12.21.2008

சீமான் கைதும் இறை ‘ஆண்மை’யும்


சீமான்,கொளத்தூர் மணி,பெ.மணியரசனைக் கைது செய்துவிட்டார்கள். அவர்கள் செய்தது இமாலயத் தவறு. அவர்கள் வார்த்தைகள் கண்காணிக்கப்படும் ஒரு நாட்டில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டார்கள். மறதி மன்னிக்கப்பட முடியாதது. இப்போது உங்களுக்கு சிதைந்துபோன ரஷ்யாவும் அதன் உளவுப்படையும் நினைவில் வந்தால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. முகத்தை மூடாத பெண்களுக்குத் தண்டனை வழங்கும் தலிபான்கள் நினைவில் வருவதற்கும் நான் பொறுப்பாக முடியாது. தஸ்லிமா நஸ்ருதீன், சல்மான் ருஷ்டி போன்றோரின் அலைச்சல்களும் உளைச்சல்களையும் ஏன் நினைத்துக்கொள்கிறீர்கள்? கருத்துரிமைப் புண்ணாக்கு கட்டாயம் வேண்டுமா என்ன? சாப்பிடுவதற்கும் அதிகபட்சமாக எச்சிலை உமிழ்வதற்கும் மட்டுந்தான் வாயைத் திறந்திருக்கவேண்டும். ஈழத்தமிழருக்காக உணர்ச்சிவசப்பட்டோ உருப்படியாகவோ பேசி உள்ளே போய் உட்கார்ந்திருக்க வேண்டிய தேவையென்ன?

‘இத்துடன் சீமான் பெரியாளாகி விடுவார்’என்றார் ஒரு நண்பர். அடுத்தவன் வீட்டில் இழவு விழுந்தால் எட்டாம் நாள் இறைச்சிக் கறிச்சோறு என்றில்லாமல், பதிலளிக்க முடியாத கேள்விகளை அதிகார மையங்களைப் பார்த்துக் கேட்கும் சீமானுக்கு இதுவும் வேண்டும்: இன்னமும் வேண்டும். ‘இவர் தன் வேலையைப் பார்க்காமல் பிரபாகரன், வெங்காயம் பற்றியெல்லாம் ஏன் பேசுகிறார்’என்றார் இன்னொருவர். உண்மைதானே… காலையில் எழுந்து காப்பி குடித்து கக்கூசுக்குப் போய் அதன்பிறகு வேலைக்குப் போய் களைத்துத் திரும்பி தொலைக்காட்சியில் ‘குலுக்கல்’களைப் பார்த்து மனைவியையோ காதலியையோ கூடிவிட்டுத் தூங்காமல், ‘ஐயோ.. அண்டை நாட்டில் சகோதரனைச் சாகடிக்கிறார்களே… கேட்பாரிலையா…?’என்று கைகளை உயர்த்திக் கேட்பது மன்னிக்க முடியாத குற்றந்தான்! பெரியவர்கள், விடயமறிந்தவர்கள் அவரைத் தயைகூர்ந்து மன்னித்துவிடுங்கள்.

‘புனிதமான’ அரசியல் தலைவர்களைப் பற்றித் தரக்குறைவாக சீமானும் கொளத்தூர் மணியும் பேசியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசுகள் மக்களின் வரிப்பணத்தில் குண்டுகளை வாங்கி அண்டை அயல்களுக்குக் கொடுத்தால் என்ன… அதைத் தனது மக்களின் தலைகள் மீதே போட்டு சிதறுதேங்காய் ஆக்கினாலென்ன? அரசாங்கங்கள் எல்லாம் சம்பந்தக்குடிகள் என்பதை மறந்தது தமிழ்த்தேசியம் பேசுபவர்களின் குற்றமல்லவா? வியட்நாமில் எரியும் நெருப்பிலிருந்து அம்மணமாக ஒரு குழந்தையை அலறியடித்துக்கொண்டு ஓடிவரச்செய்தது தீவிரவாதிகளன்றோ? ஈராக்கைப் பிணக்காடாக்கியது, பங்காளாதேஷில் பல ஆயிரக்கணக்கான பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது, யாழ்ப்பாணத்தின் பிரம்படி ஒழுங்கையில் உயிரோடு மக்கள் மீது கவசவாகனங்களை ஏற்றி இரத்தமும் சதையும் தெறிக்கத் தெறிக்கக் கொன்றது, உகண்டாவில் மனிதக்கறி சாப்பிட்டதெல்லாம் யாரென்று நினைக்கிறீர்கள்? அனைத்து அரசாங்கங்களும் காவியுடை உடுத்திக்கொண்டு கொல்லாமை விரதத்துடன் இருப்பதை நீங்கள் அறியீர்களா? கறுப்பாடையும் கழுத்து மாலையுமாக ஐயப்ப பக்தர்களான அரசாங்கங்கள் சாலைகளில் நடந்துபோவதை நீங்கள் கண்டதில்லையா? பிள்ளைப் பூச்சிகளான, அஹிம்சாவாதிகளான தலைவர்களைப் பற்றி சீமானும் ஏனைய தலைவர்களும் இப்படி அபாண்டமாகப் பேசலாமா?

இறையாண்மை என்பது, பிணக்குவியலின் மேல் குந்தியிருந்தபடி சிக்கன் பிரியாணியும் 65வும் சாப்பிடுவது என்ற கருத்துப்பட நீங்கள் பேசியிருக்கக்கூடாது. சொந்தக்காரப் பிணங்களுக்கு மட்டும் ஒப்பாரி வைப்பது அதன் வரைவிலக்கணங்களுள் ஒன்றெனச் சுட்டிக்காட்டியிருக்கக் கூடாது. ‘ஹிண்டு அன் கோ’வினரின் தினப்படிச் சாப்பாட்டில் விழும் உப்பெனச் சாடியிருக்கக்கூடாது. காங்கிரஸ்காரர்களின் சொல்லாயுதமென சொல்லியிருக்கக்கூடாது. குற்றம் குற்றமே! (இங்கே ‘திருவிளையாடல்’நினைவுக்கு வரவேண்டும்.)

