4.03.2009

மலைகளுக்குச் செவிகள் இல்லை

மேடைகளில்
கனன்ற சொற்பொறிகள்
நேரே உங்கள் இதயத்துள்
இரத்தம் கண்ணீராய் திரிந்தது.

நம்பித்தானிருந்தோம்!

பேசிய நாக்குகளைக் கைதுசெய்தார்கள்
விரல்களையும்.
சிறையிருளைக் கிழித்திறங்கும்
ஒற்றைச் சூரியவிரல்
இரத்தக்கறை படிந்த சுவர்களில் எழுதுகிறது
உங்களில் இரக்கமுள்ளோரின் பெயர்களை.

ஊர்வலங்களில் சீரான காலசைவில்
எழுச்சியுற்று நடந்தீர்கள்
பட்டொளிப் பதாகைகள்
காக்கிகளால் சுருட்டப்பட்டன
அதிகார நகங்களில்
உங்களது சதைத்துணுக்குகள்
நீதியின் உதடுகள்
லத்திகளால் அடித்துச் சாத்தப்பட்டன.

முத்துக்குமாரிலிருந்து
தீப்பந்தமாகிய உடல்களால்
சற்றைக்குப் பாதை ஒளிர்ந்தது
பிறகு கும்மிருள்.

எனினும் நம்பித்தானிருந்தோம்!

நாங்களும் நீங்களும்
செவிட்டு மலைகளிடம்
வியர்த்த வார்த்தைகளால்
உரையாடினோம்.
அதிகாரங்களின் பள்ளத்தாக்குகளில்
எங்களால் இசைக்கப்பட்ட துயரத்தின் பாடல்கள்
கையேந்தித் திரிகின்றன.

வரும் எல்லாச் செய்திகளிலும் குருதி
எதிர்ப்படும் எல்லா மனிதரிலும் கண்ணீர்
நாங்கள் இரண்டு வேளை பல்துலக்குகிறோம்
மூன்று வேளை அழுகிறோம்.

கேவலத்தில் கேவலமாய்
இன்னமும் வயிறு பசிக்கிறது.
ஒருபக்கக் கன்னம் கருகி
வலியில் துடித்த குழந்தையை
பலவந்தமாய் மறந்து எப்போதாவது
சிரிக்கவும் செய்கிறோம்.

நாடற்று அலைபவர்கள்
ஒவ்வொருவருள்ளும்
எரிமலை புகைகிறது
புயல் சீறுகிறது
பூகம்பம் குமுறுகிறது.

ஒரு குருவி சிறகசைக்கும் ஓசைக்கும்
பதறியழும் பைத்தியங்களாய்
எங்கள் மனிதர்களைச் சிதைத்தாயிற்று.

இந்தக் களரியின் பின்
குழந்தைமையற்ற குழந்தைகள்
எவரேனும் எஞ்சக்கூடுமெனில்
செடியிலிருந்து பூக்கள் உதிர்வதைப் பார்த்தே
பதுங்குகுழிக்குள் பாய்ந்தோடி இறங்குவர்.

இறந்தவர்களின் நினைவுகளோடு எனினும்
ஊர் திரும்பும் கனவை
இடிபாடுகளுக்குள்ளிருந்து
இனி மீட்டெடுக்கவே முடியாது.

ஒருவழியாய் நண்பர்களே!
உங்கள் கவனத்தை
சவப்பெட்டிகளிலிருந்து
வாக்குப்பெட்டிகளுக்குக் கடத்திவிட்டார்கள்.

நன்றி: சமூக விழிப்புணர்வு

11 comments:

நட்புடன் ஜமால் said...

\\உங்கள் கவனத்தை
சவப்பெட்டிகளிலிருந்து
வாக்குப்பெட்டிகளுக்கு\\

மிக அருமை.

வேத்தியன் said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...
வாழ்த்துகள்...

Anonymous said...

nathiyaai varthaigalin pravaagam....valigalum vethanaigalum kaatatru vellamai karai purandu odugiradhu....oru naal vedivelli varum endru ratha aaru theeratha thagamaai odi kondu erukiradhu eezhathin oosai peru moochu alla peralai oosai......velveer vazhveer

KarthigaVasudevan said...

//முத்துக்குமாரிலிருந்து
தீப்பந்தமாகிய உடல்களால்
சற்றைக்குப் பாதை ஒளிர்ந்தது
பிறகு கும்மிருள்.

எனினும் நம்பித்தானிருந்தோம்!//

.வரிகளுக்குள் பொதிந்திருக்கும் அர்த்தம் மனதை நெகிழ்த்தி கனக்கச் செய்கிறது.இதை விட நாசூக்காய் இந்த விஷயத்தை சொல்லி விட முடியாது?!

//கேவலத்தில் கேவலமாய்
இன்னமும் வயிறு பசிக்கிறது.
ஒருபக்கக் கன்னம் கருகி
வலியில் துடித்த குழந்தையை
பலவந்தமாய் மறந்து எப்போதாவது
சிரிக்கவும் செய்கிறோம்.//

இந்த துயரத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது

//ஒருவழியாய் நண்பர்களே!
உங்கள் கவனத்தை
சவப்பெட்டிகளிலிருந்து
வாக்குப்பெட்டிகளுக்குக் கடத்திவிட்டார்கள்.//


சரியான சாட்டைஅடி வரிகள் ...

