வாழ்வில் எதிர்ப்படும் யாவற்றிலிருந்தும் நாம் பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். மனிதர்கள், புத்தகங்கள், அனுபவங்கள், கலைகள், ஊர்கள்… இவ்வாறாகப் பட்டியல் தொடரும். அண்மையில் என்னால் எழுதப்பட்ட ‘ஈழவிடுதலையின் தோல்வியில் இணைந்த சாருவும் ஜெயமோகனும்’என்ற பதிவின் வழியாக நிறைய அறிந்துகொள்ள வாய்த்தது. எந்தப் பதிவினைவிடவும் அதிகமான வாசகர்களையும் பின்னூட்டங்களையும் எதிர்வினையான பதிவுகளையும் விவாதங்களையும் இந்தக் கட்டுரை ஏற்படுத்தியது எப்படி என்று நினைத்துப் பார்த்தேன். ஈழமக்களின் அவலங்களைக் குறித்து இவர்கள் இருவரும் மௌனமாயிருந்தார்கள் என்பதைக் குறித்து பெரும்பாலானோர் உணர்ந்தே இருந்தார்கள். ஆனால், எவரும் அதைக் குறித்துக் கேள்வி எழுப்பிட முனையவில்லை. யாரோ ஒருவர் அதைப்பற்றிப் பேச முற்படும்போது தங்கள் ஆதரவை வழங்க முன்வருகிறார்கள். இந்த விட்டேத்தியான மனோபாவத்திற்குக் காரணந்தான் என்ன? சோம்பலா? ‘அவர்கள் பெரிய எழுத்தாளர்கள்… அவர்களை எதிர்ப்பதாவது’என்ற அச்சமா? நாம் ஏதாவது சொல்லப்போய் வாங்கிக்கட்டிக்கொள்வோம் என்பதனால் வாளாவிருந்தார்களா? அஞ்சி அஞ்சியே உண்மைகளை ஆழப் புதைத்துவிடுகிறோம் என்பதை நினைக்க வேதனையாக இருக்கிறது.
ஒவ்வொரு பின்னூட்டங்களுக்கும் பதில் அளிக்கும்போது ‘ஆம் நீங்கள் சொன்னது சரிதான்… இல்லை.. அதில் கொஞ்சம் தவறு இருக்கிறது’என்று பதிலளிக்கும்போதே ஒரு படி மேலே நின்று பேசுவதான தொனி, சட்டாம்பிள்ளைத்தனம் வந்துவிடுகிறது. அதைத் தவிர்க்கும் ஒட்டுமொத்தமான பதிலாக இந்தப் பதிவை எடுத்துக்கொள்ளலாம்.
தற்காலிக பெருமிதங்களால் தூண்டப்பட்டு இதனை நான் எழுதவில்லை. பின்னூட்ட உடுக்கைகளால் உருவேறித் தலைவிரித்து ஆடவும் இல்லை. (அதற்கென்று பதிவுலகில் சில பேர் இருக்கிறார்கள்.) ஒருவனை அடித்தபிற்பாடு யாரைக் கண்டாலும் சட்டைக்கை உயர்த்தித் திரியும் விடலைத்தனமும் இல்லை இது. மனங்கள்… இந்த மனங்கள்… என்று நினைத்துக் கொண்டேன். ஒருவரைப் பற்றி, அதிலும் பிரபலமான ஒருவரைப் பற்றி எழுதியதும் இத்தனை பேர் வந்து வாசிக்கிறார்களே… அந்த ஆர்வத்தின் பின்னிருக்கும் அந்தரங்கச் சுவை ஆவலை நினைத்துப் பார்த்தேன். சுவாரசியமாக இருந்தது. எழுத்தாளர்கள் சினிமாக்காரர்கள் தரத்திற்கு ஆவலைத் தூண்டுபவர்களாக இருக்கிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதலான விடயநதான்:)
பிரபலமான எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்கள் இத்தனை வெறுப்பையும் வாசகர்களிடையில் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறிய, அவர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. இவ்வளவு பேர் இன்னவிதமாகப் பேசிக்கொண்டிருக்கையில், ஒரு சிலர் மட்டும் ‘எங்க அண்ணாச்சி வழக்கமாக கால்களால்தான் நடப்பார்; சில சமயம் கைகளால் நடக்கவேண்டியேற்பட்டுவிடுகிறது. அது அவரது பிழையன்று’என்று பேசக்கேட்பது வியப்பாக இருக்கிறது. அநியாயத்திற்கும் அறியாமைக்கும் பக்கப்பாட்டுப் பாடுபவர்கள் சமூக நீதிகளுக்கு முரணாக இயங்குகிறவர்கள். அறிவீனத்தைக் கொண்டாடுபவர்களும் அறிவிலிகளே!
