9.29.2009

ஈழம் குறித்த பிஞ்ஞவீனத்துவக் கதை அல்லது உரையாடல்


எனக்கு அப்பாம்மாவால் இடப்பட்ட பெயர் கிருகலட்சுமி. நான் பிணம் – பிரியன், நொய்யனார், பாரு நந்திதா, சோ.பி. மாணக்யா, ச்சோவு சுந்தர், மறை கழன்றவன், மீ.ஜி. சுரேஷ் இவர்களையெல்லாம் வாசித்தபிற்பாடு என் பெயரை புகலி என்று மாற்றிவைத்துக்கொண்டேன். அந்தப் பெயர் எனக்குப் பொருத்தமாக இருப்பதாக காதல் பெருகிவழியும் மாலையொன்றில் என் மடியில் படுத்திருந்தபடி சத்தியன் சொன்னான். நாங்கள் எப்போதாவது பிசாசுகளின் வாயால் பேசமுற்படுகையில், எனது பெயரிலுள்ள ‘க’வைத் தூக்கிவிட்டு ‘புலி’என்றே சத்தியன் என்னை விளித்துப் பேசுவான். சத்தியன் சராசரித் தமிழன். அவனை உங்களுக்கு அறிமுகப்படுத்திவைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவன்தான் இந்தக் கதையில் அதிகபட்சமான உரையாடலை நிகழ்த்திச் செல்கிறவன் (ஹா) என்றவகையில் அவனை அறிமுகப்படுத்தித் தொலைக்கிறேன். புத்தகம் வாசிப்பதும் அவ்வப்போது எழுதுவதும் தனக்கு எதிர் அரசியல் பேசும் நண்பர்களின் விவாதங்களைக் கட்டுடைப்பதுமாகிய (ஹா) வேலைகளைச் செவ்வனே செய்துவருகிறான். இவை கழிந்த நேரங்களில் நாங்கள் படுத்துக்கொள்வதுமுண்டு.

“தொன்மங்களிலிருந்து மிதந்துவந்த மலர்களின் வாசனையில் களியேறி உன்மத்தித்த அவன் அந்த வாசனை வரும் திசை தேடியலைந்து நெடுவழியில் தொலைந்துபோய்க்கொண்டிருக்கையில் சந்தித்த அநிருத்தாவின் விழிகளிலிருந்து வழிந்த ஆன்மநிவேதனத்தை அருந்தி அவளில் காமுற்று சுயமைதுனம் செய்துகொள்ளத் தனதிடம் திரும்பிச்சென்றான்…”என்ற வரிகளை நான் வாசித்த நாளிலிருந்து சத்தியனைத் தேடியலைந்து மூத்திரவாடையடிக்கும் அறைச்சுவரொன்றில் முட்டிநின்றேன். (மூத்திரம் என்ற சொல் வராவிட்டால் நொய்யனார் இந்தப் பிரதியை பின்னவீனத்துவம் இல்லையென்று நிராகரித்துவிடுவான்) அவன் எனக்கு வாங்கிக்கொடுத்த இரண்டு போத்தல் 70ரூபா கோல்கொண்டாவில் நான் கவிழ்ந்துபோனதுமன்றி, அன்றுமுதல் அவனது அறையில் வசிக்கலுற்றேன்.
சத்தியன் சிக்கலில்லாத அறைத்துணை.
ஒன்றுக்கடித்துவிட்டு கழிப்பிருக்கையின் மேல்மூடியைத் திரும்பவும் இறக்கிவிட மறந்துபோவதன்றி, உள்ளாடையை கால்வரை இறக்கிவிட்டு நின்றநிலையிலேயே ஒரு காலைத் தூக்கி அதை உத்தேசமாக அறையின் மூலையொன்றில் சுழற்றியெறிந்து- பின் தேவைப்படும் போது மட்டும் அதைக் கால்களால் கொழுவி இழுத்து அணிந்துகொள்ளுமளவு சுத்த நேசன் என்பதன்றி, அவனது காலுறைகளிலிருந்து கிளர்ந்தெழும் நாற்றம் செத்த எலிகளை நினைவுபடுத்தி எனது புத்தகங்களின் பாதுகாப்பைக் குறித்த மனத்தொந்தரவை எனக்குத் தருவதன்றி, நடுநிசியில் துர்க்கனவு கண்டு ‘புலி கொல்… புலி கொல்’என்று கத்துவதன்றி அவனால் எனக்கு எந்த உவத்திரமும் நேர்ந்ததில்லை.
நாங்கள் வோட்காவும் ஆரஞ்சுப் பழச்சாறும்போல அவ்வளவு நெருக்கமாக வாழ்ந்திருந்தோம். திரு.அல்பிரட் அவர்கள் எங்களது அறைக்கு வந்து அப்படியொரு விவாதத்தை ஆரம்பித்துவைத்திருக்காவிட்டால் இனிய வாழ்வு இவ்விதமே கழிந்திருக்கும். அவர் சிவந்த நிறமுடைய உயர்ந்த மனிதர். பெரும்பாலும் இயற்கை உபாதை அழைக்கும்போதும் உணவு உட்கொள்ளவும் மட்டுமே புத்தகங்களை விலக்கி எழுந்துபோகும் பழக்கமுடையவர். இருந்தும், சமகாலச் செய்திகளை அவர் தனது நாக்குநுனியில் சேகரித்துவைத்திருந்தார்.

காருண்யம் பெருகிவழியுமொரு நண்பனின் கடனுதவியால் அன்றைய மாலையைக் கொண்டாடிக்கொண்டிருந்தவேளையில் அல்பிரட் எங்களது அறையை நாடி வந்தார். ஐஸ் துண்டங்கள் மிதந்த மஞ்சள்நிறத் திரவக் கடவுளைப் பங்குபோடப் புதிதாக ஒருவர் முளைத்ததில் கலவரமுற்றது சத்தியனின் முகம். ஆனால், மரியாதை நிமித்தம் அவன் அவரைச் சகித்துக்கொள்ளவேண்டியிருந்தது. அல்பிரட் அருமையான சம்போகி என்பதை நான் எப்படியோ அறிந்துவைத்திருந்தேன். அதனால், அவரது பிரசன்னம் என் முகத்தில் காதலின் ஒளியைப் பூசியது என்பதை நான் உங்களிடம் இரகசியமாகப் பகிர்ந்துகொள்கிறேன்.

பேச்சு வழக்கம்போல அரசியலை நோக்கித் திரும்பியது. அகதிமுகாமில் அடைபட்டிருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களைப் பற்றி துயரந்ததும்பிய குரலில் நெடுநேரம் சொல்லியழுதவாறிருந்தான் சத்தியன். அவனது துயரம் அறைச்சுவர்களை அழுக்கிலிருந்து மஞ்சள்நிறத்திற்கு மாற்றியது. இருந்தாற்போல அல்பிரட் அவர்கள் ஒரு கேள்வியை சத்தியனை நோக்கி எறிந்தார்.

