9.02.2009

‘பிரபாகரன் குற்றவாளி’ எனும் எத்துவாளி நீதிபதிகள்


ஏதோவொரு பிடிப்பில், நம்பிக்கையில், ஆதார அச்சில், எதிர்பார்ப்பில், காத்திருப்பில், ஒரு புள்ளியை நோக்கிய பயணமாக இருந்த வாழ்க்கை தேங்கிவிட்டது. இரவில் அடர்காட்டில் திசை தொலைத்த திகைப்பினை நினைவுறுத்துகின்றன இந்நாட்கள்.
முன்னைப்போல நண்பர்களின் முகங்களை எதிர்கொள்ள முடிவதில்லை. சந்திப்புகளைத் தவிர்த்துவிடுகிறோம். தொலைபேசி எண்களைக் கண்ணெடுக்காமலே நிராகரித்துவிடுகிறோம். எல்லாவற்றிலும் சலிப்பும் மந்தமும் படர்ந்துவிட்டிருக்கிறது. பிடிவாதமான சிறையிருப்புகளை மீறி யாரையாவது பார்த்துவிட நேரும்போது, ‘தயவுசெய்து அரசியல் பேசவேண்டாம்’என்று கேட்டுக்கொள்கிறோம். ஆனால், பேச்சு முட்டி மோதி அங்குதான் வந்து தரைதட்டுகிறது. பழகிய, புளித்த, சலித்த, விரும்பாத வார்த்தைகளை நாம் பேசவும் கேட்கவும் செய்கிறோம்.


“தலைவர் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்”

“அவர் இல்லை என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்”

“இராணுவப் பக்கத்தில் கவனம் செலுத்திய அளவு அரசியலிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்”

“முகாம்களுக்குள் இருக்கும் சனங்களை நினைத்தால்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை”

மேற்கண்ட ஒரே சாயலுடைய உரையாடல்களிலிருந்து தப்பித்து ஓடிவிட மனம் அவாவுகிறது. ஏனென்றால், அவை வந்துசேருமிடம் காற்றில்லாத வெளி. திசையழிந்த பனிமூட்டம்.

“முஸ்லிம்களை விரட்டாதிருந்திருக்கலாம்”

“அவ்வப்போது முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுகளில் ஒன்றைத் தேர்ந்திருக்கலாம்”

“அவர் முன்னரே வெளியேறியிருந்திருக்கலாம்”

“இத்தனை சனங்களைச் சாகக் கொடுக்காதிருந்திருக்கலாம்”

எத்தனை ‘லாம்’கள்!

அரங்கில் இல்லாதவர்களை காலம் எப்படிக் கபளீகரம் செய்கிறது என்பதைக் கண்ணெதிரே காண்கிறோம். ‘சீ-சோர்’ விளையாட்டு மாதிரி ஆகிவிட்டது எல்லாம். கரையில் இருந்தவர்கள் கடலுக்கும் கடலில் இருந்தவர்கள் கரைக்கும் இடம்மாறிவிட்டார்கள். விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியானது, இதுநாள்வரை தியாகிகள் எனப்பட்டோரை ‘மக்களைச் சாகக்கொடுத்த, அடிமைகளாக்கிய துரோகிகள்’ஆகவும், துரோகிகள் எனப்பட்டோரை மீட்பர்களின் சட்டகத்தினுள்ளும் இடம்மாற்றி அடைத்திருக்கிறது. அன்றேல் அவ்வாறு மாயத்தோற்றம் காட்டுகிறது. (தியாகி, துரோகி வரைவிலக்கண விவாதங்களைப் பிறகொருநாள் முழுக்கட்டுரையொன்றில் பேசலாம்) பிரபாகரனை இன்னொரு சதாம் ஹுசைனாக வரலாற்றிலிருந்து அழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டு பலர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்। பல புலி ஆதரவாளர்கள் (முன்னாள்) புனுகுப்பூனைகளாக மாறி ‘மியாவ்’எனக் கத்தி இணையத்தளங்களில் அவலச்சுவை கூட்டுகிறார்கள். ஏற்கெனவே புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கெதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தவர்களுக்கோ ‘குண்டியிலடித்த புழுகம்’. ‘புலிகளின் வீழ்ச்சி, ஜனநாயகத்தின் வெற்றி’என்பதாகப் பேசத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

