11.27.2006

கார்த்திகை -27

மெல்லிருளில் சுடர்நடுங்கும்
மெழுகுவர்த்தி ஏந்தி
கல்லறைக்கு வந்துள்ளோம்
கனக்கிறது மௌனம்
‘தாயகக் கனவுடன்’
எனத் தொடங்கி
கொல்கிறது பாடல்
இதயத்தின் சிறுமையெல்லாம்
கண்ணீர் மடைதிறந்து
கழுவிப் போகிறது.

மரணத்தின் வாசனை படர்ந்த
தெருக்களை இன்று மறக்கிறோம்
எழுந்தும்மை நினைக்கிறோம்.
பாதையை மூடி பசி என்ற தீ வளர்த்து
வாடிக் கிட என்று வதைத்தாலும்
எம்முணர்வு ஓடிப் போகுமோ
உள்ளிருந்து ஒலிக்காதோ…?

கடல்கள் கன்னத்தில்
கண்ணீர்த்துளியாக
மலைகள் மனங்களிலே
மாவீரர் நினைவாக
வேர்விட்டு வந்தவரும்
விழுதெறிந்த தேசமெல்லாம்
கூடி நினைக்கின்றோம்
களத்திலே கண்மூடி
காவியமாய் ஆனவரை.

வாழ்வோ நெடுந்துயரம்
வானமோ அடர்கருமை
இருந்தாலுமென்ன…
நாளை விடிந்துவிடும்
நம்மூரின் காற்றலையில்
நாதஸ்வர ஓசை வரும்.
வானில் நிலவுருகி
பொழியும் இராப்போதில்
பாடலொன்று மிதந்துவரும்
கேட்டிருப்போம் விழிநனைய.

11.24.2006

நாற்காலிச் சிறையிலிருந்து….

இது வெப்ப மூச்செறியும் மதியந்தான்
எனினும் இதமாய் குளிர்கிறது.
நடைபாதை பிச்சைக்காரனின்
நன்றி ஒளிர்ந்த விழிகளையும்
தோழியின் இமையோரம் கசிந்த
கண்ணீர்த்துளி மற்றும் கையசைப்பும்
நினைவின் பாதையில் நெடுநாள் இருக்கும்.
போகிறேன்…
பல கிளைகளாய் பிரியும் தெருக்களில்
எந்த வழியெனினும் இனிச் சாத்தியமே…!

மன்னிக்கவும்
நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை
சற்று முன்னர்தான்
நாற்காலியோடு பிணைக்கப்பட்டிருந்த முதுகில்
சிறகைப் பொருத்தியது நிகழ்ந்தது.
கண்ணாடித் தொட்டியிலிருந்து
கடலுக்குள் குதித்த மீனாய்…
அட! மதியம் இத்தனை அழகா…?
மூலைக்கடையில் பூக்கள் விற்பனை
இதுநாள்வரையில் எங்கொளிந்திருந்தது…?

ஒன்றின் நகலாய் எத்தனை நாட்கள்
நாசமாய்ப் போக…!
அதே அலாரம்…
அதே வழி…
அதே கோப்பு…
அதே முகங்கள்…
அதே பிச்சைக்காரன்…
ஒரு பிடிவாதக்காரக் குழந்தையைப்போல
உறங்க மறுக்கும் விழிகளை
பயமுறுத்திப்பணியவைக்கும்
பாவத்திலிருந்து இனி விடுதலை.
கடிகாரத்தின் முட்சிறையிலிருந்து மீட்சி.

சிரிப்பின் பொருள் புரிகிறது…
மாத இறுதி வந்தால் சிறகு தெருவோரம்!
ஞாபகப்படுத்தாதீர்
சில நாட்களேனும்
இளவேனிலில்இருந்துவிட்டுப் போகிறேன்.

பின்குறிப்பு: வேலைக்குக் கையசைத்து விடைபெற்ற நாளொன்றில் எழுதியது.

11.23.2006

சொற்களுடனான உறவு



அறைக் கதவைப் பூட்ட
சொற்களின் கதவுகள் திறக்கின்றன.

செப்புக் களிம்பு படிந்த
தொன்மத்தின் வாயில்களினூடே
புதைந்துபோன பெண்களின்
அழுகை மிதந்து வருகிறது.
பேரிரைச்சலுடன் திறக்கின்றன
வரலாற்றின் கபாடங்கள்.
கனவும் புனைவுமான
காதல் வரிகள்…
மதுவில் தோய்த்தெடுத்த
கவிஞனின் உளறல்கள்…
போர் விழுங்கிய தெருக்களில்
அலைகின்ற பாடல்கள்…

வலி பொதிந்த சொற்களிலிருந்து
தப்பித்து ஓடிவிடலாம்.
ஆனால்…
காமமும் காதலும் இணைந்த
கூடலின் உச்சம்
சொற்களுடனான உறவு.

வலிந்து மறந்திருக்கிறேன்
சொற்களால் கைவிடப்பட்ட ஒரு மாலையில்
வெளியேறத் திறக்கும் கதவின் வழியாக
உள்ளே வரவிருக்கும் தனிமையை.

11.20.2006

வலைப்பதிவர் சந்திப்பு: பார்த்தது, கேட்டது, நெகிழ்ந்தது

நாங்கள் தமிழர் என்பதை நேர விடயத்திலும் நிரூபித்துக்கொண்டிருப்பது நியாயமில்லை என்று தோன்ற, ஒன்றுகூடல் நடைபெற்ற மண்டபத்தை சரியாக நான்கு மணிக்கே சென்றடைந்துவிட்டோம். (பன்மையில் கூறக் காரணம் இருக்கிறது. பெண்கள் அதிகம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிந்தமையால் தனியாகத் தெரிவதன் சங்கடத்தைத் தவிர்க்க அண்ணாவின் மகளை அழைத்துப்போயிருந்தேன்.) அதிகம் பெண்கள் வரமாட்டார்கள் என்பது தெரிந்திருந்தும் பெயராய் அறிந்த முகங்களைப் பார்க்கும் ஆவலுக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது.

யெஸ்.பாலபாரதி (யெஸ் என்றால் என்ன…?) கைகூப்பி வரவேற்றார். தொலைபேசியில் கேட்ட குரலைவிட நேரில் இளைஞர்தான். வழக்கம்போல பின்னிருக்கையைத் தேர்ந்து அமர்ந்துகொண்டோம்.

வலைதிரட்டிகளின் அடுத்த நகர்வு என்பது குறித்து மா.சிவகுமாரும் தொழில்நுட்பம் தொடர்பாக விக்கியும் பேசியதை கொஞ்சம் அசுவாரசியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால், கோவையாக சற்றும் பிசிறில்லாமல் எப்படிப் பேசுவதென்று மா.சிவகுமாரிடம் கற்றுக்கொள்ளலாமென்ற எண்ணம் வந்தது. ‘பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து புறப்பட்டு…’இப்படியான ரீதியில் அலுப்புத்தட்டாமல் ‘புளொக்குகிற’மா.சிவகுமார் இவர்தான்; என்பது பேச்சின் முடிவில்தான் இந்த மூளையில் பொறிதட்டியது.

த.அகிலனின் பேச்சு மீண்டும் ஊருக்கு அழைத்துப்போனது. ‘பிணங்கள் என்பது அங்கு சர்வசாதாரணம்’என்று அவர் சொன்னபோது குற்றவுணர்வாக இருந்தது. ஊராசையை விட உயிராசை பெரிதென்று ஓடிவந்த எங்களைப் போன்றவர்களுக்கு உறுத்தத்தானே செய்யும். தான் கண்டதை முன்னெப்போதும் காணாதவர்கள் முன் இயல்பாகப் பகிர்ந்துகொண்ட விதம் பிடித்திருந்தது. அதைவிட முக்கியமாக, எங்களது மக்களின் மரணம் சூழ்ந்த வாழ்வு குறித்த விடயங்களை அக்கறையோடும் ஆதூரத்தோடும் துயர் தோய்ந்த விழிகளுடனும் வந்திருந்த வலைப்பதிவர்கள் செவிமடுத்த காட்சி ஈழத்தைச் சேர்ந்தவள் என்ற வகையில் மனம் நெகிழவைத்தது. கண்ணீர் வந்துவிடுவேன் வந்துவிடுவேன் என்று பயமுறுத்திக்கொண்டேயிருந்தது. மண்டபத்துக்குள் வரும்போது இருந்த சங்கடம் விலகி அங்கிருந்தோருடன் மிகுந்த நெருக்கத்தை உணரமுடிந்தது. ஹிட்லரின் கோயபல்ஸ்சை ‘பாவம்பா’என்று சொல்லிவிடக் கூடிய விதத்தில் பொய்யுரைத்துவரும் இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஊடகங்களைப் பற்றி அகிலன் கூறியது ஆறுதலாக இருந்தது.

ஈழத்தைச் சேர்ந்த மற்றொரு வலைப்பதிவாளரான நிலவன் என்னைப்போல சிரித்துக்கொண்டேயிருந்தார். கடைசிவரை பேசவில்லை.

அடுத்து ‘வலைப்பூவில் சாதியம்’ பற்றி பாலபாரதி பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே துணைக்குரல்கள் பல எதிரொலித்தன. அதிலொருவர் “சாதியம் பற்றிப் பேசி என்ன செய்யப் போகிறோம்…?”என்றார். “அப்போ வாழ்ந்தென்னங்க பண்ணப் போறோம்”என்றொரு எதிர்க்குரல் கேட்டது. “நாம எழுதி என்ன பண்ணப் போறோம்…?”என்றொரு கேள்வி என்னிடம் இருந்தது. வழக்கம்போல கேட்கப்படாத கேள்வியாய் உள்ளேயே மடிந்துபோனது. “நான் இதுவரைக்கும் உருப்படியாக ஒரு பதிவும் போட்டதில்லை”என்ற பாலபாரதியின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

உலகெங்கிலும் பட்டினியால் நாளாந்தம் எத்தனையோ பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். போர் ஓரிடத்தில் இருக்கவிடாமல் இலட்சக்கணக்கானவர்களை விரட்டிக்கொண்டிருக்கிறது. உடுதுணிக்காகவும் ஒரு கூரைக்காகவும் எத்தனையோ உயிர்கள் ஏங்கிக் காத்திருக்கின்றன. இவ்வாறானதொரு உலகத்தில் நாமும் ஒரு அங்கமாக வாழ்ந்துகொண்டு சாதியம் பேசத்தான் வேண்டுமா என்ற அயர்ச்சி எழுந்தது.

