4.27.2007

அவர்கள் போனபின்…


கழிப்பறைப் பீங்கான்
இன்று அருவருப்பூட்டவில்லை

திறந்த யன்னல் வழி புகும் காற்று
எடுத்துச் செல்கிறது
மது மற்றும் புகை நாற்றம்

சீப்பில் இனிச் சுருண்டிராது
எவர் மயிரும்

ஆடை மாற்றுகையில்
மெய்பொத்தி உள்ளாடை கைவழுகும்
கரணங்களும் இல்லை

ஆட்களற்ற அறை
எழுத
இசை கேட்க
தலையணை மேல் கால்போட
குளித்த கையோடு வெளியில் வர
இனிதெனும் அனுகூலப் பட்டியலை
எட்டிப் பார்த்து
தன்பாட்டில் சிரிக்கிறது தனிமை.

மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு


வார்த்தைகளால் ஒரு கொலையை
நிகழ்த்தி முடித்தவளுடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்
சிரித்தபடி சிதைத்த நரம்புகளிலிருந்து
நகர்ந்து வருகிறது குருதி
மூலைகளெங்கும் பதுங்குபவள் முன்
செந்நிறத்துளிகள் பாம்பின் தலையென
நிலைகுத்தி நிமிர்கின்றன


நேற்றைய பகலில் சில நிமிடங்கள்
என்னுதடுகளை
சாத்தான் இரவல்கொண்டிருந்தான்
தொடர்ந்த கோடை இரவின் நீளத்தை
உயிர்நிலையில் ஊசி இறக்கிய
சொற்களை ஞாபகிப்பதன் வழி அளக்கிறேன்


தாம் செய்வது இன்னதென்று
அறிந்தே செய்பவர்களை
கர்த்தரே! தயைகூர்ந்து கைவிடும்.


ஒரு கணப் பிறழ்நிலையை
யாரும் புரிந்துகொள்ளக் கேட்கவில்லை.
கைத்தொலைபேசி வழி எறியப்பட்ட
வன்மத்தின் கற்களாலும்
குற்றவுணர்வாலும்
கட்டப்படுகிறது எனது கல்லறை


அநேக பயணப்பொதிகளில் இருக்கக்கூடும்
மன்னிக்கப்படாதவர்களின்
கண்ணீர் தெறித்து கலங்கிய
நாட்குறிப்பும் கவிதைகளும்.

4.26.2007

இந்த மழை நாள் மற்றும் உன் வருகை



காலப்பெருவெளியில்
சருகாகி அலைந்தபின்
உன் விழி வழி கசியும் ஒளி குடித்து
மீளத் துளிர்க்கும் இத்தருணம்
காற்றை நிறைக்கிறது
முன்பொருநாள் மெல்லிருளில்
திடீரென அலமலர்த்தி முத்தமிட்ட
இதழின் எச்சில் வாசனை


நீ போகும்போது உனது கண்களை இங்கு விட்டுச் சென்றாயா…. கருவிழிகளின் முழுவட்டமும் புலனாகும் உன் பார்வை என் மீது காலை இளவெயிலைப் போல படர்ந்துகொண்டேயிருக்கின்றது. அந்தக் கண்களில் எனக்கான செய்தி ஏதாவது இருந்ததா என்று தவித்தலைந்த என்னை ஒரு சலனமுமின்றி விலக்கிப் போனாய். ஏற்புடையதல்ல எனதிந்த தவிப்பு. பித்தத்தின் உச்சந்தான். இந்தக் கோடை மழைநாளில் பருவம் தப்பி எனக்குள் அடித்துப் பொழியும் மழையில் அகங்காரம் கரைந்தோடுகிறது. என்னிலை பிறழ்கிறேனே எனும் வருத்தம் மேலிடுகிறது. நீ வரும்வரை தனிமையால் நிறைந்திருந்தது இவ்வறை. வந்தபின் சுற்றவர இருந்த சகலமும் பெயர்ந்து போய்விட்டன. அல்லது யாவற்றையும் உன்னால் நிறைத்தாய். மறுபடி மறுபடி நான் எனது கண்களின் பிடிவாதமான பின்தொடர்தலைக் கண்டித்தும் பயனில்லை. இதுநாள்வரையிலான எனது தேடலின் அந்தம் நீதான் என்று, எல்லோருக்கும் பரிச்சயமான, சொல்லித் தேய்ந்த வார்த்தைகளால்தான் எனதிந்த உணர்வையும் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது.

நமக்கிடையில் நிகழ்ந்ததற்கு உரையாடல் என்று பெயரிடல் தவறு. மனச்சாட்சியற்ற ஒரு பத்திரிகையாளனது கேள்விகளை ஒத்த சில அபத்தங்களுக்கு நீ பதிலிறுத்துக்கொண்டிருந்தாய். உனது மௌனத்தைக் கலைப்பதற்கான வேறெந்த உத்திகளும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பேச்சு நின்றுவிடும் நிமிடம் நாம் பிரிந்துவிடுவோம் என்றெனக்குத் தோன்றியதால், சில அசட்டுத்தனமான உத்திகளைப் பிரயோகித்து உனது இருப்பை என்னறையில் நீடித்தேன். கேள்விகளை நினைவிற் கொண்டுவரும் எத்தனத்தின்போதான இடைவெளியை நிரப்புவதற்கு, உனது கண்களின் சாயலையொத்த ஒருவரை எங்கோ பார்த்திருப்பதாக நான் அடிக்கடி சொல்ல வேண்டியிருந்தது. நீ விடைபெற்றுப் போனபிறகு ஒரு ஞானியும் முட்டாளும் எதிரெதிர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததான ஒரு பிம்பம் எனக்குள் தோன்றியது. உன் உருவும் தெளிவும் ஆழமும் நம்பமுடியாத கனவொன்றைத் தன்னுணர்வுடன் கண்டுகொண்டிருப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. கொடுவெயிலில் நடக்கும் பாதங்களைப் போல தரிக்கவோ நடக்கவோ கூடுதில்லை.

