன். மேலும், எனக்கு கன்னடம், ஹிந்தி போன்ற வேறு சில மொழிகளிலும் வாசிப்புப் பரிச்சயம் இருந்தது. வீட்டில் இசை பயின்ற காரணத்தால் - தியாகராஜ கீர்த்தனைகள் தெலுங்கில்தான் இருக்கும் - தெலுங்கிலும் பரிச்சயம் இருந்தது. நான் ஒரு மொழியில் எழுதினாலும் பல மொழிகளது செல்வாக்கும் உணர்வும் அதில் கலந்திருந்தது. ஒரு குறிப்பிட்ட மொழியின் இலக்கியச் சரித்திரத்தைத் தொடர்ந்து படித்து அதைத் தொடர்ந்து எழுதவில்லை. ஆக, பெண்-ஆண் உறவுச் சிக்கல்கள் பற்றி அதற்கு முன்னால் வேறு பலரும் எழுதியிருந்தாலும், மேற்குறித்த காரணங்களால் எனது மொழிநடை அவர்களிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது. அந்த வயதில் நான் அதைப் பெண்ணிய மொழி என்றெல்லாம் நினைக்கக்கூட இல்லை. எனக்கு அந்தச் சட்டகங்கள், வரையறைகள் தெரிந்திருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். 

 பெங்களுரிலிருந்து வந்து சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் வரலாறு முதுகலை படித்துமுடித்தேன். பொதுவாக முதுகலையில் நல்ல புள்ளிகள் பெற்றவர்கள் கல்லூரிப் பேராசிரியராகப் போவார்கள். அல்லது ஐ.ஏ.எஸ். ஆவதற்கான படிப்புப் படிப்பார்கள். எங்கள் வீட்டிலும் அப்படித்தான் விரும்பினார்கள். ஆனால், நான் காந்தியவாதியாக இருந்தேன்… ஏதாவது ஒரு சின்ன ஊருக்குப் போய் அங்கே ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேண்டும் என்று எனக்கொரு இலட்சியம் இருந்தது. என்னுடைய முதுகலைப் பரீட்சை முடிவு வெளியாவதற்கு முன்பாகவே ஒரு சின்ன ஊரில் ஆசிரியப்பணியில் அமர்ந்துவிட்டேன். அங்கே எட்டு மாதங்கள்தான் பணியில் இருக்கமுடிந்தது. என்னுடைய கருத்துக்கள் எல்லாம் மிகவும் புரட்சிகரமாக இருப்பதாகவும் அந்தக் கருத்துக்களை நான் மாணவர்களிடத்தில் போதித்து அவர்களுடைய எதிர்காலத்தைப் பாழ்பண்ணிவிடுவேன் என்றும் பள்ளிநிர்வாகம் கருதியது. மேலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிக்கூடத்தில் பூசை நடக்கும். அதில் கலந்துகொள்ள விரும்பாமல் நான் காரணங்கள் சொல்லி மறுத்துவந்தேன். அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்தியது ஒரு செட்டியாரம்மா. அவருடைய மகள் திருமணமான பத்து நாட்களிலேயே குருவாயூர் கோவிலுக்குப் போனபோது குளத்தில் விழுந்து இறந்திட்டாங்க. அந்தம்மா என்ன நினைத்தாரென்றால் தன்னுடைய மகள் ஒரு தேவதையாகப் போய்விட்டதாக நினைச்சாங்க. தன்னுடைய மகள் மாதிரியே ஒரு சிலை செய்து அதற்கு நகையெல்லாம் போட்டு கண்ணாடிப் பெட்டியொன்றுக்குள் வைத்து, அதற்கு வெள்ளிக்கிழமைதோறும் பூசை நடத்திவந்தார். மாணவர்கள் கேள்விகளே கேட்கக்கூடாது என்று பள்ளி நிர்வாகம் எதிர்பார்த்தது. நான் என்னுடைய மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டுமென விரும்பினேன்.

ஒருநாள் எனது மாணவிகளில் ஒருத்தி எழுந்து, “டீச்சர் உங்களுக்கு தேவதைகளில் எல்லாம் நம்பிக்கை இருக்கா?”என்று கேட்டாள். “தேவதைகளும் கிடையாது… பூதங்களும் கிடையாது”என்று நான் பதிலளித்தேன். மாணவர்களுடைய மனங்களில் அந்தப் பதில் பதிந்துவிட்டது. அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை எனது மாணவர்கள் பூசைக்குப் போகவில்லை. நான் வழக்கத்திலேயே போவதில்லை. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் பிள்ளைகளைத் தவறாக வழிநடத்துவதாக என்னைக் குறைப்படத் தொடங்கினார்கள். அதைவிட, பள்ளிக்கூடம் விடுமுறை விட்டால் நாங்கள் எங்கே போகிறோம் என்று வீட்டு முகவரியெல்லாம் எழுதிக்கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும். விடுமுறை விட்டால் வீட்டிற்கல்லாமல் நாங்கள் எங்கே போகமுடியும்? அவ்வளவு தூரம் ஆசிரியர்களின் நடத்தை பற்றியெல்லாம்கூடச் சந்தேகப்பட்டார்கள். ஒருதடவை, என்னுடன் பணியாற்றிக்கொண்டிருந்த இன்னொரு ஆசிரியரை விடுமுறைக்கு பெங்களுரிலுள்ள எனது வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டேன். நாங்கள் திரும்பிவந்ததும் ‘எங்களுடைய அனுமதியில்லாமல் அவரை எப்படி நீங்கள் உங்கள் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போகமுடியும்?’என்று கேள்வி எழுப்பினார்கள். “என்னுடைய வீட்டிற்கு நான் அவரைக் கூட்டிக்கொண்டு போவதற்கு யாரிடம் அனுமதி கேட்கவேண்டும்? இது ஜனநாயகமல்ல! இப்படியெல்லாம் கேள்வி கேட்க முடியாது”என்று நான் பதிலளித்தேன். அந்தப் பள்ளிக்கூட ஆசிரியர்களுள்ளேயே நான்தான் வயதிற் குறைந்தவளாக - இருபத்தொரு வயது என்று எண்ணுகிறேன் - இருந்தேன். இப்படியாகக் கேள்வி மேல் கேள்விகள் எழுப்பிய காரணத்தினாலேயே அந்தப் பள்ளியிலிருந்து என்னைத் துரத்திவிட்டார்கள் (சிரிக்கிறார்).


இடைப்பட்ட காலத்தில் - அதாவது நான் பி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலத்தில் கலைமகள் நடத்திய நாவல் போட்டியிற் பங்கேற்றேன். ‘அந்திமாலை’என்ற அந்த நாவலுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. உடல் சம்பந்தப்படாத காதல், அதாவது “பிளாட்டோனிக் லவ்“ பற்றிய நாவல் அது. ஒரு நடுத்தரக் குடும்பத்திலே இருக்கக்கூடிய பெண்ணுக்கு காதலைப் பற்றியோ உடம்பைப் பற்றியோ என்ன தெரிந்திருக்கமுடியும்? உடலே இல்லாத ஒரு வெளியில்தானே மிதந்துகொண்டிருப்போம்? வீட்டில் உடலைப் பற்றி, வயதுக்கு வருவதற்கு முன்னால் வயதுக்கு வருவது என்றால் என்னவென்பது பற்றி, மாதவிடாய் பற்றிப் பேசவே மாட்டார்கள். அதனால், அந்த வயதில் நான் ஒரு காதல் நாவல் எழுதினால் அப்படித்தானே இருக்கும்? உடல் இல்லாத காதல்தான் உயர்ந்த காதல் என்று அப்போது மனதில் ஒரு எண்ணம்… அதில் வரும் கதாநாயகி “அழியப் போகும் எனது உடலை விட அழியாத என் ஆன்மாவை உனக்குத் தருகிறேன்”என்றெல்லாம் வசனம் பேசுவாள். அதற்குப் பரிசு வேறு கிடைத்துவிட்டது (சிரிக்கிறார்). நான் எம்.ஏ. முடித்துவிட்டு அந்த ஊரில் ஆசிரியராக இருந்தபோது இந்த நாவல் கலைமகளில் தொடராக வருகிறது. அதை வாசித்தபோது வேறு யாராலோ எழுதப்பட்டது போல உணர்ந்தேன். அதோடு என்னைத் தொடர்புபடுத்திக்கொள்ளவே முடியவில்லை.

பள்ளிக்கூட வேலையை விட்டு பெங்களுருக்குப் போகாமல் நேரே சென்னைக்கு வந்தேன். காரணம்,“நான் முன்னமே சொன்னேனல்லவா இது நடக்காதென்று?”என்று எனது தந்தையார் சொல்வாரென்று பயம். சென்னையில் ஒரு கல்லூரியில் ஆங்கிலம் கற்பிக்கும் பணியில் சேர்ந்தேன். தூரத்து உறவினர் வீட்டில் ஒரு அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தேன். அப்போது எழுதப்பட்டதுதான் ‘சிறகுகள் முறியும்’. அதை எழுதிவிட்டு கலைமகள், கல்கி, ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். எல்லோரும் அதைத் திருப்பியனுப்பினார்கள். 1967 ஆரம்பத்தில் அது எழுதப்பட்டது… 1967 அக்டோபர் வரை பிரசுரமாகாமல் இருந்த அந்தக் கதையை, பி.எச்.டி. பண்ணுவதற்காக நான் டெல்லிக்குப் போனபோது என்னோடு எடுத்துப்போனேன். கணையாழி ஆசிரியருக்கு அதை அனுப்பி, “இதில் ஏதாவது தவறு இருக்கிறதா?”என்று கேட்டேன். அவர் என்னை வந்து பார்த்தார்… “இது நல்ல கணையாழிக் கதைதான். அதை நீங்கள் அனுப்பிவைத்த பத்திரிகைகள்தான் சரியில்லை… உங்கள் மொழிநடை மாறியிருக்கிறதே உங்களுக்குத் தெரியவில்லையா?”என்று கேட்டார். “எனக்குத் தெரியவில்லை”என்று சொன்னேன். நான் என்ன நினைக்கிறேனென்றால், மொழி என்பது நம்முடைய வாழ்க்கையையொட்டி, நமது உடல் எந்தெந்தத் தளங்களில் இயங்குகிறதோ அந்த அனுபவத்தையொட்டி மொழி அமைந்துவிடுகிறது. அது இயற்கையாக நிகழ்ந்த காரணத்தால் எனது மொழி மாறியது எனக்குத் தெரியவில்லை. பிறகு நான் கணையாழியில் நிறையக் கதைகள் எழுதினேன். ஆனாலும், எந்தக் கதைக்கும் பெரிய வரவேற்பு இருந்ததாக நினைவில்லை. வெங்கட் சாமிநாதன், இந்திரா பார்த்தசாரதி போன்றோர்தான் தொடர்ந்து எழுதும்படியாக ஊக்குவித்துக்கொண்டிருந்தார்கள்
.

ஒரு கதை எழுதுகிறபோது ‘இது வெளியாகுமா?’என்று நினைக்கவே மாட்டேன். ஆகவே, இதையெல்லாம் எழுதலாமா கூடாதா என்ற மனத்தடைகள் எனக்கு இருக்கவில்லை. ஆனால் எனக்கு எழுதணும்; அதனால் எழுதினேன். டெல்லியில் இருந்தபடி எழுதிய காரணத்தால் இங்கு (சென்னையில்) தொடர்ந்து எதிர்ப்பு இருந்தது எனக்குத் தெரியவில்லை. நான் சென்னைக்கு இரண்டொருமுறை வந்து, எனது வாழ்க்கையைப் பற்றிச் சில நயமில்லாத கேள்விகளை எதிர்கொண்டபோது, சில எழுத்தாளர்கள் நடந்துகொண்ட முறைகளைப் பார்த்தபோதுதான் இங்கு ஒருவித பெண்வெறுப்பு இருப்பதை நான் அறிந்துகொண்டேன். தற்காலத் தமிழிலக்கியச் சரித்திரம் எழுதும்போது அதில் ஒரு பெண்ணுடைய பெயர்கூட இருக்காது. எனது நண்பர்களுள் ஒருவரேகூட அப்படித் தவிர்த்திருந்தார். அப்போது அவரிடம் நான் “இங்கு எத்தனையோ பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்களே… நாற்பதுகளிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்குப் பிடித்ததோ பிடிக்கவில்லையோ ராஜம் கிருஷ்ணன், சூடாமணி… அதற்கு முன்னாலும் குமுதினி, குகப்பிரியை, கௌரி அம்மாள், சரஸ்வதி அம்மாள், சாவித்திரி அம்மாள் இப்படி எத்தனையோ பேர் இருக்கிறார்கள். மொழிபெயர்ப்புக்கூடச் செய்திருக்கிறார்கள்.. அவர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லையே…”என்று கேட்டால், “இது இலக்கியச் சரித்திரம்; இது பெண்களைப் பற்றிய சரித்திரம் இல்லை”என்று பதிலளித்தார். நாங்கள் ஏதோ விளிம்பில் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறதுபோலவும் சரித்திரத்தில் எங்களுக்குப் பங்கில்லைப் போலவும் அந்தப் பதில் அமைந்திருந்தது.

அதேசமயம், தமிழ் எழுத்தாளர்களுக்குள்ளேயே வண்ணதாசன், வண்ணநிலவன், க்ரியா ராமகிருஷ்ணன், சுந்தரராமசாமி என்று மிகவும் நல்ல நண்பர்கள் இருந்தார்கள். திருநெல்வேலி எல்லாம் போய் வண்ணதாசன் வீட்டில் இருந்திருக்கிறேன். சென்னையில் வண்ணநிலவனும் நானும் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். ஆனால், இப்போது பேட்டி ஒன்று கொடுத்து இலக்கிய நண்பர்கள் என்று சொல்லும்போது வண்ணநிலவன் என் பெயரைச் சொல்லமாட்டார். அது எனக்குப் பரவாயில்லை… எங்களுடையது நல்ல நட்பாக இருந்தது… அவருடைய மனைவிகூட எனக்குப் பழக்கமானவர்தான். அப்படி நல்ல நண்பர்களும் இருந்தார்கள். ஆனாலும், பொதுவாக ஒரு பெண்ணோடு என்ன இலக்கியம் பேசுவது என்றவொரு அலட்சியம் அப்போது இருந்தது; இப்போதும் இருக்கிறது என்று சொல்லலாம். ஒரு இலக்கியக் கூட்டத்திற்குப் போனால் -இதை நான் காலச்சுவடு பேட்டியில்கூடச் சொல்லியிருக்கிறேன் - “இந்தப் புடவை நல்லா இருக்கு”என்பார்கள். வீட்டில சமைச்சுட்டு வந்திட்டீங்களா…. உடல் நலமா இருக்கீங்களா?” இப்படியெல்லாம் கேட்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் நான் கூட்டங்களுக்குப் போகிறபொழுது, “அம்பைக்கு இப்போது வயதாகிவிட்டதுபோல தெரிகிறது” என்பார்கள். அப்படிச் சொல்பவர்களுக்கும் என்னுடைய வயதுதான் இருக்கும். நானும் விடுவதில்லை… நானும் கேட்பேன்… “இந்த வேட்டியெல்லாம் எங்க வாங்கிறீங்க? இதே மாதிரி ஒரு வேட்டி என் கணவருக்கு வாங்கணும்”. “நீங்க தலைக்குத் தேங்காய் எண்ணெய் போடுறீங்களா? பிறில் கிறீம் போடுறீங்களா?”இப்படியெல்லாம் கேட்பேன். அப்படி நான் கேட்பது அவர்களுக்கு உவப்பாக இருப்பதில்லை.