பாலபாரதி பேசிக்கொண்டிருக்கும்போது குரல்கள் உயர்ந்து உயர்ந்து அமிழ்ந்தன. சண்டைதான் போடப்போகிறார்களோ என்று பயமாக இருந்தது என்று எழுதினால் அது பொய். (இதைவிடப் பெரிய சண்டையெல்லாம் பாத்திருக்கோமில்ல…) நிறையப் பேர் கதம்பமாகப் பேசியதில் ஒன்றும் புரியவில்லை.

வருவார் வருவார் என்று பாலபாரதியால் சொல்லப்பட்ட ‘பொன்ஸ்’ஒருவழியாக வந்துசேர்ந்தார். சத்தியமாக எனக்கு அவர் மூலம் ஆகவேண்டியது ஏதுமில்லை. உண்மையாகவே நல்ல அழகான சிரிப்பு. கனடாவிலிருந்து வலைபதியும் மதி பற்றிக் கேட்டார். நானும் எனது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொண்டேன்.

ரொம்பப் புழுகிற அல்லது புகழுற மாதிரியான சில வரிகளை ‘பொன்ஸ்’இன் பதிவில் பார்த்தேன். சரி… சரி…“உங்க சிரிப்பு அழகாக இருந்தது” என்று கூறியதற்குப் பிரதியாக (நன்றிக்கடனாக) இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார். மன்னித்து மறந்துவிடுவோம்.
கனடாவில் வாழும் எனது நண்பர் டி.ஜே. என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். வலைப்பதிவு நண்பர்களிடையே ரோசாவசந்த்தைச் சந்தித்தால் என்னை ‘டி.ஜே‘யின் நண்பர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசும்படி. அந்த உரையாடல் இப்படித்தான் அமைந்தது.

“நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்…?”

“திருவான்மியூரில்”

“நான் ஈ.சீ.ஆர். றோட்டில் இருக்கிறேன். நீங்கள்…?”

“நானுந்தான்…”

“நான் ஆர்.டீ.ஓ. ஆபீஸ் பக்கம்.. நீங்கள்”

“நானுந்தான்…”

எனக்கொரு சந்தேகம் வந்துவிட்டது. எந்நேரமும் பூட்டியபடியே இருக்கும் முன் வீட்டில்தான் அவர் இருக்கிறாரோ என்று. நல்லவேளை (அல்லது கெட்டவேளை) அவரது வீடு சற்று தள்ளி இருந்தது. ‘நீங்கள் ஒரு கலகக்காரரா?’என்ற எனது கேள்விக்கு ரோசாவசந்த் போனால் போகட்டுமென்று சிரித்துவைத்தார்.

சற்றைக்கெல்லாம் மையப் புள்ளியிலிருந்து விலகி பேச்சு அங்குமிங்கும் திரியத்தொடங்கியது. சின்னச் சின்னக் கும்பலாகக் கூடி அவரவர் ‘அலப்பறை’ஆரம்பமாயிற்று.

முத்து தமிழினி, பாலா, றோசாவசந்த், எஸ்.கே, பொன்ஸிடம் கொஞ்சம் பேசியபின் விடைபெற்றோம். அகிலனையும் நிலவனையும் தேடினால் காணோம்.

கிளம்பும்போதும் பாலபாரதி கைகூப்பி வழியனுப்பினார். ‘யெஸ்.’ என்பதன் பொருள் கொஞ்சம் புலனாகியது. இப்படி ஒரு சந்திப்பை ஒருங்கிணைப்பதென்பதும் அதை கைகலப்பின்றி கலகலப்பாக முடிப்பதென்பதும்… ‘யெஸ்’அசாத்தியம்தான்.

‘எள் ஏன் காயுது எண்ணெய்க்கு… எலிப்புழுக்கை ஏன் காயுது கூடக் கிடந்த குற்றத்துக்கு’என்று எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதற்கிணங்க தனக்கு சம்பந்தமேயில்லாத பேச்சுக்களை ‘சிவனே’என்று ‘பார்த்துக்கொண்டிருந்த’ எனது மருமகளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். தேநீர், பிஸ்கெட்டுடன் ஒரு சமோசா அல்லது வடை தந்திருக்கலாமென்பதே இந்தச் சந்திப்பைப் பற்றிய அவளது மேலான அபிப்பிராயமாக இருந்தது. பாலபாரதியிடம் இத்தால் சொல்லிவைக்கிறேன்… அடுத்த சந்திப்பில் சீர்செய்வார் என்று நம்புகிறேன்.

11.17.2006

மந்திரப்பெட்டியும் மாயக்கோலங்களும்…



“ஆண்டவலிங்கத்தை எங்கை ஒளிச்சுவைச்சிருப்பாங்கள்…?

“அபி செய்யிறது சரியான பிழை… மற்றாக்களின்ரை கதையை நம்பி தொல்சை வெளியிலை அனுப்பியிருக்கக்கூடாது”

யார் இந்த ஆண்டவலிங்கம்…?

“ஊர்க்காரரா? கூட வேலை செய்கிறவரா…? நண்பரா…? பலரின் பேச்சில் குறிப்பாக பெண்களின் பேச்சில் இவரது பெயர் அடிபடுவதேன்…?” இந்தக் கேள்வியை சிலரிடம் நீங்கள் எழுப்புவீர்களேயானால் ‘செவ்வாயிலிருந்து வந்தவரா நீங்கள்’ என்பதாய் அவர்கள் புருவமுயர்த்தக்கூடும். உங்கள் கேள்விக்கான பதிலை அவர்கள் வாயால் கூறக்கேட்டு வியப்புற்றீர்களெனில் நீங்கள் தொலைக்காட்சியில் செய்தி மட்டும் பார்க்கிற ‘அப்புறாணி’என்று அர்த்தம். ஆனால், யதார்த்தத்திற்கு அப்பால் ஒரு புனைவுலகத்திற்குள் தங்களைப் பொருத்திக்கொண்டுவிட்டவர்களுக்கு அபியும், ஆண்டவலிங்கமும் ஊரிலிருந்த (புகலிடங்களில் அல்ல) பக்கத்துவீட்டுக்காரர்களைப்போல மிக அறிமுகமானவர்கள். சிலசமயம் ஆதர்சமும்கூட.

ஒரு சதுர வடிவப் பெட்டி எங்களில் செலுத்தும் ஆதிக்கத்தின் ஒரு வகையான வெளிப்பாடுதான் தொலைக்காட்சி நாடகங்கள். பெரும்பாலான பெண்களின் நேரத்தைத் தின்று பசியாறும் அந்நாடகங்களில் உதிர்க்கப்படும் சில வாசகங்களைக் கேட்கும்போது ‘இதைப் பார்றா’ என்கிற அதிர்ச்சி ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. தமிழ் சினிமாக்களில், நாடகங்களில் வரும் பாத்திரங்கள் பேசுவதைக் கேட்டு தலையிலடித்துக்கொள்ளாமல் இருப்பதற்கு அதீத சகிப்புத்தன்மை அவசியம்.

“பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா லட்சணமா வீட்டோட இருக்கணும். எங்க வீட்டுப் பொண்ணுக போனா கோயிலு… வந்தா வீடு”

“அவன்தான் ஏதோ புத்திகெட்டு அவகூட போயிட்டான். நீயில்லியா கையில கால்ல விழுந்து திரும்பக் கூட்டிக்கிட்டு வரணும்”

“ஆம்பிளைன்னா கொஞ்சம் முன்ன பின்னதான் இருக்கும்… அவன் வெளியிலை என்ன ஆடீட்டு வந்தாலும் நீதாம்மா பொறுத்துப் போகணும்… அப்பிடிப் பொறுத்துப் போகலேன்னா என்ன பொண்ணு”

இந்த வசனங்களையெல்லாம் எழுதுகிற ‘பிரம்மா’க்கள் யார் என்று பார்த்தீர்கள் என்றால் ஆண்கள்தான். பெண் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான வரைவிலக்கணங்களை வடிவமைக்கிற இவர்களைப் போன்றவர்களுக்கு சமூகப்பொறுப்புணர்வு கிடையாது. சினிமா மட்டத்தில் அறிவுஜீவிகளென அடையாளங் காணப்பட்டுள்ள பெண்களுள் ஒரு சிலர் நிர்வகிக்கும் நாடகங்களில் இத்தகைய ‘அறிவுரைகள்’ ஒப்பீட்டளவில் குறைவெனினும், அவர்கள்கூட முற்றிலும் பழமை வட்டத்திலிருந்து வெளிவந்திருப்பதாகக் கூறவியலாது. இத்தகைய பொன்மொழிகளை, பழமொழிகளைக் கேட்டு வளரும் ஒரு ஆண்பிள்ளையின் மனதில் (புகலிடங்களில் வளர்வதாயினும்) தனது வன்முறையைப் பிரயோகிக்கத்தக்கதான முதல் உயிர் வீட்டிலுள்ள பெண் என்கிற விதை விழுந்துவிடுகிறது. பெண் என்பவள் இரண்டாம் பிரஜை என்பது அவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே ஊட்டப்படுகிறது. ஏற்கெனவே நமக்கெல்லாம் தெரியும் இந்த அம்மாக்கள் பண்ணுகிற அழிச்சாட்டியம்! முட்டைப்பொரியலோ முருங்கைக்காய் கறியோ ஆண் குழந்தைகளுக்கு அதிகமாய் ஊட்டி அடிப்படையிலேயே ‘நீதான் உயர்ந்தவன்’என்ற ஒளிவட்டத்தைத் தலைக்குப் பின்னே சுழலவிட்டுவிடுவது நாமெல்லாம் அறிந்ததே. (சிக்மன்ட் பிராய்ட் இதற்கு வேறு விளக்கம் சொல்லுகிறார்… அதைச்சொல்லப் போனால் கலாசார மீறல் என்பார்கள்.)

பெண்ணை ‘சக்தி’என்கிறார்கள். அந்த சக்தி அத்தனையும் ஒரு தொலைக்காட்சிப்பெட்டிக்குள் சிறைவைக்கப்பட்டுவிடுவதுதான் துயரம். பெண்கள் கண்ணீர் பெருக்கி மூக்குச் சிந்திப் பார்க்கிற சில நாடகங்களிற்கூட எப்போதாவது இருந்திருந்துவிட்டு ‘பெண்களால் சாதிக்கமுடியாதது எதுவுமில்லை’ என்றொரு வசனம் வரும். ‘ஊருக்குபதேசம் (உ)எனக்கல்லடி மகளே’ என்றிருப்பவர்கள்தான் எம்மில் அநேகர். பெரும்பாலான பெண்கள் சமையல், குழந்தை வளர்ப்பு, வீட்டைச் சுத்தம் செய்தல், கணவனுக்கான பணிவிடை என்பதற்கப்பால் செல்ல விரும்புவதில்லை; அன்றேல் ஆண்கள் செல்ல விடுவதில்லை. குறுகிய எல்லைகளுக்குள் செக்குமாடுகள் போல சுற்றிச் சுற்றி வருவதற்கு இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தீனிபோடுகின்றன.