“கொல்லப்பட்டவர்கள் தவிர்ந்த ஏனைய போராளிகள் என்னவானார்கள் நண்பரே?”

அந்தக் கேள்வியால் சத்தியனின் முகம் துர்க்கனவு கண்டு விழித்தவனுடையதாயிற்று. பிறகு மெல்ல அவிழும் மலரினையொத்ததாகக் கனிந்தது.

“அவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுவிட்டார்கள். இத்தனை இலட்சம் மக்களின் வாழ்வைச் சீரழித்து அகதிமுகாம்களுக்குள் தள்ளியவர்களுக்குத் தக்க தண்டனை கிடைத்திருக்கிறது”ஏறக்குறைய அவன் கூவினான்.

சத்தியனின் முகம் அத்தனை விகசித்து நான் பார்த்ததே இல்லை. மலங்கழித்துவிட்டு கழிப்பறையிலிருந்து வெளியில் வரும்போதுகூட அத்தனை ஆசுவாசத்தை நான் அவனது முகத்தில் கண்டதில்லை. அல்பிரட் நெடியதொரு பெருமூச்சோடு என்னைப் பார்த்தார். ஐயமில்லாமல் அழகன்தான் இந்த மனிதன் என்று நான் நினைத்துக்கொண்டேன்.

“புலிகள் உருகுவேயிலிருந்து வந்தவர்களா?”

சத்தியனின் முகம் கெட்ட வார்த்தைகளாலான பின்னூட்டத்தை வாசித்ததுபோலாயிற்று. அவனது உதட்டுக்குள் எனக்கு மிகப் பரிச்சயமான அந்தத் தூஷணத்தை உணர்ந்தேன்.

“இல்லை”

“பீஜிங்கிலிருந்து வந்தவர்களா அவர்கள்?”

“இல்லை”

“அவர்களில் யாருடையவாவது அப்பாவின் பெயர் மிக்கெலாஸ்கி என்றிருக்கிறதா?”

“இல்லை”

“செனாற்றோ என்ற கடைசிப் பெயருடையவன் எவனாவது புலியெனக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருக்கிறானா?”

“சாத்தியமில்லை”சத்தியன் உரக்கக் கத்தினான்।

“சீ வான் குங் என்ற அப்பன் பெயரைக் கொண்டவன்?”

“இல்ல்ல்ல்லை”சத்தியனின் தாடி உரோமங்கள் சிலிர்த்துக்கொண்டன. அவனது கைகள் பக்கத்திலிருந்த செந்நிற கெட்டி அட்டைபோட்ட புத்தகத்தை வெறியோடு பற்றின.

“அப்படியானால் அவர்களையும் விடுவிக்கவேண்டுமென்று நீங்கள் ஏன் அழுத்தங்களைக் கொடுக்கவில்லை?”

திரு.அல்பிரட் தன் நீளமான விரல்களால் கழுத்தைச் சொறிந்தபடி கேட்டார்.

“அவர்கள் கொலைகாரர்கள்”சத்தியன் கத்தினான்.

“சகோதரனே! அவர்கள் உங்களுக்காகவும் போராடவில்லையா?”

“இல்லையென்று சொல்லமுடியாது… அதேசமயம் அவர்கள் சகோதரர்களையே கொன்றுகுவித்தவர்கள். அதிகம் ஏன்? கடைசி நேரங்களில் அவர்களை நம்பிய மக்களையே கொன்றழித்தவர்கள்… ஐயமிருந்தால் புகலியைக் கேட்டுப்பாருங்கள்”

திரு। அல்பிரட் தனது செம்பட்டை இமைகளை மலர்த்தி என்னைப் பார்த்தார். அந்தச் சமயத்தில் நான் அவரை முத்தமிட விரும்பினேன்.

“அப்படித்தான் அறிகிறோம். ஆனாலும், இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் அதே மக்களுக்காகத்தான் தம்முயிரை அர்ப்பணித்து மாய்ந்துபோனார்கள்” என்றேன்.

“நீயொரு துதிபாடி”கத்தினான் சத்தியன். என்னைக் குறிவைத்து அவனால் வீசியெறியப்பட்ட புத்தகம் குறிதவறி, வைன் குவளையைத் தள்ளிக்கொண்டுபோய் சுவரோடு சாத்திவைத்து நொருக்கியது.

“தலைவர்கள் தவறுசெய்தார்கள்... அவர்கள் அழிக்கப்பட்டார்கள் எனில், அவர்களால் வழிநடத்தப்பட்ட போராளிகள் என்ன செய்வார்கள்… பாவம்” அல்பிரட் மதுவாசனையுடைய பெருமூச்சொன்றினை வெளியேற்றினார்.

“சிறைகள் வதைக்கூடங்கள் அல்லவா? எனக்கு உங்கள் நாட்டின் சிறைக்கூடங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது”எனத்தொடர்ந்தார் மேலும்.

சத்தியனின் கண்கள் கனவுகாண்பதுபோன்ற கிறக்கத்திலாழ்ந்தன. கலவியின் உச்சத்தில் அவன் அப்படிக் கிறங்குவதைக் கண்டு சிலிர்த்திருக்கிறேன்.

“சப்பாத்துக் கால்களால் பலமாகத் தாக்குவார்கள். பிறகு தலைகீழாகக் கட்டித்தொங்கவிடுவார்கள். மிளகாய்த்தூள் நிரப்பப்பட்ட சாக்குப்பையால் முகத்தை மூடிக் கட்டுவார்கள். இடமிருந்தும் வலமிருந்தும் கனத்த இரும்புக்குழாய்களால் தாக்குவார்கள். மலங்கழிக்கும் இடத்தினுள் இரும்புக்குழாய்களைத் திணிப்பார்கள். கொழுவியிழுக்கக்கூடிய கம்பியை மலவாசலுக்குள்ளால் செலுத்திச் செலுத்தி இழுக்கும்போது கம்பிகளில் தசைகள் ஒட்டிக்கொண்டு வரும். முதுகுத்தோலை உரித்து அதனுள் மிளகாய்த்தூளை வைத்து மறுபடியும் தைத்துவிடுவார்கள். கால்களையும் கைகளையும் இருவர் பிடித்துக்கொள்ள குதிகால்களில் குண்டாந்தடிகளால் அடிப்பார்கள். நகக்கணுக்களுள் ஊசிகளைச் செலுத்துவார்கள். தேர்ந்த பல்வைத்தியரைப் போல பற்களைக் குறடுகளால் இழுப்பார்கள். பெண்களாயிருந்தால் பிறப்புறுப்பினுள் இரும்புக்குழாய்களையும் தங்களையும் உள்நுழைப்பார்கள்…”
அல்பிரட் பதைத்துப் போய் எழுந்து நின்றார். அவரது கன்னங்களில் கண்ணீர் வழியவாரம்பித்திருந்தது.

“வரலாறு உங்களை மன்னிக்காது”என்றார்.

“அவர்களும் உங்களவர்கள். வேற்றுக் கிரகவாசிகளல்ல. தமது மக்களுக்காகப் போராட அழைக்கப்பட்டவர்கள். அவர்களின் சிறையிருப்பை நீ கொண்டாடுகிறாயா?”

