9.20.2010

யானையைக் காட்டி பிச்சை எடுக்கிறேன்....

5 ஆண்டுகளுக்கு முன்பு செல்லப்பிராணியை வளர்க்கலாம் என்று ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி, வளர்க்க ஆரம்பித்தேன். பார்ப்பதற்கு அழகான இளம் ஆட்டுக்குட்டியாக அது இருந்தது. அலுவலக வேலைகள் முடிந்ததும் அந்தக் குட்டியோடுதான் எனது நேரமெல்லாம். நண்பர்கள் குட்டியின் அழகில் மயங்கி, அதற்குத் தேவைப்படும் உணவை வழங்கினார்கள்.

அந்த ஆட்டுக்குட்டியை வளர்ப்பதில் நான் பெரும் மகிழ்வடைந்ததற்குக் காரணம், அது அந்தத் தெருவில் இருந்த குழந்தைகளுக்கு - பொம்மை வாங்கித் தர முடியாத பெற்றோர்களுக்கு - தேவைப்படுகிற விளையாட்டுப் பொருளாக மாறியதுதான். அவர்கள் தங்களது குழந்தைகளை இந்த ஆட்டுக்குட்டியின் முதுகில் உப்புமூட்டையாக ஏற்றி விளையாட்டு காட்டினார்கள். ஆட்டுக்குட்டி உள்ளம் நிறைந்த‌ மகிழ்ச்சியோடு அந்தக் குழந்தைகளுடன் விளையாடியது. நாளுக்கு நாள் ஆட்டுக்குட்டியைத் தேடி வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானது. அதற்கு உணவளித்த இன்னும் சில நண்பர்கள் இருந்தபோதிலும், எனக்கான அடையாளமாக அந்த ஆட்டுக்குட்டி மாறியது. அதன் பெயரிலேயே என்னை அழைத்தார்கள்.

எனக்குத் திருமணம் ஆகி, எனக்கு என்று ஒரு குழந்தை பிறந்த பின்பும், நான் ஆட்டுக்குட்டியையே கொஞ்சிக் கொண்டு, அதனுடனேயே நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தேன்.

நாட்கள் போனது தெரியவில்லை. கூடவே இருந்ததால் எனக்குத்தான் அதன் வளர்ச்சி தெரியவில்லை; குட்டியாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒருநாள் எனது வீட்டின் உரிமையாளர், 'வீட்டில் யானையை எல்லாம் வளர்க்க அனுமதிக்க மாட்டேன், வேறு வீடு பாருங்கள்' என்று சொல்லிவிட்டார். அப்போதுதான் தெரிந்தது, நான் வளர்த்தது ஆட்டுக்குட்டி அல்ல; யானைக்குட்டி என்று.

இப்போது யானையோடு தெருவில் நிற்கிறேன். அதற்கு ஒரு பெரிய வீடு வேண்டும். கம்பீரமாக அந்தத் தெருவில் விளையாடிய யானை, இப்போது படுத்துக் கிடக்கிறது. வேறு யாரிடமாவது விட்டுவிடலாம் என்றால், அவர்கள் நம்மைப் போல் பார்த்துக் கொள்வார்களா என்று அச்சம் வருகிறது. என்ன செய்வது வளர்த்த பாசம்!! இப்போது யானை செய்த உதவிகளைச் சொல்லி, யானையைக் காட்டி நான் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். கீற்று என்று சொன்னால், உங்களுக்குக்கூட அந்த யானையை நினைவுக்கு வரக்கூடும். கொஞ்சம் உதவுங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் தேவையான பொருளாக அந்த யானை இருக்கும்.

உதவ விரும்புவர்களுக்கு...

ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு எண்: 603801511669
கணக்கு வைத்திருப்பவர் பெயர்: இரமேஷ்
வங்கிக் கிளை: அண்ணா சாலை, சென்னை
IFSC Code / MICR Code: ICIC0006038 / 600229017

Credit card மூலமாக நன்கொடை அளிக்க விரும்புபவர்கள், paypal-ஐ (www.keetru.com/index.php) பயன்படுத்தவும்.