அறிவை விருத்தி செய்யும் ஒரு நிகழ்ச்சியை அடிக்கடி நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
“ரொம்ப நாளா முயற்சி பண்ணிட்டிருந்தேன்… இன்னிக்குத்தான் உங்களோட பேசற சந்தர்ப்பம் கிடைச்சுது… எனக்காக கஜினி படத்திலேர்ந்து ‘சுட்டும் விழிச்சுடரே’போட முடியுமா…”

“கண்டிப்பா… இந்த ‘சாங்’ஐ நீங்க யார் யாருக்கு ‘டெடிகேட்’பண்ணுறீங்க…?”
அந்தப் பாடலை யாருக்கெல்லாம் ‘அர்ப்பணிக்கிறேன்’(அவங்களெல்லாம் சுதந்திரத் தியாகிகள் பாருங்க)என ஒரு பட்டியல் வரும். ஜன்மமே சாபல்யம் அடைந்தது போன்றதொரு மகிழ்ச்சி அந்தக் குரல்களில். ஆக்கபூர்வமற்ற, தேடல்கள் அற்ற வாழ்வின் அர்த்தமின்மையை அவர்களுக்கு எடுத்துரைப்பது யார்…?

பெரும்பாலும் வணிக சிந்தனைகளைக் கொண்ட தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இத்தகைய பெண்களின்-ஆண்களின் அறியாமைதான் மிக முக்கியமான மூலதனம்.

மேலும், தலைமுறை இடைவெளி, கலாச்சார இடைவெளி என்ற வார்த்தைகளை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கக்கூடியதாக உள்ளது. பதின்பருவ பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமிடையிலான இடைவெளி நாளாக நாளாக விரிந்துசெல்லும் தன்மையது. அதிலும் புகலிட தேசங்களில் வளரும் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் இருக்கும் வெளி அச்சுறுத்தும் அளவிற்கு பரந்தது. அந்த வெளியை நிரவ அன்பு செலுத்தினால் மட்டும் போதாது. பெற்றோருக்கு அறிவும் வேண்டும். ஆங்கிலம் தெரியாத அம்மா பிள்ளைகள் நினைவில் ஒரு படி கீழே நிற்பவளாகவே தோன்றுகிறாள். பாடசாலை வீட்டுப் பாடங்களில் உதவி செய்ய முடிந்த தாய் அல்லது தந்தை குறித்த மதிப்பீடு பிள்ளைகள் அளவில் உயரும் என்பதை மறுக்கமுடியாது. பெற்றோர் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வதென்பது, “ஆண்டவலிங்கத்தை யார் கடத்தியிருப்பார்கள்?”என்று கவலைப்படுவதைக் காட்டிலும் தேவையான ஒன்றல்லவா…?

இந்த சினிமாக்களும் தொலைக்காட்சி நாடகங்களும் மற்றுமொரு புண்ணிய காரியத்தை ஓசைப்படாமல் செய்துகொண்டிருக்கின்றன. அதாவது நாங்கள் மறந்துபோய்க்கொண்டிருக்கிற அல்லது கடந்து வந்துவிட்டோம் என்று ஒரு சந்தோசத்திற்காகவேனும் நினைத்துக்கொண்டிருக்கிற பழமையான விடயங்களை ஞாபகப்படுத்துவதில் குறியாக இருக்கின்றன. சீதனம், பெண்வதை, சாதிப்பாகுபாடு… இப்படி பட்டியல் நீளும்.

மது, புகைப்பழக்கம் போல நீண்டநேரம் தொலைக்காட்சிப் பெட்டியில் மூழ்கிக்கிடப்பதும் ஒரு போதைதான். அதனின்று விடுபட்டு சோபாவிலிருந்து எழ முடியாதளவிற்கு செயலற்றதாக்கிவிடும் வலிமைவாய்ந்த சாதனமாயிருக்கிறது. நள்ளிரவில் பியர் போத்தல் மிக்சர் சகிதம் ‘ஆ… அப்பிடித்தான்… குத்து… அடி…!’என்றவாறான உற்சாகக் கூச்சல்களை எழுப்பும் ஆண்களைப் பார்க்குந்தோறும் ‘ரத்தம் பார்ப்பதற்கு இத்தனை வேட்கையா…?’என்ற வியப்பு எழுவதுண்டு.

தவிர, தொலைக்காட்சி எமக்காக சிந்திக்கிறது என்பதைப் பற்றி நாம் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா…? எமது மண்டைக்குள் புகுந்து ஏதோ குறளி வித்தை காட்டி அமெரிக்காவை அன்னை தெரசாவாக்கவும், பின் லேடனை உலக மகா எதிரியாக்கவும் அதனால் இயலும். நாம் தேய்க்கும் சவர்க்காரம், பூசும் கிறீம், அணிந்துகொள்ளும் சப்பாத்து, சமையல் எண்ணெய், வலி நிவாரணி… அதிகம் ஏன்… நாம் தேடும் ஆண், பெண் யாவற்றையும் தீர்மானிப்பதில் தொலைக்காட்சியும், சினிமாவும் கணிசமான பங்கு வகிக்கின்றன.

“திரிஷா மாதிரி உடம்பு, மீனா மாதிரி கண், பூமிகா மாதிரி உதடு” எத்தனை கேட்டிருக்கிறோம்.

“ஜிம்முக்குப் போனா சூரியா மாதிரி உடம்பு வருமா…?”ஒல்லிக்கையை உயர்த்திப் பார்த்து நம்மில் பலர் பெருமூச்செறிந்திருக்கிறோம்.

உருவம் குறித்து எத்தனை தவறான கற்பிதங்களை சினிமா எமக்குள் ஏற்றியிருக்கிறது.

பெண் வெள்ளையாய் இருப்பது அழகு. ஆண் கொஞ்சம் கறுப்பாய் இருந்தாலும் பரவாயில்லையாம் என்பது அதிலொன்று.

கணவர் குத்துச்சண்டையையும், மனைவி நாடகங்களையும், பிள்ளை கார்ட்டுனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களேயன்றி ஒருவர் முகத்தை மற்றவர் பார்ப்பது எப்போது…? உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளப் பொழுதற்ற குடும்பங்கள் எப்படிச் சிதைந்துபோகும் என்பதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் எம்மவரிடையே அதிகரித்துவிட்ட விவாகரத்து வீதமே சான்று.

எனக்குத் தெரிந்தவர், வயதானவர் ஒருதடவை தனது மனைவியைப் பார்த்துச் சொன்னார்.

“எனக்கொரு கோப்பி போட்டுத் தாறாளில்லை… ‘கணவருக்காக’ நாடகம் பாக்கிறாளாம்.”

அவர் நகைச்சுவையாகத்தான் கூறினார். ஆனால், நகைச்சுவைக்கப்பால் உள்ளார்ந்த சோகம் இழையோடியதை உணரமுடிந்தது.

சினிமா என்ற அற்புதமான கலையை அற்பமானதாகத் தரமிறக்கும் வேலைகள்தான் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இப்போது ‘தாதா’க்களின் காலம். அரிவாள், துப்பாக்கி, சைக்கிள் செயின் சகிதம் பதினைந்து பேரைக் கலைத்துக் கலைத்து வெட்டி, சுட்டு, சிதைத்துவிட்டு, ஆடைப் பஞ்சத்தில் இருக்கும் கதாநாயகியோடு மரங்களைச் சுற்றி ஆடுவதைத்தவிர இப்போது கதாநாயகர்களுக்கு அதிக வேலையில்லை. சமீபத்தில் வாசித்த ஒரு நகைச்சுவைத்துணுக்கு:

“அந்தப் படத்திலை கதாநாயகியின்ரை வயித்தை ஏன் அடிக்கடி காட்டுறாங்கள்…?”சினிமா ஞானமற்ற ஒருவரின் கேள்வி இது.

“வயித்துப் பிழைப்புக்காகத்தான் அவ நடிக்க வந்திருக்கிறாவாம் எண்டிறதை ‘சிம்போலிக்’ஆ காட்டுறாங்கள்”

இப்போதெல்லாம் வயிற்றில் முட்டை பொரிப்பதில்லை; (பறவைக் காய்ச்சல் பயமோ…!) பம்பரம் விடுவதில்லை. உண்மைதான். ஆனால், இடையைக் காட்டுவதென்பது ‘இடைவிடாமல்’ தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. பல இயக்குநர்கள் கதையில் நம்பிக்கையிழந்து சதையை நம்பத்தொடங்கியிருப்பது தமிழ் சினிமாவின் சரிவையே காட்டுகிறது.

பாடல்கள் வேறு தம் பங்கிற்கு பாவத்தைக் கொட்டிக்கொள்கின்றன.

‘கொக்கி’என்றொரு படம்… அதில் கதாநாயகி கதாநாயகனைப் பார்த்து பாடலில் ஒரு வேண்டுகோளை பவ்யமாக முன்வைப்பார். “சும்மா ஒரு புள்ளை கொடுடா” என்னே ஒரு இலக்கியத்தரம் பாருங்கள்!!!

சினிமாவும், தொலைக்காட்சிப்பெட்டியும் எமது வாழ்வைச் சீரழித்துவிட்டதாக ஒரேயடியாகப் புலம்புவது அறிவுடைய செயலல்ல. நாம் அவற்றைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. ஒரு நண்பர் அடிக்கடி கூறுவார்: “லேசர் கத்தியாலை கத்தரிக்காய் வெட்டுறாங்கள்” என்று. அத்தகைய அதியற்புத சக்தி சினிமா, தொலைக்காட்சிக்குண்டு. தொலைக்காட்சி உலகத்தை வீட்டிற்குள் எடுத்துவருகிறது. இந்தோனேசியாவின் பூகம்பத்தையும், அமெரிக்காவின் காட்டுத்தீயையும், லெபனானின் போரழிவையும், கேரளாவின் பேரழகையும், யப்பானின் தொழில்நுட்பத்தையும் தொலைக்காட்சிகள் எமது வரவேற்பறைக்கு எடுத்துவருகின்றன. தரவுகள் சரியோ தவறோ நமது ஊரில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற அடிப்படை விடயத்தைச் சொல்கின்றன. நம்மில் பெரும்பாலானோருக்கு செய்திகள் என்றால் புஷ்ஷ_க்கு பின் லேடனில் எவ்வளவு விருப்பமோ அவ்வளவு விருப்பம்! பாய்ந்து விழுந்து ‘சானலை’ மாற்றிவிடுவோம்.

