5.24.2010

வாடகை வீடு




வெயில் மண்டையைப் பிளந்து உள்ளே இறங்கிவிடுவேன் என்பதுபோல ஆங்காரத்தோடு எரித்தது. பூதாகரமான வாகனங்கள் பாதசாரிகள் பிரமித்துச் செயலிழந்து நிற்கும்படியாக ஓசையெழுப்பியபடி குறுக்கும் நெடுக்குமாக விரைந்துகொண்டிருந்தன. பேருந்திலிருந்து இறங்கி, அகண்ட கரும்பாம்பாய்க் கிடந்த வீதியைக் கடக்கும்போது, உயிர் ஒரு நிமிடம் உதறலெடுத்து ஓய்ந்தது. நல்லவேளை கதிர் அவளது கையைப் பற்றியிருந்தான். பிரதான வீதியிலிருந்து அந்த அபார்ட்மென்ட் இருக்கும் சிறு வீதியினுள் இறங்கியதுமே ஆசுவாசமாக உணர்ந்தார்கள். அதற்கு, சாலையின் இருமருங்கிலிருந்தும் கிளைக்கைகளை நீட்டி ஒன்றையொன்று பற்ற முயன்றுகொண்டிருந்த மரங்கள் காரணமாயிருக்கலாம். ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்துவிட்டு திடீரென நினைத்துக்கொண்டாற்போல காற்று இலைகளை விசிறியது. வெயிலில் வந்த களைப்பை காற்றின் தடவல் துடைத்துப்போட்டது. இத்தனை அலைச்சலுக்குப் பிறகு ஒருவழியாக நல்லதொரு வீடு கிடைக்கவிருக்கும் நிம்மதி கதிரின் முகத்திலும் வெளிப்படையாகத் தெரிந்தது. வீடு தேடியலைந்த இந்த மூன்று வாரங்களில் அவன் மேலும் இளைத்துவிட்டாற்போலிருந்தது சுமதிக்கு.

வீட்டுச் சொந்தக்காரர் இரண்டு மணிக்கு வந்து சந்திப்பதாகச் சொல்லியிருந்தார். கதிர் வேலைக்கு அரைநாள் லீவு சொல்லிவிட்டு வந்திருந்தான். இந்த வீட்டை மூன்று நாட்களுக்கு முன் வந்து பார்த்திருந்தார்கள். காவலாளியிடம் சாவி இருந்தது நல்லதாய் போயிற்று. வாடகை உட்பட எல்லாவகைகளிலும் வீடு பிடித்திருந்தது.

அபார்ட்மென்ட் வாசலில் அவர்கள் காத்திருந்தார்கள். காவலாளி அரைத்தூக்கத்தில் இருந்தார். பின்மதியங்களுக்கேயுரித்தான சோம்பலும் வெயிலும் வீதியை வெறிச்சிடப் பண்ணியிருந்தன.

இப்போதிருக்கும் வீட்டை விட்டு வரவே மனதில்லை சுமதிக்கு. இந்த மூன்று வாரங்களில் முப்பது தடவையாவது அதைக் குறித்து வருந்தியிருப்பாள். தனிவீடொன்றின் முதல்தளம். அகலமான வராந்தாவும் வெளிச்சம் வாழும் அறைகளும் வேம்புகள் இழைந்து இழைந்து செல்லங்கொஞ்சம் பல்கனியுமாக அந்த வீட்டை எங்கோ கிராமத்திலிருந்து பெயர்த்தெடுத்துக் கொண்டுவந்து வைத்தாற்போலொரு நிறைவு. காலையில் நாற்புறமிருந்தும் யன்னல்கள் வழியாக வெயில் இறங்கிவந்து கோலமிடும் அழகே தனி. கூப்பிடு தூரத்தில் கடல். மழைக்காலத்திலே அலைகள் சளக்சளக்கென்று கரைமோதும் சத்தம் வீடுவரை கேட்கும். விடிகாலையில் படுக்கையறையை ஒட்டியிருந்த பூவரசில் குருவிகள் கெச்சட்டமிடும் ஓசை இடைவிடாமல் ஒலிக்கும். அங்கிருந்து கிளம்பி கடற்கரைச்சாலையில் கால் மிதித்தபிறகே நகரத்தின் பைத்தியப் பரபரப்பை உணரமுடியும்.