ஒருபோதிலும் உன்னிடத்தில் அள்ளிக் கொட்டிவிடவியலாத இந்த நேசத்தை,நெருக்கத்தை,மன அவத்தையைச் சுமந்துகொண்டு எத்தனை காலம் நடக்கவேண்டியிருக்கும் என்றெனக்குத் தெரியவில்லை. முன்னொருபோதும் இவ்விதம் ஆனதில்லை, இனியொருபோதும் இவ்விதம் நிகழ்வதற்கில்லை என்ற வார்த்தைகள், காலையில் எழுந்தவுடன் முதலிற் கேட்ட பாடலைப் போல இன்று முழுவதும் உள்ளுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. என்ன செய்தேனும் உன்னைப் பிரியாதிருக்க முடியாதா என்ற சிறுபிள்ளைத்தனத்தை, ஏக்கத்தை பெரிய குழியாகத் தோண்டி உள்ளே புதைத்துவிடுவதைத் தவிர இந்த ஜென்மத்தில் வேறொன்றும் செய்வதற்கில்லை. பிடித்ததை அடைதல் சாத்தியப்படுவதெனில், நான் சில ஆண்டுகளைப் பின்னோக்கிக் கடந்து சென்று மீளப் பிறத்தல் வேண்டும். மேலும், இந்தக் காய்ச்சல் உனக்குள்ளும் அனலெறியாதுபோனால் மீளப்பிறந்தென்ன… இந்தக் கற்பனைக் குதிரையேறிக் காலத்தைக் கடந்தென்ன…?அடைதல் என்றால் என்ன அன்பே! தொடுதலா…? எனக்கது வேண்டாம். வேட்கையின் வெறி உருவேற ‘நீயே… நீதான்… நீயன்றி வேறல்ல’என்று கிடந்துழன்று நெருங்கியபின் ‘இல்லைப் போ’என்று புறங்கையால் தள்ளுதலே உன்னளவிலும் நிகழுமோ நானறியேன். ஆனால்… இன்று உள்நுழையும் வழிகள் சாத்தப்பட்ட உயர்மதிலின் முன்னால் நின்று பிதற்றி நிலையழிய வைத்தாய்.

பேச்சைவிட மௌனம் அழகியது என்று அந்தத் திரைப்படத்தைப் பார்த்த நாளிலிருந்து தோன்றிக்கொண்டேயிருந்தது. உன்னைக் கண்டபிறகு அதை மீள்பரிசீலனை செய்வதாக இல்லை.

வெளியே மழை. இடி குமுறிக்கொண்டேயிருக்கிறது. மின்னல் வானத்தில் ஒளிக்கோடு போட்டு வரைந்து பழகுகிறது. நீச்சல் குளத்தில் மழை துள்ளுகிறது. நாட்டப்பட்ட நிழற் குடையை கனத்த துளிகள் அலைக்கழிக்கின்றன. யன்னல் வழியே தெரியும் வேம்பு, நீர் விழும் வேகம் தாளமாட்டாமல் தலைதாழ்த்தி நிற்கிறது. நீ எங்கோ யார் வீட்டிலோ அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாய். இந்த மழை நாளில் இன்மையும் இருப்புமாய் எனதறையில் நீ என்று உன்னிடம் சொன்னால், விழியோரம் சுருங்க நகைத்தல் கூடும்.(உனக்குத் தெரியுமா நீ அப்படிச் சிரிப்பது…)

பூட்டப்பட்ட கதவினூடாகக் கசியும் பாடலைப்போல, காவலை மீறி நுழைந்துவிடும் புரட்சியாளரின் இரகசியச் செய்தியைப் போல, இறுக்கம் கொண்டுவிட்ட உன்னுள் எனது ஞாபகத்தின் கீற்றேனும் நுழைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

உன் மீதான இந்தப் பிரியத்தைக் குறித்து உன் விரல்களைப் பற்றியபடி ஒரு சொல்லேனும் சொல்ல விரும்பினேன். செருப்பினுள் கால்களை நுழைத்தபோது தற்செயலாகத் தொடுவதுபோல உன் தோள்களைத் தொட்டு உனது மீள்வருகை பற்றிக் கேட்க எண்ணினேன். விடைபெறும்போதான உன் பார்வை எனக்கே எனக்கானது என்று என்னை நானே ஏமாற்றவும் முற்பட்டேன். நம்ப முடியாததை, கூடாததை பிடிவாதமாக நம்ப விளைகிறது மனம். நாம் வழக்கம்போல பொய் பூசிய சம்பிரதாய வார்த்தைகளுடன் மிகக் கௌரவமாக விடைபெற்றோம்.

இந்த உலகம்… ஆ… இந்தப் பாழும் உலகம்! அது எழுதிவைத்திருக்கும் மரபுகள்! விதிகள்! வயது,பால்,மொழி,நாகரிகம்,இது இப்படித்தான் எனும் எல்லாம் நாசமாய்ப் போகட்டும்! ‘இவளின் இத்தகு விசித்திரங்கள்’என்று சுத்தப்பூனைகளாலான இவ்வுலகம், திருடித்தின்ற மீன் பொரியல் வாசம் மாறும்முன்பே மோவாயில் கைவைத்து வியக்கட்டும். இன்றைய எனதுலகம் உன்னால் நிரம்பி வழிகிறது.