காலச்சரிவில் நாட்கள் புதையுண்டு போகின்றன. வாழ்வு எனும் நதி வற்றுவதற்குள் அதன் கரையமர்ந்து எழுதவேண்டிய கவிதையை எழுதி முடித்துவிடவேண்டும். எமது கையில் ஒரு எழுதுகோல் தரப்பட்டிருக்கிறது-அதை வைத்து காலத்தால் அழியாத கவிதையை எழுதப் போகிறோமா…? அன்றேல் அதைக்கொண்டு முதுகைச் சொறிந்துகொள்ளப்போகிறோமா…?

11.16.2006

உறவுகள் உறைந்த தேசம்



விமானநிலையம் - ஏ.சி. குளிர் - கண்ணாடிச் சுவருக்கப்பால் இறக்கை விரித்தபடி உறைநிலைக்குச் சென்றுவிட்ட பிரமாண்டமான பறவைகள்போன்ற விமானங்கள். வெண்மேகங்களுக்கிடையில் மிதந்து மிதந்து பறத்தலின் பிரமிப்புகள் அற்றுப் போனவனாக அவன் காத்திருக்கிறான். விடியற்காலையில் எழுந்த அயர்ச்சி இழுக்க, தன்னைப் போல காத்திருப்போரில் கண்களை ஓட்டுகிறான். பார்வையில் தட்டுப்படுகிறது அந்த முகம். நடுத்தர வயதைக் கடந்த அந்தப் பெண் அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

“எங்கோ பார்த்திருக்கிறேன்”

தலையைக் குனிந்தபடி ஞாபக இடுக்குகளில் தேடுகிறான். கிடைக்கவில்லை. கையிலிருந்த ஆனந்த விகடனில் ‘தேசாந்திரி’யைப் பிரித்து அதில் அமிழ்ந்து போகிறான். தான் அலைந்த கிராமங்களில், நகரங்களில், கோயில்களில் வாசிப்பவர்களையும் கொண்டு போய் நிறுத்துகிற ராமகிருஷ்ணனின் எழுத்தில் காலம் மறக்கிறது.

மீண்டும் நிமிர்ந்து பார்க்கும்போது அந்தப் பெண் புன்னகைக்கிறாள். அவனும் புன்னகைக்க முயற்சி செய்கிறான். இப்போது எழுந்து அவனை நோக்கிவர ‘உதவி ஏதும் கேக்கப் போகிறாவோ…’கேள்வியோடு எழுந்திருக்கிறான்.

“நீ ராஜேஷ்…?”

“ஓம் அக்கா…” குழப்ப அலை ஒன்று அடித்து மனசின் கரை கழுவிப் போகிறது.

‘அக்கா…’என்ற சொல் மனசின் எந்த மூலையில் தூசிபடிந்து கிடந்ததோ… இயல்பாய் வந்தது.

“எப்படி மறந்தேன்…?” குற்றவுணர்வில் திடுக்குறுகிறது நெஞ்சு. கூடப் பிறந்தவளின் முகத்தையுமா காலநதி அள்ளிப்போகும்…!

“பாத்தியாடா எப்பிடிச் சந்திக்கிறோமெண்டு… பதினைஞ்சு வருசம் இருக்குமா உன்னைப் பாத்து…”

அவர்கள் அடுத்து என்ன பேசிக்கொள்வார்களென்பதைச் சொல்லவேண்டியதில்லை. கோயில் திருவிழா தொட்டு கொழுந்திமார் சண்டை வரை நீண்டுபோகும் அதன் அந்தத்தை யாரறிவார்…?

அக்காவையும் தம்பியையும் விமானநிலையத்தில் விட்டுவிட்டு வெளியே வந்து சற்றே உரத்துச் சிரியுங்கள். அந்தச் சிரிப்பில் கொஞ்சம் வருத்தம் தொனிக்கட்டும்.

உலகம் உள்ளங்கையில் வந்துவிட்டதாம். ‘மௌஸ்’என்ற எலியில் ஏறி உலகையே வலம் வந்துவிடலாமாம். பேசிக்கொள்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால், கூடப் பிறந்தவர்களே ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் கடந்துபோய்விட நேர்வதுதான்.

இயந்திர வாயுள் அரைபட்டுக்கொண்டிருக்கிறது மனித வாழ்வு.

“உங்கடை அண்ணையின்ரை ரெலிபோன் நம்பரை எங்கையோ மிஸ் பண்ணீட்டன். தாறீரோ…?” சகோதரனின் நண்பர் கேட்கிறார்.
“எனக்கும் தெரியாதண்ணை… அவரோடை கதைச்சு ஏழெட்டு மாசமிருக்கும்”நண்பர் ஆச்சரியம் காட்டாமல் போகிறார்.

---

“பிள்ளை இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே… இண்டைக்காவது கொண்ணை வீட்டை கூட்டிக்கொண்டு போறியா…” ஒரு முதிய தாயின் குரல்.
“இண்டைக்குத்தானேம்மா எனக்கும் லீவு… சாப்பாட்டுச் சாமான் வாங்கவேணும்… உடுப்புத் தோய்க்க வேணும்… நிறைய வேலை கிடக்கம்மா… வாற கிழமை கட்டாயம் கூட்டிக்கொண்டு போறன்”

அந்த வயோதிபத் தாய் எதிர்பார்ப்பு வற்றி ஏமாற்றம் நிழலாட தனது அறைக்குத் திரும்புகிறாள்.

ஊரின் ஞாபகங்கள் மீது உதிர்கிறது கண்ணீர்.

வருஷம் முழுக்கப் பூமலரும் தோட்டம். வந்து வந்து போகும் உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர், வேப்ப மரத்தோடு உல்லாசமாகப் பேசிக்கொண்டிருக்கும் காற்று, கட்டணம் கொடுக்காது போனாலும் கற்பூரம் காட்டித் தொட்டு வணங்கத் தரும் குருக்கள், அழகிய பெண் வாழும் தெருவால் ஆயிரம் தடவை போய்வரும் விடலைகள்… காதலர்களை இணைக்கும் கோயில் திருவிழாக்கள்… காற்றுக்கு சிலிர்த்தடங்கும் வயல்கள்…
போரில் இழந்தவை அநேகம். உயிர்களை மட்டுமல்ல, ஊரை மட்டுமல்ல புலம்பெயர்ந்தபின் வாழ்வின் உயிரையும் இழந்தோம்.

வாழ்வை நாம் துரத்திக்கொண்டிருக்கிறோமா… வாழ்வு எம்மைத் துரத்துகிறதா… சிந்திக்க நேரமற்று ஓடிக்கொண்டிருக்கிறோம்.

பி.டி. உஷாவையே பின்தள்ளிவிடும் ஓட்டம்!

அலாரம் மண்டையில் ஓங்கி ஒரு போடு போட அதிரடியாய் விடியும். இருக்கவே இருக்கிறது ‘சான்ட்விச்’- ரூனாவோ மீனாவோ அகப்படுவதை அடைத்து எடுத்துப் போவோம். என்றைக்கும்போல் பிள்ளை இன்றைக்கும் அம்மாவோடு இருக்கும் நப்பாசையில் அழுதுபார்க்கும். மூச்! பிள்ளைக்கும் தாய்மைக்கும். அவசரமாய் முத்தம் எறிந்து அம்மா ஒரு பக்கம் அப்பா மற்றப் பக்கம் பறப்பர். தற்காலிகத் தாய் இடுப்பை உதைத்து அழும் பிள்ளை சற்றைக்கெல்லாம் சோர்ந்து உறங்கிக் கிடக்கும் ‘கிறஷின்’மூலையில். அதன் கனவில் சாமி வந்தால் கையசைத்துப் பறக்காத அம்மா வேண்டுமென்று வரம் கேட்குமோ என்னவோ…

பேரங்காடியொன்றில் சந்திக்கும் சகோதரர்கள் பேசிக்கொள்வதைக் கேளுங்கள்.

“என்ன பிள்ளையடா…?”“ஆம்பிளைப் பிள்ளை… ரெலிபோனிலை சொன்னனே அண்ணை… அண்ணி சொல்லேல்லையா…”“எங்கையடா சொல்லுறது… நான் வேலைக்கு வெளிக்கிடேக்கை அவ நித்திரை… நான் நித்திரை கொள்ள வரேக்கை அவ வேலைக்கு”

தம்பியின் பிள்ளையின் பெயரை ‘பெரியப்பாக்காரன்’அறிந்துகொள்ள எப்படியும் ஆறுமாதங்கள் ஆகும். ஞாபகத்தில் வைக்க சிரமப்பட வேண்டியதில்லை. எப்படியோ ‘ஷா’வெழுத்து (சாவெழுத்து?) அல்லது ‘ஜா’ வரப்போகிறது-முன்னே பின்னே தமிழ் எழுத்துக்கள் போட்டுக்கொண்டால் சரி. ஆங்கிலத்தின் மீது எவ்வளவு அபரிமித ஆசையோ அவ்வளவிற்கு வடமொழியின்பால் வாஞ்சை!

பயமாக இருக்கிறது, பூக்கள் உதிர்வதைப் போல ஓசையற்று உதிர்ந்துகொண்டிருக்கும் உறவுகளை நினைத்து.

உறவுகள் எதற்கு…பணத்தினால் எதையும் வாங்கிவிடலாமென்ற மமதையின் மேல் விழுகிற முதல் அடிதான் நோய்ப்படுக்கை.

காசு… காசு… என்று பறந்துகொண்டிருக்கிற பட்டத்தை வாலறுத்துத் தரையிறக்கும் வேலையை நோய் செய்கிறது.

மெல்லக் கைபிடித்து கழிப்பறைக்குக் கூட்டிப்போய் நீர்பிரியக் காத்திருந்து கழுவிக் கைபிடித்துக் கூட்டிவந்து படுக்கையில் சாய்த்து தலைதடவிக் கதைசொல்ல காசுக்குத் தெரியாது.

மரணம் மயிரிழையில் கத்தியைப்போல் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும்போதுதான் முகங்கள் ஒவ்வொன்றாக நினைவில் வரும்.
‘அகதியாய் அடிபட்டு வீடு தேடி வந்தபோது இடமில்லை என்று விரட்டினேனே… அந்தத் தம்பி இப்போது எங்கிருப்பான்..?

