8.25.2009

‘த பியானிஸ்ட்’: சமகால வலியின் நிழல்


சில சமயங்களில் நினைத்துப் பார்க்கும்போது வரலாறு திரும்பத் திரும்ப ஒரே அச்சில் சுழல்வதாகவே தோன்றுகிறது. ஆண்டுகள்தான் கழிந்துபோயினவேயன்றி, மனிதனுக்குள்ளிருக்கும் அதிகார வேட்கையானது மாற்றங்கள் ஏதுமின்றி அப்படியே இருக்கிறது. அதற்கு சமகால இரத்த சாட்சியமாக ஈழத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கும் இனவழிப்பைச் சொல்லலாம். எழுதவோ வாசிக்கவோ மனங்கொள்ளாத ஓரிரவில் ரோமன் போலன்ஸ்கியின் ‘த பியானிஸ்ட்’என்ற திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. நாம் எதனைச் சிந்திக்கிறோமோ அதனை நோக்கியே இழுத்துச்செல்லப்படுகிறோம் என்பதற்கு, இதனைக்காட்டிலும் வேறொரு உடனிகழ்வு வேறென்ன இருக்கக் கூடும்?

போலந்தை ஹிட்லரின் நாஜிப்படைகள் கைப்பற்றிய காலத்தில் வாழ்ந்த, யூத இனத்தைச் சேர்ந்த, பியானோ வாத்தியக் கலைஞன் ஒருவன் உயிர்தரித்திருப்பதற்குப் படும் அவஸ்தையும் அலைச்சலும் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரு இனவெறியனின் பேராசைக்குப் பலியான யூதர்களின் அவலங்களை, ஒரு கலைஞனின் கண்கள் வழியாகக் காட்டியிருக்கிறார் போலன்ஸ்கி. நாமறியாத ஒன்றுடன் நமக்குத் தெரிந்த ஒன்றைப் பொருத்திப் பார்க்கும் மனமானது படம் பார்க்கும்போது இயங்கிக்கொண்டேயிருந்தது. கோபமும் ஆற்றாமையும் கண்ணீரும் பொங்கிவழிந்ததன் காரணம் வெளிப்படை.

வ்லாடெக் ஷ்பில்மான் என்ற பியானிஸ்ட்டாக அட்ரியன் புரொடி வாழ்ந்திருந்த அந்தப் படம் பியானோ இசையுடன் தொடங்குகிறது. போலந்தின் வானொலி நிலையத்தில் பியானோ வாசித்துக்கொண்டிருக்கும் ஷ்பில்மானை குண்டுச்சத்தங்கள் நெருங்குகின்றன. இசைப்பதை நிறுத்தும்படி அவன் கேட்டுக்கொள்ளப்படுகிறான். ஆனால், இசையின் ஈர்ப்பிலிருந்து விடுபட முடியாத அவனது விரல்கள் தொடர்ந்து நர்த்தனமிடுகின்றன. வானொலி நிலையமே தகர்ந்துபோகும் வேளையில்தான் அவன் இசைப்பதை நிறுத்துகிறான். அனர்த்தத்திற்கிடையிலும் ஒரு அற்புதம் நிகழ்கிறது. வெளியே வரும் அவனை ‘அருமையான கலைஞன்’ எனப் பாராட்டுகிறாள் ஒருத்தி. செலோ என்ற வாத்தியத்தை இசைப்பவள் அவள் எனத் தெரிந்துகொள்கிறான் ஷ்பில்மான். இருவர் கண்களிலும் சின்னதாக ஒரு காதல் பூ மொட்டவிழ்கிறது. ஒன்றாகக் கோப்பி குடிக்கலாம் என்று செல்லும் உணவகத்தின் வெளியில் ‘யூதர்களுக்கு அனுமதியில்லை’என்று எழுதப்பட்டிருக்கிறது. ‘இது எத்தனை பெரிய இழிவு’என்று கொதித்துப் போன இதயமுள்ள அந்த ஜேர்மானியப் பெண்ணைச் சமாதானப்படுத்துகிறான் ஷ்பில்மான். ‘பூங்காவுக்குச் செல்லலாம்’என்ற அவளது யோசனைக்கு, ‘பூங்காக்கள் மற்றும் பொது இருக்கைகள் கூட யூதர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன’என்று கசந்துவழியும் புன்னகையோடு கூறுகிறான். பிறகு தன்வழியில் பிரிந்து செல்கிறான்.

இதனிடையில் பிரிட்டனும் பிரான்சும் ஜேர்மனிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போர் தொடுக்கவிருப்பதாக வரும் செய்தி யூதர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. ஈழத்தமிழர்கள் எவ்விதம் மேலைத்தேயங்களை நம்பினார்களோ, அவ்விதமே ‘ஆக்கிரமிப்பிலிருந்து நாங்கள் மீட்கப்பட்டுவிடுவோம்’என்று போலந்தில் வாழ்ந்த யூதர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். (காலங்கடந்தேனும் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பது உண்மையே. ஈழம் அதிசயங்களுக்காகக் காத்திருக்கிறது)

யூதர்கள் என்று இனம்பிரித்துக் காட்டுவதற்கு நட்சத்திரக் குறியிட்ட கைப்பட்டை ஒன்றை அணியவேண்டும் என்று ஜேர்மானிய ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பிக்கிறார்கள். அதற்குப் பணியாதவர்கள் கடும் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது. அடையாள அட்டை இல்லாத தமிழர்கள் வீதிகளில் இறங்கவே அச்சப்படுவதை அது நினைவூட்டியது. அது எங்களில் ஒரு அங்கம்போல, ஆடைபோல கூடவே இருந்தது. மறுவளமாக, தமிழர்கள் என்று இனம்பிரித்துக் காட்டவும் கைதுசெய்யவும் அது பேரினவாதப் படைகளுக்கு உதவியது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு அஞ்சிய யூதர்கள் நட்சத்திரக் குறியிட்ட பட்டைகளை கைகளில் அணிந்துகொள்கிறார்கள். யூதர்கள் எனப் பிரித்துக் காட்டப்பட்டவர்களுக்கு, நடைபாதைகளில் நடக்கவும், ஜேர்மானியர்கள் பிரயாணிக்கும் பேருந்துகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

1940ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் திகதிக்குள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் யூதர்கள் அனைவரும் பெயர்ந்துசென்றுவிடவேண்டும் என்று மேலும் ஒரு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. (உங்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?)

“வார்சாவில் நாங்கள் நான்கு இலட்சம் யூதர்கள் இருக்கிறோம். இவ்வளவு பெரிய எண்ணிக்கைக்குள் எங்களை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள். நாங்கள் இங்கேயே தங்கிவிடலாம்.”என்கிறான் ஷ்பில்மான். அவனுக்குத் தான் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த மண்ணை விட்டு வேறெங்கும் பெயர்ந்து செல்ல மனம் இடங்கொடுக்கவில்லை. இந்த நான்கு இலட்சம் என்ற எண்ணிக்கையை நாம் எங்கேயோ கேட்டிருக்கிறோம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? ஆம். வரலாறு ஒரே மாதிரியான சம்பவங்களாலும் எண்ணிக்கைகளாலுமே வனையப்பட்டிருக்கிறது.