உன் ஞாபகத்தை எழுத்தின் தோள்களில் இறக்குகிறேன். ஊரோடு ஒத்தோடுதலே உயர்வு என்றெண்ணியபடி என்னைப் பிணைத்திருக்கும் மரபின் கயிறுகளைச் சரிபார்க்கிறேன். தளர்ந்த முடிச்சுகளை இறுக்குகிறேன். வழக்கத்திற்கு மாற்றான, முரணான கலகக்குரல்களின் மேல், இருப்பதிலேயே பெரிய பாறாங்கல்லைத் தேர்ந்தெடுத்து போட்டு நசுக்கக் காத்திருக்கும் சமூகத்தின் கொடுங்கரங்களுக்கு அஞ்சுகிறேன். ஆம்! நான் நல்லவள், கௌரவமானவள், பிள்ளைகளுக்கு நானொரு வழிகாட்டி மேலும் எழுதுகிறவளுமாம். உன் மீதான இந்தப் பிரியத்தையும் எவ்வளவு ஆழத்தில் முடியுமோ அவ்வளவு ஆழத்தில் போட்டுத் தீ வைத்து விடுகிறேன். அது எரிந்து சாம்பலாகட்டும். அந்தச் சாம்பலில் ஒரு துளி எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு பித்துப்பிடித்து சில நாள் அலைவேன். பிறகென்ன… மறந்துபோவேன்.

4.11.2007

அழகின் அழகு!

இதன் பெயர் 'புதினம்'

அழகு உங்களை உறுத்தியதுண்டா…? அழகைப் பற்றி எழுதச்சொல்லி அய்யனார் கேட்ட நாளிலிருந்து உள்ளிருந்து உறுத்திக்கொண்டே இருந்தது. யாரோ விருப்பப்பட்டுக் கேட்ட பொருளைக் கொடுக்காமல் என்னுடன் வைத்துக்கொண்டிருப்பது போன்றதொரு உணர்வு தொடர்ந்துகொண்டே இருந்தது.

கடல்
சிறுவயதிலிருந்தே வியப்பின் விழிகளால் பார்த்த அழகுகளில் கடலும் ஒன்று. அலையும் நீலமும் பரந்த நீர்ப்பரப்புமன்றி கடலிடம் என்னதான் இருக்கிறதென்று ஓரிரு சமயங்களில் தோன்றியிருக்கிறது. ஞானிகளின் மௌனம் எப்படி மதிப்பை ஊட்டுகிறதோ அப்படித்தான் கடலின் விரிவும் ஆழமும் உள்ளார்ந்த அமைதியும் பார்க்கப் பார்க்கச் சலிக்காத அதிசயமான அழகு. கடலின் முன் அமர்ந்திருக்கும்போது கர்வம் அழிந்து நாமொரு துளியாகச் சுருங்கிவிடுகிறோம். தனித்தன்மை என்பது எம்மிடம் இருக்கிறதோ இல்லையோ, ஏனையோருள் எம்மை அடையாளப்படுத்த, ‘உன்னைப் போலில்லை நான்’என்று காட்ட எத்தனை பிரயத்தனங்களைச் செய்கிறோம். ஆனால் வானத்தின் நிறத்தையே தன்னிறமாக்கியபடி எத்தனை அடக்கமாக இருக்கிறது இந்தக் கடல். கடலினுள் எத்தனை இரகசியங்கள் கொட்டிக்கிடக்கும்! எத்தனை உயிரினங்கள் வாழ்க்கை நடத்தும்! அதன் காலடியில் அமர்ந்து எத்தனை கனவுகள் பேசப்பட்டிருக்கும்! எவ்வளவு காதலை,கண்ணீரை,பிரிவை,மரணத்தை கடல்மடியும் கரையும் கண்டிருக்கும். கடலின் மீதான வியப்பு, கரை மீதான கடலின் தீராத காதலைப்போல உள்ளுக்குள் எப்போதும் அலையடித்துக்கொண்டேயிருக்கிறது.


