2.22.2007

படம் காட்டுறாங்க…. படம்…!


ஒருவர் தீபாராதனை காட்ட சாமி முகம் தெரிகிறது. அதனையடுத்து ‘எல்லாம் நல்லபடி நடக்கும்’என்று யாரோ ஒருவர் திருவாய் மலர்ந்தருளுகிறார். ‘நைக்’ போட்ட ஒரு சப்பாத்துக் கால்… மன்னிக்கவும் இரண்டு கால்கள் தூசி பறக்க ஓடிவருகின்றன. கமெரா அங்குலம் அங்குலமாக மேலேற அது விஜயின், அஜித்தின், சிம்புவின், சூரியாவின், தனுஷின் அல்லது ஏறக்குறைய முழுவதும் புதரடர்ந்த ராஜேந்தரின் முகத்தில் வந்து முடிகிறது. அவர் சட்டைக் கொலரைப் பின்தள்ளிவிட்டுக்கொள்கிறார். புயலடிப்பது போல காற்று சுழற்றி அடிக்கிறது. அவர் தலையை அசைக்கிறார். பிரமாண்டமான விசிறி உபயத்தில் தலைமயிர் பறக்கிறது. அதுவரை முதுகின் பின்புறம் ஒளித்துவைத்திருந்த அரிவாளை அல்லது சைக்கிள் செயினைக் கையிலெடுக்கிறார். இப்போது திரை முழுவதும் வியாபித்து நிற்கிறது புனித பிம்பம். ‘உய்… உய்’எனும் விசில்களால் திரையரங்கம் அதிர்கிறது. உற்சாக மிகுதியால் கைக்குட்டைகள் தலைக்கு மேலால் உயர்ந்து அசைகின்றன. ‘தல’, ‘தளபதி’, ‘தெய்வமே’எனும் தழுதழுத்த குரல்களால் திரையரங்கு நனைகிறது.

இப்போது நாங்கள் இரண்டாம் காட்சிக்குள் பிரவேசித்துக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளமாக மென்மையான சங்கீதம் ஒலிக்கத் தொடங்குகிறது. இம்முறை கால்களில் இருந்தோ தலையில் இருந்தோ காட்சி தொடங்குமென்று உத்தரவாதம் தருவதற்கில்லை. எந்த அதிர்ச்சிக்கும் உங்களைத் தயாராக்கிக்கொண்டு காத்திருக்க அதிர்ஷ்டவசமாக (துரதிர்ஷ்டம்?) திரிஷாவின்,அசினின்,சிநேகாவின்,நமீதாவின் முகத்தில் கமெரா தரிக்கிறது. முகத்திலிருந்து கமெரா அங்குலம் அங்குலமாகக் கீழிறங்கி இந்தத் திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாநாயகிக்கு எங்கெங்கே சதை போட்டிருக்கிறது, வற்றியிருக்கிறது இன்னோரன்ன விபரங்களை நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். ‘ஸ்லோ மோசனில்’கதாநாயகி ஒய்யாரமாக நடந்துவர மீண்டும் விசிறி உபயத்தில், படப்பிடிப்பிற்கென பளபளப்பாக்கப்பட்ட கூந்தல் அலையாடுகிறது. அடங்காத விருப்போடு மீண்டுமொரு முறை இடுப்பை கமெரா நெருங்கிப் பார்க்க ஒருவித பதட்டம் நமக்குள் தொற்றிக்கொள்கிறது. கதாநாயகியின் வயிறு இலேசாக மேடிட்டிருப்பதை எங்களுக்கு நிரூபித்துவிட்ட திருப்தியோடு கமெரா பின்னகர்ந்துகொள்கிறது.

இப்போது வில்லன்கள் கதாநாயகியைக் கிண்டல் அடிக்க வேண்டும். அல்லது கதாநாயகி கதாநாயகனின் மீது தெரியாத்தனமாக மோதிக்கொள்ள கையிலிருக்கும் புத்தகங்கள் விழவேண்டும் என்பதே விதிமுறை. நாங்கள் முன்னதைத் தேர்வோம். அவர்களில் ஒருவர் நேராக நடந்து சென்று கதாநாயகியை- (சரி ஒரு வசதிக்காக எனது நண்பர்களிலொருவருக்கு மிகப்பிடித்த அசின் என்று வைத்துக்கொள்வோம்.) அசினின் தோளை ஒரு காட்டெருமையைப் போல உரசுகிறார். அசின் பயத்தோடு தனது நீண்ட விழிகளால் வீதியை அலசுகிறார். பொதுமக்கள் என்ன செய்ய வேண்டுமோ அதிலிருந்து இம்மியளவும் பிசகாமல் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆம்! பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நனைந்த கோழிக்குஞ்சைப் போல அசின் நடுங்கிப் போகிறார் என்றுதான் நான் இப்போது எழுதவேண்டும். சரி ஒரு வித்தியாசத்திற்காக மிரண்ட மானைப்போல என்று எழுதுகிறேன். ராட்டின இருக்கைகள் அந்தரத்தில் மையத்தைச் சுற்றிவருவதைப் போல, தொந்தி பெருத்த, தலை வளர்த்த தடியன்கள் அசினைச் சுற்றி வருகிறார்கள்.

“பாவம்பா அந்தப் பொண்ணு… விட்டுடுங்கப்பா…. போட்டும்”

அட! பார்வையாளர்களினிடையிலிருந்து யாரோ பேசுகிறார்களே…! நீங்கள் நினைப்பது சரி… அவர் ஒரு ஆண்மகன்! மறுநொடியே ‘சொத்’தென ஒரு சத்தம். அவர் தரைக்கு ஐந்தடி மேலாகப் பறந்துசென்று கூட்டத்தினர் நடுவில் விழுகிறார். பார்வையாளர்கள் பயத்தோடு அவசர அவசரமாக விலகிக்கொள்கிறார்கள். நீங்கள்தான் எவ்வளவு கெட்டிக்காரராக இருக்கிறீர்கள்! இப்போது கதாநாயகன் வந்து அவரைத் தூக்கி நிறுத்தி சட்டையில் படிந்த புழுதியைத் தட்டிவிடவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இயக்குநர்கள் எப்போதும் உங்களை ஏமாற்றும் பாவத்தைச் செய்வதில்லை.