சட்டங்களும் சித்தாந்தங்களும் மக்களை மந்தைகளாக்கி மேய்க்கின்றன என்று நீங்கள் நினைப்பது தவறு.சீமான்! நீங்கள் சினிமாவைப் பற்றிப் பேசுங்கள். ‘தம்பி’எடுத்ததுபோல ‘தங்கச்சி’என்றொரு படம் எடுங்கள். பெரியாரைக் குறித்துப் பேசுங்கள். ‘இறையாண்மை எங்கே இருக்கிறது?’என்று கையை உயர்த்தி காற்றைத் துளாவி உதடு துடிக்கத் தேடாதீர்கள். அது பரம்பொருள். கறுப்புச் சட்டைக்காரர்களின் கைகளுக்கு அகப்படாதது. கண்ணுக்குப் புலப்படாதது.

அரசாங்கங்களுக்கு முகங்கள் இல்லை. கண்ணாடி பார்ப்பதுமில்லை. இல்லையெனில் பயங்கரவாதிகளென தங்களைத் தாங்களே தூக்கிலிடவேண்டியதாகிவிடும்.
இந்த ‘ஜனநாயகம்’என்ற செத்துப் புழுத்த வார்த்தையை என்ன செய்வதென்று தெரியவில்லை. பேச்சுரிமை, எழுத்துரிமை இதையெல்லாம் பொட்டலம் கட்டமுடிந்தால் கட்டி ஒவ்வொருநாளும் உரத்த குரலில் கூவியபடி வரும் குப்பை வண்டிக்காரனிடம் போட்டுவிடலாம்.

ஆக மொத்தத்தில் நம்மால் செய்யக்கூடியது ஒன்றுதான்… ‘மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்’ என்ற பிரயோகத்தை ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நகைச்சுவைத் துணுக்காக அறிவிக்கும்படி பரிந்துரைக்கவோ இரந்துகேட்கவோ செய்யலாம்.

மண்டையைக் குடையும் கொசுறுக் கேள்வி: அடுத்தவன் மனைவியை, தங்கையை, மகளை துடிக்கப் பதைக்க வன்கலவி செய்வதும் கொல்வதும் இறை ‘ஆண்மை’யின் கூறுகளில் ஒன்றா நண்பர்களே?

33 comments:

சாந்தி நேசக்கரம் said...

""""மண்டையைக் குடையும் கொசுறுக் கேள்வி: அடுத்தவன் மனைவியை, தங்கையை, மகளை துடிக்கப் பதைக்க வன்கலவி செய்வதும் கொல்வதும் இறை ‘ஆண்மை’யின் கூறுகளில் ஒன்றா நண்பர்களே?"""

அது எப்படி ஆகும். இறையாண்மையை காக்க எதையும் செய்யலாம். அதுவும் இறையாண்மைதான்.

தன் மகளை வன்புணர்வு செய்தாலென்ன பக்கத்து வீட்டு மகளை புணர்ந்து கொன்றாலென்ன இறையாண்மை காக்க எல்லாம் செய்யலாம் என்ற விதிதான் இந்த சனநாயக நாடுகளின் தீர்வு.

சாந்தி

Anonymous said...

உண்மையான தமிழர்கள் பதில் தரவும்.

காரூரன் said...

அருமை ஐயா அருமை. இழிவு சிறப்பு என்ற எழுத்து நடை இதுவோ!, தமிழகத்தின் தலைமை அமைச்சர் தலை நகர் சென்று தலைப்பாய் அணிந்த தலைவரை பார்த்து பாரத தேசத்தின் வெளி நாட்டு அமைச்சரை வீறாப்பாய் சென்று அயல் நாட்டில் போர் நிறுத்தம் செய்துவர சொல்ல, பாரத நாட்டின் ராணுவ அதிகாரி சென்று போரை எப்படி இன்னும் உக்கிரப் படுத்தலாம் என்று வன்னிவரை சென்று வந்தாராம். தமிழ் நாட்டுத் தலைவர்கள் "கோமாளிகள்" என்று சொன்ன உலகப் பெரிய கோமாளியுடன் கைகுலுக்கி விருந்துண்டு வந்தாராம்.

பக்கத்தில் பார்த்து அவர் நிற்கிறாரா என்றால், " நிற்கிறாப் போல" என்று எதையும் நிச்சயப்படுத்திச் சொல்லமுடியாத எங்களால் எதை அடித்துச் சொல்லமுடியும்.

சிக்கிமுக்கி said...

///‘மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்’ என்ற பிரயோகத்தை ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நகைச்சுவைத் துணுக்காக அறிவிக்கும்படி பரிந்துரைக்கவோ இரந்துகேட்கவோ செய்யலாம்.///

- அதற்காகவாவது எழுச்சியுடன் போராடலாம்!

தமிழன்-கறுப்பி... said...

என்ன இறையாண்மையா...


அதுவும் எங்களிடமா

எங்கே இருந்து வந்தது உங்களுக்கு இவ்வளவு தைரியம்...!!!?

(கொதிக்கிற நெஞ்சம் புலம்பத்தான் செய்யும்...)

King... said...

வேண்டாம் தமிழ் நதி அக்கா இறையாண்மை என்கிற இல்லாததையும் ஜனநாயகம் என்கிற அர்தமில்லாத வார்த்தையை பற்றியும் இனியும் நாமெதற்கு பேச வேண்டும்...

selventhiran said...

உண்மைக் கோபத்திற்கென்று ஒரு நெருப்பு இருக்கிறது. அது வாசகனின் இதயத்திற்கும் நெருப்பைக் கடத்தும். கடத்தியது.

தேவன் said...

பொய்யை சுடும் வார்த்தைகள் சரம்போல் தொடுத்தது தனிஅழகு நண்பரே வாழ்த்துக்கள் உங்கள் மொழிஆழுமைக்கு!

Unknown said...

//
‘இவர் தன் வேலையைப் பார்க்காமல் பிரபாகரன், வெங்காயம் பற்றியெல்லாம் ஏன் பேசுகிறார்’என்றார் இன்னொருவர். உண்மைதானே… காலையில் எழுந்து காப்பி குடித்து கக்கூசுக்குப் போய் அதன்பிறகு வேலைக்குப் போய் களைத்துத் திரும்பி தொலைக்காட்சியில் ‘குலுக்கல்’களைப் பார்த்து மனைவியையோ காதலியையோ கூடிவிட்டுத் தூங்காமல், ‘ஐயோ.. அண்டை நாட்டில் சகோதரனைச் சாகடிக்கிறார்களே… கேட்பாரிலையா…?’என்று கைகளை உயர்த்திக் கேட்பது மன்னிக்க முடியாத குற்றந்தான்! பெரியவர்கள், விடயமறிந்தவர்கள் அவரைத் தயைகூர்ந்து மன்னித்துவிடுங்கள்.
//
நான் சொல்ல நினச்சிருந்தத பல மடங்கு சூப்பரா சொல்லிட்டீங்க. நிம்மதீயா தூங்க போறேன்

அற்புதன் said...