பூனைக்குட்டிகள்

மூன்றாண்டுகளின் முன் பூனைக்குட்டிகள், நாய்க்குட்டிகள் என்றால் வளர்ப்புப் பிராணிகள் என்பதன்றி வேறெதுவும் மனதில் எழுந்ததில்லை. வாழ்வெனும் பயணத்தில் சகபயணிகளை முன்னேறவிட்டு மனோரீதியாகப் பின்தங்கியபோது ஊற்றெடுத்ததுதான் பிராணிகள் மீதான நேசம். அதிலும் பூனைக்குட்டிகள் என்றால்…. அவற்றின் அழகைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால்… ஆயாசத்துடன் இந்தப் பதிவின் வலப் பக்க மேல் மூலையில் ஒரு அழுத்து அழுத்திப் போயே போய்விடுவீர்கள். ஊரில் எங்கள் வீட்டில் மூன்று பூனைக்குட்டிகள் வளர்கின்றன. அதிலொன்றுக்கு மனிதர்களைப் போல பேச மட்டுந்தான் தெரியாது. அது எதைப் பார்த்தாலும் ஆச்சரியத்தோடுதான் பார்க்கும். அதனால் அதற்கு ‘புதினம்’என்று பெயர் வைத்திருக்கிறோம்.(பைத்தியக்காரத்தனமான பெயர்தான்) அதன் கண்களைச் சுற்றி கண்மை தடவி இருகரையிலும் இழுத்துவிட்டாற்போலிருக்கும். உடலோ பனிவெண்மை. சோபாவில் வெகு சுவாதீனமாக கைகளையும் கால்களையும் :-) முன்னும் பின்னுமாக வீசியெறிந்து விட்டுப் படுத்திருக்கும். பஞ்சு போன்றிருக்கும் அதன் அடிவயிற்றில் கைவைத்துத் தடவி கதை சொன்னால் தன் மொழியில் ஏதாவது சொல்லிக்கொண்டேயிருக்கும். அந்த மூன்று பூனைகளும் சமையலறையில் பொரித்துவைக்கப்பட்டிருக்கும் மீன்துண்டுகள் தங்களை வளர்ப்பவர்களுக்கானவை என்பதை அடிக்கடி மறந்துபோய்விடும். விளைவு, ஒரு நீண்ட பிரசங்கத்திற்கு நான் செவிகளைத் தாரைவார்த்துவிட்டு அவற்றோடு விளையாடிக்கொண்டிருக்கத் தள்ளப்படுவேன். எனது அண்ணாவின் மகளும் நானும் அலுக்காமல் சலிக்காமல் பேசுபொருட்களாகக் கொள்பவை செல்லப்பிராணிகளின் அழகும் நடத்தையுமே.



அறிவு

சிறுவயதிலிருந்து அநேகமாக எல்லோருக்குமே ஒரு குணம் இருக்கும். அதாவது, அழகானவர்களால் ஈர்க்கப்படுவதும் அவர்தம் அருகாமையை விரும்புவதும். பெரும்பாலானோரின் அழகு குறித்த பொதுவிதியான மெலிந்த, உயரமான, நிறமானவர்களே எனது தேவ தேவதைகள். பள்ளிக்கூடத்தில் அழகான அக்காக்களின் தங்கைகளின் இனிய தோழியாக இருந்தேன். எல்லோரும் ‘பொறாமை… பொறாமை’என்று சொல்கிறார்களே… அது மட்டும் இந்த அழகு விஷயத்தில் எனக்கு வந்ததேயில்லை. ‘உங்கள் கண் அழகு’ – ‘விரல் அழகு’ – ‘சிரிப்பழகு’ இப்படி ஏதாவது அறிக்கை விட்டு அவர்களை அழகாகச் சிரிக்கவைப்பேன். வளர்ந்தபிற்பாடு, புத்தகங்களுள் நீர்க்காகம் போல தலையை அமிழ்த்திக்கொள்ளத் தொடங்கிய பிற்பாடு அறிவுதான் அழகு என்ற ‘அழகான’உண்மை புலனாகியது. ஆணோ பெண்ணோ தேடலை நோக்கிச் செலுத்திச் செல்வோர் எவரோ அவரே-அவளே பேரழகன் மற்றும் பேரழகி. தாங்கள் படித்ததையெல்லாம் மழைக்காலத்தில் மதகு திறந்தாற்போல ஒரேநாளில் கொட்டித் தீர்த்துவிட்டு, மேற்கொண்டு பழகும் சுவாரஸ்யத்தைக் கரைத்து ஒன்றுமில்லாமற் போகிறவர்களையோ, தங்கள் மேதாவித்தனத்தை முரசுதட்டுவதற்கென்றே சொல்லாடுபவர்களையோ, சுயபுராணத்தில் கரைந்துபோகிறவர்களையோ அவர்கள் எத்தனை அழகென்றாலும் அழகுக் கணக்கில் சேர்ப்பதில்லை.(அதனால் அவர்களுக்கென்னவாம் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.)அறிவின் ஒளியே பேரழகு.



மரங்கள்

சென்னைக்கு வந்த புதிதில் வீடு தேடி அலைந்தபோது கூட அலைந்த நண்பர் கேட்டார் “எப்படியான வீடு வேண்டும் உங்களுக்கு…?”-“மரங்கள் அடர்ந்த சாலையில் மரங்களோடு கூடிய வீடு கிடைக்குமா?”என்றேன். “குரங்கா நீ…?”என்று உள்ளுக்குள் நினைத்திருப்பார் போல… வெளியில் ஒன்றும் சொல்லவில்லை. சிரித்தார் அவ்வளவே. அப்படியொரு வீடு சென்னை மாநகரத்தில் கிடைப்பதெனில் சொத்து (இருந்தால்)முழுவதையும் எழுதிவைக்கவேண்டும் என்பதே அந்தச் சிரிப்பின் பொருளென இங்கு நெடுநாட்கள் என் பங்கிற்குக் குப்பை கொட்டியபின்னரே அறிந்துகொண்டேன்.மரங்கள், மனதுள் குளிர்ச்சியை,மலர்ச்சியை,புத்துணர்ச்சியை,கவிதையை,காதலை அள்ளி எறிகின்றன. மரங்களின் பச்சை விழிகள் வழியாக மனதெல்லாம் படர்கிறது. கையில் தேநீர்க்கோப்பையுடன் இலைகளில் சூரிய ஒளி பட்டு மினுங்கும் அழகைப் பார்த்துக்கொண்டிருக்கும் காலை நேரம் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியவான்கள். அதிலும் இந்த மழைக்காலத்து மரங்களை, அவற்றின் சிலுசிலுவென்ற அழகை கண்களால் உள்ளிழுத்து மனசுக்குள் பூட்டிவைக்க முடிந்தால் எவ்வளவு நல்லது!