கதாநாயகன் முன்தயாரிக்கப்பட்ட, ஏற்கெனவே உங்களுக்குப் பரிச்சயமான வசனங்களைப் பேசுகிறார். அவர் சாம,பேத,தானங்களைக் கடந்து தண்டத்திற்குத் தயாராகும்போது உங்கள் நரம்புகள் முறுக்கேறிப் புடைக்கின்றன. உங்கள் மெலிந்த தேகங்களுள் இருக்கும் இரத்தம் உற்சாக நதியாக ஓடத்தொடங்குகிறது. ‘மூஞ்சிலயே போடு’உணர்ச்சி மிகுதியால் உங்களையறியாது நாற்காலியிலிருந்து எழுந்துவிடுகிறீர்கள். பின்னிருக்கையில் இருப்பவர் வயதானவராக இருக்கும் பட்சத்தில், உங்கள் கலாபிமானத்தின் முன் சற்று அடக்கியே வாசிப்பார். இளைஞராக இருந்தால் அவருக்கும் நரம்புகள் உண்டென்பதை நீங்கள் நினைவிற் கொள்ளல் நன்று.

மாயாஜாலங்கள், அம்புலிமாமாக் கதைகள், சின்ன வயதில் வாசித்த இரும்புக்கை மாயாவியின் வித்தைகள் ஆரம்பமாகிவிட்டன. அந்தோ! கதாநாயகனுக்குள் ஒரு டார்ஜான் புகுந்துவிட்டார். அவரது முதுகிலுள்ள கண்கள் திறந்துகொள்கின்றன. ஒரு கத்தியோடு பின்னாலிருந்து பாய்கிறவனைத் திரும்பாமலே அடித்து வீழ்த்துவதெனில் அவருக்கு முதுகில் கண்கள் இருப்பது அவசியம் என்பதைப் பார்வையாளர்களாகிய நீங்கள் எவ்வித தயக்கமுமின்றி ஒத்துக்கொள்ள வேண்டும். மேலும், ஒரு ராஜாளியைப் போல பறக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு காலால் முன்னே இருப்பவனையும் மறுகாலால் பக்கவாட்டில் இருப்பவனையும் பறந்து பறந்து உதைப்பதெனில் சாதாரணமானதல்ல. சண்டை நடப்பது வீதியெனில் அது சந்தையாக இருப்பதும் அவசியம். கதாநாயகன் அடித்துப் போடும் வில்லனின் அடியாட்கள் சென்று விழுவதற்கு தள்ளுவண்டிகளில் தக்காளிகள் தயாராக இருக்கின்றன. மடமடவெனச் சத்தமிட்டுக்கொண்டு சரியத்தக்க பீப்பாய்கள் இருப்பது இன்னும் சிறப்பு. குவித்து வைக்கப்பட்ட அரிசிகள்,அப்பிள் பழங்கள்,மீன்கள் சிதறுதலன்றி சண்டைக்காட்சிகளை எம்மால் ரசிக்க முடிவதில்லை. உங்களிடமும் என்னிடமும் ஒரு கேள்வி இருக்கிறது. ஒரே சமயத்தில் இந்த வில்லனின் அடியாட்கள் கதாநாயகன் மீது பாயாமல், ஏதோ பொதுஇடத்திலுள்ள கழிவறைக்குப் போவதுபோல முறைவைத்துப் பாய்வது எதனாலென்ற கேள்வி பதிலிறுக்கப்படாமலே இருக்கிறது. சரி! இப்போது அனைவரையும் வீழ்த்தியாகிவிட்டது. வலியில் முனகியபடி ஆங்காங்கே கிடக்கும் அவர்களில் ஒருவன் திடீரென எழுந்து கையில் ஒரு ஆயுதத்தோடு பாயாமலிருந்தால் சண்டை அத்துடன் அப்போதைக்கு நிறைவுற்றது.

இப்போது அசின் கதாநாயகனின் கையிலுள்ள கண்டுகொள்ளப்படாத ரத்தத்திற்குப் பதறிப் போகவேண்டும். அத்துடன் நன்றி சொல்லவும் வேண்டும். அதற்கு கதாநாயகன் ‘எனது கடமையைத்தானே செய்தேன்’என்ற வசனத்திற்கு வாயசைத்தால் போதுமானது. ஏனெனில், அந்தத் தேய்ந்த வசனத்தை நீங்கள் உச்சரித்துக்கொண்டிருக்கிறீர்கள். ‘என்னாச்சுடா…?’ என்று சண்டை முடிந்த பிற்பாடு பதறிவரும் கதாநாயகனின் நண்பர்களை இன்னும் காணோம். முன்பெனில் சின்னி ஜெயந்த் இருந்தார். பின்பொருகாலம் தாமுவும் வையாபுரியும் இருந்தார்கள். விவேக் கூட இருந்தார். இன்றைய நிலவரப்படி வடிவேல் இருந்தேயாக வேண்டும். அவரோடு மேலும் சிலர் இருக்கலாம். ம்… சரியான கணிப்புத்தான்! அவர்கள் வந்துவிட்டார்கள்.

“என்னாச்சுடா கையெல்லாம் ரத்தம்?”நண்பர்கள் விழி பிதுங்கக் கேட்கிறார்கள்.

“ச்சும்மாதான்”என்பதனோடு கதாநாயகனுக்கு அல்லது இயக்குநருக்கு விட மனதில்லை. அந்தப் பக்கத்தில் அசின் வேறு தனது அழகான கண்களால் குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

“ஒரு தடவ தீர்மானிச்சுட்டா எம் பேச்சை நானே கேக்க மாட்டேன்”
“நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி”
“தலகிட்ட மோதறவனுக்கு தலயே இருக்கக்கூடாது”
“நான் போலீஸ் இல்லடா பொறுக்கி”

மேற்குறிப்பிட்ட சாயலையொத்த இறவாப்புகழுடைய ‘பன்ச்’வசனம் ஒன்றைச் சொல்லிவிட்டுக் கதாநாயகன் கமெராவின் கண்களை உற்றுப்பார்ப்பார். அந்த வசனங்களை ஒப்புவிக்கும்போது கைகளால் ஏதாவது ஒரு முத்திரையைக் காட்ட வேண்டுமென நீங்கள் அதீதமாக எதிர்பார்க்கிறீர்கள். தலைமயிரைப் புறங்கையால் பின்னொதுக்குதல், தோள்களைக் குலுக்குதல் போன்ற வித்தைகளோடு விரல்களால் சிலம்பம் ஆடுவதில் சிம்பு ஏனையோரைப் பின்தள்ளிவிடுவாரென்பதில் ஐயமில்லை. கதாநாயகனை காதல் வழியப் பார்த்துவிட்டுப் இடுப்பசைத்துப் போகும் அசினைப் பின்தொடர்ந்து சில நொடிகள் செல்லவேண்டியது இப்போது கமெராவின் கடமையாகிறது.

