7.05.2007

ஆண்மை


ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின்மதியநேரம்
தெருமுடக்கில் நீட்டிக்கொண்டிருந்தது
அன்று விசித்திரப் பிராணியாகி
சொல்லாமல் வகுப்பினின்று வெளிநடந்தேன்.
ஓடும் பேரூந்தில் திடுக்குற்று விழிதாழ்த்தி
அவமானம் உயிர் பிடுங்க
கால்நடுவில் துருத்திற்று
பிறிதோர்நாள் வீட்டிற்குள் புகுந்து
சோபாவிலமர்ந்தபடி காட்சிப்படுத்திற்று
இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி
இறைச்சிக்கடை மிருகமென வாலுரசிக்கடந்தது
ஆண்மையை நிரூபித்தல் நல்லதே!
ஆனால் தீபா
திகைப்பிருள் வீழ்ந்து
பதற்றத்தில் நெஞ்சு நடுக்குற்று
அவமதிக்கப்பட்டவளாய்
நீயும் அழுதிருப்பாய் என்றெண்ண
துப்பாக்கியால் ‘குறி’தவறாமல் சுடத்
தெரிந்திருக்க விரும்புகிறேன்.

21 comments:

நந்தா said...

உங்கள் தோழிக்கு ஏதோ நடந்திருக்கிறதென்று தோன்றுகிறது......

கவிதையைப் படித்ததும் ஏதோ ஒரு அயர்ச்சி தோன்றியது. (இதன் தாக்கத்தினால்)

செல்வநாயகி said...

இதே பொருளில் சில கவிதைகள் வேறு வார்த்தைகளில் படித்திருந்தாலும் உங்களின் வழக்கமான கவிதைகளின் முடிவுகளில் இருந்து வித்தியாசமான இறுதிவரியில் இக்கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஈவ்டீசிங் பற்றி எழுதி இருக்கிறீர்களா?

மிதக்கும்வெளி said...

நல்ல கவிதை. உலகப்பெண்களுக்கான துயரத்தைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்.

/துப்பாக்கியால் ‘குறி’தவறாமல் சுடத்
தெரிந்திருக்க விரும்புகிறேன்/

நல்ல வரி.

மிதக்கும்வெளி said...

நல்ல கவிதை. உலகப்பெண்களின் துயரத்தைக் கவிதையில் வலியோடும் ரவுத்திரத்தோடும் கொண்டுவந்திருக்கிறீர்கள். குறிப்பாக

'தீபா
திகைப்பிருள் வீழ்ந்து
பதற்றத்தில் நெஞ்சு நடுக்குற்று
அவமதிக்கப்பட்டவளாய்
நீயும் அழுதிருப்பாய் என்றெண்ண
துப்பாக்கியால் ‘குறி’தவறாமல் சுடத்
தெரிந்திருக்க விரும்புகிறேன்'

என்ற வரிகள் சமகாலத் தமிழின் மிகமுக்கியமான வரிகளாய் உணர்கிறேன். தீபா மட்டுமல்ல, அனைத்துப் பெண்களுமே 'குறி' தவறாமல் சுட வ்ரும்புகிறேன் (அ) வேண்டுகிறேன். ஆண்கள் என்னும் திமிர்மிருகங்கள் குறிகளற்றுப்போகட்டும்.

காயத்ரி சித்தார்த் said...

படம் ரொம்ப நல்லாருக்கு.. படத்துக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம்? யார் தீபா? ஒன்னும் புரியல தமிழ்.. :((

Ayyanar Viswanath said...

மீண்டுமொரு நல்ல கவிதை தமிழ்

தமிழ்நதி said...

நன்றி சுகுணா திவாகர்,காயத்ரி,அய்யனார்.

திவாகர்!எனது கவிதையில் இருக்கும் கோபத்தைக் காட்டிலும் உங்கள் பின்னூட்டத்தில் அதிக கோபம் தொனிக்கிறாற்போலிருக்கிறதே... ஆண்கள் எல்லோருமே அவ்விதமானவர்களல்ல... பொதுப்படையாக 'திமிர்மிருகங்கள்'என்று சொல்லிவிட இயலாது.

