3.05.2009

சுகந்தி சுப்ரமணியன், கிருத்திகா மேலும் சில நினைவுகள்



சுதந்திரம் என்பது காற்று
இசையைப் போல் உயிர் வளர்க்கும்.
சுதந்திரம் என்பது ஒரு கலை
கவிதைகளை உருவாக்கும்.
சுதந்திரம் என்பது ஒரு கற்பனை
நம்மை நமக்கே பகையாக்குகிறது.
சுதந்திரம் என்பது அபாயம்
அது நம்மைச் சோதிக்கிறது.
அது நாகத்தைப் போன்றது.
கூரான கத்தியைப் போன்றது.
ஒரு விளையாட்டைப் போன்றது.
எல்லோருக்கும் சுதந்திரம் தேவை.
எவருக்கு எவரிடமிருந்து எப்படி?
சுதந்திரம் நதியைப் போன்றது.
சுதந்திரம் மரத்தைப் போன்றது.
சுதந்திரம் நிலவைப் போன்றது.
சுதந்திரம் பெண்ணைப் போன்றது.
சுதந்திரம் தாயைப் போன்றது.
சுத்தமான மனசுக்குள்
சங்கல்பமாகும் சுதந்திரம்.
நம்மை அது
நம்மிடமிருந்து விடுவிக்கும்.

-சுகந்தி சுப்ரமணியன் - 'மீண்டெழுதலின் ரகசியம்' தொகுப்பிலிருந்து...

இணையச் செய்திகள் மனச்சிதைவெனும் பாதாளத்தில் சரிக்க முயல்கின்றன. கவலைகளை மறக்க சிலர் மதுவருந்துகிறார்கள். வேறு சிலர் வீட்டிலிருந்து தப்பியோடி தனியறைகளில் தன்னிரக்க நெருப்பில் கருகிப்போகிறார்கள். சிலர் எழுத்தினைப் பற்றிப்பிடித்து இறங்கி ஓடிவிட முடியுமா என்று எத்தனிக்கிறார்கள். அதீத ‘புரட்சிக்காரர்’கள் சிலர் எழுத்தையும் மதுவையும் ஒன்றாகக் கலக்கிக் குடிக்கிறார்கள்.

அண்மையில் (28-02-2009) சுகந்தி சுப்பிரமணியன், கிருத்திகா ஆகியோரின் நினைவுகூரல் மாலதி மைத்ரியின் அணங்கு பெண்ணிய வெளி சார்பில் நடைபெற்றது. பெசன்ட் நகர் கடற்கரையோரமாக இப்படியொரு இடத்தைத் தேர்ந்து, அதில் மரமும் காற்றும் இழையும் சூழலில் நடனம் சொல்லிக்கொடுக்க வேண்டுமென்று நினைத்த நடனமணி சந்திரலேகாவின் கவிதை மனசை நினைத்து நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். கவிஞர் சுகுமாரன் ‘இழந்த பின்னும் இருக்கும் உலகம்’கட்டுரைத் தொகுப்பில் குறிப்பிட்டிருப்பது இந்த இடமாகத்தான் இருக்கவேண்டும். அதைக் குறித்து எத்தனை சர்ச்சைகள் இருந்தாலும், மீன் நாற்றத்திற்குப் பதிலீடாக சலங்கைகளின் ஓசை அவ்விடத்தை நிறைப்பதானது நமது மத்தியதர மனோபாவத்தைத் திருப்தி செய்வதாகவே இருக்கிறது.

கவிஞர் மாலதி மைத்ரி, கிருத்திகாவைப் பற்றியும் சுகந்தி சுப்ரமணியனைப் பற்றியும் பேசி அந்த நிகழ்ச்சியை ஆரம்பித்துவைத்தார். கலந்துகொண்டு நான்கு நாட்களாகியும் சுகந்தியின் நினைவு அகல மறுத்து உள்ளுக்குள்ளேயே அலைந்துகொண்டிருந்தது. இத்தனைக்கும் நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை. கவிதை எழுதக்கூடிய பெண்ணிலிருந்து பிறழ்நிலைவரை சென்ற மனப்பாதை எப்படி இருந்திருக்கும் என்பதைப் பற்றியே சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டு சுகந்தி பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டவரான எழுத்தாளர் அசோகமித்திரன் உட்பட பலரும் ‘சுப்ரபாரதிமணியன் மீது தவறொன்றுமில்லை… அவர் நல்லதொரு கணவனாகவே தென்பட்டார்’ என்றே சொன்னார்கள். சுப்ரபாரதிமணியனின் நண்பரான ஜெயமோகனும் தனது அஞ்சலிப் பதிவில் அவ்வாறே சொல்லியிருக்கிறார். மனம் பிறழ்ந்த ஒருவரை வைத்துக் காப்பாற்றிக்கொண்டு, குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் தோளில் தூக்கி நிர்வகிக்கவேண்டியதன் சிரமங்களை தோழியொருத்தி சொன்னாள்.

