3.05.2007

நேர்காணல்:கவிஞர் குட்டி ரேவதி-பகுதி-2

பகுதி -2

சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர் குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம்(2000), முலைகள்(2002),தனிமையின்; ஆயிரம் இறக்கைகள்(2003) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்திருக்கிறார். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து,பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவரும் இவர், பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. ‘முலைகள்’என்று தனது கவிதைத் தொகுப்பொன்றிற்குப் பெயர் சூட்டிய காரணத்தால் ‘கலாச்சாரக் காவலர்கள்’ என்று சொல்லப்படுபவர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டவர். இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.


“தமிழ்த் தேசத்திற்கான பிரத்தியேகமானதொரு பெண்ணியம் உருவாக்கப்பட வேண்டும்”

தமிழ்நதி: இந்தப் பத்தாண்டுகளில் முன்னரைக் காட்டிலும் பெண்களின் எழுத்துக்கள் கவனிக்கப்படுகின்றன. பேசப்படுகின்றன. முன்னர் பெண்கள் இந்தளவிற்கு எழுதவில்லையா…? அல்லது எழுதியும் கவனிக்கப்படவில்லையா…? இப்போதிருக்கும் இந்த இணக்கமான சூழலுக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
குட்டி ரேவதி: முன்பு எழுதவில்லை என்று சொல்லிவிடமுடியாது. அம்பை குறுநாவல்கள்,சிறுகதைகள்,நாடகங்கள் என்று நல்ல ஆளுமையோடு எழுதிக்கொண்டிருந்தார். அவருக்கே நிறைய வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் ‘விளக்கு’விருது கொடுத்திருக்கிறார்கள். இடையில் ஒரு இருபது ஆண்டுகள் வாஸந்தி,அனுராதா ரமணன்,ராஜம் கிருஷ்ணன்,சிவசங்கரி போன்ற மேல்சாதியைச் சேர்ந்த பெண்கள்தான் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் வெகுஜன இதழ்களில் இடமிருந்தது. அவர்கள் வெகுஜன இதழ்களால் இருகரம் நீட்டி வரவேற்கப்பட்டார்கள். ஆனால், வாஸந்தி போன்றவர்கள் எழுதிக்கொண்டிருந்த ஒரு இருபது ஆண்டுக் காலம் தீவிர இதழ்களில் பெண்ணியம் சார்ந்த கருத்தாக்கங்கள் இடம்பெறவில்லை. அதற்கு இன்னொரு காரணம் என்னவென்று பார்த்தீர்களானால் தீவிர இதழ்கள் மேல்சாதி ஆண்களின் கைகளில் இருந்தன. அவர்கள் யாரையும் உள்ளே வரவிடாத சூழ்நிலையில், அம்பை கூட மிகவும் சிரமப்பட்டுத்தான் எழுதியிருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். அவரிடம் கேட்டால் தான் பட்ட சிரமங்களை எப்படி எதிர்கொண்டார் என முழுமையாக அறிந்துகொள்ள இயலும்.
அதுக்கப்புறம்தான் மெல்ல மெல்ல பெண்களின் கவிதைகள் வர ஆரம்பிக்கின்றன. மிகவும் கூர்மையாக எழுதுகிறவர்களே இப்ப ஒரு இருபது பேர் வரையில் இருக்கலாம். பனிக்குடத்தில் போடுவதற்கு தேர்ந்தெடுப்பதற்கே சிரமமாக இருக்கிற அளவிற்கு பெண்கள் தீவிரமான கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெண்களின் கவிதைகள் இப்போது கூடுதல் கவனம் பெற்றிருப்பதற்கு அவர்கள் தங்களுக்கென்றொரு அரசியலை எடுத்துக்கொண்டுவிட்டதுதான் காரணமாக இருக்கலாம். தமிழ்ச்சூழலில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் முதலில் பாயுமிடம் பெண்களின் உடல்கள்தான். எழுதிக்கொண்டிருக்கும் பெண்களுடைய சொந்த வாழ்க்கையைப் பார்த்தீர்களானால் துயரங்கள்,சிக்கல்கள் மிகுந்ததாக இருக்கும். அதையெல்லாம் அவர்கள் வெளிக்கொணரும் ஒரு ஊடகமாக கவிதை அமைந்தது. அதனால் கூடுதல் கவனம் பெற்றதாக எல்லாம் சொல்ல முடியாது. எழுதுகிறவர்களுக்கு ஒரு உத்வேகம் ஏற்பட்டதாக வேண்டுமானால் சொல்லலாம். இது ஒரு இணக்கமான சூழ்நிலை என்பதில் ஐயமில்லை. இது இந்த உடல் அரசியல் என்பதையும் கடந்து வேறு வேறு கட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும் என்று விரும்புகிறேன். இனியும் நிறையப் படைப்பாளிகள் வந்து புதிய கருத்தாக்கங்களைக் கொணர்ந்து தமிழ்த் தேசத்திற்கான பிரத்தியேகமானதொரு பெண்ணியம் உருவாக்கப்பட வேண்டும். மேலைநாட்டுப் பெண்ணியம், மாக்சியம் தொடர்பான பெண்ணியம் இவற்றை நாம் உள்வாங்கிக்கொள்கிறோம். அப்படி என்றில்லாமல் தமிழ் புவியியல் பரப்பிற்கேற்ற வலிய பெண்ணியம் உருவாவதற்கான ஒரு தளமாக இப்போதிருக்கும் இந்த இணக்கமான சூழ்நிலையைக் கொள்ள வேண்டும்.
தமிழ்நதி: பொதுவாக ஒரு பெண் படைப்பாளியாக இனங்காணப்பட்டவுடனேயே சமூகம் அவளையொரு பெண்ணியவாதியாகவும் கலகக்காரியாகவும் பார்க்கிற ஒரு கண்ணோட்டம் உருவாகிவிடுகிறது இல்லையா…? உங்கள் வாழ்வில் இதை உணர்ந்திருக்கிறீர்களா?