இதனிடையில் ஷ்பில்மானின் பிரியத்திற்குரிய பியானோவையும் விற்றுச் சாப்பிடவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

சொற்ப உடமைகளுடனும் சோர்ந்த முகத்துடனும் அவர்கள் சாரிசாரியாகப் பெயர்ந்துசெல்கிறார்கள். குழந்தைகள் தங்கள் பொம்மைகளை கையிலே எடுத்துக்கொண்டு போகிறார்கள். முதியவர்களை சக்கரநாற்காலிகளில் வைத்துத் தள்ளிக்கொண்டு போகிறார்கள். 1995இல் ‘ரிவிரச’இராணுவ நடவடிக்கையின்போது பெயர்ந்துசென்ற மக்களையும், 2009இல் பதறிய முகங்களோடு உயிரொன்றே மிச்சமாக வவுனியாவுக்குப் பெயர்க்கப்பட்டவர்களையும் நினைவூட்டியது அக்காட்சி. தங்கள் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்ட அவர்களது விசும்பல் அவ்விடத்தை நிறைக்கிறது. ஷ்பில்மானும் அவனது குடும்பமும் அந்தக் கூட்டத்தில் நடந்துபோகிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் அந்த செலோ வாத்தியக்காரியை ஷ்பில்மான் காண்கிறான். “இது நீதியில்லை”என்கிறாள் அவள்.

அனைத்து யூதர்களையும் ஓரிடத்தில் குவித்தான பிறகு அந்த இடத்தை மறித்து சுவர் எழுப்புகிறது நாஜிப்படை. இப்போது போலந்து இரண்டுபட்டுவிட்டது. யூதர்கள் - யூதர்கள் அல்லாதவர். இப்போது ஜேர்மானியர்களோடு சேர்ந்து வறுமையும் அவர்களை வதைக்கிறது. பிழைப்பதற்கு வழியில்லை. வயதான பெண்ணொருத்தி தன் கணவனின் பெயரைச் சொல்லி அவனைக் கண்டீர்களா என்று வீதிகளில் எதிர்ப்படுகிறவர்களையெல்லாம் கேட்டபடியிருக்கிறாள். அவள் மனம் பிறழ்ந்துபோயிருக்கிறாள். பசியில் விழுந்து இறந்தவர்களின் பிணங்கள் தெருக்களெங்ஙணும் கிடக்கின்றன. குழந்தைகள் பசியில் கதறுகின்றன. வசதியாகவும் கௌரவமாகவும் வாழ்ந்த அந்த ஜனங்கள் இப்போது பிச்சைக்காரர்களாகி தெருக்களில் கையேந்தி நிற்கிறார்கள். இங்கே ‘யூதர்கள்’என்று வருமிடங்களில் ‘தமிழர்கள்’என்று பிரதியீடு செய்தும் வாசிக்கலாம். நொந்து நோய்மைப்பட்ட அந்த ஜனங்களை நடனமாடும்படி பணிக்கிறார்கள் ஜேர்மானியச் சிப்பாய்கள். கண்களில் அடக்கப்பட்ட கோபம் ஒளிந்திருக்க அவர்கள் ஆடுகிறார்கள்.

கைக்கூலிகளும் காட்டிக்கொடுப்பவர்களும் யூதர்களிலும் இல்லாமல் இல்லை. ஆட்சியாளர்களுடன் கூடிக் குலவும் ஒருவன் ஷ்பில்மானின் குடும்பத்திற்குப் பழக்கமானவனாக இருக்கிறான். “நீங்களும் என்னைப்போல ஜேர்மானியர்களிடம் பணியில் அமருங்கள்”என்கிறான். “நீ பொலிஸ் ஆகலாம். நீ அவர்களுடைய கேளிக்கை விடுதியில் பியானோ வாசிக்கலாம்”என்று சகோதரர்களுக்கு ஆசை காட்டுகிறான். ஷ்பில்மானும் சகோதரன் ஹென்ரிக்கும் மறுத்துவிடுகிறார்கள். அவன் வன்மத்தோடு வெளியேறிச் செல்கிறான். வன்மத்தோடு வெளியேறிச் செல்பவனில் நீங்கள் யார் யாரைக் காண்கிறீர்கள் நண்பர்களே?

இதனிடையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக புரட்சியில் ஈடுபட சில இளைஞர்கள் இரகசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். தன்னையும் அவர்களோடு இணைத்துக்கொள்ளும்படி ஷ்பில்மான் கேட்கிறான். “நீ அறியப்பட்ட இசைக்கலைஞன். உலகத்திற்கே உன்னைத் தெரியும். உனக்குப் புரட்சி ஒத்துவராது”என்று அவர்கள் மறுத்துவிடுகிறார்கள்.

படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது ‘வரலாறு ஓ இந்த வரலாறு!’ என்று நினைத்துக்கொள்ளும்படியாக அத்தனை ஒற்றுமைகள் இருக்கின்றன ஒடுக்குமுறைகளுள், இனவழிப்பில்.

“நாங்கள் இங்கே அடிமைகளாகச் செத்துமடிந்துகொண்டிருக்கிறோம். அமெரிக்காவிலிருக்கும் யூதர்கள் எங்களுக்காக என்ன செய்தார்கள்? ஜேர்மனி மீது படையெடுக்கும்படி அங்குள்ள யூதர்கள் அமெரிக்காவைத் தூண்டவேண்டும்”என்று ஷ்பில்மானின் தந்தை ஓரிடத்தில் ஆதங்கம் பொங்கச் சொல்வார்.

‘நீங்கள் எழுதிய வார்த்தைகளை யாரோ உங்களுக்கு முன்னரே எழுதியிருக்கிறார்கள்’என்ற கவிதை நினைவுக்கு வருகிறதா? ஒரே சாயலுடைய வார்த்தைகளை வரலாறு செவிமடுத்தபடியே இருக்கிறது. எனக்கு தமிழகத்தின் நினைவு வந்தது. ஆறரைக் கோடித் தமிழர்கள் தமிழகத்தில் இருந்தும், இந்திய மத்திய அரசை இலங்கை அரசுக்கெதிராக சுண்டுவிரலசைக்க வைக்கக்கூட முடியவில்லை. அதற்கு ஆறரைக் கோடித் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கும் தமிழக அரசின் அசமந்தப் போக்கும், அவலங்கள் மீதான பாராமுகமும், அதிகாரத்தோடான சமரசங்களும்தானேயன்றி வேறு காரணங்கள் இருக்கமுடியாது. 1940ஆம் ஆண்டுக்கும் 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட அறுபத்தொன்பது ஆண்டுகளில் மனிதநாகரீகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கிறதென்று யாராவது சொல்வரெனில் அது மனதறிந்த பொய்யாகவே இருக்கமுடியும். காலந்தோறும் அறம் செத்துச் செத்துச் சீவித்துக்கொண்டிருக்கிறது.