நதி,

தமிழ் நாட்டில் ஒரு பிரபாகரன் பிறக்காமால் தமிழருக்கு அங்கு விமோசனம் இல்லை.இந்தியா எமக்கு இழைத்துக் கொண்டிருக்கும் அநீதியையும்,வன்சகத்தையும் அதனைப் பாதுகாத்து,தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றி வரும் தமிழ் நாட்டு அரசியற் தலைவர்களையும் பற்றி நாம் தலமுறை தலமுறையாகக் கூறுவோம்.எமது வரலாறு இவர்களை என்றும் மன்னிக்காது.தலைமுறை தலமுறையாக வரலாற்று இழுக்கை காவிச் செல்லப் போகிறவர்கள் இவர்களே.

sukan said...

நியாயத்தின் எதிர்ப்பக்கத்தில் நின்று நியாயத்தை உணர்த்துவது சில நேரங்களில் அவசியமாகினன்றது. அதற்கு சாமர்த்தியம் வேண்டும். உங்களுக்கு அது இருக்கின்றது.

தமிழ்நதி said...

சாந்தி,

செவ்வியொன்றில் 'இறையாண்மை'பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு பாடலாசிரியர் தாமரை அளித்திருக்கும் பதிலைப் பாருங்கள்.

'' 'ஈழ விவகாரத்தில் இறையாண்மைக்கு உட்பட்டுதான் தீர்வு காணமுடியும்' எனத்
தமிழகத்தைச் சேர்ந்த சிலரே வாதமிடுகிறார்களே?''*

''இறையாண்மையைக் காரணம் காட்டி ஈழப் பிரச்னையை வேடிக்கை பார்ப்பவர்கள்- தமிழின
துரோகிகள், மன்னிக்க முடியாத அயோக்கியர்கள்! நமது அனுமதி இல்லாமல் கச்சத்தீவை
மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததே... மின் தட்டுப்பாட்டால்
தமிழகமே வெந்து புழுங்கும் வேளையிலும், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு
போகும் மின்சாரம் மட்டும் எந்த பாதிப்புமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறதே...
இது மட்டுமல்லாமல் தண்ணீர் பிரச்னைகளில் கர்நாடகா, கேரள மாநிலங்கள் உச்ச
நீதிமன்றத்தையே மதிக்காமல் தமிழகத்தின் உரிமைகளைக் காலில் போட்டு நசுக்கிக்
கொண்டிருக்கின்றனவே... அப்போதெல்லாம் எங்கே போனது இந்த இறையாண்மை? அப்பாவி
மீனவன் குண்டடிபட்டுச் சாவதைத் தடுக்க முடியாத நாம், இறையாண்மை பற்றிப் பேசுவது
சகிக்க முடியாத கேவலம்! இந்தியாவின் இறையாண்மையைக் காக்கும் பொறுப்பு
தமிழகத்துக்கு மட்டும்தானா? மற்ற மாநிலங் களுக்குக் கிடையாதா? ஈழப் பிரச்னையில்
மட்டும் இறையாண்மையின் பெயரைச் சொல்லி தமிழகத்தின் வாயை அடைப்பது எந்த
விதத்தில் நியாயம்''

உண்மையின் குரல் சுடத்தான் செய்யும் சாந்தி.
----
"உண்மையான தமிழர்கள் பதில் தரவும்."

அனானி நண்பரே, உண்மையான தமிழர்களுக்குப் பதில் தெரியும். பொய்மையாளருக்கும் அவ்விதமே. ஆனால் பேசமாட்டார்கள்.

-----
காரூரன்,

நான் ஐயா அல்ல அம்மணி:) வியப்பின் மிகுதியால் அவ்விதம் விளித்தீர்களோ அறியேன். ஆமாம். அரசியல் நாடகங்களின் பார்வையாளர்களாக இருந்துகொண்டேயிருக்கிறோம்... கிறோம்...கிறோம்.. 'அரசியல் கோமாளிகள்'என்று விளிக்குமளவுக்கு தலை கனத்திருக்கிறது என்று அர்த்தம். கனக்க வைத்தவர்களையே 'கடித்து'வைத்திருப்பதிலிருந்து அது தெளிவாகிறது.

----
சிக்கிமுக்கி (பற்றவைப்பதுதான் வேலையா:))

///‘மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்’ என்ற பிரயோகத்தை ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நகைச்சுவைத் துணுக்காக அறிவிக்கும்படி பரிந்துரைக்கவோ இரந்துகேட்கவோ செய்யலாம்.///

- அதற்காகவாவது எழுச்சியுடன் போராடலாம்!

போராடலாமே... அதற்கென்ன? நிறையப் பார்த்தாயிற்று.

-----------

தமிழன்-கறுப்பி,

"கொதிக்கிற நெஞ்சம் புலம்பத்தான் செய்யும்"

இங்கே மட்டுமென்ன.. வயிறெரிந்து கையாலாகாத்தனத்தால் எழுதிய பதிவுதான் அது.

--------

கிங்,

பேசவேண்டாமென்றுதான் தோன்றுகிறது. மெளனமாக இருந்துவிடலாந்தான். கோபத்தை அடக்கிவைத்தால் நோயில்போய் முடியுமாம். நோயாளியாக இருப்பதைவிட கோபக்காரியாகத் தெரிவது பரவாயில்லை அல்லவா?

---------

"உண்மைக் கோபத்திற்கென்று ஒரு நெருப்பு இருக்கிறது. அது வாசகனின் இதயத்திற்கும் நெருப்பைக் கடத்தும். கடத்தியது."

நன்றி செல்வேந்திரன். நெருப்பைக் கடத்திக் கடத்தியே களைத்துப்போனோம். பற்றியெரிந்தால் பலனுண்டு. ஆனால், பக்கென்று அணைந்துவிடுகிறதே... என்ன செய்ய?