எல்லா சுகமும் கதிரை கே.கே.நகர் அலுவலகத்திற்கு இடம்மாற்றும்வரைதான் நீடித்தது. இரண்டு மாதங்களாக பேருந்தில்தான் அலுவலகத்திற்குப் போய்வருகிறான். அண்மைய நாட்களில் பயணக் களைப்பு அவனது முகத்தில் எழுதி ஒட்டப்பட்டாற்போல புலப்படத்தொடங்கிவிட்டிருக்கிறது. வெயில்காலத்தில் பேருந்துகள் நெருப்பினால் வேயப்பட்ட தகரச் சிறைகளாகக் கொதித்தன. அனல் உலைகளாக ஆளை உருக்கின. முன்பெனில் வேலையிலிருந்து திரும்பியதும் புத்தகத்தோடு அமர்ந்துவிடுவான். இப்போதோ ஓரிலையும் ஆடாமல் மௌனத்தவமியற்றும் மரங்களை, புல்கருகி அனல்பறக்கும் வெளியை வெறிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறான். பிறகு மாலை கருகியதும் தூங்கவாரம்பிப்பவன் இரவு ஒன்பதரைக்கே எழுந்திருக்கிறான். இரவு உணவு முடிந்ததும் மறுபடியும் தூங்கத்தொடங்கிவிடுகிறான். அவனுக்கு மிகப் பிடித்தமான புத்தகங்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.

சுமதிக்கு வருத்தமாக இருந்தது. நிரம்பவும் யோசித்தபிறகு அவள்தான் அந்த முடிவுக்கு வந்தாள்.

நாம வேணா கே.கே.நகர் பக்கமே போயிடலாங்க…”

அவனது கண்கள் மலர்ந்து முகம் விகசித்தது.

உனக்கொண்ணும் சிரமம் இல்லையே…?”

எனக்கென்னங்கபுள்ளைங்களுக்குக்கூட நல்ல பள்ளிக்கூடம்லாம் அங்க இருக்காம்

அவனது முகத்தில் எப்போதாவது மலரும் அந்த அபூர்வமான புன்னகை பரவியது. சிரிக்கும்போது அழகாகத் தோன்றாத மனிதர்கள் இல்லவே இல்லை என்று சுமதி நினைத்துக்கொண்டாள். கல்யாணமான புதிதில் அவள் வீட்டில்கூடக் கேட்டார்கள்.

என்னதுஒம் புருசன் சிரிக்கிறதுக்கும் பேசுறதுக்கும் காசு கேப்பாராக்கும்…”

பேசி என்ன வாழ்ந்தது?’என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். சொல்லவில்லை. ஒரு சிரிப்போடு நகர்ந்துவிட்டாள். பேச்சு பெரும்பாலான சமயங்களில் பாவனைப்பூச்சுக்களோடு இருப்பதை அவளறிவாள். சளசளவென்று பேசுவதைவிட பேசாமலே இருப்பது நன்றாகத்தானிருக்கிறது. விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டுவிட்ட பிற்பாடு இரவு சிந்தும் மெல்லிய ஒளியில் அவன் மார்பினுள் ஒடுங்கும்நேரம் கூந்தலுள் நுழையும் அந்த விரல்கள் சொல்லாததையா வார்த்தைகள் வெளிப்படுத்திவிடப்போகின்றன? நோய்வாய்ப்பட்டு மரணத்தின் கத்தி நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்தபோது,அருகிருந்து இரவெல்லாம் ஒளிசிந்திக்கொண்டிருந்த கண்களின் கனிவொன்று போதாதா அவளுக்கு? அவன் அதிகம் பேசுவதில்லை என்பதில் அவளுக்கு ஒரு குறையுமில்லை.

அவன் அதிகம் பேசிச் சிரிக்கும் ஒரே நபர் உண்டென்றால் எப்போதாவது கிராமத்திலிருந்து வந்துபோகும் சுப்பிரமணியுடன்தான். தமிழ்ச்சினிமாக்களில் காண்பிப்பதுபோல அவன் பலாப்பழத்தோடோ வாழைத்தாரோடோ வந்து இறங்குவதில்லை. புத்தகங்களாக அள்ளிக்கொண்டு வந்துசேர்வான்.
சிறுவயது முதற்கொண்டு சிநேகிதன்.