சத்தியனுக்குள் பேய் புகுந்துகொண்டுவிட்டது.

“தாம் செய்வது இன்னதென்று அறிந்துதான் செய்கிறது எங்கள் நாட்டு அரசாங்கம்... நீ உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ… இது எங்கள் உள்நாட்டு விவகாரம்”என்று கத்தினான்.

அல்பிரட் திடீரென முழங்காலிட்டு அமர்ந்து மஹ்மூத் தார்வீஷின் கவிதையொன்றைச் சொல்லவாரம்பித்தார்। துயரமும் போதையும் அவரது முகத்தை வைன் நிறத்திற்கு மாற்றியிருந்தன.

……………………
தீப்பொறி கனலும் விழிகளும்
இரத்தம் படிந்த கரங்களும் உடையவனே!
இரவு குறுகியது
சிறைச்சாலைகள் என்றென்றைக்கும் எஞ்சியிரா
சங்கிலிக் கணுக்களும் எஞ்சியிரா
நீரோ இறந்துவிட்டான்
ரோம் இன்னும் இறக்கவில்லை
……………………………

கவிதையின் நான்காவது வரியில் நான் அல்பிரட்டோடு இணைந்துகொண்டேன். கவிதைப் பிரார்த்தனையின் இடையில் கடைக்கண்ணால் சத்தியனைப் பார்த்தபோது அவன் எனது புத்தகங்களையும் உடைகளையும் கூடத்தில் கொண்டுவந்து குவிக்கவாரம்பித்திருந்தான். அசதாவால் மொழிபெயர்க்கப்பட்ட ‘வீழ்த்தப்பட்டவர்கள்’ குப்புறக் கவிழ்ந்து இரங்கிய கண்களால் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது.

பிற்குறிப்பு: நீதி யாதெனில், வாடகை கொடுப்பவனோடு ஒண்டிக்கொண்டிருக்கிற ஆள் முரண்படக்கூடாது.



9.16.2009

திஸநாயகத்தின் தவறுகள்


தானியக் களஞ்சியங்களை
போர் கொள்ளையடித்துவிட்ட ஒரு தேசத்தில்
சகோதரனே!
உண்பதற்கு மட்டுமே
நீ வாயைத் திறந்திருக்க வேண்டும்।

உனது எழுதுகோலுள்
குருதியையும் கண்ணீரையும்
ஊற்றியது யார் தவறு?

உடற்சாற்றில் வழுக்கி
ஊடகதர்மம்
அலமலந்து விழுந்துகிடக்கும் மண்ணில்
உண்மையன்று;
நமக்கெல்லாம்
உயிரே வெல்லம் என்பதறியாயோ?

'ஜனநாயகம்' என்ற சொல்
பைத்தியம் பிடித்து
மலங்க மலங்க விழித்தபடி
தன் கண்களை ஒளித்துக்கொள்ள
இடம்தேடியலையும் தெருவொன்றிலிருந்து
நீ உச்சரித்திருக்கக்கூடாது
அந்த இற்றுப்புழுத்த வார்த்தையை...

மனிதவுரிமையாளர்களின்
குறிப்புகளைப் பிடுங்கிக்கொண்டு
தரதரவென்று இழுத்துப்போய்
விமானமேற்றும் நாட்டிலிருந்தபடி
என்ன துணிச்சலில் நீ எழுதினாய்
எரிதழல் சொற்களை?

அகதிமுகாமொன்றின்
மலக்குழியின் பக்கப்பலகைகள் இற்றுவிழுந்து
புழுக்களுள் புதையுண்டு
செத்தொழிந்த சிறுவர்கள் கேட்டார்களா
நாற்றமடிக்கும் சமவுரிமையை
எழுதக்கூடாதா என்றுன்னை?

போர்க்குற்றங்களை எழுதுவது
மாபெரிய போர்க்குற்றம்!!!

எனினும்
எமதினிய சகோதரா!
'அவர்கள்’ விடுவிக்காதுபோனாலும்
வரலாறு உன்னை விடுவிக்கும்.

9.14.2009

பதிவெழுத வந்த கதை

தொடர்பதிவெனப்படுவனவெல்லாம் பெரும்பாலும் நமது தனிப்பட்ட வாழ்வைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்வனவாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். அதைச் ‘சுயபுராணம்’என்று சுருக்க மனம் வருவதில்லை. பார்க்கப்போனால் எல்லாப் புனைவுகளிலும் சுயம் கலந்திருக்கவே செய்கிறது. நாம் எழுதும் எல்லாக் கதைகளிலும், கவிதைகளிலும் ஏதோவொரு வடிவில் நாம் இருந்துகொண்டுதானிருக்கிறோம். ஆயாசம் மிக்கதென எப்போதும் குறைப்பட்டுக்கொள்ளும் இந்த வாழ்வில் இவ்வகையான பகிர்தலும் ஆசுவாசமும் வேண்டித்தானிருக்கின்றன. ‘பதிவெழுத வந்த கதை’யைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லி சிநேகிதி அழைத்திருந்தார். பிறகு அய்யனார்… இருவருக்கும் நன்றி.

பதினொரு ஆண்டுகாலம் வாழ்ந்தபிற்பாடும், புலம்பெயர்ந்த நாடான கனடாவோடு ஒட்டமுடியாமல்போக, 2003ஆம் ஆண்டு ஈழத்துக்குத் திரும்பிப்போனேன். அப்போது அங்கே போர்நிறுத்தம் அமுலில் இருந்தது. எனினும், நிழல்யுத்தம் ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தது. ஆனால், அது பொதுமக்களின் இயல்புவாழ்வைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. வெளிநாடுகளிலிருந்து நிறையப்பேர் திரும்பிவந்திருந்தார்கள். ஆம்… அவர்களால் (எங்களால்) நிலங்கள் விலையேறின. வீடுகள் உப்பரிகைகளோடு உயர்ந்தன. அதுவொரு கனாக்காலம். நாங்கள் மகிழ்ச்சியோடு அந்நாட்களில் அங்கு வாழ்ந்திருந்தோம் என்பதை ஞாபகங்கொள்கிறேன். அந்த அழகிய கிராமத்தில் எங்கள் வீடு அன்பின் கூடு. அந்த வீட்டில் நாங்கள் பதின்மூன்று பேர் ஒன்றாக வாழ்ந்திருந்தோம். யுத்தநிறுத்த முறிவினைத் தொடர்ந்து பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இரவுகள் எங்களுடையதாக இருக்கவில்லை. சில பகல்களும் அவ்வண்ணமே. யமன்கள் மோட்டார்சைக்கிளில் வந்துபோயின. நாய்கள் குரைக்கும் ஓசையைக் கேட்டபடி மரணபயத்தோடு எங்கள் சுவாசம் எங்களுக்கே இடியென முழங்கப் படுத்திருந்த இரவுகளை மறக்கமுடியாது. அங்கு தொடர்ந்தும் வாழமுடியாத சூழலில், 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஊரையும் உறவுகளையும் விட்டுத் தமிழ்நாட்டுக்குப் பெயர்ந்து வந்தோம்.