’‘எதைக் கொடுத்தாலும் ‘அண்ணாவுக்கு’என்று மறு கையை சிறுவயதில் நீட்டிய தங்கையின் ஏழ்மையைப் பிறிதொருகாலம் ‘வக்கில்லாதவள்’என்று ஏளனம் செய்தேனே…

‘அப்பருக்குக் காசனுப்பி எத்தினை வருஷம்… அந்தாளோடை ரெலிபோன் எடுத்துக் கதைக்கிறதே இல்லை’

மரணம் சத்தமில்லாமல் நெருங்கிக்கொண்டிருக்கிறது… நம் ஒவ்வொருவரையும்.

மௌனமும் விசும்பலும் இறந்தவரின் வெற்றிடத்தை நிறைத்திருக்கும் மரண வீடுகளிலிருந்து வெளியேறும் போது நாம் என்ன நினைத்துக்கொள்கிறோம்…

“ச்சாய்… எல்லாரும் இதுபோலை சாகப்போறோம்… ஏன் மற்றாக்களிலை கோவம் கொள்ள வேணும்… வாழும்வரைக்கும் ஒற்றுமையாய் இருந்திட்டுப்போவம்”

அந்த மயான வைராக்கியம் காரெடுத்துப்போய் வீதியை அடையும்வரைதான்.

இடம் கொடுக்காமல் முன்னேறிப் போகிற கார்க்காரனுக்கு நடுவிரலைக் காட்டுவதிலும் அவனது பிறப்பைச் சந்தேகிக்கிற வாக்கியங்களை எறிவதிலும் மீண்டும் தொடங்குகிறது முடிவற்ற வாழ்வு.

இருதய நோய், டயபடீஸ், கொழுப்பு (கொலஸ்ரோலைச் சொன்னேன்) இவையெல்லாம் வெளிநாடு வாழ் தமிழர்களின் உடம்பில் கணவன்-மனைவிபோல அல்லது சமறிக்காசு ஒழுங்காகத் தருகிற அறைத்தோழன்போல ஒட்டிவாழ்பவை. அழிச்சாட்டியம் பொருந்திய குடித்தனக்காரனாய் என்னதான் தலைகீழாக நின்றாலும் உடலைவிட்டுப் போகமாட்டேன் என்று அடம்பிடிப்பவை. “என்ரை குஞ்சல்லோ” என்றாலும் போகாது. “இருந்த இடம் தெரியாமல் ஆக்கிப்போடுவன்”என்றாலும் மசியாது. ஆனால், சாம, பேத, தான, தண்டங்களைப் பயன்படுத்தி கொஞ்சம் அடக்கிவைக்கலாம்.

ஆனால் ‘தனிமை’நோய் உருக்கொள்ளும்போது அதை அடக்க, உறவு என்ற வேப்பிலையைத் தவிர எதனாலும் இயலாது.

தனிமை இருண்ட முகமுடைய பேய். அந்தப் பேயை விரட்ட நாம் விரும்புவதில்லை. உறவுகள் என்பவை எதிர்பார்ப்புகளைக் கொண்டவைதாம். சிலசமயம் முதுகின் பின் பேசுபவைதாம். பொறாமைப்படுவதையும் விலக்க முடிவதில்லை.ஆனாலென்ன… குறைகளோடும் சேர்த்து உறவுகள் வேண்டும். திருமண, பூப்புனித, பிறந்தநாள் வீடுகளில் சந்தித்து ‘ஹாய்… ஹாய்…’ என்று அகவுதலோடு நிறைவு பெற்றுவிடுவதுதான் உறவா…? சேலையை, நகையைத் தொட்டுப் பார்ப்பதோடு நின்றுவிடுகிறோம். மனசைத் தொட மறந்துபோகிறோம்.

உலகம் சில மனிதர்களாலும் ஆனது.

சிரித்தபடி யார் வந்தாலும் ‘என்னமோ கேக்கப் போறான் பார்’என்ற எச்சரிக்கை மணி அடிக்கிறது.

இருளும் பகையும் அச்சுறுத்தும் இரவுகளில் மரத்தின் மீது சாய்ந்து காவலிருக்கும் அந்த இளைஞன் என்ன எதிர்பார்ப்போடு அங்கிருக்கிறான்…?

தாக்க வரும் குண்டைத் தானேந்தித் தோழியைக் காத்துக் கண்மூடிய பெண் போராளி இறுதிக்கணத்தில் என்ன நினைத்தாள்…?

எங்கோ வயல்வெளிக்குள் சிறுகுடிசை. மங்கிய மண்ணெண்ணெய் விளக்கு. இன்றைக்கும் பிள்ளைகள் வந்தால்… என்ற நினைவோடு பானையில் சோறு வைத்து இருள் வெறிக்கும் அந்த மூதாட்டி எதிர்பார்ப்பது என்ன…?

போரால் அக்கக்காகக் கிழிபடும் மண்ணில்தான் இன்னும் மனிதம் வாழ்கிறது.

அற்பக் காரணங்களால் ஒவ்வொருவராய் எட்ட நிறுத்தியாயிற்று. மெல்ல மெல்லத் தனிமை இருள் படர்கிறது. பகலில் உறங்கியிருக்கும் தனிமை இரவானால் விழித்தெழுகிறது.

தொலைக்காட்சி சலனங்கள் வெறுத்துப் போக அதை அணைத்துவிடுகிறீர்கள். மனம் வெறுமை கொண்டலைகிறது. ஓசைகளற்ற வீடு அச்சுறுத்துகிறது. எல்லாப் பக்கமும் சுவர்கள்… சுவர்கள்… கதவுகள் உள்ள வீடுதான். ஆனால், பெண்களால் இலகுவில் வெளியேற முடிவதில்லை. சாவைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள். தன்னிரக்கம் உந்த வெளியேறுகிறது கண்ணீர்…!

பின்னிரவு வரை திறந்திருக்கும் உணவு விடுதி… அதன் மங்கிய விளக்கொளி… மெதுவாய் மிக மெதுவாய் கசியும் இசை… கையில் ‘பியர்’ போத்தல்… நீங்கள் அழ விரும்புகிறீர்கள்…ஆண்கள் அழக்கூடாது என்று யாரோ திரும்பத் திரும்ப காதருகில் சொல்கிறார்கள். ஆனால், உரத்து முதுகு குலுங்க அழுகிறீர்கள். உங்களை அழத் தூண்டுவது எது…?

விடை உங்களிடம்தான்!

பத்தாயிரம் டாலர்களுக்கு சவப்பெட்டி வாங்குவது வேண்டுமானால் பணத்தோடு தொடர்புடையதாக இருக்கலாம். எங்கள் உயிரற்ற உடலைக் கடந்து போகும் எத்தனை பேருக்கு அடக்கமாட்டாமல் விம்மல் வெடிக்கிறது என்பதில்தான் நாங்கள் வாழ்ந்த வாழ்வின் பொருள் இருக்கிறது.

பின்குறிப்பு: இப்பதிவு ‘அனுபவம்’ என்பதற்குள் அடக்கப்பட்டிருத்தல் வேண்டும். தவறுதலாக ‘சிறுகதை-கவிதை’க்குள் இடம்பெற்றுவிட்டது.

கடந்து போன மேகம்



தனிமையின் தீச்சுவாலையில்
ஒரு துளியெடுத்துப் பற்றிக்கொண்டன
நமது இரவுணவின்போதான மெழுகுவர்த்திகள்.

எல்லோரையும்போல
காதல் கற்பிதங்களை
மதுவென அருந்தி மயங்கினோம்.

பள்ளத்தை நிரவிற்று மழை.
பரணிலிருந்த வெற்றுச்சட்டத்தை
அடைத்ததுன் புகைப்படம்.

பின்பொருநாள் பேசத்தொடங்கினாய்
உன் கருணையை
ஆட்கொள்ளலை
இரட்சகப் பெருங்குணத்தை…
நாற்றமெடுக்கும் வார்த்தைகளால்
நிறைந்தது என்னறை.

முன்னைப் பூர்வீக ஞாபகத்தில்
நீ நரியாய் ஊளையிட்டாய்.
செட்டையைக் கழற்றிவைத்து மேய்கையில்
‘நீயொரு பாம்பு’எனப் பதறிப்போனாய்.

நானோர் பறவை
வானத்தை அறிமுகம் செய்வதாய்
யன்னல் வழி துண்டு மேகம் காட்டுகிறாய்.
நானோர் காட்டாறு
செம்புத் தண்ணீரில் நிலவு காட்டுகிறாய்.
வார்த்தைக் கம்பத்தில்
எத்தனை தடவைகள்தான் ஏறி விழுவாய் நீ…!

கலைந்து கலைந்து உருமாறும் மேகம்
வானம் இருக்கிறது எப்போதும்போல.

11.15.2006

நீயற்ற நான்




ஆவல் அனல் பொறிய
தொலைபேசியில் அழைக்கிறேன் உன்னை.
இருட்டறையில் மெழுகுவர்த்தியென
பிரவேசிக்கிறதுன் குரல்.

காதலும் காமமும்
போர்தொடுக்கும் பெருவெளியில்
நிராயுதபாணியாய் நிறுத்தப்பட்ட
கதையின் எச்சத்தை நினைவுகூரல்
இன்றைக்கும் தொடர்கிறது.
தனிமையின் தாபத்தில்
சொற்களைத் தீட்டுகிறேன்.

கருணையைக் குரூரம் வெல்ல
உனது தேவதை படியிறங்கிப்போகிறாள்.
முடியிழந்து தலைகவிழ வைத்ததில்
கடைவாய்ப் பற்களின் விஷமிறங்கிற்று.

மனதைக் கொன்று புசித்த திருப்தி
எனின் என்ன…
இன்னும் பசியாறவில்லை!

அன்பே! புத்தகங்கள் பேசக்கூடும்
முத்தமிட இயலாத உதடுகளால்.

எத்தனை காலந்தான் இருப்பது
அதன் வரிகளோடும் வலிகளோடும்
என்னைப்போல் அலையெறியும்
கடல் முன்னே…!

11.13.2006

நினைவூட்டுகை

எத்தனை கவனமாயிருந்தும்
கருணையற்ற இரவு
கனவுகளை அழித்துவிடுகிறது.

வருந்தியதில்லை.

இரத்த அணுக்களில் நீந்திக்கொண்டிருப்பதாய்
ஒருபொழுதில் நினைத்த பெயர்
மூளையைக் கசக்கியும்
திகைப்பிருள் வீழ்த்தி
தள்ளி நின்று நகைத்தது.

பள்ளியில் மறந்து இழந்த
பென்சில்… செருப்பு… குடை
இன்னமுமா இருக்கின்றன வெற்றிடமாய்!

மாதத்தில் மூன்றுநாள் தனியறை
மாலையானதும் மறியல்
பழமொழிகள்
புராண உதாரணங்கள்
‘வெட்கம் பழகு’ எனும் வேதங்கள்
சமையல்… தையல்… தந்திரம்…
தலையணை மந்திரம்…
நீள்கிறது பட்டியல்.