இப்படி ஒருவித பெண்வெறுப்பு இருந்துகொண்டேயிருக்கிறது.

ஆம், சமூகவலைத்தளங்களில் அந்தப் பெண்வெறுப்பை கூடுதலாக அவதானிக்க முடிகிறது. எழுதுகிற பெண்கள்மேல் சற்று அதிகமாகவே அந்த வெறுப்பைக் காண்பிக்கிறார்கள்.  பெண்ணியவாதி என்ற சொல்லே ஒரு வசைச்சொல்லாக, கெட்டவார்த்தையாகப் பிரயோகிக்கப்படுகிறது.

எழுதுகிற பெண்கள்மீது மட்டுமில்லை; பெண்கலைஞர்கள் எல்லோர்மீதும் அந்த வெறுப்பு இருக்கிறது. ஆங்கிலத்தில் ‘பெமினிஸ்ற்’என்ற வார்த்தையே ஒருகாலத்தில் கெட்டவார்த்தையாகத்தான் உபயோகத்தில் இருந்தது. பெண்ணியவாதி என்பவள் யாரோடு வேண்டுமானாலும் படுத்துக்கொள்வாள் என்றொரு அபிப்பிராயம் இருந்தது; இப்போதும் இருக்கிறது. படித்த, சுதந்திரமாகச் சிந்திக்கக்கூடிய செயற்படக்கூடிய பெண்ணினுடைய முதல் வேலை ஒழுக்க வரையறையை மீறுவதுதான் என்று அவர்கள் நினைத்தார்கள். இதற்காகத்தான் பெண்கள் காத்திருப்பதாக நினைத்தார்கள். கற்பு என்பது எப்படி அவர்களைப் பொறுத்தளவில் உடலை ஒட்டியதாக இருக்கிறதோ அவ்விதமே விடுதலை என்பதும் உடலை ஒட்டியதாகத்தான் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். பொது இடங்களில் பல தளங்களில் நாம் இயங்க விரும்புகிறோம். அதை அவர்கள் ஒரே அர்த்தத்தில்தான் பார்க்கிறார்கள். நாம் வேகமாக இயங்குவதற்கு ஏற்புடையதாக நமது உடைகள் மாறலாம்; தலைமுடியை வெட்டிக்கொள்ளலாம்… அதையெல்லாம் அவர்கள் உடல்ரீதியான மாற்றங்களாக, வெறும் தோற்றமாற்றங்களாக நினைக்கிறார்களேயல்லாது, உள்ளார்ந்த மாற்றமாக நினைப்பதில்லை.

ஐம்பது ஆண்டுகாலத்திற்கு மேலாக நீங்கள் தமிழிலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள். அதன் வளர்ச்சிப்போக்கு சீராக இருக்கிறதா? அல்லது தேக்கம் கண்டிருக்கிறதா? அப்படி ஆரோக்கியமான வளர்ச்சிப்போக்கு இல்லையெனில், அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?

தேக்கம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. என்னைப் பொறுத்தளவில் அது வளர்ச்சிப்போக்கில் சென்றுகொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். புதிய பல எழுத்தாளர்கள் வந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எந்தவொரு எழுத்தையும் இப்படித்தான் எழுதவேண்டும்… அப்படித்தான் எழுதவேண்டும் என்று சொல்லாமல் எல்லாவகையான எழுத்தையும் -கொச்சையாக எழுதுவதைத் தவிர – மற்றெல்லா வகை எழுத்தையும் நான் வரவேற்கிறேன். கடைசியில் எது நிலைக்கும் என்பதைக் காலந்தான் தீர்மானிக்கும். தொடர்ச்சியாக எழுதப்பட்டுக்கொண்டிருப்பதே ஆரோக்கியமான வளர்ச்சிதான். அத்தனை பெண்வெறுப்பு இருந்த என்னுடைய காலகட்டத்திலும்கூட எங்களுக்குள் உரையாடல் இருந்துகொண்டுதானிருந்தது. சுந்தர ராமசாமியோடு, வெங்கட் சாமிநாதனோடு இப்படி எல்லோருடனும் இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டுதானிருந்தோம். சில புத்தகங்களைப் படித்துவிட்டு விவாதித்திருக்கிறோம். சிலபேர் குழுவாக இணைந்து ‘பிரக்ஞை’பத்திரிகை நடத்தியபோது நான் அந்தக் குழுவில் இருந்தேன். அதை நடத்தியவர்கள் எல்லோரும் எனது நண்பர்கள். அதனால், பல புது எழுத்துக்கள் வரும்போது அவற்றைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதுதான் ஆத்மாநாம் நிறையக் கவிதைகள் எழுதினார். பிரக்ஞையிலும் எழுதினார். பெண்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தாலும், என்னளவில் அதுவொரு பொற்காலமாக, இயங்கக்கூடிய காலமாக இருந்தது. பிரக்ஞையில் இருந்த மற்றெல்லோரும் ஆண்கள் எனினும் அவர்களோடு அமர்ந்து பேசி விவாதிக்கக்கூடிய ஆரோக்கியமான சூழலும் இருந்தது. அந்தச் சமயத்தில்தான் ராமகிருஷ்ணன் க்ரியாவை ஆரம்பித்து, வித்தியாசமான புத்தகங்களை வெளியிடும் முயற்சியில் ஈடுபடுகிறார். எல்லோரும் வியாபாரப்போக்கில் போகிறபோது, இவர் மட்டும் வித்தியாசமான புத்தகங்களைப் போடப்போகிறேன் என்று சொன்னதானது எல்லோருக்கும் அதிர்ச்சி. புத்தகங்கள் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, சி.சு.செல்லப்பா புத்தகங்களைச் சுமந்துகொண்டுபோய் விற்றுவிட்டு வந்திருக்கிறார். ராமகிருஷ்ணனால் வெளியிடப்பட்ட புத்தகங்களை எழுதிய ந.முத்துசாமி போன்றோர் வித்தியாசமான எழுத்துவகைமையைக் கொண்டவர்களாக இருந்தார்கள். அந்தவகையில் 1987இல், எனது, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’யை க்ரியா வெளியிட்டபோது அது எனக்கு ஒரு பெரிய கௌரவமாகத்தான் நினைத்தேன். அந்தத் தொகுப்பிலுள்ள கதைகளுள் ‘வுமன் புரொட்டகனிஸ்ட்’ என்று சொல்வார்களே அந்த மாதிரியான கதைகள் இரண்டோ மூன்றோ இருந்தன. இயல்பாக அப்படி அமைந்ததே அன்றி நான் அதைத் தெரிந்து செய்வதில்லை. அந்தச் சாயலில் அமைந்த ஒரு பெண் இருந்தாள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் புத்தகத்தின் பின்னட்டையில், “திருநெல்வேலியில் இருக்கும் பெண்களைக் குறித்த சில கதைகள் இருக்கின்றன. அவற்றோடு சில சோதனைக் கதைகளும் உண்டு”என்று க்ரியா ராமகிருஷ்ணன் எழுதினார். ராமகிருஷ்ணன் நல்ல நண்பர்… அதனால் அவரோடு நன்றாகச் சண்டை போடலாம். ஆகவே, “கதைகளில் சோதனை பண்ணுகிற வழக்கமெல்லாம் எனக்கு இல்லை. நீங்கள் எப்படி சோதனைக் கதைகள் என்று எழுதலாம்?”என்று கேட்டு அவருக்குக் கடிதம் எழுதினேன். “இதே கதைகளை ஒரு ஆண் எழுதியிருந்தால் அப்போதும் நான் இதேமாதிரித்தான் பின்னட்டையில் எழுதியிருப்பேன்”என்றார். நான் ஒத்துக்கொள்ளவில்லை. “இதேபோலத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் முத்துசாமியின் நீர்மை கொண்டுவந்தீர்கள். அதில் அத்தனை கதைகளுமே ஆண்களைப் பற்றிய கதைகள்தாம். ஆனால், நீங்கள் என்ன எழுதினீர்கள்…? இந்தக் கதைகள் வாழ்க்கையைப் பற்றிய கதைகள் என்று எழுதினீர்கள். ஆக, பெண்கள் எதைப் பற்றி எழுதினாலும் பெண்களைப் பற்றியது என்ற ஒரு குறுகல் வட்டத்தினுள் அவை இருக்கின்றன என்று நீங்கள் சொல்வது போலிருக்கிறது.”என்றேன். பெரிய சண்டை! அவர் கடைசியில் சொன்னார்… “இரண்டாவது பதிப்பில் நீயே பின்னட்டையில் எழுது… நான் எழுதலை”என்று. அப்படித்தான் செய்தேன். இரண்டாவது பதிப்பைப் பார்த்தால் தெரியும் பின்னட்டையில் நான்தான் எழுதியிருக்கிறேன். அதெப்படி அப்படிப் பிரித்து எழுதலாம்? பெண்களும் வாழ்க்கைக்குள்தானே இருக்கிறார்கள்…? அவர்களால் வாழ்க்கையைப் பற்றி எழுதமுடியாதா? அப்படி அது பெண்வெறுப்பு என்று இல்லாமற்கூட இருக்கலாம். ஆனால், ஏதோவொரு வித்தியாசம் அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள் இருக்கிறது. ரொம்ப நல்ல எழுத்தாளர்கள், ரொம்ப நல்ல நண்பர்களது வாயிலிருந்துகூட அப்படியான பேச்சு எப்படியோ வந்துவிடுகிறது.

அதற்கு என்ன காரணமாக இருக்கும்?


அப்படித்தான் அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். அதனால், அவர்களை அறியாமலே அது வந்துவிடுகிறது. வேண்டுமென்றோ நம்மை அவமானப்படுத்துவதற்காகவோ அவர்கள் அதைச் செய்வதில்லை. அதைச் சுட்டிக்காட்டுகிறபோது அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். நான் எழுதுகிறபோது ஆண்-பெண் உறவு என்று எழுதாமல் பெண்-ஆண் உறவு என்று எழுதுவேன். பெண்களை எப்போதும் ‘பரன்தீஸிஸ்’ ஆக வைத்து நான் எழுதமாட்டேன். ஆனால் அதை மொழிபெயர்ப்பவர் ஒரு பெண்ணாகவே இருந்தாலும் அதை ஆண்-பெண் என்று மாற்றிவிடுவார். அதற்குக் காரணம் அந்த மொழி நமக்குள் ஊறிப்போயிருப்பதுதான். அந்த மொழியில் முங்கித்தானே நாம் வெளியில் வரவேண்டியிருக்கிறது. நம்மையே சுயவிமர்சனம் பண்ணிப் பார்க்கிறபோது எத்தனையெத்தனை விசயங்களை நாம் முறிக்கவேண்டியிருக்கிறது, மூச்சுவிட்டு வெளியேறத் திணறவேண்டியிருக்கிறது. இப்படியெல்லாம் விசயங்கள் இருந்தாலும், இலக்கியம் தேக்கநிலையில் இருப்பதாக நினைக்கவில்லை. எழுத்தாளர்கள் தேக்கப்பட்டுப் போயிருக்கலாம். ஆனால், நான் படிக்கிற இலக்கியங்கள் தேக்கப்பட்டுப் போயிருப்பதாக நினைக்கவில்லை. சிலசமயம், நமக்குப் பிடிக்காத நபர்கள்கூட நல்ல கதைகளை எழுதுகிறபோது அதை மனத்தடையில்லாமல் வாசிக்கமுடிகிறது. நான் கதைகளை அப்படித்தான் பார்க்கிறேன். அவர்களுடைய தனிப்பட்ட நிலைப்பாடுகள் நமக்கு உவப்பில்லாதபோதும், அந்தக் கதைகளை நான் கதைகளாக மட்டுமே பார்த்துப் படிக்கிறேன். ஆனால், அந்தக் கதைக்குள் தொக்கியிருக்கக்கூடிய மறைமுகமான அரசியல் நமக்கு நன்றாகத் தெரிகிறது. என்றாலும் தொடர்ந்து நல்ல இலக்கியம் வந்துகொண்டுதானிருக்கிறது. எழுதுவதைத் தவிர, எல்லோரையும் படிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கிறது. எந்தப் புத்தகம் வெளிவந்தாலும் அதை உடனேயே வாங்கிப் படித்துவிடுகிறேன். எனக்கு எழுத்து எந்தவகையில் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசை.

வலிந்து எழுதாமல், தவிர்க்க முடியாத இடங்களில்கூட பெண்களால் காமத்தைக் குறித்து மனத்தடை இல்லாமல் எழுதமுடிவதில்லை. வாசக முகம், சமூகத்தின் கண்ணோட்டம் பற்றிய பிரக்ஞை நினைவில் வந்து தடுத்துவிடுகிறது. அந்த இடத்தை நீங்கள் எப்படி மேவி வந்தீர்கள்?

நான் எழுதும்போது பெண்ணுடைய இச்சையைப் பற்றி எழுதுவது ஒரு தவறென்று நினைக்கவேயில்லை. பெண்கள் சாதாரணமாகப் பேசும்போது அதைப் பற்றி நிறையப் பேசுவதைக் கேட்டபோது அது பேசப்படாத ஒன்றல்ல என்பதைத் தெரிந்துகொண்டேன். ஒரு கதையை எழுத அமர்கிறபோது, ‘நான் பெண் இச்சையைப் பற்றிப் பேசப்போகிறேன்’என்று முன்தீர்மானம் செய்துகொண்டு அமர்வதில்லை. அதனால் அதை நான் மீறுவதாகவே நினைக்கவில்லை. ஆனால், ‘நான் காமத்தைக் கொண்டாடும் ஒரு கவிதையை எழுதப்போகிறேன்’என்று சொல்லிவிட்டு எழுதும்போதுதான் பல தடைகள் ஏற்படுகிறது என்று எண்ணுகிறேன். எழுத்து தன்னிச்சையான ஒரு செயலாக இருந்தால், நமக்கு எந்தத் தடையும் இருக்காது. ஒரு கதையில் ஒரு பெண்ணினுடைய இச்சையைப் பற்றி எழுதித்தானாக வேண்டும் என்றால் எழுதித்தானாக வேண்டும். குட்டி ரேவதி எழுதிய ‘முலைகள்’ மாதிரி ஒரு கவிதையை எழுதுகிறபோது தன்னிச்சையாக அருவிமாதிரி வருகிறது. தவிர, மனைவி-கணவன் உடலுறவின்போதுகூட அதில் அந்தப் பெண்ணுடைய வாழ்க்கை அரசியல் எவ்வளவு பொதிந்திருக்கிறது என்று சல்மா மாதிரி எழுதுகிறபோது, ஒரு பெண்ணினுடைய வாழ்க்கை பற்றி எழுதுவதாக நினைக்கிறார்களே தவிர, இதுபோல வேறு யாரும் எழுதவில்லை நான் எழுதுகிறேன் என்று தன்னை அடையாளப்படுத்த நினைப்பதில்லை.