உயிர்ப்பயத்திலிருந்து தப்பித்து அந்நியத்தினுள் விழுந்தோம்। சென்னையில் எங்களுக்கு யாரையும் தெரியாது. ஒரு நண்பர்தானும் இல்லை. உறவினர்களும் இல்லை. எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது… அந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கல்லிருக்கையில் அமர்ந்து போவோர் வருவோரையெல்லாம் ஏங்கிய கண்களால் பார்த்துக்கொண்டிருப்போம். ஒரு புன்னகைதானும் இல்லை. சென்னையில் நாங்கள் அநாதைகளாக, அடையாளமற்றவர்களாக வாழ்ந்தோம். நினைக்குந்தோறும் துயரம் பெருக்கும் நாட்கள் அவை. தன்னிரக்கத்தில் கரையவைக்கும் ஞாபகங்கள் அவை.

உறவினைத் தொடுக்கும் ஒரே சரடாக இணையமே இருந்தது. அப்போது நான் அறிந்திருந்த தளங்கள் நான்கைந்துதான். ஆறாம் திணை, திண்ணை, தமிழ்நாதம், தமிழ்நெற். ஹொட்மெயிலிலிருந்து ஜிமெயிலுக்கு மாறி இணைய அரட்டையைத் தொடங்கியதும் பிரமாண்டமான கதவுகள் திறந்துகொண்டதைப் போல இருந்தது. மயங்கி மூச்சடைக்கும்போதில் காற்றுவெளியில் தூக்கியெறியப்பட்டதைப் போன்றதொரு ஆசுவாசம். அதன் வழியாக புதிது புதிதாக நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். கனடாவிலிருக்கும் எனது தோழி பிரதீபா ஒருநாள் கேட்டார் “நீங்கள் ஏன் வலைப்பதிவொன்றை ஆரம்பித்து எழுதக்கூடாது?”- “எழுதலாமே… ஆனால், வலைப்பதிவு என்றால் என்ன? இணையத்தில் தமிழில் எழுதுவது நம்மைப்போன்ற சாதாரணர்களுக்குச் சாத்தியமா?”

‘இளவேனில்’என்ற சொல் எனக்கு எப்போதும் பிடிக்கும். அது மலர்களின் வாசனையை, இலைகளின் பசுமையை, தென்றலின் பாரபட்சமற்ற நேசத்தை நினைவூட்டுவது. மேலும், அந்தப் பெயரில் எனக்குள் நிறைவேறிய கனவொன்றும், உதிர்ந்துபோன கனவொன்றும் இருக்கின்றன. அதையே எனது வலைப்பூவிற்குப் பெயராகச் சூட்டினேன். பிரதீபா மட்டும் அன்றைக்கு வலைப்பூ பற்றிக் குறிப்பிடவில்லையெனில், இப்போதும் எங்காவது கடற்கரையில் அமர்ந்து, திரும்பிச் செல்லமுடியாத அக்கரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பேனாயிருக்கும்! கவிதைகள், கதைகள், அனுபவப் பகிர்வுகள் எனத் தொடங்கி, அரசியல் கட்டுரைகள், விமர்சனங்கள் என்று கடந்தோடி இணையத்தில் எதிர்க்கருத்தாளர்களுடன் குடுமிப்பிடிச்சண்டை போடுமளவிற்கு நான் வளர்ந்திருக்கிறேன். (காம்ப்ளான்) இதை எழுதும்போது மெல்லிய புன்னகை ஓடுகிறது. அண்மையில் என்னோடு பேசிய ஒரு நண்பர் கேட்டார்: “ஏங்க தமிழ்நதி உங்க வலைத்தளத்தில ஒரே பிணங்களாக விழுந்துகிடக்குதே…”என்று. “ஏன்?”என்று வினவினேன். சில பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்லிச் சிரித்தார். “என் நண்பர்களிடம் கேட்டால் தெரியும். நான் எவ்வளவு அப்பாவி என்பது…”என்று அவருக்கு விளையாட்டாகப் பதிலளித்தேன். அப்புறாணிகளை உசுப்பேற்றினால் அதுகளுந்தான் பாவம் என்ன செய்வது? ‘மௌனம் கலகநாஸ்தி’ என்பதெல்லாம் என் அகராதியில் இல்லை. ‘கலகமில்லையேல் நியாயமில்லை’ என்பதுதான் என் வேதம். தனிப்பட்ட விடயங்களுக்காக நான் சண்டையிட்டது… ம்… இல்லையெனலாம். பொதுவான விடயங்கள், அரசியல் என்று வந்தால் கொம்பு சீவிய காளை… (இதிலும் பாருங்கள்… பசு இல்லை. மொழியிலும் வஞ்சகம்) இல்லை… கொம்பு சீவிய பசுவேதான். சின்னக் கொம்பாயிருந்தா சீவக்கூடாதா என்ன?

வலைப்பதிவு எழுதவந்து சம்பாதித்தது, எதிரிகளை மட்டுமன்று; நூற்றுக்கணக்கான நண்பர்களையுந்தான். எனக்கு வரும் அனானி அஞ்சல்களிலிருந்து அகராதிகளில் இல்லாத கெட்ட வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிறேன். என்றைக்காவது தேவைப்படும். பெண் என்பதும் வேற்று நிலத்திலிருந்து வந்தவள் என்பதும் திட்டுவதற்கு மேலதிக சொற்பிரயோக வசதிசெய்துகொடுக்கின்றன. (இதை எழுதும்போது கழிவிரக்கம் என்ற சொல்லோடு சேர்த்து ஆதவன் தீட்சண்யா நினைவில் வந்துபோகிறார்) இப்போதெல்லாம் எங்காவது இலக்கியக் கூட்டங்களுக்குப் போனால், யாராவது அடையாளங்கண்டு வந்து பேசுகிறார்கள். வலைப்பூவில் நான் பண்ணுகிற அக்கப்போர்கள், அதகளங்கள், தர்க்கங்கள் வெளியில் நிறையப்பேருக்குத் தெரிந்திருந்திருக்கிறது. அந்நேரங்களில், யாருக்கும் தெரியாமல் எழுதிய இரகசியக் குறிப்புகளை சபையில் வாசிக்கக் கேட்பது போல கொஞ்சம் கூச்சமாகவும் இருக்கும்.