காயத்ரி!அந்தப் படம் ஒரு தாய் தன் குழந்தையை ஆதூரத்துடன் அணைத்துக்கொள்வதாக அமைந்திருக்கிறது. தீமைகளிலிருந்து என் குஞ்சுப்பறவையை எப்படிக் காப்பாற்றப்போகிறேன் என்ற ஆதங்கத்தை நான் அதில் கண்டேன். அருவருக்கத்தக்க சில 'காட்சிப்படுத்தல்'களால் என் குழந்தை (வளர்ந்தவளானாலும் குழந்தைதானே தாய்க்கு)இந்த உலகத்தை வெறுத்தொதுங்கப் போகிறதே என்ற கவலையைச் சொல்ல வந்தேன். 'தீபா'என்பது ஒரு குறியீடு மாதிரி. எனது அண்ணாவின் மகளுக்கும் எனது பிரியத்திற்குரிய சிறு வயதுத் தோழி ஒருத்திக்கும் 'தீபா'என்பதே பெயர். எனது பெரும்பாலான பதிவுகளில் 'நித்திலா'என்றொரு பெயரைக் குறிப்பதுண்டு. அதுவொரு நெருங்கிய விளிச்சொல்... அதை வைத்துக்கொண்டு அதனோடு பேசுவது ஒருவகை உத்தி... (அப்படித்தானே நண்பர்களே!)

அய்யனார்! நான் அவ்வப்போது நீங்கள் 'நல்லது'எனச் சொல்லத்தகு கவிதைகளையும் எழுத முயன்று வருகிறேன்:)

Jazeela said...

எல்லா நேரங்களிலும் 'குறி' தவறாமல் சுட முடியவில்லை தமிழ். எதிரில் நிற்கும் ஆளை பொருத்தது குறியும். நல்ல கவிதை.

Anonymous said...

kavithai padithan, puriyavillai.
ithu maddum alla veru kavithaiyum padithan. irrandu murray padithal konjam vilankuthu. y?. padikum poothu
any technique irrukutha!

sivaraman

வந்தியத்தேவன் said...

கவிதை மிகவும் அழகாக இருக்கிறது ஆனால் நீங்கள் ஈழத்தமிழர் என நினைக்கிறேன். வன்னியில் இப்படியான ஆண்கள் இல்லை அல்லது குறைவு அதனால் இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது.
கவிதையின் வரிகளில் உங்கள் கோபம் தெரிகிறது. அண்மையில் ஒரு சஞ்சிகையில் (விகடன் என நினைப்பு) உங்கள் கவிதைகள் பார்த்தேன் ரசித்தேன்.

வந்தியத்தேவன் said...

கவிதை மிகவும் அழகாக இருக்கிறது ஆனால் நீங்கள் ஈழத்தமிழர் என நினைக்கிறேன். வன்னியில் இப்படியான ஆண்கள் இல்லை அல்லது குறைவு அதனால் இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது.
கவிதையின் வரிகளில் உங்கள் கோபம் தெரிகிறது. அண்மையில் ஒரு சஞ்சிகையில் (விகடன் என நினைப்பு) உங்கள் கவிதைகள் பார்த்தேன் ரசித்தேன்.

தமிழ்நதி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் ஜெஸிலா,சிவராமன்,வந்தியதேவன் நன்றி.

கருத்துக்கு நன்றி ஜெஸிலா.

சிவராமன்!என்னுடைய கவிதைகள் புரிந்துகொள்ளச் சிரமமாக இருப்பதாக நீங்கள் சொல்வது வியப்பளிக்கிறது. கவிதையைப் புரிந்துகொள்வதற்கு நிறைய வாசிப்பு அவசியம். நவீன கவிதைகளுடன் பரிச்சயமுடையவர்களுக்கு நிச்சயமாக இது புரியும். இந்தக் குறிப்பிட்ட கவிதையின் சாரம் என்னவென்றால், காமம் என்பது பொருந்தாத இடத்தில் பிரயோகிக்கப்படும்போது அதனால் ஏற்படும் மனவுளைச்சலை எழுதியிருக்கிறேன்.

