6.14.2010

மிக்கி என்றொரு தமிழ் நாய்…


கொழும்பு விமானநிலைய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் மிக்கியை அந்நாட்டினுள் நுழையவிடாது தடுத்த செய்தி தொலைபேசி வாயிலாக என்னை வந்தடைந்தது. ‘கலங்கிப்போனேன்’ என்ற தேய்ந்த சொல்லால் எனது மனநிலையை முழுவதுமாக வெளிப்படுத்திவிட இயலாது. மிக்கிக்கு உத்தேசமாக இரண்டு வயது. வெள்ளை நிற பொமரேனியன். கறுப்பு, வெள்ளை என்ற நிறம் தவிர்த்து அந்தவகை நாய்களுக்கு சிறப்பு அடையாளங்கள் இல்லை. அனைத்தும் ஒன்றேபோல இருக்கும். கூட்டத்தில் தவறவிட்டுவிட்டால்கூட நம்மைப் பார்த்து வாலாட்டுவதை வைத்துத்தான் கண்டுபிடிக்கமுடியும். ‘அந்த முட்டாள் நாய்க்காக இவ்வளவு கவலைப்பட வேண்டியதில்லை’என்றார் என் நண்பர். அதற்கு அவர் சொன்ன காரணம் நாட்டு நாய்களைவிட பொமரேனியன் வகையறாக்களுக்கு நுண்ணுணர்வு குறைவாம். ‘மனிதருள் அறிவுஜீவிகள் இருந்து பண்ணுகிற அழிச்சாட்டியம் போதுமென்பதால், நாய்களிடமும் நாம் அதை எதிர்பார்க்க வேண்டியதில்லை.’என்று நான் அவருக்குப் பதிலளித்தேன்.

“பொதிகள் போடும் இடத்தில் மிக்கியை கூண்டுக்குள் விட்டிருக்கிறார்கள். அது என்னைப் பார்த்து அழுதுகொண்டிருக்கிறது”என்றார் அண்ணா.
அது அனுங்கும் சத்தம் தொலைபேசியூடாகக் கேட்டது. முன்னங்கால்கள் இரண்டையும் கம்பியில் தூக்கிவைத்துக்கொண்டு ‘என்னை வெளியில் விடு’என்று, ஈரம்படிந்த கறுப்புக்கண்களால் இறைஞ்சுவதை என்னால் மானசீகமாகக் காணமுடிந்தது. ‘சாப்பிடு’, ‘நடக்கப்போகலாமா?’, ‘சத்தம் போடாதே’போன்ற சாதாரண கட்டளைகளைப் புரிந்துகொள்வதைப் போல, ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை மிக்கியால் புரிந்துகொள்ள இயலாதுதான்.

குற்றச்சாட்டு இதுதான்: இந்தியாவிலிருந்து மிக்கியை இலங்கைக்கு எடுத்துச்செல்வதற்கு முன்னம் இலங்கையின் பேராதெனியாவிலுள்ள ‘விலங்குகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார’த் திணைக்களத்திடமிருந்து அனுமதி பெற்றிருக்கவேண்டுமாம். ‘விலங்கினை ஏற்றுமதி செய்வதற்கான விண்ணப்பப் படிவம்’ என்ற ஒன்றை நிரப்பி வைத்துக்கொண்டு முன் அனுமதிக்காக நாங்கள் அலைந்த கதையை அறுபது பக்கங்களுக்கு மேற்பட்ட புத்தகமாக எழுதலாம். (கைவசம் வேறு கதைகள் இருந்ததால், அந்த அனர்த்தத்திலிருந்து தப்பித்தீர்கள். ‘அந்த அனர்த்தத்திலிருந்தும்’என்ற குரல் எனக்குக் கேட்கவில்லை) அரசாங்கத் திணைக்களங்களில் பணியாற்றுபவர்களின் சுறுசுறுப்பு மழைக்கால எறும்புகளுக்கு இணையானதென்பதை நாமனைவரும் அறிவோம். அவர்களின் கடமையுணர்வும், சேவை மனப்பாங்கும் புல்லரிக்க வைப்பவை. அவ்விதமிருந்தும்கூட, ‘இந்த விலங்கு ஏற்றுமதி செய்யப்படத்தக்க நிலையில் உள்ளது’என்றொரு கடிதத்தை இறுதியில் பெற்றோம். ஒரு பெரிய கூண்டு செய்து அதில் பதினொரு கிலோ எடையுள்ள மிக்கியை வைத்துத் தூக்கிச் சென்றார் அண்ணா. ‘இந்திய அரச அனுமதி இங்கு செல்லாது; இலங்கை அரசிடமிருந்து நீங்கள் முன்னனுமதி பெற்றிருக்கவேண்டும்’என்றது கொழும்பு விமானநிலையம்.

