8.28.2010

ஒரு பயணம் ஒரு புத்தகம்




அன்புள்ள மாதங்கி,

கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனால் மட்டுமென்றில்லை; ஏன் என்பதைக் கடைசியில் சொல்கிறேன். எதிரில் இருக்கும் ஆளோடு கதைப்பதைக் காட்டிலும் கடிதத்தில் நெருக்கமாக உரையாட முடிகிறது. ஆனால், இப்போதெல்லாம் கைப்பட யார்தான் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்? கணினியில் தட்டச்சி அனுப்புவதை மின்னஞ்சல் என்று அழகாகச் சொல்லிக்கொண்டாலும் இயந்திரவரிகள் என்பதே அதற்குப் பொருந்தும். ஒரு எழுத்து எழுதுவதாயிருந்தாலும் சுழியும் வளைவும் விசிறியும் நினைத்துத் தவிர்த்துவிடுகிறேன்.

எந்த வடிவத்தில் எழுத நினைத்தாலும், அதற்குள் இழந்த நிலம் எங்ஙனமோ புகுந்துவிடுகிறது. கண்ணீரும் இரத்தமும் சொரியவாரம்பித்துவிடுகிறது. அலைவுறும் சனங்களின் முகங்கள் எழுத்தாக உருத்திரளத் தொடங்குகின்றன. ‘விடுதலைஎன்ற சொல் தண்ணீரில் எழுத்தாகிவிட்டது. இழிவுசெய்யப்பட்டதன் கழிவிரக்கம் எழுதித் தீராதது. எல்லோரையும் சாகக்கொடுத்துவிட்டு தொலைவில் மூசிச் சுழன்றெரியும் தீயின் பெருநாக்கைப் பார்த்தபடி மயான மண்டபத்தில் அமர்ந்திருப்பதான மனோநிலை என்றும் இப்போதிருப்பதைச் சொல்லலாம்.

எல்லாம் ஓய்ந்துபோனதாக உணர்கிற இந்த இருண்ட காலத்தில் இதே தொனியில் தொடர்ந்து எழுதும் எழுத்தில் சலிப்பின் நிழல் படர்வதை அவதானிக்க முடிகிறது. ‘ஒப்புக்கு மாரடிக்கிறகுற்றவுணர்வும் நாளாக நாளாக மிகுந்துவருகிறது. மேலும், ஈழச்சிக்கலில் கையாலாகாமல் எழுதிக் கிழித்ததைத் தவிர என்ன கண்டோம்; ‘புலிவால்என்று பெயர்பெற்றதன்றி. புலி அழிக்கப்பட்டதெனில், வால் மட்டும் காற்றில் தனியாக இழைந்துகொண்டிருக்கலாகுமோ?

அபூர்வமாக எப்போதாவதுதான் மனம் பூக்கிறது. அண்மையில் பூத்தது இரயில் பயணத்தின்போது. (இரயிலுக்கு புகையிரதம் ஈடாகாது இல்லையா?) முதல்நாளிரவு பெய்த மழையில் பச்சையொளி விசிறி அசைந்துகொண்டிருந்த வயல்வெளிகளையும் மழை மிஞ்சிய பெருமரங்களையும் மேகங்கள் ஒய்யாரமாகத் துஞ்சிக் கிடந்த மலைகளையும் கண்பருகி கண்சொருகும் பயணம் வாய்த்தது. தனதழகை உணராத குழந்தைபோல இயற்கை செழித்துக் கிடந்தது. அதன்முன் மனிதர் ஒன்றுமேயில்லை என்று தோன்றியது. அப்படியொரு பச்சை. அப்படியொரு சோபிதம். அப்படியொரு ஒயில். அப்படியொரு வாளிப்பு. புகாருள் வரைந்து வைத்திருந்தாற்போலிருந்த புகையிரத நிலையங்களில் மழை பொறுக்கிக்கொண்டிருந்த புறாக்களைப் பார்த்தபோது அனாரின் கவிதையொன்று நினைவுக்கு வந்தது. தண்டவாள இரும்பில் தங்கத்துளியாகத் தொங்கிக்கொண்டிருந்தது மீத மழை. மழை கழுவிவிட்டிருந்த கருநீள வீதியில் அத்தனை அதிகாலையில் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தவன், இரயிலின் கண்ணாடிச் சட்டகத்துள் கச்சிதமான சித்திரமாக அடங்கினான். இந்த பத்தியில் மட்டும் இதுவரையில் ஐந்து இடங்களில்மழைதூறியிருக்கிறது. எல்லோருக்கும் மழையைப் பிடிக்கிறது. ஆனால், சில மனிதர்களைப்போல தனக்கு எந்த ஊரைப் பிடிக்கிறதோ அங்குதான் மழையின் கால்களும் சென்று இறங்குகின்றன போலும். ‘வடக்கில் வசந்தம்கொஞ்சம் மாற்றுக் குறைந்தாற்போலவே இருக்கிறது. சிங்களவர்கள் அதிகமும் வாழும் தென்பகுதி ஆறுகளின் கருணையால் அப்படிப் பொலிகிறது.

