10.26.2009

எழுத்தும் வாசிப்பும்…


புத்தகங்களை உயிர்மூச்சென்று சொல்வது மிகைப்படுத்தலாகத் தோன்றினும், அதனோடு தொடர்புடையவர்களுக்கு சற்றேறக்குறைய அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே அவை இருந்துவருகின்றன. சிலருடைய அறைகளில் புத்தகங்கள் இருக்கின்றன. சிலர் புத்தகங்களின் அறைகளில் வசிக்கிறார்கள். மேசையில், கட்டிலுக்கு மேல், கட்டிலின் கீழ், பரண்களிலுள்ள அட்டைப்பெட்டிகளில், வரவேற்பறையின் இருக்கைகளில், குளியலறையில்… எங்கெங்கு திரும்பினும் புத்தகங்களாக இருக்கும் வாழ்விடங்களை நான் பார்த்திருக்கிறேன். பார்க்கும்போதெல்லாம், ‘இவ்வளவையுமா வாசித்திருப்பார்கள்?’என்ற கேள்வி எழுந்திருக்கிறது. வாசிப்பின் அளவிற்கேற்ப மௌனம் அவர்கள் மீது கவிந்துவிடுவதையும் அவதானித்திருக்கிறேன். (இதற்கு முரணான விதிவிலக்குகளும் இருக்கிறார்கள்) நிறையப் படிக்கிறவர்கள் தங்களை சாமான்ய உலகத்திலிருந்து விலக்கிக்கொண்டவர்களாக அன்றேல் விடுவித்துக்கொண்டுவிட்டவர்களாக, சாதாரண உரையாடல்களில் பங்கேற்காதவர்களாக இருப்பதையும் கவனிக்க முடிந்திருக்கிறது.
நூலகங்கள் மற்றும் புத்தகக் கடைகளின் மாயவசீகரம் இன்னதென்று இன்னுந்தான் புலப்படவில்லை। காலச்சக்கரம் அந்நேரங்களில் மட்டும் கடகடவென்று சுற்றுமாயிருக்கும். புத்தகத்தைக் கையிலெடுத்து புரட்டவோ ஒரு வரி வாசிக்கவோ கூட வேண்டியதில்லை. மின்விசிறிகள் மட்டும் அனத்திக்கொண்டிருக்கும் நூலகங்களின் அமைதியான அந்த நீள மண்டபங்களின் மர அலமாரிகளுக்கிடையில் புத்தகங்களின் பின்முதுகைப் பார்த்தபடி ஊடாடித் திரிதலே போதுமாயிருக்கும்.

அந்தக் கிறக்கம் குறைந்துவருவதுபோன்றதொரு கலக்கம். பிரபஞ்சன் அவர்களின் வார்த்தைகளின்படி ‘ஜீவித நியாயமாகிய’எழுத்தை சமகாலத்தில் ஆத்மார்த்தமாக நேசிக்கிறவர்கள் அருகிவருகிறார்களோ என்று தோன்றுகிறது. தொழில்நுட்ப விருத்தியின் நீட்சியென விரிந்த உலகமயமாக்கல் உலகை அதகளம் செய்துகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், மனிதர்களின் அகவுலகு சுருங்கி, புறவுலகு விரிந்துவருகிறது. நுகர்வுப்பைத்தியத்தில் தலை கிறுகிறுத்து நாம் அலைந்துகொண்டிருக்கிறோம். அச்சு ஊடகங்களின் இடத்தை கணினி விழுங்கிவிடுமோ என்ற கவலை மனதை மலைப்பாம்பைப்போல வளைக்கவாரம்பித்திருக்கிறது. இருந்தும் அச்சு ஊடகங்களின் இடம் அசைக்கப்படக்கூடியதல்ல என்று ஆறுதல் கூறுவாருமுளர்.

