4.09.2007

சாத்தானின் கேள்வி



ஒரு பௌர்ணமிநாளில்
நீர்ப்பரப்பில் நிலவொளிபோல
மெல்லப் படர்கிறதுன் நேசம்.

விடியும்வரை கடலை மூசித் தழுவி
முயங்கவியலா ஏக்கத்திலா
பின்னிரவில் நிலவு முகமிருண்டு போகிறது?

பார்…!
காதற் கவிதைகளின் சாயலையொத்த
அபத்தத்துள் என்னை நீ அமிழ்த்துவதை.

ஞாபகத்தின் தெருக்களில்
நாடோடியாய் அலையுமென்னை
நிகழில் நிலைக்கவென்று அழைக்கிறாய்.
மேலும்…நான் உன் கண்ணாடியும் என்கிறாய்.
பாதரசம் கலைந்திருப்பதைக் கவனி நண்பா!

கதை மாந்தர்களின் கைபிடித்துலவிய நாட்களை
நெகிழ்ச்சியின் மடியில் சரியவைத்த கவிதைகளை
யமுனாவை… அம்மணியை… காயத்ரியை…யஷியை
காலையொளி கரையும்வரை பேசித்தீர்க்கிறோம்.

உன் வாசிப்பின் ஆழத்தில் புதைவுறவும்
நேசிப்பின் நெருக்கத்தில் கரைவதற்கும்
மலைகள் சூழ் கிராமத்தில்
நெடுங்கண்ணாளொருத்தி காத்திருப்பதறியாயா?
பேச்சின் நிழலில்
ஆசுவாசம் கொள்ளுமென் தனிமையை
இனியேனும் தனிமையில் விட்டுவிடு.
கண்ணீர் இனிப்பென
குருதி திண்மமென
கருத்துப்பிழை காட்சிப்பிழையுள்
என்னைச் சிலகாலம் செலுத்திப் பின் பிரிந்துசெல்!

நீ சொன்னபடி
அருவிக்கரையோரமொரு கறுப்பியாய்…
நீலியாய்…
பச்சையடர் கானகத்தில்
பாறைமீதமர்ந்து கதைசொல்லும் பேதையாய்
மீளப் பிறக்கும் விதை
என்னுள் விருட்சமாய் வளர்கிறது.

எல்லாம் சரிதான்!
“கனவின் பாதைகள் முடியுமிடம்
இதழிலும் மார்பிலுமா…?”
எனக் கேட்கும் சாத்தானின் கேள்வியை
எந்தப் புத்தகத்தின் பக்கங்களுள் ஒளித்துவைக்க?

14 comments:

பங்காளி... said...

அசத்தறீங்க....பெரிசா ஒரு விமர்சனமே எழுதலாம்.ம்ம்ம்ம்... இப்ப நேரமில்லை. ....இதுதான் கவிதை, நானெல்லாம் கவிதை எழுதுவேன்னு இனி சொல்லிக்ககூடாது....:-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கு முழுமையாய் புரிந்துகொள்ளும் அளவு அறிவில்லை போல ...
படித்ததும் சில கேள்விகள் எழுந்தது ..பதில் கிடைத்தால் ஒரு வேளை எனக்கு புரியலாம்.

\\நான் உன் கண்ணாடியும் என்கிறாய்.
பாதரசம் கலைந்திருப்பதைக் கவனி நண்பா!//

முழுதுமாக பிரதிபலிக்காமல் போகிறதோ ,மாறுபாடுகள்??

\\நெடுங்கண்ணாளொருத்தி//

இவள் யார் ?அம்மணியை… காயத்ரியை…யஷியை
காலையொளி கரையும்வரை பேசித்தீர்க்கும் கவிதையின் நாயகியா
இல்லை வேறொருத்தியா?

கார்திக்வேலு said...

//பேச்சின் நிழலில்
ஆசுவாசம் கொள்ளுமென் தனிமையை//

---
[லெய்டனின் மிகப் பிரபலமான ஓவியமிது].

தமிழ்நதி said...

பங்காளி!
இதுதான் கவிதை என்று வரையறை செய்தால் யாராவது கத்தி கம்புகளோடு வந்துவிடுவார்கள் பார்த்து பார்த்து...:)

முத்துலட்சுமி!கண்ணாடியின் பின்புறமிருக்கும் பாதரசம் காலம் செல்லச் செல்லக் கரைந்துபோகும். பின் அதில் முகம் பார்க்கவியலாது. நானும் காலத்தால் கரைந்துகொண்டிருப்பவள்... 'உன்னைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போல் இருக்கிறது என்பவனே' உன்னை நான் நெடுங்காலம் பிரதிபலிக்கவியலாது என்பதை அப்படிச் சொன்னேன்.