அம்மன்கள் என்ற அழகிகள்

“லா.ச.ரா.வின் புத்தகங்களில் வரும் வேலைக்காரி கூட சக்தி அம்சம்தான், அழகுதான்”என்று யாரோ ஒருவர் எழுதியிருந்ததை அண்மையில் வாசித்தேன். அந்த எள்ளலைக் குறித்து எனக்கொரு கருத்துமில்லை. லா.ச.ரா.வின் கதைகளைப் படிக்கும்போது எனக்கொரு முகம் நினைவில் வரும். அது மிக நேர்த்தியாக, கலையின் உச்ச அனுபவத்தில் தோய்த்த தூரிகை கொண்டு வரையப்பட்ட அம்மன் முகம். வளைந்த புருவமும் அமைதியில் கனிந்த விழிகளும் கன்னத்தில் சுடர்விடும் மூக்குத்தியும் நெளிந்திறங்கும் கூந்தலும் கைக்கரும்பும் மெலிந்த இடையும் தொட்டு வணங்கத் தூண்டும் பாதவடிவுமாக என்னிடம் ஒரு அம்மன் படம் இருக்கிறது. நாட்பட்டும் கைபட்டும் நைந்து கிழிந்துகொண்டிருக்கும் அந்தப் படத்திலிருப்பவள் மீது தீராத அன்பு. காதலென்றும் சொல்லலாம். அதைப் போன்ற முக அழகுடைய படங்களை எங்காவது கோயில்களில் காணநேரும்போது ஐந்து நிமிடங்களாவது நின்று வணங்கிவிட்டு வருவது வழக்கம். தவிர, எங்கு பயணம் போனாலும் அந்தத் தோழியும் கூடவே வருவாள். கவலை வந்தால் அவ்வப்போது அவள் முன் அழுவதும் நடக்கும். இதை ‘சென்டிமென்ட்’என்பவர்கள், இதை வாசித்துவிட்டு ‘அட நீ இம்புட்டுத்தானா…’எனச் சிரிக்கும் நாத்திகர்கள் எவர் குறித்தும் எனக்கொரு கவலையுமில்லை. (முன்ஜாமீன் போல ஒரு முற்பாதுகாப்பு அறிவித்தலாக்கும்)

அய்யனார் ஆறு அழகுகள் பற்றிக் கேட்டிருந்தார். அறுபது அழகுகள் பற்றிக் கூட எழுதலாம். ஆனால், பதிவின் நீளம் கருதி கடைசி அழகைச் சில வரிகளுள் அடக்குகிறேன். மழை அழகு, மழையில் நடக்கும் பாதங்கள் அழகு, குழந்தைகளின் விழிகளில் தெரியும் அறியாமை அழகு, நடக்கும் நதி அழகு, இருளில் துடிக்கும் சுடர் அழகு, மாதுளம்பூ அழகு, மங்குஸ்தான் பழத்தின் பின்புறமிருக்கும் ஐந்து இதழ் கொண்ட படம் அழகு, முதுயோரின் சிரிப்பழகு, மலை அழகு, மலையில் மழை விழும் அழகே அழகு, இளங்காலை வெயில் அழகு, எவருக்கும் தீங்கிழைக்கவொண்ணா மனம் அழகு, கவிதை அழகு, கண்ணீரும் சிலசமயம் அழகு.

எம்மிடம் கையளிக்கப்பட்ட ஒரு வேலையை முடித்தபிறகு ஒரு அமைதி,நிறைவு,பரவசம் பரவும். அந்த ‘அழகான’ உணர்வு இப்போது என்னுள் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், எனதினிய நண்பர்களே!இனிமேல் இப்படி யாராவது அழைத்தால் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். காரணம்,இந்தப் பொருளில் இந்தக் காலத்திற்குள் எழுது என அழைத்தால் கணனி எதிரியாகிவிடுகிறது. அய்யனார் அரிவாளோடு அழைத்ததால் ‘பயந்துபோய்’ சம்மதித்தேன்.:-)
என் பங்கிற்கு யாரையாவது எரிச்சலூட்ட வேண்டுமென்று எண்ணியபோது மனதில் வந்த பெயர்கள்:
'மிதக்கும் வெளி' -சுகுணா திவாகர்
'தத்தக்க பித்தக்க' -சிநேகிதி (பழி வாங்கிடாதையம்மா)
'வசந்தம்'-தென்றல்

4.10.2007

கற்பின் இருப்பு


தொலைக்காட்சியை எதேச்சையாய் கடக்கையில்
பண்பாடு குறித்தெவரோ
நாத்தழுதழுக்க பரிதவிக்கப் பார்த்தேன்
பட்டிமன்ற மேடைகளில்
கண்ணகியும் சீதையும் இருதரப்பாலும்
எந்நாளும் இழுபறியில்…
முன்தயாரிக்கப்பட்ட திடுக்கிட வைக்கும் பகீர்த்தலைப்புகள் புகைப்படக்கருவிகள் சகிதம்
பத்திரிகையாளர்களும் விழிப்பாய்த்தான்.
அக்கம்பக்கத்தவர்களையும் குறைசொல்வதற்கில்லை
‘ஐயோ… இப்பிடியா செய்வா ஒருத்தி’
மோவாயில் கைவைத்துப் பிரலாபிக்கவும்
சாராயத்திற்குத் தொட்டுக்கொள்ள
கதை கிடைத்த மகிழ்வில் வெடித்துச் சிரிக்கவும்
எக்காலமும் எந்நிலத்திலும் இருக்கவே இருக்கிறார்கள்
ஆண்களும் பெண்களும்.