இதற்குள் காலச்சுவடு அநாமதேயக் கட்டுரை ஒன்றை வெளியிட்டு, விடுதலைப் புலிகளை அழிவின் சூத்திரதாரிகளாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறது। ‘வன்னியில் நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகளால் மிகைப்படுத்திச் சொல்லப்படுகிறது’என்று திருவாய்மொழிந்த ஜேர்மன் சுசீந்திரனின் நேர்காணலை அடுத்து- பேராசிரியர் அ।மார்க்ஸ் அவர்களின், தமிழக எழுத்தாளர்களின் பொது அறிவினைக் குறித்துக் கேள்வி எழுப்பும், புலியெதிர்ப்புக் (அது இல்லாமலா?) கட்டுரையொன்றை வெளியிட்டுப் புண்ணியம் கட்டிக்கொண்டிருக்கிறது ஆதவன் தீட்சண்யாவின் புதுவிசை சஞ்சிகை. கவிஞர் லீனா மணிமேகலையால் ஒழுங்கமைக்கப்பட்ட- ஈழத்தமிழ்க் கவிஞர்களின் கவிதை நூல் விமர்சனக் கூட்டத்தில் இலங்கையின் தேசிய கீதத்தை பயபக்தியோடு எழுந்து நின்று பாடிய பௌத்த நெறியாளர் சுகன் கீற்று இணையத்தளத்திலே, கொழும்புவாழ் கோமான் கருணாவை ‘வாழ்க நீ எம்மான்’என்று வியந்து குழைந்திருக்கிறார். ‘நீ இன்றி இன்றளவும் போர் நின்றிருக்க வாய்ப்பில்லை’என்று அவர் விசர்வாதம் அன்றேல் விதண்டாவாதம் பேசியிருக்கிறார். நமது சகபதிவரான த.அகிலனின் இணையத்தளத்திலே வெளியாகியிருக்கும் - அகதிமுகாம் தறப்பாழின் கீழிருந்து எழுதப்பட்ட கட்டுரையிலே ‘விடுதலைப் புலிகளின் கறுப்பு-வெள்ளை அரசியல்’சாடப்பட்டு, சாம்பல் ஓரங்களைக் குறித்துப் பேசவேண்டுமென்று கேட்கப்பட்டிருக்கிறது. அண்மையில் கனடாவில் நடந்த புத்தக விமர்சனக் கூட்டமொன்றிற்குச் சென்றிருந்தேன். (கவிஞர் கருணாகரனின் ‘பலியாடு’, த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை) அங்கு சமூகமளித்திருந்த எழுத்தாளர் சுமதி ரூபன் சொன்னார் “எனது உழைப்பிலிருந்து ஒரு சதம்கூடப் போராட்டத்திற்குச் சென்றுசேரக்கூடாது என்பதில் கவனமாயிருந்தேன்”. ஆனால், அதே சுமதி ரூபன் விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்ட, ஆதரித்த ரி.வி.ஐ. தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைசெய்ததை (கவிஞர் சேரன் என்னை நேர்காணல் செய்தபோது) நான் பார்த்திருக்கிறேன் என்பதை இங்கு சொல்லியாக வேண்டும். அந்த ஊதியம் அவரில் எப்படிச் சுவறாமல் போகும், அல்லது அவருக்கு மாற்றான அரசியல் கருத்துக்கொண்ட நிறுவனத்தில் அவர் எப்படி நீடித்திருந்தார் என்பது எனக்குப் புரியத்தானில்லை. போராட்டத்திற்கு ஆதரவில்லை; எந்த அடக்குமுறைகளுக்கெதிராக அந்தப் போராட்டம் தொடங்கப்பட்டதோ, அந்த அரச பயங்கரவாதத்திற்கெதிராக அவரிடமிருந்து ஒருபோதும் ஒரு எதிர்ப்புக்குரலும் எழுந்ததில்லை. இன்றைய நிலையில் அங்குமில்லை; இங்குமில்லை என்பவர்கள் அங்கிடுதத்திகள். ‘நடுநிலைமை’என்ற சொல்லின் பின் பதுங்கிக்கொள்ளும் வேடதாரிகள்.அந்நிலைப்பாடானது பொதுச்சுமைகளிலிருந்து உங்களை விடுவித்து தனிப்பட்ட வாழ்வினில் குற்றவுணர்வின்றி உழல வசதிசெய்கிறது. மேலும், தோல்வியில் உங்களுக்குப் பங்கில்லை என்றால், எப்போதுமே, எந்தக் காலத்திலும் கிட்டப்போகும் வெற்றிகளிலும் உங்களுக்குப் பங்கில்லை என்பது நினைவிருக்கட்டும்.