அட!இப்போது தாரை தப்பட்டைகள் முழங்கத் தொடங்குகின்றனவே! நீங்கள் ஆச்சரிப்படவில்லை. சேலையணிந்த அல்லது தொப்பூளுக்குக் கீழ் ஜீன்ஸ் அணிந்த, கதாநாயகியை விட சற்று அழகு குறைந்த பெண்களுடன் அதே எண்ணிக்கையிலான ஆண்களும் இரண்டு மூலைகளிலும் இருந்து திடீரென ஓடிவர குத்துப்பாட்டொன்று தொடங்குகிறது. அது என்ன பாட்டு என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். நீங்களே குணா ‘றேஞ்சில்’ ‘கண்மணி…பொன்மணி’ எல்லாம் போட்டுக்கொள்ளுங்கள். சரியா…?

அடுத்த காட்சியை நீங்கள் சொல்லப்போவதாக அடம்பிடிக்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்ததுதான். உங்களுக்குத் தெரியுமென்று இயக்குநருக்கும் தெரியும். எதிர்பார்க்கும் காட்சியைக் கொடுக்காமல் விட்டால் எங்கே நீங்கள் திரையரங்கத்தை விட்டு வெளியேறிவிடுவீர்களோ என்ற பயம் அவர்களுக்கு. கதாநாயகன், வெயிலில் மயங்கிவிழுந்த கிழவியைத் தூக்கி நிழலில் இருத்துவதையோ, விழிப்புலனற்றவர் ஒருவர் வீதியைக் கடக்க உதவுவதையோ, அனாதை இல்லத்தில் உள்ள சிறுவர்களைப் பாட்டுப் பாடி மகிழ்விப்பதையோ அந்த வழியாகப் போகும் அசின் பார்த்துவிடுகிறார். (அவரன்றி யார் பார்ப்பார்…)காதலின் ரசவாதம் வேலை செய்யத் தொடங்குகிறது.

அசின் கண்ணை மூடிக்கொள்ள, அவரோடு நீங்கள் இப்போது சுவிற்சர்லாந்தில் நிற்கிறீர்கள். குளிர்கிறது. ஒரு சதம் கூடச் செலவில்லாமல் சுவிற்சர்லாந்தைக் காட்டும் இயக்குநரை நன்றியோடு விழிகசிய நினைத்துக்கொள்கிறீர்கள். (தகுந்த தயாரிப்பாளர் அகப்படாது போனால் உள்ளுருக்குள் ஊட்டிக்கோ கொடைக்கானலுக்கோ அழைத்துப் போவார்கள்) வாகனத் திருத்தகத்திலோ, திரையரங்கிலோ பணி புரியுமொருவன் இருந்தாற்போல ‘கோட்-சூட்’ சகிதம், அம்பானியின் மகனையொத்தவனாக ஆடுவதை ஒரு கேள்வியும் கேட்காமல் வாய்பிளந்து பார்க்கிறோம். ஆனால், கதாநாயகி ஏழை பாழைதான் என்பதை இயக்குநரோடு முரண்படாமல் நாங்களும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். எலும்பைத் துளைக்கும் குளிரில், மேலே அரை அடியிலான ஆடையும் அதேவிதத்தில் கீழொன்றும் மட்டுமே அணிந்து ஆடும் அவர் பஞ்சத்தில்தான் இருக்கிறார் என்பதை எந்த அறிவுஜீவியாலும், பின்நவீனத்துவக்காரர்களாலும் மறுக்கவியலாது. திடீரென உங்கள் புலன்களுக்குச் சட்டென புரியாததொரு காட்சி திரையை நிறைக்கிறது. நிதானித்து(ஜே.ஜே. படம் பார்த்தபோது நான் பயந்த ஞாபகம்)யோசிக்க… குகையல்ல அது தொப்பூள்தான் என்பதை அறிந்து ஆசுவாசம் கொள்கிறீர்கள். ஒவ்வொரு தடவை விருது வழங்கப்படும்போதும் தொப்பூளுக்கு அநியாயம் இழைக்கப்படுவதாகவே நான் வருந்தியிருக்கிறேன். ஏனெனில் எத்தனை படங்களில் அது நடித்தாலும் கண்டுகொள்ளப்படுவதேயில்லை. பாரபட்சம் என்பது திரைத்துறையிலும் இருப்பது வருந்தத்தக்கதே.

அடுத்தடுத்த காட்சிகளில் அசின் நிறைய வெட்கப்பட வேண்டும். தலையணையைப் பஞ்சு வெளிக்கிளம்பாமல் பிய்த்துக்கொண்டு படுக்கையில் உருளவேண்டும். அசின் வில்லனின் மகளாய் இருப்பது தமிழ்ச்சினிமாவின் நீண்டநாள் பாரம்பரியத்தைச் சிதைக்காமலிருக்க உதவும். இதற்கிடையில் நமது கதாநாயகனின் நிழலெனத் தொடரும் நண்பர்களிலொருவர் அசினை எவ்விதமோ நெருங்கிவிடுவதையும், அசின் ஒரு நல்ல பண்பாடான, குடும்பப் பாங்கான பெண்ணென்பதையும் சாடைமாடையாகத் தொட்டுக் காட்டிவிடவேண்டும் (அசினைத் தொட்டல்ல. அது நட்புக்குத் துரோகம்!) அதைக் கதாநாயகனின் காதுகளில் போட வேண்டியது இப்போது நண்பரின் கடமைகளில் ஒன்றாகிறது. ஆயிற்றா…? இப்போது அசினின் காதல் நோய் குரங்குபோல கதாநாயகனைத் தொற்றிக்கொள்கிறது.

