9.07.2010

பூனைகளின் வீடு



இந்த
வீடு முழுவதும் மனிதர்களைப் பற்றிய புத்தகங்களே நிறைந்திருக்கின்றன. சகமனிதர்கள் மீதான சுவாரஸ்யம் குறைந்துசெல்வதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பாக முடியாது. தவிர, ‘மனிதம்என்ற சொல் அருங்காட்சியகப் பொருளாகத் தூசிபடிந்து போனதன் பிற்பாடுவார்த்தை விளையாட்டுக்களால் அறிவுஜீவிப் பாவனைகள் நிகழ்த்துவதை நாம் விட்டுவிடலாம். பூனைகளைப் பற்றிக் கதைத்தால் உங்களுக்குப் பிடிக்காதா? எனக்குப் பூனைகளைப் பிடிக்கும். அது புலியை ஞாபகப்படுத்துவதால் எனக்கு அதைப் பிடிக்கிறதென்று உங்களில் மெத்தப் படித்த யாராவது இவ்வளவிற்குள் கண்டுபிடித்திருப்பீர்கள். நரிகளையும் சிங்கங்களையும் பாம்புகளையும்கூட நேசிக்கிறவர்கள் இருக்கும்போது, எனக்குப் புலிகளையும் பூனைகளையும் பிடிப்பதொன்றும் பிறழ்நடத்தையாக இருக்க வாய்ப்பில்லை. இதுவொரு உளவியல் சிக்கல் என்பவர்களைப் பார்த்துமியாவ்என்று கத்தி அதை நிரூபிப்பதில் எனக்கொன்றும் வெட்கமில்லை.

எனக்கு நாய் பூனைகளைக் கண்டால் அருவருப்புஎன்று நிறையப்பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படிச் சொல்லும்போது அவர்கள் முகத்தில் பளிச்சிடும்மனிதத்தனம்ரசிக்கும்படியாக இருப்பதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் எனது வலைப்பூவில் இருந்த சாம்பல் நிறப் பூனைக்குட்டி வாசிப்பைத் தடைப்படுத்துவதாகவும் அதைத் தூக்கிவிடும்படியும் தொடர்ச்சியாகப் பலர் கேட்டுக்கொண்டுக்கொண்டதன் விளைவாக மிகுந்த வருத்தத்தோடு அதைத் தூக்கினேன். ஆம்நீங்கள் நினைப்பது சரிதான். மூக்கைச் சிந்தி ஒரு பதிவு எழுதி பிராயச்சித்தம் பண்ணிவிட்டே அதைத் தூக்கினேன். உண்மையில் ஒருநாள்கூட அதன் பஞ்சு உடலை நான் தொட்டுப் பார்த்ததில்லை. என்னைப் பார்த்து அதுமியாவ்என்றதில்லை. அதுவொரு குட்டிப்பூனையாக இருந்ததும், வலைப்பூவில் அமர்ந்து ஒயிலாகத் தன்னுடலை வளைத்து கண்களைத் தாழ்த்தி என் எழுத்துக்களைப் பார்த்துக்கொண்டிருந்ததும் மட்டுமே அதன்மீது வாஞ்சை பெருக போதுமான காரணங்களாக இருந்தன.

வெளிநாட்டில் இருந்தபோது அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளும்படியான பூனைப் பிரியையாக இருக்கவில்லை. நாட்டுக்குத் திரும்பி வாழத் தொடங்கிய பிற்பாடு (பயந்தபடிதான்) ஒருநாள் அப்பா ஒரு பூனைக்குட்டியோடு வீட்டுக்கு வந்தார். அது அடர்மஞ்சள்நிறப் பஞ்சுத்துண்டைப் போல அவரது கையில் இருந்தது. “இதை ஏன் கொண்டு வந்தீர்கள்பெரிய பொறுப்பல்லவா?”என்று நான் கேட்டேன். அவர் என்னைப் பார்த்து ஞானியின் சிரிப்பொன்றை உதிர்த்தார். கால் போத்தல் மதுவில் அன்பும் ஞானமும் எப்படிப் பெருக்கெடுக்கும் என்பதை நாமெல்லொரும் அறிவோம். பிறகு சொன்னார்: “இது வீதியைக் கடக்க முடியாமல் ஒரு ஓரத்தில் நின்று திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தது”. ஆம்அவ்வளவு சிறிய பூனைக்குட்டிக்கு தெருவைக் கடப்பதென்பது(சிறுநகரமாயினும்) எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்திருக்கும்!