--------

தேவன்,

'மொழியாளுமை'என்று ஒன்றுமில்லை. இழிவுபடுத்தப்படும் எல்லோருக்குள்ளும் எழக்கூடிய எரிச்சல்தான். எழுதி நம்மை நாமே தணித்துக்கொள்வதுதான். வேறொன்றுமில்லை.

-------
"நான் சொல்ல நினச்சிருந்தத பல மடங்கு சூப்பரா சொல்லிட்டீங்க. நிம்மதீயா தூங்க போறேன்"

தூங்குங்க சேவியர். ஆனா, எப்போது எழுந்திருப்பீர்கள்:)

----

"தமிழ் நாட்டில் ஒரு பிரபாகரன் பிறக்காமால் தமிழருக்கு அங்கு விமோசனம் இல்லை."

அற்புதன், என்ன சொல்ல... மேற்சொன்ன வார்த்தைகளை வேறும் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட வார்த்தைகள்தான். முதலில் நமக்கு விமோசனம் கிடைக்கட்டும். நம்மை நாமே தூக்கிப் பிடிப்பது போலிருக்கிறது. நம்மை நாமே முதுகில் தட்டி 'எங்களைப் போல் உண்டா?'என்பதாகத் தோன்றுகிறது. இங்கே ஒரு உண்மையான தலைவனின் பிறப்பு அவசியமென காலத்திற்குத் தோன்றினால் எங்கோ இந்நேரம் பிறந்துதானிருப்பார்.

அரசியல் தலைவர்களின் வஞ்சகங்கள்... அதுதான் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறதே..

----
"நியாயத்தின் எதிர்ப்பக்கத்தில் நின்று நியாயத்தை உணர்த்துவது சில நேரங்களில் அவசியமாகினன்றது. அதற்கு சாமர்த்தியம் வேண்டும். உங்களுக்கு அது இருக்கின்றது."

நர்மதா சிவா,

இழிவுச் சிறப்பு என்று அதைத்தான் காரூரன் சொல்லியிருக்கிறார். என்ன சாமர்த்தியமோ.. ஈற்றில் ஒன்றுமில்லை. வெறுமையே எஞ்சுகிறது.

Anonymous said...

தமிழர்களுக்கு எதிரான இனபடுகொலைகளின் உச்சத்தில் வீற்றிருக்கும் சிங்கள இராணுவ நடவடிக்கைகளைக் கண்டு உள்ளம் பூரித்து போன ‘இந்தி்’ய அரசு ஐ.நா மன்றத்தில்,மனித உரிமை வாக்கெடுப்பில்.. இலங்கையில் ஒரு சாவும் விழவில்லை..என சிங்கள தூதுவரை கட்டிபிடித்து இந்திய தூதுவர் முத்தம் கொடுத்து கொண்டது ஏன்? இந்தி அரசின் அதிகார பீடங்களில் அமர்ந்து ஆட்சி செய்பவர்கள் தமிழர்களின் இன எதிரிகளே!.பாக்கு நீரிணையின் அந்த பக்கம் இருந்தால் என்ன? இந்த பக்கம் இருந்தால் என்ன? தமிழினமே எதிரி என்று இந்தி அரசு செயல்படுகிறது!!

வட்டியில்லாமல் இலங்கை இராணுவத்திற்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் உதவியளிக்கிறதே! விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்கிற சாக்கில் தமிழ் மக்களைப் பூண்டோடு அழிக்க எண்ணுகிறது இலங்கை. அந்த நாட்டிற்கு ‘இராடார்’ கருவி, கருவிப்பயிற்சி, ‘தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்பிவைப்பது என உதவிகளை இந்தியா வாரி வழங்குவது ஏன்? தமிழர்கள் இந்திய அரசின் எதிரிகளாவர்! எவன் ஒருவன் தன்மீது திருப்பி தாக்க மாட்டான் என தெரிந்து கொண்டே அவன் மீது தாக்குதல் நடத்துவதுதான் உலகின் மிகபெரிய வன்முறையாகும்.. இது திருப்பிதாக்க தெரியாத 5 வயது பாலகனை மிதிப்பது போன்றதாகும் உலகத்தில் எந்த நாட்டு அரசினாலும் தட்டி கேட்க இயலாத நாதியற்ற தமிழினத்தின் மீது திட்டமிட்டு தனது கொடுரங்களை
தொடர்கிறது

உகாண்டா நாட்டில் சர்க்கரை ஆலை ஒன்றை கட்டுவதற்கு குசராத்தை சார்ந்தவர்கள் முயன்ற போது, சொந்த நாட்டின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதைக் கண்டு பொங்கியெழுந்த உகாண்டா மக்கள் ஒரு குசராத் சேட்டை கொன்றனர். என்ன நடந்தது? பா.ச.க அத்வானி ஓடிச் சென்று நேரடியாக வெளியுறவு அமைச்சகத்துக்கே சென்று இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று விசாரித்ததோடு மட்டுமல்லாமல் உகாண்டாவின் இந்தியத் தூதரகத்தையும் தொடர்பு கொண்டு பேசினார். தமிழக மீனவர்கள் இங்கு சிங்கள் வெறியநாய்களின் வேட்டைக்கு ஆளாகி செத்துக் கொண்டிருக்கும் ”தமிழின”த் தலைவர் என்ன செய்து கொண்டிருந்தார்?



புது டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு அவர்கள் போடும் பணம்,பதவிக்கு பல்லக்குத் தூக்கி தமிழினத்தை M.P சீட்டுகளாக விற்று பிழைப்பு நடத்தக்கூடிய திராவிட, தேசிய கட்சிகளின் போலி முகங்களை தமிழக மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.உலகச்சாதனை எனக்கூறக்கூடிய அளவில் அறுபது ஐரத்திற்கு (கிலோமீட்டர்) மனிதச்சங்கிலி, அனைத்துக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோள்கள், சட்டமன்றத்தில் தீர்மானம், திரைத்துறைப் போராட்டம், வணிகர் போராட்டம், உண்ணாநிலை என காந்திய வழியில் அனைத்துப் போராட்டங்களையும் நடத்தியிருக்கிறோம். அதன்பின்னும் இலங்கை அதிபர் ‘போரைத் தொடர்வோம்’ என மன்மோகன்சிங்கைச் சந்தித்தபிறகு புதுதில்லியிலேயே அறிவிக்கிறார்.