நினைவுப் பகிர்தல்களை மட்டும் கேட்டுவிட்டு வந்திருந்தால் ஒருவேளை மறந்திருக்கக்கூடும். ஆறே மணி நேரத்தில் தயாரானதாகச் சொல்லப்பட்ட அந்த நிகழ்த்து கலைதான் மனதைக் குடைந்து குடைந்து ஒருமாதிரிப் பித்துநிலைக்குத் தள்ளியிருக்கவேண்டும். இலக்கிய வட்டாரத்தால் நன்கறியப்பட்ட நடிகை ரோகிணி, தொலைக்காட்சியில் அடிக்கடி காணக்கிடைக்கும் மற்றோர் பெண், முகவசீகரமுடைய இன்னுமொரு பெண் (பெயரில் என்ன இருக்கிறது? :) என மூவர் அதில் பங்கேற்றார்கள்.

நீள்சதுரமான அந்த மண்டபத்தில் சச்சதுரமான துண்டொன்றின் கரை வழியாக மூவரும் நடக்கிறார்கள்…. நடக்கிறார்கள்…. நடக்கிறார்கள். கூடவே தேவாரம் பிழிகிறது. பிறகு சுகந்தியின் கவிதைகளால் பேசுகிறார்கள். வீட்டினுள் சிறைப்பட்டு வெளியை விழையும் அந்தக் கண்களில் கோடானுகோடி பெண்களைக் காணமுடிந்தது. சடார் சடாரென கோபத்திற்கும் கண்ணீருக்கும் பெருமிதத்துக்கும் மனச்சோர்வுக்கும் தாவும்போது நாங்கள் அவர்களானோம். ஏதேதோ பழைய நினைவுகளில் கண்ணீர் துளிர்த்தது. பெண்கள் எப்போதும் எந்நிலத்திலும் பாவப்பட்டவர்களாகவே இருக்கிறார்களே என்ற ஆற்றாமை பொங்கியது.

கவிஞர் இளம்பிறை பேசும்போது, தான் ஒருதடவை சுகந்தியைச் சந்தித்தாகவும் பேச முற்பட்டபோது அவர் ஆர்வம் காட்டாதிருந்ததாகவும் குறிப்பிட்டார். அப்படி அன்று சுகந்தி இருந்தமைக்கான காரணம் இன்று தனக்குப் புரிவதாகச் சொன்னார். அ.மங்கை, பன்னீர்செல்வம், மாலதி மைத்ரி எல்லோரும் ‘வாசுவேஸ்வரம்’பற்றிச் சொன்னதில் வாசிக்கவேண்டிய அடுத்த நாவல் அதுதான் என்று மனதிலிருத்திக்கொண்டேன். (இப்படிப் படிக்கவேண்டிய பட்டியல் நீளமாகக் காத்திருப்பதை நான் மட்டுமே அறிவேன் என்ற துணிவில் எழுதுகிறேன்) அ.மங்கை கிருத்திகாவைப் பற்றிச் சொன்னதில், தள்ளாமையிலும் தளராத கிருத்திகாவின் கம்பீரம் மனதில் தங்கியது.

நிறைய இலக்கிய ஆளுமைகள், நாடகக்காரர்கள், சினிமாவைச் சேர்ந்தவர்கள், கவிஞர்கள் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார்கள். லிவிங் ஸ்மைல் வித்யா, அஜயன் பாலா, உமா ஷக்தி, ச.விஜயலஷ்மி, இளம்பிறை, இன்பா சுப்பிரமணியம், நரன், பாஸ்கர் சக்தி, அ.மங்கை, அசோகமித்திரன், நடிகைகள் ரேவதி-ரோகிணி, இசை, கடற்கரய், நந்தமிழ்நங்கை இன்னும் பலர் கலந்துகொண்டிருந்தார்கள். ரேவதியின் விழிகளுக்கு இன்னமும் வயதாகவில்லை. அப்படியொரு சுடர் அதில். எனது அபிமான தாரகை அருகில் இருந்தும் ஒரு வார்த்தைகூடப் போய்ப் பேசமுடியாமல் கூச்சம் பின்னிழுத்துவிட்டது. ‘நீங்கள் இந்த நிகழ்வில் நன்றாக நடித்தீர்கள்’என்று ரோகிணியிடமும் சொல்ல நினைத்தேன். இங்கும் அதே கதை. மாலதி மைத்ரி நிகழ்ச்சியை ஒழுங்கமைத்து நடத்தினார்.