நினைத்ததற்கும் எழுதுவதற்கும் இடையிலிருக்கும் கடக்கமுடியாத இடைவெளியைப் போலவே வாசிக்க நினைத்ததற்கும் வாசித்ததற்கும் இடையில்கூட இடைவெளி அதிகந்தான். ‘வண்ணதாசன் கடிதங்கள்உம், ‘கிருஷ்ணன் வைத்த வீடும் உள்ளடங்கலாக இம்முறை அறுபத்தொரு புத்தகங்களை எடுத்துவந்திருந்தேன். ஒவ்வொரு பயணத்தையும் ஒவ்வொரு புத்தகங்களுடனேயே நினைத்துப் பார்க்க முடிகிறது. புத்தகவாசனை இல்லாத பயணங்கள் நினைவில் நிற்பதுமில்லை. மேற்கண்ட இரயில் பயணத்தை என்றைக்கும் ஞாபகத்தில் இருத்தியதுவண்ணதாசன் கடிதங்கள்’. வண்ணதாசன்(கல்யாண்ஜி), நண்பர்களுக்கு (33 பேருக்கு) எழுதிய கடிதங்களின் தொகுப்பே அந்நூல். நாட்குறிப்புகளுக்கும் கடிதங்களுக்கும் எப்போதுமே தனித்த வசீகரம் உண்டு. அவை அந்தக் குறிப்பிட்ட மனிதரின் வாழ்வு வரைந்த சித்திரங்கள் என்பதை நீயறிவாய். ‘வண்ணதாசன் கடிதங்கள்இல் ஒரு மெல்லிய மனதின் நுண்ணிய உணர்வுகளைப் படிக்க முடிந்தது. தாமரபரணியின் ஈரம் ஒவ்வொரு சொல்லிலும் ஊறியிருந்தது. எழுத்துக்கும் எழுதுபவருக்கும் இடையிலான ஊடாட்டங்கள், மங்கலம், மரணம், இலக்கியக் கூட்டங்கள், யார் யாருக்கு சிநேகிதம் இன்னபிறமுன்சுவட்டுக் குறிப்புகளை இவ்வாறான எழுத்துக்கள் வழியாகவே அறிந்துகொள்ள முடிகிறது. மதுவும் இலக்கியமும்பெருக்கெடுக்கும்விடுதியறை இரவுகள் நம்மைப் போன்ற பெண்களுக்கு விலக்கப்பட்ட கனிகள். ஆகையினால், பழங்கதையெல்லாம் புத்தகங்களைப் படித்தே அறியவேண்டியதாயிருக்கிறது.

மாதங்கி, ஆன்மாவின் கூப்பிடலுக்கும் அடையாள விழைதலுக்கும் இடையில் நடக்கும் இழுபறியில் முறுகித் திரிபிரிந்துகொண்டிருக்கும் மனதுக்கு அந்த எழுத்து எவ்வளவு இதந்தந்ததென்கிறாய்! வாசிக்கத் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் நமது மனோநிலைக்கியைபுற நம்மை வந்தடையும் உடனிகழ்வு உனக்கு என்றேனும் நேர்ந்ததுண்டா?

குறுங்குழுவாதத்திற்கு இலக்கிய உலகமும் விதிவிலக்கன்று. அதன் எழுதா விதிகள் புதிதாக எழுத வருபவர்களைத் திகைப்பூட்டுகின்றன. ‘நான் நினைத்தால் உன்னைத் தூக்கி நிறுத்தமுடியும்என்று மார்தட்டுகிறவர்களுக்கும்நினைத்தால் என்னால்
உன்னைச் சாய்த்துவிட முடியும்என்று கண்ணுக்குள் சுட்டுவிரல் நீட்டி ஆட்டுபவர்களுக்கும் குறைச்சலில்லை. நதி என்று கால்கழுவ கழிவு காலில் தட்டுப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. யாரையும் சாராதிருந்து எழுதுவதனால் உண்டாகும் தனிமைக்கு நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ளவில்லையானால், பிறகென்னதேக்கந்தான்! இந்நிலையில், வண்ணதாசனின் கடிதங்களில் வாசிக்க நேர்ந்த வரிகள் ஆறுதலளிப்பனவாக அமைந்திருந்தன. வல்லிக்கண்ணனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

மலைச்சுனை போலவும் வனச் சிற்றோடை போலவும் எங்கோ, யாருக்காகவோ என்ற நிச்சிந்தையில் அழுக்கற்றுக் காலம் கழிந்துவிடுமாகில் எனக்கும்கூட அது உவப்பானதுதான்

ரவி சுப்பிரமணியனுக்கு எழுதிய கடிதத்திலும் அத்தொனியே.