Cheque/DD அனுப்ப வேண்டிய முகவரி:
Ramesh,
22/34, Saraswathi Nagar 5th street,
Adambakkam
Chennai - 88

நன்கொடை அனுப்பியபின் தங்களது பெயர், அனுப்பிய தொகை குறித்து editor@keetru.comக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

என்றும் அன்புடன்
கீற்று நந்தன்.
கைப்பேசி: 9940097994


பிற்குறிப்பு: 'கீற்று' நண்பர்கள் மினர்வா, இரமேஷின் இந்த யானை அழகியல் பிடித்திருக்கிறது।மிகவும் தரமான கட்டுரைகளையும் விவாதங்களையும் சஞ்சிகைகளையும் உள்ளடக்கி வெளிவரும் கீற்று இணையத்தளம் மீண்டும் இயங்க நண்பர்கள் உதவிசெய்வீர்கள் என்று நம்புகிறேன்.

9.07.2010

பூனைகளின் வீடு



இந்த
வீடு முழுவதும் மனிதர்களைப் பற்றிய புத்தகங்களே நிறைந்திருக்கின்றன. சகமனிதர்கள் மீதான சுவாரஸ்யம் குறைந்துசெல்வதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பாக முடியாது. தவிர, ‘மனிதம்என்ற சொல் அருங்காட்சியகப் பொருளாகத் தூசிபடிந்து போனதன் பிற்பாடுவார்த்தை விளையாட்டுக்களால் அறிவுஜீவிப் பாவனைகள் நிகழ்த்துவதை நாம் விட்டுவிடலாம். பூனைகளைப் பற்றிக் கதைத்தால் உங்களுக்குப் பிடிக்காதா? எனக்குப் பூனைகளைப் பிடிக்கும். அது புலியை ஞாபகப்படுத்துவதால் எனக்கு அதைப் பிடிக்கிறதென்று உங்களில் மெத்தப் படித்த யாராவது இவ்வளவிற்குள் கண்டுபிடித்திருப்பீர்கள். நரிகளையும் சிங்கங்களையும் பாம்புகளையும்கூட நேசிக்கிறவர்கள் இருக்கும்போது, எனக்குப் புலிகளையும் பூனைகளையும் பிடிப்பதொன்றும் பிறழ்நடத்தையாக இருக்க வாய்ப்பில்லை. இதுவொரு உளவியல் சிக்கல் என்பவர்களைப் பார்த்துமியாவ்என்று கத்தி அதை நிரூபிப்பதில் எனக்கொன்றும் வெட்கமில்லை.

எனக்கு நாய் பூனைகளைக் கண்டால் அருவருப்புஎன்று நிறையப்பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படிச் சொல்லும்போது அவர்கள் முகத்தில் பளிச்சிடும்மனிதத்தனம்ரசிக்கும்படியாக இருப்பதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் எனது வலைப்பூவில் இருந்த சாம்பல் நிறப் பூனைக்குட்டி வாசிப்பைத் தடைப்படுத்துவதாகவும் அதைத் தூக்கிவிடும்படியும் தொடர்ச்சியாகப் பலர் கேட்டுக்கொண்டுக்கொண்டதன் விளைவாக மிகுந்த வருத்தத்தோடு அதைத் தூக்கினேன். ஆம்நீங்கள் நினைப்பது சரிதான். மூக்கைச் சிந்தி ஒரு பதிவு எழுதி பிராயச்சித்தம் பண்ணிவிட்டே அதைத் தூக்கினேன். உண்மையில் ஒருநாள்கூட அதன் பஞ்சு உடலை நான் தொட்டுப் பார்த்ததில்லை. என்னைப் பார்த்து அதுமியாவ்என்றதில்லை. அதுவொரு குட்டிப்பூனையாக இருந்ததும், வலைப்பூவில் அமர்ந்து ஒயிலாகத் தன்னுடலை வளைத்து கண்களைத் தாழ்த்தி என் எழுத்துக்களைப் பார்த்துக்கொண்டிருந்ததும் மட்டுமே அதன்மீது வாஞ்சை பெருக போதுமான காரணங்களாக இருந்தன.