அதிசயத்தில் பேரதிசயமாக, தனது இணையத்தளத்தின் வார்ப்புருவில் இடப்பட்டிருக்கும் வாசகங்களுக்கு அமைவுற ‘அதிகாரங்களுக்கெதிராக உண்மையைப் பேச’முதன்முறையாக முயன்றிருக்கிறார் ஷோபா சக்தி। ‘பிறழ் சாட்சியம்’என்ற தனது கட்டுரையை அவர் கீழ்க்கண்டவாறு நிறைவுசெய்திருக்கிறார்:

“இலங்கை அரச படைகளின் கொலைச் செயலைப் புலிகளின் மீது சுமத்தி ‘தேனி’போன் அரச சார்பு இணையங்கள் இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்கக் கிளப்பிவிடும் இதுபோன்ற வதந்திகளும் ஊகங்களும் பரப்புரைகளும் பாஸிஸத்தின் ஊடக முகங்கள்। அந்தப் பரப்புரைகளை நியாயப்படுத்தி சுகன் போன்றவர்கள் பேசும் சொற்கள் அவர்கள் இவ்வளவு நாளும் பேசிவந்த மானுட நேயத்தையும் (கொக்கமக்கா-இது என் எதிர்வினை) கொலைமறுப்பு அரசியலையும் கேள்விக்குள்ளாக்கியே தீரும். பிறழ் சாட்சியத்தில் புத்திசாலித்தனம் இருக்கலாம், சிலவேளைகளில் கவித்துவம் கூட இருக்கலாம். ஆனால், அந்தச் சாட்சியத்தின் பின்னால் அநீதியும் இரத்தப்பழியும் இருக்கிறது.”

உண்மையாக நெகிழ்ந்துபோனேன். விழிக்கடையில் கண்ணீர் திரண்டுவிட்டது. கடைசியில் மண்டைதீவு அந்தோனியார் கண்திறந்துவிட்டார்.:)