இந்த மழைக்கால இருட்டில் இந்தப் படிக்கட்டுகள் போல வாழ்வும், இந்த மண் விளக்குகள் போல நானும் இருந்துவிடலாம். யாராவது ஏற்றுவார்கள். யாருக்காவது வெளிச்சம் தெரியும்.

பிறகொரு கடிதத்தில் ரவிக்கு இப்படி எழுதியிருக்கிறார்.

மேடையில் உன்னதக் கலைஞர்கள் இசைத்துக்கொண்டு இருக்கையில், நான்ஆம்ப்ளிபயர்மேற்பார்க்கிற இரண்டு சிறுவர்களில் ஒருவனாக இருந்துவிடச் சம்மதம். மினுமினுக்கிற நட்சத்திரங்களின் கீற்று முனைகள் அழகுதான். நான் எருக்கலஞ்செடியோரம் வீசப்பட்டிருக்கிற பிளிஸ்டர் தகடாக, மாத்திரைக் காகிதமாகக் கிடந்தால் போதும்.”

என்னளவில் இது போதும்என எத்தனை பேரால் இருந்துவிட முடிகிறது? ஓட்டப்பந்தயத்தில் உன்னதங்கள் பின்தங்கிவிடக்கூடும். ஆயின், அது பின்னடைவா எனில் இல்லைத்தானே? பேய்க்கூச்சல்களைச் சிம்பொனியென்று கொண்டாடும் பொய்மையுலகத்திலிருந்து நாம் விலகியிருப்பதொன்றே உய்வதற்கு ஒரே வழி என்று நான் நினைத்துக்கொண்டேன்.

வர வர அரசியல்வாதிகள் பரவாயில்லை என்று தோன்றவாரம்பித்துவிட்டது.

என் ஒரே ஆறுதல், உண்மையும் பாசாங்கு அற்றதும் ஆன என் முகமும் என் வரிகளும் அங்கீகரிக்கப்படுவதுதான். இதே முகத்துடனும் இதே வரியுடனும்தான் எங்கும் இருக்கிறேன்.”

எனக்கு சொல்லத் தெரியவில்லை மாதங்கி. தரவரிசைகள், பட்டியல்கள் ஆக்கம் சார்ந்து இல்லாமல் ஆட்கள் சார்ந்ததாக வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில், வண்ணதாசனின் மேற்கண்ட வரிகளை நான் கடன்வாங்கிக்கொள்ளலாமென்றிருக்கிறேன்.

நிறைய வாசிக்கவும் நிறைவாய் எழுதவும் எப்போதும்போல ஆசை. நம்மால் விசிறியடிக்கப்படும் ஒரு குவளைத் தண்ணீரில் மூழ்கிப்போவோம் என்பதறியாமல் சின்னஞ்சிறிய தேங்காய்த் துண்டைப் பெரும்பிரயத்தனத்தோடு தூக்கிப் போய்க்கொண்டிருக்கும் எறும்புகளைப் போலத்தானே நாமும்? எங்கே எப்போது இந்த இருப்பும் சிதறும் என்பதறியா அநித்திய வாழ்வு. எனது சிக்கல்கள் தீரும் நாள் தொடுவானம் போல தள்ளித் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. அதேசமயம், ‘துயரமே எழுத்தின் ஊற்றுக்கண்என்று யாரோ(தாஸ்தயேவ்ஸ்கி?) சொன்ன நினைவும் வருகிறது.

எப்படி இருக்கிறாய் மாதங்கி?’ என்று உன்னிடம் சம்பிரதாயத்திற்குக் கேட்டு வைக்கிறேன். மாதாமாதம் அம்ருதா பத்திக்காக நினைவுறுத்தும் தளவாய் சுந்தரத்திடம்இனி கடிதமே எழுதித் தருகிறேன்என்று சொல்லிவிடட்டுமா? கட்டுரை வடிவம் திடீரென்று பிடிக்காமற் போய்விட்டதற்கு கூடுதல் காரணம் என்னவென்கிறாய்…‘வண்ணதாசன் கடிதங்கள்வாசித்த பாதிப்பன்றி வேறென்ன?


பிரியங்களுடன்
தமிழ்நதி

நன்றி: அம்ருதா

அன்பு நண்பர்களுக்கு,

நீண்ட இடைவெளியின் பின் இணையத்திற்குத் திரும்பியிருக்கிறேன். இனித் தொடர்ந்து எழுதவேண்டுமென்று நினைத்திருக்கிறேன். நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன:)

28 comments:

ஜோதிஜி said...