இப்போது பாடலாசிரியர் தனது வேலையைக் காட்ட வேண்டும். ‘நீ மலரா நிலவா… கனவா…. தளிரா…’என்ற பாடல் ஒலிக்கத் தொடங்க, கதாநாயகனும் அசினும் கட்டித் தழுவி உருண்டு புரண்டு ஆடுகிறார்கள். இடையிடையில் இடையைக் காட்டி தமிழ்ச்சினிமாவைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்துகிறார்கள். செடி மறைவில் உதட்டு முத்தமும், கதாநாயகியின் நாணமும், கதாநாயகன் ஏதோ வெட்டி வீழ்த்தியது போன்ற பெருமிதத்தோடு உதட்டை நாவால் நனைத்துக் கொண்டு கமெராவைப் பார்ப்பதும் நமது தலையில் எப்போதோ எழுதப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் பழைய பகையொன்று இருப்பது தெரியவர வேண்டும். அது கடைசிக் காட்சியை உக்கிரப்படுத்த உதவும். கதாநாயகனின் அக்காவைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திக் கொன்றவர்களில் ஒருவராக வில்லன் இருக்கலாம். அன்றேல், கதாநாயகனின் தந்தையைக் கொன்றவனாக இருக்கலாம். சிலசமயம் கதாநாயகனின் தாயை ஏமாற்றிச் சுகித்துவிட்டு வேறொருத்தியை மணந்துகொண்டு சுகவாழ்வு வாழும் ‘அப்பா’ வில்லனாகக் கூட இருக்கலாம்.

இனித்தான் கதை (பொலிஸ் நாயை அனுப்பியேனும் அப்படியொன்று கண்டுபிடிக்கப்பட்டால்) உச்சக் கட்டக் காட்சியை நோக்கி நகரப்போகிறது. வில்லனாகப்பட்டவர், பெரிய சரவிளக்குத் தொங்கும் பரந்த வெளி போன்ற மண்டபத்தில் தனது தொண்டரடிப்பொடிகளுடன் கதாநாயகனைக் கறுவிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். கதாநாயகனையும் அவரது குடும்பத்தையும் எப்படியாவது வேரறுக்க வேண்டுமென்று சூளுரைப்பதை நாங்கள் நாற்காலியின் நுனிக்கு நகர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். இச்சமயத்தில் விசுவாசமற்ற அடியாட்களில் ஒருவன் சட்டெனச் சுடப்பட்டு பொட்டெனப் போவதைக் காட்டி வில்லனை அதி வில்லனாக்கலாம். ஒரு வெள்ளை வாகனம் விரைந்துவந்து சரேலென்று நிறுத்தப்பட்டு, அதற்குள் அசினும் கதாநாயகனின் தாயாரும் தங்கையும் அள்ளிப் போடப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறார்கள். வாகனத்துக்குள்ளிருந்து பயணிக்கும்போது தாங்கள் கதாநாயகனுக்கு என்ன உறவு முறையென்பதை அறிமுகப்படுத்திக்கொள்வார்களாயிருக்கும். இல்லையெனில், வில்லனின் இருப்பிடத்தில் ஒருவரையொருவர் வியப்பும் கேள்விகளும் ததும்பப் பார்த்துக்கொண்டிருக்கவல்லவா வேண்டும்?

இது வில்லன் வாயைத் திறந்து அடுக்கு வசனங்களை அள்ளியெறியும் நேரம். அவ்வளவு நாள் படப்பிடிப்புக்கு வந்து போன காரணத்தால் இயக்குநரும் அதை அனுமதித்திருக்கிறார். ‘உன்னுடைய மகன் இங்கே வந்து உங்களைக் காப்பாற்றுகிறானா பார்க்கலாம்’இன்னோரன்ன ரீதியில் வில்லன் வாயோயாமல் பேசிக்கொண்டிருக்க, கதாநாயகனுக்குத் தகவல் போய்விடுகிறது. கதாநாயகனின் உறவுகள் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தருணம் வடிவேலுவோ விவேக்கோ கண்டுவிட வேண்டுமே என்று நாங்கள் (குறிப்பாக அன்னையர்) நெஞ்சில் கைவைத்து வேண்டிக்கொண்டிருந்தது கடவுளின் செவிகளை எவ்வண்ணமோ தவறாமல் சென்றடைந்துவிடுகிறது.

வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு(யதார்த்தத்தின்படி தூக்கித் தோளில் வைத்துக்கொண்டுதான் போகவேண்டும். பூட்டிச் சாவியைப் பையில் போடாமல் இங்கெவரும் போவதில்லை.) அதன் சொந்தக்காரரோ பொலிசாரோ பின்துரத்த கதாநாயகன் சீறிப்பறந்து போகிறார். இந்த உச்சக்கட்டக் காட்சியை நாங்கள் நாற்காலியிலிருந்து விழுந்துவிடப் போகிறவர்களைப் போல பார்த்துக்கொண்டிருக்கிறோம். வில்லனின் ஆட்களுடைய வாகனம் ‘மர்ம தேசம்’பாணியில் நெருங்குகிறது. அதை அவர் மயிரிழையில் தவிர்க்க, அது தரையிலிருந்து பதினைந்தடி உயரத்திற்கு எகிறிப் பின் ஆசையோடு தரையைத் தழுவி அப்பளமாக நொறுங்குகிறது. விழிகளுக்கு நல்ல விருந்தென மகிழ்கிறோம்.

வில்லனாகப்பட்டவர் தாயின் நெற்றியில் துப்பாக்கியை வைக்கும்போது அல்லது நேரக்குண்டினை வெடிக்கவைக்கும் விசையை அழுத்த விரல் வைக்கும் அந்தக் கணத்திற்கு சற்று முன்னேயோ பின்னேயோ அல்லாமல் மிகச்சரியாக அந்நொடியில் கதாநாயகன் கண்ணாடியைப் பிய்த்தெறிந்துகொண்டு மோட்டார் சைக்கிள் சகிதம் அரங்கினுள் பிரவேசிக்கிறார். இப்போது மீண்டும் பீப்பாய்கள், பலகைகள், வெற்றுப்பெட்டிகளின் தேவையேற்பட்டுவிட்டது.இப்போது நீங்கள் விசிலடிக்க வேண்டும். வெட்கம் துக்கம் பார்க்காதவரெனில் ஓரிரண்டு கெட்டவார்த்தைகளைச் சொல்லி உற்சாகத்தை வெளிப்படுத்தலாம். இனி நடக்கப்போவதைச் சொல்ல இயக்குநர் தேவையில்லை. மூன்று வயதுக் குழந்தையைக் கொண்டு வந்து உட்கார்த்தி விட்டால் அது தன் மழலையில் அழகாகச் சொல்லிவிட்டு எழுந்து தன்பாட்டில் பாற்போத்தலைத் தேடிப் போய்விடும்.

