2.23.2010

கிருபாநந்தினியும் இலங்கைத் தமிழர்-இந்தியத் தமிழர் மேலும் சில அபத்தங்களும்….

நண்பர்களோடு உரையாடும்போது அடிக்கடி ஒரு வாசகத்தைப் பிரயோகிப்பதுண்டு: “உறங்கும்போதும் கால்களை ஆட்டிக்கொண்டே உறங்கவேண்டும்; இல்லையெனில் இறந்துவிட்டோமென்று நினைத்து எடுத்துப் புதைத்துவிடுவார்கள்”. நான் ஒரு மாதகாலமாக சென்னையிலே இல்லை. போய்த் தங்கியிருந்த இடத்திலோ இணையவசதி கிட்டியும் கிட்டாததுமான சூழல். செய்திக்குருடாய் இருப்பது வருத்தமாகவும் அதேசமயம் அதிலொரு அஞ்ஞான நிம்மதியும் இருப்பதாய் உணர்ந்தேன். நான் குமுதத்தில் எழுதியிருந்த ‘இங்கு ஈழம் விற்கப்படும்’என்ற கட்டுரையைக் கிண்டலடித்து கிருபாநந்தினி என்றொரு பதிவர் எதிர்வினையாற்றியிருப்பதாக நண்பர் ஒருவர் தொலைபேசியூடாகச் சொன்னதையடுத்து, இணையத்தொடர்புள்ள இடமொன்றுக்குச் சென்று அதை வாசித்துத் தொலைத்தேன். முதலில் வருத்தமாக இருந்தது. பிறகு, எப்போது எதை எழுதினாலும் சர்ச்சைக்காளாகும் நச்சுச்சூழலை நினைத்து களைப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது. சர்ச்சைகளால் பிரபலமாகும் சிறுபிள்ளைத்தனமான ஆர்வக்கோளாறு முற்றிலும் தீர்ந்துபோன நிலையில் உண்மையிலேயே அயர்ச்சியாக இருந்தது.

சுண்டைக்காய்/பிசாத்து தமிழ்நதிக்கே இந்த நிலையெனில் ஜெயமோகன், சாரு வகையறாக்களுக்கு எந்த நிலை என்று நினைத்துப் பார்த்தேன். இனியொருபோதும் அவர்களது பெயர்களை இழுத்து எழுதக்கூடாதென்று நினைக்கும்படியான பரிவும் பரிதாபமும் மேலிட்டது. (இதற்குள் ஈழப்பிரச்சனையில் சாரு-ஜெயமோகனின் நிலைப்பாடு பற்றி நான் எப்போதோ எழுதியிருந்த கட்டுரைக்கு புதிய பின்னூட்டங்கள் வந்திருந்தன. அதன் பின்னணி யாது? யாராவது அந்தக் கட்டுரையை எடுத்து எங்காவது போட்டிருக்கிறார்களா? எனது தலையை உருட்ட புதிதாக எவரேனும் கிளம்பியிருக்கிறார்களா? என்ற கேள்விகளுக்குப் பதில் அறியாத நிலையில் இதனை எழுதவாரம்பித்திருக்கிறேன்.)

கிருபாநந்தினிக்குப் பதில்சொல்லிக்கொண்டிருந்தால் நேரவிரயந்தான் மிஞ்சுமெனத் தெரிந்தும், அன்றைக்கிருந்த வரண்ட மனோநிலையில் எழுந்த கொதிநிலையில் மனதில் தோன்றிய எதையோ போய்ப் பதிலாக எழுதிவிட்டு வந்தேன். அப்படிக்கூடப் பதிலளித்திருக்க வேண்டியதில்லை என்பதைக் காலந்தாழ்த்தி உணர்ந்துகொண்டேன். ஆகவே, கிருபாநந்தினி வரலாற்றைத் தெரிந்துகொள்ளும்வரை காத்திருக்கலாமென முடிவுசெய்து அவரைக் கடந்துசெல்கிறேன். ஆனால், அவருடைய பதிவுக்கு வந்த பின்னூட்டங்களில் சில என்னை ஆழ்ந்து யோசிக்கத் தூண்டின. மனித மனம் எவ்வளவு காற்றோட்டமில்லாத குறுகிய பரப்பினுள் இயங்குகிறது என்பதை நினைக்குந்தோறும் வியப்பாக இருக்கிறது.