வருக வருக

இளைய அப்துல்லாஹ் said...

நல்லாயிருக்கு தொடருங்கள்

சத்ரியன் said...

//யாரையும் சாராதிருந்து எழுதுவதனால் உண்டாகும் தனிமைக்கு நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ளவில்லையானால், பிறகென்ன… தேக்கந்தான்! //

தமிழ்,

எப்போதாவது தான் உங்கள் ஆக்கங்களை வாசிக்க (எனக்கு) வாய்க்கிறது. நதியோட்டம் போன்ற நெளிவுசுழிவுகளுடைய உங்கள் எழுத்தோட்டத்தை அனிச்சையாய் நேசித்துக்கொண்டிருப்பதை உணர முடிகிறது.

தொடர்ந்து எழுதுங்கள். ஒரு வாசகனாய் யாசிக்கிறேன்.

Anonymous said...

ப்ரியம் ப்ரியத்திற்காகவே என்பார் வண்ணதாசன்.
அதுபோல் மனம் தடவிசெல்லும் மயில் இறகு வுங்கள் எழுத்து.
ராஜகுமாரனுக்கு மாதங்கி எழுதியது போல.......காத்திருக்கறேன்

Jerry Eshananda said...

வணக்கம் தமிழ்,வெகு நாட்களுக்கு பிறகு,மனசுக்கு இதமான வாசிப்பு,மனிதனுக்கு சலிக்காத விசயங்கள் நிறைய இருக்கிறது,மலை,மழை,மழலை,அருவி,நீரோடை,கடல்,வானம்,இப்படி நீண்டு செல்லும் பட்டியலில் "உங்கள் எழுத்து எனக்கு பிரதானமாய் இருக்கிறது."தொடர்ந்து எழுதுங்கள் தமிழ்,உங்களைப்போன்றோரின் எழுத்துக்களால் தான் எங்கள் உணர்வுகளை தக்கவைக்கமுடிகிறது

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நினைப்பதெல்லாம் நடக்கவா செய்கிறது என்பதற்காக நினைக்காமல் இருக்கலாமா ? நடத்திக்காட்ட முயலாமல் இருக்கலாமா? வாங்க வாங்க :)

தமிழ்நதி said...

வரவேற்பு நன்றாக இருக்கிறது. எழுதுகிறேன் பேர்வழி என்று கொடுமை செய்யவில்லை என்று நினைக்கிறேன்:)

நன்றி ஜோதிஜி, அனஸ், சத்ரியன், முத்துலெட்சுமி (பெயர்க்குழப்பம் இன்னமும் நீடிக்கிறதா?)

வாங்க செளகாந்திகம், இது நீங்கள்தானே? இந்தப் பெயரையெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கிறீர்கள்? 'உ'வை 'வு'என்பதிலிருந்தே உங்களை நான் கண்டுபிடித்துவிடுவேன்.

நன்றி ஜெரி, உங்கள் வலைப்பக்கத்திலும் சொல்லியிருந்தீர்கள். புகழ்ச்சி என்றறிந்தும் அதை விரும்பாத மனசு உண்டா? எழுதவேண்டும் என்பதற்காக எழுதாமல் எப்போது தோன்றுகிறதோ அப்போது எழுதலாம் என்றே நினைக்கிறேன். ஓய்வும் அலைக்கழிவும் கலந்த மூன்று மாதங்களின் பி்ன் திரும்பியிருக்கிறேன். உங்களைப் போன்றவர்களின் உற்சாக அழைப்பு நெகிழவைக்கிறது.

Hai said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். வருக வருக.

Mohan said...

சுண்டி இழுக்க வைக்கும் எழுத்து உங்களுடையது. தொடர்ந்து எழுதுங்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெயர் பிரச்சனை இப்ப இல்லைங்க நதி.. ஆனா சும்மா சண்டைக்கலையற மாதிரி தமிழ்பதிவு இருந்துச்சுன்னா அப்பப்ப ஆங்கிலப்திவுக்கு போயிடுவேன் பாவம் அவங்க சிரமப்படக்கூடாதேன்னு ஆங்கிலத்திலயும் போட்டுவச்சிருக்கேன்.. :)

senthil said...

நீண்ட இடைவெளிக்கு பிறகு வண்ண தாசனிடம் கடன்வாங்கி
வந்துல்லிர்கள் ,....

அருமயான பதிவு ,,,,
என்னை மரவாதிருப்பிர்கள் என்று நன்புகிறேன் அக்கா ,,,,

ஹேமா said...

எப்பவும் உங்கள் எழுத்து நீரோடைபோல.இதமாக ரசித்தேன்.

Unknown said...