உங்களுக்கு முன்னோடியாக இருந்த எழுத்தாளர்களைப் பற்றி குறிப்பாக பெண் எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்…


ராஜம் கிருஷ்ணன், சூடாமணி இவர்களெல்லாம் எனக்கு முன்னோடிகளே! ஆனாலும், நான் எழுத ஆரம்பித்த காலத்தில் அதிகம் படித்தது தி.ஜானகிராமன், லா.ச.ரா. போன்றவர்களைத்தான். அப்போது கலைமகள் பழைய எழுத்தாளர்களாகிய சரஸ்வதி அம்மாள், சாவித்திரி அம்மாள், குகப்ரியை, குமுதினி ஆகியோரது எழுத்துக்களை வெளியிட்டு வந்தது. குகப்ரியை நடத்திய ‘மங்கை’போன்ற பத்திரிகைகளெல்லாம் எங்கள் வீட்டில் எடுப்பது கிடையாது. கலைமகள், ஆனந்த விகடன் எடுப்பார்கள். நான் சுதந்திரத்துக்குப் பிறகு வந்த தலைமுறையைச் சேர்ந்தவள். அதனால் என்னுடைய எண்ணங்கள் சில முன்னையவற்றிலிருந்து மாறுபட்டிருந்தன. பெண்களுள் ராஜம் கிருஷ்ணனும் சூடாமணியும் லஷ்மியும் பிரபலமாக இருந்தார்கள். லஷ்மி டாக்டராக இருந்தவர். அவரது எழுத்தில் விமர்சனங்கள் இருந்ததுதான். எனினும், வேலை பார்க்கிற, படிக்கிற பெண்கள் அவர்களது குழப்பங்கள் பற்றி எழுதியவர் என்றவகையில் அவர் பிரபலமாக இருந்தார். எனினும், நான் எழுதவந்த அறுபதுகளில் எழுதிக்கொண்டிருந்தவர்களுள் மிகவும் புரட்சிகரமான எழுத்தாளர் என்று அறியப்பட்டிருந்தவர் ஜெயகாந்தன்தான்.

நாற்பதுகளும் ஐம்பதுகளும் மொழிபெயர்ப்புக் காலம். ரஷ்ய நாவல்கள், பெங்காலி, மராட்டி, குஜராத்திக் கதைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தன. த. நா. சேனாதிபதி, த. நா. குமாரசாமி ஆகிய இரண்டு சகோதரர்களும் அந்த மொழிபெயர்ப்புகளுள் பெருவாரியானவற்றைச் செய்தார்கள். பெங்காலி இலக்கியத்தைப் படித்துப் படித்து மனதுள் புரட்சிகரமான பெங்காலி இளைஞன் ஒருவன் இருந்தான். தாகூர், விவேகானந்தர், ராமகிருஷ்ணர் இவர்களெல்லாம் கலந்த ஒரு இளைஞன்… திருமணம் செய்தால் இப்படியொருவனைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற நினைப்பெல்லாம் இருந்தது. அப்புறம் பார்த்தால் அவனும் அப்படியொன்றும் வித்தியாசப்பட்டவன் இல்லையென்று தெரிந்துபோயிற்று (பெரிதாகச் சிரிக்கிறார்). அப்படியொரு கற்பனைக்குத் தூண்டுதலாக இருந்தவை தமிழில் படித்த இந்த பெங்காலி மொழிபெயர்ப்புக் கதைகள்தாம்.

அப்போது ஜெயகாந்தன்தான் புரட்சிகரமான எழுத்தாளர் என்று அறியப்பட்டிருந்தார். அவரது அக்னிப் பிரவேசம் கதையைப் படித்திருப்பீர்கள். அந்தக் கதையில் "கெட்டுப்போய்" (இவர்களது வார்த்தைகளின்படி) வீடு வந்த பெண்ணின் தலையில் தண்ணீரை ஊற்றிய தாயார் சொல்வார், ‘இதுதான் உன்னைச் சுத்தப்படுத்தற கங்கை’என்று. அதைப் படித்த எல்லோரும் வியந்துபோய்ச் சொன்னார்கள்… ‘யாரால் இப்படிப் புரட்சிகரமாக எழுதமுடியும்?’என்று. ‘அவள் எந்தவகையில் கெட்டுப்போய்விட்டாள்? அவளது தலையில் கங்கையை ஊற்றிச் சுத்தப்படுத்த வேண்டிய தேவை என்ன இருந்தது?’ என்று அந்தக் கதையைப் படித்தபோது எனக்குத் தோன்றியது. எனக்கு மட்டுமல்ல… என்னோடு உரையாடலில் இருந்த சில தோழிகளுக்கும் அதே எண்ணந்தான். அப்புறம் அந்த கங்கா கங்கையிலேயே செத்துப்போய்விடுவாள். நான் கல்லூரியில் படிக்கிற காலத்தில் பட்டிமன்றம் நடக்கும்… கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?என்று… எப்போது பார்த்தாலும் இதே பட்டிமன்றந்தான். ஒருதடவை கொஞ்சம் வித்தியாசமான தலைப்பில் அதாவது, ‘பெண்களுடன் சேர்ந்து படிப்பதால் ஆண்களுக்கு நன்மையா? தீமையா?’என்றொரு பட்டிமன்றம் நடந்தது. நிறைய ஆண்கள் வந்து பெண்கள் மாதவிகளாக வந்து எங்களை மயக்குகிறார்கள் என்றெல்லாம் பேசினார்கள். நான் பட்டிமன்றத்தில் கலந்துகொள்ளவில்லை எனினும் குறிப்புச் சொல்லும்போது சொன்னேன்… ‘எப்போது பார்த்தாலும் பெண்கள் மாறிவிட்டார்கள் மாறிவிட்டார்கள் என்று பேசிக்கொண்டிருக்கிறீர்களே… ஆண்கள் மாறவில்லையா? முன்பு குடுமி வைத்திருந்தவர்கள் இப்போது கிராப்பு வைத்துக்கொள்ளவில்லையா? முன்பு வேட்டி கட்டியவர்கள் இப்போது பான்ட் போட்டுக்கொள்ளவில்லையா?”என்று கேட்டேன்.

அந்தப் பட்டிமன்றத்திற்குத் தலைமை தாங்கியவர் ஜெயகாந்தன். அவர் பேசும்போது ‘பெண்களை எப்போதும் காமத்தை ஊட்டுபவர்களாகப் பேசுகிறார்கள். அது தவறு. நடைபாதைகளில்கூட மனிதர்கள் படுத்துக்கொள்வதை நாம் பார்க்கிறோம்… அது உங்களுக்குக் காமத்தை ஊட்டவில்லை; பெண்கள் உங்களோடு சேர்ந்து படிப்பதுதான் உங்களுக்குக் காமத்தை ஊட்டுகிறதா?”என்று கேட்டார். பேச்சின் முடிவில், “ஆனால், நீங்கள் ஒரு பொதுமேடையில் பேசுகிறபோது நாகரிகமாக, நயமாகப் பேசவேண்டும்”என்று சொன்னார். ஏனென்றால், அந்த மேடையில் அந்தளவிற்கு நான் கத்திப் பேசியிருந்தேன். 

அவருடைய பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் பேசும் கூட்டங்களுக்கு சமயம் கிடைக்கிறபோதெல்லாம் போவேன். அவர் ஒரு கூட்டத்திலே பேசுகிறபோது, ‘எம்.ஜி.ஆர்.தலையிலே இருக்கிறது டோப்பா’என்றெல்லாம் கத்திப் பேசினார். அவருக்கு நான் ஒரு கடிதம் எழுதிப்போட்டேன். “மேடையில் நாகரிகமாக, நயமாகப் பேசுவது பற்றி நீங்கள் கல்லூரியில் வந்து சொன்னீர்கள். ஆனால், அதேபோல நீங்கள் கத்திப் பேசுகிறீர்களே…! மனோதத்துவரீதியில் நீங்கள் ஒரு ஸ்பிலிட் பர்சனாலிட்டியா?" என்று அதில் கேட்டிருந்தேன். அந்தக் கடிதத்தை அவர் படித்திருக்கமாட்டார் என்று நினைத்தேன். ஆனால், பிறகொரு கூட்டத்தில் பேசும்போது, என்னைக் கூப்பிட்டு,“நீங்கள் மட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவிதானே..? உங்கள் கடிதத்தை நான் படித்தேன். நீங்கள் சொன்னது சரிதான். நாம் பேசும்போது சிலசமயங்களில் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறோம்” என்றார். நிறையப் பேர் தமது தவறை ஒத்துக்கொள்வதில்லை… என்னிடம் அவர் அப்படி ஒத்துக்கொண்டதைக் கேட்டபோது அவர் ஒரு ஜென்டில்மன் என்பதை உணர்ந்தேன். ஆனாலும், அவரது கதையைப் பற்றிய விமர்சனத்தை நான் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை.(சிரிக்கிறார்)

அப்படி அந்தக் காலத்திலே வந்த கதைகளை விவாதிக்கக்கூடிய ஒரு சூழல் இருந்தது. அவருடைய அந்தக் கதைக்கு பெண் எழுத்தாளர்கள் தந்த பதில் என்னை மிகவும் பாதித்தது. கதையில் வந்த அந்தப் பெண் அந்த அனுபவத்தை ஏற்றுக்கொண்ட காரணத்தால் அவலட்சணமாகப் போய்விட்டதுபோலவும் நெருப்பில் எரிந்து சாவதுபோலவும் அகோரமாகப் போய்விட்டதுபோலவும் பெண் எழுத்தாளர்கள் எழுதியிருந்தார்கள். ‘நல்ல விதவிதமான சாப்பாடு சமைத்து புருசனுக்குப் பரிமாறிவிட்டு அந்த மேசையில் வைத்து இவ்வளவு வன்முறை பொதிந்த கதைகளை இவர்களால் எப்படி எழுதமுடிந்தது?’என்று எனக்குக் கோபமாக இருந்தது. பெண்களுக்குள்ளேயே இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. எல்லோரும் சொல்கிறார்கள் பெண்கள் என்றால் தாய்மை, மென்மை, நயம் பொருந்தியவர்கள் என்று… அதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். தாய்மார்களிலேயே எத்தனை கொடுமையான தாய்மார்களை நாம் பார்த்திருக்கிறோம். பெண் என்றால் இப்படித்தான்.. ஆண் என்றால் இப்படித்தான் என்ற நியமங்களையெல்லாம் நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

நீங்கள் இப்படிச் சொல்கிறபோது ஒன்றைக் கேட்கத் தோன்றுகிறது. உங்களைக் குறித்து, “இவர் பெண்மையை மறுத்த பெண்ணியவாதி அல்லர்”, “பெண் தன் சுய ஆளுமையையும் தன் சுதந்திரத்தையும் வலியுறுத்தும்பொது அது தன் அழகுகளையும் நயங்களையும் துறக்கத் தேவையில்லை என்பதற்குச் சான்றாக இருந்தவர்”என்று கட்டுரையொன்றில் வெங்கட் சாமிநாதன் சொல்லியிருந்தாரல்லவா? உங்களைக் குறித்துச் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?

அதை நான் ஒத்துக்கொள்ளவில்லை. சுதந்திரமாக இயங்கக்கூடிய பெண் வந்து ஆண்களால் வரையறை செய்யப்பட்ட பெண் நயங்களை விட்டுவிட்டாள் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. என்னால் மிகவும் மதிக்கப்படுகிற வெங்கட் சாமிநாதனால் அது சொல்லப்பட்டாலும்கூட என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இசை, பரதநாட்டியம் தெரிந்த நயமுள்ள பெண் என்பதுபோல அவர் சொல்லியிருப்பார். அவற்றையெல்லாம் பயின்றிருப்பது வேறு… பெண் நயங்கள் என்று என்னால் கருதப்படுபவை வேறு. இது ஆரம்பத்திலிருந்து இருக்கிறது. கல்வியைப் பற்றிச் சொல்கிறபோது, பெண்கல்வியானது பெண்ணின் தன்மைகளைக் குலைக்கக்கூடாது என்று சுயமரியாதை இயக்கப் பெண்கள்கூட சொல்லியிருக்கிறார்கள். பெண்தன்மை என்று அவர்கள் கருதுபவற்றுள் மிக முக்கியமானது, தாய்மை! என்னால் மிகவும் மதிக்கப்பட்ட எழுத்தாளர்கள்கூட, ‘உங்ககிட்ட இருக்கிற பெண்தன்மை, நயங்களை நீங்கள் விட்டுக்கொடுக்கவில்லை’என்று சொல்வார்கள். அவர்களது மனங்களில் பெண்தன்மை குலையாத ஒரு பெண் இருந்துகொண்டேயிருக்கிறாள். அவளை நம்மால் வெளியில் எடுக்கமுடியாது.

நீங்கள் 5 சிறுகதைத் தொகுப்புகளும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் ஆவணப் பதிவுகளும் வெளியிட்டிருக்கிறீர்கள். அதேபோல அந்நாட்களில் நிறையப்பேர் அதாவது ராஜம் கிருஷ்ணன், ஆர். சூடாமணி, பூரணி, ஹெப்சிபா ஜேசுதாசன், வாஸந்தி, சிவசங்கரி, அநுத்தமா, பூரணி, அனுராதா ரமணன், லஷ்மி இப்படி நிறையப்பேர் உரைநடை எழுதிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போதோ கவிதையிற்போல உரைநடையிற் பெருமளவு பெண்கள் எழுதுவதில்லை. அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

என்னுடைய அனுபவத்தின்படி என்ன தோன்றுகிறதென்றால், கவிதை எழுதுவதென்பது ஒரு எளிதான விசயமில்லை. அவ்வளவு எழுதச் சிரமமான வடிவத்தில் எழுதியவர்களால் பிறகு உரைநடையில் எழுதமுடிவதில்லை. கவிதை எழுதுவதற்கென்று ஒரு மனநிலை இருக்கிறது. கவிதை எழுதுபவர்கள்கூட உரைநடையில் எழுதுகிறபோது அவ்வளவு இரசிக்கும்படியாக இருப்பதில்லை. ஆரம்பகாலத்தில் எழுத ஆரம்பித்தால் சிறுகதைதான் எழுதவேண்டும் என்றொரு எண்ணம் இருந்தது. அதனால்தான் நிறையச் சிறுகதைகள் வெளிவந்தன. அப்போது இரா.மீனாட்சியைத் தவிர யாருமே கவிதை எழுதவில்லை. பிறகு பெரியதொரு அலையாக வந்தார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால், நானும் கவிதை எழுத முயற்சித்து முடியாமல் விட்ட காரணத்தால் அத்தனை பேர் கவிதை எழுத வந்தது எனக்கு உவப்பான விசயமாக இருந்தது. எனக்கு சே.பிருந்தாவின் கவிதைகள் பிடிக்கும். முதற்தொகுப்பு கொண்டுவந்ததிலிருந்து அவதானித்து வருகிறேன். அவளுடைய கவிதைகளில் சில இடங்களில் சிறு குறும்பு இருக்கும். நிஜ வாழ்க்கையில் குறும்பாக இருப்பது வேறு… அதை எழுத்தில் கொண்டுவருவது எளிதில்லை.

நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் பம்பாயின் தமிழிலக்கியச் சூழல் எப்படி இருக்கிறது? எழுத்தாளர்-வாசகர் வட்டம் என்று ஒன்று இருக்கிறதா? 