மிக்கி கூண்டுக்குள் அடைபட்டு அவதிப்பட்டுக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அதைப் பற்றிய ஞாபகங்கள் சுற்றிச் சுற்றி வந்து முனகின. அது கூண்டுக்குள்ளிருக்கிறது என்ற நினைவை ஒரு விநாடிகூட மனதிலிருந்து அகற்றமுடியவில்லை. உணவு உண்ணவோ சரியாக உறங்கவோகூட முடியவில்லை என்பது சில ‘மனிதாபிமானி’களுக்கு எரிச்சலூட்டக்கூடியதாக இருக்கும். பணக்காரத்தன புளிச்சேப்பறை, சீமாட்டிகளின் பந்தா, அலப்பறை, மேட்டுக்குடி மனோபாவம் இன்னபிற சொற்களை நீங்கள் சொல்லவிரும்பலாம். ஆனால், மிக்கி என்பது நான்கு கால்களுள்ள, பேசத்தெரியாத ஒரு குழந்தை என்பதை நாய் வளர்த்தவர்கள் அறிவார்கள்.

ஒரு கொடுங்காலத்தில் அக்கா, அண்ணாவின் பிள்ளைகளோடு (ஐந்து பேர்) இந்தியாவுக்கு வந்து சேர்ந்தேன். அவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் மிக முக்கியமானது ‘நாய்-பூனை வளர்க்கக்கூடாது’என்பதாகும்.(பாம்பு வளர்க்கலாம் என்று அதற்குப் பொருளில்லை) அண்ணாவின் மகள் தெருவில் காணும் நாய்க்குட்டி – பூனைக்குட்டிகளை ஆசை ஒளிரும் கண்களால் பார்ப்பாள். நாய்,பூனை மினுங்கும் கண்களை என்னை நோக்கி அவள் திருப்பிக்கொண்டு வந்துசேரும் நேரம் நான் அவளிடமிருந்து எனது கண்களைத் திருப்பிக்கொண்டுவிடுவேன். வளர்ப்புப் பிராணிகளைத் தெருவில் அலையவிட்டு வருவது பாவங்களில் பெரும்பாவம். குண்டுவீச்சுகளுக்கு அஞ்சி இடம்பெயர்ந்துசெல்லும் குடும்பங்கள் தங்கள் உடமைகளுடன் வளர்ப்புப் பிராணிகளையும் வண்டிகளில் ஏற்றிச்செல்லும் படங்களை நீங்களும் இணையத்தளங்களில் பார்த்திருப்பீர்கள். போரைப் புரிந்துகொண்டிருப்பதான மனுசதோரணை அவற்றின் கண்களில் படிந்திருக்கும். ‘விதியே… விதியே…’என துக்கத்தில் விழுத்தக்கூடிய படங்களில் அவை குறிப்பிடத்தக்கவை. யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்தபோது தனது தந்தை ஆடு,மாடுகளை விட்டுவிட்டு நாயை மட்டும் கையில் தூக்கிக்கொண்டு வந்ததாக, எனது நண்பர்களில் ஒருவர் (அவர் ஒரு கவிஞரும்கூட) யாழ்ப்பாணத்திலிருந்து எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். “ஆடு,மாடுகளைக் கொண்டுவந்திருந்தால் ஆறு மாத காலச் சாப்பாட்டுச் செலவுக்காவது காசு கிடைத்திருக்கும். ஆனால், அப்பா நாயைத் தூக்கிக்கொண்டு வந்தார்”என்று எழுதியிருந்தார்.