வில்லனைக் கதாநாயகன் தனது கைகளால் கொல்வது அவ்வளவு வரவேற்கத்தக்கதல்ல. வில்லனாகப் போய் மின்சாரத்தில் விழுந்து கைகால்களை இழுத்துக்கொண்டு அடங்குவதோ, கூரிய கம்பியில் தன்னைத்தானே கழுவேற்றிக்கொள்வதோ… கதாநாயகன் கடைசியில் அசினோடு ஒரு தடையுமின்றி இணைந்து பாட்டுப்பாட உகந்தது.
எதிர்பார்த்ததே நடக்கிறது. நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறவரெனில் ஓரிரு கண்ணீர்த்துளிகளைத் தயாராக வைத்திருங்கள். கடைசிக் காட்சியில் இயக்குநர் அதை எப்படியும் உங்களிடமிருந்து கறந்துவிடவே பார்ப்பார். பார்த்தீர்களா…?’சென்டிமென்ற்’நெடியடிக்கும் வார்த்தைகள் உங்கள் மனதில் பாரத்தை ஏற்றுகின்றன. எதிர்பார்த்தபடி படம் முடிந்த திருப்தியில் எழுந்திருக்கிறீர்கள். விளக்குகள் எரிகின்றன. ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க அஞ்சி வேகவேகமாக உங்கள் உங்கள் பிரச்சனைகளை மீள்ஞாபகித்தபடி வெளியேறுகிறீர்கள்.
அநேகமாக படங்களைப் பார்த்துவிட்டு வீட்டிற்குப் போன வழியெல்லாம் துக்கமாகவே நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு வருடத்தில் எத்தனை ஏப்ரல் முதலாம் திகதிகள் வருகின்றன என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?

25 comments:

சினேகிதி said...

உங்களையார் தியேட்டருக்குள்ள விட்டது? போனதுதான் போனீங்கள் பொப்கோர்னைச் சாப்பிட்டு வரவேண்டியதுதானே...ஏன் தொப்பிளெல்லாம் பார்க்கிறீங்கள்?? ஆமா என்ன படம்தான் பார்த்தீங்கள்? சொல்ற கதையைப் பார்த்தா மசாலாப்படம் போல இருக்கே. மாயாவியை எல்லாம் ஞாபகம் வச்சிருக்கிறீங்களே..அவற்ற வைப் டயானா தானே...அந்தப் பெடியஙக்களுக்கென்ன பெயர்?? மறந்திட்டன்.நானும் அந்தக் கதையில வாறமாதிரி ஒரு மரவீடு கட்டவேணும்.

++++++++++++++++++++++++++++
கொஞ்சக்காலத்துக்கு முதல் சிவகாசி பார்த்த களிப்பில நானெழுதினது.

உங்க லவ் எங்க லவ்வில்ல-http://snegethyj.blogspot.com/2005/11/blog-post_11.html

http://snegethyj.blogspot.com/2005/11/blog-post_113177416439114350.html

பங்காளி... said...

வந்துட்டம்ல...வந்துட்டம்ல..வந்துட்டம்ல.....

(வடிவேலு பாணியில் படிக்கவும்...ஹி..ஹி)

வி. ஜெ. சந்திரன் said...

தமிழ்நதி....
மிகச்சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்.
ரமணிசந்திரனின் கதையும், தமிழ் சினிமாவும் ( ஒரு சில விதி விலக்குகளை தவிர்த்து) ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பது போன்றவை.

சிரித்து சிரித்து வாசித்தேன்.

:)

பங்காளி... said...

அநியாயத்துக்கு தமிழ்படங்கள் பார்க்கிறீர்கள் போலும்...ம்ம்ம்...

கவலையாயிருக்கிறது.

தமிழ் சினிமாவை நினைத்தல்ல...தமிழ்நதியை நினைத்து...(ஹி..ஹி...ம்ம்ம்ம்)

சினேகிதி said...

எல்லாரும் பாசக்காரப் பயலுகதான் :-) எங்க இருந்து துள்ளிக்குதிச்சு ஓடி வாராகளோ தெரியல.

பங்காளி... said...

....கதாநாயகியை விட சற்று அழகு குறைந்த பெண்களுடன்.....

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....கதாநாயகியை விட அநேகர் அழகாயிருப்பதை கவனிக்க தவறியிருக்கிறீர்கள்....ஹி..ஹி..நானெல்லாம் பின்னால ஆடுற புள்ளைகள மட்டுந்தான் பார்ப்பேனாக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல நகைச்சுவை பதிவு.நதி.(வேறமாதிரி நினைச்சு போடலையே)
சிரித்தே கண்ணீர் வந்திருச்சு.
ஆமாங்க வரிசயா அடிவாங்க வர அடியாள்களை பார்த்து எனக்கும் அதே சந்தேகம் தான்.
ஆனாலும் இந்த வில்லன்களுக்கு அறிவே இல்லன்னு நினைப்பேன்.
மத்த எதிரிங்க எல்லாரையும் ஒடனுக்கொடன் வெட்டியோ சுட்டோ தீர்த்துக்கட்டும் இவங்க கதாநாயகனை மட்டும் நேருக்குநேர் சண்டைக்கு கூப்பிடுவாங்க இல்லன்னா கட்டி போட்டு நேரம்குறிப்பாங்க.என்ன பண்ண இப்படியே பார்த்து பழகிபோச்சு.

செல்வநாயகி said...

பாதிக்குமேல் படிக்கமுடியவில்லை. பாதியிலேயே ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு மீதியைத் தொடர்ந்துபடிக்கலாம் எனும் அளவில் அருமையான நடையும், வரிகளும்.

நன்றாகவே வறுத்திருக்கிறீர்கள்:)) நன்றி.

Anonymous said...

//அநேகமாக படங்களைப் பார்த்துவிட்டு வீட்டிற்குப் போன வழியெல்லாம் துக்கமாகவே நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு வருடத்தில் எத்தனை ஏப்ரல் முதலாம் திகதிகள் வருகின்றன என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?//

உண்மையான கருத்து தமிழ்நதி.