தமிழிலக்கியத்தில் அதிசயங்கள் நிகழ்ந்தாலொழிய ஒரு நூல் மறுபதிப்புக் காண்பது அரிதாகவே இருக்கிறது. கவிதைத்தொகுப்புகள், சிறுகதைகள், நாவல்கள் ஐந்நூறு அன்றேல் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் பதிப்பாவதில்லை. சில நூறு பிரதிகள் இழுத்துப் பறித்து விற்பனையாக, மிகுதி பதிப்பகங்களில் இடத்தை அடைத்துக்கொண்டு கிடப்பதைக் காண்கிறோம். ஒரு எழுத்தாளனின் நெஞ்சைக் குளிர்விக்கும் ஒரே விடயம் அவனுடைய-அவளுடைய நூல் மறுபதிப்புக் காண்பதாகவே இருக்கமுடியும். தன்னுடைய எழுத்து அநாதரவாகக் கிடப்பதைக் காண்பதைப் போன்ற துயரம் எழுத்தாளனுக்கு வேறில்லை. ‘எனக்காகவே எழுதுகிறேன்’என்ற பெரும்போக்காளர்கள் இதற்குள் அடங்கார்.

எழுத்தாளர்களே வாசகர்களாக இருக்கும் பேறுபெற்றதாக இருக்கிறது சமகாலத் தமிழிலக்கியம். மறுவளமாக, யாரோ சொன்னதுபோல எழுத்தாளரல்லாத வாசகரைக் காண்பது அரிதாகி வருகிறது. அவ்விதம் இருக்கையில், எழுத்தின் மீதான மதிப்பும் வியப்பும் பிரமிப்பும் பெரிதாக எதிர்பார்ப்பதற்கில்லை. எழுத்தாளனே வாசிப்பவனாகவும் இருக்கும் பட்சத்தில் வாசிப்பிற்கு இணையான தர்க்கச்சரடு ஒன்று மனதினுள் ஓடிக்கொண்டிருக்கவே வாய்ப்பு அதிகம். வாசிப்புடன் தர்க்கிக்கும் தன்மை சிறுவயதில் குறைவாக இருந்ததனாலேயே நிறைய வாசிக்க முடிந்திருக்கிறது. அறியாமை அறிவுக்கு இட்டுச்சென்றது. மேலும், மனிதர்களின் குணாதிசயங்களை அது கட்டமைக்கவும் செய்தது. பொய்யே பேசாத, இரக்கமே உருவான, அறிவின் சுடரொளி கண்கூசவைக்குமொரு மனிதர்களாய் நம்மை நாம் கற்பனிக்கவும் அந்த அறியாமை வழிவகுத்தது. இப்போது ஒப்பீட்டின் மமதையால், ‘நான் அறியாததா?’என்ற தன்னுயர்ச்சியில் அன்றேல் பெருமிதத்தின் காரணமாகவும் புரட்டப்படாமல் தூசிபடிகின்றன புத்தகங்கள். நாம் நிறைய இழந்துகொண்டிருக்கிறோம். ஒரு எழுத்தாளனின் ஒரேயொரு புத்தகத்தைப் படித்துவிட்டு, குறிப்பிட்டவரைக் ‘கரைத்துக் குடித்ததாக’ப் பாவனை பண்ணுகிறவர்களையும் நாம் பார்க்கத்தான் பார்க்கிறோம். எழுத்தாளரின் பின்புலமும் வாசிக்கும் கண்களில் படிந்திருக்கிறது. அதற்கியைபுற எழுத்து கொண்டாடப்படவும் பின்தள்ளவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

கழிந்துபோன ஆண்டுகளில் வாழ்ந்த எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது நாவல்கள், சிறுகதைகள், வரிகள் பற்றிய சிலாகிப்புகளை வாசிக்கும்போது அந்த மகோன்னதக் காலங்களுக்கு ஏங்குகிறது மனம். அண்மையில் சந்தித்த ஒரு நண்பர் மஹாகவியின் கவிதை வரிகளை கடகடவென்று சொல்லிக்கொண்டே வந்தார். சமகால வாசிப்பு இத்தனை ஆழம்போகாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. பூரணி-அரவிந்தனும்(குறிஞ்சி மலர்) வந்தியதேவன்-குந்தவையும் (பொன்னியின் செல்வன்), வேதா-நச்சியும் (ஜீவகீதம்), தாரணி-சூர்யாவும்(அலையோசை) இன்னமும் என் நினைவில் இருக்கிறார்கள்.