இதைப் படிச்சுப் பாருடா மாப்ளஐயோ! என்னமா எழுதியிருக்கான்…”

அந்தஐயோவின் பரவசம் கண்களின் மினுக்கத்தில், உதடுகளின் துடிதுடிப்பில், தனக்குப் பிடித்த பக்கத்தைப் பிரித்துப் பிடித்த விரல்களின் மெல்லதிர்வில் தெரியும்.

புத்தகம் படிக்கிறது இருக்கட்டும்டா.. ஒம் பேர்ல இருக்கிற பிள்ளையைத் தூக்கிடலாமா? அதென்ன சுப்பிரமணியம்பிள்ளை?” வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பான்.

அது கெடக்கு மாப்ளஒம் புள்ளைகளுக்கு கல்யாணம் காட்சின்னு வரும்போது சாதி குறுக்க வரும்லாஅப்ப பேசிக்கிறேன்

சாதியென்ன பூனையா குறுக்க வர்றதுக்குஎன் ரெண்டு பிள்ளைங்களும் யாரைக் கூட்டிட்டு வந்தாலும் அவங்க என் மருமகள்கதான்

இவரு என்ன உலகந் தெரியாத ஆளாயிருக்காருஎன்று சுமதி நினைத்துக்கொள்வாள். ஆனாலும், ‘உலகந் தெரியாதஆட்கள்தான் நிம்மதியாக இருக்கிறார்கள் என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது. நிறையத் தெரிந்தவர்கள் அல்லது அப்படிப் பாவனை பண்ணுகிறவர்கள் ஏதோ சேட்டை பண்ணுகிற குரங்கைப் பிடித்துத் தலையில் ஏற்றிவைத்துக்கொண்டிருக்கிறவர்களைப்போல விழிபிதுங்கித் திரிவதைக் கண்டிருக்கிறாள்.

அவன் ஒற்றைப்பிள்ளை. ஊரில் சொந்தவீடு இருந்தது. சென்னைக்கு வந்ததிலிருந்து ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள். வீட்டுச் சொந்தக்காரரை சாவி கையில் வாங்கும்போது பார்த்ததுதான். முதலாம் திகதி தவறாமல் வாடகைப்பணம் வங்கிக்கணக்குக்குப் போய்விடுகிறது. எப்போதாவது தொலைபேசியில்இன்னும் அங்கேதான் இருக்கீங்களா?’ என்பதாக ஒரு குரல் கேட்கும். அவருடனான தொடர்பு அவ்வளவே.

இந்த வீடு தேடும் படலம் ஆரம்பித்ததிலிருந்து அவன் கண்ணெதிரில் விரிந்த உலகம் அவனுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. வாடகை விளம்பரங்கள் வரும் பத்திரிகையிலிருந்து சில தொலைபேசி இலக்கங்களைக் குறித்துவைத்துக்கொண்டு அழைத்தான். முதலாவது அழைப்பிலேயே கசங்கிவிட்டது முகம்.

வெஜ்ஜா நான் வெஜ்ஜா அதை மொதல்ல சொல்லுங்கோஅப்பறம் வீட்டைப் பத்திப் பேசலாம்என்றார் தொலைபேசியை எடுத்தவர்.

நான் வெஜ்தாங்க

நான் வெஜ் சாப்பிடுறவங்களுக்கு வீடு குடுக்கமுடியாதுமுகத்திலறைந்தாற்போல வந்தது பதில்.

அவன் படக்கென்று தொலைபேசியை வைத்துவிட்டான்.

ஏதோ அவர் வீட்டை எம் பேருக்கு எழுதிக்குடுக்கச் சொல்ற மாதிரில்ல பேசுறாரு…”

கே.கே.நகர், அசோக் நகர், மாம்பலம் பக்கம்லாம் பிராமின்ஸ்தா நெறயப் பேர் இருக்காங்க.”என்றாள் சுமதி.

இப்பிடியா பதில் சொல்றது? எல்லாத்துக்கும் ஒரு வகை முறை உண்டில்லையா?”என்றான் அவன். குரல் சுரத்திழந்திருந்தது.