மறதியல்ல
‘நீ பெண்’எனும் நினைவூட்டுகைதான்
நீங்கள் பயங்காட்டும்
இருளைவிட எப்போதும் அருட்டுகிறது.

சென்னை: ஒரு நாடோடியின் பதிவு

வெளிநாடொன்றிலிருந்து சென்னைக்கு வரும் ஒருவரது முதற் சொல்லாடல் காலநிலை பற்றியதாகவே இருக்கும். மழை காலமெனில் பூக்களோடு வரவேற்கும். கோடையெனில் அனல் காற்றின் வெம்மை முகத்தில் அறையும். அதுவும் விமானக் குளிர் உடலை விட்டு முற்றும் அகலாத நிலையில் கூடுதல் கோடையை உணர்வீர்கள். (இதில் விருந்தாளி ‘பயாஸ்கோப்’காட்டுகிறவராக இருந்துவிட்டால் போச்சு! தன்னை வரவேற்க வந்திருப்பவர் தன்னிலும் பணப் பாரம் அற்றவர் எனக் கண்டுவிட்டால் ‘எங்கடை கனடாவில’ அல்லது ‘எங்கடை லண்டனிலை’என்று செம அலட்டலாக இருக்கும்.) வீட்டுக்குப் போகும் வழியில் நிற்கும் வறண்ட, தலை பரத்திய குட்டைச் செடிகளைப் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய நேர்ந்தால் இதே வகை குட்டைச் செடிகள்தான் வாகனத்தோடு கூட சலிப்பூட்டும் துணையென ஓடிவருவன.

இங்கு வரும்போது பணத்தோடு பொறுமையிலும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு (இல்லாவிட்டால் இரவல் வாங்கி) வரவேண்டும். ‘ஐயோ’ என்று மனமிடிந்து போகுமளவிற்கு வாகன நெரிசல். அதிசொகுசு வண்டிகள், அரதப் பழைய வண்டிகள், ‘பூம்… பூம்…!’ என்று கோபங்காட்டும் பேரூந்துகள், ‘நான்தாண்டா எமன்’என்று மோத வரும் லாரிகள், தூசிக்கும் வெயிலுக்கும் பயந்து முகம் மூடிக் கை மறைத்த பெண்கள் மற்றும் கைத்தொலைபேசியில் காதல் செய்தபடி (அல்லது மனைவியிடம் திட்டு வாங்கியபடி) வரும் ஆண்களின் விருப்பத் தெரிவான மோட்டார் சைக்கிள்கள், ‘இன்றோடு தொலைந்தாய் பார்’என மூக்கை நீட்டிக்கொண்டு இடித்துவிடும் வேகம் காட்டி வரும் ஆட்டோக்கள்… அவற்றின் நானாவித எக்காளத் தொனிகள்… இது மாநகரம்தான் சந்தேகமில்லை!

சென்னை- முரண்களின் மொத்த உருவமோ என வியக்காத நாளில்லை. சுத்தமும் அசுத்தமும், அழகும் அவலட்சணமும், வறுமையும் வளமையும் என இரு முகம் காட்டி பார்ப்பவரைத் திணறவைக்கும்.

‘பிரம்மன் பூக்களைத் தொட்டவுடன் பூமிக்கு வந்தவளோ…’என்றொரு கவிஞர் வியந்து பாடியதற்கு இலக்கணமான இளம் பெண்களும்-அவர்களுக்குச் சற்றிலும் குறையாத எடுப்பான நாகரீக குமரன்களும் ‘கோந்து’வைத்து ஒட்டியதுபோல ஒட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் மிதந்து போகிறார்கள். அந்த தேவ-தேவதைகளை கறுத்து மெலிந்த நடைபாதைவாசிகளின், கூலித்தொழிலாளரின் விழிகள் ஏக்கமுடன் தொட்டுத் தாழ்கின்றன.

அமெரிக்க நிறுவனங்கள் பல ‘குறைந்த விலையில் நிறைந்த வேலை’ பெறுவதற்காக இங்கு முகாமிட்டிருக்கின்றன. ‘எனக்கும் உனக்கும் இலாபம்’ என்பதே தாரக மந்திரமாக இருக்கும்போலும். இந்த நிறுவனங்களின் வருகையால் பணம் தாராளமாகப் புரள்கிறது. இருந்தும் தகவல் தொழில்நுட்ப அறிவோடும் டாலர் கனவோடும் அமெரிக்காவின் குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் முன் இன்னமும் இளைஞர்கள் சென்னைக்கே உரிய எதிலும் பிரமாண்டம் என்பதை நினைவுறுத்தும் வகையில் நீண்ட வரிசைகளில் நின்றுகொண்டுதானிருக்கிறார்கள்.

எல்லா மாநகரும் கட்டிடக்காடுதான். என்றாலும் சென்னையிலுள்ள சில சாலைகளின் இருபுறங்களிலிருந்தும் பச்சைக்குடையெனக் கவியும் மரங்களின் கூடல் அற்புதமாயிருக்கிறது. அந்த மரங்களடர் சாலை வழி நடக்கையில் அவற்றிற்கேயுரிய குளிர்ச்சி வந்து தழுவ இது முடிவற்று நீளக்கூடாதா என்றிருக்கிறது. வெயில் படர்வதன் முன்னான விடியல்கள் ஒவ்வொன்றும் வாழ்வின் மீதான வேட்கையைத் தூண்டுபவை. வீதிகளின் இருமருங்கும் உள்ள மரங்கள் காலத்தின் கனத்தைப் போல பருமனானவை. ஆண்டின் பல மாதங்கள் வெயில் எறித்து எரிக்கும் இங்கே இத்தனை மரங்களும் இல்லையெனில் நடைபாதைவாசிகள் மற்றும் வியாபாரிகளின் நிலையென்ன என்ற எண்ணமே தகிக்கிறது.

சிறைச்சாலைச் சுவர்களை நினைவிற் கொண்டுவரும் உயரமான மதில்களைக் கொண்டவையும் ஓசைகளற்றவையுமான விசாலமான வீடுகளுக்குள் பெரிய மனிதர்கள் குடியிருக்கிறார்கள். (அவர்களைக் காக்கும் கொழுத்த நாய்களை ‘நடக்க’க் கூட்டிப்போய் தங்களின் எடைகுறைந்த வேலையாட்களும் அங்குதான் இருப்பார்கள்) நடிகர்களுள் பெரும்பாலானோர் புறநகர் பக்கம் போய் பெரிய வீடுகள் கட்டி ‘காற்றாட’இருப்பதால் அவர்கள் பாடு பரவாயில்லை.

சாதாரணர்கள் நடைபாதைதான் சிறந்த தெரிவோ என்று சிந்திக்குமளவிற்கு மாநகரில் வாடகை ஏறிக்கொண்டேயிருக்கிறது. முந்நூறு சதுர அடியை அறை, சமையலறை, கழிப்பறை என்று சுவரெழுப்பிப் பிரித்துவைத்து ‘ஆறாயிரம் ரூபா’என்று கூசாமல் சொல்வதைக் கேட்டு பேசாமல் வெளியில் வந்து மூச்சுவிட வேண்டும். ஏனென்றால் மூச்சுவிட்டால் அது பாவம் சுழல்வதற்கு அங்கு வழியில்லை. தண்ணீர் வண்டிக்காக காலிக்குடங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. குடங்களுக்கு உரித்துடைய ஒவ்வொரு பெண்ணுக்கும் மற்றவள் அக்கணத்தில் எதிரியாகத் தோன்றுவாளென்ற நினைப்பு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்த சங்கடங்களெல்லாம் காசற்ற கடைநிலை மக்களுக்கே. கடற்கரைச் சாலைக்கு காரில் வந்திறங்கி தொந்தி குலுங்க ஓடுகிற பணக்காரர்களுக்கு அல்ல.

கடற்கரைகளற்ற சென்னையை நினைத்தால் மூச்சுமுட்டுகிறது. புறாக்கூண்டுகள் போன்ற வீடுகளுக்குள்ளிருக்கும் மனிதர்கள் தம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள, மூச்சுவிட இங்குதான் வருகிறார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிழாக் கோலம் களைகட்டுகிறது. உடல் எடையைக் இறக்கவென நடக்க வந்து ஏற்றிக்கொள்வோர் அநேகம். அவித்த கடலை, மிளகாய் பஜ்ஜி, சுண்டல், கிண்டல்… எல்லாம் இங்குண்டு. எப்போதாவது “இண்டைக்குச் செய்தி பாத்தனீங்களோ”என்று இலங்கைத் தமிழைக் கடற்காற்று காதில் கொண்டுவந்து சேர்க்கும்போது, நாளின் சுழற்சியில் தற்காலிகமாக மறந்திருந்த வலி இரவில் மேலெழுவதுபோல மனசு உருகி வழியும். பாவாடை சட்டையணிந்த பெண்களை எப்போதாவது பார்க்க நேரும்போது வலிந்து பேசத் தோன்றும். நாசமாய்ப்போன நாகரீகம்… வார்த்தைகளை அதட்டி உதட்டுக்குள் அனுப்பி மௌனமாகக் கடந்து போவோம்.

தொலைக்காட்சிகளில் ‘கேல்வி நேறம்’, ‘அலுவாதீங்க’, ‘ஆச்சி மாற்றம்’ எனத் தொகுப்பாளிகள் ‘தமில்’ பேசுவதைக் கேட்கும்போது, உதட்டுச்சாயம் பூசுவதற்கும், புருவத்தைத் திருத்துவதற்கும் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் சில மணித்துளிகளையேனும் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள ஒதுக்கக்கூடாதா என்று ஆதங்கமாக இருக்கிறது. ‘த்தா நயினா… வந்து இவனே புட்சிக்கினு போய்யா’ என்று கூவும் சென்னைத் தமிழ் செவிக்கு இனிமையாகத்தானிருக்கிறது. கலைஞர் ஆட்சிக்கு வந்தபிற்பாடு பள்ளிகளில் தமிழைக் கட்டாயபாடமாக்கியிருப்பதுதான் இப்போதைய ஆறுதல்.