“தவறான வழிநடத்தலால் பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்து, மூன்று இலட்சம் தமிழ்மக்களை ஏதிலிகளாக்கி முகாம்களுள் முடக்கிய பிரபாகரனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்”என்பதே அண்மைக்காலங்களில் மேற்குறிப்பிட்டவர்களின் தரப்பு வாதமாக இருந்துவருகிறது. ‘இந்தப் பாவத்தில் எனக்குப் பங்கில்லை’என்று சந்தர்ப்பம் பார்த்துக் கைகழுவுகிற புதிய பிலாத்துக்களையும் பார்க்கமுடிகிறது. ‘நீரோ ஆண்டவர்!’என்று பழித்துக் களிக்கிற எத்துவாளிகளையும் எதிர்கொள்கிறோம். ‘போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் அது ஒட்டுமொத்தத் தமிழனுக்குச் சொந்தம். வீழ்ச்சியுற்றிருப்பதால் அது பிரபாகரன் என்ற தனிமனிதனுக்கு மட்டுமே சொந்தம்’என்பது அபத்தாபத்தமாக இல்லையா? ஆனையிறவு முகாம் கைப்பற்றப்பட்டபோது, புளகாங்கிதமடைந்தவர்கள் நாங்கள்தான். ‘ஈழத்தமிழர்களது போராட்டத்தால் தமிழினத்தை உலகமே அறிந்திருக்கிறது’என்றபோது பெருமிதத்தோடு பல்லிளித்தவர்களும் நாங்கள்தான். ‘விடுதலைப்புலிகள் கட்டுப்பாடும் வீரமும் நிறைந்த கெரில்லா வீரர்கள்’என்று மேற்கத்தேயம் வர்ணித்தபோது நம்மில் யாருமே புளகாங்கிதமடையவில்லை என்று நெஞ்சில் கைவைத்துச் சொல்லமுடியுமா? வெற்றிகளின்போது புல்லரித்ததெல்லாம், இப்போது செல்லரித்துப்போய்விட்டதா?

தோல்வி பெற்ற பக்கத்தை நிராகரிப்போரின், கைவிடுவோரின் தனிப்பட்ட உளச்சுத்தியைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஆம் பல்லாயிரவர் அழிந்துபோனார்கள். ஆம் மூன்று இலட்சம் பேர் முகாமுக்குள் இருக்கிறார்கள். ஆம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறைக்கைதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆம் இருபத்துநான்காயிரம் பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இதனாலெல்லாம் போராட்டத்தின் நோக்கம் நியாயமற்றதென்று கூறமுடியுமா? விடுதலைப் புலிகள் எதேச்சாதிகாரத்தோடு இயங்கியதை, சக போராளிக்குழுக்களைக் கொன்றுபோட்டதை, முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியதை, உலக ஒழுங்கைப் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் சரியான முடிவுகளைத் தேராததை வேண்டுமானால் தவறென்று சொல்லலாம். ஆனால், போராட்டம் முன்னெடுக்கப்பட்டதன் நோக்கம் தவறில்லை. பேரினவாதத்தின் பாரபட்சங்களால் அவர்கள் போராட்டத்தை நோக்கி வலிந்து செலுத்தப்பட்டார்கள். விடுதலைப் புலிகள் முன்னெடுத்து நடத்திய போரின் பங்காளிகளாக நாம் அனைவரும் இருந்தோம். ஆக, இங்கே வீழ்ச்சியடைந்தது (பின்னடைவு என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாது) விடுதலைப் புலிகள் மட்டுமன்று; நாம் எல்லோருந்தான்। வெற்றியடைந்தால் பல்லைக் காட்டுவதும் வீழ்ச்சியுற்றால் பின்புறத்தைக் காட்டுவதும் கேவலமாக இருக்கிறது.

இதைத்தான் பிழைப்புவாதம் என்பது. இதைத்தான் சந்தர்ப்பவாதம் என்பது. இதைத்தான் அப்பட்டமான சுயநலம் என்பது. கயவாளித்தனம் என்பது. ஒட்டுண்ணித்தனம் என்பது.