”நீங்க திட்டுங்க.. அறிக்கை விடுங்க.. எங்கையாவது போய் போராட்டம் கூட பண்ணுங்க.. நாங்க ஆயுதம் கொடுத்துண்டு தான் இருப்போம்” என்று செயல்படும் மத்திய அரசிடம் தமிழக ஓட்டு அரசியல் கட்சிகள் பதவி அரசியல் செய்து ஈழத்தமிழர்களை ஒழிக்க நினைக்கும் சிங்கள அரசுக்கு மறைமுகமாக துணை போகின்றன. அங்கு சிந்தப்படுவது தமிழனின் குருதி என்பதை இவர்கள் என்று உணரப்போகிறார்களோ தெரியவில்லை. இங்கிருக்கும் தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்தை தடுக்க யோக்கியதை இல்லாத மத்திய கப்பற்படையும் தமிழக அரசும் வாய்ச்சவடால் பேசியே காலம் ஓட்டுவதை புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிடும் என எண்ணிக்கொண்டிருக்கும் தமிழக அரசியல் டீலர்கள் அந்த கடிதத்தால் என்ன நடந்தது என்று எண்ணிப் பார்த்ததுண்டா? அதை இந்திகாரன் ஆகா வந்துடுச்சுடா பேப்பர் என்று மிளகாய் பஜ்ஜியை வைத்து சாப்பிட்டு தூக்கி கடாசியிறுப்பான்!

இவ்வளவு நடந்த பின்னரும் இளிச்சவாய் தமிழர்களான நாம் ஓட்டுப்போட்டு புதுடில்லி ஏகாதிபதியத்திற்கு விசுவாசத்தை காட்டி வெற்றி பெற வைக்கப்போவது உறுதி!.நமக்கு என்ன பிரச்சனை நாம அடுத்த நாள் சோறு பொங்கனும் சீரியல் பாக்கணும்.. அடுத்து அசினு,நயந்தாரா என்று கனவு காணணும்.. மக்களுக்கு இல்லாத ரோசம் தலைவர்களுக்கு மட்டும் வந்துவிடுமா என்ன? காலம் பதில் சொல்லும் என நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியது தான்…. தமிழக ஓட்டு அரசியல் கட்சிகள் தாம் தமிழினத்தின் சாபமும் சோகமும்.. மக்கள் இதனை புரிந்து கொள்ளாதவரை தமிழனை கடலில் மட்டுமல்ல நம் வீட்டுகே வந்து கூட சுட்டுவிட்டு போவான் சிங்களன்.. தமிழா இன உணர்வு கொள்! அது தெரியவில்லையென்றால் ஒரு சீக்கிய இனத்தை பார்த்து மாராத்தியனை பார்த்து
இவ்வளவு ஏன் உன்னை வருடம் முழுவதும் ஏதாவது காரணம் சொல்லி அடிக்கும் கன்னடனை பார்த்து கற்று கொள்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

உண்மைக் கோபத்திற்கென்று ஒரு நெருப்பு இருக்கிறது. அது வாசகனின் இதயத்திற்கும் நெருப்பைக் கடத்தும். கடத்தியது.

ஆம், நெருப்பு பற்றிக்கொண்டது எனக்கும், இருந்தும் என் செய்ய, அதிகபட்சமாய் ஒரு கவிதையும், சில ப்ரார்த்தனைகளையும் தவிர.

காலையில் எழுந்து காப்பி குடித்து கக்கூசுக்குப் போய் அதன்பிறகு வேலைக்குப் போய் களைத்துத் திரும்பி தொலைக்காட்சியில் ‘குலுக்கல்’களைப் பார்த்து மனைவியையோ காதலியையோ கூடிவிட்டுத் தூங்காமல், ‘ஐயோ.. அண்டை நாட்டில் சகோதரனைச் சாகடிக்கிறார்களே… கேட்பாரிலையா…?’என்று கைகளை உயர்த்திக் கேட்பது மன்னிக்க முடியாத குற்றந்தான்! பெரியவர்கள், விடயமறிந்தவர்கள் அவரைத் தயைகூர்ந்து மன்னித்துவிடுங்கள்
ஆம், மன்னித்துவிடுங்கள், அவர்கள் பெரிய மனிதர்கள், அதைவிடுத்து அரசாங்கத்துக்கு அறைகூவல் விடுகிறானே அவன் சராசரி மனிதன்.
என்னய்யா இறையாண்மை
நியாயம் கேட்பவன் கைதாகிறான்.
அநியாயம் செய்பவன் வெளியே இருக்கிறான்.

மண்டையைக் குடையும் கொசுறுக் கேள்வி: அடுத்தவன் மனைவியை, தங்கையை, மகளை துடிக்கப் பதைக்க வன்கலவி செய்வதும் கொல்வதும் இறை ‘ஆண்மை’யின் கூறுகளில் ஒன்றா நண்பர்களே?
சாட்டையடி//

Anonymous said...

I don't think the history is going to be kind on tamil nadu leaders.
I am surprised apart from nedumaran,vaikko,thirumavalavan and few others nobody has said avything about seeman's arrest.
In a democratic country seeman was arrested for expressing an opinion and he was immediately arrested to satisfy congress Thangavelu,Thinamalar daily and few others.
the media ,the tamil intellectuals, the human right activists, the journalists and the politicians all are very quiet.
nobody seems to be courageous enough to condemn this arrest.
I call it 'the conspiracy of silence'.
seeman should be applauded for having the courage and the conviction to raise the issue.I
am sorry to say in the history book india will be depicted as the regional power which assisted the genocidal oppression of the sinhala state.
Mk karunanithy and other tamil nadu politicians will be depicted as selfish,coward politicians who let their own race being slaughtered in front of their own eyes.

தமிழ்நதி said...

தமிழ்த்தேசியன்,

உங்கள் தார்மீக கோபம் புரிகிறது. வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன். எல்லா பொய்மைகளையும் பார்த்துக்கொண்டு கையாலாகாமல் இருப்பது நம் விதியாயிற்று. 'எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?'என்றொரு பாட்டு இருக்கிறது. 'எத்தனை காலமும் ஏமாற்றலாம் இந்த நாட்டிலே"என்று மாற்றிப் பாடவேண்டியதுதான்.

-------
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா,

"என்னய்யா இறையாண்மை
நியாயம் கேட்பவன் கைதாகிறான்.
அநியாயம் செய்பவன் வெளியே இருக்கிறான்."