புதுமைப்பித்தன் ‘இதுதானையா பொன்னகரம்’என்று கசப்பு வழிய எத்தனை காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். தி.ஜானகிராமனின் யமுனா ‘இதற்குத்தானா பாபு?’என்ற வார்த்தைகளை குறுஞ்சிரிப்போடு நம்மைப் பார்த்து இன்னமும் உதிர்க்கவே செய்கிறாள். ஜெயகாந்தனின் கங்கா இத்தனை காலங்கழித்தும் நுரைசுழித்தபடி நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறாள். பாலமனோகரனின் பதஞ்சலி தண்ணீரூற்றில் வெள்ளந்தியாய் சிரித்தபடி இன்னமும் உலவித்திரிகிறாள். அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’நாற்காலிகளில் ஏறி உங்களுக்குள் குதிக்கவில்லையா? லா.ச.ரா.வின் அபிதா இப்போதும் பல விழிகளில் சுடரேற்றுகிறாள். ‘கங்கா! நான் உன்னை இழந்து போனேனேடி!’என்று கங்கைக்கரை ஓரத்தில்…. கலங்கியழுத செங்கை ஆழியானை ஒருபோதும் மறக்கமுடிவதில்லை. ஜனரஞ்சக எழுத்தென்றும் ஆன்மீகத்தில் இறங்கித் தொலைந்தார் என்றும் வர்ணிக்கப்படுகிற பாலகுமாரனின் ஸ்வப்னாவும் காயத்ரியும்கூட அவரவர் கம்பீரத்துடன் இருக்கத்தானே செய்கிறார்கள்! இப்போது உதிரியாக நிறையப் பேர் எழுதிக்கொண்டிருக்கிறபோதிலும், எஸ்.பொ. அம்பை, பிரபஞ்சன், ஜெயமோகன், அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், அ.முத்துலிங்கம், வண்ணநிலவன்… இவர்களுக்குப் பிறகான பட்டியலில் ஒரு தேக்கம் வந்து சேர்கிறது. எதிரிடும் வெறுமை திடுக்கிட வைக்கிறது. ஆக, கதைகளின் வரிகளை அருந்திக் கிறங்கியிருந்த வாசகன் இனி காலமூட்டத்தில் மறைந்துபோவானா என்று அச்சமாக இருக்கிறது.

இருந்தும், சென்னை போன்ற நகரங்களில் புத்தகக் கண்காட்சிகளில் கூட்டம் அலைமோதுகிறது। அந்தக் கூட்டத்தை எப்படிப் பொருள்கொள்வதென்று தெரியவில்லை. கடற்கரையையும் சினிமாவையும் தவிர்த்து சொல்லும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் அற்றதாக இருப்பதனால் வாராமல் வந்த கண்காட்சிகளில் கூட்டம் அள்ளுகிறதா? அன்றேல், நாம் நினைப்பது போலன்றி சனங்கள் இன்னமும் புத்தகங்களை நேசிக்கிறார்களா? ‘எப்படி எப்படி’களில் சனங்களுக்கு இன்னும் மயக்கம் இருக்கத்தான் செய்கிறது. மற்றும் பக்தி ஸ்டால்களையும் குறைசொல்வதற்கில்லை.

எது எப்படி இருந்தபோதிலும் புத்தகக் கண்காட்சி நெருங்க நெருங்க மனதுள் ஒரு பரவசப்படபடப்பு. புதிய புத்தகங்களின் வாசனை மோகாவேசம் தருவது. காலம் தன்னுணர்வற்றுக் கழிந்துபோகும் உன்னத தருணங்கள் புத்தகக் கண்காட்சிகளில்தான் வாய்க்கின்றன. தவிர, எழுத்தாளர்களின் முகதரிசனங்களுக்கும் குறைவில்லை. கடந்த தடவை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் ஈரவிழிகளுடன் வாசிப்புக்காக ஏங்கிக் கிடக்கும்போது, புதிய வெளியீடுகளையும் அள்ளிவருகிறோம்.