பின்னூட்டங்களில் ‘நாங்கள்’, ‘நீங்கள்’என்ற பதங்களைப் பிரயோகித்திருந்தோம். ‘இலங்கைத் தமிழர்கள்’, ‘இந்தியத் தமிழர்கள்’என்று வேறு சிலர் பிரித்துப் பேசியிருந்தார்கள். முன்பொரு பதிவில் குறிப்பிட்டிருந்ததுபோல, “நான் நாடு, மொழி, இனம், எல்லைகளைக் கடந்த பெருந்தன்மையானவள்; உலகிலுள்ள அனைத்து உயிரையும் ஒன்றுபோலவே நேசிக்கிறேன் என்று நான் சொல்லமாட்டேன்”. எனது இனம், எனது மொழி, எனது மக்கள் என்ற தனிப்பட்ட வாஞ்சை எனக்குண்டு. அதேசமயம், காரணமற்ற காழ்ப்புணர்வை மற்றவர்கள்மீது ஊற்றும்படியாக நடந்துகொள்ளும்பட்சத்தில் என்னை நானே மதிக்கத் தவறுவேன் என்பதிலும் சந்தேகமில்லை.

‘இலங்கைத் தமிழர்கள்’ என்றோ ‘இந்தியத் தமிழர்கள்’என்றோ யாருமில்லை; ‘தமிழர்’என்றொரு இனம் மட்டுமே உண்டு என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு. இந்தத் ‘தொப்பூள்கொடி உறவுகள்’, ‘இரத்தத்தின் இரத்தம்’, ‘உடன்பிறப்பு’இன்னோரன்ன உணர்ச்சிவசப்பட்ட அரசியல் வணிகச் சொற்களுக்கு அப்பாற்பட்ட உறவு நம்முடையது.

“நீங்கள் எங்களைக் கைவிட்டீர்கள்; நீங்கள் எங்களைச் சாகக்கொடுத்தீர்கள்; நீங்கள் எங்களைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை”என்று ஆற்றாமையால் பிதற்றுவதெல்லாம் இழப்பின் வலியினாலேயன்றி, இன்னொரு நாட்டவர் என்ற வன்மத்தினாலல்ல. “எங்களை ஏன் கைவிட்டீர்கள்?”என்று இஸ்ரேலியர்களைப் பார்த்து எங்களால் கேட்கமுடியாது. பதவிக்கும் பணத்துக்கும் வெட்கம்கெட்டு விலைபோன அரசியல்வாதிகள் வாழ்ந்துகொண்டிருக்கும் இதே மண்ணில்தான் தன்னினத்துக்காக தன்னுடலைக் கொழுத்திக் கருகிய முத்துக்குமார் என்ற மாவீரன் வாழ்ந்து மறைந்தான்.

எந்தச் சமரசத்தையும் இலாபத்தையும் முன்னிட்டு மேற்கண்ட வரிகளை நான் எழுதவில்லை. எனக்கு எவரிடமிருந்தும் எந்தக் காரியமும் ஆகவேண்டியிருக்கவில்லை. ஆற்றியிருக்க வேண்டிய ஒரு வரலாற்றுக் கடமையிலிருந்து தமிழகம் வாழ் தமிழர்கள் தவறிவிட்டார்கள்; அவர்களது அரசாங்கங்கள் என்ற அதிகாரங்கள் தமது இரும்புக்கரங்களினால் அடக்கியபோதிலும் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும் என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால், ‘நீங்கள் வேற்று நாட்டவர்’என்று பாகுபாடாக ஒருபோதும் கருதியதில்லை. “சிலோன்காரங்களுக்கு வீடு கொடுக்கக்கூடாது”என்று பேசுகிற தமிழகம்வாழ் சிலரையும், “வயிற்றுவலியை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பக்கூடாது”என்று சொல்கிற யாழ்ப்பாண வேளாளச் சிந்தனாவாதிகளையும் புறங்கையால் ஒதுக்கிவிட்டுப் பொதுப்படையாகப் பார்க்கலாம்.