குட்டி ரேவதி:தமிழ்நாட்டிலேயே நிறையப் பெண் கவிஞர்கள்,எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்துவிட்டார்கள். சில பெண் எழுத்தாளர்கள் குறிப்பிட்ட சிலருடன் தாம் சேர விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்கிறார்கள். அதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள் என்றால், ‘இவர்கள் மிக ஆபாசமாக எழுதுகிறார்கள். உடல் என்பது ஒரு புதிர்… அந்தப் புதிரை இவர்கள் எழுத்தால் விடுவிக்கிறார்கள். அதனால், இவர்களில் ஒருத்தியாக நான் அடையாளங் காணப்பட விரும்பவில்லை’என்கிறார்கள். ஆண்கள் எப்படி எழுதுவார்களோ அதையொட்டியே இந்தப் பெண்களும் இணைய மற்றும் அச்சு இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் ஒரு பெண்ணியவாதிகளாக அடையாளங் காணப்பட விரும்பவில்லை. எழுதுகிறவள் ஒரு பெண்ணாக இருப்பதனாலேயே அவள் பெண்ணியவாதி என்று பொருளல்ல. எழுத்தின் உள்ளடக்கம்தான் அவள் யார் என்பதை வெளிப்படுத்துகிறது. உள்வாங்கும் விடயம் ஆணாதிக்கமாக இருந்தால் வெளிப்படுத்தலும் அதையொட்டியே நிகழ்கிறது.
எம்மை நாமே கேள்வி கேட்கும்போது சுயவிமர்சனத்திற்குட்படுத்தும்போது நமக்குள்ளேயே எவ்வளவு ஆணாதிக்கம்,இந்துத்துவம் சார்ந்த விடயங்கள் ஊறிப்போயிருக்கின்றன என்பது தெரியவருகிறது. எங்களைப் போன்றவர்களுடன் அடையாளப்படுத்தப்பட விரும்பாத பெண்கள் என்ன சொல்கிறார்களென்றால், ஆண்கள் எப்படி பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார்களோ பாலியல் உறுப்புகள் குறித்து எழுதுகிறார்களோ அதைப் போலத்தானே இவர்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்… இவர்கள் எப்படிப் பெண்ணியவாதிகளாக இருக்க முடியும் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். அதற்கு என்னுடைய பதில் என்னவென்றால் ‘நாங்கள் முன்வைக்கும் அரசியல் வேறு’என்பதாகும். ஆண்கள் வர்ணித்து எழுதுவார்கள். ‘அவளுடைய விழிகள் கயல் மீனைப் போலிருந்தன… அவள் மாம்பழம் போன்ற நிறத்திலிருந்தாள்… அவளுக்குப் பருத்த மார்பகங்கள் இருந்தன’என்றெல்லாம் வர்ணித்து எழுதுவார்கள். நாங்கள் வைக்கும் அரசியலில் அதே வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் வேறு பொருளில், வேறு நோக்கத்தில் அவற்றைப் பயன்படுத்துகிறோம்.

தமிழ்நதி: பெண்கள் இன்னின்ன சொற்களைத்தான் தனது படைப்பில் பிரயோகிக்கலாம் என்றொரு எதிர்க்குரல் சில கலாசார காவலர்களிடமிருந்து எழுந்தது. நீங்கள் எழுத உட்காரும்போது அந்தக் குரல் ஒருவித மனத்தடையை,வரையறையை,எச்சரிக்கை உணர்வை,சோர்வை உங்களுக்கு ஏற்படுத்துகிறதா?