தமிழ்,

வெகு நாள் கழித்து உன் எழுத்தை வாசித்து மகிழ்ந்தேன்.

சில விஷயங்கள் திகட்டவே திகட்டாது. கல்யாணிஜியும் கவிதைகள் அப்படிப்பட்டவைதான். நிலா பார்த்தல் எனும் தலைப்பே எத்தகைய கவித்துவமாக இருக்கிறது!

வண்ணதாசனைப் பற்றி ஒரே பதிவில் எப்படி எழுதிவிட முடியும் தமிழ்? நீ விட்ட இடத்திலிருந்து நான் எழுத ஆசைப்படுகிறேன் ;)))) உன் நந்திதாவிடம் அதையும் சேர்த்துச் சொல்லிவிடு......


//எங்கே எப்போது இந்த இருப்பும் சிதறும் என்பதறியா அநித்திய வாழ்வு. எனது சிக்கல்கள் தீரும் நாள் தொடுவானம் போல தள்ளித் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. //

”தொடுவானம் ரொம்ப தூரம் தொட்டுப் பார்க்க ஆசை உனக்கு...கையோடு சேருமோ.....இல்லை கனவாக மாறுமோ” (சுசீலாவின் குரலில் எங்கோ கேட்ட பாடல் வரி நினைவிற்கு வந்தது தமிழ்) ஆனால் தொடுவானம் தொலைவில் இல்லை, நிச்சயம் தொட்டு விட ந்ம்மால் முடியும் தமிழ்!
எழுதுவோம்! நமக்கு அதுவே மருந்து நம்மை மீட்டெடுக்க வார்த்தைகள் அன்றி வேறு எதுவும் இல்லை.... உன்னுடன் கதைப்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சி ;))

Dhanaraj said...

WELCOME BACK.

சின்னப்பயல் said...

//தரவரிசைகள், பட்டியல்கள் ஆக்கம் சார்ந்து இல்லாமல் ஆட்கள் சார்ந்ததாக வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில்,//

இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..?

Bibiliobibuli said...

Welcom back.

//இழிவுசெய்யப்பட்டதன் கழிவிரக்கம் எழுதித் தீராதது//

மொத்தப்பதிவின் சாராம்சம் ஒற்றைவரியில்.

யாத்ரா said...

என் பிரியத்திற்குரிய வண்ணதாசன் அவர்களைப்பற்றி உங்கள் எழுத்துக்களில் வாசிப்பது மிகுந்த நெகிழ்ச்சியாயிருக்கிறது. வண்ணதாசன் அவர்களை நீங்கள் வாசித்த ரயில் பயணம் மட்டுமல்ல, தகுந்தாற்போல் சென்னையில் தொடர்ச்சியாக மழை பொழிந்து கொண்டிருக்கும் இப்பருவத்தில் வண்ணதாசன் அவர்கள் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.எவ்வளவு கடுமையான கோடையிலும் அவரை வாசிக்கும் போது சுற்றிலும் மழை பொழிந்து கொண்டிருப்பதான உணர்வே ஏற்படும்.அப்படியொரு மனிதர் மனசு எழுத்து.

ஸ்டாலின் குரு said...

சிங்கம் தின்று போட்ட பிணங்களின் எச்சங்களை உண்டு
வாழும் ஒட்டுண்ணிகளை விட புலி வாலாயிருப்பது
மேலானது என்று சொல்ல முடியவில்லையா
உங்களுக்கு.?

பட்டம் கொடுப்பது பெயர் வைப்பது என்று ஒன்னாப்பு ரெண்டாப்பு
தரத்தையே தாண்டாத பயபுள்ளைக என்னலாம் பேசுதுங்க...அரம்
அசாத்தியத்துக்கே அம்பு தொடுக்கிறேன் ....அதிகாரத்தை நோக்கி
கொரல் கொடுக்கிறேன்(அது சரி அதிகாரத்தைதுவத்தை நோக்கி கொரல்
கொடுத்தா மாமியார் வீட்டுக்குள்ள போக வேண்டி இருக்கும்)...
தொரை என்னமா இங்க்லீஷு பேசுது என்கிற விதத்தில் இவர்களைப்
பார்க்கும் வாசகர்களை உருவாக்கி வைத்திருக்கும் தமிழ் சூழலைத்தான்
குறை சொல்ல வேண்டும்(கூர்க்காக்கள் திருடுவதற்கு கூட குறை சொல்லப்பட
வேண்டிய தமிழ்சூழலை நான் மட்டும் எப்படி விடுவது :).....

உங்கள் பதிவு வழக்கம்போல அருமை.விமர்சிக்க நான் இலக்கியவாதி
இல்லை என்பதால் அதிகம் சொல்ல ஒன்றும் இல்லை

ஸ்டாலின் குரு said...