கிருபாநந்தினி உட்பட பலரும் இராஜீவ் காந்தி கொலையைத் தலைமேல் தூக்கிப்பிடித்துக்கொண்டு ஆடுகிறார்கள். ஆ… வூவென்றால் ‘இராஜீவ் காந்தியைக் கொன்னுப்புட்டாங்களே… கொன்னுப்புட்டாங்களே’என்கிறார்கள். அமைதிப்படைக் காலத்தில் பல்லாயிரக்கணக்கில் ஈழத்தில் பலியெடுக்கப்பட்ட மக்களை அத்தகையோர் வசதியாக மறந்துவிட்டார்கள். ஒரு நாட்டை ஆளும் (அன்றேல் ஆண்ட) பிரதமரின் உயிர் மட்டுமே உயிர் மற்றதெல்லாம் மயிர் என்று சொல்வது விசித்திரமாக இருக்கிறது. மனித உயிரின் மதிப்பைப் பணத்தினாலும், பதவியாலும், அதிகாரத்தினாலும் அளப்பதுபோலிருக்கிறது. இந்தப் பாரபட்சப் பாவத்தை எந்தக் கங்கையிலே கொண்டுபோய்க் கழுவுவது? சேலத்தைச் சேர்ந்த ஒரு கவிஞர் (செல்வக்குமார் என்று நினைக்கிறேன்) எழுதினார்.
“ஒரு பிணத்தை
பத்தொன்பது ஆண்டுகளாக
தோண்டித் தோண்டி எடுத்து
ஒப்பாரி பாடிக்கொண்டிருக்கிறார்கள்”

கறுப்பனென்றால் கள்ளன்; பாகிஸ்தானி ஊத்தை; ஈழத்தவன் வன்முறையாளன்; இந்தியன் ஏமாற்றுபவன்; வெள்ளைக்காரன் சுத்தம் பரிசுத்தம் என்றெல்லாம் பொதுப்புத்தியிலே ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது। எல்லா இனங்களிலும் எல்லா நாடுகளிலும் அனைத்து மொழி பேசுபவர்களிடையேயும் கள்ளன்களும்(ளிகளும்), ஊத்தையன்களும், வன்முறையாளர்களும், கொலைகாரர்களும், ஊழல்பேர்வழிகளும், பாலியல் கொடூரன்களும், சமூக விரோதிகளும், புனிதர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். துரோகி-தியாகி என்ற பதங்களையெல்லாம் பிரேதப்பரிசோதனை செய்துகொண்டிருக்கும் இந்தத் திசைமாறுகாலகட்டத்திலே, பெரும்பாலான ஈழத்தமிழர்களால் துரோகி என்று சுட்டப்படுகிற, வெறுக்கப்படுகிற துரோகிகள் ஈழத்தமிழர்களுக்குள்ளேயே இருக்கிறார்கள். இந்நிலையில், “நீரே குற்றவாளி”என்று தமிழகத் தமிழர்களை எங்கள் ஆற்றாமையினால் சாடுகிறோம். இந்திய அரசின் கைகளில் படிந்துள்ள இரத்தக்கறை மிகத் துல்லியமானது. அதைத் தட்டிக் கேட்கத் தகுதியற்றுப்போன தமிழக அரசின் ‘அதிகார எல்லை’களும் நாமறிந்ததே.

இந்நிலையில், “எங்களை நீர் கைவிட்டீர்…எங்களை நீர் பலிகொடுத்தீர்…”என்று மீண்டும் மீண்டும் தமிழகத்தாரைக் குற்றஞ்சாட்டக் காரணம், இத்தனை கோடிப் பேரிருந்தும் ‘என்னய்யா கிழித்தீர்கள்?’என்ற ஆற்றாமைதான். கோபந்தான்.கையறு நிலை கையறு நிலை என்றொரு கடைகெட்ட, அர்த்தம்கெட்ட சொல்லை வெறுக்கிறோம். அந்தத் தார்மீகக் கோபத்தில் ‘நீங்கள்’, ‘நாங்கள்’, ‘இந்தியர்’, ‘ஈழத்தவர்’ என்றொரு புண்ணாக்குப் பாகுபாடுமில்லை.