குட்டி ரேவதி:நிச்சயமாக. என்னுடைய அடுத்த தொகுப்பின் தலைப்பு ‘உடலின் கதவு’என்பதாகும். அது அச்சுக்குப் போய்விட்டது. அதிலுள்ள சில கவிதைகள் குறித்து எனக்கு தயக்கம் இருந்தது. இவற்றைப் பற்றி என்ன விமர்சனம் வரப்போகிறதோ… எடுத்துவிடலாமா என்று குழப்பமாக இருந்தது. இவ்வாறு குழப்பத்தை உருவாக்குவதுதான் சம்பந்தப்பட்டவர்களின் நோக்கமே. ‘நான் என்னுடைய எழுத்துக்கள் பற்றித் தெளிவாக இருக்கிறேன்… குழப்பமே கிடையாது’என்றெல்லாம் சொல்வதற்கில்லை. இந்த சமூகத்தினுடைய தாக்கமும் அது ஏற்படுத்தும் குழப்பமும் களைப்பும் சோர்வும் நம்மோடு இருந்துகொண்டேயிருக்கும். நம்முடைய வேறுபட்ட அனுபவங்கள் ஊடாக நாம் அந்தச் சோர்விலிருந்து மீண்டு வரவேண்டும். இலக்கியம் என்பதே அதுதானே இல்லையா…? இவர்கள் விளைவிக்கும் குழப்பங்களுக்கெல்லாம் நாம் ஆடிப்போய்விட்டோமென்றால் அது அவர்களுடைய வெற்றியாகிவிடும் அல்லவா…?அதனால், மீண்டும் மீண்டும் நம்மைப் புத்துணர்ச்சியூட்டிக் கொள்வது மிக அவசியம். அதற்கு எனக்கு மிக உதவியாக இருப்பது என்னவென்றால், நிறையப் பெண்களைச் சந்தித்து ஆக்கபூர்வமாக உரையாடுவது. ஒரு கிராமப்புறத்திற்குப் போய் அங்கு வயல்வெளியில் இருக்கும் ஒரு பாட்டியிடம் உரையாடினாலே உங்களுக்கான புத்துணர்ச்சி கிடைத்துவிடும். அவர்கள் வாழ்வில் எத்தனை துயரங்களை எதிர்கொண்டிருப்பார்கள்… அதிலொரு துளிகூட நாம் அனுபவித்திருக்க மாட்டோம். அந்தத் துயரங்களையெல்லாம், சிக்கல்களையெல்லாம் அவர்கள் நம்மைவிட நுட்பமாகக் கையாண்டு கடந்துபோயிருப்பார்கள். அவர்களையெல்லாம் சந்தித்துப் பேசுவதுதான் எனக்கு உத்வேகம் தருகிறது.
நான் நிறையப் பயணம் செய்வேன். கேரளாவுக்கு ஒரு வகுப்பு எடுக்கப் போகிறேன் என்றால், அதையடுத்து வரும் நாட்களில் இரண்டொரு நாட்களையாவது அந்த இடத்தைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்க்கப் எடுத்துக்கொண்டுவிடுவேன். பெண்ணியத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக நிறையப் பயணம் செய்வதைப் பார்க்கிறேன். வீட்டின் அறைகளுக்குள் குறிப்பாக சமையலறைக்குள் முடங்கிப்போய்விடுகிறவளாக பெண் இருக்கக்கூடாது. பல்வேறுபட்ட நிலவெளிகளை நமக்கு அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். வேறு வேறு ஊர்களுக்குப் பயணம் செய்வது,திருவிழாக்களில் கலந்துகொள்வது இவையெல்லாம் எமது பார்வையை விரிவுபடுத்துவன. பெண்ணியத்தின் மற்றொரு கூறு என்னவென்றால், நிறையப் பெண்களைச் சந்தித்துப் பேசவேண்டும். பேசுவதென்றால் வம்பு பேசுவதல்ல. ஆக்கபூர்வமாகப் பேசவேண்டும். அதில் அப்படியொரு ஆசுவாசம் கிடைக்கும்.

தமிழ்நதி: .இந்த ஆணாதிக்க சமூகத்தை மீறி ஒரு பெண் தனது படைப்புகள் வழியாக அடையாளங் காணப்படுவதென்பது சிரமமானதுதான் இல்லையா…? உங்கள் அனுபவங்கள் பற்றி…