ஆக்கிரமிப்பாளர்கள் நிலத்தில், நிறத்தில் மட்டுமே வேறுபட்டிருக்கிறார்கள். அவர்களது குரூரமும், பிறவதையில் களிக்கும் மனமும் ஒன்றேதான். பெயர்க்கப்பட்டு வேறொரு இடத்தில் தனித்துவைக்கப்பட்டிருக்கும் அவர்களை நோக்கி நீள்கிறது ஆக்கிரமிப்பாளர்களின் கூரிய நகங்கள். இதை வாசிக்கும் பலருக்கு அந்த இருளிலும் இருளான கொடிய இரவுகள் நினைவில் வந்து எலும்புக்குருத்துக்களைச் சில்லிட வைக்கலாம். நாய்களும் அச்சத்தில் மௌனித்திருக்கும் வீதிகளில் இராணுவ வண்டிகள் கிரீச்சிட்டபடி வந்து நிற்கும். விளக்குகளை அணைத்துவிட்டு நாங்கள் சுவாசிக்கும் ஒலி எங்களுக்கே பேரதிர்வாய் கேட்க உயிர் உறைந்து மரணத்தின் காலடி நெருங்குவதைக் கேட்டிருப்போம். தடதடவென கதவுகள் நடுங்க அறைந்து பிறழ்ந்த தமிழிலோ சிங்களத்திலோ கூப்பிடுவார்கள். சிலரைத் தேர்ந்தெடுத்து பிடரியில் அறைந்து வண்டிகளில் ஏற்றிச்செல்வார்கள். அல்லது வண்டிகளை ஏற்றிக்கொல்வார்கள்.

‘த பியானிஸ்ட்’இல் ஒரு முதியவரை சக்கர நாற்காலியோடு தூக்கி மாடியிலிருந்து எறிந்துகொல்கிறார்கள். பிடித்துக்கொண்டு போனவர்களை கட்டிடத்தின் கீழேயே வைத்துச் சுட்டுக்கொல்கிறார்கள். பிடிவிலக்கித் தப்பியோடியவனின் தலையில் பாய்கிறது சன்னம். இராணுவ வாகனங்கள் நகரும்வரை, வெடித்தெழும் கண்ணீரையும் கதறலையும் நெஞ்சடக்கிக் காத்திருக்கிறார்கள் பெண்கள்.

ஷ்பில்மானின் சகோதரன் ஹென்ரிக்கை பொலிஸ் கைதுசெய்துகொண்டு போகிறது. தனது சகோதரனை விட்டுவிடும்படி ஏற்கெனவே பரிச்சயமான அந்த யூதப் பொலிஸ்காரனை மன்றாடுகிறான் ஷ்பில்மான். வழக்கமான பதிலை அவன் சொல்கிறான். “ஹென்ரிக்கை நான் காணவில்லை” இதே பதிலை ஈழத்தில் இராணுவ முகாம்களின் வாசல்களிலும் பொலிஸ் நிலையங்கள் முன்பும் காலையிலிருந்து இரவு வரை தவம்கிடக்கும் தாய்மார் அடிக்கடி கேட்க விதிக்கப்பட்டவர்கள். ஜேர்மானியர்களை நத்திப் பிழைக்கும் அந்த யூதப் பொலிஸ்காரன் ஷ்பில்மானின் கெஞ்சுதலுக்கு இறங்கிவந்து ஹென்ரிக்கை விடுதலை செய்கிறான். அந்தப் பொலிஸ்காரனுக்கு ஷ்பில்மான் மீது அவனது இசைத்திறமையினாலோ எதனாலோ வெளிக்காட்டப்படாத அபிமானம் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் நெஞ்சை உருக்கும் சில புகைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. சிங்கள இராணுவத்தினர் எறியும் உணவுப் பொட்டலங்களுக்காக கூட்டத்தில் இடிபட்டபடி கையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களாக தமிழர்கள் மாற்றப்பட்டிருந்தார்கள். கொஞ்ச நாட்களுக்கு அந்தப் புகைப்படங்கள் நினைவுக்கு வந்தபோதெல்லாம் கண்களில் கண்ணீர் நிறைந்து வழிந்தது. பிறகு… பிறகென்ன… நீங்கள் நினைப்பதுதான். ‘த பியானிஸ்ட்’இல் ஒரு முதிய பெண் தட்டில் கொஞ்ச உணவை எடுத்துக்கொண்டு வீடு நோக்கிச் செல்வாள். அதைத் தெருவாசியொருவன் தட்டிப்பறிக்கப் பார்ப்பான். அந்தப் பெண்ணுக்கும் அவனுக்குமான இழுபறியில் உணவு நிலத்தில் சிந்திவிடும். நிலத்தில் சிந்திய உணவை அந்த மனிதன் மிருகத்தைப்போல படுத்து நாக்கினால் வழித்துச் சாப்பிடுவான். அந்தப் பெண் திகைப்பும் ஆற்றாமையும் பொங்க அவனை அடித்து அடித்து அழுவாள். அவனோ அடியைப் பொருட்படுத்தாமல் ஒரு துளியும் விடாமல் உண்பதிலேயே கவனமாக இருப்பான். பசி மனிதர்களை மிருகங்களிலும் கீழாகச் சபித்துவிடுகிறது.

1942ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி.

யூதர்களில் பெரும்பாலானோரை புகைவண்டிகளில் ஏற்றி கண்காணாதோர் இடத்திற்கு அனுப்ப ஆயத்தப்படுத்துகின்றனர் ஜேர்மானியப்படையினர்.

“எங்களை எங்கே அழைத்துப் போகிறீர்கள்?”என்றொரு பெண் கேட்கிறாள். அவளது நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து ஒரேயொரு சூடு. அதுதான் அவளுக்கான பதில்.

புகைவண்டி நிலையத்தில் யூதர்கள் மிகச் சொற்ப உடமைகளுடன் கூடியிருக்கிறார்கள். கையில் வெறுமையான பறவைக் கூண்டோடு ஒரு சிறுமி கூட்டத்தினரிடையில் தன் பெற்றோரைத் தேடுகிறாள்.

“நான் ஏன் அப்படிச் செய்தேன்?”ஒரு பெண் புலம்பிக்கொண்டிருக்கிறாள்.

“எனது குழந்தை செத்துக்கொண்டிருக்கிறது. ஒரு சொட்டுத் தண்ணீர் தாருங்கள்”தாயொருத்தி கையில் துவண்டு தொங்கும் குழந்தையைக் கொண்டு அலைந்து திரிகிறாள்.

வீதிகளில் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன.

இத்தனை ஆரவாரங்களுக்கும் இடையில் ஒரு சிறுவன் இனிப்பு விற்றுக்கொண்டிருக்கிறான்.