ஆனால், இதையும் நகைச்சுவைப் பதிவாய் பார்க்க வேண்டிய கட்டாயம் நம் பதிவற்க்கு ஏன்?? ஒரு வேளை பழகிப் போயிற்றா!? இல்லை!.....

ஆயினும் நல்லத் திரைப்படம் என்பது மெதுவான இசை, கருத்து(!!??) கூறும் கதை என்றெல்லாம் நான் கூறவில்லை.
அதெல்லாம் மேன்மக்கள் என்று நினைத்துக் கொள்ளும் சிலருக்கு...



மேலும் கருத்தாழம் என்று சொல்லக் கூடிய படங்கள் இன்றும் பேச வைக்கக்கூடிய ஒரு சில படங்களே விதி விலக்கு. மற்ற படி, அடிமட்டத்தில் வாழும் ,நடுத்தரத்தில் திரிசங்கு சொர்க்கவாசிகளுக்கு கருத்துகளை விட ரத்தம் சூடாகுமாறு உள்ள காட்சிகளிலேயே விருப்பம் அதிகம்.

பெண்ணியம், ஆணியம் பேசாது மட்டகரமான காட்சிகளைத் தவிர்க்கலாம். இல்லையெனில், xxx என்ற சிறப்புஅட்டை அளிக்கலாம்.

சலங்கை ஒலி,மரோசரித்ரா போன்றவை தந்த தெலுங்கு,கன்னட மொழிப்படங்கள் ஏன் தமிழில் இல்லை என்பவர்க்கு..
மலையாளப் படங்கள் தமிழகத்தில் xxx ஆகக் காட்டப்படுகிறது.
கேரளத்தில் தமிழ்மொழியில் அவ்வளவு தான் செய்ய முடியும் நம் திரைப்படத் தோழர்களுக்கு.

தமிழில் "அன்பே சிவம் " போன்ற குத்தாட்டமில்லாத படங்களும் உண்டு. அவை வசூல் தராவிட்டாலும், நல்ல படம் என்ற மகசூலை கட்டாயம் தந்திருக்கிறது.

ஆயினும் உங்கள் கருத்தில் " போக்கிரித்தனமில்லை" போக்கற்றவற்களை கண்டித்திருக்கிறீர்கள்..

வாழ்த்துகள்.

திருக்குமரன் said...

அதிகமாக தமிழ் படங்களை பார்த்தால் வந்த விளைவு. ;)
நகைச்சுவையான பதிவு.ரசித்தேன்.வாழ்த்துக்கள்

G.Ragavan said...

ஓ! தமிழ்ப் படமெல்லாம் நெறையப் பாப்பீங்க போல. நான் இந்த ரிஸ்க்கே எடுக்குறதில்லை. படம் வந்து நல்லா ஓடி...ஏதாவது அதுல ஸ்பெஷலா இருந்தா மட்டுந்தான் பாக்குறது. பஞ்ச் வசனப் படங்கள் யாரு நடிச்சாலும் பாக்குறதில்லை.

பேசாம ஏற்கனவே வந்த பழைய படங்கள்ள நல்ல படங்களாத் தேடி வாங்கிப் பாக்குறதுண்டு. அதுதான் நல்லது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாங்க இத நகைச்சுவை பதிவா நினைச்சதுக்கு பழகிப் போனதே காரணம். ஆர்ட் பிலிமோ சேரன் போன்றோரின் உணர்வு பூர்வமான படமோ பார்த்து நடுவில் இதனையும் பார்ப்பது பழகிடுச்சு.
உள்ளதை காண்பிக்கும், அதாவது
காதலிக்கறவங்க எல்லாரும் சேரமுடியாது, நல்லவன் எல்லாம் நல்லா இருக்க முடியாது, கஷ்டப்பட்டு ஒழச்சாலும் ஒசந்த இடத்துக்கு வரது கொஞ்சம் கஷ்டம் தான் அப்படிங்கற கருத்தெல்லாம் எடுத்தா எப்பதாங்க சந்தோஷமா இருக்கறது. நம்மாள் முடியாதத தட்டி கேட்டும் ஜெயித்தும் காண்பிக்கற கதாநாயக கதாநாயகியின் வடிவில் கண்டு சோகத்தை ஆத்திக்கறாங்க மக்கள்.

Anonymous said...

காட்டு காமடி நக்கல் பண்ணி சிரி சிரின்னு சிரிக்க வச்சிட்டீங்க. கொஞ்சமா சிரிக்க ஆரம்பிச்சு, நான் இந்த வரியில குபீர்னு சிரிக்க ஆரம்பிச்சாசு.
//கதாநாயகிக்கு எங்கெங்கே சதை போட்டிருக்கிறது, வற்றியிருக்கிறது இன்னோரன்ன விபரங்களை நாங்கள் பெற்றுக்கொள்கிறோம்//
எப்படிங்க இப்படி சீரியசான நடையில எழுதி சூப்பரா சடைர்(Satire) பண்றீங்க!

முத்துலட்சுமி கமெண்டு பாத்தா நகைச்சுவையா எடுத்தா அடி கிடைக்கும் மாதிரி இருக்கே. அய்யோ தப்பிருந்தால் மன்னிக்கவும்!

தமிழ்நதி said...

பாரதூரமாக அவர் ஒன்றும் எழுதவில்லை. என் மீதுள்ள அபிமானத்தால் ஏதோ பரிந்து எழுதியிருந்தார். அனானி நண்பரே!உங்களை அடையாளம் காட்டினால் தனி மடலில் அனுப்புகிறேன். சண்டையைக் கிளப்புகிறவராக இருந்தால் எனது பக்கம் கும்மியடிக்கும் இடமல்ல என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

theevu said...

நையாண்டியும் உங்களுக்கு எழுத நன்றாக வருகின்றது.


பச்சைக்கிளி முத்துச்சரம் பார்த்தீர்களா? கதை முதலே சொல்ல முடியாதிருந்தது..நன்றாகவே எடுத்துள்ளார்கள்.

Anonymous said...

no need. was just curious. got the message. thanks for the memento :) Of course this is not a place for kummi. That's why the curiousity was (or still is??) :)
Wishes. Bye

தமிழ்நதி said...

