4.07.2009

கவிஞர் சுகுமாரனின் ‘வெளிச்சம் தனிமையானது’


கற்பனைக் கதைகள் காலாவதியாகிக்கொண்டிருக்கின்றனவோ என்ற எண்ணத்தை இலக்கிய நடப்புகள் தோற்றுவிக்கின்றன. ‘எனது கற்பனையைத் தொட்டு நான் எழுதுகிறேன்’என்று பேசிக்கொண்டிருந்த காலங்கள் பின்னழிந்தன. கட்டுரையின் உண்மையும் கதையின் ஈரமும் சுயசரிதைத் தன்மையும் கலந்த அபுனைவுகளே தமிழிலக்கிய வாசகர்கள் அநேகருடைய விருப்பத் தெரிவாகியிருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்புவரை நான்கூட‘கட்டுரை என்பது வரட்சியானது’என்ற ஒவ்வாமையுடன் இருந்தேன். கதையின் கனவுக் கம்பளங்கள் தரையை அவ்வளவிற்கு மறக்கடித்திருந்தன. சுகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், ச.தமிழ்ச்செல்வன் போன்றோரின் கட்டுரைகளை வாசிக்க ஆரம்பித்த பிறகு, நாவல்களும் சிறுகதைகளும் மூன்றாம் இடத்திற்கு நகர்ந்துவிட்டன. கவிதை எப்போதும் பெருமிதம் வழியத் தூக்கி உச்சிமுகர விரும்பும் செல்லப்பிள்ளையாக முதலிடத்திலேயே இருந்து வருகிறது.

நடந்து முடிந்த புத்தகத் திருவிழாவில், உயிர்மை ‘ஸ்டால்’இற்கு அடிக்கடி போய், ‘வந்துவிட்டதா? வந்துவிட்டதா?’என்று நச்சரித்துப் பெற்றுக்கொள்ளுமளவிற்கு சுகுமாரனின் கட்டுரைகளால் ஈர்க்கப்பட்டிருந்தேன். (புத்தகம் பற்றிய அறிவித்தல் முன்னமே உயிர்மையில் வெளிவந்துவிட்டிருந்தது) கண்காட்சி முடிவதற்கு இரண்டு நாட்கள் இருக்கையில் ‘இழந்த பின்னும் இருக்கும் உலகம்’கையில் கிடைத்தது. அந்தத் தொகுப்புடன் ஒரு புகையிரதப் பயணத்தின்போது உரையாட முடிந்தது. தொடர்ந்த பிரயத்தனத்தின் பின் கிடைத்த கட்டுரைத் தொகுப்பு ‘வெளிச்சம் தனிமையானது’. கட்டுரையின் சுருக்க வசதி கருதி ‘வெளிச்சம் தனிமையானது’தந்த அனுபவம் பற்றி மட்டும் பேச முற்படுகிறேன்.
கட்டுரைகளைத் தொகுப்பாகப் படிக்கும்போது ஒரு இழை இருக்கும். தனிக்கட்டுரை வாசிப்பில் ஆசிரியரின் தேடலையும் தெரிவையும் முழுமையாக அடையாளங்காண இயலாது. சுகுமாரனை ஈர்த்தவர்கள் தனிமையானவர்கள், கலகக்காரர்கள், இலக்கியத்தை-ஓவியத்தை-இசையை-நடிப்பை-கவிதையை-கதையை அதன் மென்மையான ஆன்மாவுக்காகவே நேசித்தவர்கள். அவர்களது உலகம் தனிமையின் கேவல்கள் நிரம்பி வழிவது. உதாசீனத்தின் வெப்பியாரம் பொங்குவது.

தொகுப்பின் தலைப்பு கவித்துவமானது. கேள்விகளைத் தூண்டுவது. ‘வெளிச்சம் எப்படித் தனிமையானதாக இருக்க முடியும்?’, ‘இருளன்றோ தனிமையின் தோழி!’. அந்தப் பெயரைக் கேட்டதும் எனது தோழிகளில் ஒருத்தி சொன்னார்‘அது கட்டுரையாளரின் சுபாவத்தைச் சுட்டுவதாக இருக்கிறது’என்று.