கிருபாநந்தினியும் குப்பன் யாகூ போன்ற மிகச்சிலரும் (நல்லவேளையாக பெரும்பான்மையான பதிவுலக நண்பர்கள் மிகத் தெளிவோடு இருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்) நான் ஏதோ தமிழகத்தமிழர்களுக்கு எதிரி என்ற தோற்றப்பாட்டைக் கொணரப்பார்த்தார்கள். அதில் தோற்றுப்போனார்கள் என்பது வேறு விடயம்.

ஒப்பீட்டளவில் கனடாவைவிட, ஈழத்தைவிட எனக்குத் தமிழகத்தில்தான் நண்பர்கள் அதிகம்। பட்டியலிடப் போனால் நூற்றுக்கணக்கில் வரும். கொஞ்சம் ‘படம் காட்டுவது’போலவுமிருக்கும். அதனால் பெயர்களைத் தவிர்க்கிறேன். எனது வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தவர்களும், துயரத்தைப் பரிசளித்தவர்களும்கூட அந்த நண்பர்களுள் உள்ளடங்குவர்.
இதைத் தன்னிலை விளக்கமாக எடுத்துக்கொள்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம். ‘இதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டியது அவசியமா?’என்று கேட்கும் அக்கறையுள்ள நண்பர்கள் என்னை மன்னித்துவிடுங்கள். ஈழம்-தமிழ்நாடு என்பது தமிழ்நதி சார்ந்த தனிப்பட்ட விடயமல்ல. ஒருசிலருக்காவது என்மீது ஏற்படக்கூடிய கசப்பு எனது மக்களைப் பாதிக்கக்கூடாது என்பதில் நான் கவனமாயிருக்கிறேன்.
கடைசியாக ஒன்று:
“இதன் மத்தியில் எல்லாப் பத்திரிகையாளர்களும் தொழில்ரீதியாக எழுத முடிந்ததை எழுதிக் காசு பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்। நீங்கள் உட்பட.”என்று,
கிருபாநந்தினியின் பதிவில் தனது பெயரை வெளியிடத் துணிச்சலற்ற அனானி ஒருவர் வந்து பின்னூட்டியிருந்தார்.

அனானி நண்பரே,

தமிழில் எழுதிக் ‘காசு பார்ப்பது’அத்தனை எளிதென்றா நினைக்கிறீர்கள்? நீங்கள் ஏன் இவ்வளவு அறிவிலியாக இருக்கிறீர்கள் ஐயா அல்லது அம்மணி? வெளியூரில் நடக்கும் ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு எவ்வளவு செலவழிக்க வேண்டியிருக்கிறது என்பதை உங்களால் ஊகிக்க முடிகிறதா? இதுவரையில் எனது நான்கு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிய ‘கானல் வரி’, ‘இரவுகளில் பொழியும் துயரப்பனி’பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கில்லை.புத்தகம் வெளியாகிய கையோடு நான் ஊருலாத்தக் கிளம்பிவிட்டேன். மற்ற இரண்டும் வெளியாகி ஆண்டுகளாகியும் எனக்கு ‘ராயல்டி’தொகை என்று ஒரு சதமும் கிட்டவில்லை. (ஒருவேளை அப்படி ஒன்று இல்லவே இல்லையோ?) ‘எழுத்தாளர் பிரதிகள்’என்று சில கிடைத்ததோடு சரி. ஆனந்தவிகடனிலோ குமுதத்திலோ வெளியாகும் கட்டுரைகள், கவிதைகளுக்கு சில ஆயிரங்கள் கிடைத்திருக்கின்றன. (அண்மையில் ஆனந்தவிகடனில் கவிதைகள் வெளியாகியிருந்ததற்குச் சன்மானமாக ஆயிரத்தைந்நூறு ரூபாய் அனுப்பியிருந்தார்கள்) எனது வாழ்க்கை முறையை, பயணங்களை, ஊதாரித்தனத்தை, செலவழிக்கும் தன்மையை நீங்கள் அறிந்தவராக இருந்திருந்தால் மேற்கண்ட உயரிய கருத்தை உதிர்த்திருக்க மாட்டீர்கள். நான் எழுதுவது ‘காசு பார்ப்பதற்காக’இல்லை. அது வரைவிலக்கணங்களுக்கு உட்படாத, வார்த்தைகளில் புரியவைக்கமுடியாத திருப்தி கலந்த ஓருணர்வு. ஆத்மார்த்தம் என்ற வார்த்தை எழுதித் தேய்ந்துபோயிற்று. அந்தப் பிடிமானத்தில்தான் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். ஒருவேளை ‘நான் வாழ்ந்தேன் என்பதற்குச் சாட்சியமாக’ எதையாவது விட்டுச்செல்ல முயல்கிறேனோ என்னவோ…