“நான் ஏன் அப்படிச் செய்தேன்?”அந்தப் பெண்ணின் விசும்பல் நீள்கிறது.

இதற்குள் சிதறிப்போயிருந்த ஷ்பில்மானின் குடும்ப அங்கத்தவர்கள் ஒருவரையொருவர் கண்டுகொண்டு ஆரத்தழுவுகிறார்கள். குறைந்தபட்சம் தாங்கள் ஒன்றாக இருக்கமுடிவதில் ஆறுதல்கொள்கிறார்கள்.

“எங்களை எங்கே கொண்டு போகிறார்கள்?”முதியவர்கள் தங்களுக்குள் விசனத்தோடு கிசுகிசுக்கிறார்கள்.

“கடூழியத்திற்காக நாம் கொண்டுசெல்லப்படுகிறோம்”

“அங்கவீனர்கள், குழந்தைகள், பெண்கள்… இவர்களால் எப்படி வேலை செய்யமுடியும்?”

மௌனம் மரணத்தைக் கட்டியம் கூறுகிறது.

“நான் ஏன் அப்படிச் செய்தேன்?”அந்தப் பெண் கத்தியழுகிறாள்.

“அவள் அப்படி என்னதான் செய்துவிட்டாள்?”ஷ்பில்மானின் தங்கை பொறுமையிழந்து கேட்கிறாள்.

“வெளியேறும்படி ஜேர்மானியர்கள் உத்தரவிட்டபோது எங்காவது ஒளிந்திருந்து இங்கேயே தங்கிவிடலாமென்று அவள் நினைத்தாள். ஒளிந்திருக்கும்போது குழந்தை அழுதது. குழந்தையின் அழுகை ஒளிந்திருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்துவிடும் என்ற அச்சத்தினால் குழந்தையின் வாயைக் கைகளால் மூடி அதை அடக்கமுயன்றாள். ஆனால், அவர்கள் பிடிபட்டார்கள். குழந்தையும் மூச்சடங்கிச் செத்துப்போயிற்று.”

“நான் ஏன் அப்படிச் செய்தேன்…
நான் ஏன் அப்படிச் செய்தேன்…?”

புகையிரதம் மரணவண்டியென வந்து நிற்கிறது. அவர்கள் அதனுள் ஆடுமாடுகளைப் போல இழுத்தெறியப்படுகிறார்கள். தனது குடும்பத்தோடு புகையிரதத்தினுள் ஏறப்போன ஷ்பில்மானை ஒரு கை கூட்டத்திலிருந்து பிரித்து வெளியில் எறிகிறது. அந்த யூதப் பொலிஸ்காரனுடைய கைதான் அது. ஷ்பில்மான் தன் பெற்றோரை, சகோதரர்களை விளித்துக் கூவியழுகிறான். அவர்களை நோக்கி ஓட முயல்கிறான். பொலிஸ்காரன் அவனைத் தடுத்து நிறுத்திச்சொல்கிறான்.

“முட்டாளே! நான் உன் உயிரைக் காப்பாற்றியிருக்கிறேன். ஓடு”

விடை கிடைத்துவிட்டது.

புகைவண்டி வேகமெடுத்து மரணத்தை நோக்கி ஓடத்தொடங்குகிறது. பிணங்களும் பயணப்பெட்டிகளும் இறைந்துகிடக்கும் சூனியத்தெருக்களில், பாழடைந்த வீடுகளினூடே தன்னந்தனியனாக அழுதபடி நடந்துசெல்கிறான் ஷ்பில்மான். அவனது வீடு சூறையாடப்பட்டிருக்கிறது.

அதன்பிறகான அவனது நாட்கள் உயிர்தரித்திருப்பதற்கான எத்தனத்தில் கழிகின்றன. கடூழிய காலத்தில் சில புரட்சியாளர்களின் தொடர்பு அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் ஆயுதங்களை ஒளித்துவைக்க அவன் உதவிசெய்கிறான். கடூழியத்திலிருந்து தப்பித்து பாடகி ஒருத்தியின் உதவியால்- பூட்டப்பட்ட வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருக்கிறான்.

ஒருநாள் ஜேர்மானியர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் சண்டை நடக்கிறது. ஈற்றில் கிளர்ச்சியாளர்களை ஜேர்மானியர்கள் அடக்குகிறார்கள். எஞ்சியவர்களைச் சுட்டுக்கொல்கிறார்கள். அடைபட்டிருக்கும் வீட்டிலிருந்து அத்தனைக்கும் மௌனசாட்சியாகிறான் அந்த இசைக்கலைஞன். அவன் ஒளிந்திருக்கும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருந்து அவ்வப்போது யாரோ பியானோ வாசிக்கும் ஒலி கேட்கிறது. அவனை அது நிலைகொள்ளாமல் தவிக்க வைக்கிறது. எப்போதாவது கிடைக்கும் உணவினால் அவன் உயிரை இழுத்துப்பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறான். பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பீங்கான்கள் விழுந்து நொருங்கும் ஓசை அவனது ஒளிந்திருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. பக்கத்து வீட்டுப் பெண் அசூசையும் ஆத்திரமும் பொங்க ‘யூதன்… யூதன் இங்கே ஒளிந்திருக்கிறான்… பிடியுங்கள்’என்று கத்துகிறாள். அங்கிருந்து தப்பித்து ஓடுகிறான். ஆபத்தான காலங்களில் தொடர்புகொள்ளும்படியாக அவனிடம் கொடுக்கப்பட்ட முகவரி அந்தப் பெண்ணினுடையதாக – செலோ வாத்தியக்காரியினுடையதாக இருக்கக் காண்கிறான். காதல் மலர் கண்ணெதிரில் உதிர்கிறது. அவள் இப்போது வேறொருவனின் மனைவி.

அவளும் அவளது கணவனும் ஷ்பில்மானை வேறொரு வீட்டில் ஒளித்துவைக்கிறார்கள். எப்போதாவது உணவும் கிடைக்கிறது. அந்த வீட்டில் இருக்கும் பியானோ அவனது விரல்களை ஏங்க வைக்கிறது. ஆனால், அதை வாசிக்கும் கணத்தில் அவனது உயிர் பிரிந்துவிடும் என்பதை அவன் அறிந்திருக்கிறான். வெறுங்காற்றில் அவனது விரல்கள் இசைக்கின்றன. பசியும் தனிமையும் நீண்டநாள் தலைமறைவு வாழ்வும் அவனைத் தளர்ந்துபோகச் செய்கின்றன. அவன் மஞ்சள்காமாலையில் விழுகிறான். அவனுக்கு அடைக்கலம் கொடுத்தவளும் கையசைத்து வேறிடம் போகிறாள். இதனிடையில் அவனுக்கு எப்போதாவது உணவு கொண்டுவரும் மனிதனும் சுடப்பட்டு இறந்துபோகிறான். அவன் மீட்கப்படுவதற்காகக் காத்திருக்கிறான் நோயோடும், பசியோடும், நம்பிக்கையோடும்.