வேகநெடுஞ்சாலைகளில்
நள்ளிரவிலும் உதட்டுச்சாயமும் மல்லிகைப்பூவுமாய்
பாரவூர்தி ஓட்டுனர்களிடம் பேரம் பேசுகிற பெண்களுக்கு…
புறநகர் விடுதிகளில்
கணவனல்லாதவனுடனும் மனைவியல்லாதவளுடனும்
மதுவுண்டு கூடித் திளைப்போருக்கு…
காவலர்களின் வண்டிகளிலிருந்து
குதித்திறங்கும் பாலியல் தொழிலாளிகளுக்கு…
மெல்லிருளில் இசை உருவேற்ற
அவிழ்த்தெறியும் அழகிக்கு…
எவரேனும் நினைவுபடுத்தவேண்டும்
அவர்கள் இருப்பது எங்கென.

கடற்கரைச்சாலையின் இருட்டு மூலைவரை
நடந்துசெல்லவியலாத பெண்ணிடம்
“கற்பென்றால் என்ன”என்றேன்
‘உனதும் எனதும் இடுப்பிற்குக் கீழ் இருக்கிறது
எல்லோரின் கற்பு’மென
சொல்லிச் சிரித்தபடி போனாள்
கடற்கரையில் இன்னும் அலைகிறது
அவள் சிரிப்பு!

4.09.2007

சாத்தானின் கேள்வி



ஒரு பௌர்ணமிநாளில்
நீர்ப்பரப்பில் நிலவொளிபோல
மெல்லப் படர்கிறதுன் நேசம்.

விடியும்வரை கடலை மூசித் தழுவி
முயங்கவியலா ஏக்கத்திலா
பின்னிரவில் நிலவு முகமிருண்டு போகிறது?

பார்…!
காதற் கவிதைகளின் சாயலையொத்த
அபத்தத்துள் என்னை நீ அமிழ்த்துவதை.

ஞாபகத்தின் தெருக்களில்
நாடோடியாய் அலையுமென்னை
நிகழில் நிலைக்கவென்று அழைக்கிறாய்.
மேலும்…நான் உன் கண்ணாடியும் என்கிறாய்.
பாதரசம் கலைந்திருப்பதைக் கவனி நண்பா!

கதை மாந்தர்களின் கைபிடித்துலவிய நாட்களை
நெகிழ்ச்சியின் மடியில் சரியவைத்த கவிதைகளை
யமுனாவை… அம்மணியை… காயத்ரியை…யஷியை
காலையொளி கரையும்வரை பேசித்தீர்க்கிறோம்.

உன் வாசிப்பின் ஆழத்தில் புதைவுறவும்
நேசிப்பின் நெருக்கத்தில் கரைவதற்கும்
மலைகள் சூழ் கிராமத்தில்
நெடுங்கண்ணாளொருத்தி காத்திருப்பதறியாயா?
பேச்சின் நிழலில்
ஆசுவாசம் கொள்ளுமென் தனிமையை
இனியேனும் தனிமையில் விட்டுவிடு.
கண்ணீர் இனிப்பென
குருதி திண்மமென
கருத்துப்பிழை காட்சிப்பிழையுள்
என்னைச் சிலகாலம் செலுத்திப் பின் பிரிந்துசெல்!

நீ சொன்னபடி
அருவிக்கரையோரமொரு கறுப்பியாய்…
நீலியாய்…
பச்சையடர் கானகத்தில்
பாறைமீதமர்ந்து கதைசொல்லும் பேதையாய்
மீளப் பிறக்கும் விதை
என்னுள் விருட்சமாய் வளர்கிறது.

எல்லாம் சரிதான்!
“கனவின் பாதைகள் முடியுமிடம்
இதழிலும் மார்பிலுமா…?”
எனக் கேட்கும் சாத்தானின் கேள்வியை
எந்தப் புத்தகத்தின் பக்கங்களுள் ஒளித்துவைக்க?

4.07.2007

நோய்க்கூற்றின் கண்கள்


“இறப்பதற்குத் தனியாக காரணங்கள் தேவையா
இருப்பதற்குக் காரணங்கள்
இல்லையென்பதை விட?”

கனவுகள் சலித்துப்போன ஓரிரவில் இதனை எழுதத் தொடங்குகிறேன். அவரவர் கோப்பைகளில் அவரவருக்குப் பிடித்த மதுவை நிரப்பிக்கொண்டு ஏதாவதொரு போதையில் மூழ்கிக்கிடக்கிறோம். எதிலாவது கிறங்கிக் கிடப்பதுதான் பாதுகாப்பானது என்ற எண்ணத்தின் விதை ஒவ்வொரு மனசுக்குள்ளும் ஊன்றப்பட்டிருக்கிறது. சித்தம் சிதைவதற்கு மிக முந்தைய கணத்தில் ஒருவன் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தையைப் போன்ற, ஒத்த சாயலையுடைய இந்த நாட்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. அதே காலையில் அதே சாலையில் அதே ஆறு மணிக்கு துணைக்கு சடைநாய்க்குட்டி சகிதம் அதே கிழவர் நடந்துபோகிறார். முன்பொருநாளில் “எத்தனை அழகியது இந்த வாழ்க்கை”என்று பல தடவை வியந்திருக்கிறேன். விநோதரசம் நிரம்பிய அண்மைய நாட்களின் நடப்புகள், அந்த வார்த்தைகளைப் பார்த்து ஓசையெழச் சிரிக்கின்றன. ‘வாழ்வொரு அபத்தம்’ என்ற கசப்புப் படிந்த வரி மண்டைக்குள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

‘வேடிக்கை மனிதரைப்போல’அல்லாது வாழமுயன்று களைத்துப்போனவர்களின் உதடுகள் சலித்துத் துப்பிப்போட்ட வார்த்தைகளில் ஒன்றிரண்டைப் பொறுக்கிக்கொள்வதைத் தவிர புதிதாக ஒன்றுமில்லை.