தனி வீடா? அபார்ட்மென்டா?”சுமதி கேட்டாள்.

அபார்ட்மென்ட்தாம்மா…”

அடுத்துப் பேசியவரின் குரல் அத்தனை தண்மை.

வந்து பாருங்களேன்பிடிச்சிருந்தா முடிச்சுடலாம்என்றார்.

தனிவீடு. இரண்டு பெரிய அறைகள், இரண்டு குளியலறைகள், கிணற்றடிதுவைகல்வாடகை பன்னிரண்டாயிரம் சொன்னார். தென்னையொன்று குனிந்து கிணற்றைப் பார்த்துக்கொண்டிருந்தது. துவைகல்லில் சுமதி தன் பால்ய நாட்களைக் கண்டாள். குழந்தையின் குதூகலத்துடன் அதில் அமர்ந்துபார்த்தாள்.

பிடிச்சிருக்குங்க…”கதிர் இறந்தகால ஞாபகங்களில் மினுங்கும் சுமதியின் கண்களைப் பார்த்தபடி சொன்னான்.

செரிவீட்டுக்குப் போய் யோசிச்சிட்டு போன் பண்ணுங்கஎன்றார் அவர்.

அன்றிரவே தொலைபேசியில் அழைத்தார்கள். அவரது தொனி மாறிப்போயிருந்தது.

வேற பார்ட்டி பதிமூவாயிரத்துக்குக் கேக்கிறாங்க... உங்களுக்குப் பிடிச்சிருந்தா நீங்க எடுத்துக்குங்க…”

விளம்பரத்துலயே பன்னெண்டாயிரம்னுதான போட்டிருக்கீங்க?”

இப்ப எல்லாம் விலை ஏறிப்போச்சுவீட்டு வாடகை மட்டும் அப்பிடியேவா நிக்கும்?”

மொதல்ல பன்னண்டாயிரத்துக்கு சரின்னீங்க

ஆமாம் சரின்னேன். இப்ப இல்லைங்கிறேன்

கதிர் தொலைபேசியைப் பட்டென்று வைத்தான்.

பேராசைபேராசைஅவனது உதடுகள் முணுமுணுத்தன.

கிணற்றின் ஆழத்தில் விழுந்து கிடந்த தென்னங்கீற்று முளைத்தெழுந்து வந்து கழுத்தைச் சுற்றிக்கொள்வதாக சுமதி விடிகாலையில் கனவொன்று கண்டாள்.

மரங்களுக்காக மனம் ஏன் இத்தனை ஏங்கிச் சாகிறது என்று அவள் தன்னையே கடிந்துகொண்டதுண்டு. எத்தனை பார்த்தும் சலிக்காத பச்சைகாற்றில் மென்னடனிக்கும் நளினம்வெள்ளிவெயிலில் பகட்டி அழைக்கும் சாகசம்மழைக்காலத்தில் இலைகளின் அதீத பச்சையைக் கடித்துச் சாப்பிட்டுவிடலாம் போலிருக்கும் அவளுக்கு.

நான்கு நாட்களுக்கு முன்னால் விருகம்பாக்கத்தில் ஒரு வீடு இருக்கிறதென்று பார்க்கப் போனார்கள். போகும் வழியில், முகப்பில் பெரிதாக பெயர் பொறிக்கப்பட்ட அந்த அபார்ட்மென்ட் தென்பட்டது. வாசலில்தான் அத்தனை மரங்கள்! ‘டு லெட்என்று எழுதப்பட்ட அட்டை மரமொன்றின் இடுப்பில் தொங்கியது.

கேட்டுப் பாக்கலாம்பா…”

இங்கெல்லாம் நமக்குக் கட்டுப்படியாகாது சுமதிஎன்றவன், ஏமாற்றம் கவியத் தாழ்ந்த அவளது கண்களில் சரிந்தான். ‘நாம வேலைக்குப் போயிடுறோம்அவதான நாள் முழுக்க வீட்ல இருக்கப்போறவஎன்ற நினைவு பிடரியில் உந்த அந்தக் கட்டிட வளவினுள் நுழைந்தான்.

வயதான காவலாளி தொப்பியைத் தலைமேல் அழுத்திக்கொண்டே எழுந்து வந்தார்.

