
சென்னையில் நடந்துகொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியைப் பற்றி ஆளாளுக்கு எழுதுகிறார்கள். அதையெல்லாம் வாசித்ததும் எனக்கும் விரல்கள் குறுகுறுவென்றிருந்தது. நீண்ட நாட்களாகப் பதிவு போடாதது வேறு பெரிய கொலைக்குற்றம் போல உறுத்திக்கொண்டிருந்தது. சரி வருவது வரட்டும் என்று எழுத உட்கார்ந்துவிட்டேன்.
வாங்குகிற புத்தகங்களையெல்லாம் வாசிக்கிறேனோ இல்லையோ எங்காவது ‘புத்தகக் கண்காட்சி’என்று ஒரு அறிவிப்பைப் பார்த்தால் போதும். ஏதோ விருந்துச்சாப்பாட்டிற்கு ஏங்கும் பிச்சைக்காரனைப்போல (பாருங்கள் மகாஜனங்களே உவமையை) அந்த நாளை நினைத்துக்கொண்டேயிருப்பேன். கடந்த ஆண்டு எவ்வளவோ முயற்சி செய்தும் புத்தகக்கண்காட்சி முடிந்து பத்து நாட்கள் கழிந்தபின்பே சென்னையில் வந்திறங்க முடிந்தது.
முதல்நாள் போனால் ஆரவாரம் அதிகமாக இருக்குமென்று யாரோ சொன்னதால், மறுநாள் வியாழக்கிழமை காலை பதினொரு மணிக்கு எனது பரிவாரங்களோடு போனேன். காவலுக்கு நின்றிருந்த பொலிசார் விரைந்து வந்து மதியம் இரண்டு மணிக்குப் பின்னரே பொதுமக்களை அனுமதிக்க முடியும் என்று திருப்பியனுப்பிவிட்டார்கள். ‘உங்களோடு வந்த ராசி சரியில்லை’என்று என்னோடு வந்திருந்த ‘பகுத்தறிவாளர்’பொய்யாக அலுத்துக்கொண்டார். வீட்டிற்குத் திரும்பி உண்டு உறங்கி மீண்டும் ஐந்து மணிக்கெல்லாம் கண்காட்சியிலிருந்தோம்.
முன்புறமே கன கோலாகலம். புதிப்பகங்கள் மற்றும் புத்தகங்களின் பெயர்களை உள்ளடக்கிய பெரிய பெரிய ‘பானர்’கள் காற்றிலாடின. சுவரொட்டிகள் கண்பற்றி இழுத்தன. நாங்கள் மொத்தம் ஐந்துபேர்(அதில் இருவர் ‘கலர்’பார்க்க வந்தவர்கள்) கூட்டத்தில் கலந்து காணாமற்போனோம். இந்த இணையக்காலத்தில் இத்தனை பேர் அச்சில் வரும் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறார்களா என்று வியப்புத் தாங்கவில்லை. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் ஒவ்வொரு விற்பனையறை என்ற வகையில் வலதும் இடதுமாய் இருபுறமும் கடைகள். கூடத்தின் முடிவில் சென்று திரும்ப மீண்டும் வலதும் இடதுமாக பதிப்பகங்களின் பெயர்களுடன் விற்பனையறைகள். நானூற்றுச் சொச்சம் என்று சொன்னார்கள். ஆரம்பத்திலேயே இருந்த ‘விகடன்’காட்சியறைக்குள் கால்மிதித்து இடிபடுமளவிற்குக் கூட்டம் நிறைந்திருந்தது. ஒருபுறமாய் உள்நுழைந்து மறுவழியால் வெளியேறும் வழியில் எடுத்த புத்தகங்களுக்கு காசு கொடுக்கவேண்டும்.(பின்னே சும்மாவா… அது கிடக்க, ஏன் இத்தனை வர்ணனை என்பவர்களுக்கு: என்னைப்போல புத்தகத்தில் பைத்தியம் கொண்டலையும் பலபேர் அமெரிக்கா, லண்டன் இங்கெல்லாம் இருக்கக்கூடும். ‘போக முடியவில்லையே…’என்று பதைத்துக்கொண்டிருப்பவர்களைப் பதிவு போட்டு ஆற்றுகிறேனாம்.)
பெரியவர்கள் (வயதில்) நாங்களே ஒருவரையொருவர் நின்று நின்று தேடிக்கொண்டிருக்க, வழியெல்லாம் காலிடறி கையிடறி ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் தொலையாமலிருப்பது எப்படி என்ற கேள்விக்குப் பதிலாக ஒரு அறிவிப்பு ஒலித்தது. இன்ன பெயருடைய, இன்ன நிறத்தில் சட்டை போட்ட குழந்தையைத் தேடிக்கொண்டிருந்தார்கள். மணிமேகலைப் பிரசுரத்தில் கண்ணாடியோடு நின்றிருந்த ஒருவரை லேனா தமிழ்வாணன் என்று நண்பர் காட்டினார். அந்தக் காட்சியறையில் நடிகர் ராஜேஷ் இருந்து வாசகர்களுக்கு ஏதோ விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். “அங்கே போனால்…. ‘எப்படி… எப்படி…? என்ற தலைப்பில் நிறையப் புத்தகம் வாங்கலாம்”என்று நண்பர் கூறினார். எனக்கு ‘எப்படி’களில் ‘அப்படி’யொரு ஒவ்வாமை. விலக்கி நடக்க, என்னோடு வந்திருந்தவர்களில் ஒருவர் ‘ராஜேஷைப் பார்த்தேயாக வேண்டும்’என்று அடம்பிடித்தார். சற்று தயங்கி எட்டிப் பார்க்க ராஜேஷ் அவரைப் போலவே இருந்ததைக் கண்டேன்.
