5.01.2009

எல்லாவற்றுக்கும் பணம்! அரசியலில் பிணம்!-இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதத்தில் கலைஞர் பற்றி ஆவேச உரை


உண்ணாவிரதம் என்றாலே நினைவுக்கு வருவது சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையே. புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களால் நேற்று (30.04.2009) சேப்பாக்கத்தில் ஒரு உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் பல பிரபலங்களும் பிரமுகர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். சென்னையின் வாகன நெரிசலை நீந்திக் கடந்து விருந்தினர் மாளிகையருகில் சென்று சேர்ந்தபோது, நடராஜன் (சசிகலாவின் கணவரே) பேசிக்கொண்டிருந்தார். வெளிநாடுவாழ் ஈழத்தமிழர்கள் இந்நிகழ்வு குறித்து அறிய ஆவலோடிருப்பார்கள் என்பதனால் அதனைப் பதிவாகத் தருகிறேன்.


பகுதி - 01
நடராஜன்:

முத்துக்குமார் தன்னை நெருப்புக்குத் தின்னக் கொடுத்தபோது, இவர் (கலைஞர்) எங்கே இருந்தார்? 13 இளைஞர்கள் ஈழப்பிரச்சனைக்காகத் தங்களை எரித்துக்கொண்டபோது வராத உணர்ச்சி இவருக்குத் திடீரென எங்கிருந்து பீறிட்டுக் கிளம்பியது? ஷேக்ஸ்பியரின் நாடகத்தைக் காட்டிலும் பெரிய நடிப்புடன் கூடிய இந்நாடகம் மிகக் கேவலமானது. அந்த நாடகத்தில் வரும் டயபாலிக் வில்லனைப் போல நடந்துகொண்டிருக்கிறார்.
ஒரு முதலமைச்சருக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தத்தவறி, கையாலாகாத்தனமாக, ஏதோ காற்றுவாங்கப் போவதுபோல அண்ணா சமாதிக்குப் போய் உண்ணாவிரதம் இருக்கிறார். இவர் உண்ணாவிரதம் இருந்து போர்நிறுத்தம் ஏற்பட்டதாம்! ‘போர்நிறுத்தம் செய்யப்படவில்லை’என்று ராஜபக்சே சி.என்.என்.க்குப் பேட்டி கொடுத்துவிட்டான். இப்போது முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்வது. இப்போதும் நூற்றுக்கணக்கில் அங்கே மக்கள் செத்துக்கொண்டுதானிருக்கிறார்கள். இந்த இலட்சணத்தில் “எங்களைப் பொறுத்தவரை இது போர்நிறுத்தந்தான்”என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் ப.சிதம்பரம்.

‘13ஆம் திகதிவரை (தேர்தல் வரை) கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்’என்று ராஜபக்சேவுடன் இரகசிய ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ராஜபக்சே செய்வது சரியானால், அந்தப் பிரதேசத்தினுள் பத்திரிகையாளர்கள் செல்வதைத் தடுப்பது ஏன்? முதலமைச்சரே! 80 வயதுக்குப் பிறகு மூளை மங்கும் என்று சொல்லப்படுகிறது. உங்களுக்கு 85ஆகிறது. அரசியலிலிருந்து சற்றே விலகியிருங்கள்.

பதினொரு மணியளவில் பழ.நெடுமாறன் ஐயா அவ்விடத்திற்கு வந்தார். கூட்டம் மொத்தமும் எழுந்து நின்று மரியாதை கொடுத்தது. அது உண்மைக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு போல தோன்றியது.

நடராஜன் தொடர்கிறார்:

ஈழத்தமிழர் படும் இன்னல்களை விபரித்து ஒரு குறுந்தட்டு (சி.டி) வெளிவந்திருக்கிறதாம். அதைத் தேடி எங்கள் வீட்டிற்கு காவற்துறையினர் வந்திருந்தனர். ஒரு மாநில அரசாங்கத்திற்கு அதனால் என்ன தொந்தரவு? உண்மையைத்தானே அந்தக் குறுந்தட்டில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்? ஆட்சியிலே இருக்கிறவர்களிடம்தான் கள்ளப்பணம், கறுப்புப்பணம் இருக்கிறது. எங்கள் வீடுகளில் வந்து என்ன தேடுகிறார்கள்?
‘வடக்கே காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை’ என்று அவர்களே ஒத்துக்கொண்டுவிட்டார்கள். இங்கே இருக்கும் கபோதிகளுக்குத்தான் அது இன்னமும் புரியவில்லை. காவற்துறையினரே! வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். சீமான் மீது குற்றமில்லை என்று நீதிமன்றத்தில் சொல்லி அவரை விடுதலை செய்துவிட்டார்கள்.

மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். இலங்கையில் நடைபெறும் இனவழிப்புக்குத் துணைபோன குற்றத்திற்காக நீங்கள் ஒருநாள் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவீர்கள்.

அடுத்து பழ.நெடுமாறன் ஐயா பேசினார்.

ஒட்டுமொத்த தமிழ்நாடும் உங்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீங்கள் உண்ணாவிரதம் இருக்க முன்வந்திருக்கிறீர்கள். நாங்கள் உங்களுக்காகப் போராட வேண்டுமே தவிர, இங்கே இருக்கிற நீங்கள் உங்களை வருத்திக்கொள்ளக் கூடாது. மத்திய அரசு உங்களைக் காப்பாற்றத் தவறிவிட்ட நிலையில் நீங்களாகக் களத்தில் இறங்கியிருக்கிறீர்கள். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உங்களுக்காகத் தொடர்ந்து போராடும்.
அங்கே ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது போன்ற மாயையைத் தோற்றுவிக்க கருணாநிதியும், ப.சிதம்பரமும் முயற்சி செய்கிறார்கள். இந்தப் பிரச்சனையைத் திசைதிருப்புவதே அவர்களது நோக்கம்.
கலைஞர் அரசியல் நாடகங்களில் நடித்துப் பழக்கப்பட்டவர். இப்போது முதலமைச்சராக வந்தபின்னும், அரசியலிலும் நடிக்கிறார். நீங்கள் நினைத்திருந்தால் இந்தப் போரை எப்போதோ நிறுத்தியிருக்க முடியும்? அதற்கான அதிகாரம் கையிலிருந்தும் அதை நீங்கள் செய்யத் தவறிவிட்டீர்கள். ஆளுங்கட்சியில் இருக்கும் நீங்கள் மக்களை ஏமாற்றுவதற்காக உண்ணாவிரதம் என்றொரு நாடகத்தை ஆடுகிறீர்கள். உங்கள் நாடகங்களை இனங்கண்டுகொள்ளுமளவுக்கு மக்கள் தேறிவிட்டார்கள்.

ஜனநாயக ரீதியில் நான் பேசுவதனால் சட்டம், ஒழுங்கு கெடும் என்று பல இடங்களில் எனக்குத் தடைவிதிக்கிறீர்களே… நீங்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, உங்கள் தொண்டர்கள் கலவரம் செய்தார்களே… அப்போது சட்டம், ஒழுங்கு சீர்குலையவில்லையா? சட்டத்தை மீறும் செயலில்லையா? ஜனநாய விரோதப் போக்கில்லையா?

சிவாஜிலிங்கம் மீது பொய்வழக்குப் போடப்பட்டிருக்கிறது. எங்கிருந்தோ வந்த சோனியா காந்திக்காக நீங்கள் பிரச்சாரம் செய்யலாமென்றால், எங்கள் சகோதரர் சிவாஜிலிங்கம் இலங்கையில் நடப்பதை அம்பலப்படுத்தினால் அது தவறா? அவர்மீது கைவைத்தால் ஒட்டுமொத்தத் தமிழகமும் கொதித்தெழும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிவைக்கிறேன்.

மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமானால், அவர்கள் நேரடியாக இந்திய இராணுவத்தை இலங்கையில் இறக்குவார்கள். அதன்பிறகு நேரும் அனர்த்தம் பெரிதாக இருக்கும்.

இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் பிரபாகரனைப் போலொரு வீரன் தோன்றியதில்லை. அவருடைய வழிகாட்டலில், அவருடைய காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு மீட்சி கிடைக்கும். சிங்கள இராணுவம் தோற்கப்போவது உறுதி. விடுதலைப் புலிகள் வெல்லப்போவதும் உறுதி.