கனடாவில் இருந்தபோது நிறையப் பத்திரிகைகளில் (நிறைய விளம்பரங்களுக்கிடையில்) எழுதிக்கொண்டிருந்தேன். அது சிலகாலம் விட்டுப்போயிருந்தது. வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதிய கைப்பழக்கத்தால் ஓரளவு எழுத்து வசப்பட இப்போது கதை, கவிதை என வகைக்கொன்றாய் இரண்டு தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. மேலுமொரு கவிதைத் தொகுப்பு அச்சுக்குப் போயிருக்கிறது. குறுநாவலொன்றும் விரைவில் வெளிவரவிருக்கிறது. என்னதான் சொன்னாலும், நமக்கென்றொரு ‘அடையாளம்’இருப்பது மகிழ்வளிப்பதாகவே இருக்கிறது. எனது வீட்டு முகவரிக்கு நிறையப் புத்தகங்கள் ‘கவிஞர்’என்ற அடைமொழியோடு வந்து பரவசப்படுத்துகின்றன. அங்கீகாரம் என்பது பெரிய கொடை. எழுத்தாளர்கள் பலர் நண்பர்களாக இருக்கிறார்கள். பெரிய பெரிய ஜாம்பவான்களுக்கு அருகில் நின்று பேசும் பெருமிதம் கூடியிருக்கிறது. (‘அவங்கல்லாம் யாரு?’என்ற பதிலளிக்கச் சங்கடமான கேள்விகளைக் கேட்கக்கூடாது) இதையெல்லாம் தந்தது இளவேனிலும் தமிழ்மணமும்தான் என்பதை நெகிழ்ந்து சொல்கிறேன். எனது தோழியும் கவிஞருமாகிய குட்டி ரேவதி சிலசமயம் வேடிக்கையாகச் சொல்வதுண்டு… “நீங்கள் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை… எவ்வளவு பேர் உங்களில் பிரியமாயிருக்கிறார்கள்”என்று. தமிழ்நாட்டு மக்கள் எங்களில் எப்போதும் பிரியமாய்த்தானிருக்கிறார்கள். தேர்தல்களின்போதும் தீர்மானங்களின்போதும் மட்டும் அந்தப் பிரியம் காவியுடுத்திக்கொண்டு தூரதேசம் போய்விடுகிறது. அல்லது கைமறைவாய் அளிக்கப்படும் காகித உறைகளுள் அடங்கிவிடுகிறது.

“நீ இந்தக் கட்டுரையிலும் அரசியல் கதைக்க வேண்டாம்”என்று அங்கே அதட்டுவது யார்? நானேதான்!

எழுத்து என்பது அற்புதம். மகோன்னதம். ஆன்மாவை வருடும் மயிலிறகு. என் தாய்மடி. நான் வணங்கும் ஒரே கடவுள். எழுத்து என் தோழி. அதுவே என் காதலனும். எழுத்தே இயற்கை. எழுத்தே வாழ்க்கை. வாழ்வதன் ஒரே பொருளாகிய அதற்கென் நன்றியில் தோய்த்தெடுத்த முத்தங்கள்.

இந்தத் தொடர்விளையாட்டில் கலந்துகொள்ள யாரை அழைப்பதென்று தெரியவில்லை। யாராவது யாரையாவது அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இருந்தும் விதிகளை மீறமுடியாது. ‘வலைப்பதிவெழுத வந்த கதையெழுத’ நான் அழைக்கும் நண்பர்கள்:

மாதவராஜ்
காமராஜ்
தீபா
விஷ்ணுபுரம் சரவணன்
இசை (கோவை)

இவர்களெல்லாம் ஏற்கெனவே எழுதியிருக்கவும் கூடும்:)


9.02.2009

‘பிரபாகரன் குற்றவாளி’ எனும் எத்துவாளி நீதிபதிகள்


ஏதோவொரு பிடிப்பில், நம்பிக்கையில், ஆதார அச்சில், எதிர்பார்ப்பில், காத்திருப்பில், ஒரு புள்ளியை நோக்கிய பயணமாக இருந்த வாழ்க்கை தேங்கிவிட்டது. இரவில் அடர்காட்டில் திசை தொலைத்த திகைப்பினை நினைவுறுத்துகின்றன இந்நாட்கள்.
முன்னைப்போல நண்பர்களின் முகங்களை எதிர்கொள்ள முடிவதில்லை. சந்திப்புகளைத் தவிர்த்துவிடுகிறோம். தொலைபேசி எண்களைக் கண்ணெடுக்காமலே நிராகரித்துவிடுகிறோம். எல்லாவற்றிலும் சலிப்பும் மந்தமும் படர்ந்துவிட்டிருக்கிறது. பிடிவாதமான சிறையிருப்புகளை மீறி யாரையாவது பார்த்துவிட நேரும்போது, ‘தயவுசெய்து அரசியல் பேசவேண்டாம்’என்று கேட்டுக்கொள்கிறோம். ஆனால், பேச்சு முட்டி மோதி அங்குதான் வந்து தரைதட்டுகிறது. பழகிய, புளித்த, சலித்த, விரும்பாத வார்த்தைகளை நாம் பேசவும் கேட்கவும் செய்கிறோம்.


“தலைவர் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்”

“அவர் இல்லை என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்”

“இராணுவப் பக்கத்தில் கவனம் செலுத்திய அளவு அரசியலிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்”

“முகாம்களுக்குள் இருக்கும் சனங்களை நினைத்தால்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை”

மேற்கண்ட ஒரே சாயலுடைய உரையாடல்களிலிருந்து தப்பித்து ஓடிவிட மனம் அவாவுகிறது. ஏனென்றால், அவை வந்துசேருமிடம் காற்றில்லாத வெளி. திசையழிந்த பனிமூட்டம்.

“முஸ்லிம்களை விரட்டாதிருந்திருக்கலாம்”

“அவ்வப்போது முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுகளில் ஒன்றைத் தேர்ந்திருக்கலாம்”

“அவர் முன்னரே வெளியேறியிருந்திருக்கலாம்”

“இத்தனை சனங்களைச் சாகக் கொடுக்காதிருந்திருக்கலாம்”

எத்தனை ‘லாம்’கள்!

அரங்கில் இல்லாதவர்களை காலம் எப்படிக் கபளீகரம் செய்கிறது என்பதைக் கண்ணெதிரே காண்கிறோம். ‘சீ-சோர்’ விளையாட்டு மாதிரி ஆகிவிட்டது எல்லாம். கரையில் இருந்தவர்கள் கடலுக்கும் கடலில் இருந்தவர்கள் கரைக்கும் இடம்மாறிவிட்டார்கள். விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியானது, இதுநாள்வரை தியாகிகள் எனப்பட்டோரை ‘மக்களைச் சாகக்கொடுத்த, அடிமைகளாக்கிய துரோகிகள்’ஆகவும், துரோகிகள் எனப்பட்டோரை மீட்பர்களின் சட்டகத்தினுள்ளும் இடம்மாற்றி அடைத்திருக்கிறது. அன்றேல் அவ்வாறு மாயத்தோற்றம் காட்டுகிறது. (தியாகி, துரோகி வரைவிலக்கண விவாதங்களைப் பிறகொருநாள் முழுக்கட்டுரையொன்றில் பேசலாம்) பிரபாகரனை இன்னொரு சதாம் ஹுசைனாக வரலாற்றிலிருந்து அழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டு பலர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்। பல புலி ஆதரவாளர்கள் (முன்னாள்) புனுகுப்பூனைகளாக மாறி ‘மியாவ்’எனக் கத்தி இணையத்தளங்களில் அவலச்சுவை கூட்டுகிறார்கள். ஏற்கெனவே புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கெதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தவர்களுக்கோ ‘குண்டியிலடித்த புழுகம்’. ‘புலிகளின் வீழ்ச்சி, ஜனநாயகத்தின் வெற்றி’என்பதாகப் பேசத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

