2.19.2007

நீ… நான்… இவ்வுலகம்


நாமொரு புள்ளியில் சந்தித்துக்கொண்டோம்
பிறகு எதிரெதிர் திசை ஏகினோம்
கோடை தொணதொணக்கும்
பாலைப் பெருவெளியில்
சில சொற்களும் நானும்.
குளிர் உயிர்குடிக்கும்
துருவத்தனிமையிலே
நீயும் நின் பணியும்.

தனிமைக்கிளையில் என் கூடு
அசைத்தசைத்துப் பார்த்துத்
தோற்கிறது காலப்புயல்.

காற்றுக்கு என்மீது கருணையில்லை
உன்குரலை மட்டும் ஒளித்துவைத்திருக்கிறது.
நல்லது பேசாதே!
பேச்சு கலைத்துப்போட்டுவிடுகிறது
தெரிந்தே காணும் மாயக்கனவுகளை.
வர்ணச் சிறகுதிர்த்து புழுவாய் மாற
எவருக்கும் பிரியமில்லை.

காதல் கனன்றெரியும் மாலையில் ஒரு முத்தம்…
விழிக்கடையில்
எனக்கே எனக்கென திரளும் கண்ணீர்த்துளி…
போகிற போக்கில் பொறுக்கிக்கொள் எனவொரு சொல்…
எதுவும் வேண்டிலேன்.
உரிமைகளை இழந்ததோர் தேசத்தவள்
எல்லைகளைக் கடந்தொரு
எட்டும் எடுத்து வைக்கேன்.

நீ இருக்கிறாய்
நான் இருக்கிறேன்
இனிய நினைவு
இருக்கிறது இவ்வுலகம்.

10 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\நீ இருக்கிறாய்நான் இருக்கிறேன்
இனிய நினைவு
இருக்கிறது இவ்வுலகம். //

ம்...அருமை.

இருவருக்கும்-
வெப்பம் தருவது,
அதே சூரியன் .
நினைவுகளை ஊட்டுவது,
அதே நிலவு.
இன்று எனக்கும் ,
நாளை உனக்குமாய்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அடுத்த ரிலீஸ் வந்து ஷோ நடக்குது அங்க போய் பின்னூட்டம் போட்டுட்டு இருக்காரே பங்காளி ...என்ன ரசிகரோ ரசிகர் மன்றமோ?:-)

தமிழ்நதி said...

ஆமாம் லட்சுமி... பின்னூட்டம் விட்டுக் களைத்து உறங்கிவிட்டாரோ என்னவோ.. பங்காளி வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரங்க இருக்கீங்களா இங்க...?

Anonymous said...

நீ நான் சிவம்
வாழ்வே தவம்

- தமிழ் பக்கெட்

Anonymous said...

இன்னாமா கண்னு சூப்பரா எழுதிகினுகீறே
- எசமாடன்
தமிழ்நதி ரசிகர்மன்றம்
கூவம் நதிக்கரை
சென்னை

தமிழ்நதி said...

தமிழ் பக்கெட்????

அனானி! எனக்கு ரசிகர் மன்றம் அமைக்க சரியான இடம்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். கூவம் என்றாலும் தண்ணீர் அல்லவா...? நான் தண்ணீரின் காதலி.

பங்காளி... said...

வந்துட்டம்ல....

வழக்கம் போல கொஞ்சம் லேட்...ஹி..ஹி...ம்ம்ம்ம்ம். அதற்காக ரசிகர் மன்றத்தில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கும் சகோதரி முத்துலட்சுமியின் செயலை ரசிகர்மன்றம் சார்பாக வன்மையாக, அன்போடு கண்டிக்கிறோம்.

பங்காளி... said...

நீ
நான்
நெருடல்கள்...

கலைத்துப்போட துணிவில்லை
களைத்துப்போகவும் மனமில்லை....

கரையில் நான் மட்டும்....

(ஹி..ஹி...ஏதோ நம்மால ஆனது)

பங்காளி... said...

என்ன ஆச்சு?

தமிழ்நதி said...

ஒன்றும் ஆகவில்லை. நாளை வருகிறேன். அவசரப்பட்டு ரசிகர் மன்றத்தைக் கலைத்துவிடாதீர்கள் பங்காளி.