குட்டி ரேவதி:என்னுடைய வீட்டிலிருந்து பெரிய எதிர்ப்புக் கிளம்பவில்லை. என்னுடைய அப்பாவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான கல்வியறிவு கிடையாது. ஆகவே, அவர் தன்னுடைய பெண்கள் படிக்கவேண்டுமென்பதில் மிகுந்த ஆர்வத்தோடிருந்தார். நானும் என் தங்கையும் படித்து மேலே வரவேண்டுமென்பதே அவருடைய ஆசையாக இருந்தது. ஆனால், குடும்பம் என்ற எல்லையை விட்டு வெளியே வரும்போது நிறையப் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
‘முலைகள்’என்று எனது கவிதைத் தொகுப்பிற்குப் பெயரிட்டபோது தொலைபேசி மற்றும் அஞ்சல் வழியாகவெல்லாம் எனக்கு மிரட்டல்கள் வந்தன. இணையத்தளங்களில் கீழ்த்தரமான விமர்சனங்கள் வந்தன. ஒரு பெண்ணின் ஆழ்மனதில் சென்று தைக்கக்கூடிய வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து துல்லியமாகக் குறிபார்த்து எறிந்தார்கள். எனது குடும்பத்தினரும் இதனால் பயங்கரமான மனவழுத்தத்திற்கு ஆளாகவேண்டியிருந்தது. இதையெல்லாம் பெண்களாகிய நாம் செய்வோமா என்றால்… இல்லை! பொதுவாக ஆண்களுடைய வன்முறையைவிட அவர்களுடைய மூர்க்கம் என்னை மிகவும் பாதித்த விடயம். பெண்களாகிய நாமும் அவ்விதமான மனோநிலையை நமது ஆண் பிள்ளைகளிடம் வளர்க்கிறோமோ என்று சிலசமயங்களில் தோன்றுவதுண்டு.குடும்பத்தின் தூண்களாக பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களைப் பொறுத்தமட்டில் வீடு என்பது சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் பெண்களோடு படுத்துக்கொள்வதற்கும் இன்பங்களை அனுபவிப்பதற்குமான ஒரு இடம். அவர்களுக்கு அது ஒரு தற்காலிகமான தங்குமடமாக இருக்கிறதேயன்றி அது அவர்களுக்கான நிரந்தர இடம் கிடையாது. உண்மையில் வீட்டைச் சுமப்பவர்கள் பெண்கள்தான். அடுப்பு மூட்டுவதிலிருந்து பிள்ளைகளை வளர்ப்பது வரை அவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் அவர்கள் கற்பைக் கட்டிக்காக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். பார்த்துக்கொண்டே போனால் குடும்பத்தின் இத்தகைய இறுக்கமான கட்டமைப்பிற்கு மூல காரணமாக இருப்பது இந்துத்துவம்தான். இதற்கு மாற்று வழி என்று ஒன்று இல்லை. அதனால், குடும்பத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிற இந்தத் தூண்களைக் கொஞ்சம் இளக்குவதன் மூலம் நமது சுமைகளைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ள முடியுமேயன்றி, மற்ற விதிகள் எல்லாம் அப்படியேதான் இருக்கும். நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்களோ அதையேதான் மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருப்பீர்கள்.

தமிழ்நதி: கவிதையில் இருண்மை என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பல நவீன கவிஞர்களுடைய கவிதைகள் புரிவதில்லை என்றொரு முணுமுணுப்பு வாசகர்களிடையே நிலவுகிறதே…
குட்டி ரேவதி:இது மொழி அரசியல் தொடர்புடையது எனலாம். திராவிட இயக்கங்கள் பெரிய இலக்கியங்களைப் படைத்துவிட்டதான ஒரு கற்பனை உலவுகிறது. வைரமுத்து போன்றவர்களெல்லாம் பெரிய கவிஞர்கள் என்று பேசப்படுகிறது. அவர்களுடைய மொழி எல்லோருக்கும் புரியும் வகையில் இருப்பதனால் அப்படிச் சொல்லப்படுகிறது. எடுத்த எடுப்பில் ஒருவர் பல் வைத்தியராக ஆகிவிட முடியுமென்றில்லை. அதற்கு நாலோ ஐந்தோ ஆண்டுகள் படிக்க வேண்டியிருக்கிறது. நிறைய நாட்கள் மொழியைப் பயின்று ஒரு கவிஞன் எழுதுகிற கவிதை மட்டும் உடனடியாக ஒரே வாசிப்பில் புரிந்துகொள்ளப்பட வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? நவீன கவிதையானது பழைய மொழியினுடைய வீச்சைத்தான் உள்வாங்கியிருக்கிறதே தவிர அந்தச் சொற்களை அது வைத்துக்கொள்ளவில்லை. தனக்கான சொற்களோடு அதனுடைய இசைவுடன்தான் வருகிறது. பாலகுமாரன்,சுஜாதா,வைரமுத்து வகையறா எழுத்தாளர்களின் எழுத்துக்களோடு பரிச்சயம் கொண்டிருப்பவர்களுக்கு இந்த நவீன மொழிக்கட்டமைப்பை இலகுவில் புரிந்துகொள்ளமுடியவில்லை என்பதுதான் உண்மை. புதிய மொழியை உருவாக்கியதும் அதை வளர்த்தெடுத்ததும் வைரமுத்துவாலோ கலைஞராலோ உருவானதல்ல. ஆனால் அவர்கள் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். புதிதாக வரும் கவிஞர்கள் ஆழம் மிக்க சொல்லாடலுடன் வருகிறார்கள். அதன் மூலம் மொழியின் கதவுகள் திறக்கப்படுவதாக நான் உணர்கிறேன். அந்த அனுபவத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் தயாராக இருந்தால்தான் மொழி எம்முடன் உரையாடும்.