சுகந்தியை ஒரு பதிவின் மூலம் மனதிலிருந்து இறக்கிவிட முடியுமென்று தோன்றவில்லை. ‘மீண்டெழுதலின் ரகசியம்’தொகுப்பைப் படித்தேன். தனிமை தரக்கூடிய மனவிசித்திரங்கள் அவரைப் பீடிக்காமலிருந்திருந்தால், அல்லது மற்றவர்கள் சொல்வதுபோல அவ்விதம் அவர் கற்பிதம் செய்யாமலிருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

வாழும்போது அருகில் இருப்பவர்களை மறந்துவிடுகிறோம். மரணத்தின் பின்னரே ‘நினைவுகூருகிறோம்’என்பது எத்தனை அமனிதத்தனமானது. ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன்… நான் பழகியவர்களிடையே எனது சித்திரம் மரணத்தின் பின் எங்ஙனம் தோன்றுமென. எவ்விதம் நான் இவ்வுலகில் எஞ்சுவேன்… புத்தக வடிவிலா? நட்பார்ந்த புன்னகையாகவா? எனது நிலத்தைப் பற்றி நான் கிறுக்கி வைத்திருக்கும் பதிவுகளாகவா?

ஏன் எஞ்சவேண்டும்? இல்லாமல் போனபின்னும் இருக்க விளையுமளவு இந்த வாழ்க்கை என்ன இனிமையாகவா இருந்தது? மார்ச் 8இல் பெண்கள் தினம் வருகிறது. வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் நிறையப் பொய்களைக் கேட்கவும் பார்க்கவும் வேண்டியதாயிருக்கும் என்று நினைக்கிறேன்.

7 comments:

லிவிங் ஸ்மைல் said...

வணக்கம்,

நானும் நிகழ்விற்கு வந்திருந்தேன். எழுத நினைத்தும், முடியாமல் போனது. அற்புதமான நிகழ்வை அழகாக பதிவுசெய்துள்ளீர்கள்.

தமிழ்நதி said...

அன்பின் வித்யா,

தயவுசெய்து மன்னிக்கவும். நீங்கள் நிகழ்விற்கு வந்திருந்தீர்கள். நீங்கள் சிரிக்கும்போது மேலும் அழகாகத் தோன்றுவதாக நான் நினைத்துக்கொண்டேன். பிறகெப்படி மறந்தேன்...? மன்னித்துக்கொள்ளுங்கள் தோழி. உங்கள் பெயரை இணைக்கலாமென்று போனேன். வலைப்பூவின் இடுகைக்கும் வைரசுக்கும் சண்டை:) கொஞ்ச நேரமானால் சரியாகிவிடும். பிறகு இணைத்துவிடுவேன்.தவறவிட்ட நண்பர்கள் தயவுசெய்து நினைவுறுத்தவும்.

பதி said...

நிகழ்வில் கலந்து கொண்ட உணர்வை வர வைக்கும் பதிவு...

//இணையச் செய்திகள் மனச்சிதைவெனும் பாதாளத்தில் சரிக்க முயல்கின்றன. கவலைகளை மறக்க சிலர் மதுவருந்துகிறார்கள். வேறு சிலர் வீட்டிலிருந்து தப்பியோடி தனியறைகளில் தன்னிரக்க நெருப்பில் கருகிப்போகிறார்கள். //

என்று இந்த நிலையிலிருந்த மாறும் நாள் வருமென காத்துக்கிடப்பவருக்கே இதிலுள்ள வலி புரியும்.

//அதீத ‘புரட்சிக்காரர்’கள் சிலர் எழுத்தையும் மதுவையும் ஒன்றாகக் கலக்கிக் குடிக்கிறார்கள்.//

சிங்களவனின் ஆயுதத்துடன் போட்டியிடும் வல்லமை கொண்டவை சில புரட்சியாளர்களின் கணிணிகள் !! போட்டி என்னவோ தமிழர்களையும் மனிதத்தையும் அழிப்பதில் தான்..

லிவிங் ஸ்மைல் said...

என் வருத்தம் இது குறித்து யாரும் பதிவிடவில்லை. நானும் பதிவிடமுடியாமல் போனது என்பதுதான்.

பெயர் இல்லை என்பதில் எந்த சிக்கலுமில்லையே..

/// நீங்கள் சிரிக்கும்போது மேலும் அழகாகத் தோன்றுவதாக நான் நினைத்துக்கொண்டேன். ////

ம்.. நினைக்க வேண்டாம் அதுதான் நிஜம்.

soorya said...

எனக்குப் பிடித்தவர்கள் எல்லாருமே வந்திருந்தார்கள் போலுள்ளது.என்ன செய்வது? எங்கோ தொலைவில் இந்த வடதுருவத்து மூலையில் வந்து சிக்கிக்கொண்டு மூச்சுவிடவேண்டியதாயிற்று. நல்ல பதிவு தோழி.

Anonymous said...

பகிர்வுக்கு நன்றிகள் தமிழ்நதி.

Anonymous said...

உண்மையில் நேரில் நடந்ததை விட நிகழ்வை அழகாக பதிவு செய்துள்ளீர்கள், அங்கு வராமல் தங்கள் பதிவை படித்திருந்தால் ஒரு வேளை தமிழ் நாட்டு இலக்கிய விழாக்கள் பற்றிய பிரமிப்பிலேயே இன்னும் நான் இருந்திருக்கக் கூடும்.
திரு