வாசிக்கப்படாத புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் குற்றவுணர்ச்சி பொங்குகிறது. ஒருநாள்… ஒருநாள்…. என்று காத்திருக்கிறோம். வாசிக்க ஆரம்பித்து முடிக்காமல் மூலை மடித்த புத்தகங்களும் நம்மோடு சேர்ந்து காத்திருக்கின்றன.

"மோகித்து ஒருதடவை சுகித்தபின்
முகம் திருப்பிக் கடக்கிற
நெஞ்சின் அதிர்வை நினைவுறுத்துகின்றன
கட்டிலில் காத்திருக்கும் புத்தகங்கள்…"

என்ற வரிகள் உண்மையிலேயே உணர்ந்து எழுதப்பட்டவை. நடைமுறை வாழ்வு நம்மைத் தின்று செரிக்கிறது. சிக்கல்கள் வண்டுகளாகித் தலைகுடைகின்றன. வியர்த்த விவாதங்கள் சிருஷ்டியின் தவனத்தைக் கலைக்கின்றன. நமக்கு அளிக்கப்பட்ட இந்த வாழ்வு அற்புதமானது; கண்டெடுக்கப்படவேண்டியவற்றின் கருவூலம் இதுவென்ற ‘ஞானோதயம்’ பளிச்சிடும் தருணங்களில் நாம் செய்யவேண்டியதைப் பட்டியலிடுகிறோம். ஆனால், வாழ்வின் குரூரங்களின் முன் மண்டியிட்டுத் தலைகவிழ்ந்து உன்னதங்களை இழந்துபோவதன்றோ நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது?


நன்றி: அம்ருதா
(அம்ருதாவில் தொடராக ஒரு பத்தி எழுதிவருகிறேன்)


17 comments:

சங்கர் said...

அருமையான பதிவு

//புதுமைப்பித்தன் ‘இதுதானையா பொன்னகரம்’என்று கசப்பு வழிய எத்தனை காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.//

மகாமாசானமாய் தான் மாநகரம் இன்றும் உள்ளது

//தி.ஜானகிராமனின் யமுனா ‘இதற்குத்தானா பாபு?’என்ற வார்த்தைகளை குறுஞ்சிரிப்போடு நம்மைப் பார்த்து இன்னமும் உதிர்க்கவே செய்கிறாள்.//

மோகமுள்ளை நினைக்கும் ஒவ்வொரு முறையும் மனதில் தோன்றும் வரிகள்

ஜேஜே-வை கணக்கிலெடுக்க மனமில்லையா??
// எது எப்படி இருந்தபோதிலும் புத்தகக் கண்காட்சி நெருங்க நெருங்க மனதுள் ஒரு பரவசப்படபடப்பு. புதிய புத்தகங்களின் வாசனை மோகாவேசம் தருவது..//

இந்த வருட கண்காட்சிக்கு இப்போதே தயாராகிகொண்டிருக்கிறேன்

//எஸ்.பொ. அம்பை, பிரபஞ்சன், ஜெயமோகன், அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், அ.முத்துலிங்கம், வண்ணநிலவன்//

கசீ சிவக்குமாரை படித்ததுண்டா?

soorya said...

தோழி,
மிக மிக அருமையான பதிவு.
அதெப்படி நான் எழுத நினைப்பதெல்லாம் நீங்கள் எழுதுகிறீர்கள். நான் வாசகனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.அதுசரி யார் அந்த மகாகவிப்ரியன் அவருக்கு என் வாழ்த்துகள்(ஹீ ஹீ)
நன்றி தோழி.

ச.முத்துவேல் said...

படிக்கிறவர்கள் தங்களை சாமான்ய உலகத்திலிருந்து விலக்கிக்கொண்டவர்களாக அன்றேல் விடுவித்துக்கொண்டுவிட்டவர்களாக, சாதாரண உரையாடல்களில் பங்கேற்காதவர்களாக இருப்பதையும் கவனிக்க முடிந்திருக்கிறது./

அப்ப எல்லாருமே அப்படித்தானா? நாங்கூட புதுசா கிறுக்குப்புடிக்க ஆரம்பிச்சிருக்கிறவன்.பயந்துபோயிருந்தேன். இப்பக் கொஞ்சம் தெம்பாயிடுச்சி.