புரட்சியாளர்களுக்கும் ஜேர்மானியப் படைகளுக்குமிடையிலான சண்டையில் பீரங்கிகளால் அவன் இருந்த கட்டிடம் தாக்கப்படுகிறது. இடிபாடுகளுக்கிடையில், புகைமண்டலத்திற்கிடையில், பிணங்களின் மீது விழுந்தெழும்பி ஓடுகிறான். பார்த்துக்கொண்டிருப்பவர்களை மரணபயம் தொற்றிக்கொள்ளும்படியான காட்சி அமைப்பு அது. இசைக்கலைஞன் என்று கொண்டாடப்பட்டவன் இப்போது ஒரு பைத்தியக்காரனைப் போல உருமாறிவிட்டிருக்கிறான். தோற்றமும் நடத்தையும் மாறிவிட்டிருக்கின்றன.

மறுபடியும் புரட்சியாளர்கள் தோற்கிறார்கள். எல்லாப் பிணங்களையும் ஒன்றாகத் தெருவில் போட்டுக்கொழுத்துகிறார்கள் ஜேர்மானியர்கள். உங்களுக்கு என்ன நினைவில் வருகிறது? பதுங்குகுழியினுள் ஒன்றாகப் போட்டுப் புதைக்கப்பட்டவர்களா? ஒன்றாகக் குவித்து எரிக்கப்பட்டவர்களா?

அவ்வளவு பெரிய நகரத்தில் சிதைந்த கட்டிடங்கள் நடுவே ஒரு பைத்தியக்காரனின் தோற்றத்தில் காலை இழுத்தபடி நடந்துபோகிறான் அந்த இசைக்கலைஞன். அந்தக் காட்சி மனதில் எப்போதும் அழிக்கமுடியாத சித்திரமாகப் பதிந்திருக்கும். வைத்தியசாலை போல தோற்றமளிக்கும் ஒரு கட்டிடத்தினுள் ஒளிந்துகொள்ள வாகாக இடம்தேடுகிறான். பசியும் தாகமும் அவனைச் சிதைக்கின்றன. அந்நேரம் பியானோவின் ஒலி அந்தக் கட்டிடத்தினுள் மிதந்து வருகிறது. அது சித்தம்பிறழ்ந்த தன்னுடைய மனப்பிரமை என்றே அவன் எண்ணுகிறான். கைக்கு அகப்பட்ட ஒரேயொரு திரவ உணவு டின்னை உடைக்கமுயல்கையில் அது கையிலிருந்து வழுகிச் சென்று உருண்டோடிச்சென்று எவருடையவோ காலடியில் முட்டிநிற்கிறது.

ஜேர்மானிய அதிகாரி ஒருவன் நின்றுகொண்டிருக்கிறான். முடிந்தது! இத்தனை காலமும் அரும்பாடுபட்டுக் காப்பாற்றிக்கொண்டிருந்த உயிர் இதோ பறந்துவிடப்போகிறது என்றெண்ணுகிறான். இனி ஓடச் சக்தியில்லாத கால்களோடும் பஞ்சடைந்த கண்களோடும் அதிகாரியை வெற்றுப்பார்வை பார்க்கிறான்.

“நீ யார்? இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?”\

"…………."

“யூதனா? இங்கே ஒளிந்துகொண்டிருக்கிறாயா?”

“ஆம். நான் ஒரு பியானோ வாத்தியக்காரன்”

அந்த ஜேர்மானிய அதிகாரி அழைத்துச்சென்ற இடத்தில் ஒரு பியானோ இருக்கிறது. அதை வாசித்துக் காட்டும்படி பணிக்கிறான். உண்மையிலும் உண்மையாகவே ஒரு பியானோ! பசித்திருந்த, தாகித்திருந்த விரல்களுக்கும் ஆன்மாவுக்கும் உணவு. அடைக்கப்பட்டிருந்த சங்கீதம் மெதுமெதுவாகக் கசியவாரம்பிக்கிறது. பிறகு பேராழியின் ஆழம், புயலின் சீற்றம், ஆகாயத்தின் நீலம், நெருப்பின் பெருநடனம். பேருன்னதமான உலகொன்றினுள் அவன் விரல்கள் வழியாகப் பிரவேசிக்கிறான். ஜேர்மானியன் பிரமித்துப்போய் அமர்ந்திருக்கிறான்.

“அங்கே என்ன சத்தம்?”வாசித்து முடிந்ததும் ஷ்பில்மான் கேட்கிறான்.

“ரஷ்யர்கள் ஆற்றை நெருங்கிவந்துவிட்டார்கள். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். ஓரிரு வாரங்கள் காத்திருக்கவேண்டும்”

அந்த மனிதநேயமுள்ள அதிகாரி ஷ்பில்மானுக்கு உணவுகொண்டு வந்துகொடுக்கிறான். கிளம்புகையில் ஏதோ நினைத்துக்கொண்டவனாக தனது கோட்டைக் கழற்றிக்கொடுக்கிறான். ‘போர்முடிந்ததும் நீ என்ன செய்வாய்?’என்று கேட்கிறான். ‘நான் போலிஷ் வானொலியில் பியானோ வாசிப்பேன்’என்கிறான் ஷ்பில்மான் கண்கள் மினுங்க. ‘உனது பெயர் என்ன? நான் உனக்காக அந்த வானொலியைக் கேட்பேன்’என்றுகூறி விடைபெறுகிறான் அந்த அதிகாரி.

“நான் உனக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை?”கலங்குகிறான் ஷ்பில்மான்.

“கடவுளுக்கு நன்றி சொல். நாம் பிழைத்திருக்கவேண்டுமென்று அவன் விரும்பினான்”

கடைசியில் நமக்கு வாராத, வாய்க்காத அந்த நாள் அவனை வந்தடைகிறது. ரஷ்யர்களால் மீட்கப்பட்ட தெருக்களில் அவன் பேருவகையோடு நடந்துபோகிறான். பியானோ இசை பின்னணியில் ஒலிக்கிறது.

காட்சி மாறுகிறது. சிறைப்பிடிக்கப்பட்ட ஜேர்மானியர்கள் ஓரிடத்தில் அமரவைக்கப்பட்டிருக்கிறார்கள். விடுதலையான போலந்தியர்கள் அவர்களைப் பார்த்துக் கத்துகிறார்கள்.

“கொலைகாரர்கள்! கொலைகாரர்கள்”

அதிலொருவன் கோபத்தோடு விம்முகிறான்.