வெளிநாட்டில் இருந்தபோது அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளும்படியான பூனைப் பிரியையாக இருக்கவில்லை. நாட்டுக்குத் திரும்பி வாழத் தொடங்கிய பிற்பாடு (பயந்தபடிதான்) ஒருநாள் அப்பா ஒரு பூனைக்குட்டியோடு வீட்டுக்கு வந்தார். அது அடர்மஞ்சள்நிறப் பஞ்சுத்துண்டைப் போல அவரது கையில் இருந்தது. “இதை ஏன் கொண்டு வந்தீர்கள்பெரிய பொறுப்பல்லவா?”என்று நான் கேட்டேன். அவர் என்னைப் பார்த்து ஞானியின் சிரிப்பொன்றை உதிர்த்தார். கால் போத்தல் மதுவில் அன்பும் ஞானமும் எப்படிப் பெருக்கெடுக்கும் என்பதை நாமெல்லொரும் அறிவோம். பிறகு சொன்னார்: “இது வீதியைக் கடக்க முடியாமல் ஒரு ஓரத்தில் நின்று திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தது”. ஆம்அவ்வளவு சிறிய பூனைக்குட்டிக்கு தெருவைக் கடப்பதென்பது(சிறுநகரமாயினும்) எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்திருக்கும்!

ஐந்தாம் இலக்கச் செருப்புக்குள் தனது உடல்முழுவதையும் அடக்கிக்கொண்டு படுத்துவிடக் கூடிய அளவு இத்தினியூண்டு பூனைக்குட்டி அது. அதற்கு நாங்கள்பூக்குட்டிஎன்று பெயர்வைத்தோம். அந்நாட்களும் இந்நாட்களும் எந்நாட்களும் என் போன்றவர்களுக்குத் தனிமை மிகுந்தவை என்பதை நீங்கள் அறிவீர்கள். அது எந்தளவு விபரீதத்தைக் கொணர்ந்ததென்றால், பூக்குட்டியை நான் எனது சொந்தக் குழந்தையாகக் கருதவாரம்பித்தேன். அதை ஒரு நிமிடம் காணவில்லையென்றாலும் வீட்டிலுள்ளவர்கள் பதட்டப்படும்படியாகக் கூச்சலிடத் தொடங்கினேன். அது பல தடவைகள் காணாமல் போனது. மரங்களின் உச்சிகளிலிருந்தும் வீட்டுக் கூரையிலிருந்தும் கற்கள், புதர்களுக்குள்ளிருந்தும் கண்டுபிடிக்கப்பட்டது. நான் தன்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறேன் என்பதை அது எப்படியோ தெரிந்துவைத்திருந்தது. பசிக்காதபோதிலும் அதற்கு நாங்கள் அடிக்கடி உணவு வைத்தோம். அபூர்வமாக பசி எழும் தருணங்களில் எங்கள் கால்களைக் கவ்விவிட்டு சமையலறைக்கு வழிகாட்டிச் செல்ல அது பழகியிருந்தது. பூக்குட்டி கொஞ்ச நாட்களில் கதைக்க ஆரம்பிக்கலாமென்று நாங்கள் எங்களுக்குள் கதைத்துக்கொண்டோம். ‘பேசும் பூனைக் கனவு நாளாக நாளாக வளர்ந்துகொண்டேயிருந்தது. மாலைவேளைகளில் குடும்பமாகக் குந்தியிருந்துவிண்ணாணம்கதைக்கும்போது பூக்குட்டி மிகச் சாவதானமாக என் மடியில் ஏறி தன் பஞ்சுடலைச் சுருட்டிக்கொண்டு படுத்து உறங்கிவிடும்.