‘நமக்குள் இருப்பதுதான் புத்தகத்தில் இருக்கிறது
அதைவிட ஒன்றுமில்லை’

என்று நகுலனும்,
‘இந்த நதி எத்தனை பேரைப் பார்த்திருக்கிறது’
என்று கல்யாண்ஜியும் சொன்னது ஞாபகத்தில் வருகிறது. அடுக்கி வைத்த சீட்டுக்கட்டை அவரவர்க்குப் பிடித்தபடி அடுக்கியும் கலைத்தும் விளையாடுகிறோம் என்பதுதானே உண்மை. புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. இருப்பினும், பேசுவதன் மீதான் விருப்பு வற்றிப்போய்விடவில்லை. தனது இருப்புக் குறித்த பிரக்ஞை மற்றவர்களிடம் இல்லாமற்போய்விட்டால் என்ன செய்வது என்ற பதைப்பே எழுதத்தூண்டுகிறதோ என்னவோ…!

வாழ்வோடு பிணைத்து வைத்திருந்த கயிறுகள் ஒவ்வொன்றாக அறுந்துகொண்டே வருகின்றன. வாழ்க்கை என்பது, இப்போது காண்பதுபோல வித்தைக்காரனின் கூடாரமாக, சர்க்கஸ் காட்டுபவன் நடக்கும் கயிறாக, மகாநடிகர்களின் மேடையாகத்தான் எப்போதும் இருந்ததா…? இதுவரை வாழ்வை அழகிய பூவனமாகத் தோற்றப்படுத்திக்கொண்டிருந்த மாயக்கண்ணாடியைக் கழற்றி வைத்ததனால் வந்த மாற்றமா…? “ஆகா! அழகியது!”என்று கொண்டாடிய(உண்மையில் கொண்டாடினேன் சுகுணா) காலங்கள், இப்போது எல்லோரும் எழுதிவரும் கிறுக்குத்தனமானவைதான் என்று கண்டுகொண்டபின் யாவற்றையும் யாவரையும் பார்த்து நகைக்கவே தோன்றுகிறது.

இருப்பிற்காக, உயிர் தரித்திருத்தலுக்காக கொடுக்கும் விலை மிக அதிகமோ என்ற எண்ணம் வருகிறது. எழுத்து,உறவு,வாசிப்பு எல்லாமே அணைந்துபோய்க்கொண்டிருக்கிற வாழ்வின் மீதான விருப்பின் திரியைத் தூண்டிவிடுவதற்காக நாமாகவே இழுத்துப்போட்டுக்கொள்கிறவையாகவே இருக்கின்றன. விளையாடும் குழந்தையைச் சுற்றி கார்,பிளாஸ்டிக்காலான கட்டிடப் பொருத்துகைகள், பொம்மைகள் இறைந்து கிடப்பதைப் போல, ‘நான் இன்ன இன்ன காரணங்களுக்காக வாழ்கிறேன்’ என்று எமக்கும் எம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நிரூபிப்பதற்காகவே எம்மைச் சுற்றி பலவற்றையும் சிருஷ்டித்துக்கொண்டிருக்கிறோம். உறவுகள் என்ற கசப்பு மருந்தின் மேல் அன்பு என்ற தேனைப் பூசி விழுங்க வேண்டியிருப்பதை அறியாத ‘அப்பாவி’கள் நாங்கள்.

அன்பு உலகை ஆள்வதென்பது, டைனசோர் போல அருகி அழிந்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அன்புதான் உலகை ஆள்கிறதெனும் எனது அண்மைய தோழா! மாபெரிய அபத்தத்தைப் பேசுகிறாய். நீ சொல்வது சரியெனில், அன்னை தெரேசாவையும் மகாத்மா காந்தியையும்(விமர்சனங்களோடும்) ஒன்று…. இரண்டு… மூன்று என்று விரல்விட்டு எண்ணவேண்டிய துர்ப்பாக்கியம் ஏன்? எங்களில் எத்தனை பேர் மற்றவரின் துயரங்களுக்கு சகிப்புத்தன்மையோடு செவிமடுத்துக்கொண்டிருக்கிறோம். எங்களில் எத்தனை பேர் எங்களால் இயலக்கூடிய உதவிகளைச் செய்வதற்கு சோம்பற்பட்டு விலகிக்கொண்டிருக்கிறோம். எமக்குப் பிடித்த திசை நோக்கி நகராத உரையாடல்களிலிருந்து எம்மைத் துண்டித்துக்கொள்ளும்போது தனிமைப்படும் இதயங்களைப் பற்றி எம்மில் எத்தனை பேர் சிந்திக்கிறோம்?