இதனிடையில் கூட்டத்தை ஒழுங்கமைத்துக்கொண்டிருந்தவர் (அவர் பெயர் தெரியவில்லை) ஒரு செய்தியைக் கூறினார். அதாவது, கும்மிடிப்பூண்டி முகாமிலிருக்கும் அகதிகளுக்கு (இப்படி எழுதுவது வருத்தமாக இருக்கிறது) இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முதலில் வட்டாட்சியர் அனுமதி வழங்கியதாகவும், கூட்டம் நடப்பதற்கு முன்தினம் இரவு அந்த அனுமதியை மீளப்பெற்றுவிட்டதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.

இதனிடையில் பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், அங்கே வந்திருந்த மக்களில் சிலரை கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். சிலர் பதில்சொல்ல மறுத்தார்கள். ‘கியூ பிரான்ச்’ பிரச்சனை பண்ணினால் பிறகென்ன செய்கிறது?’என்று கதைத்துக் கொண்டார்கள். வாயைத் திறக்க அஞ்சும் சூழலை அங்கு காணமுடிந்தது.


அடுத்து வின் தொலைக்காட்சி இயக்குநர்(அப்படித்தான் காதில் விழுந்தது)

இந்தியா உண்மையில் அடிமைப்பட்டுக்கிடக்கிறது. இந்தியாவை எங்கிருந்தோ வந்த சோனியா காந்தி ஆண்டுகொண்டிருக்கிறார். ஏன் இந்தியாவை ஆளத்தக்க தகைமையுடைய ஒரு இந்தியன் கூட இந்த நாட்டில் இல்லையா? பாகிஸ்தானிடம் துயர்ப்பட்டுக்கொண்டிருந்த பங்களாதேசுக்கு ‘இந்தியாவின் மகள்’இந்திரா காந்தி விடுதலை பெற்றுக்கொடுத்தார். ஆனால், சோனியா காந்தியிடம் அந்த இரக்கம் இல்லை.

சிவாஜிலிங்கத்தின் மீது சட்டம் பாய்ந்திருக்கிறது. அவரை நாடுகடத்தும் வேலைகள் நடக்கின்றன. சிவாஜிலிங்கம் எங்களுக்கு உறவு. இத்தாலி ராணி சோனியா உங்களுக்கு என்ன உறவு?
விடுதலைப் போராளிகள் இறந்துபடக்கூடும். ஆனால், விடுதலைப் போராட்டங்கள் தோற்றதாக வரலாறு கிடையாது. நிச்சயம் ஈழம் மலர்ந்தே தீரும்.


நாங்கள் இருந்த இடத்தில் இருக்கைகள் போதாமற் போய்விட்ட காரணத்தால், சாலையின் எதிர்ப்புறத்தில் நாற்காலிகள் போடப்பட்டு அங்கும் மக்கள் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.


அம்பேத்கர் புரட்சிப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணப் பறையனார் அடுத்து உரையாற்றினார்.


‘என்னுடைய உண்ணாவிரதத்தினால் போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது பார்’ என்று காட்டுவதற்காக கலைஞர் நாடகமாடினார். அது ஒரு திசைதிருப்பல் நாடகம். தனது ஆட்சியை, மாட்சியைத் தக்கவைத்துக்கொள்ள கலைஞர் ஆடிய நாடகம். நெடுமாறன் ஐயா வந்தபோது எல்லோரும் எழுந்து நின்றதைப் பார்த்தோம். அவர் உண்மையே பேசுகிறவர். அவருக்குண்டான மரியாதை எப்போதும் இருக்கிறது.

எங்களிடம் அதிகாரம் இல்லை. நாங்கள் உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால், கருணாநிதி இருக்கலாமா? இப்படி பொய்மையின் உருவமாக இருக்கிறாரே… என்று நினைத்து எனக்குக் கண்கள் கலங்கிவிட்டன. “அவரிடம் எல்லாத் திறமைகளும் இருக்கின்றன. ஆனால், அவர் நல்லவர் இல்லை”என்று எம்.ஜி.ஆர். அன்று சொன்னார். அது எவ்வளவு உண்மை! ஈழத்தமிழர் பிரச்சனையில் அவரது நடிப்பு தெரிந்துபோயிற்று.
ஈழத்தமிழர்கள் படுகின்ற இன்னல்களைக் குறித்து கருணாநிதி மகிழ்ச்சி அடைகிறார்போலும். மத்தியில் ஆள்பவர்களின் சொல்லைக் கேட்டால்தான் அவர் ஆட்சியில் நீடித்திருக்கமுடியும்.