அரசியலில் அதிகாரந்தான் தெய்வம். போரில் வெற்றிதான் தெய்வம். இந்த ‘தெய்வம் நின்று பழி தீர்க்கும்’, பாவம், புண்ணியம், பைசாசம் இன்னபிற தவிர்த்து கொஞ்சம் பகுத்தறிவு, யதார்த்தம், குரூரத்தோடும் சிந்தித்துப் பார்த்தால், விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டதற்குக் காரணம் சகோதரப் படுகொலைகள் இல்லை; முஸ்லிம் சகோதரர்களை விரட்டியது இல்லை; அனுராதபுரத்தில் புகுந்து பொதுமக்களைக் கொன்றுபோட்டது இல்லை. இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கப் பிடிமானம், அன்புக் கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பழிவாங்கியே தீருவேன் என்ற மேன்மைமிகு சோனியாவின் பிடிவாதம், இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதம், சீனாவின் நானா நீயா போட்டி, ஈராக் போன்ற நாடுகளில் புஷ் விட்ட தவறுகளால் நல்லபிள்ளையாகக் கைகட்டிக்கொண்டிருக்க வேண்டிய அமெரிக்காவின் நிர்ப்பந்தம்… இவையெல்லாம்தான் ஈழவிடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டமைக்கான காரணங்கள். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’என்றால், முதலில் செத்துப்போயிருக்கவேண்டியது அமெரிக்காதான்.

பிரபாகரன் அவர்கள் உலக ஒழுங்கோடு ஒத்துப்போயிருந்தால், அதிகாரத்தின் இசைக்கேற்ப நடனமாடியிருந்தால், அவ்வப்போது ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் நீட்டிய எலும்புத் துண்டுகளுக்காக நாக்கைத் தொங்கப்போட்டு மலினமாக விலைபோயிருந்தால்… தென்னிலங்கையில் பிழைப்புவாத அரசியல் நடத்தும் கருணா வகையறாக்களைப்போல சப்பர மஞ்சத்தில் சாமரம் வீசிக்கொண்டிருக்கப் படுத்திருக்கலாம். ‘பயங்கரவாதம்’ ‘புரட்சி’யாகியிருக்கும். தமிழ் மக்களும் பிழைத்திருப்பர்.

தலைவர் பிரபாகரன் இழைத்த ஒரே தவறு, வாழ்விலும் மரணத்திலும் சமரசம் செய்துகொள்ளாததுதான். இந்தத் ‘தூய்மைவாதம்’ போரில் உதவாது என்பதை அவர் உணர்ந்துகொண்டபோது, காலம் கடந்துவிட்டிருந்தது. நாங்கள் வீழ்ச்சியுற்றோம். போராட்டத்திற்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் படுகேவலமான நிலைமைக்குக் கீழிறக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், அவரைக் குற்றம் சொல்ல நமக்குத் தகுதி இருக்கிறதா? வன்னியில் வதைபட்ட, வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் புல்மோட்டையிலும் அகதிமுகாம்களில் வதைபட்டுக்கொண்டிருக்கிற மக்களுக்கு அந்தத் தகுதி இருக்கிறது.

அவர்கள் போராடிக்கொண்டிருந்தபோது நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம்? தனிப்பட்ட வாழ்வில் மூழ்கிக் கிடந்தோம். வயிறு புடைக்க உணவருந்தினோம். குடித்தோம். படம் பார்த்தோம். நண்பர்களோடு சுற்றுலா போனோம். படுத்து பிள்ளை பெற்றுக்கொண்டோம். காதலித்தோம். உழைத்துச் சேமித்தோம். மேடைகளில் கவிதை வாசித்தோம். கைதட்டல்களை அள்ளிக்கொண்டோம். எப்போதாவது எதையாவது எழுதிக் கிழித்து ‘ஐயகோ நம்மினம் அழிகிறதே’என்று ஒப்பாரி பாடினோம். ஏதேதோ வழிகளில் நம் அடையாளங்களைப் பெருக்கப் பிரயத்தனப்பட்டோம். இன்று கூசாமல் குற்றம் சொல்கிறோம்.

தோற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வென்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். இது பொதுநியதி. ‘சத்தியம் வெல்லும்’என்பதெல்லாம் சும்மா. அப்படிப் பார்த்தால் இஸ்ரேல் சத்தியவந்தர்களின் பூமியாக இருக்கவேண்டும். இன்று வலிமையே பிழைக்கிறது; நீதியன்று. அதிகாரந்தான் விரோதி ஆண்டின் அறமாகியிருக்கிறது.