ஒரு நல்ல படைப்பென்பது ஆத்மார்த்தமாக நம்மோடு உரையாடியபடி நடந்துவரும் நண்பனைப் போன்றது. விடைபெறும் தருணத்தில் பிரிவு விழுத்தும் துக்கத்தின் நிழல் நம்மீது சாய்ந்துவிடுகிறது. கைகளை அழுந்தப் பற்றிக்கொள்கிறோம்; கண்களுக்குள் பார்த்துக் கொள்கிறோம்; மெதுவாகச் சிரிக்கவும் சிரிக்கிறோம். சுகுமாரனின் கட்டுரை இறுதி வரிகள் ஒரு கவித்துவமான பிரிவினையொத்தவை. சட்டென அது தரும் உணர்விலிருந்து விடுபட்டுவிட இயலாது. சில சமயங்களில் முழுக் கட்டுரையுமே அந்த ஓரிரண்டு வரிகளை நோக்கிய நகர்வாகவே தோன்றியிருக்கிறது.
‘நிழலற்றவனின் அலறல்’என்ற கட்டுரையில் மலையாளக் கவிஞர் அய்யப்பனைக் குறித்து இப்படி எழுதுகிறார்:

“பேதலிப்பின் தடுமாற்றங்களுக்கும் தெளிவின் பரவசத்துக்கும் இடையில் உருவாகிறவை அவரது கவி வெளிகள். கண்ணீர்த்துளியின் விசும்பலிலிருந்தும் குருதியோட்டத்தின் மௌனத்திலிருந்தும் உயர்கிறது அவரது மொழி”

ஒரு படைப்பை, எழுதப்பட்ட வரிகளினூடு மட்டும் பார்க்காமல் எழுதாமல் விடப்பட்ட அகச்சரட்டைத் தொடர்வது கவிஞர்களுக்கே சாத்தியம். எழுதுபவரின் அந்தரவெளியை உணர்வது சிறந்த வாசகனுக்கே சாத்தியம். தாங்கள் எழுதியதையே மீண்டும் மீண்டும் வாசித்து புளகாங்கிதமடையும் சுயமோகிகளுக்கு அந்தச் சுகானுபவம் கிட்டுவதில்லை. சுகுமாரன் தேர்ந்த வாசகனுமாயிருக்கிறார்.

வாசிக்கப்படாத புத்தகங்கள் நீர்நிறைந்த கண்களுடன் நம்மை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதுபோன்ற கற்பனை(?) நிறையத் தடவை வந்திருக்கிறது. தமிழ்ப் புத்தகங்களுக்கே இந்த நிலை எனில், பிறமொழி வாசிப்பு பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அதிலும் ஆரம்ப வாசகர்களுக்கு நல்ல வழிகாட்டுதல்கள் அவசியமாயிருக்கின்றன. அதை ‘வெளிச்சம் தனிமையானது’ஓரளவுக்கேனும் பூர்த்தி செய்திருக்கிறது.

புறம், அயல் என இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் ‘வெளிச்சம் தனிமையானது’வின் முதல் பகுதியாகிய ‘புறம்’முழுவதும் மலையாள இலக்கியம் சார்ந்தது. இரண்டாவது பகுதி மேலைத்தேய கலைஞர்களைப் பற்றியது.

‘ஒரு விசாரணையின் நூற்றாண்டு’ என்ற கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிற குறியேடத்து தாத்ரி, வாசித்து முடிந்தபிறகும் நீண்டநாள் என் நினைவில் இரவெல்லாம் விம்மியழுதுகொண்டிருந்தாள். மேல்சாதி மற்றும் ஆணாதிக்கத் திமிரால் சீரழிக்கப்பட்ட ஒரு பெண், தன்னுடலை ஆயுதமாக்கி எவ்வாறு திருப்பித் தாக்கினாள்; காலமாற்றங்களுக்கியைபுற மாறும் சிந்தனைகளில் அவள் எவ்விதமெல்லாம் ஞாபகங்கொள்ளப்படுகிறாள் என்ற வலிநிரம்பிய வரலாற்றை சுகுமாரன் அந்தக் கட்டுரையில் பகிர்ந்துகொண்டிருந்தார். ஒரு வேசியாக, வஞ்சிக்கப்பட்ட அபலையாக, கலகக்காரியாக, பெண்ணியக் குறியீடாக அவள் பன்முகத் தோற்றம் கொள்கிறாள். குறியேடத்து தாத்ரி ஏதோவொரு வகையில் அனைத்துக் காலங்களிலும் வாழ்ந்த, வாழும் பெண்களின் வார்ப்பாயிருக்கிறாள்.