இது கவிதை அல்ல புலம் பெயர்ந்த துயரச் சுவடுகள்.புரிகிறது உங்கள் சோகம் தமிழ்நதி

புதியவன் said...

//ஒரு குருவி சிறகசைக்கும் ஓசைக்கும்
பதறியழும் பைத்தியங்களாய்
எங்கள் மனிதர்களைச் சிதைத்தாயிற்று.//

வரிகள் அருமை...

கவிதை முழுதும் தீப்பொறிகளாய் தெறிக்கிறது சமூகத்தின் அவலங்கள்...

செல்வன் said...

"இந்தக் களரியின் பின்
குழந்தைமையற்ற குழந்தைகள்
எவரேனும் எஞ்சக்கூடுமெனில்
செடியிலிருந்து பூக்கள் உதிர்வதைப் பார்த்தே
பதுங்குகுழிக்குள் பாய்ந்தோடி இறங்குவர்"

எம் குழந்தைகள் இங்கே குதூகலத்துடன் விளையாடிகொண்டிருக்கும்பொழுது, அங்கே ஈழத்தில், எம் தமிழ் சகோதரர்களின் குழந்தைகள் பதுங்கு குழியில் ..............
கண்ணீருடன், இயலாமையுடன்
செல்வன்

குடந்தை அன்புமணி said...

உங்கள் வலிகளை உணரமுடிகிறது. இனியும் நம்பிக் கொண்டுதானிருக்கிறோம்... விடியுமென்று...

கோகுலன் said...

அன்பு தமிழ்நதி,
//ஒரு குருவி சிறகசைக்கும் ஓசைக்கும்
பதறியழும் பைத்தியங்களாய்
எங்கள் மனிதர்களைச் சிதைத்தாயிற்று.

இந்தக் களரியின் பின்
குழந்தைமையற்ற குழந்தைகள்
எவரேனும் எஞ்சக்கூடுமெனில்
செடியிலிருந்து பூக்கள் உதிர்வதைப் பார்த்தே
பதுங்குகுழிக்குள் பாய்ந்தோடி இறங்குவர்.
//

மனம் கனத்து தொலைகிறேன் இவ்வரிகளில்..

நல்ல சொல்லாடல்..
போரின் வலிகளைச் பேசும் கவிதை..

soorya said...

குழந்தமையற்ற குழந்தைகள்..
எவரேனும் எஞ்சக்கூடுமெனில்...,
....
இது இந்த யுகத்தின் மிகப்பெரும் சோகம்.
..
தொடர்ந்து எழுதுங்கள் நதி.
பதிந்துவிட்டாவது மடிந்து தொலைப்போம்.
..
நன்றி.

பதி said...

//நாங்களும் நீங்களும்
செவிட்டு மலைகளிடம்
வியர்த்த வார்த்தைகளால்
உரையாடினோம்.//

எந்த ஊர் மலையும் வருந்தும் இந்த இழிபிறவி அரசியல்வியாதிகளுடன் ஒப்பிட்டால்....

//அதிகாரங்களின் பள்ளத்தாக்குகளில்
எங்களால் இசைக்கப்பட்ட துயரத்தின் பாடல்கள் கையேந்தித் திரிகின்றன.//

கவலைவேண்டாம் அவற்றையும் கைது செய்ய ஆள் அனுப்பியிருக்கின்றனர்...

//உங்கள் கவனத்தை
சவப்பெட்டிகளிலிருந்து
வாக்குப்பெட்டிகளுக்குக் கடத்திவிட்டார்கள்.//

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது அவர்களின் தொழில்.

//ஒரு குருவி சிறகசைக்கும் ஓசைக்கும்
பதறியழும் பைத்தியங்களாய்
எங்கள் மனிதர்களைச் சிதைத்தாயிற்று.

இந்தக் களரியின் பின்
குழந்தைமையற்ற குழந்தைகள்
எவரேனும் எஞ்சக்கூடுமெனில்
செடியிலிருந்து பூக்கள் உதிர்வதைப் பார்த்தே பதுங்குகுழிக்குள் பாய்ந்தோடி இறங்குவர்.//

ஒரு சபிக்கப்பட்ட இனத்தில் பிறந்ததின் பலன் வேறென்னவாக இருக்க முடியும்?

அமிர்தவர்ஷினி அம்மா said...

வலி சுமந்த வார்த்தைகள்

இந்தக் களரியின் பின்
குழந்தைமையற்ற குழந்தைகள்
எவரேனும் எஞ்சக்கூடுமெனில்
செடியிலிருந்து பூக்கள் உதிர்வதைப் பார்த்தே
பதுங்குகுழிக்குள் பாய்ந்தோடி இறங்குவர்//

கூடுதல் கனத்தோடு.

உங்கள் கவனத்தை
சவப்பெட்டிகளிலிருந்து
வாக்குப்பெட்டிகளுக்குக் கடத்திவிட்டார்கள். //
ம்ஹூம்............
ஒற்றைப் பெருமூச்சை விட வேறெதும் செய்ய இயலவில்லை