அன்புள்ள சிநேகிதி, உங்கள் சினிமா பற்றிய பதிவை இன்று இரவுக்குள் போய்ப் பார்த்துக் கருத்துச் சொல்கிறேன். ஆம்..அவவுடைய பெயர் டயானாதான்.
பங்காளி,விஜய் பாணியில்தான் உங்களுக்குப் பதிலளிக்க வேண்டும். நீங்கள் இல்லாமல் நானில்லை என்று. தொடர்ந்து நீங்கள் அளித்துவரும் வரவேற்புக்கு நன்றி.
என்னைப் பார்த்துச் சிரிப்பாய்ச் சிரித்த - மன்னிக்கவும் எனது எழுத்துக்களை வாசித்துச் சிரித்து வைத்த வி.ஜே.சந்திரன்,முத்துலட்சுமி,மதுரா,தீவு,ஜி.ராகவன்,திருக்குமரன் அல்லாத்துக்கும் நன்றி.
செல்வநாயகி!மாட்டுவண்டி இன்னமும் நிலாவெளிச்சத்தில் போய்க்கொண்டிருக்கிறது. நான் அன்று சொன்னதை மீள எடுத்துக்கொள்கிறேன். என்னைவிட நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்.
தமிழி!தமிழில் நல்ல படங்கள் வராமலில்லை. அதனால்தான் 'அநேகமாக'என்பதைத் தடித்த எழுத்துக்களில் போட்டிருக்கிறேன். ஆம்! நீங்கள் சொல்வது சரி... இந்தப் பதிவை நான் நகைச்சுவைப் பதிவாக மட்டும் எழுதவில்லை. கொஞ்சம் கோபத்தோடுதான் எழுதினேன். சிரிக்கும்படியாக இருந்திருக்கும்போல... அது அவரவர் தெரிவல்லவா... வாசகர் எப்படி உணர்கிறார்களோ எழுத்து அவ்வண்ணமே. வருகைக்கு நன்றி.

தமிழ்நதி said...

மதிப்பிற்குரிய ரமணி,

நீங்கள் கூறிய விமர்சனத்தை ஏன் எடுத்துவிட்டீர்கள்? விமர்சனத்தை எதிர்கொள்ளத் தயாரில்லாதவர்கள் எழுத வெளிக்கிடக்கூடாது... நான் எதிர்கொள்ளக்கூடியவள் என்பதனால்தானே எழுதினீர்கள். நீங்கள் உங்கள் பார்வையை முன்வைத்தீர்கள். பின்னூட்டத்தையும் அழித்தாகிவிட்டதுதானே.. பின்னர் ஏன் அதைக் கிளறுவான் என்று நான் ஒதுங்கிக்கொள்வது ஒருவகையில் நேர்மையற்றதாக, மற்றவர்களது பாராட்டுகள் வழியாகவே பார்க்கப்பட விரும்புவதான தோற்றத்தை அளித்துவிடும் என்பதனால் எனது பக்கத்திலுள்ள விளக்கத்தை அளிக்க வேண்டியுள்ளது.

சினிமா என்பது எவ்வளவு அற்புதமான ஊடகம்,கருவி,சாதனம்... அதை வைத்துக்கொண்டு எவ்வளவோ செய்யலாமென்றிருக்க, வெறும் வணிக நோக்கங்களுக்காக அதைத் தரமிறக்கும் வேலைகளே நடந்துகொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

எனது வீடு ஒரு குட்டித் தியேட்டர் போல ஐந்தாறு பேர் உட்கார்ந்திருந்து படம் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு சினிமா எதை வழங்குகிறது என்று பார்க்கும்போது எரிச்சலோடு அவ்விடத்திலிருந்து எழுந்துசெல்லவே என்னால் முடிந்திருக்கிறது(ஓரிரு சந்தர்ப்பங்களைத் தவிர்த்து). எனது ரசனையை அவர்களுக்குள் திணிப்பதென்பது அவர்களது விருப்பிற்கு எதிராகச் செயற்படுவதைப் போல. அவர்களை 'நான்' ஆக்க என்னால் முடியாது. அது சரியானதுமல்ல. அதனால் கையறு நிலைதான். அந்தக் கோபத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் இந்தப் பதிவு.

எந்தவிதமான முன் திட்டமிடல்களோ,உசுப்பேற்றி விட்டார்களே என்பதனால் வலிந்து கவனத்தைக் கவரும் நோக்கமோ எனக்கில்லை. எண்ணத்தில் தோன்றியதை எழுதிக்கொண்டே போனேன். எனது கோபத்தைச் சிரிப்பாக மாற்றினேன் என்று சொல்வதுதான் பொருந்தும்.

எளிமையும் தன்னியல்புமே அழகு என்று நினைப்பவர்களால் மற்றவர்களைத் திருப்திப்படுத்தவெனத் திட்டமிட்டு எழுதமுடியாது ரமணி.

உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து வாசிப்பதும் கருத்துச் சொல்வதுமே எனக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய அங்கீகாரம் என நான் மனதாரச் சொல்கிறேன். நீங்கள் ஒரு விமர்சனத்தை முன்வைத்தீர்கள் என்பதற்காக உங்கள் மீது நானும், உங்கள் விமர்சனத்திற்கு நான் தன்னிலை விளக்கம் அளித்தேன் என்பதற்காக என் மீது நீங்களும் மனவருத்தம் கொள்ளாதிருப்பதே எழுத்திற்கு நாங்கள் வழங்கும் மதிப்பு. அப்படித்தானே நண்பரே!

படியாதவன் said...

ஒரே சிப்புத்தான் போங்க.:):):)
நாங்களும் ஒவ்வொருமுறை படம் பார்க்கும்போதும் சொல்லி பகிடி பண்ணுற கனக்க விசயத்தை நீங்களும் கவனிச்சிருக்கிறியள்..
மற்றது எங்கட அசினை தேவையில்லாம வம்புக்கிழுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் :):)

//அந்தப் பெடியஙக்களுக்கென்ன பெயர்??//
கிட் மற்றும் கிலாயிஸ்
வளர்ப்பு மகன் ரெக்ஸ்,
ரெக்ஸின் நண்பன் டோமா...
www.wikipedia.org இல phantom என்று search பண்ணினால் முழு வரலாறும் கிடைக்கும்,

RamaniKandiah said...