இதற்குள் காலச்சுவடு அநாமதேயக் கட்டுரை ஒன்றை வெளியிட்டு, விடுதலைப் புலிகளை அழிவின் சூத்திரதாரிகளாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறது। ‘வன்னியில் நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகளால் மிகைப்படுத்திச் சொல்லப்படுகிறது’என்று திருவாய்மொழிந்த ஜேர்மன் சுசீந்திரனின் நேர்காணலை அடுத்து- பேராசிரியர் அ।மார்க்ஸ் அவர்களின், தமிழக எழுத்தாளர்களின் பொது அறிவினைக் குறித்துக் கேள்வி எழுப்பும், புலியெதிர்ப்புக் (அது இல்லாமலா?) கட்டுரையொன்றை வெளியிட்டுப் புண்ணியம் கட்டிக்கொண்டிருக்கிறது ஆதவன் தீட்சண்யாவின் புதுவிசை சஞ்சிகை. கவிஞர் லீனா மணிமேகலையால் ஒழுங்கமைக்கப்பட்ட- ஈழத்தமிழ்க் கவிஞர்களின் கவிதை நூல் விமர்சனக் கூட்டத்தில் இலங்கையின் தேசிய கீதத்தை பயபக்தியோடு எழுந்து நின்று பாடிய பௌத்த நெறியாளர் சுகன் கீற்று இணையத்தளத்திலே, கொழும்புவாழ் கோமான் கருணாவை ‘வாழ்க நீ எம்மான்’என்று வியந்து குழைந்திருக்கிறார். ‘நீ இன்றி இன்றளவும் போர் நின்றிருக்க வாய்ப்பில்லை’என்று அவர் விசர்வாதம் அன்றேல் விதண்டாவாதம் பேசியிருக்கிறார். நமது சகபதிவரான த.அகிலனின் இணையத்தளத்திலே வெளியாகியிருக்கும் - அகதிமுகாம் தறப்பாழின் கீழிருந்து எழுதப்பட்ட கட்டுரையிலே ‘விடுதலைப் புலிகளின் கறுப்பு-வெள்ளை அரசியல்’சாடப்பட்டு, சாம்பல் ஓரங்களைக் குறித்துப் பேசவேண்டுமென்று கேட்கப்பட்டிருக்கிறது. அண்மையில் கனடாவில் நடந்த புத்தக விமர்சனக் கூட்டமொன்றிற்குச் சென்றிருந்தேன். (கவிஞர் கருணாகரனின் ‘பலியாடு’, த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை) அங்கு சமூகமளித்திருந்த எழுத்தாளர் சுமதி ரூபன் சொன்னார் “எனது உழைப்பிலிருந்து ஒரு சதம்கூடப் போராட்டத்திற்குச் சென்றுசேரக்கூடாது என்பதில் கவனமாயிருந்தேன்”. ஆனால், அதே சுமதி ரூபன் விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்ட, ஆதரித்த ரி.வி.ஐ. தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைசெய்ததை (கவிஞர் சேரன் என்னை நேர்காணல் செய்தபோது) நான் பார்த்திருக்கிறேன் என்பதை இங்கு சொல்லியாக வேண்டும். அந்த ஊதியம் அவரில் எப்படிச் சுவறாமல் போகும், அல்லது அவருக்கு மாற்றான அரசியல் கருத்துக்கொண்ட நிறுவனத்தில் அவர் எப்படி நீடித்திருந்தார் என்பது எனக்குப் புரியத்தானில்லை. போராட்டத்திற்கு ஆதரவில்லை; எந்த அடக்குமுறைகளுக்கெதிராக அந்தப் போராட்டம் தொடங்கப்பட்டதோ, அந்த அரச பயங்கரவாதத்திற்கெதிராக அவரிடமிருந்து ஒருபோதும் ஒரு எதிர்ப்புக்குரலும் எழுந்ததில்லை. இன்றைய நிலையில் அங்குமில்லை; இங்குமில்லை என்பவர்கள் அங்கிடுதத்திகள். ‘நடுநிலைமை’என்ற சொல்லின் பின் பதுங்கிக்கொள்ளும் வேடதாரிகள்.அந்நிலைப்பாடானது பொதுச்சுமைகளிலிருந்து உங்களை விடுவித்து தனிப்பட்ட வாழ்வினில் குற்றவுணர்வின்றி உழல வசதிசெய்கிறது. மேலும், தோல்வியில் உங்களுக்குப் பங்கில்லை என்றால், எப்போதுமே, எந்தக் காலத்திலும் கிட்டப்போகும் வெற்றிகளிலும் உங்களுக்குப் பங்கில்லை என்பது நினைவிருக்கட்டும்.

அதிசயத்தில் பேரதிசயமாக, தனது இணையத்தளத்தின் வார்ப்புருவில் இடப்பட்டிருக்கும் வாசகங்களுக்கு அமைவுற ‘அதிகாரங்களுக்கெதிராக உண்மையைப் பேச’முதன்முறையாக முயன்றிருக்கிறார் ஷோபா சக்தி। ‘பிறழ் சாட்சியம்’என்ற தனது கட்டுரையை அவர் கீழ்க்கண்டவாறு நிறைவுசெய்திருக்கிறார்:

“இலங்கை அரச படைகளின் கொலைச் செயலைப் புலிகளின் மீது சுமத்தி ‘தேனி’போன் அரச சார்பு இணையங்கள் இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்கக் கிளப்பிவிடும் இதுபோன்ற வதந்திகளும் ஊகங்களும் பரப்புரைகளும் பாஸிஸத்தின் ஊடக முகங்கள்। அந்தப் பரப்புரைகளை நியாயப்படுத்தி சுகன் போன்றவர்கள் பேசும் சொற்கள் அவர்கள் இவ்வளவு நாளும் பேசிவந்த மானுட நேயத்தையும் (கொக்கமக்கா-இது என் எதிர்வினை) கொலைமறுப்பு அரசியலையும் கேள்விக்குள்ளாக்கியே தீரும். பிறழ் சாட்சியத்தில் புத்திசாலித்தனம் இருக்கலாம், சிலவேளைகளில் கவித்துவம் கூட இருக்கலாம். ஆனால், அந்தச் சாட்சியத்தின் பின்னால் அநீதியும் இரத்தப்பழியும் இருக்கிறது.”