இன்றைய சூழல் அப்படித்தானிருக்கிறது. தண்டனை விதிப்பவர்கள் தங்கள் முகங்களை கண்ணாடியில் ஒரு தடவை பார்த்துக்கொண்டால் நன்று.

----------

குமரன்,

"the media ,the tamil intellectuals, the human right activists, the journalists and the politicians all are very quiet.
nobody seems to be courageous enough to condemn this arrest."

சீமானின் கைதைப் பற்றி பெரிதாக யாரும் கருத்தோ கண்டனமோ தெரிவிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. காவல் பயம் வாய்ப்பூட்டுப் போட்டிருக்கிறது. அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டப் போய் நம்மையும் அள்ளிக்கொண்டு போய்விட்டால் என்ன என்ற அச்சந்தான் காரணம்.

அரசியல் தலைவர்கள்...! அவர்களின் கயமைகள்...! ம் பேசிச் சலித்த விடயந்தான். வரலாறு இந்நேரம் குறிப்பெடுத்துக்கொண்டிருக்கும் குமரன். அது எழுதிவைக்கும் இரக்கமற்ற மனிதர்களைப் பற்றி. எத்தனை பாடைகள் போனாலும் நாற்காலிகளோ அசைவதாக இல்லை.

பாண்டியன்,

சில தற்காப்புக் காரணங்களால் உங்கள் பின்னூட்டத்தைப் பிரசுரிக்க இயலவில்லை. முன்ஜாமீன் மாதிரி:) 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை'என்றாகிவிடக்கூடாதல்லவா? முடிந்தவரை தவிர்க்கலாம். முடியாதெனில் 'மயிரே போச்சு'.

Anonymous said...

""""மண்டையைக் குடையும் கொசுறுக் கேள்வி: அடுத்தவன் மனைவியை, தங்கையை, மகளை துடிக்கப் பதைக்க வன்கலவி செய்வதும் கொல்வதும் இறை ‘ஆண்மை’யின் கூறுகளில் ஒன்றா நண்பர்களே?"""

அது ஒருவேளை இந்திய‌ ஆண்மையாக‌ இருக்க‌லாம்!!!?

Athi said...

I condemn Srilanka's brutal act against tamilians. But, at the same time, I dont get the point, you ppl are speaking abt LTTE, like LTTE is the sole-savior of Tamalians. May be or may be not. That may be debatable.

But, do u think, LTTE's act is acceptable. ie: throwing bombs on innocent civilians? In the recent times only, it has got reduced. Else, they too blasted the bombs amidst innocent crowds, to assassinate any leader.

If u cant justify Srilanka's bombings on Civilian Tamils, then u cant justify this LTTE's bombings on Civilian Lankas too.

Anonymous said...

இறை ஆண்மையை பற்றி இப்படி கேலி செய்யக் கூடாது அண்ணா!. ;-)

இங்கு ஒன்றும் சொல்வதற்க்கு அல்ல எழுத்து நன்றாக இருந்தது. நீதி என்பது சற்றுத் தாமதித்தாலும் கிடைத்தே தீரும். தமிழீழம் ஒவ்வொரு ஈழத்தமிழனுடைய கனவு உயிர்மூச்சு வெகுவிரைவில் வழிபிறக்கும்

Senthil said...

shameless congress guys.thiruttu pasanga ivanunga..

sathiri said...

இறைமையும் இல்லை ஆண்மையும் இல்லை இதுக்குள்ளை எப்படி இரண்டும் கலந்து இறையபண்மை பிறக்கும்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

தார்மீகக்கோபங்களுக்கு கூட வாய்பூட்டுக்களையே பரிசாகத்தரும் இந்த அரசியல் கூத்துக்களில் இறையாண்மை என்ற சொல்லுக்கு எங்கே இருக்கிறது உண்மை அர்த்தம். வெறும் வாய்ச்சொல்லில் இதையும் கூட அரசியலாக்க வல்லோர் ஒருவேளை வந்து சொல்லலாம் இறையாண்மைக்கான உண்மை அர்த்தத்தை.. அதுவரை எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பது போல இதையும்.....

ராஜா சந்திரசேகர் said...

வீரியமான பதிவு.விளங்கிக்கொண்டால் நல்லது...

தமிழ்நதி said...

அனானி நண்பரே,

தயவுசெய்து உங்கள் வலைப்பூ வழியாக வந்து பின்னூட்டமிட்டால் மகிழ்வேன். இறையாண்மை என்ற ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு சிலபேர் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் தாங்கமுடியவில்லை. இடம் பொருள் பார்க்காமல் அச்சொல்லைப் பிரயோகிப்பதே கோபம்... தவிர, கோபம் ஒட்டுமொத்த இந்தியர்கள் மீதல்ல.

ஆதி,

பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் (உலகத்தமிழர்களும்)விடுதலைப்புலிகள்தான் எங்களது கடைசி நம்பிக்கை என்பதில் உறுதியாக இருக்கிறோம். (ஆம்.. நீங்கள் சொன்னபடி அது விவாதத்திற்குட்படுத்தத்தக்கதே.)அவர்கள் ஒரு சரியான தீர்வின் முன் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டால் தமிழர்களின் கதி என்னாகும் என்பதை உங்களால் கண்கொண்டு காணவியலாது. அத்தனை இழிநிலைக்கு நாங்கள் ஆளாவோம். ஆக, இப்போது எங்களைக் காப்பாற்றிக்கொண்டிருப்பது யார்?

நாங்கள் (பொதுமக்கள்) விடுதலைப்புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று என்றைக்குமே சொன்னதில்லை. தேசபிதா என்று சொல்லப்படுகிற மகாத்மாவின் மீது கூட விமர்சனங்கள் உண்டு. பொதுமக்கள் கூடுமிடங்களில் குண்டு போடுவதே வேலையாக வி.புலிகள் முன்னர் இருந்ததுபோல சித்தரிக்க முயன்றிருக்கிறீர்கள். 'வலியைக் கொடுத்தவனுக்குத் திருப்பிக்கொடு' என்பதன் அடிப்படையில் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம். தற்காப்பிற்கும் வலிந்த தாக்குதலுக்கும் வித்தியாசங்கள் உண்டு. அங்கு நடப்பது தங்கள் மக்களையும் பூர்வீக மண்ணையும் காப்பதற்கான யுத்தம்தானேயன்றி இன்னொருவனுடைய எல்லைகளைக் கையகப்படுத்தும் யுத்தமல்ல.