கிருபாநந்தினி ஆரம்பித்து வைத்த சர்ச்சை இப்படியொரு பதிவில் முடிகிறது. ஏதோவொரு ஆர்வக்கோளாறினால் அவர் எழுதிவிட்டார். அவருக்குக் கிடைத்த எதிர்வினைகள் அவரை எழுத்தினின்று பின்வாங்கச் செய்துவிடக்கூடாதென்பதே ஒரு பெண்ணாக எனது ஆதங்கம். அதேசமயம், பரபரப்பு வேண்டி ஒருவரைக் குறித்து அவதூறு செய்வதன் முன் ஒன்றுக்குப் பல தடவைகள் அவர் சிந்தித்திருக்க வேண்டும்.

நான் இல்லாதபோதும் என்னோடு இருக்கும் நண்பர்களாகிய ரதி, செந்தழல் ரவி, புளியங்குடி, சந்தனமுல்லை, தீபா, ஸ்வாதி மற்றும் தங்களது பின்னூட்டங்களின் வழியாக ஈழப்பிரச்சனையின் ஆழத்தையும் நியாயத்தையும் எடுத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

2.06.2010

ஆண்கள்-பெண்கள் மற்றும் அவதூறின் அரசியல்


இருண்ட கர்ப்பக்கிரகங்களுள் இருள்நிறத்திலான பெண் தெய்வங்கள் கருணைபொலிய, பொழிய காலகாலமாக அமர்ந்திருக்கிறார்கள். ‘ஆணும் பெண்ணும் சகவுயிர்கள்’ என்று, கைதட்டலைக் கறக்கும்விதமாக குரலுயர்த்தி மேடைகளில் முழங்கும்போது, பார்வையாளர்கள் பழக்கம் காரணமாக உணர்ச்சிவசப்பட்டு கைதட்டுகிறார்கள். பட்டிமன்றங்களோவெனில் ‘பெண்களே குடும்பத்தைக் கட்டிக்காக்கிறார்கள்’என்ற பெருந்தன்மைத் தீர்ப்பளித்து நிறைவுறுகின்றன. ‘இட ஒதுக்கீடு’ இன்னபிற சொற்கள் அரசியல் வட்டாரங்களில் அடிக்கடி புழங்கிக்கொண்டே இருக்கின்றன.இருந்தபோதிலும் பெண்கள் இன்னமும் இரண்டாம் பாலினமாக நடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

பெண்ணாகப் பிறந்ததை ஒரு துருப்புச்சீட்டாக, பிழைப்பின் கருவியாக, ஏமாற்றும் தொழிலின் மூலதனமாகப் பயன்படுத்தும் ஒரு சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அது அந்தந்த நபர்களின் தனிப்பட்ட குணாதிசயம் சார்ந்ததாகும். அத்தகையோர் ஆணாகப் பிறந்திருந்தாலும் அவ்விதமே நடந்துகொண்டிருப்பர். சமுதாயத்தின் பாரபட்சங்களால், அடக்குமுறைகளால், ஓரவஞ்சனையால், ஒழுக்கவிதிகளால் உண்மையிலும் உண்மையாக பாதிக்கப்பட்ட-பாதிக்கப்பட்டுவரும் பெருவாரியான பெண்களைக் குறிக்கவே ‘பெண்’என்ற சொல் இந்தப் பத்தியில் பிரயோகிக்கப்படுகிறது.