உண்மையாக நெகிழ்ந்துபோனேன். விழிக்கடையில் கண்ணீர் திரண்டுவிட்டது. கடைசியில் மண்டைதீவு அந்தோனியார் கண்திறந்துவிட்டார்.:)

“தவறான வழிநடத்தலால் பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்து, மூன்று இலட்சம் தமிழ்மக்களை ஏதிலிகளாக்கி முகாம்களுள் முடக்கிய பிரபாகரனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்”என்பதே அண்மைக்காலங்களில் மேற்குறிப்பிட்டவர்களின் தரப்பு வாதமாக இருந்துவருகிறது. ‘இந்தப் பாவத்தில் எனக்குப் பங்கில்லை’என்று சந்தர்ப்பம் பார்த்துக் கைகழுவுகிற புதிய பிலாத்துக்களையும் பார்க்கமுடிகிறது. ‘நீரோ ஆண்டவர்!’என்று பழித்துக் களிக்கிற எத்துவாளிகளையும் எதிர்கொள்கிறோம். ‘போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் அது ஒட்டுமொத்தத் தமிழனுக்குச் சொந்தம். வீழ்ச்சியுற்றிருப்பதால் அது பிரபாகரன் என்ற தனிமனிதனுக்கு மட்டுமே சொந்தம்’என்பது அபத்தாபத்தமாக இல்லையா? ஆனையிறவு முகாம் கைப்பற்றப்பட்டபோது, புளகாங்கிதமடைந்தவர்கள் நாங்கள்தான். ‘ஈழத்தமிழர்களது போராட்டத்தால் தமிழினத்தை உலகமே அறிந்திருக்கிறது’என்றபோது பெருமிதத்தோடு பல்லிளித்தவர்களும் நாங்கள்தான். ‘விடுதலைப்புலிகள் கட்டுப்பாடும் வீரமும் நிறைந்த கெரில்லா வீரர்கள்’என்று மேற்கத்தேயம் வர்ணித்தபோது நம்மில் யாருமே புளகாங்கிதமடையவில்லை என்று நெஞ்சில் கைவைத்துச் சொல்லமுடியுமா? வெற்றிகளின்போது புல்லரித்ததெல்லாம், இப்போது செல்லரித்துப்போய்விட்டதா?

தோல்வி பெற்ற பக்கத்தை நிராகரிப்போரின், கைவிடுவோரின் தனிப்பட்ட உளச்சுத்தியைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஆம் பல்லாயிரவர் அழிந்துபோனார்கள். ஆம் மூன்று இலட்சம் பேர் முகாமுக்குள் இருக்கிறார்கள். ஆம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறைக்கைதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆம் இருபத்துநான்காயிரம் பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இதனாலெல்லாம் போராட்டத்தின் நோக்கம் நியாயமற்றதென்று கூறமுடியுமா? விடுதலைப் புலிகள் எதேச்சாதிகாரத்தோடு இயங்கியதை, சக போராளிக்குழுக்களைக் கொன்றுபோட்டதை, முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியதை, உலக ஒழுங்கைப் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் சரியான முடிவுகளைத் தேராததை வேண்டுமானால் தவறென்று சொல்லலாம். ஆனால், போராட்டம் முன்னெடுக்கப்பட்டதன் நோக்கம் தவறில்லை. பேரினவாதத்தின் பாரபட்சங்களால் அவர்கள் போராட்டத்தை நோக்கி வலிந்து செலுத்தப்பட்டார்கள். விடுதலைப் புலிகள் முன்னெடுத்து நடத்திய போரின் பங்காளிகளாக நாம் அனைவரும் இருந்தோம். ஆக, இங்கே வீழ்ச்சியடைந்தது (பின்னடைவு என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாது) விடுதலைப் புலிகள் மட்டுமன்று; நாம் எல்லோருந்தான்। வெற்றியடைந்தால் பல்லைக் காட்டுவதும் வீழ்ச்சியுற்றால் பின்புறத்தைக் காட்டுவதும் கேவலமாக இருக்கிறது.

இதைத்தான் பிழைப்புவாதம் என்பது. இதைத்தான் சந்தர்ப்பவாதம் என்பது. இதைத்தான் அப்பட்டமான சுயநலம் என்பது. கயவாளித்தனம் என்பது. ஒட்டுண்ணித்தனம் என்பது.

அரசியலில் அதிகாரந்தான் தெய்வம். போரில் வெற்றிதான் தெய்வம். இந்த ‘தெய்வம் நின்று பழி தீர்க்கும்’, பாவம், புண்ணியம், பைசாசம் இன்னபிற தவிர்த்து கொஞ்சம் பகுத்தறிவு, யதார்த்தம், குரூரத்தோடும் சிந்தித்துப் பார்த்தால், விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டதற்குக் காரணம் சகோதரப் படுகொலைகள் இல்லை; முஸ்லிம் சகோதரர்களை விரட்டியது இல்லை; அனுராதபுரத்தில் புகுந்து பொதுமக்களைக் கொன்றுபோட்டது இல்லை. இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கப் பிடிமானம், அன்புக் கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பழிவாங்கியே தீருவேன் என்ற மேன்மைமிகு சோனியாவின் பிடிவாதம், இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதம், சீனாவின் நானா நீயா போட்டி, ஈராக் போன்ற நாடுகளில் புஷ் விட்ட தவறுகளால் நல்லபிள்ளையாகக் கைகட்டிக்கொண்டிருக்க வேண்டிய அமெரிக்காவின் நிர்ப்பந்தம்… இவையெல்லாம்தான் ஈழவிடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டமைக்கான காரணங்கள். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’என்றால், முதலில் செத்துப்போயிருக்கவேண்டியது அமெரிக்காதான்.

பிரபாகரன் அவர்கள் உலக ஒழுங்கோடு ஒத்துப்போயிருந்தால், அதிகாரத்தின் இசைக்கேற்ப நடனமாடியிருந்தால், அவ்வப்போது ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் நீட்டிய எலும்புத் துண்டுகளுக்காக நாக்கைத் தொங்கப்போட்டு மலினமாக விலைபோயிருந்தால்… தென்னிலங்கையில் பிழைப்புவாத அரசியல் நடத்தும் கருணா வகையறாக்களைப்போல சப்பர மஞ்சத்தில் சாமரம் வீசிக்கொண்டிருக்கப் படுத்திருக்கலாம். ‘பயங்கரவாதம்’ ‘புரட்சி’யாகியிருக்கும். தமிழ் மக்களும் பிழைத்திருப்பர்.

தலைவர் பிரபாகரன் இழைத்த ஒரே தவறு, வாழ்விலும் மரணத்திலும் சமரசம் செய்துகொள்ளாததுதான். இந்தத் ‘தூய்மைவாதம்’ போரில் உதவாது என்பதை அவர் உணர்ந்துகொண்டபோது, காலம் கடந்துவிட்டிருந்தது. நாங்கள் வீழ்ச்சியுற்றோம். போராட்டத்திற்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் படுகேவலமான நிலைமைக்குக் கீழிறக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், அவரைக் குற்றம் சொல்ல நமக்குத் தகுதி இருக்கிறதா? வன்னியில் வதைபட்ட, வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் புல்மோட்டையிலும் அகதிமுகாம்களில் வதைபட்டுக்கொண்டிருக்கிற மக்களுக்கு அந்தத் தகுதி இருக்கிறது.