“நான் ஒரு இசைக்கலைஞன். எங்களுடைய எல்லாவற்றையும் அபகரித்தீர்கள். என் வயலினைப் பறித்துக்கொண்டீர்கள். என் ஆன்மாவை…”

சிறைப்பிடிக்கப்பட்ட ஜேர்மானியர்களிலிருந்து ஒருவன்-அந்தக் கருணையுள்ள அதிகாரி எழுந்து வருகிறான். ‘நீ ஒரு இசைக்கலைஞனா? உனக்கு ஷ்பில்மானைத் தெரியுமா? பியானோ வாத்தியக்காரன். அவன் ஒளிந்திருந்தபோது அவனுக்கு உணவுகொடுத்தேன். உதவி செய்தேன். நான் இங்கிருப்பதை அவனுக்குச் சொல்வாயா’ அந்த வயலினிஸ்ட் தலையசைக்கிறான். ஜேர்மானியனை இழுத்து அமர்த்துகிறார்கள் ரஷ்யர்கள்.

மறுபடியும் அதே வானொலி நிலையத்தில் பியானோ முன்னமர்ந்திருக்கிறான் ஷ்பில்மான். அவன் விரல்கள் வழியாக அழுதுகொண்டிருக்கிறான். தாயை, தந்தையை, சகோதரர்களை, மலர்ந்து உதிர்ந்த காதலை, இருப்பிற்காக நெருப்பில் நடந்த நாட்களை, கொல்லப்பட்ட தனது மக்களை நினைத்து உருகுகிறான். அந்நேரம் அவன் முகம்தான் எத்தனை வேதனையில் வெடித்துக்கொண்டிருந்தது!

“இதோ இடத்தில்தான் அவர்கள் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தார்கள். இதோ இங்கேதான் அந்த ஜேர்மானியன் அமர்ந்திருந்தான். உன்னைக் கேட்டான்”புல்தரையைக் காட்டுகிறான் நண்பன் பிறகொருநாள்.

பெருமூச்செறிகிறான் ஷ்பில்மான். பியானோ அமைதியின் ஆழத்திலிருந்து எழுந்து பொழிகிறது. மேலும் பொழிகிறது. பொழிகிறது.

‘தனது 88ஆவது வயதில் இறக்கும்வரை ஷ்பில்மான் வார்சோவில் வாழ்ந்திருந்தார்’என்ற வரிகள் திரையில் மேலுயர்ந்துசெல்கின்றன.

‘ரஷ்யப்படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட அந்த ஜேர்மன் அதிகாரி 1953ஆம் ஆண்டு சிறைக்குள்ளேயே மடிந்துபோனான்’ என்ற தகவலும்.

இப்போது பியானோ அதன் பாரத்தோடு நம்மேல் இறங்கியிருக்கிறது. அந்த இசையின் துயர் நமக்குள் கடத்தப்பட்டிருக்கிறது. அதிகாரத்தின் குரூரம் நம்மை ஏங்கியழ வைக்கிறது. அவலப்பட்டவர்களின் கண்ணீர் நம்மைக் குற்றவுணர்வுக்காளாக்குகிறது.

நினைத்துப் பார்த்தேன். இவ்வளவும் நடந்தது ஏறத்தாழ 64 ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு மனித ஆயுளிலும் குறைவான காலப்பகுதிக்கு முன்னர்தான். மானுடகுலத்தின் விரோதியெனப்பட்ட ஹிட்லர் பிறந்த ஜேர்மனி அமைதியாகிவிட்டது. மீட்பனாகத் திகழ்ந்த ரஷ்யா துண்டுதுண்டாகச் சிதறிவிட்டது. அறுபது இலட்சம் பேரை இனவெறிக்குத் தின்னக்கொடுத்த யூதர்கள் அதன்பிறகும் உயிர்த்திருந்தார்கள். அதட்டல்களையும் மிரட்டல்களையும் மீறி அவர்களுக்கென்றொரு நாட்டைப் பிறப்பித்தார்கள். ஈழத்தில் முப்பத்தைந்தாண்டு காலப் போராட்டம் பேரினவாதத்தாலும் அதன் பின்பல நாடுகளாலும் பிடுங்கியெறியப்பட்டுவிட்டது. மிருகங்களை அடைத்துவைப்பதைப் போல, வன்னியிலிருந்து கொண்டுவரப்பட்ட தமிழர்கள் தடுப்புமுகாம்கள் எனப்படும் வதைமுகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஹிட்லரின் நாஜிப்படைகளை நினைவூட்டும் இராணுவத்தினர் முகாம்களைச் சுற்றி முட்கம்பி வேலியிட்டு கண்துஞ்சாது காவல்புரிகின்றனர். நோய், பட்டினி, மனவழுத்தம், காணாமல் போதல் இன்னபிற காரணங்களால் அகதிமுகாம்களிலிருந்து
வாரத்திற்கு 1,400 பேர் இறந்தும் மறைந்தும் போவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. மூன்று இலட்சம் மக்களுக்குள் வைத்தியர்கள், சட்டம் படித்தவர்கள், ஆசிரியர்கள், இசைக்கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், மாணவர்கள், கவிஞர்கள், பொறியியலாளர்கள், விவசாயிகள், எழுத்தாளர்கள் உள்ளடங்குவர். மெதுவாக மிக மெதுவாக திட்டமிட்டு மூன்று இலட்சம் பேரையும் பேரினவாதிகள் காலிசெய்வதற்கு முன் நாம் கண்விழிக்காதிருந்தால், மரணக்குழிக்குள் புதைப்பதற்குமுன் நாம் அதற்கெதிராகக் குரலெழுப்பாதிருந்தால், நமது கதையைச் சொல்ல, எழுத, ‘த பியானிஸ்ட்’போல படமெடுக்க யாரும் இருக்கமாட்டார்கள்.

நினைவிருக்கட்டும். அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னிருந்த உலகம் இன்றில்லை. அது மேலிருந்து கீழாகிவிட்டது. நம்புவோம். நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே; துயர்ப்படுவதிலும், மீள உயிர்த்தெழுவதிலும்.

-------


வவுனியாவிலுள்ள தடுப்புமுகாம்களைப் பற்றி இவர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.

அமெரிக்கப் பேராசிரியர் பிரான்ஸிஸ் போய்ல்: இலங்கை முகாம்களில் இருக்கும் தமிழ் மக்கள் வாரத்திற்கு 1,400 பேர் இறக்கிறார்கள். அவை நாஜி வதைமுகாம்களைப் போன்ற மரணமுகாம்களாக இருக்கின்றன. இன்று நாம் இலங்கையில் பார்ப்பதும் இன அழிப்பே. இதை அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்.

புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன: வவுனியாவில் தமிழ்மக்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை.

புதிய சிஹல உறுமய கட்சியின் தலைவர் மனமேந்திர: இடி அமீன் மற்றும் பொல்போட் போன்ற சர்வாதிகார ஆட்சியாளர்கள் காலத்தில் கூட இவ்வாறான இடம்பெயர் முகாம்கள் காணப்பட்டதா என்பது சந்தேகத்திற்குரியது.