சில எழுத்தாளர்கள் அவர்களால் எழுதப்படும் கதைகளிலும் பார்க்க சுவாரசியமானவர்கள். சிலரை நெருங்கும்போதோ, அவர்களது நடவடிக்கைகளால், அதுவரை கட்டமைக்கப்பட்டிருந்த மகோன்னத பிம்பத்தைத் தகர்த்தெறிந்து விடுவார்கள். கேரளத்தில் வாழ்வாலும் எழுத்தாலும் வியந்து, விதந்து பேசப்பட்ட, சனங்களின் எழுத்தாளராகிய வைக்கம் முகம்மது பஷீரைப் பற்றியும் சுகுமாரன் எழுதியிருக்கிறார்.

“நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களே அவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப் பேர்வழிகள் எல்லோரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள். அந்தப் பாத்திரங்கள் மீது வாசகனும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி”

மேலுக்குக் கனவான்போலத் (பெண்பால் தட்டுப்பாடு அடிக்கடி நிகழ்வது) மினுக்கும் ஒவ்வொருவரதும் இருண்ட பக்கங்கள் அவரவர்க்கே வெளிச்சம். அதனால்தான் பஷீர் படைக்கும் பாத்திரங்களில் தங்களைப் பொருத்திப் பார்த்து, அப்பாத்திரங்களை நேசித்தலும் கொண்டாடலும் சாத்தியமாகிறது. பஷீரைப் போல மலையாள இலக்கியத்திற்குச் செழுமை தந்த சக்கரியா, தகழி ஆகியோரைப் பற்றியும் சுகுமாரன் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். சிறந்த படைப்புகளை அது பிறந்த மூலமொழியிலேயே வாசிக்கக் கிடைக்கும் பேறுபெற்றவர்கள் பாக்கியவான்கள் என்பர். ஏனெனில், இன்னொரு மொழிக்கு அது பெயர்க்கப்படும்போது இழக்கப்படுபவை அநேகம். தமிழும் மலையாளமும் நன்கறிந்த சுகுமாரன் அவர்கள் இருமொழிகளிலுமுள்ள படைப்புகள் மற்றும் படைப்பாளிகளைப் பற்றிப் பேச கூடுதல் தகுதிபெற்றவரே.

ஆனால், கட்டுரைகளில் சில இடங்களில், தமிழில் நல்ல இலக்கியங்கள் பெருவாரியாக வரவில்லை என்ற இளக்காரம் மலையாளிகளுக்கு இருக்கிறது (‘சிவகாமி அம்மாள் தனது சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா…?’ நினைவில் வருகிறது இல்லையா?) என்ற வருத்தம் தொனிக்கவே செய்கிறது.

‘ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்’என்ற கட்டுரை வாயிலாக, அரச இயந்திரமானது, சட்டம் என்ற பெயரில், சாதாரண மக்களது அடிப்படை உரிமை மற்றும் உணர்வுகளை எவ்வாறு சிதைத்துப்போடுகிறது என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். 1976ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதியன்று கோழிக்கோடு என்ற இடத்திலுள்ள மாணவர் விடுதியொன்றிலிருந்து காவற்துறையினரால் கைதுசெய்து கொண்டுசெல்லப்பட்டு காணாமலடிக்கப்பட்ட ராஜன் என்ற இறுதியாண்டு பொறியியல் மாணவனது தந்தை ஈச்சரவாரியர் தனது மகனைத் தேடி அலைந்த அலைச்சல்கள், கடைசியில் தனது மகன் காவல்துறையினரால் கொல்லப்பட்டான் என்பதைக் கண்டறிந்தது போன்ற விடயங்களை இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.

கவிஞர்களான அய்யப்ப பணிக்கர், கடம்பனிட்ட ராமகிருஷ்ணன், சமூகப்போராளி மயிலம்மா, இசைக்கலைஞர் நெய்யாற்றின்கரை வாசுதேவன் ஆகியோரும் ‘வெளிச்சம் தனிமையானது’வில் பேசப்பட்டிருக்கிறார்கள்.

தொகுப்பின் அடுத்த பகுதியான ‘அயல்’பெரும்பாலும் ஐரோப்பியப் படைப்பாளிகள், கலைஞர்களைப் பற்றியது. ‘எதைத் தேடுகிறீர்களோ… அதையே கண்டடைவீர்கள்’என்பதற்கிணங்க சுகுமாரனின் பேனா நகர்ந்துசெல்கிறது. வாசிப்பின்வழி, கலைகள் வழி அவர் கண்டடைகிற மனிதர்கள் தம்மளவில் தனித்தவர்கள். தீவிர, சமரசங்களற்ற ரசனைகளைக் கொண்டவர்கள். மரபுகளுக்கெதிரான கேள்விகளுக்கு எப்போதும் தயங்காதவர்கள்.