இலங்கை இராணுவத்தினர் அப்பாவி ஜனங்கள் மீது குண்டு போட்டுக் கொல்வதையும் விடுதலைப் புலிகள் செய்வதையும் ஒப்பீடு செய்கிறீர்கள். தயவுசெய்து வரலாற்றைப் படித்துப் பாருங்கள். நிறையக் கேள்விகளுக்கு அதில் விடை கிடைக்கலாம்.

-------
மண்ணின் மைந்தன்,

"இறை ஆண்மையை பற்றி இப்படி கேலி செய்யக் கூடாது அண்ணா!. ;-)"

உங்கள் நகைப்புக்குறிக்குப் பக்கத்தில் இன்னும் இரண்டு கூடச் சேர்த்திருக்கலாம். ஏனென்றால் உங்கள் பின்னூட்டத்தைப் படித்துவிட்டு நான் சிரித்தேன் கசப்போடு. அரசியல் பதிவு என்றால் அதை ஆண்தான் எழுதியிருக்க வேண்டும் என்ற பொதுப்புத்தி இருக்கிறதே... அதை நினைத்துச் சிரிப்பு வந்தது. சமூகம் தம்பீ சமூகம்! மாற்றத்தையன்றி யாவும் மாறும் என்கிறார்கள். இது மாறவே மாறாதோ...

---
சென்!
அப்படியா சொல்றீங்க....:)நீங்கள் சொன்னால் சரியாகத்தானிருக்கும்.

சில நாட்களுக்கு முன் ஒரு கவிதை வாசிப்பில் கலந்துகொண்டேன். அதில் சேலத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்ற கவிஞர் கவிதையொன்றை வாசித்தார்.

'ஒற்றைப் பிணத்தை வைத்து பதினெட்டாண்டுகளாக அழுதுகொண்டிருக்கிறார்கள்'என்பதே அதன் சாரம்.

கவிதை இப்படி முடிந்திருக்கும்:
"ஒரு பிணத்துக்காகத் தோண்டிய குழியில் ஒரு தேசத்தையே புதைக்கப் பார்க்கிறார்கள்"

'நச்'சென்று இருக்கிறதல்லவா?

----

சாத்திரி,

இறைமை என்பது கருணை எனில் அது இல்லைத்தான். என்ன செய்வது?

---
ஆம் கிருத்திகா,

இது வேடிக்கை பார்க்கும் காலமாகத்தான் ஆயிற்று. நீங்கள் சொன்னதுபோல வாய்ப்பூட்டு பலமாகப் போடப்பட்டிருக்கிறது. நியாயத்தைப் பேசக்கூடாது என்பதுதான் 'நியாயத்தின்'பொருளாக இருக்கிறது.

----

ராஜா சந்திரசேகர்,

"வீரியமான பதிவு.விளங்கிக்கொண்டால் நல்லது..." என்றிருந்தீர்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் பங்காற்றிய in the name of buddha பார்க்க ஆவலாக இருக்கிறேன். காட்சி ஊடகத்திற்கும் கட்டுப்பாடுகள் இருப்பதாக அறிகிறோம்.

Anonymous said...

தங்களது கொதிக்கும் இந்தப் பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில் பதிவுகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

selventhiran said...

பேசவேண்டாமென்றுதான் தோன்றுகிறது. மெளனமாக இருந்துவிடலாந்தான். கோபத்தை அடக்கிவைத்தால் நோயில்போய் முடியுமாம். நோயாளியாக இருப்பதைவிட கோபக்காரியாகத் தெரிவது பரவாயில்லை அல்லவா? //

சமூக அவலங்களின் போது வாளாவிருக்கும் எழுத்தாளன் எருமைக்குச் சமம். எழுத்தாளனுக்கு ரோஷமற்றுப் போனால் மொத்த சமூகமும் மானங்கெட்டுப் போய்விட்டது என்று பொருள். ரெளத்ரம் பழகச்சொன்னான் எங்கள் பாரதி. இப்பதிவு ஓர் தமிழ்நதியின் பிரவாகம்.

Anonymous said...

அண்ணன் பிரபாகரன் இன்னும் 'இந்தியா' பொந்தியா தந்தையர் தேசம் தாயார் தேசம் ..என பொறுமை காப்பதைவிட்டு தைரியமாக சீனா.. பாகிச்தான் ஆகிய நாடுகாளோடு நட்புறவு பேணவேண்டும்.. ஏனெனில் வளைகுடா நாடுகளின் மொத்த ஆதரவும்.. கம்னுச நாடுகளின் மொத்தநாடுகளின் ஆதரவும் கிடைக்கும்..பாப்ர்பணிய ஏகாதிபதிபத்தியத்தின் 'இந்தி'ய ஆதரவு கிடைப்பதைவிட அந்த நாடுகளின் ஆதரவு மேலானது.. தமிழர்களுக்கு எதிரி என வந்து விட்டால் அது சிங்களனாக இருந்தாலென்ன?இந்திக்காரனாக இருந்தாலென்ன? எல்லாம் ஒன்றுதான்.. தமிழுணர்வாளர்கள் கைது செய்யபடுவது ஈழ தமிழர்களைவிட இந்த தமிழக தமிழன் கேவலமாக உள்ளான்..சொல்லபோனால் ஈழதமிழனால்தான் மொத்த தமிழனத்திற்கே பெருமை!அவனே புறநானூற்று வீரன்! ஆனால் இங்கே அகி'இம்சை' சன 'நாய்'அகம் என்ற பெயரால் தமிழன் தனது வீரத்தினையும் பெருமையையும் இழந்து பல நாட்கள் ஆகிறது!

Anonymous said...

எனக்கு தெரிந்து அன்னிய ஆக்ரமிப்புக்கு எதிராக கையில் வாளேந்தி 1800 களில் போராடிய வீரபாண்டிய கட்டபெம்மன்,புலிதேவன் ஆகியவர்களோடு தமிழர்களின் வீரம் குழிதோண்டி புதைக்கபட்டு விட்டது..இன்றோ நமீதாவின் முன்னழகிற்கும் நயன் தாராவின் பின்னழகிற்கும் தமிழன் வேறு எதையோ கையில் ஏந்தி நிற்கிறான்

காரூரன் said...