அதிகாரங்கள்தான் உலகை ஆள்கின்றனவேயன்றி அன்பு அல்ல. அதிகாரத்தைக் கையிலேந்திய பிதாமகர்கள் எம் மீது மேலாதிக்கம் செலுத்தும் பிறப்புரிமை பெற்றவர்களாக, எம்மை அலைக்கழிக்கத்தக்கவர்களாக இருக்கும் உலகத்தில் ஒரு பூச்சிகளாக வாழ விதிக்கப்பட்டிருப்பது கொடுமையிற் கொடுமை! தீயவர்களுக்கும் அவர்கள் சுமந்தலையும் துப்பாக்கிகளுக்கும் இன்னபிற ஆயுதங்களுக்கும் பயந்துகொண்டு இந்த உயிரை எத்தனைக்கென்று கக்கத்தில் இடுக்கிக்கொண்டலைவது? முன்னொருபோதும் அறியாதவர்களால் இரவோடிரவாக விரட்டப்படுகிறோம். கைது செய்யப்படுகிறோம். எவனோ வெட்டிய பள்ளத்தில் தெருநாயைப் போல இழுத்தெறியப்பட்டுப் புதைந்து கிடக்கிறோம். இழைத்து இழைத்துக் கட்டிய வீட்டில் நீ இருக்கமுடியாதென யாரோ ஒருவன் கட்டளையிடும் குரலுக்குப் பணிகிறோம். கனவுகளையும் கற்பனைகளையும் யாரோவுடைய துப்பாக்கியின் பெருவாய் தின்றுதீர்க்கிறது. எங்களது ஒட்சிசன் குழாயை எந்த நிமிடத்திலும் எவரும் பிடுங்கிவிடத்தகு நோய்ப்படுக்கையில் கையறு நிலையில்தான் இருக்கிறோம். முதலில் இந்த ஜனநாயகம்… சமத்துவம்… மனிதம்… தனிமனித உரிமை… மண்ணாங்கட்டி… இந்த வார்த்தைகளை அகராதியிலிருந்து அழித்துவிடவேண்டும்.

நிலவுக்கஞ்சிப் பரதேசம் போன பாவிகளானோம். எங்கில்லை இந்த நிலவு? எங்கில்லை மரண பயம்? ஓடிக் களைத்து மூச்சுவாங்குகிறது. இருந்தும் கையுயர்த்தி மண்டியிட்டு “தயவுசெய்து என்னைக் கொல்லுங்கள்”என்று சொல்ல முடியவில்லை. “வாழப் பிடிக்கவில்லை. செத்துப்போகிறேன்”என்று கண்ணீரில்லாமல் சொல்லி விடைபெற்றுப் போகிற மனத்திண்மை ஏனின்னும் வாய்க்கப்பெறவில்லை…? வாழ்வின் மீது அத்தனை வெறித்தனமான காதலா? நான் இல்லாவிட்டால் ஏனையோர் என்ன ஆவர் என்பதெல்லாம் எமது மரணபயத்தின் மீதான சப்பைக்கட்டுகள் அல்லவா?

பதின்மூன்று ஆண்டுகளின் முன் நீ தற்கொலை செய்துகொண்டபோது ‘அவளொரு கோழை’என்றார்கள். நீ வாழ்ந்திருக்கக்கூடிய காரணங்கள் எல்லோராலும் அடுக்கப்பட்டன. இல்லையடி!வாழ்வை எதிர்த்துக் கலகம் செய்து உயிர் எனக்கொரு மயிர் என்று பிடுங்கி அவன் முகத்தில் விட்டெறிந்து போன நீயொரு தீரி! உன் கவிதைகளை எரித்து உன்னையும் மாய்த்துப் போன சிவரமணி!நீயும் நின் கவிதையும் எங்களைவிட உயிர்ப்புடன் இருக்கின்றன. இரண்டு மாதங்களின் முன் ஒற்றைக் கயிற்றிலே தொங்கி உன்னை இறுக்கியிருந்த அத்தனை தளைகளையும் அறுத்தெறிந்துபோன சின்னப் பெண்ணே!நீ வணங்கத்தக்க துணிச்சல்காரி!

தற்கொலை என்பது, வாழ்வின் முகத்தில்-தெரிந்தே காயப்படுத்திய சகமனிதர்களின் முகத்தில் காறியுமிழும் எச்சில்தான். விநோதம் என்னவென்றால், மெல்லிய சங்கடத்தோடு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒரு பறவையின் எச்சத்தைப் போல அதை வழித்தெறிந்துவிட்டுப்போய்க்கொண்டே இருக்கிறோம். தற்கொலை செய்பவர்கள் வாழ்வை வென்றாலும், தம் வலியை கன்னத்தில் அறைந்து உணர்த்துவதில் தோற்றுத்தான் விடுகிறார்கள்.

நாம் போனபின்னும் இவ்வுலகம் இருக்கும். நெருங்கியவர் அடித்துப் புரண்டழுவர் சிலநாட்கள். பிணந்தூக்கிப் போனபின்னால் வீடு கழுவிச் சமையல் நடக்கும். துக்கத்தில் இறுகிய மலம் இளகி வெளியேறி மறுநாள் வயிறு இலேசாகும். ஒரு பாடல், ஒரு வார்த்தை, ஒரு புகைப்படம், தெருவில் எதிர்ப்படுகிறவரில் ஒரு சாயல் எம்மை நினைவுறுத்தும். நீங்கள் தமிழ்மணத்தில் எழுதுகிறவராக இருந்தால், அஞ்சலிக்கவிதைகள் நான்கைந்தும் சில நினைவுக்குறிப்புகளும் பதிவிடப்பட்டு- வாசிக்கும் ஏனையோரை கண்கலங்கவோ ‘இதெல்லாம் கவிதையாக்கும்’என பல்கடிக்கவோ வைக்கலாம். வேறென்ன…பூவுதிரும் சாலை வழி மனிதர்கள் நடந்துபோக அன்றைக்கும் அதிகாலை அழகாக விடியும். அவ்வளவே!