இங்க வாடகைக்கு வீடு இருக்கா சார்?”

ஆமா இருக்கு. நீங்க நான் வெஜ் சாப்பிடுவீங்களா?”

ஆமாங்கஅப்பப்ப சாப்பிடுவோம். ரொம்பல்லாம் இல்லை

அப்ப கெடைக்காதுங்க.”

ஏன்?”

இங்க நூற்றிருபது வீடு இருக்கு. அதுல தொண்ணூறு பர்சன்டேஜ் பிராமின்ஸ். இந்த ஹவுஸ் ஓனர் பிராமின் கெடயாது. ஆனா பிராமின்ஸ் தவிர வேற யாருக்கும் வாடகைக்குக் குடுக்கக்கூடாதுன்னு இங்க இருக்கிறவங்க சொல்லியிருக்காங்க சார்அவர் என்ன பண்ணுவார் பாவம்
காவலாளி தொப்பியைக் கழற்றிக் கையில் எடுத்தபடி மீண்டும் அந்த நாற்காலியில் போய் அமர்ந்து அசிரத்தையாக வீதியை வெறிக்கவாரம்பித்தார்.

கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்…”கதிர் குறுகிப் போனவனாக உணர்ந்தபோதிலும் அருகில் போய்க் கேட்டான்.

எனக்கு நல்லாத் தெரியுங்க சார்இங்க நான் நாலு வருசமா வேலை பாக்குறேன். நீங்களாவது பரவால்லஎப்டியாச்சும் வீடு கிடைச்சுடும். இந்த சினிமால வேலை பாக்கிறவங்கசிலோன்காரங்கமுஸ்லிம் பாய்ங்க இவங்களுக்கெல்லாம் வீடு வாடகைக்கு எடுக்கப் படுற பாடு இருக்கே…”பழி தீர்ப்பதுபோலக் காய்ந்துகொண்டிருந்த வெயிலைப் பார்த்தபடி சொன்னார். காங்கை பறந்தது. பார்த்துக்கொண்டிருக்கையிலேயே சுமதியின் கற்பனையில் அந்தக் காவலாளி எப்போதாவது நடந்து திரியும் மரமாக மாறித் தெரிந்தார். ஒரே இடத்தில் இருந்துகொண்டேயிருப்பதைக் காட்டிலும் கொடுமை என்ன இருக்கிறது?

அசோக்நகரிலிருந்து சுமதியோடு பேசிய பெண்ணுக்கு சிநேகிக்கும் குரல். அந்தக் குரலுக்குரிய முகத்தை அதைப் பார்க்காமலே நேசிக்கமுடிந்தது. ‘தோநாம பல்லாங்குழி ஆடுனதை மறந்துட்டியா…?’என்று செல்ல அதட்டல் போடுகிற குரல்.

வீடு உங்களுக்குத்தானபுரோக்கர்ஸ் இல்லையே…?”

இல்லைங்க எங்களுக்குத்தான்.... ஒரு விசயம் கேக்கணும்

கேளுங்க…”

ஒங்க வீட்ல நான் வெஜ் சமைக்கலாம் இல்லையா?”

யெஸ்தாராளமாமேல ரெண்டு வீடு. கீழ ரெண்டு வீடு. கீழ் வீட்ல ஒண்ணுதான் காலியா இருக்கு

எதிர் போர்ஷன்ல யார் இருக்காங்க?”சுமதி தயங்கியபடி கேட்டாள்.

அவங்க பிராமின்ஸ்தான். ஆனா நீங்க ஒங்க வீட்ல என்ன சமையல் பண்ணாலும் அவங்க கண்டுக்கமாட்டாங்க. ரொம்ப நல்ல டைப்

கதிரிடம் சொன்னபோது ஒருநொடிகூடத் தாமதிக்காமல் வேண்டாமென்றான்.

அவங்களுக்குப் பிடிக்காத வாடையை அவங்க சகிச்சுக்கிட்டிருக்கணும். நமக்கும் சமையல் பண்ணும்போதெல்லாம் உறுத்தலா இருக்கும். அது சரியா வராது..”