இதுவரையில் விடுதலைப் புலிகளைத் தூற்றிவந்த இணையத்தளங்களும் பத்திரிகைகளும் இப்போது செய்வதென்ன? வீழ்ச்சியின் காரணங்களை அடுக்கிக்கொண்டிருக்கின்றன. புலியெதிர்ப்புப் பட்டை கட்டப்பட்ட குதிரைகளுக்கு ஒரே பார்வையன்றி வேறில்லை. பேரினவாதம் தமிழ்மக்களை தடுப்புமுகாம்கள் என்ற வதைமுகாம்களில் வைத்து இழிவுசெய்துகொண்டிருப்பதை அவர்கள் ஏன் எழுதுவதில்லை? திஸநாயகம் போன்ற பத்திரிகையாளர்கள்மீது பேரினவாதத்தின் கொடூர நகங்கள் ஆழப் பதிவதை ஏன் எழுதுவதில்லை? மீட்கப்பட்டதாகக் கூறப்படும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஆயுததாரிகளாகத் திரிந்து மக்களை அச்சுறுத்தும் குழுக்களின் அராஜகங்கள் பற்றி இவர்கள் ஏன் வாயே திறப்பதில்லை? நிர்வாணமாக்கப்பட்டு கண்களும் கைகளும் கட்டப்பட்டு ‘அடுத்த சூடு என் தலையிலா?’என்று ஏங்கி, சுடப்படுவதன் முன்பே செத்துக் கரிந்த அந்த மனிதர்களைப் பற்றி இவர்களால் ஏன் பேசமுடியவில்லை?

‘பேசவிடுகிறார்களில்லை… பேசவிடுகிறார்களில்லை’ என்று குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் மௌனமாக்கப்பட்டுவிட்டார்கள். இப்போது யாருக்கு அஞ்சுகிறீர்கள்? ஒருவேளை அடக்குமுறைக்கெதிராகப் பேசுவது என்பதன் பொருள் உங்கள் அளவில் ‘விடுதலைப்புலிகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான பேச்சு’என்ற புனிதக் கோட்டைத் தாண்டாததா? இதன் வழியாக, புலிகளைக் காட்டிலும் அச்சங்கொள்ளத்தகு பயங்கரவாதிகளே இலங்கை அரச கட்டிலில் இருக்கிறார்கள் என்று மறைமுகமாக ஒப்புக்கொள்கிறீர்களா? ஒருவேளை புத்திஜீவித்தனம், மனிதாபிமானம், பேச்சுரிமை, சுதந்திரம் இன்னபிற பதங்களெல்லாம் எதிராளியின் அதிகாரத்திற்கும் தங்கள் இருப்பிற்குமேற்ப மாறுபடுமோ? ஆக, புலிகள் இல்லையென்றால் நீங்களும் அரங்கத்தில் இல்லை. உங்களது அரசியலும் அந்திமத்திற்கு வந்துவிட்டது. புலிகள் முடிந்துபோனார்கள் என்றால், புலிகளுக்கெதிரான முறைப்பாட்டோலங்களை வைத்து அரசியல் பண்ணிக்கொண்டிருந்த உங்கள் கதி இனி அதோ கதிதான். பேசச் சரக்குத் (புலிகள்) தீர்ந்துபோயிற்றென்றால் என்றால் இனி ஈயாடிக் கிடக்கவேண்டியதுதானே?

அதை விடுத்து, ‘பிரபாகரன் குற்றவாளி’, ‘பாவத்திற்குத் தண்டனை’என்று எத்தனை காலந்தான் அரற்றிக்கொண்டிருப்பீர்கள்? முதலில் குற்றப்பட்டியல்; இப்போது காரணப்பட்டியலா? நீங்களும் நாங்களும் (அப்படி ஒரு கோடு இருந்தால்) இனிப் பேசவேண்டியது பொதுவான ஆதிக்க சக்திகளுக்கெதிராகவே.