 
இருக்கலாம். பம்பாய் தமிழ்ச் சங்கத்தோடுகூட எனக்கு அவ்வளவாக உறவு இல்லை. ஆனால், அங்கு இருக்கிற சில எழுத்தாளர்களோடு எனக்குத் தொடர்பு இருக்கிறது. நாஞ்சில் நாடன் முன்பு பம்பாயில்தான் இருந்தார். அவரோடு எனக்கு நல்ல நட்பு இருந்தது. இப்போது, அங்கு இருக்கும் புதிய மாதவி, மதியழகன் சுப்பையா இவர்களோடெல்லாம் நல்ல நட்பு இருக்கிறது. வாசகர்கள் என்று பார்க்கும்போது, குமுதம், ஆனந்தவிகடன் படிக்கிற வாசகர்கள்தான் அங்கு அதிகமாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது. என்னைப்போன்றவர்களுடைய எழுத்துக்களைப் படிக்கிற சில பேர் அங்கு இருப்பார்கள்… ஆனால், அவர்கள் தொலைபேசியில் அழைத்து, ‘நான் உங்க வீட்டுக்கு வரணும்னு இருக்கேன்… உங்க கதையெல்லாம் விமர்சித்துச் சொல்லணும்… உங்க கதையெல்லாம் எங்க அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும்’என்பார்கள். அதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்களென்றால், பெண்கள் படிக்கிற கதைகளைத்தான் நாம் எழுதுகிறோமாம்… ஆண்கள் படித்தால் அதை விமர்சனந்தான் செய்வார்களாம். பம்பாயில் எனக்குத் தெரியாத தமிழர் வாழ்க்கைமுறை மதியழகனுக்குத் தெரிந்திருக்கிறது.

முன்னைய காலங்களில் இருந்ததுபோல, இப்போது தீவிர இலக்கிய சஞ்சிகை என்று சொல்லக்கூடிய ஒன்று தமிழில் இல்லை… இருப்பவையெல்லாம் ஜனரஞ்சக சஞ்சிகைகளும் இடைநிலை இதழ்களுந்தான்’ என்று சிலரால் பேசப்படுவது பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?

இப்போது வியாபாரப் பத்திரிகைகளுடைய பெருக்கம் அதிகமாகத்தான் இருக்கிறது. இலக்கிய சஞ்சிகைகளும் பலதரப்பட்ட பணத்தட்டுப்பாட்டின் காரணமாக விளம்பரங்களை நாடிச் செல்லவேண்டியிருக்கிறது. எல்லோரும் தங்களுடைய பத்திரிகையும் விற்கப்படவேண்டும் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். சிலபேர் அதுவொரு வியாபாரந்தானே என்று சொல்கிறார்கள். பத்திரிகை என்றால் நேர்த்தியாகக் கொண்டுவரப்படவேண்டும்; அதற்கான பணத்தை விளம்பரங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைப்பதில் தவறொன்றுமில்லை. அதனுள் இருக்கிற உள்ளடக்கம் செறிவாக இருந்தால் போதுமானது. ஒரு பொருள் விற்பதனாலேயே அது மோசம் என்று நாம் சொல்லமுடியாது. உதாரணமாக, எங்களுடைய ஸ்பாரோவைச் சேர்ந்தவர்கள் ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பெண்களைப் பற்றி பத்துப் படங்கள் பண்ணினோம். அவற்றுள் இரண்டு படங்கள் திரையிடப்பட்டவுடன் ஒரு கூட்டம் வைத்திருந்தார்கள். அங்கு வந்திருந்த இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் என்னைக் கூப்பிட்டு…“இந்தப் படங்களெல்லாம் மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மூன்றாமுலக நாட்டிலிருந்து வரக்கூடிய படங்களில் சில குறைபாடுகள் இருக்கவேண்டும்…நீங்கள் இதை மிகவும் அழகாக எடுக்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறீர்கள். இவ்வளவு நன்றாக இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”என்றார். எனக்குக் கோபம் வந்துவிட்டது… “நாங்கள் பம்பாயிலிருந்து வருகிறோம்… அங்கு ஒவ்வொரு ஆண்டும் பல நூற்றுக்கணக்கான படங்களை எடுக்கப்படுகின்றன… எனது கணவர் ஒரு இயக்குநர்… அதெப்படி எங்களால் தரமில்லாமல் எடுக்கமுடியும்?”என்று சண்டை போட்டேன். அதுபோல, தீவிர இலக்கியப் பத்திரிகை என்றால் சிரமப்பட்டு, குறைபாடுகளோடுதான் வெளிக்கொணரப்படவேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் இந்த வியாபாரப் பத்திரிகைகளுக்கும் இலக்கியப் பத்திரிகைகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருந்தது. இரண்டும் வெவ்வேறு எல்லைகளில் இருந்தன. இப்போது அப்படியில்லை… இலக்கியப் பத்திரிகைகளில் எழுதுகிறவர்கள்கூட வியாபாரப் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் பத்தி எழுதுகிறார் என்பதனால் அதை வைத்து அவருடைய கதையை நான் எடைபோடமுடியுமென்று தோன்றவில்லை. அதேபோல காலச்சுவடு, உயிர்மை, மணல்வீடு பத்திரிகைகள் நல்ல தரமாகக் கொண்டுவருகிறார்கள். வியாபாரப் பத்திரிகைகள் வடிவமைப்பில் தரமாக வருகிறபோது நாமும் அதற்கேற்ப தரத்தை உயர்த்தவேண்டியிருக்கிறது. அதேசமயம், உள்ளடக்கத்தின் தரமும் தேயாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

இங்கே கனடாவில் இருக்கிற வாசகர்கள் தெரிந்துகொள்வதற்காக, ஸ்பாரோவின் வேலைத்திட்டங்கள் பற்றிச் சொல்லமுடியுமா?

ஒருகட்டத்தில், பெண்களுடைய வரலாறு, அவர்களது வாழ்வில் இருக்கக்கூடிய அன்றாட அரசியல், பெண்கள் இயக்கம் இவற்றையெல்லாம் ஆவணப்படுத்தவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அது வாய்மொழி வரலாறாக மட்டுமல்லாமல், புகைப்படங்கள், பத்திரிகைகளில் வரக்கூடிய பல விசயங்கள் - குறிப்பாக விளம்பரங்கள்- நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துவதன் மூலமாக பெண் என்ன மாதிரியான சூழ்நிலையில் வாழ்கிறாள் என்பதைப் பதிந்துவைக்க நினைத்தோம். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளாக மிகவும் சிரமப்பட்டுத்தான் ஸ்பாரோவை நடத்திவருகிறோம். எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட மேம்பாட்டுப் பொருளாதாரத்தில் இந்த ஆவணப்படுத்துதல் பொதுவாக உள்ளடக்கப்படவில்லையாதலால் சிரமத்தை எதிர்நோக்கவேண்டியேற்பட்டது. ‘நாங்கள் பத்தாயிரம் புகைப்படங்களைச் சேகரித்திருக்கிறோம்’என்று சொல்லமுடியாது. நாங்கள் செய்வது பண்புசார்ந்த விசயம். மேம்பாட்டுப் பொருளாதாரத்தில் இருக்கிற ஒரு நாட்டில் ஆவணப்படுத்தல் அவசியமில்லை என்றொரு மனநிலை இங்கு நிலவுகிறது. எதிர்நீச்சல் போட்டுத்தான் அந்த மனநிலையைக் கடக்கவேண்டியிருக்கிறது. நாங்கள் பண்ணியிருக்கிற பல வேலைகளைப் பற்றி எங்கள் வலைத்தளத்தில் பதியப்பட்டிருக்கிறது.

இந்தக் கனடியத் தமிழிலக்கிய சூழல் பற்றிக் குறிப்பாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

கனடியத் தமிழிலக்கியச் சூழல் எனும்போது அது உண்மையில் இலங்கைத்தமிழிலக்கியச் சூழல் என்றே சொல்லவேண்டியிருக்கிறது. ஏனென்றால், இந்தியத்தமிழர்கள் யாரும் இப்படியொரு கருத்தரங்கை நடத்தியதாகவோ இயல் போன்றதொரு விருதைக் கொடுப்பதாகவோ நான் அறியவில்லை. அமெரிக்காவிலுள்ள விளக்கு அமைப்புக்கூட ரொம்பநாள் கழித்துத்தான் வந்தது. என்றாலும், அமெரிக்காவில் இருக்கக்கூடிய தமிழ்ச்சங்கங்கள்கூட இப்படிச் செயற்படுவதாக எனக்குத் தெரியவில்லை. பாரிஸூக்குப் போனாலும்… எங்கு போனாலும் தமிழ் பற்றிய விவாதம், எழுத்து குறித்த உரையாடல் எல்லாவற்றையும் செய்பவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அங்கெல்லாம் இருக்கும் எனது நண்பர்களுள் பெரும்பாலானோர் இலங்கைத்தமிழர்கள்தாம். இந்தியத்தமிழர்கள் யாரும் இப்படியொரு பத்திரிகையை நடத்துவதாகத் தெரியவில்லையே…!


குறுகிய கால அவகாசத்தில் தாய்வீடு பத்திரிகைக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி இந்த நேர்காணலை வழங்கியமைக்காக நன்றி.


ரொறன்ரோவில் (கனடா) வெளியாகும் “தாய்வீடு“ ஜூன், 2014 பத்திரிகையில் வெளியாகிய நேர்காணல்

நேர்கண்டவர் : தமிழ்நதி

4.20.2014

‘இனி ஒருபோதுமில்லை’என்றார்கள்…..





மனித இதயம் அனிச்ச மலரினும் மென்மை, மழையின் பெருங்கருணை, பறவையின் அடிவயிறு, குழந்தையின் முதற்சிரிப்பு, நிலத்தின் பொறுமை… ஹா…! இனியும் கதைகளை விடவேண்டாம். அவை மட்டுமன்று; அது காழ்ப்புணர்ச்சியின் கருவறை, துரோகமெனும் நஞ்சுறையும் புற்று, சுயநலத்தின் வாழ்விடம், ‘மற்றவர்’ மீதான வெறுப்பின் ஊற்றுக்கண்ணும்கூட.
மற்றவர்… நாமல்லாத மற்றவர்…. யூதர்கள், ஜிப்சிக்கள், ஓரினச் சேர்க்கையாளர், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், ஏழைகள், கறுப்பர், மங்கோலியர், காக்கேசியர், நரிக்குறவர், கோவியர், முக்குவர், பறையர், பள்ளர்…. விலங்குகள், பறவைகள், ஊர்வன… மற்றவர்கள்… மற்றவைகள்… இனத்தால், மதத்தால், சாதியால், தேசத்தால், நிறத்தால், பண்பாடு, கலாச்சாரத்தால் நமக்குப் புறம்பானவர்கள்…

கொலைபடவும் சிறைப்படவும் வதையுறவும் விதிக்கப்பட்டவர்கள்…
ரஃபேல் லெம்கின்! நீங்கள் உன்னதமான மனிதராயிருத்தல் வேண்டும். நீங்கள் அந்தச் சொல்லை உருவாக்கினீர்கள். இல்லையெனில், எங்களுக்கும் அவர்களுக்கும் என்ன நடந்ததென்று பற்பல சொற்களால் பன்னிப் பன்னி முயன்றிருக்க வேண்டும். உங்களுக்கு இனப்படுகொலையுண்டவர்களின் ஆன்மாக்கள் கடமைப்பட்டவை.
நீங்கள் அப்போது சிறுவனாக இருந்தீர்கள்… பண்டைய ரோமானியப் பேரரசின் ‘புகழ்பூத்த’ நீரோ மன்னன், புதிய மதமொன்றைச் சகித்துக்கொள்ள முடியாமல், சிங்கங்கள் அடைக்கப்பட்டிருக்கும் கூண்டிற்குள் கிறிஸ்தவர்களை எறியக் கட்டளையிட்டான் என்பதைப் பற்றிப் படித்தபோது, நீங்கள் கேள்விகளால் உங்கள் தாயைத் துளைத்தெடுக்கிறீர்கள்:

“அதெப்படி அப்படிச் செய்யமுடியும் அம்மா? அதை எப்படி மக்கள் அனுமதித்தார்கள்? இத்தகையதொரு கொலைவெறியை எங்ஙனம் அவர்களால் பார்த்து இரசிக்க முடிந்தது?”
நீங்கள் கேள்விகளாலானவர் ரஃபேல். சட்டக் கல்லூரி மாணவனான பிற்பாடு நீங்கள் கீழ்க்காணும் கேள்வியை உங்கள் பேராசிரியரிடம் கேட்கிறீர்கள்:
“ஆர்மேனியர்களைப் படுகொலை செய்யக் கட்டளையிட்ட மெஹ்மெற்  ரலாத் தண்டிக்கப்படாதது ஏன்?”
“இதோ பார் ரஃபேல்… அதற்குச் சட்டத்தில் இடமில்லை.  உதாரணமாக, ஒரு பண்ணைக்குச் சொந்தக்காரனை எடுத்துக்கொள்வோம். அவன் சில கோழிகளை வளர்க்கிறான். பிறகு அவற்றைக் கொல்கிறான். அது அவனுடைய தொழில். அந்தக் கோழிகளை ஏன் கொன்றாய் என்று நீ அவனிடம் கேட்பாயானால், நீ உள்விவகாரத்தில் தலையிடுகிறாய். எல்லை மீறுகிறாய் என்று பொருள்”
“ஆனால், ஆர்மேனியர்கள் கோழிகள் அல்லர்!”
அது அப்படித்தான் ரஃபேல்!
துருக்கியருக்கு, ஆர்மேனியர் - கால்நடைகள்
ஜெர்மனியருக்கு, யூதர்கள் - கீழ்மக்கள் (vermin)
ஹுட்டுக்களுக்கு, ருட்ஸிக்கள் – கரப்பான் பூச்சிகள்
சிங்களப் பேரினவாதிகளுக்கு, தமிழர்கள் - நாய்கள்