நான் எப்போதாவது கனடாவுக்குப் போய் கணவரை ‘கண்ணில் வைத்துக்கொண்டு’வருவதுண்டு. அப்படிப் போயிருக்குமொரு நாளில் பிள்ளைகள் பன்னிப் பன்னி தொலைபேசியூடாக ஒரு விஷயம் சொன்னார்கள். பிள்ளைகளில் ஒருவருடைய நண்பரின் குடும்பம் வெளியூர் செல்லும்போது ஒரு நாய்க்குட்டியை எங்கள் வீட்டில் தற்காலிகமாக விட்டுச்சென்றிருப்பதாகவும் அதை அவர்கள் நான்கைந்து நாட்களில் மீளப்பெற்றுக்கொள்வதாக உறுதியளித்திருப்பதாகவும் சொன்னார்கள். மேலும், அந்த நாய்க்குட்டி இத்தினூண்டு சைஸில் இருக்குமாம். காலையில் அவர்களின் முகங்களை நக்கித் துயிலெழுப்புமாம். அதற்குக் கறுப்புக் கண்களாம். “எல்லாம் சரிதான்! அவர்கள் வெளியூரிலிருந்து திரும்பியதும் கொடுத்துவிடுங்கள்”என்றேன். “பின்னே….? வைத்துக்கொள்ளவாக போகிறோம்? கொடுத்துவிடுகிறோம்”என்று அடித்துச் சொன்னார்கள்.


ஒரு மழைநாளில் திரும்பிவந்தேன். சென்னை மழைநாட்களுக்கேயுரிய பசுமையழகுடன் வரவேற்றது. கூடவே நாய்க்குட்டியும். அதை நீண்டநேரமாக வீடுமுழுவதும் தேடி பல்கனியிலிருந்து கண்டுபிடிக்கவேண்டியிருந்தது. அவ்வளவு சின்னது. எனது கைகளில் தந்தார்கள். என் உள்ளங்கையை விட ஒரு சில அங்குலங்கள்தான் அதனுடல் பெரிது. பஞ்சுப்பொதி என்று சொல்லலாம். மல்லிகைப்பூக் குவியல் எனலாம். சின்னத்துண்டு மேகம் எனலாம். கடல்நுரை எனலாம். ஆனாலும், நான் தீர்மானமாக இருந்தேன். அது தன் கறுப்புமணிக் கண்களால் என்னை நிமிர்ந்து பார்த்தது. ‘இல்லை’என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். பிறகொரு காரியம் செய்தது. தன் குட்டியூண்டு நாக்கால் என் கைகளை நக்கவாரம்பித்தது. நெஞ்சோடு அணைத்துக்கொண்டபோது என் கழுத்துக்குள் தலையைச் சொருகிக்கொண்டது. அதுவொரு பட்டுக்குஞ்சு! அவ்வளவுதான்! உள்ளே எதுவோ நெகிழ்ந்ததுபோலிருந்தது. உள்ளுக்குள் ஒரு வாஞ்சைமழை பொழியவாரம்பித்தது. கொஞ்சம் கண்கள் பனித்தாற்போலவும் ஞாபகம்.


“சித்தி! நாங்களே வைத்துக்கொள்ளலாமா?”
“இல்லை… வேண்டாம்”என்று கண்டிப்பான குரலில் சொன்னேன்.

ஆனால், அது அங்கிருந்து போகவில்லை. மிக்கி என்று நாமகரணம் சூட்டப்பட்டு எங்களுடனேயே தங்கிவிட்டது. எனது தீர்மானத்தை, மிக்கி தந்திரமாக நொருக்கியதையிட்டு அக்கா-அண்ணாவின் பிள்ளைகள் என் முதுகுக்குப் பின்னால் சிரித்திருப்பார்களாயிருக்கும்.


‘நாய்’என்பது பரவலான வசைச்சொல். நாய் என்றால் அத்தனை இளக்காரம். சாதிப்பெயரை முன்னால் இட்டு பின்னால் ஒரு நாயைச் சேர்த்துத் திட்டுபவர்கள் அதிகம். ‘பறைநாய்’, ‘சக்கிலியநாய்’என்ற பதங்கள் சர்வசாதாரணம். ‘வேளாளநாய்’என்று பதிலுக்கு யாரும் திருப்பித் திட்டிக் கேட்டதில்லை. ‘செட்டியார் நாய்’என்றோ, ‘முதலியார் நாய்’என்றோ திட்டினால் செவிகள் திடுக்கிட்டுப் போகுமென நினைக்கிறேன். பெண்களின் உடல் உறுப்புகளை வசைச்சொல்லாகப் பயன்படுத்துவதுபோலவொரு அரசியல் இதிலும் உண்டு. ஆண்களின் உறுப்புகள் வசைச்சொல்லாகவும் பிரயோகிக்கப்படக்கூடாத புனிதம்பொருந்தியவை. சரி… மிக்கிக்குத் திரும்பிவருகிறேன்.