உணர்வின் விளிம்பில் அம்மணி உங்களை "ஐயா" என்று அழைத்தேன். இது இழுவு சிறப்பல்ல‌, மன்னிக்கவும்.

vignathkumar said...

first of all tamilnadi madem who is seeman.
what he did in kusbhoo,shugashani issue.
now anbu mani ramadas is speaking about homo sex supptively which is not only oppose to culture but oppose to consititution and laws.
where is seemans cultural police mouth ?
only the right to speak is applicable for seeman. not for any other women colic humanbeings.
first of all idont obay seeman.
what is his quality he wears jeans ,tshirts etc and speak tamil culture to others. am saying to my sitses and girl friends that jesns t shirts is not registered for seeman ,rajani kanths daughtes alon.
tamil womens are not slave for them.
he said supportive points oppose to write to speak in kusbhoos issue.
first of all seeman should write apoligy to tamil womens and kusbhoo.
even me too oppose {singalavan aragant} in tamil people but i dont support seeman.

தமிழ்நதி said...

அன்பு நண்பர்களுக்கு,

இப்போதெல்லாம் வீட்டில் அதிகம் தங்காமல் 'பொறுக்க'வென்று வெளியில் சென்றுவிடுவதால் உங்கள் பின்னூட்டங்களுக்கு உடனுக்குடன் பதிலளிப்பதில்லை. நேரம் வந்து பதில் எழுத அமர்ந்தாலோ இணையத்தொடர்பு என்னோடு சண்டித்தனம் செய்கிறது.

நன்றி தமிழ்க்குறிஞ்சி. மேலதிகமாக இன்னும் நான்குபேர் வாசிக்கிறார்களென்றால் எனக்கு அதில் மகிழ்ச்சிதானே... தவிர, இந்தப் பிரச்சனை பல தளங்களிலும் பேசப்படுவது நன்றல்லவா?

---

நன்றி செல்வேந்திரன்,

"எழுத்தாளனுக்கு ரோஷமற்றுப் போனால் மொத்த சமூகமும் மானங்கெட்டுப் போய்விட்டது என்று பொருள்."

அதே!அதே!:)

----

அன்புள்ள தமிழன்,

'இந்தியா பொந்தியா என்று நம்பாதீர்கள்' என்று எழுதியிருந்தீர்கள். ஆனால் நண்பரே, பாகிஸ்தானிடமோ சீனாவிடமோ நாங்கள் போகமுடியாதபடி(போனாலும் ஏதோ தூக்கித் தந்துவிடுவார்கள் என்று இல்லைத்தான்) எங்களைத் தடுத்துநிற்பது எதுவென்று நினைக்கிறீர்கள். எமது மொழி, எமது இனம், காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆழ்மனத் தொடர்பு இவற்றைக் கடந்து எப்படிப் போக இயலும்? இப்போதே இந்தியா எங்களுக்கு ஆதரவாக (பொய்யாகவேனும்) ஒரு வார்த்தை சொன்னால் எப்படிப் பொங்கிப் பிரவகிக்கிறது மனம். இதையே பாகிஸ்தான்காரன் சொன்னால் இப்படி இருக்குமா? யதார்த்தத்தைத் தாண்டிய ஒரு உணர்வு இருக்கிறது. அது அடித்தாலும் இந்தியாவைத்தான் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.
தவறும் தன்மானமற்ற செயலும் எனத் தெரிந்தாலும்கூட.

---

காரூரன்,

நானும் தவறென்று சொல்லவில்லை. தெரிந்தே நகையாடினேன்:)

---
விக்னாத்,

முதலில் உங்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். குட்டி ரேவதியின் நேர்காணல் உட்பட பல இடங்களில் பின்னூட்டம் இட்டிருந்தீர்கள். மேற்சொன்ன காரணந்தான். வீட்டில் அதிகம் தங்குவதில்லை. தங்க நேரும்போதோ இணையத் தொடர்பு கழுத்தறுத்துவிடுகிறது. அதனால் உங்களுக்குப் பதிலளிக்கத் தாமதம்.

தனிப்பட்ட மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துண்டு. சீமான் விடயத்தில் அவர் ஒரு தமிழ் உணர்வாளர், ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பான கேள்விகளை அதிகாரத்தின்முன் வைக்கப் பலரும் தயங்கும் ஒரு சூழலில் உரத்த குரலில் நியாயத்தைப் பேசிவருபவர் என்ற வகையில் அவர்மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது; இருக்கும். குஷ்பூ விவகாரத்தில் அவர் என்ன பேசினார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், குஷ்பூ பேசியதில் முற்றிலும் உண்மையில்லை என்று ஒதுக்கிவிடமுடியாது என்பதே என் கருத்து. விளக்குமாற்றைத் தூக்கினாலும் நான் அதையே சொல்லுவேன். கற்பு, கலாச்சாரம் பற்றி அதிகம் பேசுகிற அளவுக்கு அவையெல்லாம் நடைமுறையில் இல்லை என்பதுதான் என் கருத்தும். சீமானுடைய எல்லாக் கருத்துக்களோடும் நாங்கள் உடன்படவேண்டுமென்று இல்லைத்தானே...? ஈழப்பிரச்சனையில் அவர் கொண்டிருக்கும் கரிசனையின்பாற்பட்டதே அவர்மீதான மரியாதை, அபிமானம் இன்னபிற. தமிழச்சியாக இருக்கும் நான் ஒரு பெண்ணாகவும் இருக்கிறேன் என்பதற்கிணங்கவே எல்லாம் அமையும்.

vignathkumar said...

thank u madem,
i apprecate ur care in { tamilens problum in srilanka}
me too have lots of care in tamil society.
i arguee lot for tamil women democrasy ,equality and democray because it is being destroyed lot by tamil medias{cinema,tv serial stories.)male domination psychatist doctors. tamil magazeen articles.
may arguements are writen and spoken from mens point of views which is supportive to male domination this is the sitivation in tamil medias.
but am very very glad to hear that u like women are not fulley supporting seman views regarding women issues.

vignathkumar said...

{seeman,batahi raja, amir,)etc tamil creaters who speaks about tamil society welfare.
for how many tamil womens they gave cinema chances?
there are lots of thing to discusses in these issues
me expecting is aleast u creat some awerness in these what i write rgarding tamil magazeens, psychatist, dialougs in tamil cinema and tv serials. issues with in ur friends,relatives colic etc .