ரஃபேல்! அந்தக் கேள்வி உங்களைத் தொந்தரவு செய்கிறது. உள் நின்று உறுத்துகிறது. உங்களுக்கு அது புரியவேயில்லை.
“ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொல்லும்போது அவன் தண்டிக்கப்படுகிறான்; ஒரு மில்லியன் சனங்களை, ஒரு தேசத்தைக் கொலைசெய்தவன் சுதந்திரமாக வெளியில் திரிகிறான். ஒரு மில்லியன் சனங்களைக் கொல்வதென்பது ஒரு தனிமனிதனைக் கொல்வதைக் காட்டிலும் குறைவான குற்றச்செயலா?”
சட்டப்புத்தகங்களில் அப்போது அந்தக் குற்றம் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. அதைக் குறிக்க ஒரு பெயர்தானும் இருக்கவில்லை. சிறுபான்மையினர் யாவரும் நேரம் வந்தால் கழுத்து அறுபட்டுச் சாகவிருக்கும் கோழிகளே!
“அவர்கள்தாம் (ஆர்மேனியர்கள்) எவ்வளவு அவலப்பட்டுச் செத்துப்போனார்கள்!”நீங்கள் பெருமூச்செறிகிறீர்கள்.
 “அவர்கள் – துருக்கியர்- எங்களை இடம்மாற்றப் போவதாகச் சேதி கிடைத்தது.” அப்போது பதினான்கு வயதுச் சிறுவனாயிருந்த ரகோச்சி லெவோனியன் நினைவுகூர்கிறார்:
“தங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்பி வருவார்களென்று அயலவர்களில் பெரும்பாலானோர் நம்பினார்கள். நீண்ட பயணத்திற்குத் தயார் செய்வதுபோன்று ரொட்டிகளையும் இன்னபிற உணவுகளையும் தயாரிக்கத்தொடங்கினார்கள். அவற்றைத் தயாரிப்பதில் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று தந்தை எனது தாயாரிடம் சொன்னார். செல்லும் வழியில் உறங்குவதற்குத் தேவையானதை மட்டும் கோவேறு கழுதையொன்றில் ஏற்றினார். என்ன நடக்கப்போகிறதென்பதை அவர் ஊகித்திருந்தார்.”
அவருடைய ஊகம் மெத்தச்சரி! ஏப்ரல் 24, 1915அன்று சிறுபான்மையினராகிய ஆர்மேனியர்களின் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்கள். பின்பு அவர்கள் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்கள். வலுவுள்ள ஆர்மேனிய இளைஞர்கள் வலுக்கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை. எஞ்சியோர் சிறிய சிறிய குழுக்களாக அழைத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். இப்போது மீதமிருப்பவர்கள் பெண்களும் குழந்தைகளும் வயோதிபர்களும் மட்டுமே.
அதோ!ஆர்மேனியப் பெண்களையும் குழந்தைகளையும் முதியவர்களையும் துருக்கியர்கள் ஆடுமாடுகளைப் போலச் சாய்த்துக்கொண்டு போகிறார்கள். அந்த ஊர்வலம் மரணத்தை நோக்கி நகர்ந்துகொண்டேயிருக்கிறது. புல்பூண்டற்ற வனாந்தரங்களில் வாரக் கணக்கில், மாதக்கணக்கில் கூரிய துப்பாக்கி முனைகளால் நடத்திச்செல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். வழியில் கடந்து செல்லும் ஊர்களில் வாழும் துருக்கியர்கள் அந்தப் பாவப்பட்ட சனங்களின் சொற்ப உடமைகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள். பெண்களை இழுத்துச் சென்று வன்புணர்ச்சி செய்கிறார்கள். தங்கள் குழந்தைகளை வாங்கிக்கொள்ளும்படியாக, அவர்களேனும் உயிரோடு வாழட்டுமென்று வழியில் எதிர்ப்படும் துருக்கிப் பெண்களிடம் மன்றாடுகிறார்கள் ஆர்மேனியப் பெண்கள். சிலர் பெற்றுக்கொள்கிறார்கள். அந்தக் குழந்தைகள் மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமியர்களாக வளரவிருக்கிறார்கள்.
முடிவற்ற நடை.  உணவும் தண்ணீரும் மறுக்கப்பட்டவர்களாய் அவர்கள் போகிறார்கள். புல்பூண்டுகளைச் சாப்பிடுகிறார்கள். சில நாட்களிலேயே தூசிபடிந்த எலும்புக்கூடுகளின் ஊர்வலம் போலாகிவிட்டார்கள் அவர்கள். காலணிகள் தேய்ந்துபோன குழந்தைகளின் பாதங்களிலிருந்து குருதி சொட்டுகிறது. பசியினாலும் களைப்பினாலும் நோயினாலும் மயங்கிச் சரிகிறார்கள். கடைசி வாய்த் தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் தம் பெற்றோரைக் கூவியழைத்தபின் பயனின்றி மரித்துப் போகிறார்கள். செல்லும் வழியெங்கும் வயோதிபர்களின் உடல்கள் விழுந்து கிடக்கின்றன. அருகில் அமர்ந்து யாரும் அழுவதற்கில்லை.
ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாவது குடிமக்களே! நடவுங்கள். பிரித்தெடுத்து அழைத்துச் செல்லப்பட்ட ஆண்கள் அப்போதே கொல்லப்பட்டுவிட்டார்கள்…. பெண்களே! நடவுங்கள். இன்னும் சில நாட்களில் பிணந்தின்னிப் பறவைகளுக்கு இரையாக மாறவிருப்பவர்களே! ஏற்கெனவே விழுந்துவிட்டவர்களின் மேல் இடறிவிழுந்துவிடாமல் நடவுங்கள். இல்லையெனில் துப்பாக்கிகளின் பயனெட்களால் கொல்லப்படுவீர்கள். அதோ! நடக்கமுடியாமல் சோர்ந்துபோன ஒரு பெண்ணின் கதையை அவர்கள் முடித்துவிட்டார்கள். நல்லது. அவளது துயரம் அவ்வகையிலேனும் நிறைவுற்றது. துரதிர்ஷ்டத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே! நீங்கள் பாலைவனங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் மலைகளினோரங்களிலும் சிதறி அலைந்து வெகு விரைவில் மடிந்தே போய்விடுவீர்கள்.
நல்லபடியாக முடிந்தது இருபதாம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை! (அது அப்போது அப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டிருக்கவில்லையாயினும்) ஒரு மில்லியன் ஆர்மேனியர்களின் ஆன்மாக்கள் பசியில் கத்தியழும் குரல்கள் பாலைவனங்களில் அலைந்துகொண்டிருக்கின்றன.
ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்தின் அப்போதைய அமெரிக்கத் தூதுவராயிருந்த ஹென்றி மோர்கன்தாவு எழுதுகிறார்:

“புதிய வகையிலான கூட்டுப் படுகொலைக்கு இது உதாரணமாயிற்று. துருக்கிய ஆட்சியாளர்கள் ஆர்மேனியர்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேறும்படியாக இட்ட உத்தரவானது, அந்த மொத்த இனத்திற்குமான மரண சாசனம்; இதைத் துருக்கியர்கள் உணர்ந்தேயிருந்தார்கள். ஆனாலும், என்னோடு அதைக் குறித்து எந்தவொரு உரையாடலையும் நிகழ்த்தவோ உண்மையை வெளிப்படுத்தவோ முயற்சி எடுத்திருக்கவில்லை.”

தனியொரு மனிதனாகிய உங்களது குரல் மறுபடியும் மறுபடியும் ஒலிக்கிறது ரஃபேல் லெம்கின்:
 “ஒரு தேசத்தை, இனத்தை, மதத்தை, கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களைக் கூட்டாகப் படுகொலை செய்வதை எந்தப் பெயர்கொண்டு அழைப்பது? அந்தக் கொடிய செயலைத் தடுத்து நிறுத்தும் சட்டங்கள் உண்டா?”
“இல்லை. ஆர்மேனியர்கள் எப்போதோ முடிந்துபோனார்கள். இப்போது அதற்கான அவசியம் எங்கிருந்து வந்தது?”முணுமுணுக்கிறார்கள்.
அச்சொல்லுக்கான நெருக்கடி ஜேர்மனியிலிருந்து புறப்பட்டு உலகை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. அந்த நெருக்கடியின் பெயர் ஹிட்லர்!

1931இல் செய்தித்தாளொன்றுக்கு அவனால் வழங்கப்பட்ட நேர்காணலொன்றில் ‘கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மன் சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிர்மாணிக்கவிருப்பதாகவும் அதன்போது மில்லியன் கணக்கிலான மக்கள் இடம்பெயர்க்கப்படவும் கொல்லப்படவும் கூடும்’என முன்மொழிந்திருந்தான். 
ஜெர்மனியின் அதிகாரத்தை ஹிட்லர் கையேற்ற நூறாவது நாளிரவு (மே 10, 1933) நூல்களின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது. பெர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திற்கு எதிரிலிருந்த திறந்தவெளியரங்கில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் – ஜெர்மானியர்கள் அல்லாதவர்களால் எழுதப்பட்டவை சாம்பலாக்கப்படுகின்றன. அன்றிரவு மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில், புத்தகக் கடைகளில், நூலகங்களில் ‘யூத அறிவுஜீவித்தனத்தின் மரண’த் திருவிழா கொண்டாடப்பட்டது. அல்பேர்ட் ஐன்ஸ்டீன், சிக்மன்ட் பிராய்ட், ஹெய்ன்றிச் ஹெய்னெ ஆகியோரும் யூதர்களாயிருந்த காரணத்தால் அவர்தம் நூல்களும் ஜெர்மானியர்களின் அன்றைய இரவினை வெளிச்சமாக்கின.
ஜ+ன் 01, 1981இல் யாழ்ப்பாண நூலகத்திலிருந்த தொண்ணூற்றி ஏழாயிரம் நூல்களும் கிடைத்தற்கரிய பழஞ் சுவடிகளும் பேரினவாதிகளால் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. அன்று சிங்களப் பேரினவாதத்தின் நாகரிகம் கொழுந்துவிட்டெரிந்ததை உலகம் கண்ணாரக் கண்டது.
“எங்கே புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ, அங்கே ஈற்றில் மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்”என்று நீங்கள் சொன்னது சரியாயிற்று ஹெய்ன்றிச் ஹெய்னெ.
நாஜிக்களின் வதைமுகாம்களில், J.A.TOPF & SOHNE தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இராட்சத எரியடுப்புகளுள் அள்ளி அள்ளிக் கொண்டுவந்து திணிக்கப்படுகின்றன பிணங்கள்.  அவை மகாராஜாக்களின் கோட்டை அடுப்புகளைப் போல இரவு பகலாக எரிகின்றன. நிணமும் மயிரும் பொசுங்கும் நாற்றம் தாளமுடியவில்லை. தள்ளித் தள்ளி கைசலித்துப் போகிறது நாஜிப்படை. மனிதத் தோலால் செய்யப்பட்ட விளக்கு மறைப்புகளின் அருகமர்ந்து அதிகாரிகள் நாட்கணக்கில் திட்டமிட்டும் அத்தனை உடல்களை அழித்து முடிப்பதென்பது சிரமமான காரியமாகத்தானிருக்கிறது.
ஆறு மில்லியன் உடல்கள்!
ஆனால், அந்தக் கொலைகள் இன்னமும் ‘கொலைகள்’என்றே சுட்டப்படுகின்றன. நமது சின்னண்ணன்களில் ஒருவராகிய பிரிட்டிஷின் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில் ‘பெயரற்ற குற்றம்’என்றே அதை விளித்திருக்கிறார். முள்ளிவாய்க்காலில் நடந்தது சாட்சிகளற்ற போர் எனில், இஃது பெயரற்ற குற்றம்! கிழக்கு ஐரோப்பாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அமெரிக்காவோ பிரிட்டனோ ரஷ்யாவோ ஆரம்பத்தில் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. பெயரற்ற குற்றமொன்றைப் புரிந்துகொள்வது எப்போதும் சிக்கலானதே! யூத இனத்தின் படுகொலையை ‘’ஹோலொகோஸ்ட்’என்று அழைக்க பின்னரே பழகிக்கொண்டார்கள்.

மேலும், ஜெர்மனியில் இருந்து வரும் செய்திகள் நம்பமுடியாத அளவிற்குக் கொடுமையானவையாக இருக்கின்றன. மனிதர்களாகிய புனிதர்களால் அவற்றையெல்லாம் செய்யவே முடியாது; வதந்திகள் என்று ஒதுக்கப்படுகின்றன.

எவர்தான் அவற்றை நம்புதற்கியலும்? அது இப்படித்தான் தொடங்கியது:
நீங்கள் ஒரு யூதர் என்று வைத்துக்கொள்வோம்.  நூற்றாண்டுகளாக, பல தலைமுறைகளாக அங்குதான் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஒரு சட்டம் (நியூரம்பர்க் சட்டம்) அமுலுக்கு வருகிறது. அந்தச் சட்டம் உங்களது குடியுரிமையைப் பறித்து ஜெர்மானியர்கள் இல்லை என்று அறிவிக்கிறது. (ஆம். உங்கள் மனதுள்ளிருந்து குற்றவுணர்வொன்று அலையலையாக எழுந்து வருகிறதல்லவா? பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்தம் இருப்பினை இலங்கையும் இந்தியாவும் சுதேசித் தமிழர்களும் பந்தாடியது போலவேதான் நடந்தது.) ஒரு குடிமகனுக்குரிய உரிமைகள் எவையும் உங்களுக்கு இல்லை என்கிறது. ‘இந்த மண்ணைப் பொறுத்தளவில் நீங்கள் வெளிநாட்டவர்; வேண்டுமானால் இங்கு வாழ்ந்துவிட்டுப் போகலாம்’ என்று சலுகை காட்டுகிறது.

யூதர்களும் ஜெர்மானியர்களும் திருமணம் செய்துகொள்ளலாகாது; அவ்விதம் செய்துகொள்வதானது சட்டவிரோதம் என்று உங்களுக்குச் சொல்லப்படுகிறது. மீறிச் செய்வீர்களாயின் புதிய சட்டத்தின் பிரகாரம் உங்களைச் சிறையிலடைக்கவியலும். நீங்கள் உங்கள் இனத்தவரல்லாத மற்றவருடன் பாலியல் உறவுகொண்டால்… கதிமோட்சந்தான்! ஆகவே, நீங்கள் யூதராக இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் நாற்பத்தைந்து வயதுக்குக் குறைவான பிராயமுடைய ஜெர்மானியப் பெண்ணை வேலைக்காரியாகக்கூட வைத்திருக்கவியலாது. இசகுபிசகாக ஏதாவது நடந்து ஜெர்மானியர்களின் ஆரிய இரத்தம் மாசுபடுத்தப்பட்டுவிட்டால் தொலைந்தது. பத்தரை மாற்றுத் தங்கம் போலும் தூய ஆரிய இரத்தத்தை, கீழ்மக்களாகிய யூதர்களின் இரத்தம் மாசுபடுத்தலாகாது. அது நோய்க்கிருமி போன்றது. தேசத்தின் ஆரோக்கியத்திற்குக் கெடுதலானது. நீங்கள் பாதி யூதரா? முழுமையான யூதரா என்ற கேள்வி இப்போது எழுகிறது. நீங்கள் மூன்று யூதப் பாட்டன்களைக் கொண்டவராக இருந்தால் நீங்கள் முழு யூதராவீர்கள். யூதராகிய நீங்கள் பரிசோதனைக் கூடத்தின் மேசையில் கிடத்தப்பட்டிருக்கும் எலியைப் போல அத்தனை சோதனைகளுக்கும் உட்படுத்தப்படுவீர்கள்.
அளக்கப்படுகிறது மூக்கின் நீளம்; அதன் அளவு உங்களைக் காப்பாற்றியிருக்கலாம். அல்லது கொன்றுபோட்டிருக்கலாம். மேலே உருச்சிறுத்து கீழ்விரிந்த அளவையினால் உடலின் பாகங்கள் அளக்கப்படுகின்றன. அந்தோ! அவளது  யூத இடுப்பு அவளைக் கொன்றது. குருதியில் ஆரியத் துணிக்கைகள் இல்லாதவனும் தொலைந்தான். 20 நிறங்களால் மூடப்பட்ட கண்ணாடி உருண்டைகளைக் கொண்ட உலோகச் சட்டம் அகன்றதொரு சதங்கை போலிருக்கிறது. அது அவர்களின் இனத்தைத் துப்பறிந்தது. நீ ஒரு ஜிப்சியின் கண்களைக் கொண்டிருந்தாயானால், உனது உடலும் ஆன்மாவும் கிழிபட்டு அலையவே விதிக்கப்பட்டிருக்கிறது. பரிதாபத்திற்குரியவனே! கண்களின் நிறமே உன்னைக் கொன்றது. 29 வகையிலான தலைமயிர் மாதிரிகளைக் கொண்ட அந்தக் கோர்வை ஒரு நிலச்சுவான்தாரின் மனைவியின் இடுப்பில் தொங்கும் சாவிக் கொத்தினைப் போலவேயிருக்கிறது. ஜெர்மானியர்கள் அல்லாதவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களின் உயிர்கள் மயிர்களின் நிறத்தில், தன்மையில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன.
ஜெர்மானிய விஞ்ஞானிகள் ஒரு தவளையைப் போல வரலாற்றைக் கவிழ்த்துப் போட்டு அறுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவையெல்லாம் ஆரம்பக் கட்டக் கண்துடைப்புகள்தாம். பிறகு… பிறகென்ன…கொல்லுங்கள். யூதர்களை, ஓரினச் சேர்க்கையாளர்களை, மனநிலை பிறழ்ந்தவர்களை, ஜிப்சிக்களை, ஆபிரிக்கர்களை, கம்யூனிஸ்டுக்களைக் கொல்லுங்கள் பெருமானே!
உங்கள் குறி தூய ஆரியக் குறிதானா அடோல்ப் ஹிட்லர்? விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட அளவைகளுள் கச்சிதமாகப் பொருந்தியதா தங்கள் ஆரியக்குறி? அதிலிருந்து வெளிப்பட்டது ஆரிய விந்துதானா? ஈவா பிராவ்ன்! நீயாவது சொல்!