‘பிரபாகரன்’என்ற மனிதரின் தனிப்பட்ட-பொது வாழ்வின் தூய்மை, நேர்மை குறித்துப் பேசுவதற்கு இங்கு எந்தப் புழுவுக்கும் அருகதை கிடையாது. சுயநல, சந்தர்ப்பவாத, பிழைப்புவாத, ஒட்டுண்ணி-சலுகை அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் எவருக்கும் அந்தத் தகுதி இல்லை. நாக்குகள் நியாயத்தைப் புரட்டிப் போட்டாலும் இதயங்கள் அறியும் அவரவர் தூய்மை. அவர் உலக ஒழுங்கிற்கமைவுற பிழைக்கத் தெரியாதவராயிருந்தார். அவரது அரசியல் பிழைத்துப் போயிற்று. அதன் விலை பல்லாயிரம் உயிர்கள், உடமைகள், ஆண்டுகள், அகதிமுகாமுக்குள் அடக்கப்பட்ட அவல வாழ்வு. அவ்வளவு வீரமும், மதிநுட்பமும், தொலைநோக்கும் வாய்ந்த அவர் ஏன் கடைசி நிமிடங்களில் தன் மக்களை அழியவிட்டு தானும் அழிந்துபோனார் என்பதே இன்று எல்லோர் மனதிலும் உழன்றபடியிருக்கும் கேள்வி.

அந்தக் கேள்விக்கான பதிலைக் காலம் சொல்லும். தான்தோன்றித்தனமான ஊகங்களை முன்வைத்து கயவர்கள் சொல்லக்கூடாது.

59 comments:

கதிரவன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

Dear All Tamil Friends, try to stand united. Because of difference among us, the enemy wins the war. At least now realize the unity among ourselves and then try for release of all those jailed Tamils.
Siva

மதிபாலா said...

படித்து முடித்ததும் தான் உணர்ந்தேன்..

எவ்வளவு சரியாக உங்களின் எண்ணத்தைப் போலவே எமது எண்ணமும் பயணிக்கிறது என்று..!

Anonymous said...

//பிரபாகரன்’என்ற மனிதரின் தனிப்பட்ட-பொது வாழ்வின் தூய்மை, நேர்மை குறித்துப் பேசுவதற்கு இங்கு எந்தப் புழுவுக்கும் அருகதை கிடையாது.//

நாட்டாமை தீர்ப்பு சொல்லிட்டாங்க

தமிழ்நதி said...

அனானி,

ஏன் நாட்டாமை சொன்னால்தான் ஆட்டுமந்தை கேட்குமா?

thiagu1973 said...

தமிழ் நதிக்கு ,

புலிகளின் அரசியல் மற்றும் சகோதர கொலைகள் மற்றும் விமர்சனத்தை அடக்கியத்தன்மை ஆகியவற்றின் மேல் எனக்கு விமர்சனம் உண்டு

ஆனால் அவர்கல் கடைசிவரை நமது பாரிய எதிரிக்கு விட்டு கொடுக்காமல் போராடினார்கள்

அவர்களது தியாகத்தை கேள்விக்குள்ளாக்குபவர்களை செருப்பால் அடிக்கவேண்டும்

மற்றபடி விமர்சனமின்றி புலிகள் ஆதரவு மாபெரும் தவறென கருதுகிறேன்

butterfly Surya said...

அருமை.

அவர் ஒரு போராளி.. அரசியல்வாதி அல்ல...

Chithan Prasad said...

வணக்கம் தமிழ்நதி
ஒரே ஒரு சந்தேகம். நடுநிலைமை என்பது தவறு என்பது இந்த பிரச்சனைக்கான கருத்து மட்டுமா அல்லது வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் அதே கருத்தா?
சித்தன்

ஊர்சுத்தி... said...