தமிழ்நதி
திரைப்படம் குறித்த உங்கள் கோபத்தையல்ல நான் சுட்டியது; நீங்கள் எழுதிய தமிழ்த்திரைப்படம் குறித்த அதே பார்வை ஏற்கனவே பல முறை கோபத்தோடும் எள்ளிநகையாடியும் சொல்லப்பட்டுவிட்ட பொதுப்பார்வையாகிவிட்டதால், ஏற்கனவே அடுப்புச்சட்டிப்பதத்துக்குப் புளித்த தோசைமாவுக்கு நீங்கள் ஒரு பிடி அப்பச்சோடா போட்டிருக்கவேண்டுமா என்பதாலேயே சொன்னேன். சொல்லியது பிரியமானவர்களின் எண்ண இடத்துக்குப் பொருத்தமாகவில்லையென்பதாலேயே விலத்தினேன். நீங்கள் பங்காளியின் கருத்தையும் - அஃது எதுவானபோதுங்கூட - விட்டிருந்தால், முழுமையாகவிருந்திருக்கும். (இப்படியான திரைப்படங்களே என்னைப் போன்றவர்களுக்கு எம்மைப் பற்றிய தன்னம்பிக்கைகளை - இப்படியான தன்னம்பிக்கைகளோடு படமெடுப்பவர்களுக்கும் அதை நம்பிப் பார்க்கின்றவர்களுக்கும் நாங்கள் எத்துணையோ மேல் - நிறுத்தி வைக்கவுதவுகின்றன என்பதாலே உங்கள் கருத்தினை வன்மையாகக் கண்டிப்பது ஒரு பக்கமிருக்கட்டும் :))

இனி இப்படியான அசந்தர்ப்பம் நேராதென உறுதிப்படுத்துகிறேன்.

Anonymous said...

Hello Friend:

Nice write-up! Enjoyed it. Though you tried to be funny, I felt that you were really upset and angry with what’s been served to us by tamil cinema!

Well, I used to (still at times) argue with my friends at IIT/K that our people are really stupid – How can you explain the Himalayan success of those with little or no skills in our film industry! (I still do that when movies like “Anbe Sivam” fails miserably!) But few years ago I read an article (when I was in my 20s!!) which said that the average “mindset” age of the cinema-goers is – believe it or not – ONLY 12 - worldwide! (I was not making measured decisions at that age!!) (Please note they are NOT taking about the average age of the movie viewing public, but the average “MINDSET” age with which they go in to see a movie!!)

If we take into account of all this technical advances like internet and other such stuff, may be that age might be now is about 16 or 17! We all know that is a “confused” state of our lives! Though few of us grew out of those “confused” state and look at life with much better understanding but many choose to stay in there! That’s why no matter how stupid these movies (like Pokkiri) are, they still can enjoy them! (I could not stand the way Vijay speaks in the movie!! It was torture to put it mildly! My wife walked-off within 15-20 mintues into the movie! I was waiting for her to walk-off, so I joined he gladly!! How can people take such insults? I asked! The answer is that same article that I read almost a decade ago! Hopefully with the average “mindset” age is increasing ever so rapidly, we might be able to see little better films in the near future! Mumbai makes much better films (Page 3, Who lamhe etc.,!) than us! (BTW, Vijay now thinks that he is following MGR way, NOT Rajini’s path! Long live tamil cinema!!

தமிழ்நதி said...

படியாதவன்!(இப்படிக் கூப்பிடவே ஒருமாதிரியாக இருக்கிறது. விடியாமூஞ்சி என்பதுபோல்)சிரித்தீர்களா நீங்களும். பாருங்கள் நான் எவ்வளவு பேரைச் சந்தோசப்படுத்தியிருக்கிறேன் என்று. இன்று என்னை ஒருவர் அழவைத்தார் அதை நான் சொல்லப்போவதில்லை.

கருத்துக்கும் புரிதலுக்கும் நன்றி இரமணி.

அபாலா!நீங்கள் அறிந்ததைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. என்னோடு பேசுபவர்களில் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது வீதமானவர்கள் 'அன்பே சிவத்தை'க் குறிப்பிட்டுப் பேசுவார்கள். இவ்விதமிருக்க அது எப்படித் தோல்வியடைந்தது(வணிகரீதியாக) என்பது ஆச்சரியந்தான். ஆனால், பெரும்பான்மையான வாசகர்கள் கனவுகளை வாங்குபவர்களாகத்தானே இருக்கிறார்கள்.

சின்னக்குட்டி said...

//உங்களையார் தியேட்டருக்குள்ள விட்டது? போனதுதான் போனீங்கள் பொப்கோர்னைச் சாப்பிட்டு வரவேண்டியதுதானே...ஏன் தொப்பிளெல்லாம் பார்க்கிறீங்கள்//

அது தானே..அதை விட. உங்களேயே அசினாய் நினைச்சுக்க வேண்டியது தானே;-)

நல்லாயிருக்கு பதிவு

படியாதவன் said...

//இன்று என்னை ஒருவர் அழவைத்தார் அதை நான் சொல்லப்போவதில்லை.//
உண்மையாவா? என்ன ஆச்சு?

//அவற்ற வைப் டயானா தானே...//
வைப்(பு) இல்ல, மனைவி :)

//படியாதவன்!(இப்படிக் கூப்பிடவே ஒருமாதிரியாக இருக்கிறது. விடியாமூஞ்சி என்பதுபோல்)//

யாழ் இந்துக் கல்லூரியில ஒரு விஞ்ஞான ஆசிரியர் இருந்தார், பாலசிங்கம் மாஸ்ரர் எண்டு சொல்லுவினம், நான் O/L எடுக்கேக்க அவர் எழுதின புத்தகம் ஒன்று கிடைத்தது(அப்ப அவர் உயிரோட இல்லை), அவரும் கிட்டத்தட்ட இது போன்றதொரு பெயரைத்தான் போட்டிருந்தார், அவற்ர முன்னுரையிலயே போட்டிருந்தார் "இதைப் படிக்காதேங்கோ" எண்டு,, அதுக்காகவே எழுதினது முழுக்கப் படிச்சன்..
அப்பொழுது வந்த தாக்கம் பல காலமாகத்தொடருகிறது..

பிடிக்கேல்லையெண்டா நீங்களே ஒரு நல்ல பெயரா வச்சுவிடுங்கோவன்,, எனக்கும் சந்தோசமா இருக்கும்..

மிதக்கும்வெளி said...

படம் முழுக்க எனக்குப் பிடிக்காத அசினைக் கதாநாயகியாகப் பிலிம் காட்டியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.