(தொடரும்)


நீளமான இரவுகள்

இப்பொழுதும் இரவின் நீளத்தை
வார்த்தைகளால் அளந்துகொண்டிருக்கிறேன்
வாடைக்காற்று காதருகில்
பலமான வார்த்தைகளைக் கொண்டுவருகிறது
பனி தனது பாதங்களை
எனது மேனியின் எல்லா இடுக்குகளிலும்
பதுக்குகிறது
எனது இரவைவிட அம்மாவின் இரவு நீளமாயும்
அதைவிட அவரது அம்மாவின் இரவு நீளமாயும்
மரங்களின் இரவுகளை விட
பறவைகளின் இரவுகள் நீளமானவை
அதிகாலையில் பறவைகள் அலகினால்
இறகைக் கோதுவதையும்
ஒரு சூரியக்கதிரினால் சுகமாய்ச் சொறிந்துகொள்வதையும்
காண்கிறேன்

கவிஞரின் ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.

19 comments:

சினேகிதி said...

வரேக்க "உடலின் கதவு" இவருடைய மற்றைய தொகுப்புகளையும் வாங்கிக்கொண்டு வாங்கோ...கவிதை எனக்குப் பத்துத்தரம் வாசிச்சாத்தான் கொஞ்சமாவது புரியும் ஸோ விளக்கமும் நீங்கள்தான் தரவேண்டியிருக்கும்.

தமிழ்நதி said...

சிநேகிதி,
புத்தகம் வாங்கிக்கொண்டு வாறன். ஆனா... இந்தக் கவிதை வகுப்பெல்லாம் எடுக்கிறதெண்டால்... எனக்கும் சேர்த்து ஒரு ஆசிரியரை நீங்களே ஒழுங்குசெய்துகொள்ளுங்கோ.

Thillakan said...

இந்த நேர்காணல் இலங்கையில் வீரகெசரியின் வார வெளியிட்டில் தொடர வருகுது தானே??

தமிழ்நதி said...

ஆம் திலகன்! கடந்த வாரமும் இந்த வாரமும் வந்தது. சென்னையில் இயங்கிக்கொண்டிருக்கும் வீரகேசரி அலுவலகத்திலிருந்து நேர்காணல் ஒன்று எடுத்துத் தரும்படி கேட்டிருந்தார்கள். நான் எனது நட்சத்திர வாரத்திற்காக ஒருவரை நேர்காணல் செய்ய எண்ணியிருந்தேன். நண்பர் சோமியின் ஏற்பாட்டின்படி குட்டி ரேவதியைச் சந்தித்தேன். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் என்பது இதைத்தான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சமையலறை விட்டு வெளியே தலைகாட்டும் ஒவ்வொரு பெண்ணுக்கும்
விதவிதமான அனுபவங்கள்.
நேர்கோணலுக்கு நன்றி நதி.

கருப்பு said...

சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றவைகளை நான் பெண்களாகவே பார்க்கவில்லை. பிறகுதானே கவிஞராக பார்க்க வேண்டும்???

தமிழ்நதி said...

சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றவைகளை நான் பெண்களாகவே பார்க்கவில்லை. பிறகுதானே கவிஞராக பார்க்க வேண்டும்??? -விடாது கருப்பு

அப்படியா..?பெண்களாகப் பார்க்கப்பட எப்படி இருக்கவேண்டும் ஐயா?

கொழுவி said...

//அப்படியா..?பெண்களாகப் பார்க்கப்பட எப்படி இருக்கவேண்டும் ஐயா?//

அச்சம் மடம் நாணம் பசப்பு..??
இவையாவும் மற்றும் ஆணுக்கு அடிபணிதல் இவற்றுடன் சேலை கட்டுதலும்.. ஆண் அனுமதித்த விடயங்களை எழுதுவதும்..

லக்கிலுக் said...

//சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றவைகளை நான் பெண்களாகவே பார்க்கவில்லை. பிறகுதானே கவிஞராக பார்க்க வேண்டும்??? //

சமீபத்தில் சுகிர்தராணி அவர்களின் கவிதை ஒன்றினை வாசித்தேன். மிக மிக அருமையாகவே இருந்தது.

கவிஞர்களின் ஆண் கவிஞர், பெண் கவிஞர் என்று பாகுபாடு பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. சில ஆண்களை விட பெண்களே மிக அருமையாக கவி புனைகிறார்கள் என்பதும் ஒரு காரணம் :-))))))

பொன்ஸ்~~Poorna said...

நல்ல பகிர்வு தமிழ்நதி.

பதிவின் தலைப்பில், 1, 2 என்று எண் குறியுங்களேன்.. இந்த இடுகையை ஏற்கனவே படித்துவிட்டதாக நினைத்து தவறவிட இருந்தேன்...

மிதக்கும்வெளி said...

/சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றவைகளை நான் பெண்களாகவே பார்க்கவில்லை. பிறகுதானே கவிஞராக பார்க்க வேண்டும்???/

இந்தக் கவிஞர்கள் யாரும் தோழர் விடாதுகருப்புவின் அங்கீகாரத்திற்காகக் காத்து நிற்கவில்லையென்றே கருதுகிறேன். ஒரு பெண் தனக்கான மொழியைத் தேர்ந்தெடுக்கும்போது மேலெழும் ஆணின் இயலாமையும் திமிரையும் தவிர இது வேறொன்றுமில்லை.

Darren said...

//தமிழ்நதி 提到...
சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றவைகளை நான் பெண்களாகவே பார்க்கவில்லை. பிறகுதானே கவிஞராக பார்க்க வேண்டும்??? -விடாது கருப்பு

அப்படியா..?பெண்களாகப் பார்க்கப்பட எப்படி இருக்கவேண்டும் ஐயா//

அடிமைகளாக, ஆமாம்சாமிகளாக, ஆண்களை விட அறிவு குறைவாக , வெளிப்படையான சுதந்திர உணர்வு அற்றவர்களாக.....etc,,

இதுதான் கலாச்சார காவலர்களின் அளவுகோள்..

இன்னூம் எத்தனை காலம்தான்....உடல் ஓரு புதிர்..புண்னாக்குன்ன்னு சொல்லி..எய்ட்ஸ் தடுப்பு நிதிக்கு Billgates டம் பிச்சை எடுக்க வேண்டுமோ தெரியவில்லை...

butterfly Surya said...

குட்டி ரேவதிக்கு வணக்கத்துடன் வாழ்த்துக்கள்...

ஆணாதிக்கத்திற்க்கு சாட்டையடி,
கலாச்சார சீரழிவுக்கு நெத்தியடி...

தமிழ்நதிக்கு நன்றிகள்..

சூர்யா
துபாய்..

நந்தா said...

இதனை ஒரு பேட்டியாக மட்டும் இல்லாமல், ஒரு முழு பெண்ணிய வாதியின் எண்ணங்களுக்கும் எனக்குமான ஓர் ஒப்பீடாகவும் பார்க்கிறேன்.

பல கேள்விகளுக்கு அவரது பதில்கள் அருமையாகவும், நறுக்கு தெறித்தாற் போலவும் இருந்தது.

///ஆண்கள் எப்படி பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார்களோ பாலியல் உறுப்புகள் குறித்து எழுதுகிறார்களோ அதைப் போலத்தானே இவர்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்… இவர்கள் எப்படிப் பெண்ணியவாதிகளாக இருக்க முடியும் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். அதற்கு என்னுடைய பதில் என்னவென்றால் ‘நாங்கள் முன்வைக்கும் அரசியல் வேறு’என்பதாகும்.///

இதற்கு கவிஞர் சரியான பதிலை சொல்ல வில்லையோ என்று தோன்றுகிறது. (ஒரு வேளை என் புரிதலின் எல்லை கம்மியோ?)

///வைரமுத்து போன்றவர்களெல்லாம் பெரிய கவிஞர்கள் என்று பேசப்படுகிறது. அவர்களுடைய மொழி எல்லோருக்கும் புரியும் வகையில் இருப்பதனால் அப்படிச் சொல்லப்படுகிறது.///

அவர் விமர்சனங்களிற்குட்பட்டவர்தான். ஆனால் எல்லருக்கும் புரியும் வகையில் எழுதுவதாலேயே அவர் பெரிய கவிஞர் இல்லை என்று ஆகி விடுமா? இல்லை சாமான்யத்தில் புரிந்து கொள்ள முடியாத கவிதைகள் மட்டுமே சிறந்தவையா?

இது இப்பேட்டியைப் படித்த உடன், எனக்கான விடை தேடும் முயற்சியே தவிர, ஒரு பெண் கவிஞரின் வார்த்தைகளை ஏற்று கொள்ள மறுக்கும், ஆணாதிக்க மனோ பாவம் இல்லை.

அருமையான கேள்விகளை கேட்ட தமிழ் நதி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

பங்காளி... said...

நான் கவிஞனோ, மொழியாளனோ இல்லை...அடிப்படையில் ஒரு வர்த்தகன்.

எதைப்பார்த்தாலும் முதலில் அதன் வர்த்தகதன்மையை மட்டுமே அலசுவதை வரமா, சாபமா என பலமுறை யோசித்துக் குழம்பியிருக்கிறேன்.

சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி இவர்களின் ஓரிரு கவிதைகளை படித்திருக்கிறேன்...மிகப்பிரமாதம் என சொல்லமுடியாவிட்டாலும் நல்ல கவிதைகள்...கொஞ்சம் உழைத்தால் என்னாலும் இதுபோல கவிதைகளை எழுத முடியுமென நினைத்ததுண்டு.