புலிவால்’என்று பெயர்பெற்றதன்றி. புலி
அழிக்கப்பட்டதெனில், வால் மட்டும்
காற்றில் தனியாக இழைந்துகொண்டிருக்கலாகுமோ?//


சிங்கம் தின்று போட்ட பிணங்களின் எச்சங்களை உண்டு
வாழும் ஒட்டுண்ணிகளை விட புலி வாலாயிருப்பது
மேலானது என்று சொல்ல முடியவில்லையா
உங்களுக்கு.?

பட்டம் கொடுப்பது பெயர் வைப்பது என்று ஒன்னாப்பு ரெண்டாப்பு
தரத்தையே தாண்டாத பயபுள்ளைக என்னலாம் பேசுதுங்க...அரம்
அசாத்தியத்துக்கே அம்பு தொடுக்கிறேன் ....அதிகாரத்தை நோக்கி
கொரல் கொடுக்கிறேன்(அது சரி அதிகாரத்தைதுவத்தை நோக்கி கொரல்
கொடுத்தா மாமியார் வீட்டுக்குள்ள போக வேண்டி இருக்கும்)...
தொரை என்னமா இங்க்லீஷு பேசுது என்கிற விதத்தில் இவர்களைப்
பார்க்கும் வாசகர்களை உருவாக்கி வைத்திருக்கும் தமிழ் சூழலைத்தான்
குறை சொல்ல வேண்டும்(கூர்க்காக்கள் திருடுவதற்கு கூட குறை சொல்லப்பட
வேண்டிய தமிழ்சூழலை நான் மட்டும் எப்படி விடுவது :).....

உங்கள் பதிவு வழக்கம்போல அருமை.விமர்சிக்க நான் இலக்கியவாதி
இல்லை என்பதால் அதிகம் சொல்ல ஒன்றும் இல்லை.

தமிழ்நதி said...

நன்றி செந்தில், அரைக்கிறுக்கன், மோகன், ஹேமா, தன்ராஜ்.

முத்துலெட்சுமி... பெயர்க்குழப்பம் அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும். ஷேக்ஸ்பியர் சொல்லியிருக்காராம்... 'What is in a name?That which we call a rose
By any other name would smell as sweet.':)

உமா,

'நிலா பார்த்தல்'மாதிரி நிறையக் கவிதைகள் எனக்கு மனப்பாடம். அது என்னவோ அவர் கவிதைகள் மட்டும் ஞாபகத்தில் படிந்துவிடுகின்றன. நீயும் எழுது அவரைப் பற்றி. தங்களைப் பற்றிய அலப்பறைகள் மத்தியில் இப்படியும் சிலபேர் இருப்பதுதான் ஆறுதல்.

எழுதும்போது ஏதோவொன்று மனதுள் வந்து புகுந்துகொண்டுவிடுகிறது. அதுவே நம்மைச் செலுத்துகிறது. அதற்காகவே தொடர்ந்து எழுதுகிறோம். நமக்கு அங்கீகாரமோ அடையாளமோ தரப்படுத்தலோ வேண்டாம் தாயி! 'பிச்சை வேண்டாம்.. நாயைப் பிடி'தொனியில் இதை வாசி்க்க வேண்டுகிறேன்.

சின்னப்பயல்,

"இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..?"

ஊருக்குப் போயிருந்தேன் சின்னப்பயல். 'கவி'என்றால் குரங்கு எனவும் பொருள்படும்:)

ரதி,

ஒரு நாளில் ஒரு நிமிடமாவது அந்தக் கழிவிரக்கத்தை உணராமல் இல்லை. ஒரு ஆதர்சத்தை நோக்கிய நகர்வு... நொடியில் தகர்ந்துபோனதாய்... பேசிப் பேசி என்ன கண்டோம்? எழுதியும்...:(

நன்றி யாத்ரா,

வண்ணதாசன், மனதின் ஈரத்தைத் தனது எழுத்துக்களால் நினைவூட்டுபவர். இந்தப் பின்னவீனத்துவம், முன்னவீனத்துவம் இதெல்லாம் வந்தாலும், அப்படியான (வண்ணதாசன், வண்ணநிலவன், தி.ஜா.)எழுத்துக்களுக்கென்று ஒரு தனி இடமுண்டு அல்லவா?

ஸ்டாலின் குரு,

"சிங்கம் தின்று போட்ட பிணங்களின் எச்சங்களை உண்டு
வாழும் ஒட்டுண்ணிகளை விட புலி வாலாயிருப்பது
மேலானது என்று சொல்ல முடியவில்லையா
உங்களுக்கு.? "

நிறையத் தடவை சொல்லியாயிற்று. இப்போது சொல்வதை நிறுத்திவிட்டேன். மனச்சோர்விலிருந்து மீண்டெழ முயன்றுகொண்டிருக்கிறேன். தவிர, தேவையற்ற விவாதங்கள் மனவுளைச்சலைத் தருகின்றன. யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உண்மை எங்கோ இருக்கிறது தோழனே.