ஐந்தாம் இலக்கச் செருப்புக்குள் தனது உடல்முழுவதையும் அடக்கிக்கொண்டு படுத்துவிடக் கூடிய அளவு இத்தினியூண்டு பூனைக்குட்டி அது. அதற்கு நாங்கள்பூக்குட்டிஎன்று பெயர்வைத்தோம். அந்நாட்களும் இந்நாட்களும் எந்நாட்களும் என் போன்றவர்களுக்குத் தனிமை மிகுந்தவை என்பதை நீங்கள் அறிவீர்கள். அது எந்தளவு விபரீதத்தைக் கொணர்ந்ததென்றால், பூக்குட்டியை நான் எனது சொந்தக் குழந்தையாகக் கருதவாரம்பித்தேன். அதை ஒரு நிமிடம் காணவில்லையென்றாலும் வீட்டிலுள்ளவர்கள் பதட்டப்படும்படியாகக் கூச்சலிடத் தொடங்கினேன். அது பல தடவைகள் காணாமல் போனது. மரங்களின் உச்சிகளிலிருந்தும் வீட்டுக் கூரையிலிருந்தும் கற்கள், புதர்களுக்குள்ளிருந்தும் கண்டுபிடிக்கப்பட்டது. நான் தன்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறேன் என்பதை அது எப்படியோ தெரிந்துவைத்திருந்தது. பசிக்காதபோதிலும் அதற்கு நாங்கள் அடிக்கடி உணவு வைத்தோம். அபூர்வமாக பசி எழும் தருணங்களில் எங்கள் கால்களைக் கவ்விவிட்டு சமையலறைக்கு வழிகாட்டிச் செல்ல அது பழகியிருந்தது. பூக்குட்டி கொஞ்ச நாட்களில் கதைக்க ஆரம்பிக்கலாமென்று நாங்கள் எங்களுக்குள் கதைத்துக்கொண்டோம். ‘பேசும் பூனைக் கனவு நாளாக நாளாக வளர்ந்துகொண்டேயிருந்தது. மாலைவேளைகளில் குடும்பமாகக் குந்தியிருந்துவிண்ணாணம்கதைக்கும்போது பூக்குட்டி மிகச் சாவதானமாக என் மடியில் ஏறி தன் பஞ்சுடலைச் சுருட்டிக்கொண்டு படுத்து உறங்கிவிடும்.

ஒரு சிறிய உடலுக்குள் எவ்வளவு அபரிமிதமான சக்தி அடங்கியிருக்கிறது என்பதை சில மணி நேரங்கள் பூக்குட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தால் உணர்ந்துகொள்ள முடியும். பெரிய வீட்டின் மொட்டைமாடியிலிருந்து சின்னவீட்டுக் கூரைக்கு ஒரே தாவாகத் தாவும். இரண்டுக்கும் இடையிலான இடைவெளியில் அது பறந்துபோவது காட்சிப்பிழையாக கண்களில் தோன்றும். வாழை மரத்தில் சரசரவென்று ஏறி ஒற்றைக் கையால் இல்லாத பட்டாம்பூச்சியைப் பற்ற எத்தனித்துவிட்டு ஒரு தேர்ந்த வழுக்குமர வீரனைப் போல கீழிறங்கி வரும். ஒரு சின்னக் காகிதத் துண்டை தன் பஞ்சுக்கால்களால் பற்றுவதும் விடுவதுமாகக் குரங்குச்சேட்டையாடும். ‘சிவனேஎன்று படுத்திருக்கிற நாய்களின் கன்னத்தில் போகிற போக்கில் செல்லமாக ஒரு அடி அடித்துவிட்டுப் போகும். நாய்களும் நுண்ணறிவில் குறைந்தவையன்று. பூக்குட்டியைக் கடித்தால் அடிவிழும் என்று நாய்களுக்குத் தெரியும். அதனால் அவைதொலைந்துபோ குட்டிச்சாத்தானேஎன்ற பார்வையை எறிவதோடு சரி.