மனிதர்களால் மகா மகா கேவலமாகப் பார்க்கப்படும் நாயானது எங்கள் வீட்டில் மனிதர்களைப் போலவே நடந்துகொண்டது. அண்ணாவின் தலையைக் கொஞ்சம் நெருக்கித் தள்ளிவிட்டு, தலையணையில் தலைவைத்துப் படுத்துறங்கியது. மாலையில் நாங்கள் தேநீர் அருந்தும்போது அதுவும் அருந்தியது. வீட்டில் யாராவது சத்தம் போட்டுச் சண்டை பிடித்தால் அவர்களது ஆடையில் பற்றி இழுத்து ‘தயவுசெய்து சண்டைபோடாதீர்கள்’என்று வினயமாகக் கேட்டுக்கொண்டது. அரைமணி நேரத்துக்கொரு தடவை தன்னை நடக்க அழைத்துச் செல்லும்படியாக வாயில் கயிற்றைக் கவ்விக்கொண்டு வந்து ஒவ்வொருவர் முன்னும் நிற்கப் பழகிக்கொண்டது. குளிப்பாட்டினால் உடல் சூடு தணிந்த மகிழ்ச்சியில் வீடு முழுவதும் ஓடி அதகளப்படுத்தியது. வீட்டிலிருக்கப் பிடிக்கவே பிடிக்காது அதற்கு. பிள்ளைகள் என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி மிக்கியை ‘சரியான பொறுக்கி’என்றார்கள். அந்த ஓரக்கண் பார்வையை நான் கவனிப்பதில்லை. எனக்கும் வீட்டில் இருப்பது பிடிக்காது. பெட்டியைத் தூக்கிக்கொண்டு அடிக்கடி எங்காவது போய்விடுவேன்.

இந்தியாவில் நெடியதும் தனிமையானதும் விசனம் மிக்கதுமான இரண்டாண்டுகளைக் கழித்த பிற்பாடு அண்ணா குடும்பத்தினர் ஊருக்குப் போக நினைத்தார்கள். மிக்கியை யாரிடமாவது வளர்க்கக் கொடுத்துவிடலாம் என்று சில நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள். புளு குறொசில் (இதை எப்படித் தமிழ்ப்படுத்துவது?) கொடுத்துவிடலாம் என்றார்கள். ‘நாய் என்றால் நீங்கள் நினைக்கிற நாய் அல்ல’ என்று எப்படி அவர்களிடம் சொல்வது? நாங்கள் அதை எப்படியாவது கொண்டுபோக நினைத்தோம்.


அது விமானநிலையத்தில் கூண்டுக்குள் அழுதுகொண்டு நிற்கிறது. மூன்று நாட்கள்… கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தாயிற்று. யார் யாரையோவெல்லாம் வைத்துக் கதைத்துப் பார்த்தாயிற்று. இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு முரணாக அதை உள்ளே விடமுடியாது என்பதே பதிலாக இருந்தது. உள்ளே அனுப்புவதும் வெளியே அனுப்புவதுமாகிய எல்லாம் சட்டதிட்டங்களின்படி நடக்கும் நாட்டில் ஒன்றும் செய்வதற்கில்லைத்தான்!
அண்ணா கொழும்பிலிருந்து மூன்று நாட்களுக்கு மிக்கிக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு நீர்கொழும்பிலிருந்த விமானநிலையத்துக்குப் போவார். அங்கிருக்கும் அலுவலர்களிடம் கெஞ்சுவார். மிக்கி கூண்டுக்குள்ளிருந்தபடி அழும் சத்தம் தொலைபேசியில் எனக்குக் கேட்கும். உறவினர்களில் ஒருவர் சுங்கஇலாகாவில் பெரிய பதவியில் இருக்கிறார். அவர் கதைத்தும் அவர்கள் கேட்பதாயில்லை. “இந்த நாய்க்கு ஏதாவது நோய் இருந்து, அது இலங்கையில் பரவிவிட்டால்…?”அவர்கள் கேட்டார்கள். (‘ஆமாம்.வெளியில் இருக்கிற நாய்களெல்லாம் எவ்வளவு ஆரோக்கியமாகத் திரிகின்றன’என்று நாங்கள் நினைத்துக்கொண்டோம்) ஆனால், அவர் விடாது தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சி செய்தார். அவர் செல்வாக்கே செயலிழந்துவிடுமோ என்று எங்களுக்கு அச்சமாக இருந்தது.