'ரொம்ப நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறாளே'என்ற பரிவில் நிறையப் பின்னூட்டங்களாகப் போட்டுவிட்டீர்கள். குறைந்தபட்சம் பத்து இருக்கும். இரண்டைப் பிரசுரித்திருக்கிறேன். எப்போதும்போல வந்து வாசித்து ஏதாவது சொல்லுங்கள். போதும்.

ஆறுமுகம் said...

\\ஒரு குவளைத் தண்ணீரில் மூழ்கிப்போவோம் என்பதறியாமல் சின்னஞ்சிறிய தேங்காய்த் துண்டைப் பெரும்பிரயத்தனத்தோடு தூக்கிப் போய்க்கொண்டிருக்கும் எறும்புகளைப் போலத்தானே நாமும்? எங்கே எப்போது இந்த இருப்பும் சிதறும் என்பதறியா அநித்திய வாழ்வு.//

என்ன சொல்ல?

Deepa said...

அன்று தான் நீங்கள் இடுகை எழுதி வெகு நாட்களாகின்றதே என்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். உங்கள் எழுத்தில் அழகியல், உண்மை, இனம்புரியாத ஒரு நெருக்கம் எல்லாமும் வெளிப்படுகிறது தமிழ்நதி.
:) தாக‌ம் தீர‌ வாசித்தேன்! (இன்னும் தீர‌வில்லை என்ப‌து வேறு விஷ‌ய‌ம்)

ஸ்டாலின் குரு said...

யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும்
உண்மை எங்கோ இருக்கிறது தோழனே//

ம்ம்

'ரொம்ப நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறாளே'என்ற பரிவில்
நிறையப் பின்னூட்டங்களாகப் போட்டுவிட்டீர்கள். குறைந்தபட்சம்
பத்து இருக்கும். இரண்டைப் பிரசுரித்திருக்கிறேன்.

send error report வந்து page close ...ஆனதால் மீண்டும் மீண்டும் அனுப்பினேன்.:)

எப்போதும்போல வந்து வாசித்து ஏதாவது சொல்லுங்கள். போதும்.//

நிச்சயமாக ...

umavaratharajan said...

தங்கள் பதிவைப் படித்தேன். பரந்தாமன் வெளியிட்ட 'கலைக்க முடியாத ஒப்பனைகள்' காலம் தொட்டு
வண்ணதாசனின் தீவிர வாசகன் நான். அவருடைய எழுத்தின் மென்மை , அவரிடமும் இருப்பதை நேரில்
சந்தித்த போது உணர்ந்து கொண்டேன்.அவரைப் பற்றய தங்கள் பதிவு மகிழ்வைத் தந்தது.
தங்கள் எழுத்தைக் கடித வடிவுக்கு மட்டுப் படுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அந்தக் கணத்தில்
மனம் எந்த வடிவத்தை சிக்கென்று பற்றிக் கொள்கிறதோ அதற்கு நம்மை அர்ப்பணிப்பதுதான் சரி.
வாழ்த்துகள்.

விஷ்ணுபுரம் சரவணன் said...

வண்ணதாசனின் எழுத்துக்களுக்கான வாசகர்களில் இப்போது எழுதிவரும் படைப்பாளில் பலரும் அடங்குவர். நமக்குள் கிடக்கும் கதைகளை எழுத தூண்டும் திறன் அவரிடம் இருக்கிறது. மிகுந்த அழகுணர்ச்சியோடு எழுதப்பட்டிருக்கும் கதைகள் அல்லது அந்த கதைகளின் ஒரு பகுதி அவரது கடிதங்களில், கவிதைகளில் பார்க்கலாம்.

அளவற்ற அன்பு பரிமாற்றத்தை எத்தனை முறை அவர் எழுதும்போது அதன் வேறொரு கோணம் தெரியவரும்.

அவரின் படைப்புகளை தொடர்ந்து வாசித்தவர்கள் மற்ற மனிதர்களிடம் முன்னைக்காட்டிலும் அதிக நெகிழ்வாக பழகுவார்கள்.