பூக்குட்டி மூன்று குட்டிகள் போட்டது. அதில், மை தடவியதே போன்ற கண்களால் எதிர்ப்படும் எல்லாவற்றையும் பிரமித்துப் பார்க்கும்புதினம்மட்டுமே எஞ்சியது. புதினத்திற்கு தாயைவிடவும் செல்லம் அதிகம். புதினம் வளர்ந்து ஆளாகியதும் பூக்குட்டி பக்கத்துவீட்டுக்குப் போய் அங்கேயே தங்கிவிட்டது. நாங்கள் எத்தனையோ தடவை தூக்கிக்கொண்டு வந்து எங்கள் வீட்டில் விட்டும் அது தரிக்கவில்லை. சாப்பாடு கொண்டுபோய் வைத்தால் சாப்பிடும். சோர்ந்துபோய்ப் படுத்திருக்கும். மனிதர்களின் மனங்களையே அறியமுடியவில்லைபூனைகளின் உளவியலை யாரிடம் கேட்க? அது இப்போதும் பக்கத்து வீட்டில்தான் வசிக்கிறது. சாப்பாடு கொண்டுபோய் வைத்துவிட்டு அருகில் நின்று பார்க்கும்போதுஏன் போனாய் என் பட்டுக்குஞ்சே?’என்று துக்கமாக இருக்கும்.

பூனைகள் நாய்களைப் போல விசுவாசமற்றவை என்றொரு கதை உலவுகிறது. பூனைகள் நாய்களைப் போல குழைவதில்லை. அவற்றின் கம்பீரம் கண்கொள்ளாதது. ஒரு தடவை நீண்ட நாட்கள் கழித்து வீட்டுக்குப் போயிருந்தேன். புதினம் நோக்காடு எடுத்து வலியில் கதறிக் கதறிக் கிடந்தது. என் பாதங்களில் முகம் வைத்து அண்ணாந்து பார்த்து முனகியது. பிறகு நாங்கள் பதறிப் பார்த்திருக்க எனது காலடியில் ஒரு குட்டியை ஈன்றது. அதன் கண்களில் அப்போது சுரந்த அன்பு, அந்தக் கணத்தின் ஆசுவாசம் எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. “பூனை குட்டி போடுவதைப் பார்ப்பது அதிர்ஷ்டம்என்றார் அம்மா. அதிர்ஷ்டம் புதினத்தின் குதம் வழியாகக்கூட வீட்டுக்குள் நுழையக்கூடுமென்பதை அன்று அறிந்துகொண்டேன். புதினத்தின் வேலை குட்டி ஈனுவது. அம்மாவின் வேலை அவற்றை யாரிடமாவது பிடித்துக் கொடுத்துவிடுவது. வருடத்தில் ஒரு முறையாவது வீட்டுக்குப் போக வாய்க்கும். புதினம் எனது அறை வாசலில் பழியாகக் கிடக்கும். கதவு திறந்த சத்தம் கேட்டவுடன் வந்து கால்களைச் சுற்றிச் சுற்றியுரசும். செல்லக் கடி கடிக்கும். “நீ இருந்திட்டுத்தான் வீட்டை வாறாய். மற்ற நாளெல்லாம் நான்தான் சாப்பாடு வைக்கிறன். ஆனாலும் இது உன்னிட்டைத்தான் ஒட்டுகுது. இதுக்கு நன்றியில்லை.”என்பார் அம்மா.

நான்கு மாதங்களுக்கு முன் புதினத்தைக் காணவில்லை என்று தொலைபேசியில் சொன்னார்கள். ஊரெல்லாம் தேடியும் கிடைக்கவில்லை என்றார்கள். நேரில் போனபோது உண்மை வெளிவந்தது. புதினம் வீதியைக் கடக்கும்போது பேருந்தில் அடிபட்டு இறந்துபோயிற்று. அதன் மைதடவினாற்போன்ற கண்கள் வீட்டின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதான பிரமையில் சில நாட்கள் ஆழ்ந்திருந்தேன். “புதினத்துக்குச் சாப்பாடு வைச்சாச்சா?”என்ற கேள்வி உதடுவரை வந்து வந்து உள்ளுக்குள் கரைந்த நாட்கள் அநேகம்.

சந்திராவின் சிறுகதைத் தொகுப்பின் பெயராயிற்று எங்கள் வீடு. ‘பூனைகள் இல்லாத வீடு’. “இனிமேல் பூனை, நாய் என்று யாரும் கொண்டுவரக்கூடாதுஎன்று வீட்டில் எல்லோரிடமும் சொல்லிவைத்தேன். துயரம் ஊறிய அந்த வேண்டுகோளை யாவரும் புரிந்துகொண்டனர் வாடகைக்கு இருப்பவர்களைத் தவிர்த்து; எங்கள் வளவுக்குள் இருக்கும் சின்னவீட்டில் வாடகைக்கு இருக்கும் ஆசிரியரின் மகன் (வயது 12) டக்ளஸ் ஒரு பூனைக்குட்டியைக் கொண்டுவந்திருக்கிறான். அது இருபத்துநான்கு மணிநேரத்தில் ஏறத்தாழ இருபது மணி நேரங்களை எங்கள் வீட்டில் கழிக்கிறது.