சொத்துரிமையைக் கையகப்படுத்த விரும்பிய ஆண்களால், தாய்வழிச் சமூகக் கட்டமைப்பு சிதைக்கப்பட்டு, பிறந்த குடும்ப அமைப்பிலிருந்து பெண்ணின் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டதாக வரலாறு சொல்கிறது. குடும்பம் ‘அருளிய’ தாய், மனைவி என்ற தெய்வீகப் பீடங்களில் புளகாங்கிதத்தோடு அமர்ந்து சுயத்தினை இழந்துபோன பெண்களின் வரலாறு பரிதாபகரமானது. அவ்வாறான அடிமைச்சுகவாசிகளது மனதின் அடியாழத்துள்ளும் விடுதலைக்கான வேட்கை நிலத்தடி நீராக இருக்கக்கூடும். பழக்கப்பட்ட கூண்டுச்சுகம் விரும்பும் கிளிகளுக்கு வானம் சிறகெட்டாத தூரமே. ஆனால், ‘நானும் நீயும் ஒன்றாகவே படைக்கப்பட்டோம்… உனக்குரியவை அனைத்தும் எனக்குரியவையே’என்று பேசப் புறப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் எண்ணற்றவை.

ஒரு குடும்பத்தில் வளரும் பெண்பிள்ளை மனைவி, தாய் எனும் உருமாற்றங்களுக்குத் தயார்ப்படுத்தப்படுகிறாள். சிமொன் தி பொவார் சொன்னதுபோல, “பெண்கள் பிறப்பதில்லை… அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்” ஆனால், ஆண்பிள்ளை திருமணத்தின் முன்னும் பின்னும் ‘ஆணாக’வே நிலைத்திருக்கிறான்.குடும்பம், கலாச்சாரம், மதம் போன்ற கிடுக்கிப்பிடிகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு பொதுவெளிக்கு வரும் பெண்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகள் விசித்திரமானவை.கலாச்சாரத்தின் பெயரால், மதத்தின் பெயரால் மிகச் சாதாரணமாக ஒரு பெண்ணைக் குற்றஞ்சாட்டமுடிகிறது. அவளுடைய நடத்தையை, உடையை, சிந்தனையை, எழுத்தை, பேச்சை கேள்விகேட்க முடிகிறது. ‘நீ இந்தச் சமுதாயத்திற்குரிய பெண்ணல்ல’என்று ஒதுக்கிவைப்பதன் வழியாக, மனவுளைச்சலையும் அயர்ச்சியையும் ஏற்படுத்தி, அவளுடைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க வைக்கவும் முடிந்திருக்கிறது. பெண் கவிஞர்கள்‘ஆபாசமான சொற்களைப் பிரயோகித்து ஆபாசமான கவிதைகளை எழுதுகிறார்கள்’என்றொரு குற்றச்சாட்டை, அதன் ஆழம் புரியாமல் போகிறபோக்கில் பேசுகிறவர்களைப் பார்த்திருக்கிறோம். ‘கவிதை ஒன்றை எழுதிவிட்டு ஆங்காங்கே சில கெட்டவார்த்தைகளைச் செருகிவிடுவார்களாயிருக்கும்’என்று அண்மையில் ஒருவர் சலித்துக்கொண்டார். வார்த்தைகளுள் கெட்ட வார்த்தை எது? நல்ல வார்த்தை எது? கெட்ட வார்த்தைக்கான வரைவிலக்கணந்தான் என்ன? என்ற கேள்விகளைப் பற்றி இன்னொரு நாள் பேசலாம். (அப்படியொருநாள் வரவே போவதில்லை என்பதே உண்மை) தன்னுடைய உடலை, உணர்வுகளை, தன்னுடைய படைப்புகளில் வெளிக்கொணர ‘அவளே’தகுதியுடையவள் என்பதை இப்படிப் பேசுகிறவர்கள் உணர்வதில்லை. ஒரு படைப்பின் கருவாக்கமும் உருவாக்கமும் எவர் மனதில் நிகழ்கிறதோ அவரே சொற்களைத் தேர்ந்தெடுக்கிறார். ‘ஆகச்சிறந்த படைப்பாளி’ என்று வியக்கப்படுகிற கடவுளுக்கு (அப்படி ஒருவர் இருந்தால் - ஒருத்தி என்று சொல்வது வழக்கமில்லையே…) மயிலையும் -காட்டெருமையையும், மலரையும் - முள்ளையும் படைக்க முடியுமெனில், ‘அவளுக்கு’ மட்டும் அவ்வுரிமை கிடையாதா? வலிந்து திணித்தலற்று இயல்பாக முகிழ்த்து வருகின்ற படைப்பினுள் கெட்டவார்த்தை என்று சமூகத்தினால் சுட்டப்படுகிற ஒன்று இருக்குமாயின், அது கேலிக்குரியதோ கேள்விக்குரியதோ அன்று.
ஆறாத காயத்தைப் பிரித்துப்பார்க்கும்போது அதிலிருந்து குருதி கொப்பளித்துப் பாய்வதுபோல, இதுநாள்வரை கிடைக்காத சந்தர்ப்பம் கிடைக்கும்போது காலங்காலமாக அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகள் எழுத்தாக, பேச்சாகப் பீறிடுகின்றன। பாசாங்கற்ற கண்ணீர்,கோபம்,காமம் தன்னியல்போடு எழுத்தில் வெளிப்படும்போது, அது கவனிக்கப்படுகிறது. மாற்றாக, சில தன்துருத்திகளும் விளம்பரமோகிகளும் அதை மடைமாற்றி, பொதுவெளியில் இயங்குகிற அத்தனை பெண்கள்மீதான வெறுப்பாகத் திசைதிருப்பிவிடுவது துர்ப்பாக்கியமானது.

