8.29.2008

புதைந்து போனவள்


அந்த முழுநிலா நாளில்
வெள்ளித்தகடென விகசித்தது மொட்டைமாடி.
கண்ணாடிக் குவளையூடே
நரம்புகளில் புகுந்த செந்நிறத் திரவநதி
அள்ளிச்சென்றது கவலைக் கழிவுகளை.
கூடுதல் நட்சத்திரங்களாய்
விழிகள் மினுக்கிட
அவள் பேசிக்கொண்டிருந்தாள்.

பெண்ணெழுத்து சட்டாம்பிள்ளைகளின்
பிரம்போயும் முதுகெனவும்
அரங்கனின் புண்ணியத்தில்
ஆண்டாள் தப்பியதும்
சொல்லிச் சிரித்த அதிர்வில்
காலடியில் கிடந்த பூனை
விழித்து நெட்டுயிர்த்தது.
மேலும்
காமம் கனலும் கொங்கையெழுத
நஞ்சுண்ட கண்டனை காதலிக்க உத்தேசித்திருப்பதாய்
உற்சாகமாய் அறிவித்தாள்.

அந்நிலாவும்
அன்றவள் ஒளிர்ந்த பொன்னிராவும்
நெடுங்கோடையில் நீரோடைக் குளிர்ச்சி.

‘வேசிக்கும் விதவைக்கும்
எதிர்ப்பதம் தேடித் தோற்றால்
அகராதியை எரிப்பேன்’என்றவளை
சில நாளாய் காணேன்.

பிறிதொருநாள்
இருண்ட அடுக்களையில்
நிதானமாய் அமர்ந்து
வட்டம் பிசகாத தோசைகளை
வார்த்தபடியிருந்தவளைக் கண்டேன்.

அவளைப் புதைத்த இடத்தில்
குழந்தைகள்
மலங்கழித்துக்கொண்டிருந்தார்கள்.





9 comments:

MSK / Saravana said...

வார்த்தைகளேதுமில்லை என்னிடம்..

கவிதை நன்று..
:)

MSK / Saravana said...

வீரியமிக்க கவிதை..
ஆனால் இந்த மாதிரியான கவிதைகள் எழுதபட்டிருக்கின்றன இதற்குமுன்.


தமிழ்நதியிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்..

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாழ்க்கையின் வழமைகளில் இதுவும் ஒன்று... ஆனால் புதைந்து போவது பெண்கள் மட்டுமல்ல...(இப்படிச்சொல்லியாவது நாம் பெண்ணியம் தேடுவோம் :) )

ஸ்ரீராம் பொன்ஸ் said...

கவிதை நன்று..சமீபத்தில் உங்கள் கவிதைத் தொகுப்பு படித்தேன்.அதைப் பற்றி தனியான மின் மடல் ஒன்றை அனுப்ப விருப்பம்..ஸ்ரீராம் பொன்ஸ்.

sukan said...

நல்ல வீச்சு. தொடருங்கள்..

தமிழன்-கறுப்பி... said...

பல நாட்களுக்கு பிறகு தளம் மாறியிருக்கிறது அழகாயிருக்கு...:)

கவிதை சொல்ல வந்ததை 'நச்சுன்னு' சொல்லி இருக்கு...!

விமலா said...

நல்லாயிருக்கு!

தமிழ்நதி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் சரவணகுமார்,கிருத்திகா, சிறீராம் பொன்ஸ், நர்மதா, தமிழன், விமலா அனைவருக்கும் நன்றி. சில நாட்களாகப் பதிவுகள் எதுவும் போடவில்லை. உளம் சோர்ந்திருந்தேன். உங்கள் உற்சாகமான வரவேற்புடன் மீண்டும் ஆரம்பிக்கிறேன். (கெளம்பிட்டாய்ங்கப்பா!)

U.P.Tharsan said...

sad & supper