அவர்கள் போராடிக்கொண்டிருந்தபோது நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம்? தனிப்பட்ட வாழ்வில் மூழ்கிக் கிடந்தோம். வயிறு புடைக்க உணவருந்தினோம். குடித்தோம். படம் பார்த்தோம். நண்பர்களோடு சுற்றுலா போனோம். படுத்து பிள்ளை பெற்றுக்கொண்டோம். காதலித்தோம். உழைத்துச் சேமித்தோம். மேடைகளில் கவிதை வாசித்தோம். கைதட்டல்களை அள்ளிக்கொண்டோம். எப்போதாவது எதையாவது எழுதிக் கிழித்து ‘ஐயகோ நம்மினம் அழிகிறதே’என்று ஒப்பாரி பாடினோம். ஏதேதோ வழிகளில் நம் அடையாளங்களைப் பெருக்கப் பிரயத்தனப்பட்டோம். இன்று கூசாமல் குற்றம் சொல்கிறோம்.

தோற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வென்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். இது பொதுநியதி. ‘சத்தியம் வெல்லும்’என்பதெல்லாம் சும்மா. அப்படிப் பார்த்தால் இஸ்ரேல் சத்தியவந்தர்களின் பூமியாக இருக்கவேண்டும். இன்று வலிமையே பிழைக்கிறது; நீதியன்று. அதிகாரந்தான் விரோதி ஆண்டின் அறமாகியிருக்கிறது.

இதுவரையில் விடுதலைப் புலிகளைத் தூற்றிவந்த இணையத்தளங்களும் பத்திரிகைகளும் இப்போது செய்வதென்ன? வீழ்ச்சியின் காரணங்களை அடுக்கிக்கொண்டிருக்கின்றன. புலியெதிர்ப்புப் பட்டை கட்டப்பட்ட குதிரைகளுக்கு ஒரே பார்வையன்றி வேறில்லை. பேரினவாதம் தமிழ்மக்களை தடுப்புமுகாம்கள் என்ற வதைமுகாம்களில் வைத்து இழிவுசெய்துகொண்டிருப்பதை அவர்கள் ஏன் எழுதுவதில்லை? திஸநாயகம் போன்ற பத்திரிகையாளர்கள்மீது பேரினவாதத்தின் கொடூர நகங்கள் ஆழப் பதிவதை ஏன் எழுதுவதில்லை? மீட்கப்பட்டதாகக் கூறப்படும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஆயுததாரிகளாகத் திரிந்து மக்களை அச்சுறுத்தும் குழுக்களின் அராஜகங்கள் பற்றி இவர்கள் ஏன் வாயே திறப்பதில்லை? நிர்வாணமாக்கப்பட்டு கண்களும் கைகளும் கட்டப்பட்டு ‘அடுத்த சூடு என் தலையிலா?’என்று ஏங்கி, சுடப்படுவதன் முன்பே செத்துக் கரிந்த அந்த மனிதர்களைப் பற்றி இவர்களால் ஏன் பேசமுடியவில்லை?

‘பேசவிடுகிறார்களில்லை… பேசவிடுகிறார்களில்லை’ என்று குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் மௌனமாக்கப்பட்டுவிட்டார்கள். இப்போது யாருக்கு அஞ்சுகிறீர்கள்? ஒருவேளை அடக்குமுறைக்கெதிராகப் பேசுவது என்பதன் பொருள் உங்கள் அளவில் ‘விடுதலைப்புலிகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான பேச்சு’என்ற புனிதக் கோட்டைத் தாண்டாததா? இதன் வழியாக, புலிகளைக் காட்டிலும் அச்சங்கொள்ளத்தகு பயங்கரவாதிகளே இலங்கை அரச கட்டிலில் இருக்கிறார்கள் என்று மறைமுகமாக ஒப்புக்கொள்கிறீர்களா? ஒருவேளை புத்திஜீவித்தனம், மனிதாபிமானம், பேச்சுரிமை, சுதந்திரம் இன்னபிற பதங்களெல்லாம் எதிராளியின் அதிகாரத்திற்கும் தங்கள் இருப்பிற்குமேற்ப மாறுபடுமோ? ஆக, புலிகள் இல்லையென்றால் நீங்களும் அரங்கத்தில் இல்லை. உங்களது அரசியலும் அந்திமத்திற்கு வந்துவிட்டது. புலிகள் முடிந்துபோனார்கள் என்றால், புலிகளுக்கெதிரான முறைப்பாட்டோலங்களை வைத்து அரசியல் பண்ணிக்கொண்டிருந்த உங்கள் கதி இனி அதோ கதிதான். பேசச் சரக்குத் (புலிகள்) தீர்ந்துபோயிற்றென்றால் என்றால் இனி ஈயாடிக் கிடக்கவேண்டியதுதானே?

அதை விடுத்து, ‘பிரபாகரன் குற்றவாளி’, ‘பாவத்திற்குத் தண்டனை’என்று எத்தனை காலந்தான் அரற்றிக்கொண்டிருப்பீர்கள்? முதலில் குற்றப்பட்டியல்; இப்போது காரணப்பட்டியலா? நீங்களும் நாங்களும் (அப்படி ஒரு கோடு இருந்தால்) இனிப் பேசவேண்டியது பொதுவான ஆதிக்க சக்திகளுக்கெதிராகவே.

‘பிரபாகரன்’என்ற மனிதரின் தனிப்பட்ட-பொது வாழ்வின் தூய்மை, நேர்மை குறித்துப் பேசுவதற்கு இங்கு எந்தப் புழுவுக்கும் அருகதை கிடையாது. சுயநல, சந்தர்ப்பவாத, பிழைப்புவாத, ஒட்டுண்ணி-சலுகை அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் எவருக்கும் அந்தத் தகுதி இல்லை. நாக்குகள் நியாயத்தைப் புரட்டிப் போட்டாலும் இதயங்கள் அறியும் அவரவர் தூய்மை. அவர் உலக ஒழுங்கிற்கமைவுற பிழைக்கத் தெரியாதவராயிருந்தார். அவரது அரசியல் பிழைத்துப் போயிற்று. அதன் விலை பல்லாயிரம் உயிர்கள், உடமைகள், ஆண்டுகள், அகதிமுகாமுக்குள் அடக்கப்பட்ட அவல வாழ்வு. அவ்வளவு வீரமும், மதிநுட்பமும், தொலைநோக்கும் வாய்ந்த அவர் ஏன் கடைசி நிமிடங்களில் தன் மக்களை அழியவிட்டு தானும் அழிந்துபோனார் என்பதே இன்று எல்லோர் மனதிலும் உழன்றபடியிருக்கும் கேள்வி.

அந்தக் கேள்விக்கான பதிலைக் காலம் சொல்லும். தான்தோன்றித்தனமான ஊகங்களை முன்வைத்து கயவர்கள் சொல்லக்கூடாது.