நான் எந்த சர்ச்சைக்குள்ளும் போகாது...என் பார்வையில் இந்த மூண்று பெண்மணிகளும் தங்களின் பலத்தை உணர்ந்த அல்லது அதை அருமையான உத்தியாக்கி தங்களை வர்த்தகரீதியாக உயர்த்திக்கொண்ட வார்த்தை வியாபாரிகளாகத்தான் பார்க்க்கிறேன்.

சந்தர்ப்பங்களை உருவாக்குவது அல்லது கிடைத்த சந்தர்ப்பங்களை லாவகமாய் பயன்படுத்திக் கொள்வது, எங்கே அடித்தால் பரபரப்புத் தீ பற்றிக்கொள்ளுமென தெரிந்து அங்கே அடிப்பது போன்றவை இந்த வர்த்தக வியூகத்தின் கூறுகள்.

இது தெரிந்த இருபாலாருமே தேவைக்கதிகமான வெளிச்சம் பெற்றிருக்கின்றனர் என்பது உண்மை.

மற்றபடி இவர்கள் பின்பற்றுவதாய் சொல்லும் கொள்கைகளும் கோட்பாடுகளூம்...தீவிரத்தன்மையும் தங்களின் குற்றவுணர்ச்சியை மறைக்கப் போடும் வேடங்களே.....

(தமிழ்நதி...தயவு செய்து கோவிக்க வேண்டாம்....இதை தனிப்பதிவாக போடவே எண்ணினேன்....நிச்சயமாய் இதை நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்....பிரசுரிப்பதும் மறுப்ப்பதும் உங்கள் உரிமை...உங்களின் முடிவுக்கு ரசிகர் மன்றம் கட்டுப்படும்...ஹி..ஹி...)

தமிழ்நதி said...

நண்பர்களுக்கு,

'விடாது கருப்பு'என்ற பதிவரின் பெயரைப் பயன்படுத்தி யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைக்கிறேன். அந்தப் பெயரில் வந்த பின்னூட்டத்திற்கு இனி யாரும் எதிர்வினைகளை வைக்க வேண்டாம். 'விடாது கருப்பு'வைத் தொடர்ந்தால் We're sorry, but we were unable to complete your request. என வருகிறது. அவரின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கவனிக்காமல் விட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

ramachandranusha(உஷா) said...

பங்காளி, நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது :-) இதோ உங்கள் பார்வைக்கு, இரண்டு வருடங்களுக்கு முன்பு
ஒரு கலந்துரையாடலில் (திசைகள் இணைய இதழ்) நான் சொல்லியது.

" அண்மைக்கால பெண்கள் படைப்புகள் பெண் விடுதலைக்கு உதவுகிறதா? அல்லது பெண்களை போகப் பொருளாகப் பார்க்கும் பார்வையை வலுப்படுத்துகிறதா?"

பெண்களைப் பார்க்கும் ஆண்கள் பார்வையை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று வீட்டில் உள்ள உறவு பெண்கள். மனைவி, தாய். மகள், சகோதரி மற்றும் மருமகள். இன்றைய காலக்கட்டத்தில், ஆண்கள் இவர்களுக்கு முழு சுதந்திரமும், மரியாதையும் கொடுக்கிறார்கள்.
ஆனால் இதே ஆண்களில் பலர், பழகும் வெளியுல பெண்களை போக பொருளாகவும் அவளை தங்களால் முடிந்தளவு மட்டம் தட்டியும்,
கேலி பேச்சுகளால் நோக அடித்தும் தங்களின் மனபாங்கு மாறவில்லை என்று நிருபிக்கிறார்கள் இந்த ஆண்களுக்கு பெண் கவிஞர்களின் எழுத்தில் தென்படும் சுதந்திரமும், சமூக கட்டுப்பாட்டை உடைக்கும் வெறியும், விடுதலை உணர்வும், தார்மீக கோபமும் இணைந்த சுயசிந்தனை ஒவ்வாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

பெண் உறுப்புகளின் பெயர்களை குறிப்பிட்டு எழுதும் பெண் கவிஞர்கள் மிகவும் கீழ்தரமாய் விமர்சிக்கப் படுகிறார்கள். இத்தகைய கவிதைகளைப் படைப்பவர்கள் தங்கள் நிலைமையை உணர்ந்தேயிருக்கிறார்கள். அவர்களின் பல மற்ற கவிதைகள் வெளிபார்வைக்கு வருவதேயில்லை. ஆண்கள் எழுதாத எதையும் பெண்கள் எழுதிவிடவில்லை. ஆனால் படிப்பவர்களும், பதிப்பவர்களில் பெரும்பான்மையோரும் ஆண்கள்தானே! பத்திரிக்கைகளிலும், புத்தக வடிவிலும் வரும் இக்கவிதைகள் படித்து கிளுகிளுப்பு அடையும் ஆண்கள் ஒருபுறம், பண்பாடு கலாச்சாரம் கெட்டு விட்டது என்று கூக்குரல் இடுபவர்கள் மற்றொரு பக்கம். பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கட்டிக் காப்பாற்றும் முக்கிய பொறுப்பு பெண்களுக்கு மட்டும்தானே!