‘இவர்தான் ஞாநி’, ‘இதுதான் நல்ல புத்தகம்’என்று கூட வந்த நண்பர் அறிமுகப்படுத்திக்கொண்டே வந்தார். உயிர்மை பதிப்பக காட்சியறையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் இருந்தார். பிரபலமான ஒரு வில்லன் நடிகர் மற்றும் சாயம்போன குர்த்தா அணிந்து தோளில் ஜோல்னாப்பை தொங்க அலைந்த, எங்கேயோ பார்த்த ஞாபகத்தைக் கிளற வைத்த முகங்கள் எனப் பலரைக் காணமுடிந்தது. இதற்கிடையில் புத்தகக் கனம் ஏற, ஐந்நூறு ரூபாய்த்தாள்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்ததை இடையில் கவனிக்க நேர்ந்தது. தரமான எழுத்துக்களைப் பதிப்பிக்கும் பதிப்பகங்கள் என்று அறியப்பட்டிருந்தவற்றில் அல்லது அவ்வாறு ஊட்டப்பட்டிருந்தவற்றில் கூட்டம் இருந்தது. சில விற்பனையறைகள் வெறிச்சோடிப் போயிருந்தன. சிறுவர்களுக்கான நூல்கள், கணினி தொடர்பான நூல்கள், கணினியில் பாவிக்கப்படும் தமிழ் எழுத்துக்கள், யுனிகோட்… இன்னபிற, இசைத்தட்டுக்கள் மேலும் இதுவரை விருதுபெற்றவர்களின் பட்டியல் போன்ற சகலமானவற்றுக்கும் தனித் தனிக் காட்சியறைகள் இருந்தன.
புத்தகப் பசியில் நடந்து திரிந்தபோது வயிறும் கூடுமானவரை தனது இருப்பை நினைவுபடுத்திக்கொண்டேயிருந்தது. ஈற்றில் ஒரு அவசரகதியில் சுற்றியடித்து வெளியில் வந்து உணவகத்தில் அமர்ந்து மாப்பசை வடையும், எண்ணெயில் மிதந்த சமோசாவும் சாப்பிட்டோம். அங்கே சுவாரசியமான, வேக வேகமாகப் பேசுகிற, பிரபலமான ஈழத்து எழுத்தாளர் ஒருவரையும் சந்திக்கும் ‘பேறு’பெற்றோம். எங்களோடு வந்த நண்பர் அந்த எழுத்தாளரோடு ‘சம்பாஷணை’க்குப் போய்விட, எஞ்சிய நால்வரும் களைப்போடு வெளியில் வந்தோம். வெளியில் போடப்பட்டிருந்த மேடையில் ஒருவர் கைகளை ஆட்டி ஆட்டிப் பேசிக்கொண்டிருந்தார். பின்வரிசையில் இருந்தவர்கள் தமக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
கழிப்பறை வசதிகள் இல்லாதிருந்தமை குறித்து வேறொரு பதிவர் எழுதியிருந்தார். புத்தகப் பிரியர்களுக்கு இயற்கை உபாதைகள் இருக்காதென்று ஒருங்கமைப்பாளர்கள் நினைத்தனரோ என்னவோ தெரியவில்லை. தவிர, புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தவர்களில் ஏறத்தாழ எண்பது சதவீதத்தினர் ஆண்கள்தான். சென்னையைப் பொறுத்தவரை வெளியிடங்களில் ஆண்களுக்கு கழிப்பறை தேவையில்லை என்பதை வழி தெருவெல்லாந்தான் தினந்தோறும் காண்கிறோமே…!
இன்னும் ஒருநாள் நிதானமாகப் போய் புத்தகங்களை மேயலாமென(கழுதை?)எண்ணி, வீட்டில் அதைச் சொன்னபோது 13ஆம் திகதி போகலாமென ஏகோபித்த குரலில் சொன்னார்கள். காரணம் கேட்டால் அன்றைக்கு நடிகர் சூரியா ஏதோ ஒரு பதிப்பகத்தின் காட்சியறைக்கு வருகை தருகிறாராம். கட்டாயம் போகவேண்டியதுதான்…! சூரியாவை நேரில் பார்க்காதுபோனால் இந்த ஜென்மம் பாழாய்ப் போய்விடுமல்லவா…?