ஒரு சிறிய உடலுக்குள் எவ்வளவு அபரிமிதமான சக்தி அடங்கியிருக்கிறது என்பதை சில மணி நேரங்கள் பூக்குட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தால் உணர்ந்துகொள்ள முடியும். பெரிய வீட்டின் மொட்டைமாடியிலிருந்து சின்னவீட்டுக் கூரைக்கு ஒரே தாவாகத் தாவும். இரண்டுக்கும் இடையிலான இடைவெளியில் அது பறந்துபோவது காட்சிப்பிழையாக கண்களில் தோன்றும். வாழை மரத்தில் சரசரவென்று ஏறி ஒற்றைக் கையால் இல்லாத பட்டாம்பூச்சியைப் பற்ற எத்தனித்துவிட்டு ஒரு தேர்ந்த வழுக்குமர வீரனைப் போல கீழிறங்கி வரும். ஒரு சின்னக் காகிதத் துண்டை தன் பஞ்சுக்கால்களால் பற்றுவதும் விடுவதுமாகக் குரங்குச்சேட்டையாடும். ‘சிவனேஎன்று படுத்திருக்கிற நாய்களின் கன்னத்தில் போகிற போக்கில் செல்லமாக ஒரு அடி அடித்துவிட்டுப் போகும். நாய்களும் நுண்ணறிவில் குறைந்தவையன்று. பூக்குட்டியைக் கடித்தால் அடிவிழும் என்று நாய்களுக்குத் தெரியும். அதனால் அவைதொலைந்துபோ குட்டிச்சாத்தானேஎன்ற பார்வையை எறிவதோடு சரி.

பூக்குட்டி மூன்று குட்டிகள் போட்டது. அதில், மை தடவியதே போன்ற கண்களால் எதிர்ப்படும் எல்லாவற்றையும் பிரமித்துப் பார்க்கும்புதினம்மட்டுமே எஞ்சியது. புதினத்திற்கு தாயைவிடவும் செல்லம் அதிகம். புதினம் வளர்ந்து ஆளாகியதும் பூக்குட்டி பக்கத்துவீட்டுக்குப் போய் அங்கேயே தங்கிவிட்டது. நாங்கள் எத்தனையோ தடவை தூக்கிக்கொண்டு வந்து எங்கள் வீட்டில் விட்டும் அது தரிக்கவில்லை. சாப்பாடு கொண்டுபோய் வைத்தால் சாப்பிடும். சோர்ந்துபோய்ப் படுத்திருக்கும். மனிதர்களின் மனங்களையே அறியமுடியவில்லைபூனைகளின் உளவியலை யாரிடம் கேட்க? அது இப்போதும் பக்கத்து வீட்டில்தான் வசிக்கிறது. சாப்பாடு கொண்டுபோய் வைத்துவிட்டு அருகில் நின்று பார்க்கும்போதுஏன் போனாய் என் பட்டுக்குஞ்சே?’என்று துக்கமாக இருக்கும்.

பூனைகள் நாய்களைப் போல விசுவாசமற்றவை என்றொரு கதை உலவுகிறது. பூனைகள் நாய்களைப் போல குழைவதில்லை. அவற்றின் கம்பீரம் கண்கொள்ளாதது. ஒரு தடவை நீண்ட நாட்கள் கழித்து வீட்டுக்குப் போயிருந்தேன். புதினம் நோக்காடு எடுத்து வலியில் கதறிக் கதறிக் கிடந்தது. என் பாதங்களில் முகம் வைத்து அண்ணாந்து பார்த்து முனகியது. பிறகு நாங்கள் பதறிப் பார்த்திருக்க எனது காலடியில் ஒரு குட்டியை ஈன்றது. அதன் கண்களில் அப்போது சுரந்த அன்பு, அந்தக் கணத்தின் ஆசுவாசம் எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. “பூனை குட்டி போடுவதைப் பார்ப்பது அதிர்ஷ்டம்என்றார் அம்மா. அதிர்ஷ்டம் புதினத்தின் குதம் வழியாகக்கூட வீட்டுக்குள் நுழையக்கூடுமென்பதை அன்று அறிந்துகொண்டேன். புதினத்தின் வேலை குட்டி ஈனுவது. அம்மாவின் வேலை அவற்றை யாரிடமாவது பிடித்துக் கொடுத்துவிடுவது. வருடத்தில் ஒரு முறையாவது வீட்டுக்குப் போக வாய்க்கும். புதினம் எனது அறை வாசலில் பழியாகக் கிடக்கும். கதவு திறந்த சத்தம் கேட்டவுடன் வந்து கால்களைச் சுற்றிச் சுற்றியுரசும். செல்லக் கடி கடிக்கும். “நீ இருந்திட்டுத்தான் வீட்டை வாறாய். மற்ற நாளெல்லாம் நான்தான் சாப்பாடு வைக்கிறன். ஆனாலும் இது உன்னிட்டைத்தான் ஒட்டுகுது. இதுக்கு நன்றியில்லை.”என்பார் அம்மா.