அத்தனை அலைச்சலுக்குப் பிறகு இந்த வீடு கிடைக்கவிருப்பதில் இருவருக்கும் மகிழ்ச்சியே. வீதி நெடுகிலும் மஞ்சள் பூக்களை உதிர்த்தபடி மரங்கள் நின்றன. இரவு எட்டு மணிக்குப் பிறகு அந்தத் தெருவில் கதிரோடும் குழந்தைகளோடும் நடந்துபோவது மனதின் திரையில் அடிக்கடி தோன்றி மறைந்துகொண்டிருந்தது.

மணி இரண்டைத் தாண்டிவிட்டிருந்தது. வெயிலை ஊடுருவி வீதியைப் பார்த்துச் சலித்திருந்தன கண்கள். கதிரின் முகத்தில் ஆரம்பத்தில் இருந்த ஆவலின் ஒளி மங்கியிருந்தது. சுமதிக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. பேசாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஊருக்குப் போய்விடலாமா என்றிருந்தது. ஊரில் வயல் இருக்கிறது. சோற்றுக்குப் பஞ்சமில்லை. பிள்ளைகளின் படிப்பு

ஒரு அடர்சாம்பல் நிறக் கார் அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தது. காவலாளி எழுந்திருந்துசல்யூட்வைத்தான். காரிலிருந்து இறங்கியவர் வெயில் கண்ணாடியைக் கழற்றிவிட்டு இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார். உயரமும் அகலமுமான மனிதர். முகத்தில் பணத்தின் செழுமை தெரிந்தது. இவர்கள் அருகில் போனதும் கதிரின் பெயரை விளித்துக் கைகுலுக்கினார்.

முதலாம் தேதி வீடு ரெடியாகிடும்ஒய்ட் வாஷ் பண்ணிக் குடுத்துடுறேன்என்றார்.

ரொம்ப அலைஞ்சுட்டோம் சார்…”என்றான் கதிர் பொதுவாக. குரலில் அத்தனை களைப்பு!

இந்த ஏரியால வீடு கிடைக்கிறது கொஞ்சம் சிரமந்தான். எனக்கும் குடும்பமா நல்ல ஆட்களாக் கிடைக்கணுமேன்னுதான் இத்தனை நாளா வந்தவங்களை எல்லாம் வேணாம்னு சொல்லிட்டிருந்தேன். நான் புரோக்கர்ஸ்ட்ட ஒரேயொரு கண்டிசன் போட்டிருந்தேன்.”

என்ன சார் அது?”

பாய்ங்களுக்கு அதாங்க முஸ்லிம்களுக்கு வீடு காட்டக்கூடாதுன்னு சொல்லியிருந்தேன்.”

கதிரின் முகம் சுருங்கியது. அவனது உணர்ச்சியற்ற கண்ணாடிக் கண்கள் அவரை ஒருகணம் வெறித்துப் பார்த்தன. சுமதி அவனிடம் ஏதோ சொல்ல விரும்பினாள். அலைந்த அலைச்சல்களெல்லாம் நினைவில் வந்தன. அதற்குள் கதிரிடமிருந்து அந்த வார்த்தைகள் புறப்பட்டு வந்து விழுந்துவிட்டன.

உங்க வீடு வேண்டாங்க

அவர் ஒன்றும் புரியாமல் திகைத்துப்போனவராக ஒருணம் நின்றார். மறுகணம் ஏதோ சொல்ல வாயெடுத்தார். திகைப்பிலிருந்து கோபத்திற்கு மாறிக்கொண்டிருந்தது முகம். அவரைத் தாண்டிக்கொண்டு கதிர் வெளியே வந்தான். அவனது கைகள் சுமதியின் கைகளை இறுகப்பற்றின. ஏதோ பிரளயத்திலிருந்து தப்பித்து ஓடுபவனைப்போல பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகவேகமாகப் போனான்.

மதியவேளையாதலால் இருக்கைகள் காலியாக இருந்தன. ஏறியமர்ந்துகொண்டபோது உடலும் மனமும் பிடித்துலுப்பினாற்போலிருந்தன. உலகம் சட்டெனக் குறுகிச் சிறுத்துவிட்டதுபோலவும் அதில் எல்லோரும் பூச்சிகளாக மாறி ஊர்ந்து திரிவதுபோலவும் கதிர் உணர்ந்தான்.