\\நெடுங்கண்ணாளொருத்தி//
இவள் கவிதையின் நாயகியல்ல. நாயகனுக்காக அவனது கிராமத்தில் காத்திருப்பவள்.

கார்த்திக்வேலு!எனக்கு ஓவியங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. பிரபலமான ஓவியமா இது... 'கனவுப்பெண்'என்ற சொல்லின் கீழ் தேடுகையில் இது கிடைத்தது. அறியத்தந்தமைக்கு நன்றி.

செல்வநாயகி said...

எனக்கு மிகப்பிடித்த வரிகள் இவை:-

///அருவிக்கரையோரமொரு கறுப்பியாய்…
நீலியாய்…
பச்சையடர் கானகத்தில்
பாறைமீதமர்ந்து கதைசொல்லும் பேதையாய்
மீளப் பிறக்கும் விதை
என்னுள் விருட்சமாய் வளர்கிறது///.


///இதுதான் கவிதை என்று வரையறை செய்தால் யாராவது கத்தி கம்புகளோடு வந்துவிடுவார்கள் பார்த்து பார்த்து...:)////

நானெல்லாமே எதையாவதுஎழுதி அதைக் கவிதைன்னு வகைப்படுத்தி வலையேற்றும்போது உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம் எதற்கு:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நதி விளக்கத்திற்கு நன்றி..நான் எதிர்பார்த்த விடைகள் ,
இப்போது புரிகிறது.

தென்றல் said...

தமிழ்நதி, படம் அருமையாக இருக்குங்க!

நமக்கு 'தெரிஞ்சத' பத்தி தான நம்ம பேசமுடியும். :)

மஞ்சூர் ராசா said...

பார்…!
காதற் கவிதைகளின் சாயலையொத்த
அபத்தத்துள் என்னை நீ அமிழ்த்துவதை.

இதிலிருந்து நீங்கள் சொல்வது காதல் கவிதையின் சாயல்கள் அபத்தம் என்றா?

அவ்வாறெனில் குறுந்தொகை மொத்தமும் அபத்தமா?

உங்கள் கவிதையில் காத்திருக்கும் காலத்தை கண்ணாடியின் பாதரசப் பூச்சு உதிர்வதற்கு உவமையாக கூறியுள்ளீர்கள். இதே காலத்தை கொல்லன் அழிசி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தலைவனுக்காக காத்திருக்கும் தலைவியின் கூற்றாக "பூக்கள் உதிரும் ஓசையால் காலத்தை அளக்கிறாள்"

கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
எம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.
-கொல்லன் அழிசி.

ஐந்து வரிகளில் பிரிவின் துயரை இயற்கையோடு கலந்து சொல்லும் இந்த கவிதையோடு தங்களுக்கு பரிச்சயம் உண்டா?

தமிழ்நதி said...

\இதிலிருந்து நீங்கள் சொல்வது காதல் கவிதையின் சாயல்கள் அபத்தம் என்றா?\\-மஞ்சூர் ராசா

காதலோ காதற் கவிதைகளோ அபத்தமல்ல. காதல் கவிதைகள் என்ற பெயரில் அண்மையில் வாசிக்கக்கிடைத்த, கடந்து விரைந்த,வெளிவந்துகொண்டிருக்கும் சொற்குவியல்களின் மீதுதான் வெறுப்பு. அத்தகைய சாயலையொத்த ஒன்றை என்னையும் எழுதவைத்து விட்டாயே என்ற சலிப்பே அதில் வெளிப்படுகிறது. அதை நீங்கள் தவறாக அர்த்தப்படுத்திக்கொண்டதற்கு நான் பொறுப்பல்ல. மேலும் கவிதை என்பது கட்டுரையைப் போன்று, இது சரி இது தவறு என statement விடுப்பதற்கு அப்பாற்பட்டது. அதுவொரு உணர்ச்சிமயமானது. அதில் அபத்தமே அர்த்தமாகலாம். முடிந்த முடிபுகள் அதற்கில்லை. கவிதையில் 'உன்னை நான் அணுவணுவாகக் சிதைத்து என்னுள் கரைக்கிறேன்'என்றால் 'அழித்துவிடுவேன்'என்றா அர்த்தம்?

\\அவ்வாறெனில் குறுந்தொகை மொத்தமும் அபத்தமா?\\

மேற்குறித்த பதிலை நீங்கள் புரிந்துகொண்டிருப்பின் இக்கேள்விக்குப் பதில் தேவையற்றது. மேலும்,இதற்கு நான் பதிலளிக்கப்போய் 'குறுந்தொகை படிக்காதவளெல்லாம் எழுதவந்துவிட்டாள்'என்று நீங்கள் நண்பர்களுடன் அங்கலாய்த்துக்கொள்ள வாய்ப்பளிக்கிறேன் என்பதால் தவிர்க்கிறேன்.