நான்கு மாதங்களுக்கு முன் புதினத்தைக் காணவில்லை என்று தொலைபேசியில் சொன்னார்கள். ஊரெல்லாம் தேடியும் கிடைக்கவில்லை என்றார்கள். நேரில் போனபோது உண்மை வெளிவந்தது. புதினம் வீதியைக் கடக்கும்போது பேருந்தில் அடிபட்டு இறந்துபோயிற்று. அதன் மைதடவினாற்போன்ற கண்கள் வீட்டின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதான பிரமையில் சில நாட்கள் ஆழ்ந்திருந்தேன். “புதினத்துக்குச் சாப்பாடு வைச்சாச்சா?”என்ற கேள்வி உதடுவரை வந்து வந்து உள்ளுக்குள் கரைந்த நாட்கள் அநேகம்.

சந்திராவின் சிறுகதைத் தொகுப்பின் பெயராயிற்று எங்கள் வீடு. ‘பூனைகள் இல்லாத வீடு’. “இனிமேல் பூனை, நாய் என்று யாரும் கொண்டுவரக்கூடாதுஎன்று வீட்டில் எல்லோரிடமும் சொல்லிவைத்தேன். துயரம் ஊறிய அந்த வேண்டுகோளை யாவரும் புரிந்துகொண்டனர் வாடகைக்கு இருப்பவர்களைத் தவிர்த்து; எங்கள் வளவுக்குள் இருக்கும் சின்னவீட்டில் வாடகைக்கு இருக்கும் ஆசிரியரின் மகன் (வயது 12) டக்ளஸ் ஒரு பூனைக்குட்டியைக் கொண்டுவந்திருக்கிறான். அது இருபத்துநான்கு மணிநேரத்தில் ஏறத்தாழ இருபது மணி நேரங்களை எங்கள் வீட்டில் கழிக்கிறது.

அதன் பெயர் டிலானியாம் - டக்ளஸ் சொல்கிறான். அவன் ஒற்றைப்பிள்ளை. அதனால் அதை அவன் தங்கை என நினைத்திருக்கலாம். நாங்கள் அதைபூக்குட்டிஎன்று அழைக்கத் தொடங்கியிருக்கிறோம். இரண்டாம் சார்ள்ஸ் மாதிரி இது இரண்டாம் பூக்குட்டி. அது நிமிர்ந்து படுத்து தன் வெள்ளுடலைக் காட்டியபடி கைகால்களை எறிந்து சோபாவில் சயனிக்கிறது. சுருட்டிய காகிதத் துண்டைத் தன் கைகளால் பற்றியபடி இரண்டு கால்களில் எழுந்து நிற்கிறது. மிக்கி(நாய்)யின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஊஞ்சலாடுகிறது. மிக்கியின் காதுகளை செல்லமாகக் கடித்துவிட்டு தன் சொரசொரவென்றிருக்கும் நாக்கால் நக்கிவிடுகிறது. திடீரென எங்கிருந்தோ தோன்றி எங்கள் கால்களுக்குள் இடறுப்பட்டுக்கொண்டு ஓடோடென்று ஓடிப் போய் மாடிப்படிக்கட்டுக்களில் நின்று வாலை ஆட்டிச் சிரிக்கிறது. பந்தைத் தனது வயிற்றுக்குள் இடுக்கிப்பிடித்துக்கொண்டு பின்னங்கால்களால் உதைக்கிறது. சாமியறைக்குள் அமர்ந்து கும்பிட்டுக்கொண்டிருக்கும் அம்மாவின் மடியைத் தாண்டி அந்தப் பக்கம் குதித்துத் திடுக்கிட வைக்கிறது.

எங்கள் வீடு பூனைகளின் வீடு. பூனையின் மென்பாதங்கள் அங்கே மறைந்து மறைந்து தோன்றுகின்றன. புலிகளுக்கு இந்த மாயவிதி பொருந்தாது போலும்.