எங்கு போனாலும் சனங்கள்… சனங்கள்… சனங்களன்றி வேறில்லை. எங்கோ எதற்கோ வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஊரில் பாத்திரக்கடை, புடவைக்கடை பாத்திருக்கிறோம். இங்கு வந்தபின்தான் ‘பாத்திரக்கடல்’, ‘புடவைக்கடல்’ பார்க்கிறோம். பண்டிகை வருவதன் முன்னான நாட்களில் “ஏதன் சும்மா கொடுக்கிறார்களோ…”என்று ஐயுறும்படியாக இடித்து நெ(நொ)ருக்கி பொருட்களை அள்ளிக்கொண்டு கலைந்த தலையும் கலையாத ஆசைகளோடும் வெளியில் வருகிறார்கள். தி.நகர்- கொள்வனவாளர்களின் குறிப்பாகப் பெண்களின் சொர்க்கமாகத் திகழ்கிறது. கூட வந்த ஆண்கள் முன்னே போடப்பட்டிருக்கும் சொகுசு இருக்கைகளில் ‘என்னாகுமோ’ என்ற பதட்டத்துடன் நகத்தைக் கடித்தபடி உட்கார்ந்திருப்பதைக் காணமுடிகிறது.

சினிமாவும் அரசியலும்தான் தமிழகத்தின் இரு கண்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். பிரதான சாலைகளில் பிரமாண்டமான ‘கட்-அவுட்’களில் சூர்யாவும் ஜோதிகாவும் கண்களில் காதல் பொங்க மழையிலும் வெயிலிலும் பல மாதங்களாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தனுஷ் காலுயர்த்தி வில்லனைப் பந்தாடுகிறார். விதவிதமான இடுப்புகளை அண்ணாந்து பார்க்கும் வாகனாதிகள் வீட்டிற்குப் பதிலாக வைத்தியசாலைக்குச் செல்லும் சாத்தியக்கூறுகளே அதிகம். ரோனி விளம்பரங்களில் அட்டகாசமாகச் சிரிக்கிறார். இவர்களுக்குச் சற்றும் குறையாத விகிதத்தில் அம்மாவும் கலைஞரும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். “வேகமாகப் போகிறீர்களா… நல்லது! சற்றுநேரத்தில் உங்களுக்கு கடவுளோடு நேர்முகப்பரீட்சை நடக்கவிருக்கிறது”என விளம்பரம் ஒன்று எச்சரிக்கிறது.

எமது மண்ணில் மீண்டும் போர் தொடங்கிய பிறகு தமிழ்நாடு மீண்டும் எம்மவர்களின் தற்காலிக தங்குமிடமாகிவிட்டது. “அண்ணை கனடாவுக்குக் கூப்பிடுவார்” என்று கூறியபடி ஆங்கில மற்றும் கணனி வகுப்புகளில் பொழுதுபோக்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களைக் காணமுடிகிறது. டாலர்களும் பவுண்ஸ்களும் பிராங்க்குகளும் ரூபாவாகி தாராளமாகப் புரள்கின்றன. அவர்களில் பலர் இந்தியத் தமிழில் ‘கலாய்க்க’ப் பழகியிருக்கிறார்கள். நடிகர்களோடு புகைப்படம் எடுப்பதும் அதை ‘அல்பத்தில்’ அற்பமாக… மன்னிக்கவும் அற்புதமாக போட்டுவைப்பதும் பிறவிப்பெருங்கடன் என்று சில பேர் அலைகிறார்கள்.

வாசிப்பதை நேசிப்பவர்களின் பூலோக சொர்க்கம் என்று சென்னையைத் துணிந்து கூறலாம். பொம்மைக் கடைக்குள் புகுந்துவிட்ட குழந்தையைப்போல புத்தகக் கடைகளுக்குள்ளிருந்து வெளியே வர மறுத்து அடம்பிடிக்கிறது மனம். சித்திரக்கதையிலிருந்து ‘சிக்மன்ட் பிராய்ட்’ வரை இங்கு இல்லாததொன்றில்லை. இங்கே ஒரு புத்தகக்கடையில் மோர் கொடுக்கிறார்கள். (தொகையைப் பார்த்து மயங்கிவிழுந்துவிடாதிருக்க முன்னேற்பாடோ…) என்ன… அறிவுத்தேடல் என்று அள்ளி வந்துவிட்டு மாதாந்த வரவுசெலவுத்தொகையில் துண்டுவிழும்போது அறிவைச் சாப்பிட முடிவதில்லை. ‘செவிக்குணவில்லாதபோது கொஞ்சம் வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பதெல்லாம் நடைமுறைக்குப் பொருந்துகிற மாதிரித் தெரியவில்லை.

மழைக்காலம் தொடங்கிவிட்டது. எங்கும்போல இங்கும் மழை அழகாய்த்தானிருக்கிறது. அழிவுகளையும் கொண்டுவந்திருக்கிறது. தமிழ்ச்சினிமாக்களில் பார்த்த திறந்த சாக்கடைகளிலொன்றில் விழாதிருக்க வேண்டுமென்ற முன்னெச்சரிக்கை மணி வழிதெருவில் நடக்கும்போது மனசுக்குள் அடிக்கிறது.

போர் ஓரிடத்தில் நிற்கவிடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது. தமிழகத்தின் கரைகளில் நாளாந்தம் அகதிகள் வந்து இறங்கிக்கொண்டேயிருக்கிறார்கள். உயிரைத் தவிர இழப்பதற்கு எதுவுமில்லாத அவர்களைத் தொலைக்காட்சி வழி காணும்போது இருள்போல ஒன்று மனசுள் படிகிறது. உயிரைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவாவது எங்களுக்கு ஓரிடம் இருக்கிறதே என்று நினைக்கும்போது ஆறுதல்தான். ஆனால், உயிர் தரித்திருப்பது ஒன்றுதான் வாழ்வா… சோறும் தண்ணீரும் தலை சாய்க்க இடமும் தற்காலிகத் தந்தால் போதுமானதா என்ற கேள்வி எழும்போது…பெருமூச்செறிவதைத் தவிர வேறென்ன வழி…?

போரில் இழந்தவை அநேகம். பெற்றுக்கொண்டது யாதுமில்லை என்பதற்குமில்லை. பின்னிரவில் இயற்கை உபாதை அழைக்க எழுந்துபோவதற்கும் துணை வேண்டியிருந்த எங்களை போர் எங்கெல்லாம் அழைத்துப்போயிருக்கிறது…! கடப்படிக்குப் போகவே பயந்தவர்களை கனடா வரை அழைத்துப்போனதல்லவா அது… கொழும்புக்குப் போவதற்கே ஆங்கிலம் தெரிந்தவர்களைத் தேடிப்பிடித்து அழைத்துப்போய் அவர்களுக்குத் ‘தண்ணி’யும் சாப்பாடும் அறைக்காசும் அழுத நாம், இன்று ரொறன்ரோ, ரோக்கியோ, நியூயோர்க், பாரிஸ் என எங்கெங்கெல்லாமோ சுலபமாகப் பறந்து திரிகிறோம். ‘ரவுனுக்கு’ப் போய் ஐஸ்கிறீம் குடிப்பது ஒன்றுதான் உச்சபட்ச சந்தோஷம் என்றிருந்த காலங்கள் போயின போயினதாம். இழந்த நாட்களின் மீதான காதல் எல்லோருக்கும் இருக்கவே இருக்கிறது.

பொதுவாக மாநகரங்கள் பன்முகம் உடையவை. சென்னையும் அதற்கு விதிவிலக்கல்ல. அதன் கண்களை இப்போதுதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பாதமும், விரல்களும், மனசும் அறிய நாளாகும்.

நள்ளிரவில் நாய்கள் குரைக்க விழித்தெழுந்து பயத்தோடு எதையோ எதிர்பார்த்திருப்பது கொடுமை. உண்ணச் சோறெடுத்து வாயில் வைக்கும்போது ‘சுற்றிவளைப்பு’ என்று செய்தி வருவது அதனிலும் கொடுமை. தற்காலிக ஆசுவாசமாக தமிழகம் இருப்பது ஆறுதலே.

எங்கே சுற்றியும் கால்கள் தானாகவே வீடு வந்து சேரும். பனி படர்ந்த வீதிகளில், பாலைவனங்களில், அயல் தேசங்களில் எங்கெங்கோ நாம் நினைத்தே பார்த்திராத வீதிகளில் எம்மை நடக்கவிட்டிருக்கிறது காலம். இருந்துமென்ன… இருக்கமுடியாமல் நாம் பிரிந்துவந்த புழுதி பறக்கும் எமதூரின் தெருக்களில் ஆண்டாண்டுகளாக மானசீகமாக பதிந்துகொண்டிருக்கின்றன நம் பாதச்சுவடுகள்.

மழைக் காதல்

“உங்களுக்கு என்ன பிடிக்கும்…?” இந்தக் கேள்வியை நாம் சந்தித்த, எமக்குப் பிடித்த ஓரிருவரிடமாவது கேட்டிருப்போம். பிடித்தவை பற்றிச் சிந்திக்கும்போது எந்தக் கடுகடு பேர்வழியாக இருந்தாலும் முகம் அற்புதமாக மலர்ந்துவிடும். கடந்தகாலத்தின்மீதான நினைவுகூர்தல் எத்தனை மகிழ்ச்சி தருவது… பின்னோக்கி யோசிக்கும்போது பால்யத்தின் துருவேறிய தாழ்ப்பாள்களை மெல்லத் திறக்கிறோம். பதின்பருவத்தின் பூத்தூவிய பாதைகளுக்கு அரையடி மேலாக மிதந்து போகிறோம். பழைய நாட்குறிப்பைப் புரட்டும்போது அந்தந்தக் காலங்களுக்குள் நாம் பிரவேசித்துவிடுவதில்லையா… அதுபோல “உங்களுக்கு என்ன பிடிக்கும்” என்ற கேள்வி, பாதரசம் கலைந்த முகம் பார்க்கும் கண்ணாடி வழியே மங்கலாக எம்மை நாம் பார்த்துக்கொள்வதுபோல ‘சுயபார்வை’பார்க்கத் தூண்டுகிறது.

எமது ‘எனக்குப் பிடித்த’பட்டியலில் நிச்சயமாக எமது துணையின் பெயர் (பின்னே… அதைச் சொல்லாவிட்டால் கேட்பவர் என்ன நினைத்துக்கொள்வார்!) இருக்கும். நான் கேட்ட அதிகம் பேர் புத்தகங்களையும் மழையையும் நண்பர்களோடு சுற்றுவதையும் விரும்பிச் சொன்னார்கள். நான் காதலிக்கும் அந்த வார்த்தை சுற்றிவளைத்து ஒரு வழியாக வந்துவிட்டது. உங்களில் எத்தனை பேருக்கு மழை பிடிக்கும்…? அந்த வார்த்தைக்கு மட்டுந்தான் எழுதும்போதே எழுதுகிறவரை நனைத்துவிடுகிற சக்தி இருக்கிறது.