எனக்கு ஒருவர் கொஞ்சம் பணம் தரவேண்டியிருந்தது. நான் கேட்க தயங்கிக்கொண்டிருந்த சூழலில் இளங்கோ கிருஷ்ணன்தான் " நீ கல்யாண்ஜி அதிகம் படிச்சி நெகிழ்ந்து போறேன். உனக்கு பணம் தருபவர் தரவில்லை என்றால் நேரா நேல்லைக்கு போய் கல்யாண்ஜி கிட்ட உங்களாலத்தான் இப்படி ஆயிட்டேன். அதனால் அந்த பணத்தை நீங்களே தந்திடுங்க என்று சொல்லி கேடக வேண்டியிருக்கும் பார்த்துக்க.." என சொல்லியது நினைவுக்கு வருகிறது [ பெருமை பீத்தக்காரனடா நீ என சொல்வது கேட்கிறது.. என்ன செய்ய.. இப்படி நமக்கு நாமளே பில்டப் செஞ்சிக்கவேண்டியதான்]

தமிழ்நதி said...

நன்றி தீபா, ஆறுமுகம், ஸ்டாலின் குரு (மீண்டும்:) தீபா... எழுதவேண்டுமென்று எனக்கும் ஆவல்தான். ஆனால், என்ன செய்வது? எழுத்து அதுவாக வரவேண்டுமல்லவா?

நன்றி வரதன்

"தங்கள் எழுத்தைக் கடித வடிவுக்கு மட்டுப் படுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அந்தக் கணத்தில்
மனம் எந்த வடிவத்தை சிக்கென்று பற்றிக் கொள்கிறதோ அதற்கு நம்மை அர்ப்பணிப்பதுதான் சரி."

நீங்கள் சொல்வது உண்மையே. அந்த நேரம் அந்தக் கடிதங்கள் தந்த நெகிழ்வு அப்படி எழுதவைத்துவிட்டது. உங்கள் வலைத்தளத்தை தமிழ்மணத்துடன் இணைத்துவிட்டீர்களா? 'அரசனின் வருகை'இன்று வாசிப்பேன்.

சரவணன்,

வண்ணதாசனின் எழுத்து மனிதர்களை நேசிக்கத் தூண்டுவது. அதையொருவர் பேஸ்புக்கில் குறை சொல்லியிருந்தார்.(அவரை உங்களுக்கும் தெரியும்)திட்டிவிடலாமா என்று நினைத்தேன். ஆனால், 'அறிவு அம்மட்டே'என்று விட்டுவிட்டேன். கழுதைக்கு கற்பூரவாசனை தெரியாமல் இருப்பது கழுதையின் குற்றமல்லவே...:)

லேகா said...

தமிழ்,

வண்ணதாசன்,தமிழ் இலக்கிய வாசிப்பின் மீதான பிரியம் கூடிட எனக்கான ஒரே காரணம். பொலிவற்ற எந்த விஷயத்தையும் அழகு கூட்டி எளிதாய் வாசகனிடம் கொண்டு சேர்ப்பிக்க வண்ணதாசனால் மட்டுமே முடிகின்றது.உறவுகளை அதிக வாஞ்சையோடு அணுக தூண்டும் எழுத்து இவருடையது.எதன் பொருட்டும் வெறுக்க முடியாத படைப்புகள் இவருடையவை. இப்பொழுது கூட வண்ணதாசனின் "பெய்தலும் ஓய்தலும்" தொகுப்பை தான் வாசித்து கொண்டிருக்கின்றேன்.அடிக்கடி யோசிக்கும் ஒரு விஷயம்,எப்படி வண்ணதாசனின் கதை மாந்தர்கள் மட்டும் இத்தனை சௌந்தர்யம் ஏந்தி உலவுகின்றனர் என்று :-)

ஒரு கட்டத்திற்கு மேல் அயர்ச்சி தரும் எழுத்து இவருடையது என்னும் குற்றச்சாட்டை என்னால் ஏற்று கொள்ள இயலாது.அப்படி சொல்லுபவர்கள் வாழ்கையில் நெகிழ்ச்சியான தருணங்களை உணர தவறியவர்களாகவே இருக்க கூடும் :-)

நெல்லை ரவீந்திரன் said...

நினைத்ததற்கும் எழுதுவதற்கும் இடையிலிருக்கும் கடக்கமுடியாத இடைவெளியைப் போலவே வாசிக்க நினைத்ததற்கும் வாசித்ததற்கும் இடையில்கூட இடைவெளி அதிகந்தான்.

உங்களுடைய எழுத்துக்களை இன்று தான் முதன் முதலாக வாசித்தேன். மிகவும் தெளிந்த நீரோடை போல இருக்கிறது. தமிழ் நாட்டில் எழுத தெரியாதவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று கூறிக் கொண்டு திரிகிறார்கள். ஆனால், புற சூழலில் முற்றிலுமாக அந்நிய மொழி நிலவும் சூழலில் உங்களுடைய தமிழ் மொழி நடை, வார்த்தை பிரயோகம், கருத்து செறிவு இப்படி பலவும் என்னை கவர்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் வாசகனாய் கேட்கிறேன்.