நான் பேச நினைப்பதெல்லாம்.. என்று எல்லொரையும் சொல்ல வைக்கும் உளவியல் கண்டுபிடிப்புகள்.

ஒவ்வொரு வரிகளும் அர்த்தம் செறிந்துள்ளன. வாசிப்புப்பட்டியலிலிருந்து சில சிலாகித்துச் சொல்லியிருந்தீர்களே, அதையெல்லாம் நான் எப்போப் படிக்கப்போறேனோ தெரியல:(

தொடர் எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது.

Dr.Rudhran said...

எதிரிடும் வெறுமை திடுக்கிட வைக்கிறது
very well written. best wishes

Unknown said...

i like that cat image...

Baski.. said...

புத்தக கண்காட்சியின் கூட்டத்தை காணும் போதெல்லாம் எனக்கும் இதே தான் தோன்றுகிறது... அருமையான பதிவு.

SS JAYAMOHAN said...

வணக்கம் தமிழ் நதி,

ஆழமான-நல்ல சிந்தனை,
அழகான ஒரு பதிவு.
படிக்கும் போது
மனசு இதமாகிறது !

வாசிப்பது உள்ளத்தை
உழுவது போன்றது.

நம்மைப் பக்குவப்படுத்துவது.

வாசிப்பது ஒரு சுகம்.
வாசிப்பது ஒரு தவம்.


அன்புடன்
எஸ். எஸ் ஜெயமோகன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹைய்யா! உங்க ப்ளாக்ல மறுபடியும் பூனைக்குட்டி

இருங்க, மெதுவா படிச்சுட்டு வரேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

படிக்க படிக்க பல்வேறு உணர்வுகளை இதமும் பதமுமாக தருகிறது இந்த பதிவு.

எவ்வளவு அழகாய் மனிதர்களின் உள்ளுணர்வு ஆமாம், ஆமாம் என்று சொல்வது போல எழுதுகிறீர்கள்.

வாழ்த்துக்கள் தமிழ்

அம்ருதாவில் தொடர்ந்து எழுதும் பத்திகளை பதிவாகப் போடுவீர்களா?

பாண்டியன் said...

அக்கா!

சுமதி அவர்கள் எழுதிய ரவுத்திரம் பழகு எனும் நூல் படித்துவிட்டீர்களா மிக அருமையான புத்தகம்..எங்கேனும் கிடைத்தால் எனக்கு தெரியபடுத்தவும்
பாண்டியன்

விஷ்ணுபுரம் சரவணன் said...

தோழமைமிக்க தமிழ்நதி..

வணக்கம்.

இப்பத்தியை அம்ருதாவிலேயே வாசித்திருந்தேன். வாசிப்புலகம் சுருங்கிவிட்டது என சில இடங்களிலும் சுருக்கப்பட்டுவிட்டது என பல இடங்களில் நிரப்பிகொள்ளவேண்டிருக்கிறது. நெருக்கியடிக்கும் பொருளாதார உலகில் படிக்க என்று நாளின் ஒரு பகுதியை ஒதுக்க முடிவதில்லை பலராலும்.உயர்நிலை பொருளாதார வாழ்வு மீதான மோகமற்ற ஒருவரின் குறைவான பொருளீட்டல் என்பது இன்றைய உலகில் அவரை பிரித்தாளுகிறது. அவர் மீது திணிக்கப்படும் அளவுக்கதிகமான தேவைகளின் பொருட்டும், மருத்துவம், கல்வி போன்றவற்றில் அரசு மீதான நம்பத்தன்மையற்ற சூழலால் அவர் அணுகும் தனியார்மயத்திற்கான செலவீனங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் எவரும் நினைத்திராதது. வெளியூர் செல்கையில் 1 லி நீர் 14 ரூ கொடுத்து வாங்கிசெல்வோம் என 10 ஆண்டுகளுக்கு முன் யாரேனும் நினைத்திருப்பார்களா? நுகர்வு கலாச்சாரத்தில் நுழைந்து ஆண்டுகள் கணக்காகிவிட்ட வாழ்க்கைமுறை எது அத்தியாவசியம் எது அனாவசியம் எனும் அளவுகோளினை மாற்றிவிட்டிருக்கிறது. இம்மாதிரியான வாழ்க்கை சூழலில் முதலில் காவுகொள்ளப்படுவது மாணவர்களது விருப்பத்திற்கேற்ப கல்வி.. எது அதிக‌ பொருளீட்ட உதவுமோ அதுவே சிறந்த கல்வியாக கட்டமைக்கப்படுகிறது. வாசிப்பு என்பது அந்த உயர் பொருளீட்டும் கல்வி திட்டத்தை சார்ந்தே இருக்கச்செய்கிறது. இலக்கியம் வரலாறு என்பது பொதுபுத்தியில் கேலிக்குறியதாகியுள்ளது.
ஒருவர் 10 வகுப்புக்கு மேல் வரலாறு என்பதை அறியாமலே அவன் கல்விதிட்டத்தை முடித்து வேலைக்கு சென்றுவிடமுடியும் என்பதாக இருக்கிறது வாழ்வு. இது பொதுவானவர்களுக்கு..