மரணவண்டிகளாகிய அந்தப் புகையிரதங்கள் அலறிக்கொண்டு போகின்றன. இறைச்சிக்காக ஏற்றிச் செல்லப்படும் விலங்குகளைப் போல அவர்களைக் கொண்டுபோகிறார்கள்.
நீண்ட பயணம். மரணமுகாமாகிய ஆஷ்விச்சுக்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். அழுக்கு இன்னொரு ஆடையாகப் படிந்திருக்கிறது. கடூழியத்திற்குத் தகுதியற்ற அனைவரும் கொல்லப்படத் தகுதியுடையவர்களே. ‘ஆடைகளைக் கழட்டிவிட்டு உள்ளே செல்லுங்கள். குளிக்கலாம்’நீங்கள் போகிறீர்கள். தண்ணீருக்குப் பதிலாக ஷவரிலிருந்து சைக்ளோன் பி பொழிகிறது. தண்ணீர் ஒருபோதும் வஞ்சிப்பதில்லை; உங்கள்மீது பொழிந்தது விஷவாயு. சதை வற்றித் தோல்களாகச் சுருங்கிப் போய்க் கிடக்கிறீர்கள்.
நம்பமுடியாமல் கண்கள் அகல விரித்தபடி அந்தத் தாய் கேட்கிறாள்:

“இந்தக் குழந்தைகளின் முகங்களைப் பாருங்கள்… உண்மையாகவே இவர்களைக் கொல்லப்போகிறீர்களா?”

என்ன கேள்வி இது! கொன்றார்கள்.

உனது முகாம் பொறுப்பாளனிடம் நீ கேட்கிறாய்: “எனது முதிய தந்தையால் இனி வேலை செய்யவியலாது. அவரை இன்று கொல்லப்போகிறார்கள். அவரை ஒரு தடவை சமையலறைக்கு அழைத்துப் போய் ரொட்டி ஒன்றைக் கொடுக்க எனக்கு அனுமதியுண்டா?”
மனிதத் தோலில் தீட்டப்பட்ட ஓவியங்கள் தொங்கும் அறைகளுள் ஓய்வொழிச்சலில்லாத திட்டமிடலில் நாஜி அதிகாரிகள். எத்தனை பேர்களையும் கொல்லவியலும்; உடல்களை அழிப்பதுதான் அவர்களுக்குச் சிக்கலாயிருக்கிறது. மண்ணை ஒதுக்குவதுபோல புல்டோசர்கள் உடல்களை ஒதுக்கிக்கொண்டு போகின்றன. மனிதப் புதைகுழிகள் எங்குதானில்லை! பிணங்களின் வற்றியுலர்ந்த மார்புகள் சுரைக்காய்கள் போல தொங்குகின்றன. போலந்தில், டென்மார்க்கில், நெதர்லாந்தில், பெல்ஜியத்தில், பிரான்சில் ஹிட்லரின் மரணநிழல் படர்ந்துகொண்டே செல்கிறது.

அந்தப் பையன்- அவன் அங்குதான் வாழ்ந்தான் – எலீ வீஸலிடம் அவன் கேட்டது நினைவிருக்கிறதா?
“இது உண்மையாக இருக்கக்கூடுமா? இது இருபதாம் நூற்றாண்டு. மத்திய காலத்தில் நாம் வாழவில்லை. இப்படியொரு காலத்தில் இத்தகைய குற்றங்கள் எங்ஙனம் இழைக்கப்படவியலும்? இவையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இந்த உலகத்தால் மௌனமாயிருக்க முடிவது எப்படி?”
சிறுவர்கள் பெரும்பாலும் விடையிறுக்கவியலாத கேள்விகளையே பெரியவர்களிடம் கேட்கிறார்கள்.
உலகம் என்பது எது? அதன் மனச்சாட்சியின் நிறம் என்ன? இலங்கை அதிபர் ராஜபக்‌ஷவின் கழுத்தில் தொங்கும் சால்வையின் நிறமாகிய சிவப்பா? ஹிட்லரின் ஸ்வஸ்திகாவின் நிறமா? போலந்தில் யூதர்களின் மத சாஸ்திர கலாசாலையில் இருந்த நூல்கள் நாஜிக்களால் சந்தைத் திடலில் கொண்டுவந்து குவித்து தீமூட்டப்பட்டபோது எழுந்த புகையின் நிறமா? முள்ளிவாய்க்காலில் கரிந்துபோய்க் கிடந்த உடல்களின் வெளித்தெரிந்த வெந்த இறைச்சியின் நிறமா? ருவாண்டாவில், கிழங்குகளைப் பொதிவதுபோல பாய்களால் சுற்றிப் பொதியப்பட்டிருந்த உடல்களிலிருந்து பாய்களை மீறிக் கசிந்துகொண்டிருந்த குருதியின் நிறமா?
இப்போது அந்தக் கூட்டுப் படுகொலைகளுக்குப் பெயர் கிடைத்துவிட்டது. ரஃபேல் லெம்கின்! நீங்கள் ‘இனப்படுகொலை’(Genocide)என்ற சொல்லை உருவாக்கிவிட்டீர்கள். பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சு+ட்டுவதைப் போல இறப்பின் வகைமாதிரிக்கேற்ப பெயர் சு+ட்ட வேண்டிய அவசியத்திற்கு மனிதகுலம் தள்ளப்பட்டது என்னே முரண்! முரணேதான்; முரண் நகையன்று.
பெயர் சு+ட்டப்பட்ட பிற்பாடும் அப்பெயர் கொண்டு விளிக்கத் தயங்கிய உலகத்தின் யோக்கியதையை என்ன பெயர்கொண்டு அழைப்பதெனத் தெரியாமல் பிற்பாடு குழம்புவார்கள் ருவாண்டாவின் ருட்ஸிகள்
1994 ஏப்ரலில்- இரண்டாம் உலக யுத்தத்தின்பிற்பாடு, ‘இனியொருபோதுமில்லை’என்றெழுந்த குரல்களைப் பழிக்கும்படியாய்- ருவாண்டாவில் வீழ்த்தப்பட்ட இலட்சக்கணக்கான உடல்களின் மீது மரணப் பறவைகள் நிழல்விழுத்திப் பறந்துசெல்கின்றன. ருட்ஸிகள் ஒளிந்திருந்த காடுகளின் மேல் இரத்தவாடையை முகர்ந்தபடி கழுகுகள் சுற்றியலைகின்றன. தஞ்சமடைந்திருந்த தேவாலயங்களிலும் பாடசாலைகளிலும் வைத்தியசாலைகளிலும் ஒன்றன்மேலொன்றாய் விழுந்துகிடக்கின்றன கறுத்த, உயர்ந்த, சுருட்டை முடியினைக் கொண்ட உடல்கள். தேடியழிக்கப்பட வேண்டிய ‘காக்ரோச்சு’க்களை பெரும்பான்மையினராகிய ஹுட்டுக்கள் அழித்துவிட்டார்கள். ருட்ஸிக்களின் வீடுகளைத் தீ பெரும்பசியோடு தின்றுகொண்டிருக்கிறது.

ருட்ஸி இனத்தவர்கள் தஞ்சம் புகுந்திருந்த தேவாலயமொன்றின் மதகுருவானவர் ஹுட்டு மதகுருவொருவருக்குச் செய்தி அனுப்புகிறார்.
“நாளை நாங்கள் கொல்லப்படுவோம் என்று அறியத் தந்திருக்கிறார்கள். எங்களுடைய சார்பில் மேயருடன் பேசி எங்களைக் காப்பாற்ற முயற்சி எடுங்கள்” அந்தச் செய்தி கிடைக்கப் பெற்றவர் எதுவும் செய்தவற்கில்லை.

பதிலாக ஹுட்டுக்களின் தலைவனொருவன் பதில் அனுப்புகிறான்.
“நாளைக் காலை மிகச் சரியாக ஒன்பது மணிக்கு நீங்கள் கொல்லப்படுவீர்கள்.”
கொலையாளிகள் தாம் வழங்கும் வாக்குறுதிகளுக்கு விசுவாசமானவர்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள்! மிகச் சரியாக ஒன்பது மணிக்கு அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த தேவாலயங்களுள் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. சிதறிக் கிடந்த உடல்களை விலக்கி விலக்கி நடந்துசென்ற கொலைஞர்கள் எஞ்சிய உயிர்களை வாள்களாலும் கத்திகளாலும் முடித்துவைத்தார்கள்.
தந்தை நோவாவின் நிர்வாணத்தைப் பார்த்த காரணத்தால் சபிக்கப்பட்ட பிள்ளை ஹாமின் வழிவந்தோர், சாபத்தினால் கருநிறமாகியவர்களின் வரலாறு செந்நிறக் குருதியினால் எழுதப்பட்டது. வாழைத் தோட்டத்தினுள் ஒளிந்திருந்தபோது கொல்லப்பட்ட குழந்தையே! உனது பொம்மையை இறுக்கியபடி நீ உறைந்துபோயிருக்கிறாய். கொல்லப்படுவதற்கு முன் உன் தந்தையின் முன் நிர்வாணமாக்கப்பட்டு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணே! உயிரின் ஒளி அணைந்துவிட்ட உன் முகத்தில் துயரத்தைக் காட்டிலும் அவமானமே மிஞ்சியிருக்கிறது. காஹிரா ஆறு சடலங்களின் கனம் தாங்காமல் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது.
ஐ.நா. வாகனங்களை விரட்டியபடி ருட்ஸிக்கள் ஓடிவருகிறார்கள். தங்களை அழைத்துச் செல்லுங்கள் என்று இறைஞ்சியோ, இனப்படுகொலையிலிருந்து காப்பாற்ற வேண்டியோ அல்ல;
“கத்திகளாலும் ஆணிகள் பொருத்தப்பட்ட சட்டகங்களாலும் வெட்டப்பட்டும் குத்துப்பட்டும் நாங்கள் சாகவிரும்பவில்லை. அந்த மரணத்தின் வலியை எங்களால் தாங்கவியலாது. தயவுசெய்து துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றுவிடுங்கள்”என்று மன்றாடியபடி பின்னே ஓடிவருகிறார்கள். ஐ.நா. வாகனங்கள் அவர்களைப் பின்னிறுத்தி விரைந்து சென்றுவிடுகின்றன.
வரலாறு ஒரே மாதிரியான சம்பவங்களைக் கொண்டிருக்கிறது என்று எத்தனை தடவைதாம் எழுதுவது? நினைவிருக்கிறதா….? வன்னியில், பூட்டப்பட்டிருந்த உங்கள் இரும்புக் கதவினூடாக ‘எங்களை விட்டுவிட்டுப் போக வேண்டாம்… போக வேண்டாம்’என்று அசைந்த கைகளை? “எங்களுக்கு உணவோ தண்ணீரோ நீங்கள் தரவேண்டியதில்லை. எங்கள் தேவைகளை நாங்களே பார்த்துக்கொள்ளுவோம். நீங்கள் எங்களை விட்டுப் போனால் நாங்கள் கொல்லப்பட்டுவிடுவோம்”என்று கெஞ்சிய அந்த முதியவரை நினைவிருக்கிறதா ஐ.நா.அதிகாரிகளே?
ருவாண்டாவில், எல்லாம் திட்டமிட்டபடி நடந்தேறிய பிற்பாடு அந்தத் தேவாலயத்தினுள் நுழைந்த செய்தியாளர்களுக்குத் தெரியவில்லை எந்தக் கை எந்த உடலுக்குரியதென்பது. எந்தத் தலையை எந்த உடலுடன் பொருத்துவதென்பது உண்மையில் குழப்பமான காரியந்தான். வளர்ந்த பெண்ணொருத்தியின் உடலுடன் தவறுதலாகப் பொருந்திப் போய்விட்ட குழந்தையொன்றின் தலை பரிகசித்துச் சிரிக்கிறது மண்டையோட்டினுள் எஞ்சியிருந்த சின்னஞ்சிறிய பற்களால்.
யரூபுயே என்ற கிராமத்தின் தேவாலயத்திற்குள் தன் சக செய்தியாளர்களுடன் நுழைந்த ஃபேர்கல் கீன் என்ற ஊடகவியலாளர் சொல்கிறார்:
“வெள்ளைப் பளிங்குக் கல்லாலான கிறிஸ்துவின் சிலையருகில் அந்த மனிதன் விழுந்து கிடந்தான். அவனுடைய முழங்கால்கள் அவனது உடலின் பின்புறமாக மடக்கிக் கட்டப்பட்டிருந்தன. அவனது கைகள் அவனது தலையினருகில் வெட்டிப் போடப்பட்டிருந்தன. உடல்களை விலக்கிக் கொண்டு நாங்கள் நடக்கவேண்டியிருந்தது. பெரும்பாலான உடல்களிலிருந்து ஊன் வடிந்துபோயிருந்தது. மரணத்திற்கு எந்த மரியாதையும் இருக்கவில்லை. திருப்பீடத்தினருகில் உடல்கள் விழுந்து கிடந்தன. கன்னி மரியாளின் காலடியில் எலும்புத்துண்டுகள் குவிந்துகிடந்தன. ஒரு மனிதன் தனது கைகளால் தலையை மறைத்தபடி வீழ்ந்து கிடந்தான். வாளின் தாக்குதலிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கைகளை உயர்த்தியபோது அவன் கொல்லப்பட்டிருக்கவேண்டும்.”
மனித வரலாற்றை வதைகளதும் படுகொலைகளதும் பரீட்சார்த்தக் களமாக மாற்றியிருந்த ஹிட்லரின் வீழ்ச்சியுடன், ஆஷ்விச்சையும் இன்னபிற வதைமுகாம்களையும் பார்த்த அதிர்ச்சியில் 1948ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, ஜனவரி 12, 1951இல் அமுலுக்கு வந்த ‘இனப்படுகொலையைத் தடுப்பதற்கும் தண்டனையளிப்பதற்குமான சட்டம்’ கோப்புகளின் கல்லறையில் அந்தோ செத்துக்கிடக்கிறது.
‘இனப்படுகொலை’என்ற வார்த்தையை ஐ.நா.வும் அமெரிக்காவும் உச்சரித்தால், இராணுவத் தலையீடு என்ற விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும். அத்தகைய தருணங்களில் உபயோகிப்பதற்கென்றே இருப்பவைதாம் ‘உள்நாட்டு யுத்தம்’, ‘இரு தரப்பினருக்கிடையேயான மோதல்’, ‘ஆட்சியாளர்களின் சர்வாதிகாரம்’, ‘குருதியின் பயங்கரம்’, ‘கூட்டுப் படுகொலைகள்’ ஆகிய பிரயோகங்கள். அரசியல் என்ற சதுரங்கத்தில் மேலாண்மையுடைய நாடுகள் சிறு கீறலும் படாமற் தப்பிக்க மேற்குறித்த வார்த்தைகளே உதவுகின்றன.
ஆக, உலக மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பவர்களாகத் தம்மைக் கருதிக்கொண்டிருப்பவர்கள், ருவாண்டாவில் நடந்தது இனப்படுகொலையே என உச்சரிக்கவோ அறிக்கைகளில் குறிப்பிடவோ மறுத்தார்கள்.