‘ஒரு தேடல்… ஓர் அறிமுகம்… சில கவிதைகள்’ என்ற கட்டுரையின் மூலம் அல்பேனியக் கவிஞரான மிமோஸா அஹ்மதியை சுகுமாரன் அறிமுகப்படுத்துகிறார். மிமோஸா அஹ்மதியின் கவிதை வரிகள், அடக்குமுறையாளர்கள் மீதான கனல், எல்லா நிலங்களிலும் இலக்கியத்தில் ஒன்றேபோல் வீசிக்கொண்டிருப்பதை உணர்த்துகின்றன. ‘அம்மாவுக்குக் கடிதம்’என்ற கவிதையில் இப்படி எழுதுகிறார்:

அம்மா,
என்னவோ நடக்கப்போகிறது என்று உணர்கிறேன்
அரசாங்கம் மக்களுக்கு இவ்வளவு எதிரானதாக
ஒருபோதும் இருந்ததில்லை.
வஞ்சகம் மனிதர்களிடையே இவ்வளவு மோகத்துக்குரியதாக
எப்போதும் இருந்ததில்லை.
ஆழ்ந்த தூக்கத்தில் கசிந்து மறைவது போல
இவ்வளவு பெண்கள்
காணாமலோ காலியாகவோ போனதில்லை.”

பல கட்டுரைகளை வாசிக்கும்போது நமது வாசிப்பின் போதாமை தெரியவருகிறது. தண்ணீர்த்தொட்டியை கடல் என்று நினைத்து நீச்சலடிக்கும் மீன்குஞ்சுகளைப் போன்றவர்களே நாங்களும்.

சூஸன் சாண்டாக் கவிஞரின் பிரியத்துக்கும் நன்றிக்குமுரியவராக இருக்கிறார். அவரால் தூண்டப்பட்டு வாய்த்த ‘பாதென் பாதெனில் கோடைக்காலம்' என்ற நாவலையும் அதை எழுதிய லியோனித் சைப்கினையும் பற்றி ‘தாஸ்தயேவ்ஸ்கியை நேசித்தல்’என்ற கட்டுரையில் சொல்லியிருக்கிறார். கட்டுரையின் நெடுகிலும் வழியும் தாஸ்தயேவ்ஸ்கியின் மீதான வாஞ்சையை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று-தனது கதையின் நாயகனாக தாஸ்தயேவ்ஸ்கியையே வரித்த லியோனித் சைப்கினுக்கு தாஸ்தயேவ்ஸ்கி மீது இருக்கும் வாஞ்சை. இரண்டு-சைப்கினை முன்வைத்து, தாஸ்தயேவ்ஸ்கி மீதான தனது வாஞ்சையை எழுதிச்செல்லும் சுகுமாரனின் பெருமிதம். அது அவரறியாமல்(அன்றேல் அறிந்து)ஓரிடத்தில் வெளிப்பட்டுவிடுகிறது.

“தாஸ்தயேவ்ஸ்கியை மையப் பாத்திரமாகக் கொண்ட நாவல் என்பது என்னை இன்னும் ஆவேசப்படுத்தியது.”

நூலின் தலைப்பாயமைந்த ‘வெளிச்சம் தனிமையானது’என்ற கட்டுரையில் பேசப்படும் கவிஞர் ஃபரூக் ஃபரோக்சாத் ஆச்சரியங்களைத் தூண்டும் பெண்ணாயிருக்கிறார். ஆணாதிக்கத்தாலும் மதத்தின் பெயராலும் பெண்கள் இரண்டாம் பாலினத்திற்கும் கீழாக நடத்தப்படும் ஈரானிய சமூகத்தில், நமது காலத்திற்கு ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு பெண்ணின் தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்வின் துணிச்சல் வியப்பிலாழ்த்துகிறது. அவர் எழுதுகிறார்:

“நகரத்தின் மெலிந்த நீதியின் கயிறுகளில்
எனது நம்பிக்கை தொங்கவிடப்பட்டபோது….
தெருக்களில் அவர்கள்
எனது தீப்பந்தத்தின் தலையை வெட்டியபோது…
அவர்கள் எனது காதலின் அப்பாவிக் கண்களை
இறுகக் கட்டியபோது..…
எனது நடுங்கும் கனவுகளின் எல்லா நாளங்களிலும்
புது உதிரம் ஊற்றெடுத்தபோது…
பழைய கடிகாரத்தின் வாடிக்கைப் பாடலன்றி
வேறல்ல எனது வாழ்க்கை என்றானபோது…

நான் உணர்ந்தேன்…
நான் காதலிக்க வேண்டும்…
நான் பித்தேறிக் காதலிக்க வேண்டும்.”