மனித உரிமைக் கண்காணிப்பகம்: அப்பாவிப் பொதுமக்களை அகதிமுகாம்களில் தொடர்ச்சியாக அடைத்துவைத்திருப்பதன் மூலம் அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார: மனிதர்களை மிருகங்களாக நடத்தாது, மனிதர்களாக மதித்து வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க: நம்பிவந்த தமிழ்மக்களை அரசாங்கம் பழிவாங்குகிறது. நம்பிவந்த மக்களை அரசாங்கம் மிருகங்களைப் போல நடத்துகிறது.

மனித உரிமைகள் பணியாளரான நிமால்கா பெர்னாண்டோ: போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று தமிழர்கள் நடத்தப்படவில்லை. மாறாக போர்க்குற்றவாளிகள் போலவே நடத்தப்படுகின்றார்கள்.

மேலே கருத்துச் சொல்லியிருப்பவர்கள் பெரும்பான்மைச் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களும், மேற்குலகைச்சேர்ந்தவர்களுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: உயிரோசை இணைய இதழ்

18 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

2007 ல் நான் இந்த படத்தைப் பற்றி என் பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கேன் தமிழ்நதி.. அப்போதும் இது சமகாலத்தில் நடப்பதைப்போன்ற காட்சி என்றே குறிப்பிட்டிருக்கிறேன்.. :(

வனம் said...

வணக்கம் இளவேனில்

ம்ம்ம்ம் சொல்லுரதுக்கு ஒன்னும் வார்த்தை இல்லாமல் இருக்கின்றேன்.

ஒரு தேர்ந்த நெசவாளியின் லாவகத்துடன் படத்தையும், சமகால நம் தமிழர்களின் நிலையையும்.

ஒரு கையாலாகாத தமிழக தமிழன் என்ற வகையில் எனக்கு அதிகமாகவே ஆற்றாமையும், கோபமும் இருக்கின்றது.

இராஜராஜன்

நேசமித்ரன் said...

புல்லாங்குழலின் கருத்த
தேமலில் உதிரம் படிந்த கைக்குட்டை

ஒற்றை கடவுளுக்கு எத்தனை கல்லறைகள்

முதிர்ந்த மரம் மண்ணுள் நீண்டிருக்கும்
ஆழத்தில் விழிக்க நேர்கிறது

புகைப்படத்தின் மூலச் சுருள்
மட்டும் மீதமிருக்கிறது ஓரம் சிதைந்து
செயல் செத்த செயற்கைக்கோள்

பறக்கும்
பறவையின் கால்கள்
உள்மடியும் உச்சி ஆகாயத்தில்
முதல் துளி நனைக்கிறது

இறைஞ்சிக் கொண்டிருக்கிறாள்
பிராயம் தொலைந்த பெண் பழைய
வாடிக்கையாளனை

அற்புதம் நிகழும் நாளுக்கான சுழற்சியை
இந்தக் கிரகம் எய்தும் அச்சுதூரம்
நேயத்தால் பகிரும் முத்தங்களால் ஆனது

இதே திரைப்படத்தை பார்த்த இரவில் எழுதிய கவிதை சகோதரி உங்கள் பதிவுக்கு பின்னூட்டமாகவும் பதிவாகவும் அஞ்சலிட்டு இருக்கிறேன்

இரவி சங்கர் said...

யூத இனத்திற்கு என்ன நடந்ததோ அது அப்படியே தமிழர்களுக்கும் நடக்கிறது. சமீப நாட்களாக படித்துக் கொண்டிருக்கிற பா.ராகவனின் "நிலமெல்லாம் இரத்தம்", Schindler's List போன்ற திரைப்படங்கள் அதை அப்படியே கண் முன் நிறுத்துகின்றன.

இன்று சானல் 4ல் வந்த கானொளியில் கண்ட காட்சி அப்படியே இப்படத்தில் உள்ளது. என்னை மிகவும் பாதித்த படம் Schindler's List.

அப்படி பாதிக்கப்பட்ட யூதர்களே எம்மை அழிக்க சிங்களவனுக்கு உதவியதுதான் கொடுமை.

The Pianist இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்க்கிறேன். நன்றி.

மஞ்சூர் ராசா said...

த பியானிஸ்ட் படம் உண்மையிலேயே போரினால் ஏற்படும் கொடூரங்களை மிக அற்புதமாக சொல்கிறது. அதே நேரத்தில் தற்போது வன்னியில் நடக்கும் கொடூரம் அதைவிட அதிகம் என்றுதான் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறேன். முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் அழிவதற்குமுன் ஏதேனும் ஒரு நல்ல மாற்றம் வரவேண்டும்.

irumugam said...

...................:(

இன்று சானல் 4ல் கண்ட காட்சி....

http://www.channel4.com/news/articles/world/asia_pacific/is%20this%20evidence%20of%20sri%20lankan%20aposwar%20crimesapos/3321087
prasanna.

SS JAYAMOHAN said...

EXCELLENT PRESENTATION...

வாசிக்கும் போது சோக இசை கேட்கிறது.

யூதர்கள் வென்றார்கள் !

நம் தமிழர்கள் ? !!


எஸ். எஸ் ஜெயமோகன்

Anonymous said...

என்னது காந்தி செத்துட்டாரா?

--சாருநிவேதிதா--

சந்தனமுல்லை said...

ஆழமான,காட்டமான இடுகை!

//நினைவிருக்கட்டும். அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னிருந்த உலகம் இன்றில்லை. அது மேலிருந்து கீழாகிவிட்டது. நம்புவோம். நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே; துயர்ப்படுவதிலும், மீள உயிர்த்தெழுவதிலும்.
//

நிச்சயமாக..நம்புவோம் தமிழ்நதி!

தமிழ்நதி said...

முத்துலெட்சுமி,

நானும் உங்கள் இடுகையைப் படித்த நினைவிருக்கிறது. நிறையத் திரைப்படங்கள் பார்க்கவேண்டுமென்ற பல நாள் தவனம் இப்போதுதான் நிறைவேறி வருகிறது.

ராஜராஜன்,

நன்றி. ஆம்… படம் முழுவதையும் கொஞ்சம் கோபத்தோடேயே பார்த்தேன். அதற்கு நம்மிடம் குறைவில்லையே…. நீங்கள் ஒருவர்தான் என்னை இளவேனில் என்று அழைக்கிறீர்கள். அது எனது வலைப்பூவின் பெயர்:)

நேசமித்ரன்,

உங்களது சில கவிதைகள் எனது வாசிப்பு எல்லையை மீறியனவாக இருக்கின்றன.