அப்போது, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட உள்ளறிக்கையொன்றில் தெளிவாக  அறிவுறுத்தப்பட்டுள்ளது: “எச்சரிக்கை! இனப்படுகொலை என அடையாளப்படுத்துவதானது நம்மை ‘எதையாவது’ செய்யவேண்டிய கட்டாயத்துள் தள்ளும்”
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பேச்சாளர் கிறிஸ்டின் ஷெல்லி செய்தியாளர் மாநாடொன்றில் ருவாண்டா பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.
“ருவாண்டாவில் ‘இனப்படுகொலை நடவடிக்கைகள்’ (acts of genocide)நடப்பதாக அறிகிறோம்”
“இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கும் இனப்படுகொலைக்கும் என்ன வித்தியாசம்?” செய்தியார்களுள் ஒருவர் கேட்கிறார்.
“அது வந்து…….. நான் நினைக்கிறேன்… உங்களுக்குத் தெரியும்……… அதற்கென்றொரு வரைவிலக்கணம் இருக்கிறது….” என்று இழுத்து நீண்ட விளக்கமொன்றைச் சொல்கிறார் ஷெல்லி.

“எத்தனை ‘இனப்படுகொலை நடவடிக்கை’கள் சேர்ந்தால் ஒரு இனப்படுகொலை ஆகும்?”
“இதுவொரு கேள்வியேயல்ல; நான் இதற்குப் பதிலளிக்க வேண்டியதில்லை”
ஆயிற்றா? எல்லாம் சட்டப்படி நடக்கவேண்டும் என்று முடிந்தபோதெல்லாம் அறிவுறுத்தும் கனவான்களே!
அப்போதுதான் சோமாலியாவில் முப்பது அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்; அமெரிக்கப் படைகளை உப்புப் பெறாத ருவாண்டா போன்ற நாடுகளில் பலியிட முடியாது; செலவினங்களின் நெருக்கடி; அதிபர் பில் கிளின்டன் அவர்கள் சிக்கல்களிலிருந்து விலகியிருக்க விரும்பினார்; மேலும், மிக முக்கியமாக ருவாண்டாவில் நிலக்கரியோ எண்ணெயோ குறைந்தபட்சம் கப்பல்களை நிறுத்தக்கூடிய துறைமுகமோ இல்லை. பிறகெப்படித் தலையிட முடியும்? நியாயமான கேள்விதான்! பெரியண்ணனும் உலகப் பொலிஸ்காரனுமாகிய அமெரிக்கா பிற்பாடு மன்னிப்புக் கேட்டது. அமெரிக்காவின் மன்னிப்பு என்ற வார்த்தையானது, ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான ருட்ஸிக்கள் மற்றும் அவர்களுக்குச் சார்பானவர்கள் என்று கருதிப் படுகொலை செய்யப்பட்ட சில ஆயிரக்கணக்கான ஹுட்டுக்களின் உயிர்களுக்கு நிகரானது. நம்புங்கள் நண்பர்களே!
பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் அமெரிக்க அதிபர் ருவாண்டாவின் மண்ணில் தன் பாதங்களைப் பதிக்கவியலாமற் போயிற்று. கிகாலியின் விமானநிலையத்தில் ஒரு மண்டபத்தில் அந்த மன்னிப்புக் கோரும் நிகழ்வு நடந்தேறியது.
“ருவாண்டாவின் இனப்படுகொலையில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது தேசத்தின் மரியாதையைச் செலுத்தவே இன்று இங்கு வந்திருக்கிறேன். அனைத்துலக சமூகமும் ஆபிரிக்காவின் இதர நாடுகளும் ருவாண்டாவில் நிகழ்ந்தேறிய துயரமான அழிப்பின் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளவே வேண்டும். படுகொலைகள் ஆரம்பித்தவுடன் அதைத் தடுத்து நிறுத்த உடனடியாக ஒன்றும் செய்யவில்லை….. அந்தக் குற்றத்தை இனப்படுகொலை என்ற பொருத்தமான சொல்லால் விளிக்கவும் நாங்கள் தவறியிருந்தோம்…”
என்று அந்நாள் அமெரிக்க அதிபர் கிளின்டன் உரையாற்றியதாக அப்போது ருவாண்டாவின் நாடாளுமன்றப் பேச்சாளராயிருந்த ஜோசப் செபரென்சி எழுதுகிறார். மேலும் அவர், ‘அப்போது கூட்டத்தினர் பலமாகக் கைதட்டினார்கள்’என்றெழுதுகிறார்.

ஈழத்தமிழர்களும் தட்டுவார்கள். தட்டுவோம். தோள்பட்டையோடு கைகள் துண்டிக்கப்பட்டவர்கள் உணர்ச்சிகளற்ற விழிகளால் வெறுமனே வெறித்துக்கொண்டிருக்க, கூட்டத்தில் சாதாரணமாக எதிர்ப்படக்கூடிய, நம்பிக்கைக்குரிய ஒருவரின் முகத்தினைக் கொண்டிருக்கும் இந்நாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தனது உறுதியான, கனத்த குரலில் ‘உயர்ந்ததோங்கிய பனைமரங்களோடும் கடலோடும் கூடிய எழிலான இந்த நிலத்தில் நடந்த இறுதிப்போரின் சரியான தருணத்தில் நாங்கள் தலையிட்டிருந்தால் சில ஆயிரக்கணக்கான உயிர்களையாகுதல் காப்பாற்றியிருக்கலாம். எனது தேசத்தின் மக்கள் சார்பில் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்”என்று வருத்தந்தோய்ந்த குரலில் உரையாற்றும்போது… நாங்கள் கைகளைத் தட்டித்தானாக வேண்டும்.

எப்பேர்ப்பட்ட மனிதரால் கோரப்படும் எப்பேர்ப்பட்ட மன்னிப்பு அதுவாக இருக்கும். ஒன்றரை இலட்சம் ஆன்மாக்களின் சார்பில் அந்த மன்னிப்பை நாங்கள் கையேந்திப் பெற்றுக்கொள்வோம்.
ஐ.நா.வும் எப்பேர்ப்பட்ட சபை அது! குறையொன்றும் சொல்வதற்கில்லை. ஐ.நா.வின் அப்போதைய செயலாளர் கோபி அனான் தன் பங்கிற்கு வருகை தந்து ருவாண்டாவின் ருட்ஸிக்களிடம் மன்னிப்புக் கேட்கிறார்.
“அனைத்துலக சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து இனப்படுகொலையைத் தடுக்கத் தவறிவிட்டன. இந்த உலகம் இந்தத் தவறுக்காக வருத்தப்பட்டே ஆகவேண்டும். இனப்படுகொலையின் அடையாளங்களை இப்போது உணர்கிறோம். ஆனால், அதை நாங்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.”
‘அப்போது அறிந்திருக்கவில்லை!’ எத்தகைய தூய உண்மையொளி வீசும் ஒப்புதல் வாக்குமூலம்!

‘அறிந்தே பாவம் செய்தவர்கள்’ ருவாண்டாவிற்குப் போனார்கள். கரைகளில் கொல்லப்பட்டு தண்ணீருள் வீசியெறியப்பட்ட ருட்ஸிக்களது பிணங்களின் கனத்தினால் நகரமாட்டாமல் நகர்ந்த காஹிரா மற்றும் யாபொரொங்கோ ஆறுகளில் பாவங்களைக் கரைத்தபின் பரிசுத்தர்களாகத் திரும்பினார்கள்.
முள்ளிவாய்க்காலிலிருந்து ‘மீட்டெடுக்கப்பட்டு’செட்டிகுளத்திலுள்ள மெனிக் பண்ணையில் (மாணிக்கம், மெனிக் ஆன கதை தனிக்கதை) கொண்டுவந்து கொட்டப்பட்ட அகதிகளைப் பார்வையிட, தடுப்புமுகாம்கள் என்று வசதிக்காக விளிக்கப்பட்டுக்கொண்டிருந்த வதைமுகாம்களுக்குச் சென்று திரும்பிய மதிப்பிற்குரிய ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் என்ன சொன்னார்?
“அதுவொரு துன்பகரமான விஜயம். மெனிக்பாம் முகாமின் நிலை சூடானின் டாபர் மற்றும் கோமாவில் உள்ள முகாம்களிலும் பார்க்க அதிமோசமானது”
“அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஐ.நா. பணியாளர்கள் வெளியேறியது தவறு என்பதை இப்போது உணர்கிறோம்”என்கிறார் அப்போது ஐ.நா.வின் இலங்கைக்கான செய்தித் தொடர்பாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றிய கார்டன் வைஸ்.
அண்மையில், ஐ. நா. மனிதவுரிமைகள் அமைப்பின் ஆணையாளரும் ஒப்பீட்டளவில் நீதியும் நடுநிலையும் பேணக்கூடியவர் என்று அறியப்பட்ட நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கைக்கு வந்து நிலைமைகளைப் பார்வையிட்டுச் சென்றிருக்கிறார். ஈழத்தமிழர் விடயத்திலும் குற்றங்களையும் பிணங்களையும் எண்ணிக் கணக்கெடுக்கும் கணக்காளர் பதவியிலேயே ஐக்கிய நாடுகள் சபை இத்தனைக்குப் பிறகும் நீடித்திருக்கப் போகிறதா என்பதை இனிவரும் நாட்கள் எடுத்தியம்பும்.
ஆக்கிரமிப்பாளர்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கான இனிப்புகளுடனும் புன்னகையுடனுமே உள்நுழைகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய அமைதிப் படை அதிகாரிகள் வந்திறங்கிய அன்று அவர்கள்தாம் எத்தனை சிநேகபூர்வமாகக் கையசைத்தபடி உலங்கு வானூர்தியிலிருந்து இறங்கி வந்தார்கள். வானூர்தியின் தலைவிசிறி சுழன்ற வேகத்தில் மைதானத்தின் புற்கள் தலைசாய்ந்து சிலிர்த்ததற்குக் குறைந்ததாயில்லை அங்கு கூடியிருந்த மக்களும் மாணவர்களும் விழிகள் பனிக்கச் சிலிர்த்தது! பிறகு, தெருக்களெங்ஙணும் பிணங்களைப் பார்த்து அதிர்ந்தோம்.
பொஸ்னியாவின் செர்ப்ரெனிக்கா,  நகரத்தினுள் நுழைந்த ஜெனரல் மிலாடிச்சும் அவரது சேர்பியப் படைகளும் முஸ்லிம் குழந்தைகளுக்கு இனிப்புகளை விநியோகித்த காட்சியுடன்தான் எல்லாம் ஆரம்பமாகின.
ஆக்கிரமிப்பு இராணுவத்தின் குழந்தைகள் மீதான கரிசனை உலகறிந்தது. உனக்கு- பாலச்சந்திரனுக்கு பிஸ்கட்டுகளைத் தின்னக் கொடுத்தார்கள். உனது விழிகள் யாரையோ எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தன.

அதிசயங்களின் காலம் முடிந்துவிட்டது செல்வமே! உடலில் அருகிருந்து சுட்ட ஐந்து குண்டுகள் தைத்த அடையாளங்களுடன் நீ விழுந்து கிடந்தாய். உனதருகில் கிடந்த பாதுகாவலர்கள் ஐந்துபேரின் ஆடைகளும் உயிர்களும் உருவப்பட்டிருந்தன. பேரினவாதிகள் நிர்வாணத்தையே நேசித்தார்கள்.

பொஸ்னிய, செர்ப்ரெனிக்காவினுள் நுழைந்த சேர்பியப் படைகளின் தளபதி ஜெனரல் மிலாடிச்தான் எத்தகு பெருந்தன்மையோடு நடந்துகொண்டார்:

 “எங்களிடம் ஆயுதங்களைக் கையளிக்கிறவர்களை உயிரோடு விட்டுவிடுவோம் என உறுதியளிக்கிறோம்”
ஆயுதங்கள் கையளிக்கப்பட்டபின் ஐம்பது பேருந்துகளில் ஏற்றி நீங்கள் அனுப்பப்படுகிறீர்கள். இடையில் சேர்பியப் படைகள் அந்தப் பேருந்துக்களை வழிமறித்தது உங்கள் தாகசாந்தியைத் தீர்த்துவைக்கவல்ல. பன்னிரண்டு வயதிலிருந்து எழுபத்தேழு வயதுவரையிலான ஆண்கள் அந்தக் கூட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு இறக்கிச் செல்லப்படுகிறீர்கள். அடுத்து வந்த சில நாட்களுக்கு இயந்திரத் துப்பாக்கிகள் வெடி தீர்க்கும் ஓசையும் கையெறி குண்டுகள் வெடிக்கும் ஓசையும் அந்தப் பிரதேசத்தை அதிரவைக்கின்றன.

“அது என்ன சத்தம்?” எஞ்சியிருந்த மக்களும் பேருந்துகளை எதிர்கொண்டிருந்த ஐ.நா. அதிகாரிகளும் கேட்கிறார்கள்.

“எங்கள் இராணுவம் வானத்தை நோக்கிச் சுட்டு வெற்றியைக் கொண்டாடுகிறது.”
வானம் என்பது எப்போதும் வானத்தைக் குறிப்பதன்று என்பதை, “ருஷ்லாவை வந்தடைந்திருக்க வேண்டிய ஆண்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் குறைவாக இருந்தது”என்ற ஐ.நா.அதிகாரிகளின் அறிக்கையிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
அந்தச் சம்பவம் நிகழ்ந்தேறி ஓராண்டுகளுக்குப் பின், செர்ப்ரெனிக்காவை வந்தடைந்த மனித உடற்கூற்று ஆராய்ச்சியாளர் குழுவொன்று, காணாமற் போன எட்டாயிரம் ஆண்களுக்கு என்ன நடந்ததென்ற புதிரை நூற்றுக்கணக்கான மனிதப் புதைகுழிகளிலிருந்து விடுவித்தது. அந்தக் குழுவில் ஒருவராகிய லியா கோஃப் சொல்கிறார்:

“ருவாண்டாவில் புதைகுழிகளுள்ளிருந்து கண்டெடுக்கப்பட்ட உடல்களுக்கும் இவற்றுக்கும் பல ஒற்றுமைகள்… கொல்லப்பட்டவர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன; அனைவரும் ஆண்கள்; சாதாரண பொதுமக்களின் உடைகளை அணிந்திருந்தார்கள்.”
இனப்படுகொலைகளின் பார்வையாளர்களாக இருந்த, இருக்கும் சர்வதேசமும் ஐ.நா.வும் கடப்பாரைகளோடும், உடல்களைப் பொதியும் பொலித்தீன் பைகளோடும் மனித உடற்கூற்றியல் ஆராய்ச்சியாளர்கள் சிலரை இலங்கைக்கு அனுப்பிவைக்கும் நல்முகூர்த்தமொன்றினை எதிர்பார்த்து நாமும் காத்திருக்கலாம். முள்ளிவாய்க்காலின் சதுப்பு நிலத்தடி, முல்லைத்தீவின் மணற்பாங்கான நிலத்தடியிலிருந்து ஆயிரக்கணக்கான உடல்கள் கைகள் கட்டப்பட்டும் கைகளே இல்லாமலும் கண்டெடுக்கப்படலாம். நீதியை எலும்புகளும் மயிர்களும் பற்களுமாக புதைகுழிகளினுள்ளிருந்து மீட்கும் காலத்தில் வாழ்கிறோம்.
புதைகுழிகள் தோண்டப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் ஜெனரல் மிலாடிச்சின் புகைப்படங்களோடும் புகழ்பாடும் வாசகங்களோடும் கூடிய சுவரொட்டிகள் செர்ப்ரெனிக்காவில் முளைத்தன.