சுகுமாரன் சிறந்ததொரு மொழிபெயர்ப்பாளரும்கூட. மேற்கண்ட வரிகளை மீறிய பொருளை அக்கவிதை கொண்டிராது என்றே நம்புகிறேன்.

இசைக்கலைஞர் லூசியானா சோஸாவைப் பற்றிய கட்டுரையை நான் உயிர்மையிலேயே வாசித்திருந்தேன். அதில் இடம்பெற்ற வரிகளை எங்காவது குறித்துவைக்க வேண்டுமென்றும் எண்ணியிருந்தேன். லூசியானாவின் பாடல்களைக் கேட்ட அனுபவம் தனக்கு எப்படி இருந்தது என்பதை ‘பாப்லோ நெரூதா… லூசியானா சோஸா… எலிசபெத் பிஷப்’என்ற கட்டுரையில் விபரிக்கிறார் (புளகாங்கிதமடைகிறார் என்றும் சொல்லலாம்) சுகுமாரன்.

“மனிதப் பிரக்ஞையில் இசை உருவாக்கக்கூடிய படிமங்கள் ஒவ்வொன்றாகத் திரளத் தொடங்கின.

இதுவரை பார்த்திராத சமவெளிகள். அதன் ஓரங்களில் வரிசையாக நின்று அசையும் பெயர் தெரியாத மரங்கள். அவற்றின் கிளைகளிலிருந்து விடுபட்டு காற்றில் மிதந்து இறங்கும் வண்ண இலைகள், வேகமாகப் பாயும் ராட்சத வாகனங்கள், ஊர்வலமாகப் போகிற மக்கள் கூட்டம், தனிமையில் இருக்கும் பெண்ணின் நீர்த்திரைக் கண்கள், முடிவில்லாத நெடுஞ்சாலையில் தனியாக நடந்து போகும் மனிதன், பழங்கால தேவாலய கோபுரத்தில் அசையும் பெரிய மணி, பிரமாண்டமான கட்டடங்கள், சரிகைப் பெருக்காக பாலத்துக்குக் கீழே புரளும் நதி, அரண்ட வெளிச்சத்தில் திரியும் உருவம் புலப்படாத விலங்குகள், பாடகியின் மேல் மட்டுமாக வெளிச்சம் அலையும் இசையரங்கு என்று படிமங்கள் தொடரும்.”

எழுத்தும் இசையாகும் அபூர்வ தருணங்கள் உண்டு என்பதற்கு மேற்கண்ட பந்தியே சான்று. செர்வாண்டிஸ் என்பவரால் எழுதப்பட்ட ‘டான்குவிக்ஸோட்’என்ற புனைவைப் பற்றி எழுதப்பட்ட ‘நிரந்தரமான சமகாலத்தன்மை’ என்ற சொற்றொடர் சுகுமாரனுக்கும் பொருந்தும். அவர் தனது மொழிநடையைக் காலந்தோறும் புதுப்பித்து வருவதை அவரது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பவர்களால் உணரமுடியும்.

ஒற்றைச் சரடுள்ள நாவலுக்கும், பல ஆளுமைகளை உள்ளடக்கிய கட்டுரைத் தொகுப்புக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. கட்டுரைத் தொகுப்பைப் பற்றி எழுதுவது ஒரு சவால் என்பதை இந்தப் பயிற்சியின் வழியாக நான் கற்றுக்கொண்டேன்.


நன்றி: உயிரோசை


2 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களின் மூலமும், உமாசக்தியின் மூலமாகவும் நிறைய எழுத்தாளர்களின் எழுத்து அறிமுகமாகிறது.

ச.தமிழ்ச்செல்வனை தொடர்ந்து, சுகுமாரனையும் வாசிக்கவேண்டும் என்று தூண்டுகிறது.

ஆழ்ந்த விமர்சனம் -

தமிழ்நதி said...

Dear friends,

I am far away from Chennai. And there is no net connection here. I will respond your mails when i return. Thank you.