எதைச்சொன்னாலும் பொய்! ஆள்பவன் பொய் சொல்லலாமா?
இலவசங்களை அள்ளிக்கொடுக்கிறார்களாம். தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் விளம்பரத்துக்காக என்னவெல்லாம் செய்கிறார் இவர். கேவலம் எல்லாவற்றுக்கும் பணம்! அரசியலுக்குப் பிணம்! அத்தனை கோடி பணமும் உங்கள் குடும்பத்தில்தானே கொட்டிக்கிடக்கிறது. அறிஞர் அண்ணாவுக்கு அருகில் நிற்கத் தகுதியற்றவர் கருணாநிதி. இனி உங்கள் பொய் வாழாது. இனி எம்மை ஆளாது.

திருமாவளவனை எங்கள் தலைவன் என்று தூக்கிவைத்துக் கொண்டாடினோம். ஒரு எம்.பி. சீட்டுக்காக ஒட்டிக்கொண்டிருக்கிறார்.

சோனியா என்பவர், தன்னுடைய கணவர் ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஈடாக எத்தனை உயிர்களைப் பலியெடுக்கப்போகிறாரோ தெரியவில்லை.
இலவசம் இலவசம் என்று கொடுப்பதனால் மாநிலம் அழிவின் விளிம்பை நோக்கிச் செல்கிறது. இலவசம் என்ற வார்த்தை சோம்பேறிகளை உருவாக்குகிறது. எல்லாம் இலவசமாகக் கிடைத்து பிறகொருநாள் கிடைக்காமல் போகிறபோது, குற்றச்செயல்கள் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இலவசங்களுக்கப் பதிலாக வேலை வாய்ப்புகளை வழங்கு என்றுதான் நாம் கேட்கிறோம்.
அவருடைய கட்சிக்காரர்களே அவரைத் திட்டுகிறார்கள். காசு கொடுக்கவில்லையென்றால் ஒரு பயலும் நிற்கமாட்டான்.

இயக்குநர் மனோஜ்குமார் அடுத்து பேசினார்.

நான் புலிகளை நேசிக்கிறேன். நான் புலிகளை ஆதரிக்கிறேன். நான் அவர்களைப் பாதுகாப்பேன். ஏனென்றால், என் தேசத்தினுடைய மிருகம் புலிதானே….
இலங்கையில் போர்நிறுத்தம் என்பது வெறும் கண்துடைப்பு நாடகம். ‘போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது’என்று, இலங்கையில் போடப்பட்ட குண்டைவிடப் பெரிதாகத் தூக்கி தமிழகத்தாரின் தலைகளில் போட்டார்கள். இந்த மாநிலத்தை ஆளும் ஒரு முதலமைச்சர் இப்படி ஒரு பொய்யைச் சொல்லலாமா?

அடுத்து, அவர் தன்னுடைய உறவுகள் இலங்கையில் இருந்து புலம்பியழுவதை அப்படியே அழுதுகாட்டினார்.
“சிங்களவன் குண்டுபோட்டுக் கொல்வது உங்க காதுல கேட்கிறதாய்யா? இலவச அரிசி குடுக்கிறீங்களாமேய்யா… அதுல கொஞ்சம் இங்க அனுப்பிவைச்சு எங்களுக்கு வாய்க்கரிசி போட்டுடுங்கய்யா” என்று ஆரம்பித்து சிறிது நேரத்திற்கு ஒரே அழுகைக் குரலில் நிறையப் பேசினார். கூட்டத்திலிருந்த பெண்களில் சிலர் விம்மியழுதார்கள்.

அறிவொளி இயக்க மாநிலச் செயலாளர் இன்சுவை பேசுகையில்,

இங்கிருந்து வேலைக்காகக் கொண்டுசெல்லப்பட்டவர்களே அங்கு வாழும், தற்போது இன்னல்படும் தமிழர்கள் என்ற தொனிப்படப் பேசினார். (என் புரிதல் தவறாக இருக்கலாம்) கலைஞர் ஆடியது ஒரு நாடகம். தமிழகம் எழுச்சியுறப் போராடுவோம்.


(இன்னமும் இருக்கிறது)
பதிவு நீளமாக இருப்பதால் இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் போடுகிறேன்.