‘சில பெண்கள் ஆபாசமாக எழுதுகிறார்கள்; இப்படியான எழுத்துக்கள் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன’ என்று கூச்சலிடுபவர்களிடம் கேட்பதற்கென்று ஒரு கேள்வியுண்டு. நீங்கள் சொல்கிற சமுதாயம் உண்மையில் நீங்கள் சொல்கிற ஒழுக்க விழுமியங்களோடு இயங்கிக்கொண்டிருப்பதாக நீங்கள் நெஞ்சறிய நம்புகிறீர்களா? அவ்வாறெனில் எய்ட்ஸ் போன்ற உயிர்கொல்லி நோய்கள் நமது சமூகத்தில் குறிப்பிடத்தக்க விகிதாசாரத்தில் பரவியிருக்கக் காரணந்தான் என்ன?

‘முலைகள்’என்ற தலைப்பை ஒரு கவிதைத் தொகுப்பிற்குச் சூட்டிய காரணத்தால் அளவிறந்த விமர்சனங்களுக்கு ஆளானவர் கவிஞர் குட்டி ரேவதி। அதே தலைப்பை ஒரு ஆண் சூட்டியிருந்தால் இத்தனை சர்ச்சைகள், இருட்டடிப்பு, ஓரங்கட்டல்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கும் பல கவிஞர்களின் (ஆண்) கவிதைகளிலும் கதைகளிலும் பல ‘யோனிகள்’வருகின்றன. பல நூறு ‘முலைகள்’இடம்பெறுகின்றன. கலவிக் காட்சிகள் சித்தரிக்கப்படுகின்றன. அண்மையில் வா.மு.கோமுவின் புத்தகம் ஒன்றைக் குறித்து உயிர்மை வெளியீட்டு விழாவில் விமர்சித்துப் பேசிய எழுத்தாளர் முருகேச பாண்டியன் “இதைப் படித்தபோது இங்கேயுள்ள பெண்களில் பலர் பாவாடை நாடாவைக் கழற்றிக் கையில் பிடித்துக்கொண்டிருப்பதான சித்திரம் தோன்றிமறைந்தது”என்றார். ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’என்ற நாவலை ஒரு பெண் எழுதியிருந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைத்துக்கொண்டபோது, சமூகத்தின் பாரபட்சம் சீற்றமளிப்பதாக இருந்தது.