“மிலாடிச் கைது செய்யப்பட்டால்…. சமாதானத்திற்கு உத்தரவாதமில்லை”
“அனைத்துலக விசாரணைகளுக்கு அவசியமில்லை”

“உள்நாட்டுப் பிரச்சனைகளில் தலையிடுவதானது அந்த நாட்டின் இறைமைக்குப் பங்கம் விளைவிப்பதாகும்”
“அமெரிக்கா ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் செய்யாததையா இலங்கை அரசு செய்துவிட்டது?”
வரலாற்றுச் சக்கரம் ஒரே திசையில்தான் சுழல்கிறது; பொஸ்னியாவிலும், இலங்கையிலும்.
“காணாமற் போன ஆண்களைப் புதைகுழிகளில் கண்டுபிடித்தோம்; அந்தப் பெண்கள் என்னவானார்கள்?”என்ற கேள்விக்கு ஆயிஷா உமர் விடையளிக்கிறார்:
“சேர்பிய ஆக்கிரமிப்பின்போது எனது கணவரும் மகனும் கொண்டுசெல்லப்பட்டார்கள். என்னை முகாமொன்றிலே சேர்த்தார்கள். சேர்பிய இராணுத்தினர் என்னைத் ‘துருக்கிய வேசை’என்று அழைத்தார்கள். பிறகு என்னை வன்புணர்ச்சி செய்யத் தொடங்கினார்கள். ஒவ்வொரு தடவையும் அழுவேன்… ஆனால், ஒரு பயனுமில்லை. நான் சுயநினைவு இழக்கும்வரை அவர்கள் விலகிச் செல்வதில்லை. விழித்தெழும் ஒவ்வொரு தடவையும் வேறொருவன் காத்திருப்பான். நான் கர்ப்பம் தரித்துவிட்டேன் என்று அறிந்ததும் ஒரு வண்டியிலே ஏற்றி சரஜேவோவுக்கு அனுப்பிவைத்தார்கள். ஞாபகங்களின் பைசாசத்திலிருந்து விடுபட்டு அமைதியடைவதற்காக மாத்திரைகளை விழுங்கினேன். அதனாற்றான் என்னுடைய மகன் பதட்டத்திற்கு ஆளானவனாக இருப்பதும் சிகிச்சைக்கு உள்ளாகவேண்டியிருப்பதும் ஏற்பட்டது. நான் என்னுடைய மகனை நேசிக்கிறேன். சிலவேளைகளில் அவனைப் பார்க்கும்போது என்னுள் கோபம் படர்வதை உணர்கிறேன். ஆனாலும், எனது குடும்பத்திற்கும் வாழ்வுக்கும் நடந்தேறிய அவலத்தின் அடையாளமாகவே அவனைக் காண்கிறேன்.”
‘வல்லுறவு முகாம்’கள் என்றழைக்கப்பட்ட வதைமுகாம்களில் பொஸ்னிய முஸ்லிம் பெண்களை அடைத்துவைத்திருந்து கர்ப்பந் தரிக்க வைத்ததன் மூலமாக பொஸ்னிய இனத்தூய்மையை அழித்துவிட்டதாக சேர்பியர்கள் எக்காளமிட்டார்கள். கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டு கைகளும் கால்களும் கட்டப்பட்டு, இலங்கை இராணுவத்தின் பாலியல் பசிக்குத் தீனியாக்கப்பட்ட அங்கங்களில் குருதி வடிய நிர்வாணமாகக் கிடந்த இசைப்பிரியாவையும் அவரைப் போலவே பலியான இதர பெண்களையும் பார்த்து கெக்கலி கொட்டி நகைத்த இலங்கை இராணுவத்தின் கண்களில் இருந்ததும் ‘தமிழர்களை இழிவு செய்துவிட்டோம்’என்ற எக்காளமே! உயிரிழந்த பெண் போராளிகளின் பிறப்புறுப்புக்களுள் பென்சில்களைச் செலுத்தித் தங்கள் அறிவின் முனையைக் கூர்தீட்டிக்கொண்டதும்கூட எதிரி இனத்தின் ஆண்களை இழிவுசெய்யும்முகமாகவே! பாலியல் வன்புணர்ச்சி செய்தபின் கொல்லப்பட்டவர்களின் நிர்வாணமான உடல்களை சப்பாத்துக் கால்களால் மிதித்ததும், கால்களில் பற்றி ட்ரக் வண்டிகளுள் தூக்கியெறிந்ததும் இழிவுபடுத்தலின் வகைமாதிரிகளுள் ஒன்றே!
பெண்களின் உடல்களில் தங்கள் மானத்தின் கனத்தை ஏற்றியிருக்கும் ஆண்மைய சமூகத்தைக் குறித்து பிறிதொரு சமயம் நகைக்கலாம்.
ஜெனிவா உடன்படிக்கையின் நான்காவது ஷரத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதென்றால், “பெண்களின் கௌரவத்திற்குப் பங்கம் விளைவிக்கும் எந்தவொரு தாக்குதல்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படல் வேண்டும், குறிப்பாக பாலியல் வன்புணர்ச்சி, வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுதல், எந்த வடிவத்திலேனும் அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இழிவுபடுத்தல்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படல் வேண்டும்.”
சட்டங்கள் எல்லாம் செயல்வடிவம் பெறவேண்டிய அவசியமில்லை!
பொஸ்னிய முஸ்லிம்கள் சேர்பியப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்டதைக் குறித்து அப்போது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமாக இருந்த கோபி அனான் பாவமன்னிப்பொன்றைக் கோரவேண்டியிருக்கிறது.
செர்ப்ரெனிக்காவின் துயரம் எங்கள் வரலாற்றை என்றென்றைக்குமாக அலைக்கழித்துக்கொண்டிருக்கும்”
2009இல் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனக்கபளீகரத்தின்போது இலங்கைக்கான ஐ.நா.வின் பேச்சாளராகவிருந்த கார்டன் வைஸ், முள்ளிவாய்க்காலை, ‘இலங்கையின் செர்ப்ரெனிக்கா’ என்கிறார். ஒப்பீடுகளுக்கொன்றும் பஞ்சமில்லை!
படுகொலைகளின் ஈற்றில் சொல்லப்படுவதற்கென்றே சில வாசகங்களை முன்தயாரித்து வைத்துக் காத்திருக்கிறார்கள் ஐ.நா.,, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகிய, உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் நீதிமான்கள்.
 ‘மறக்கப்பட்ட இனப்படுகொலை’என்று அழைக்கப்படும், ஆர்மேனியர்களது படுகொலை நடந்தேறி, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாகியும் துருக்கியர்கள் அதற்குப் பொறுப்புக்கூற மறுத்தே வருகிறார்கள். அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக ஆர்மேனியப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சிலருக்கு துருக்கி அரசு கையூட்டுக் கொடுத்து, ‘அப்படியொன்று நடக்கவேயில்லை’என, வரலாற்றை மாற்றி எழுதும்படியாகப் பணிக்கிறார்கள் என்று விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். நியுரம்பர்க் வழக்குகள் வழியாகத் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்ட இருபத்திரண்டு பேர்களுள் பன்னிரண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏனையோருக்கு வழங்கப்பட்ட சிறைவாசகாலம் முடிவுறும் முன்னமே அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். நாடுகளுக்கிடையிலான இணக்க அரசியல் அவர்களின் குற்றத்தின் கனத்தைக் குறைக்கப் பணித்தது. பொஸ்னியாவிலும் ருவாண்டாவிலும் கூட ஒப்பீட்டளவில், பலியுயிர்களைக் காட்டிலும் குற்றவாளிகளுக்கே நியாயம் செய்யப்பட்டிருக்கிறது.
உயிரிழந்த உறவுகளின் உடல்களை எடுத்துப் புதைக்கவோ எரியூட்டவோ முடியாமல் தெருவோரங்களில் விட்டுவந்த உறவுகள் ஆற்றாமையால் குரலெழுத்து அழுத குரல்கள் முள்ளிவாய்க்காலின் கரையோரத்தில் இன்னமும் அலைந்துகொண்டேயிருக்கின்றன. மயக்கமருந்து கொடுக்கப்படாமல் (இல்லாத காரணத்தால்)கசாப்புக் கடையில் பாவிக்கும் கத்தி போன்ற ஒன்றினால் கால்வெட்டப்பட்ட ஆறு வயதுச் சிறுவனின் ஞாபகம் வாணி குமாரின் (முள்ளிவாய்க்கால் பேரழிவின்போது அங்கு தங்கியிருந்த, பிரிட்டனை வாழ்விடமாகக் கொண்ட வைத்தியர்) ஞாபகத்திலிருந்து என்றென்றைக்கும் அகலப்போவதில்லை.

“ஆஸ்பத்திரியிலை கூட குண்டுபோடுறாங்களே காளியாச்சீ!”என்று கதறிய முதிய பெண்ணின் குரலை, ஓடைபோல நிலத்தில் நகர்ந்துகொண்டிருந்த குருதியை மரணபரியந்தம் மறத்தல் கூடுமா? ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய மனிதாபிமானம் மிக்க வைத்தியர் ஒருவரது வாழ்நாளானது ‘மருந்துகளோ இரத்தமோ இல்லை’என்று மனம்வெதும்பி, இறுதிநாளில் கைவிட்டு வந்த நூற்றுக்கணக்கான காயக்காரர்களின் ஞாபகத் தீயில் கருகிக்கொண்டேயிருக்கும். காயப்பட்டு நகரமுடியாமற் கிடந்து, ‘எங்களையும் கூட்டிக்கொண்டு போங்கோ’என்று கதறிய குரல்களால் உலுக்கப்பட்டு நடு இரவுகளில் இன்னமும் எழுந்திருக்கிறார்கள் தப்பித்து வந்தவர்கள்.
இவற்றுக்கெல்லாம் பதிலிறுக்க வேண்டிய இலங்கை அரசோ, இன்றளவும் தன்னால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கும் மனிதவிரோத செயற்பாடுகளுக்கும் பொறுப்பேற்காததோடல்லாமல், அனைத்துலகம் மற்றும் மனிதவுரிமை அமைப்புக்களின் வேண்டுகோள்களுக்குச் சவால் விடுக்கும் நாடாகவே இருந்துவருகிறது. இலங்கை அரசானது, தனது அமைவிடம் என்ற துருப்புச் சீட்டின் மூலமாக, பிராந்திய, உலக வல்லாதிக்கப் போட்டியாளர்களைச் சாதுரியமாகக் கையாண்டு வருகிறது.

மேலும், ‘ஒரு துளி இரத்தத்தைத்தானும் எனது கைகளில் காட்டமுடியுமா?’என்று துணிந்து அறைகூவல் விடுக்கிறார் அதிபர் மஹிந்த ராஜபக்‌ஷ. இத்தனைக்கும் டப்ளின் தீர்ப்பாயம் இலங்கைப் படைகள் இறுதிப் போரின்போது மனிதகுலத்திற்கு விரோதமான குற்றங்களை இழைத்தது என்று தனது அறிக்கையின் மூலமாகத் தெரிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை தனது பங்கிற்கு ‘இரண்டு தரப்பினரும் போர்க்குற்றங்களை இழைத்திருக்கிறார்கள்’என்று, கணக்கெடுப்பு அறிக்கையொன்றை வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் (2013) ஜெனிவாவில் நடந்தேறிய ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இருந்தும் என்ன? ‘உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ அவன் இவள் மீது முதற் கல்லை எறியட்டும்’என்ற இயேசு கிறிஸ்துவின் வாசகத்தோடு தன்னை எதிர்ப்பவர்களை எதிர்கொள்கிறது இலங்கை. இத்தனை உரத்த, உறுதியான, தெளிந்த குரலைக் கேட்கையில், நாம் கண்ணால் பார்த்த காணொளிகளும், காதால் கேட்ட போரின் சாட்சியங்களும், விம்மி வெடித்து மனதை அசைத்த அழுகுரல்களும் வதைமுகாம்களின் கதைகளும் போரின் எச்சங்களாகிவிட்ட புதைகுழிகளும் சிதைந்த கட்டிடங்களும் அங்கவீனர்களும் பேதலிப்பிலிருந்து மீளமுடியாது திகைப்பிருளினுள் வீழ்ந்து கிடக்கும் மனிதர்களும் சிறைப்பட்டிருப்போரும் காணாமற் போனோரும் இன்னபிறவும், பிறரும் மனப்பிரமையின் பைசாச சலனங்கள்தாமோ? என்று ஐயுறுகிறோம்.
ஆக, “இனி ஒருபோதுமில்லை” என்று கண்ணீரோடும் குற்றவுணர்வோடும் கொதிப்போடும் துயரத்தோடும் ஆற்றாமையோடும் உலகெங்கிலும் ஒலித்த குரல்கள் மங்கிவிட்டன. இனப்படுகொலைக்கெதிரான சட்டங்களோ கோப்புகளுள் நித்திய உறக்கத்தில்.
“இனி ஒருபோதுமில்லை”என்றார்கள்.
“ஒரு தடவை நடந்தாகிவிட்டதெனில், அவையனைத்தும் மீண்டும் நடக்கும் என்பதே எளிய உண்மையாகும்.”என்கிறார் 1945இல் இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு வந்ததுடன் நேசப்படைகளால் ஆஷ்விச்சின் மரணமுகாமிலிருந்து மீட்கப்பட்டு, வதைமுகாமின் குரூரங்களை தன் எழுத்தின் மூலம் உலகறியச் செய்தவராகிய பேராசிரியர் எலீ வீஸல்.

உசாத்துணை நூல்கள்:
THE HOLOCAUST CHRONICLE (பலரால் இணைந்து தொகுக்கப்பட்ட நூல்)
RWANDA AND GENOCIDE IN THE TWENTIETH CENTURY: by ALAIN DESTEXHE
GENOCIDE: modern crimes against humanity by Brendan January
CARAVANS TO OBLIVION: by G.S. Graber
GOD SLEEPS IN RWANDA by JOSEPH SEBARENZI with LAURA ANN MULLANE

நன்றி- வலசை, மார்ச் இதழ்