சில நாட்களுக்கு முன்னால் ‘எனக்கு மதம் பிடிக்காது’என்றொரு பதிவு எழுதினேன். நான் அம்மனிடம் ஒரு விண்ணப்பம் செய்துபார்க்கலாமென நினைத்தேன். ஏற்கெனவே ஒரு வேண்டுதல் பாக்கியிருந்தது. அது ‘இந்த’ நாயைப் பிடித்துவிடக் கூடாதென்பதை முன்னிட்டு வைக்கப்பட்ட வேண்டுதல். காலையில் எழுந்து திருவேற்காடு போய்விட்டு, சாந்தோம் தேவாலயத்திற்கும் போய்விட்டுத் திரும்பிவரும்வழியில் அண்ணாவின் தொலைபேசி அழைப்பு வந்தது.


“மிக்கியை வந்து எடுத்துக்கொண்டு போகும்படி விமானநிலையத்திலிருந்து அழைப்பு வந்தது”மறுமுனையில் அண்ணாவின் குரல் கரகரத்து ஒலித்தது. அழுதார் என்று நினைக்கிறேன். கொஞ்சம் அபத்தமாகத் தோன்றினாலும் எனக்கும் அழுகை வந்தது.

இப்படியான ‘அற்புதங்களால்’தெய்வ நம்பிக்கையும் கடல்-கரை விளையாட்டுப் போல ஆகிவிட்டது.
“ஒரு வாரத்திற்குள் மிக்கியை இரத்தப் பரிசோதனை செய்து கொண்டு வந்து தரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவித்திருக்கிறார்கள்”என்றார்.

மிக்கியைக் கூண்டிலிருந்து வெளியே வரும்படி அண்ணா கூப்பிடும்போது, அது எப்படித் தனது கறுப்புமணிக் கண்களை உயர்த்தி நம்பமாட்டாமல் பார்க்குமென்று நினைத்துப் பார்த்தேன். எப்படி அவரது மேலெல்லாம் விழுந்து புரண்டு கொஞ்சுமென்பதை நினைத்துப் பார்த்தேன். அவரோடு ஊருக்குப் போய் அங்கிருப்பவர்களின் வாசனையை இனங்கண்டு இரண்டு கால்களில் நிற்குமென்பதை நினைத்துப் பார்த்தேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்றைக்கு நான் மகிழ்ச்சியாக இருந்தேன். நாய் என்பது பொதுப்புத்தியில் இருக்கிற நாய் இல்லையல்லவா? அபத்தம் என்பது எப்போதும் அபத்தமானதா என்ன?

இது பெருந்தனக்காரர்களின் ஏப்பம் இல்லை. மேட்டிமைத்தனம் இல்லை. இதில் மனிதர்களின் விருப்புவெறுப்புகள், தீர்மானங்கள், அலைக்கழிதல்கள் இவற்றோடு கூடக் கூட ஓட விதிக்கப்பட்ட ஒரு குட்டிநாயின் குட்டி இதயம் இருக்கிறது.


மேலும், நாய் என்பதை நமக்குக் கீழான விலங்காக உருவாக்கி, ஒரு கவளம் சோற்றுக்காக வாலாட்டிக் குழையவைத்து நம் வாசலில் கட்டிவைத்திருப்பவர்கள் நாங்களன்றோ?
ஆறாம் அறிவு அதற்கிருந்திருந்தால்…. என்று நமது கற்பனை நாயை(கற்பனைக் குதிரை சலித்துவிட்டது) ஓடவிட்டுப் பார்ப்போமாயின்…

வாசலில் நாம் கட்டிவைக்கப்பட்டிருக்க, நாயானது சோற்றுப் பாத்திரத்தை ‘ணங்’கென்று நம் முன் வைத்துவிட்டுப் போகும் சித்திரம் தோன்றுகிறது. என்ன செய்வது? கண்களுக்கும் மனசுக்கும் பழக்கப்படாத காட்சிகள் அசிங்கமானதாகத்தான் தோன்றும். மனிதாபிமானிகள் என்னை மன்னிப்பார்களாக.