பெண்களைப் பற்றி அவதூறு பேசுவது என்பது தமது பிறப்புரிமைகளுள் முக்கியமானதொன்று எனச் சில ஆண்கள் (குறித்துக்கொள்ளவும் சில ஆண்கள்) நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இவள் ‘சீதை’எனவும், இவள் ‘பரத்தை’எனவும் முத்திரை குத்தவும் தாங்கள் உரித்துடையவர்கள் என்பது அவர்களது எண்ணமாயிருக்கிறது. ஒருவனின் உதடுகளால் வேசியென முன்மொழியப்படுமொரு பெண், அவளைத் தொடரும் கலாச்சாரக் கண்களனைத்தாலும் வேசியாகவே வழிமொழியப்படுகிறாள். அவர்களது கீழ்மனம் விதம்விதமான கற்பனைச்சரடுகளை இழுத்துவிட்டுக்கொண்டேயிருக்கிறது. ‘விடுதியில் அழகிகள் கைது’என்று மொண்ணையாகச் செய்தி வெளியிடுகிற ஊடகங்களுக்கும், ‘அவள் ஒரு தேவடியாள்’என்று, கூடிக் குடித்துவிட்டுப் பேசுகிற ஆண்களுக்கும் வேறுபாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. விபச்சாரம் என்பது ஒரு பெண்ணால் தனியாக நிகழ்த்தப்படுவதில்லை. அப்படியானால், அங்கே அந்தப் பெண்களோடு கலவியிருந்த ‘அழகன்கள்’செய்திகளிலிருந்து மறைந்துபோவது எப்படி? பொதுப்புத்தி சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிற சாதாரண சமூகத்தினரைக் காட்டிலும், இலக்கியமும் தத்துவமும் இன்னபிறவும் படித்து அறிவுஜீவிகள் என்று தம்மை அறிவித்துக்கொண்டிருக்கும் சிலர் அவதூறுகளைப் பரப்புவதன் வழியாக அதிகப்பட்ச வன்முறையைப் பெண்கள்மீது செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். பொதுவெளியில் இயங்கும் பெண்களைப் பற்றிய கட்டுக்கதைகளைச் செவியுறும்போது மனசு துணுக்குறுகிறது. உறுதியும் தெளிவுமற்ற பெண்களை அத்தகைய அவதூறுகள் மீண்டும் வீட்டுக்குள் விரட்டிப் புண்ணியம் கட்டிக்கொள்கின்றன.

பெண்ணை, குடும்ப அமைப்பு தாயும் மனைவியுமாக்கி முடக்குகிறது.கலாச்சாரம் பதிவிரதையாக்கிப் பதுக்குகிறது. இலக்கியம் கண்ணகி என்கிறது. கணவன் பிறபெண்ணுடன் கலவி முடித்துத் திரும்பிவரும்போது அவனது கால்களைக் கழுவி ஏற்றுக்கொள் எனக் கற்பிக்கிறது. இதிகாசம் சீதையாக்குகிறது. கணவன் கீறிய கோட்டைத் தாண்டினால் ‘ஐயோ ஐயோ என்று போவாய்’ என்கிறது. செவியுறும், வாசிக்கும், பார்க்கும், அனுபவிக்கும் எல்லாமும் மனிதனின் ஆறறிவைச் சந்தேகிக்கத் தூண்டுகின்றன. பாரபட்சங்களும் தளைகளும் நிறைந்த இந்தக் குடும்ப அமைப்பின், சமூகத்தின் அடிப்படைப் பிறழ்வுகள் குறித்து முதலில் கேள்விகள் எழுப்பக் கற்றுக்கொள்வோம். அடுத்த, அதற்கடுத்த தலைமுறைகளிலாவது நமது ஆறாவது அறிவு ஓரவஞ்சனைகளற்று இயங்கவாரம்பிக்குமென பிரார்த்திப்போமாக!


நன்றி: அம்ருதா