வாங்கிய புத்தகங்கள்: எனது தரவுக்கோர்வைக்கென எழுதிய பட்டியலை உங்களுக்கு உதவலாம் என்றெண்ணி இணைத்துள்ளேன். படம் காட்ட அல்ல.கண்ணீரைப் பின்தொடர்தல் - ஜெயமோகன்
ராஸ லீலா – சாரு நிவேதிதா
வெங்காயம் - (பெரியார் பற்றிய நூல்) சி. அண்ணாமலை
கலகம் காதல் இசை – சாரு நிவேதிதா
தொலைகடல் - உமா மகேஸ்வரி
கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள் - ரமேஷ்-பிரேம்
தப்புத்தாளங்கள் - சாரு நிவேதிதா
நடந்து செல்லும் நீரூற்று – எஸ். ராமகிருஷ்ணன்
இன்னும் சில சிந்தனைகள் - சுஜாதா
அக்கிரகாரத்தில் கழுதை – வெங்கட் சாமிநாதன்
நாக மண்டலம் - கிரீஷ் கர்னாட் (தமிழில் பாவண்ணன்)
மேடம் பவாரி – குஸ்தாவ் பிளாபர் (தமிழில் மாரிசாமி)
தகப்பன் கொடி – அழகிய பெரியவன்
கவர்மென்ட் பிராமணன் - அரவிந்த மாளகத்தி
ஹோ சி மின் ஜெயில் டைரி – தமிழில் சுரா
அன்னா அக்மதோவா கவிதைகள் - தமிழில் லதா ராமகிருஷணன்
சிலைகளின் காலம் - சுகுமாரன்
இன்றைய மலையாளக் கவிதைகள்
கிருஷ்ணப் பருந்து – ஆ. மாதவன்
கவிதைகளுடன் ஒரு சம்வாதம் - ஞானக்கூத்தன்
புலப்படாத நகரங்கள் - இடாலோ கால்வினோ – தமிழில் சா.தேவதாஸ்
யாரோ ஒருத்தியின் நடனம் - மகுடேசுவரன்
சுள்ளிக்காடும் செம்பொடையனும் - மஜீத்
நாலுகட்டு – எம்.டி. வாசுதேவன் நாயர் - தமிழில் சி.ஏ.பாலன்
தாகூரின் கவிதைகள் - வி.ஆர்.எம்.செட்டியார்
மைக்கேல் ஆஞ்சலோ - இளஞ்சேரன்
உறக்கமற்ற மழைத்துளி – கல்யாண்ஜி
ஏழாவது பூ (மலையாளச் சிறுகதைகள்) தமிழில் சுரா
பலி பீடம் - கிரீஷ் கார்னாட் (தமிழில் பாவண்ணன்)
களவுபோகும் புரவிகள் - சு.வேணுகோபால்
கண்ணாடியாகும் கண்கள் - நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
பெண் ஏன் அடிமையானாள்? – தந்தை பெரியார்
நினைவோடை (ஜி. நாகராஜன் குறித்து) சுந்தர ராமசாமி
ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள் - சுந்தர ராமசாமி
மண்ணும் சொல்லும் (மூன்றாம் உலகக் கவிதைகள்) வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை
விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க்கதையாடல்களும் - தொகுப்பு அ.மார்க்ஸ்,பொ.வேல்சாமி
பெரியார் - அ.மார்க்ஸ்
அம்பானி – ஒரு வெற்றிக் கதை – என்.சொக்கன்
மனுதர்ம சாஸ்திரம் - திருலோக சீதாராம்
சகோதரிகள் - அலெக்சாண்டிரா கொலோண்டை
மரப்பசு - தி.ஜானகிராமன்
மோகமுள் - தி.ஜானகிராமன்
அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்
மகாமுனி – பிரேம்-ரமேஷ்
பலஸ்தீனக் கவிதைகள் - தொகுப்பு:எம்.ஏ.நுஃமான்
அந்நியன் - ஆல்பர் காம்யு
கறுப்புக் குரல்கள் - ஆபிரிக்கப் பழங்குடியினரின் கவிதைகள்
வலி – அறிவுமதி
கொலை மற்றும் தற்கொலை பற்றி – ரமேஷ்-பிரேம்
ஏறுவெயில் - பெருமாள் முருகன்
தீராநதி நேர்காணல்கள் - மணா
பரதேசி – ரமேஷ்-பிரேம்
தேசாந்திரி – எஸ்.ராமகிருஷ்ணன்
பெண்குல வரலாறு – அ.பாக்கியம்
இன்று – அசோகமித்திரன்
சொல்லிலிருந்து மௌனத்துக்கு –(நேர்காணல்கள்) பவுத்த அய்யனார்
மண் - ஜெயமோகன்
இரவு மிருகம் - சுகிர்தராணி
தண்ணீர் - அசோகமித்திரன்
பிள்ளை கெடுத்தாள் விளை – சுந்தர ராமசாமி (கதை-எதிர்வினை)
பச்சைத் தேவதை – சல்மா
புதுமையும் பித்தமும் - க.நா.சுப்பிரமண்யம்
நினைவோடை (ஜீவா குறித்து) சுந்தர ராமசாமி
விசாரணைக் கமிஷன் - சா.கந்தசாமி
பயணப்படாத பாதைகள் - அ.சீனிவாஸன்,எம்.சிவசுப்ரமணியன்