இப்படிதான் எழுத வேண்டும் என்று யாருக்கும் சட்டதிட்டங்கள் சொல்ல முடியாது. படைப்பாளியின் சுதந்திரம் அது. ஆனால் படைப்பின் நோக்கும் முற்றிலும் திசை மாறி போனதுதான் வருத்தமான விஷயம்.

தமிழ்நதி said...

உறங்கச் செல்லும் முன் கொஞ்சம் உரையாடல்:
பதிவர் 'விடாது கருப்பு'வின் பெயரில் யாரோ பின்னூட்டம் இட்டாலும் இட்டார்கள். அப்படியொரு எதிர்வினைகள்! ஏதாவது சர்ச்சைக்குரிய பின்னூட்டங்களை 'பப்லிஷ்'பண்ணும் முன் 'பெயரைத் தொடர்ந்து சென்று சரி பார்' என்ற பாடத்தை இன்று நான் கற்றுக்கொண்டேன். இதனால் குறிப்பிட்ட நண்பருக்கு ஏதேனும் மனவுளைச்சல் ஏற்பட்டிருப்பின் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தவிர,என்னில் இவ்வளவு'அன்புள்ள'நபர் யாரென எப்படியும் கண்டுபிடித்துவிடலாமென்று நம்புகிறேன்.

பின்னூட்டம் சண்டையிட்டுச் சாகட்டும் என்று போடப்பட்டதென்றாலும் அதைக் குறித்து எதிர்க்குரல்களை முன்வைத்த நண்பர்கள் முத்துலட்சுமி,கொழுவி,லக்கிலுக்,மிதக்கும் வெளி,தரன்,யகுசான் யாவருக்கும் நன்றி.
பொன்ஸ்!நீங்கள் சுட்டிக்காட்டியதற்கிணங்க நேர்காணலுக்கு பகுதி இலக்கங்கள் கொடுத்திருக்கிறேன். ஆனால், இனி அவை முகப்பில் தோன்றாதல்லவா? ஆனாலும்,எனது பக்கத்திற்கு வந்த பிற்பாடு குழப்பம் ஏற்படாதிருக்க உதவி செய்யும் என நம்புகிறேன். நாளையுடன் நேர்காணலின் 3வது மற்றும் இறுதிப்பகுதி நிறைவுறுகிறது.

நந்தா!உங்கள் இரண்டு கேள்விகளையும் குறித்துக்கொண்டேன். வாய்ப்புக் கிடைத்தால் குட்டி ரேவதியிடம் கேட்கிறேன்.

"என் பார்வையில் இந்த மூண்று பெண்மணிகளும் தங்களின் பலத்தை உணர்ந்த அல்லது அதை அருமையான உத்தியாக்கி தங்களை வர்த்தகரீதியாக உயர்த்திக்கொண்ட வார்த்தை வியாபாரிகளாகத்தான் பார்க்க்கிறேன்."-பங்காளி

இதற்கான பதிலை ராமச்சந்திரனுஷாவின் பின்னூட்டத்திலிருந்து எடுத்துப் போடுகிறேன்.

"முடிந்தளவு மட்டம் தட்டியும்,
கேலி பேச்சுகளால் நோக அடித்தும் தங்களின் மனபாங்கு மாறவில்லை என்று நிருபிக்கிறார்கள் இந்த ஆண்களுக்கு பெண் கவிஞர்களின் எழுத்தில் தென்படும் சுதந்திரமும், சமூக கட்டுப்பாட்டை உடைக்கும் வெறியும், விடுதலை உணர்வும், தார்மீக கோபமும் இணைந்த சுயசிந்தனை ஒவ்வாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை."

பங்காளி,
இதில் கோபிக்க ஒன்றுமில்லை. அவரவர் கருத்துக்களை முன்வைக்கும் சுதந்திரத்தில் தலையிட நான் யார்? ஆனால், இவர் இப்படித்தான் எழுதவேண்டும் என்று சொல்ல நாம் யார் என்று நீங்கள்தானே ஒரு பின்னூட்டத்தில் கேட்டிருந்தீர்கள்.

Anonymous said...

///வைரமுத்து போன்றவர்களெல்லாம் பெரிய கவிஞர்கள் என்று பேசப்படுகிறது. அவர்களுடைய மொழி எல்லோருக்கும் புரியும் வகையில் இருப்பதனால் அப்படிச் சொல்லப்படுகிறது.///


அப்படி பார்த்தால் பாரதியார் பாரதிதாசன் இவர்கள் கவிதைகள் கூட புரிகிறதே! அவர்கள் பெரிய கவிஞர்கள் இல்லையா?


பின் நவீன தத்துவப்பாணியில் எழுதப்படுகிற கவிதைகள் தான் சாலச் சிறந்தது என்பது போல இவர்களின் பேச்சு அமைவது கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது!

இவருடைய சில கவிதைகள் எனக்கு சில சமயம் புரிவதே இல்லை!