அதன் பெயர் டிலானியாம் - டக்ளஸ் சொல்கிறான். அவன் ஒற்றைப்பிள்ளை. அதனால் அதை அவன் தங்கை என நினைத்திருக்கலாம். நாங்கள் அதைபூக்குட்டிஎன்று அழைக்கத் தொடங்கியிருக்கிறோம். இரண்டாம் சார்ள்ஸ் மாதிரி இது இரண்டாம் பூக்குட்டி. அது நிமிர்ந்து படுத்து தன் வெள்ளுடலைக் காட்டியபடி கைகால்களை எறிந்து சோபாவில் சயனிக்கிறது. சுருட்டிய காகிதத் துண்டைத் தன் கைகளால் பற்றியபடி இரண்டு கால்களில் எழுந்து நிற்கிறது. மிக்கி(நாய்)யின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஊஞ்சலாடுகிறது. மிக்கியின் காதுகளை செல்லமாகக் கடித்துவிட்டு தன் சொரசொரவென்றிருக்கும் நாக்கால் நக்கிவிடுகிறது. திடீரென எங்கிருந்தோ தோன்றி எங்கள் கால்களுக்குள் இடறுப்பட்டுக்கொண்டு ஓடோடென்று ஓடிப் போய் மாடிப்படிக்கட்டுக்களில் நின்று வாலை ஆட்டிச் சிரிக்கிறது. பந்தைத் தனது வயிற்றுக்குள் இடுக்கிப்பிடித்துக்கொண்டு பின்னங்கால்களால் உதைக்கிறது. சாமியறைக்குள் அமர்ந்து கும்பிட்டுக்கொண்டிருக்கும் அம்மாவின் மடியைத் தாண்டி அந்தப் பக்கம் குதித்துத் திடுக்கிட வைக்கிறது.

எங்கள் வீடு பூனைகளின் வீடு. பூனையின் மென்பாதங்கள் அங்கே மறைந்து மறைந்து தோன்றுகின்றன. புலிகளுக்கு இந்த மாயவிதி பொருந்தாது போலும்.

17 comments:

ஹேமா said...

வாசிக்க வாசிக்க மனதில் ஒரு இறுக்கம்.ஏன் என்று தெரியவில்லை.வீட்டு மிருகங்கள் வளர்ப்பதும் அவைகளை இழப்பதும் பெருந்துன்பம்.

ILA (a) இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன்

soorya said...

supperbbbbbbbbbbbbbbb.
soorya.

நேசமித்ரன் said...

இந்த மொழி...!

இந்தப் பிரயோகம் .. நடையழகு .. கூடவே இழுத்துச் செல்கிறது பூனையின் பாதங்கள் ஆடை கடந்து சருமத்தில் பதிக்கும் நகங்களுடன்

தமிழ்நதி said...

அன்புள்ள ஹேமா,

தொடர்ந்து என் வலைப்பூவுக்கு வந்து கருத்துப் பரிமாறிச் செல்வதற்கு நன்றி. உங்கள் 'புறொபைல்'இல் கோண்டாவில் என்று இருக்கிறது. நான் அங்கே இருந்திருக்கிறேன். எனது நெருங்கிய தோழியின் இடமும் கோண்டாவில்தான்.

சிறந்த பதிவில் சேர்த்தமைக்கு நன்றி இளா.

சூரியா,

எங்கே உங்களை நெடுநாட்களாகக் காணோம்? ஒரு மாறுதலுக்கு பூனைகளைப் பற்றி எழுதினேன்:)

நேசமித்ரன்,

"ஆடை கடந்து சருமத்தில் பதிக்கும் நகங்களுடன்"

பதிவுகளிலிருந்தும் கவிதை பிறக்குமோ... பிறக்குமென்றே தோன்றுகிறது. உங்கள் கவிதைகளின் செறிவு எனக்குக் கைவராதது. தமிழ்நாட்டுக்கு நீங்கள் வந்திருப்பதாக எங்கோ வாசித்த நினைவு. வேலைக்குத் திரும்பியாயிற்றா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பூக்குட்டி கொஞ்ச நாட்களில் கதைக்க ஆரம்பிக்கலாமென்று நாங்கள் எங்களுக்குள் கதைத்துக்கொண்டோம்//

அதுக்கென்ன.. பேசுமா இருக்கும்.. கணினியின் இந்த பதிவிலிருந்து பூனை இறங்கி கம்பீரமா
நடைபோட்டு காண்பிச்சிக்கிட்டே வாலில் ஒரு பாலே நடனம் கூட ஆடிகாட்டுமா இருக்கும்..:)

குட்டிப்பையா|Kutipaiya said...