"இறைஞ்சிக் கொண்டிருக்கிறாள்
பிராயம் தொலைந்த பெண் பழைய
வாடிக்கையாளனை"

என்ற வரிகள் பிடித்திருந்தன. இதையொத்த வரிகளை ‘பரவாயில்லை’என்ற கவிதையில் நான் எழுதியிருக்கிறேன். ‘பாரவண்டிக்காரனிடம் ஐம்பது ரூபாயைப் பறிகொடுத்த நடுநிசி மல்லிகைப்பூக்காரியொருத்தி விசும்பியபடி வீடு திரும்பிக்கொண்டிருக்கிறாள்’என்று வரும். சில திரைப்படங்களைக் காலந்தாழ்த்திப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இரவி சங்கர்,

நீங்கள் குறிப்பிட்ட படத்தைப் பார்க்க நான் முயற்சி செய்கிறேன். சானல் 4இல் ஒளிபரப்பான அந்தக் காணொளியை நானும் பார்த்தேன். என்ன சொல்ல இருக்கிறது? சாட்சிகளற்று அரங்கேறிக்கொண்டிருக்கும் படுகொலைக்கு இதுவொரு சாட்சி. ஆயிரம் சாட்சியங்கள் வந்தாலும் இந்தியாவின், சீனாவின் செல்லப்பிள்ளையாக இருக்கும் சிறிலங்காவை ஒருவராலும் ஒன்றும் பிடுங்கிவிட முடியாது.

வாருங்கள் மஞ்சூர் ராசா,

நலமா? யூதர்களுக்கு இணையான கொடுமை வன்னியில் நடந்துகொண்டிருப்பதாகத்தான் அறிகிறோம். ஆனால், இயலாதவர்களின் கோபம் யாரை என்ன செய்யும்? இயலக்கூடியவர்கள் கைகட்டிப் பார்த்திருப்பதோடல்லாமல், கைதட்டி வரவேற்கவும் செய்கிறார்கள்.

இருமுகம்,

பார்த்தேன். அநேகமாக எல்லோரும் பார்த்திருக்கிறார்கள். பார்க்கவேண்டியவர்கள் மட்டும் பார்க்க விரும்பாமல் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள்.

எஸ்.எஸ்.ஜெயமோகன்,

நன்றி. கடந்த இடுகைக்கு நீங்கள் இட்ட பின்னூட்டத்திற்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்துக்கொண்டிருந்தேன். நாகார்ஜூனனின் ‘விழியின் கதை’என்ற இடுகைக்கு நான் இட்ட பின்னூட்டத்திற்கு கீழ்க்கண்டவாறு அவர் பதிலளித்திருக்கிறார்.

"தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை; எழுத்து, இலக்கியம் என்பதே குற்ற்த்துடன் தொடர்புடைய விஷயம் என ஷார்ல் போதலேர், ஃப்ரான்ஸ் காஃப்காவை முன்வைத்து ழார் பத்தாய் பேசுவார்."


எனக்கு மேற்கண்டவர்களைத் தெரியாது. நாகார்ஜூனன் படித்திருக்கிறார். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

அனானி அண்ணாச்சி,

“என்னது காந்தி செத்துட்டாரா?”

-சாரு நிவேதிதா-

என்ற உங்கள் பின்னூட்டத்தின் பூடகம் புரியவில்லை. நக்கல் எனக்கா? சாரு நிவேதிதாவுக்கா? காந்தி தேசத்திற்கா? அல்லது சாரு நிவேதிதாவே இட்ட பின்னூட்டமா இது? அவர் போன்ற பெருந்தெய்வங்கள் எனது வலைப்பூவிற்கு எள்ளுவதற்குக்கூட வர வாய்ப்பில்லை. யாராயிருப்பினும் என்னைப் பார்த்து நகைக்கிறீர்களாயிருந்தால், நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான் ‘தேர் இப்போதுதான் நிலைக்கு வந்திருக்கிறது’.

சந்தனமுல்லை,

நம்பிக்கை செத்துவிட்டது. நாம் மீண்டெழுதலுக்காகக் காத்திருப்போம்.

சின்னப்பயல் said...

வெகு முன்பே பார்த்த படம் தான் இது..தமிழ்நதியின் ஒப்பிடலுக்குப்பிறகு தான் உணர்கிறேன்...இந்த கையாலாகாத தமிழ்நாட்டு தமிழன்..வழமை போல்..

மாதவராஜ் said...

கண்கள் கலங்கிக்கொண்டே இருக்கின்றன...
//வெறுங்காற்றில் அவனது விரல்கள் இசைக்கின்றன.//
தாங்க முடியவில்லை!

வாழ்க்கை எவ்வளவு வேதனை தரக்கூடியதாயிருந்தாலும் நம்பிக்கையோடு மீண்டும் மீண்டும் துளித்துக்கொண்டுதான் இருக்கிறது.

மண்குதிரை said...

romba kanama irukku

G.S.Dhayalan said...

அன்புள்ள தமிழ்நதி ,

பியானிஸ்ட் சினிமாவை பார்த்த உணர்வு ஏற்பட்டது. விமர்சன வரிகளை நிரப்பியிருந்த உணர்வுகளால் உள்ளம் பதறியது. எழுத்துக்களிலிருந்து இசை உருவாவதை இப்பதிவிலிருந்து கேட்டேன். கூடவே அழுகையும், இயலாமையும் மனத்திரையில் ஓடின.

உங்கள் அரசியல் செயல்பாடுகளுடன் மனம் இணங்குகிறேன். குற்ற உணர்வில் புதையுண்டிருக்கும் தமிழக மக்களில் நானும் ஒருவன்.

ஜி.எஸ்.தயாளன்
gsdhayalan.blogspot.com

பாண்டியன் said...

நாடகம்:இலங்கையில் சுமூக நிலை
இடம்:கோபாலபுரம்
நடிகர்கள்:வேலூர் ஞான சேகரன்,அன்சர் அலி,மணி ஆட்டும் ஐயர்.. மற்றும் பலர்
இயக்கம் கதை திரைகதை:தமிழின கொலைஞர்

அனைவரும் வருக! நம் தலைவரின் நடிப்பினை காண்க,அடுத்த ஆஸ்காருக்கு தகுதி பெற உள்ளது!

Saba said...

You can check following films as well

Schindler's List,
http://www.imdb.com/title/tt0108052/
The Boy in the Striped Pyjamas , http://www.imdb.com/title/tt0914798/
Life is beautiful, http://www.imdb.com/title/tt0118799/
The Kite Runner,
http://www.imdb.com/title/tt0419887/

I wonder, Why did not we write anything about our life? We have thousands of experiences or story like these. Is n't it ?

Is there any book talk about our life?

Anonymous said...

SUBASH HERE,i am just 23 yrs, i read ur blog spot, tears came after reading, when i read MEIN KEMPH written by HITLER i thought what he did is right, but really its too horrible. u have good writing skill.

VNSUBASH@GMAIL.COM
http://vnsubash.blogspot.com/

KP Suresh said...

"நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே; துயர்ப்படுவதிலும், மீள உயிர்த்தெழுவதிலும்"
Nenju kanathu poivittathu. Valin kodumai purikirathu! Nallathu nadakka vendum!!! Ulagam Kai kodukka vendum!!!

Anbudan
K.P.Suresh