விஷ்ணுபுரம் சரவணன்.

மெலிஞ்சிமுத்தன் said...

மகிழ்ச்சி
அருமையான பதிவு.
நெஞ்சு கனக்க வாசித்தேன்.

மெலிஞ்சிமுத்தன் said...

மகிழ்ச்சி
நல்ல பார்வை.

kadavai said...

வணக்கம்
அருமையான பதிவு,தங்களது பார்வையில் தென்பட்ட எழுத்தாளர்களின் வரிசை.
மு.பொ,விக்கிரமாதித்யன்,தேவதச்சன்,ஆனந்,தேவதேவன்....... என்றும்
நம்மிடம் வரிசைகள் இருக்கின்றன.
எப்போதுமே நாம் வரிசைப்படுத்தும்போது'.........'
வந்துவிடுகின்றன.எல்லா எழுத்துக்களிலும் எஞ்சியிருக்கும்'......'களின் அர்த்தங்களையும் மனச்சாட்சியோடு
நாமே உற்றுப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பதி said...

தமிழ் எழுத்துலகத்தைப் பற்றிய உங்களது கண்ணோட்டத்தை பகிர்ந்துள்ளீர்கள்...

நன்றாக உள்ளது...

வாசிப்பு தரும் போதைக்கு நிகர் ஏது???
:-)

எனக்கும் இந்த புத்தக கண்காட்சி கூட்டத்தப் பற்றி படிக்கும் போது இது போலத் தான் சந்தேகம் வரும். ஆனால், ஒரு முறையும் கலந்து கொள்ள வாய்ப்புக் கிட்டியது இல்லை.

இராயர் said...

எஸ்.ரா வை படித்து விட்டு பல நாட்கள் தூங்காமல் இருந்திருக்கேன்.

அது போன்று உங்கள் கவிதைகள் மற்றும் கதைகளை படித்து கொண்டுஇருக்கிறேன்.

Deepa said...

//மின்விசிறிகள் மட்டும் அனத்திக்கொண்டிருக்கும் நூலகங்களின் அமைதியான அந்த நீள மண்டபங்களின் மர அலமாரிகளுக்கிடையில் புத்தகங்களின் பின்முதுகைப் பார்த்தபடி ஊடாடித் திரிதலே போதுமாயிருக்கும்.
//


//எது எப்படி இருந்தபோதிலும் புத்தகக் கண்காட்சி நெருங்க நெருங்க மனதுள் ஒரு பரவசப்படபடப்பு. புதிய புத்தகங்களின் வாசனை மோகாவேசம் தருவது. //


//கடந்த தடவை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் ஈரவிழிகளுடன் வாசிப்புக்காக ஏங்கிக் கிடக்கும்போது, புதிய வெளியீடுகளையும் அள்ளிவருகிறோம்.
வாசிக்கப்படாத புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் குற்றவுணர்ச்சி பொங்குகிறது. ஒருநாள்… ஒருநாள்…. என்று காத்திருக்கிறோம். வாசிக்க ஆரம்பித்து முடிக்காமல் மூலை மடித்த புத்தகங்களும் நம்மோடு சேர்ந்து காத்திருக்கின்றன.
//

மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
மறக்க முடியாத‌ பதிவு.