மாரிகாலம் என்பது நம்மவர்கள் வாழும் கனடா, லண்டன், பிரான்ஸ் இன்னபிற நாடுகளில் கொடுங்குளிரின் அச்சுறுத்தலோடு வருகிறது. எனினும் குளிரற்ற மழை நாட்கள் கொண்டுவரும்- காதல் மற்றும் இசைக்கு இணையான- அற்புத உணர்வை எவரால் மறுக்க இயலும்…? ஓடும் வாகனம்…. நிறங்களால் எழுதிய கவிதை போன்ற இலையுதிர்காலம்… மழை…. எமக்குப் பிடித்த பாடல்…. அருகில் பிடித்த நண்பர் அல்லது துணை… இந்தப் பயணம் முடிவற்று நீளமாட்டாதா என்ற ஏக்கம் எழாதவர்கள் வாழத் தகுதியற்றவர்கள்.

இங்கு மழை மேலும் அழகாயிருக்கிறது. இடையிடையே இடியிடித்து உலுப்பி எழுப்பினாலும் மின்னல் ‘பார்க்காதே…! கண்ணைப் பறித்துவிடுவேன்’என்று பயங்காட்டினாலும் மழை பொழிவதைக் கேட்டுக்கொண்டு படுக்கையில் கிடப்பது கவிதையெனக் கூறிக் கிறுக்கும் பல ‘கனவுக்காரர்’களுக்கு (சோம்பேறிகளுக்கும்) பிடித்தமானதே.
மழைக்கால இரவுகளில் (மழை… மழை… என்று கூறியது கூறல் குற்றமென பெரும்புலவர்கள் யாரும் சண்டைக்கு வரவேண்டாம். அத்தனை வசீகரம் அந்த வார்த்தையில்) போர்வையை உதறி எழுந்து வெளியில் போய்ப் பார்த்தால், எத்தனை சிக்கல்கள் இருப்பினும் வாழ்வை நேசிக்கத் தோன்றும். ஒரு கனவுபோல ஈரத்தாரைகள் இறங்கிக்கொண்டிருக்கும். மிக விருப்பப்பட்டு எழுதும் பக்கங்களாய் சரசரவென்று வானம் எழுதித் தள்ளும். பக்கத்தில் மரங்கள் வேறு இருந்துவிட்டால் சொல்லவேண்டியதில்லை. யாரோ கவிஞன் எழுதியதுபோல ‘இலைகளின் நடனம்’ காணுந்தோறும் உடலும் மனமும் எடையிழந்து போகும். மின்விளக்குகளின் ஒளி மழைத்துளிகளோடு இணைந்திருக்கும் காட்சியை விவரிக்க எண்ண மொழியை எல்லாவிடங்களிலும் கையகப்படுத்த இயலாத ஆற்றாமை பொங்கும். ஒரு பெருநகரத்தில் வாகனங்களும் ஆட்களுமற்ற சாலைகள் காணக்கிடைக்காத அபூர்வம் அல்லவா…? போர்த்திப் படுத்துறங்கும் ஊரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும்.

விடியற்காலைகள் சின்னக் குழந்தையின் பாதங்களாய் கண்ணில் ஒற்றிக்கொள்ளத் தூண்டுபவை; தூய்மையானவை. இரவு மழை பெய்து கழுவிவிடப்பட்ட தெருக்களில் நடந்துபோகின்றபோது ‘சில்லென்று ஒரு காற்று’அடிக்கும். எதிர்ப்படுகிறவர்களைப் பார்த்து புன்னகைக்கக்கூடத் தோன்றும். “காலங்காத்தாலை ஒரு பைத்தியத்தின்ரை முகத்திலையா முழிச்சோம்”என்று மற்றவர்களைச் சங்கடப்படுத்தக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் புன்னகையைப் பொத்திவைத்து நடத்தல் நன்று. அதிக கடுமை காட்டுகிறவர்களை ‘மரமா நீ’என்றுகூடப் பேசுவதுண்டு. அந்த இளகாத மரத்தையும் ஈரம் இளகவைத்துவிடுகிறதோ என்னவோ…. மழைக்கால மரங்களின் அழகும் சிலிர்ப்பும் சொல்லி மாளாதது. காதல் வயப்பட்ட பெண்ணின் நளினமும் குதிப்பும் பளபளப்புமாய் ஒளிரும் மரங்கள்தான் எத்தனை கவிதைகளை எழுதவைத்திருக்கின்றன. இது கவிதையெனில் அவற்றிலொன்று.

சோகம் பிறக்கையிலே
கவிதை தாகம் வளருமென
சொன்னது பொய்யில்லை.
மேகம் அழுதழுது
பூமியில் எழுதுமந்த
மழையெனும் கவிதையினால்
மனமும் நனைகிறதே…!

கரிய முகில் திரண்டு
பகல் கறுக்கும் பொழுதுகளில்
சுகமாய் ஒரு துயரம்
நெஞ்சைச் சுட்டுப் போகிறதே…
புரியாதொரு மொழியில் மழை
பாடும் பாடல்களில்
எனையேன் பொருத்தி மனம்
இற்றுச் சாய்கிறது…?

சாரல் சத்தம்போல் உலகில்
சங்கீதம் தானுண்டோ…?
தாளம் பிசகாமல்-கூரை
தட்டும் நீர்த்துளிபோல்
ஊரில் ஒரு கருவி
உண்டோ நானறியேன்.

கண்ணைப் பறித்தாலும்
பொன்னில் கோடிழுக்கும்
மின்னல் அழகதிலே
மேனி சிலிர்க்கிறது.
யன்னல் வழி தெரியும்
சாலை மரம் செடிகள்
சின்னக் குழந்தை முகம் போல்
செழிப்பாய் இருக்கிறது.

விடிவதில் விருப்பமுண்டு
ஆனால்…. மழை இரவு
முடிவதில் விருப்பமில்லை
போர்வைக் கதகதப்பு…
சாரல் சங்கீதம்….
உறக்க இருட்டுக்குள்
தொலையும் விழிதன்னை
உசுப்பும் இடியோசை…
இவைகள் சுகித்தபடி
கிடந்தால் போதும் - மழை
முடிந்தால் விடியட்டும்.

ஏழு பிறப்புண்டாம்
ஏழில் ஒரு பிறப்பு
நீராய் வரம் தந்தால்
மழையாய் மாறி இந்த
மண்ணில் பல கவிதை
எழுதும் வரம் கேட்பேன்
அதுவும் இல்லையெனில்
மழையில் கரைந்து உடல்
மறையும் வரம் கேட்பேன்.

இங்கு சென்னையில் வானத்திலிருந்து மத்தாப்புச் சிதறல்கள் விதவிதமாய் இறங்க தீபாவளி களைகட்டியிருக்கிறது. (களைகட்டியிருந்தது. தீபாவளி நேரம் எழுதியது) வந்து வந்து உயிர் குடிக்கும் இரும்புப் பறவைகளும், எங்கிருந்தோ பாய்ந்து வந்து விழுந்து உயிர்களையும் கனவுகளையும் காவுகொள்ளும் எறிகணைகளும், மரணத்தின் அகலா வாசனையுமான எமதூர்களை எண்ணுந்தோறும் துயர் பொங்குகிறது என்று குற்றவுணர்வோடு சொல்லிக்கொள்ளும் காலமாயிற்று.

11.06.2006

நேற்றில் வாழ்பவர்கள்

நேற்று என்பது
மறக்கவொண்ணா பாடல்…
திரும்ப விரும்பும் காலம்…
அனைவரதும் ஆதர்சம்…

‘முன்னைப்போலில்லை விலைவாசி’
பாட்டியின் இடுங்கிய விழிகளுக்குள்
நேற்றொரு இனிய கனவென விரிகிறது.
‘அப்பத்தைப் பயல்களைப் போலவா…’
தலைமுறை இடைவெளி வலியில் தாத்தா.
அப்பாவுக்கும் நேற்றே இனிப்பு…!
கன்ன எலும்பு துருத்திய
கறுப்பு வெளுப்பு புகைப்படத்தில்
ஆழ்ந்தபடிக்கு அம்மாவும் அதையே சொல்கிறாள்.

இழந்த காதல்…
கடந்த ஆண்டின் இலையுதிர்காலம்…
பையன்கள் பெண்கள்…
காலமானவர்கள்…
பழைய பள்ளிக்கூடம்…
பொய்யோ மெய்யோ புராணங்கள்…
அவரவர் காலத்து சினிமா தேவதைகள்…
பட்டியல் நீளும்.

இன்று நாளை நேற்றாகும்
இனிவரும் நாளில் சொல்வோம்
நேற்றைப் போல் உண்டா என.

இன்று கழிகிறது அனாதையாக.

11.05.2006

ஈரமற்ற மழை




முன்னரெல்லாம்
மழையுடனான உறவு
நெகிழ்வூட்டுவதாயிருந்தது.

பிரியமான தோழியைப்போல
எதையேனும்
எடுத்துவராமல் அது வந்ததில்லை.

குறிப்பாக ஞாபகங்களை…
அவை குளிர்நாளில் கம்பளிபோல்
கதகதப்பானவை.

நிலத்தில் குதித்துக் குமிழியிட்ட
நீர்த்தாரைகள்
எழுதவைத்திருக்கின்றன
எண்ணற்ற கவிதைகளை.

நீங்கள் அறிவீர்கள்
மழைநாளின் யன்னல்களைப்பற்றி…
எத்தனை ஓவியங்களை
எடுத்துவந்திருக்கின்றன வீட்டிற்குள்.

கூடிக்கலந்து சலசலத்து விரையும்
சாலைத்தண்ணீர்
இழந்துபோன குழந்தைமையை
விரல்பற்றிக் கூட்டிவந்ததையும்
மறப்பதற்கில்லை.

விரித்த புத்தகத்தின் வரிகளில்
வெறுமனே விழியோட்டிய
அன்றைய மாலையில்
அது காதலை அழைத்துவந்திருந்தது.
மௌனமும் மழைமுகிலும்
கனத்த பொழுது அது.

மழை விட்ட பொழுதுகளையும்
குறைசொல்வதற்கில்லை.

முற்றத்தின் தூய்மை…
புல்லின் சிலிர்ப்பு…
பூக்களின் அதீத மலர்ச்சி…
இலைநுனி வழி சொட்டிய நீர்த்துளி யாவும்
கிளர்த்தியிருந்தன மெல்லுணர்வை.

வரவிருக்கிறது மழை.

வெளிக்கொடியில் உலரும்
அவனது துணிகளை
நனைத்துவிடுவதான அச்சுறுத்தலைத்தவிர
இந்நாட்களில் எதையும் எடுத்துவராத
மழையை நினைக்க
துயரமாய்த்தானிருக்கிறது.