9 comments:

ராம்ஜி_யாஹூ said...

நம் வளர்ப்பு பிராணிகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்கலாமே.

பிச்சைப்பாத்திரம் said...

நல்லபதிவு. மனிதனுக்கும் விலங்குமான உறவு அதிகம் சொல்லில் உணரப்பட முடியாதது. உங்கள் எழுத்து அதனைத் தொட முயன்றிருக்கிறது.

சித்ரன் said...

சரியான பதிவு.

ஊரில் எங்கள் வீட்டுக்கு சமீபத்தில் எங்கிருந்தோ வந்து சேர்ந்த இத்துணூண்டு நாய்க்குட்டியை ’எங்களுக்கு வேண்டும்’ என்று எடுத்து வைத்துக்கொண்ட குழந்தைகள், அப்புறம் செல்லம் கொஞ்சி ஒரு நாள் முழுக்க ராஜமரியாதையுடன் வளர்த்து, உணவிட்டு, தூங்க போர்வை போர்த்தி பிறகு சாயங்காலம் அதை வேறு யாரோ எடுத்துச் செல்ல - பிரிவால் குழந்தைகள் அழுத அழுகை பெரியவர்கள் கண்ணிலும் நீர் கோர்க்க வைத்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஹேமா said...

அவர்களும் அவர்களது சட்டமும்.
எங்கெல்லாம் சரியாய் இருக்க வேணுமோ அங்கே ஓட்டை வைத்துத் தாங்களும் போய் வந்து கண்டும் காணாமல் இருப்பார்கள்.

மிக்கி அவர்களுக்கு ஒரு தூசுபோல.
ஒரு உயிராய் கணக்கெடுக்க அவர்கள் என்ன ....!

சின்னப்பயல் said...

நாய்க்காவது "ப்ளூ க்ராஸ்" இருக்குது,,,
நமக்கு....?

soorya said...

படித்தேன்.
சற்றுக் கடினமான நடை என்று சொல்வேன்.
வரி வடிவங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம் .
உங்கள் தலையீடில்லாமலே....
குறியீட்டு வடிவில் அமைத்திருக்கலாம் அமைந்திருக்கலாம் .
மேலும் ஒரு பெருமூச்சை
ஒரு மவுன மொழியை
பேசியமைக்கு
நன்றி .

padmanabhan said...

எல்லோராலும் அனுபவிக்க இயலாத நிகழ்வின் சுவாரஸ்யமான பதிவு

Anonymous said...

நாய்,பூனை மினுங்கும் கண்களை என்னை நோக்கி அவள் திருப்பிக்கொண்டு வந்துசேரும் நேரம் நான் அவளிடமிருந்து எனது கண்களைத் திருப்பிக்கொண்டுவிடுவேன்


அது தன் கறுப்புமணிக் கண்களால் என்னை நிமிர்ந்து பார்த்தது. ‘இல்லை’என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்

பிள்ளைகள் என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி மிக்கியை ‘சரியான பொறுக்கி’என்றார்கள். அந்த ஓரக்கண் பார்வையை நான் கவனிப்பதில்லை. எனக்கும் வீட்டில் இருப்பது பிடிக்காது.


‘விதியே… விதியே…’என துக்கத்தில் விழுத்தக்கூடிய படங்களில் அவை குறிப்பிடத்தக்கவை.

‘நாய் என்றால் நீங்கள் நினைக்கிற நாய் அல்ல’ என்று எப்படி அவர்களிடம் சொல்வது



இதில் மனிதர்களின் விருப்புவெறுப்புகள், தீர்மானங்கள், அலைக்கழிதல்கள் இவற்றோடு கூடக் கூட ஓட விதிக்கப்பட்ட ஒரு குட்டிநாயின் குட்டி இதயம் இருக்கிறது....

நலமா மேடம் ?

அம்பேதன் said...

//இதில் மனிதர்களின் விருப்புவெறுப்புகள், தீர்மானங்கள், அலைக்கழிதல்கள் இவற்றோடு கூடக் கூட ஓட விதிக்கப்பட்ட ஒரு குட்டிநாயின் குட்டி இதயம் இருக்கிறது.//


உங்கள் மிக்கி போல் எனது சிறுவயதில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் ஜிம்மி.