நான் பஸ்லயே வேலைக்குப் போய்ட்டு வந்துடனேன்மாஎனக்கொண்ணும் சிரமமில்லைஎல்லாம் பழக்கந்தான…”

அவள் அவனது விரல்களைப் பிடித்து தனது மெலிந்த கைகளுக்குள் வைத்து அழுத்திக்கொண்டாள். வேப்பமிலைகள் இழைந்து அழைக்கும் பால்கனியைப் பிரியவேண்டியதில்லை என்ற நினைப்பொன்றே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அயர்ச்சியோடு கதிரின் தோளில் சாய்ந்து கண்ணயரவாரம்பித்தவளின் கனவில் அடித்துப் பொழியத்தொடங்கியது மழை.


-யாவும் கற்பனையல்ல.

நன்றி: ஆனந்த விகடன்

12 comments:

Anonymous said...

ஹ்ம்ம்ம் :-)

முல்லை மயூரன் said...

கொழும்பில் உள்ள நம் தமிழர்களும் (முஸ்லிம்கள் பரவாயில்லை }இதற்கு சற்றும் குறையாமல் உள்ளார்கள்

Anonymous said...

அருமை. நானும் இது போல நிறைய கேள்விப்பட்டுள்ளேன்.

ஜாபர் ஈரோடு said...

நீங்கள் எழுதியுள்ள சம்பவங்கள் அனைத்தும் மிக சமீபத்தில் நான் வீடு தேடியபோது எனக்கு நேரிட்டவை...

எனது வலிகளை பதிவு செய்துள்ளீர்கள்..

நன்றி...

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்குங்க.

ஆதி, இந்த சிறுகதை குறித்து என் தளத்தில் சிலாகித்து பின்னூட்டமிட்ட போதே இதை வாசிக்க மிகுந்த ஆவல். (சவுதியில் irandu vaarangal kazhitthe aa.vi. kidaikkirathu)

pathivittatharkku nandri!

KARTHIK said...

இந்த கதைய படிச்சதையும் ஜாபர் தான் நினைவுல வந்து போனார்.அப்பையே உங்களுக்கு மெய்ல்பண்ணனும்னு பாத்தேங்க முடியல.
எதார்த்தமான கதங்க :-((

padmanabhan said...

நன்று

நிலாமதி said...

கதை சொல்லியவிதம்மிகவும அழகாய் இருக்கிறது. பாராடுக்கள்.

ஹேமா said...

எம் இயல்பு வாழ்வு அழகாக!

நேசமித்ரன் said...

இன்னும் கதைகள் உண்டுங்க

ஐந்து குடிகளுக்கும் ஒற்றைப் பொதுக் கழிவறை ..வெளியே காத்திருக்கும் ஆண்.அவஸ்தை

தண்ணீர் வரிசை... வீட்டு உரிமையாளரின் சொந்தக் காரர்..முதலில் குடி வந்தவர் பிறகு நம் வரிசை வருகையில் நீர் நின்று போகும் நகராட்சியின் கண்ணாமூச்சிக் குழாயில்

முறைவாசல் சண்டைகள் ...

உறவினர் வருகை ..இராத்தங்கல் பார்த்தால் மோட்டர் போடாத மௌனம்

குறைந்த பட்சம் தனி வீடு என்பதே கனவாக இருக்கும் நகரங்களில் வாழப் பழகி விட்டது சமூகம்

உங்கள் கதைகளில் எப்பவும் இருக்கும் கவித்துவ நடை ,ஒரு எதிர்குரல், பாசாங்குகளை எதிர்த்தல், சம்மதம் என்பது திணிப்பாக நேரும் பொழுதில் நிகழும் வலியை கடத்துதல் இந்தக் கதையிலும்

பதிந்ததற்கு மிக்க நன்றிங்க !

சின்னப்பயல் said...

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.

Anonymous said...

நீங்கள் எழுதியுள்ள சம்பவங்கள் போல பல உள்ளன
கன்னியாகுமரி காரணன எனக்கு சென்னையில் வீடு கெடைக்க எட்டு மாதம் ஆகியது , பல இடங்களில் வீடு கொடுக்க மறுத்த கரணம் சொன்னது நான் மலையாளி என்று.

பெரு நகரங்களில் இது போல பல காரணங்கள் வைத்து இருக்கிறார்கள்