மிக அருமை!!!!!

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்குங்க, தமிழ் நதி.

Dhanaraj said...

I have personally my own reservations regarding cats. Cats consider you servants while dogs consider you as masters. Reading the book A HOME FOR GORI by Habib Rehman. This is a book on a pertson's love for his dog. And it is really interesting.
Your article, however, made me to have a soft corner for cat for a TEMPORARY time.

க.பாலாசி said...

எங்க வீட்ல எப்பவும் 5,6 பூனைகள் இருந்துட்டே இருக்கும்ங்க. அப்பா அம்மாக்கு அதுங்க இல்லைன்னா பொழுதே போறதில்ல... 1 வருஷத்துக்கு முன்னாடி செல்லமாயிருந்த பூனைக்குட்டி ஒண்ணு செத்துப்போச்சு... எங்கப்பாவே அழுதார்னா பார்த்துக்குங்க.. மனசே கலங்கிடுச்சுங்க...

இந்த இடுகையினால எல்லாமே ஞாபகம் வருது...

க.பாலாசி said...

பூனைகளோட சின்ன சின்ன சேஷ்டைகளை ரசிக்கறதுக்கும் கொடுத்து வச்சிருக்கணும்ங்க..அழகு...

சின்னப்பயல் said...

பூனை பிடித்தவள் பாக்கியசாலி.. :-)

அம்பேதன் said...

பூனைகள், நாய்கள், பல வீட்டுப் பறவைகள் என்று மனிதர்களை பைத்திய உலகில் நுழையாமல் காக்கும் உயிரினங்கள் நிறைய உள்ளன.
என் உலகில் நாய், பூனை மற்றும் சமீபத்தில் சிறிய அறிமுகமாய் காக்கைக் குஞ்சு.

Unknown said...

தமிழ், நீ உன் டெம்ளேட்டில் இருந்த அழகியை எடுத்த போது நான் வருந்தினேன். உன் பூனைகளின் பெயர்கள் மிகவும் அருமை. புதினம் பற்றி என்னிடம் நீ கதைத்திருக்கிறாய். சொற்களாக கேட்டிருந்த இவை எழுத்தில் வாசிக்கும் போது ஏதேதோ நினைவுகளை மீட்டுத் தந்தது. டெய்ரி மில்க் ஸில்க் சாக்லேட் சாப்பிட்டது போல உன் மொழி தித்திக்கும் இனிமை..... எனக்கும் பூனைகளுக்குமான ஸ்நேகம் முடிவில்லாதது. இரண்டு வயதிலிருந்து அவைகளுடன் பழகுகிறேன். சமீபமாக என் குழந்தைகளுக்காக செல்லப் பிராணிகளை வளர்ப்பதை தவிர்த்துவிட்டேன். ஆனாலும் என் பால்யத்தில் என்னுடன் உண்டு உறங்கி கொஞ்சி மகிழ்ந்த பப்புக்களையும் அப்புக்களையும் மறக்கவே ஏலாது தோழி. அருமையான பதிவு.....

VELU.G said...

எங்கள் வீடும் பூனைகள் வீடே

ரொம்ப நல்லாயிருந்துச்சுங்க

க. தங்கமணி பிரபு said...

உங்களுக்கு ஒரு பிண்ணூட்டம் போட தொடங்கி அது பதிவு மாதிரி ஆகிவிட்டது. சமயம் கிடைக்குபோது வாங்க
http://chinthani.blogspot.com/2010/09/blog-post_22.html

நன்றிகள் பல

நெல்லை ரவீந்திரன் said...

எனக்கு செல்ல பிராணிகளை அவ்வளவாக பிடிக்காது. ஆனால் உங்களுடைய இந்த பதிவை படித்தபோது பூனை குட்டிகள் மீது ஈர்ப்பு உருவாகிறது. உங்களுடைய எழுத்துக்கள் மிகவும் அழகு. மிக சிறந்த நடையில் அமைந்துள்ளது.