பின்னூட்டங்களில் ஜெயமோகனைப் பற்றி இளக்காரமாகக் கதைத்தவர்கள் குறைவு. அவர் ஒரு இந்துத்துவவாதி, நடைமுறைக்கு ஒவ்வாத தீர்வுகளை முன்வைப்பவர் என்பதைத் தாண்டி அவர் மீது காட்டமான விமர்சனங்கள் இல்லை. ஆனால், சாரு நிவேதிதா மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. என் பதிவின் குறிக்கோளைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் அவரைத் தாக்குமளவுக்கு அவை அமைந்திருந்தன. சாரு ஓரினச்சேர்க்கையாளர், அறிவிலி, குடிகாரர், சுயவிளம்பரத்திற்காக எந்த எல்லைவரை வேண்டுமானாலும் செல்லக்கூடியவர் இன்னபிற விமர்சனங்கள் வந்தன. அவை உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், எனது பதிவின் நோக்கமே வேறாக இருந்தது. ‘நீங்கள் எங்கள் மக்கள் கொல்லப்படும்போது மௌனமாக இருந்தீர்கள். ஏறக்குறைய கொன்றுகுவித்தபின் தீர்வுகளைப் பற்றிப் பேச, உங்களுக்கு அருகதையில்லை’என்பதே நான் சொல்ல முற்பட்டது. அதனையொட்டிய விவாதங்களைத் தொடர்வதே நமக்கு இன்றைக்கு வேண்டியது. இலக்கியங்களைப் படைப்பது மட்டுமல்லாது, அநியாயங்களை எதிர்த்துக் குரலெழுப்புவதும் எழுத்தாளனின் கடமை என்பதற்கு, வரலாற்றிலிருந்து பல உதாரணங்களைக் காட்டமுடியும்.
தனது கவிதைகளால் சுதந்திரக்கனலை இந்தியர்களின் இதயங்களில் மூட்டிய மகாகவி சுப்பிரமணிய பாரதி, லத்தீன் அமெரிக்க விடுதலைக் கவிஞர் பாப்லோ நெரூடா, பாலஸ்தீனிய கவிஞர் மஹ்மூத் தார்வீஷ், ஈழத்துக் கவிஞர்கள் புதுவை இரத்தினதுரை, காசி ஆனந்தன், சிவரமணி, மு.புஸ்பராஜா, ஊர்வசி, சு.வில்வரத்தினம், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், ஆதவன், பா.அகிலன் என இந்தப் பட்டியல் நீண்டது. (சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் இளைய கவிஞர்களின் பெயர்களை¸ விடுபடல்களை அஞ்சி எழுதவில்லை.)