வந்தியதேவன்!புதிதாக வந்திருக்கிறீர்கள். 'பொன்னியின் செல்வன்'இன் பாதிப்பினால் இந்தப் பெயரை வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

"வன்னியில் இப்படியான ஆண்கள் இல்லை அல்லது குறைவு அதனால் இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது."

என்று குறிப்பிட்டிருந்தீர்கள். வன்னியில் இப்படியான ஆண்கள் குறைவு என்பதனுடன் நான் முழுக்க முழுக்க ஒத்துப்போகிறேன். அநேகருடைய ஆதர்ச நிலம் வன்னிதான். சில சுயநலன்களைக் கருதி வெளியில் வாழவேண்டியிருக்கிறது. ஆனால், வன்னியில் மட்டுமென்றில்லை, எல்லா இடங்களிலும் பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டும் பார்க்காத ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் குறிப்பிட்டது மிகச் சிறிய வீதம். ஆனால் அத்தகையோர் தந்த மனஅழுத்தமோ அதிகம். நீங்கள் வன்னியிலா இருக்கிறீர்கள்?

தமிழ்நதி said...

மக்களே! இந்த 'ஜி மெயில்'க்கு ஏதோ ஆகிவிட்டது. செல்வநாயகி,முத்துலட்சுமி,நந்தா,மிதக்கும் வெளி போட்ட மற்றொரு பின்னூட்டம் எல்லாவற்றையும் 'ஸ்பாம்'க்குள் போட்டுவிட்டிருக்கிறது. இன்று தற்செயலாகப் பார்த்தபோது 'அடடா'என்றிருந்தது. நண்பர்களே!உங்கள் பின்னூட்டங்களை நான் போடவில்லை என்று தப்பாக நினைத்திருப்பீர்களே என்றெண்ண கோபம் கோபமாக வருகிறது. என்ன செய்வது... 'ஜி மெயில்'க்கு நான் என்ன பேசினாலும் புரியாது:)

sooryakumar said...

ஏனையோர் சிலர் குறிப்பிட்டது போல,
தீபா எனும் குறியீடு பற்றிய விளக்கம் கவிதையில் இல்லை.
மற்றும்படி தங்கள் கவிவீச்சு வீறு கொண்டே போகிறது.
அதுசரி...இன்னமும் குறி தவறாது சுடக் கற்றுக் கொள்ளவில்லையா? அதுவும் போராட்டபூமியில் இருந்துகொண்டு.

வந்தியத்தேவன் said...

//வந்தியதேவன்!புதிதாக வந்திருக்கிறீர்கள். 'பொன்னியின் செல்வன்'இன் பாதிப்பினால் இந்தப் பெயரை வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்//நான் ஈழத்தைச் சேர்ந்தவன். பொன்னியின் செல்வனில் மயங்கி எனக்கு வந்தியத்தேவன் என பெயர்வைத்துள்ளேன். வலையுலகில் சிலகாலமாக இருக்கிறேன் பெரும்பாலும் பல வலைப்பூக்களைப் படித்திருக்கிறேன் ஆனால் பின்னூட்டம் இடுவதில்லை காரணம் என் சோம்பேறித்தனம். என் வலையில் கூட சில பதிவுகள் மட்டும் இருக்கிறது இந்தக் காரணத்தால்.

Anonymous said...

manika vendum. pothuvaka kavithai villanguvathu illai.

LakshmanaRaja said...

மிக தெளிவான‌
மிக ஆழமான‌
ஒரு கோபத்தை இந்த பதிவில் உணர்கிறென்

Never give up said...

Enaku ungal pol kavidhai ezhudha varaadhu. aanaal en manathinul irrukkum kobathai naan appadiye ungal kavidhayil kanden.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதை ரொம்ப நல்லா வீர்யமா வந்திருக்குங்க.

தமிழ்நதி said...

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்!இந்தக் கவிதையை ஒன்றுமேயில்லை என்று சொன்னவர்களும் உண்டு.(அவ்வாறு சொன்னவர்கள் ஆண்கள்) இப்படியொரு விடயத்தை கவிதையில் கொண்டுவரத் தெரியாமல் தவித்து பின் தவிர்த்து விட்டோம் என்று சொன்ன தோழிகள் உண்டு. பார்வைகளுக்கேற்றபடி உருக்கொள்ளும் எழுத்து.