நந்தா said...

//“கனவின் பாதைகள் முடியுமிடம்
இதழிலும் மார்பிலுமா…?”
எனக் கேட்கும் சாத்தானின் கேள்வியை
எந்தப் புத்தகத்தின் பக்கங்களுள் ஒளித்துவைக்க?//

அப்பா என்ன வரிங்க இது? வார்த்தைகள் என்னை எங்கேயோ கொண்டு செல்கின்றன.

//நானெல்லாமே எதையாவதுஎழுதி அதைக் கவிதைன்னு வகைப்படுத்தி வலையேற்றும்போது உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம் எதற்கு:)) //

நான் இதை வழி மொழிகிறேன். ரிப்பீட்டேய்!

//காதல் கவிதைகள் என்ற பெயரில் அண்மையில் வாசிக்கக்கிடைத்த, கடந்து விரைந்த, வெளிவந்து கொண்டிருக்கும் சொற்குவியல்களின் மீதுதான் வெறுப்பு.//

சண்டைக்காகவோ, வாதத்திற்காகவோ கேட்க வில்லை. தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்கிறேன். அப்படி உங்களை வெறுப்பில் ஆழ்த்திய அந்தக் கவிதையம்சம் எது? எதனால் அது தவறு என்று கருதுகிறீர்கள்? (ஏன்னா நானும் ரெண்டு மூணு கவிதைகளை காதல் கவிதைன்னு சொல்லிட்டு திரியறேன். அதான் கேட்டேன்!)

தமிழ்நதி said...

செல்வநாயகி!உங்கள் பக்கங்களைத் தவறாமல் படித்துவருகிறேன். உங்களுக்குக் கவிதை எழுதத் தெரியாதென்பது... தன்னடக்கம் தன்னடக்கம்னு இதைத்தான் சொல்வாங்களோ (யாரது அங்கே.. ஆளாளுக்கு மாத்தி மாத்திப் புழுகறாளுங்கப்பா என அலுத்துக்கொள்வது)

நந்தா! இது நல்ல கவிதை இது வெறும் சொற்குவியல் என்பதெல்லாம் எனது வாசிப்பு சார்ந்த உள்ளுணர்வுக்குத்தான் தெரியும். அதை எப்படிப் பிரித்துப் பிரித்து எழுதுவது, உதாரணம் காட்டுவது என்றெனக்குத் தெரியவில்லை. கவிதையை ஒரு அனுபவமாகத்தான் நான் பார்க்கிறேன். அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள எனக்குத் தெரியவில்லை. உங்கள் பக்கம் போய்ப் பார்த்தேன். கீழ்க்கண்ட வரிகளில் உண்மையான காதல் இருந்தது. அது கவிதையாகவும் இருந்தது.

\\என்னை,
ஒரு குழந்தை போல் பாவித்து,
ஒவ்வொரு பிரகாரங்களிலும்
நீ வைத்து விடும்
திருநீறு, குங்குமத்தில்
நான் உயிர்த்தெழுவதை,
எவர் புரிந்து கொள்ளக் கூடும்\\

மஞ்சூர் ராசா said...

அன்பு தமிழ் நதி
உங்கள் விளக்கத்திற்கு நன்றி.
நீங்கள் நினைப்பது போல நான் நினைக்கவில்லை. குறுந்தொகையை மேற்கோள் காட்டியதும் அதற்காகவல்ல.

பாரதி தம்பி said...

//இதுதான் கவிதை என்று வரையறை செய்தால் யாராவது கத்தி கம்புகளோடு வந்துவிடுவார்கள் பார்த்து பார்த்து...:)//

//நானெல்லாமே எதையாவதுஎழுதி அதைக் கவிதைன்னு வகைப்படுத்தி வலையேற்றும்போது உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம் எதற்கு ) //

ஹலோ.... என்ன நடக்குது இங்குன...? தமிழ்மணத்துல ஏதாவது தன்னடக்கப் போட்டி அறிவிச்சுருக்காகளா...? அறிவாளிக அம்புட்டு பேரும் போட்டிப்போட்டுகிட்டு அலப்பரை பண்றீகளே...

நளாயினி said...

எல்லாம் சரிதான்!
“கனவின் பாதைகள் முடியுமிடம்
இதழிலும் மார்பிலுமா…?”
எனக் கேட்கும் சாத்தானின் கேள்வியை
எந்தப் புத்தகத்தின் பக்கங்களுள் ஒளித்துவைக்க?

வலிக்கிறது.