அண்மையில் என்னோடு கதைத்த பிரபலமான கவிஞர்களில் ஒருவர் சொன்ன வாக்கியம் மனதுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. “உண்மையான எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக இயங்கவேண்டியவர்கள்”என்றார் அவர். ஆட்சியாளர்கள் தவறுகளுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். சுலபத்தில் தட்டிக் கேட்கப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். அதிகாரம் அவர்களை மண்ணிலிருந்து இரண்டடி உயரத்திற்குத் தூக்கிவிடுகிறது. எதிர்க்கட்சிகளோ தமது நலன்களின் வாயால் பேசத் தலைப்படுகின்றன. உதாரணமாக, ஜெயலலிதா வீட்டுக்கு முன்னால் ஒரு காகம் இறந்துகிடக்குமானால், ‘இது கருணாநிதியின் தி.மு.க. செய்த காரியம்’என்று கூசாமல் சொல்லக்கூடியவர்களாகவே எதிர்க்கட்சிகளின் நியாயப்பாடு இருக்கிறது. இது மாறி மாறி வரும் ஆட்சிகளுக்கெல்லாம் பொருந்தும். ஆக, உண்மையின் குரலால் பேசவேண்டியது அச்சமூகத்தில் வாழக்கூடிய அறிவுஜீவிகளின் கடமையாகிறது.
தமிழ்நாட்டுக்கு வந்த பிற்பாடு, உறுத்தலான ஒரு விடயத்தைக் கண்ணுற்றேன். அது, ‘காலில் விழும் கலாச்சாரம்’. அந்தக் கலாச்சாரத்தின் முன் வயது, அறிவு எதுவும் பொருட்டல்ல. கவிஞர்களில் பலரே தன்மதிப்பைப் பின்தள்ளிவிட்டுக் காலில் விழுந்தெழும்புவதைக் கவனித்து மனம்வெதும்பியதுண்டு. சில மாதங்களுக்கு முன்னர், தமிழ்க் கவிஞர்களின் கூட்டமைப்பினரால், ஈழத்தில் நடக்கும் இனஅழிப்புக்கெதிரான கவிதை வாசிப்பொன்று மெரீனா கடற்கரையில் நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு காலதாமதமாக கவிஞர் கனிமொழி வந்தார். அவரைக் கண்டதும் சில கவிஞர்கள் பறந்தோடிப் போய் அவரது பக்கத்தில் அமர்ந்துகொண்டார்கள். கனிமொழியின் கவனத்தைப் பெறுவதில் அவர்கள் காட்டிய அக்கறையைப் பார்த்தபோது… ம்… என்னத்தைச் சொல்ல…? முதலமைச்சரின் மகளாக இருக்கட்டும். அன்று அவர் ஒரு கவிஞராகத்தான் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இம்மாதிரியான கவன ஈர்ப்புகள் எரிச்சலூட்டுகின்றன. தனிப்பட்ட நலன்களுக்காகத் தன்மதிப்பழியும்படி நடந்துகொள்வது சகிக்கக்கூடியதாக இல்லை.
எல்லாப் புனிதங்களையும் எதிர்த்துக் கேள்வி கேட்பதனால் மட்டுமே சமூக மாற்றங்களைக் கொண்டுவர முடியும். எழுத்தாளன் என்பவனை போப்பாண்டவர் தரத்தில் நடத்தவேண்டியதில்லை. அவன் என்ன சொன்னாலும், ‘தேவ ஆட்டுக்குட்டி வந்தேனே…’என்று பாடிக்கொண்டு பின்தொடர வேண்டிய அவசியமில்லை.
கேள்வி கேட்கப் பழகுவோம். அதிகாரங்களை, எல்லாத் துறைகளிலும் இருக்கும் ஒற்றை ஆதிக்கங்களை. இல்லையெனில், இப்படிப் பொத்திப் பொத்தி வைத்திருக்கிற நமது உயிரும் உடமைகளும் கேள்விக்குறியாகிவிடும் காலமொன்று வாசல் கதவை வந்து தட்டுவதை எதிர்கொள்ளத் தயாராகுவோம்.
குறிப்பு: ஒரு மனோநிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு என்னை நகர்த்துவதற்கான ஒரு பதிவாக, எனக்கே எழுதியதாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.
Showing posts with label பின்னூட்டங்கள். Show all posts
Showing posts with label பின்னூட்டங்கள். Show all posts
6.01.2009
| Tweet | |||||
Subscribe to:
Posts (Atom)