வாழ்விலும் மரணத்திலும் சமரசம் செய்துகொள்ளாத தலைவனின் காலத்தில் வாழ்ந்தோம் என பெருமிதம் கொள்வோம்...

சந்தனமுல்லை said...

சாட்டையடி தமிழ்நதி!

//ஆனால், அவரைக் குற்றம் சொல்ல நமக்குத் தகுதி இருக்கிறதா? வன்னியில் வதைபட்ட, வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் புல்மோட்டையிலும் அகதிமுகாம்களில் வதைபட்டுக்கொண்டிருக்கிற மக்களுக்கு அந்தத் தகுதி இருக்கிறது.
//

சரியா சொல்லியிருக்கீங்க!!

பதி said...

வாசித்தேன். நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டுள்ளேன்..

//தோற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வென்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். இது பொதுநியதி. ‘சத்தியம் வெல்லும்’என்பதெல்லாம் சும்மா.//

சத்தியமான வார்த்தைகள்...

அருள் எழிலனின் ( http://inioru.com/?p=4852 )சமீபத்திய கட்டுரை புலி எதிர்ப்பிலுள்ள வேறு பல விசயங்களை அலசுகின்றது.

Anonymous said...

//அரசியலில் அதிகாரந்தான் தெய்வம். போரில் வெற்றிதான் தெய்வம். இந்த ‘தெய்வம் நின்று பழி தீர்க்கும்’, பாவம், புண்ணியம், பைசாசம் இன்னபிற தவிர்த்து கொஞ்சம் பகுத்தறிவு, யதார்த்தம், குரூரத்தோடும் சிந்தித்துப் பார்த்தால், விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டதற்குக் காரணம் சகோதரப் படுகொலைகள் இல்லை; முஸ்லிம் சகோதரர்களை விரட்டியது இல்லை; அனுராதபுரத்தில் புகுந்து பொதுமக்களைக் கொன்றுபோட்டது இல்லை. இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கப் பிடிமானம், அன்புக் கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பழிவாங்கியே தீருவேன் என்ற மேன்மைமிகு சோனியாவின் பிடிவாதம், இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதம், சீனாவின் நானா நீயா போட்டி, ஈராக் போன்ற நாடுகளில் புஷ் விட்ட தவறுகளால் நல்லபிள்ளையாகக் கைகட்டிக்கொண்டிருக்க வேண்டிய அமெரிக்காவின் நிர்ப்பந்தம்… இவையெல்லாம்தான் ஈழவிடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டமைக்கான காரணங்கள். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’என்றால், முதலில் செத்துப்போயிருக்கவேண்டியது அமெரிக்காதான்.//

இதனோடு புலிகளை ஒழித்து தமிழ்தேசியவாதத்தை ஒழிக்க திட்டமிட்டு செயல்பட்ட டெல்லி வாழ் தென்னிந்திய மேற்சாதியினரை அவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு விலைபோன கலைஞரையும் காரணமாகச் சொல்லலாம்.

Anonymous said...

EXCELLENT ARTICLE TAMILNATHI, GREAT,

Anonymous said...

EXCELLENT ARTICLE TAMILNATHI, GREAT,

Deepa said...

//மேற்கண்ட ஒரே சாயலுடைய உரையாடல்களிலிருந்து தப்பித்து ஓடிவிட மனம் அவாவுகிறது. ஏனென்றால், அவை வந்துசேருமிடம் காற்றில்லாத வெளி. திசையழிந்த பனிமூட்டம்.//

உங்கள் மனவலி எழுத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது.

கையாலாகாத நிலையில் இருப்பவர்களின் (தமிழ்நாட்டில் வாழும் அனைவரையும் தான் சொல்கிறேன்) வெற்று ஆறுதல்களும் துக்கம் விசாரிப்புகளும் நாராசமாகத் தான் இருக்கக்கூடும்.

:-(

ஸ்டாலின் குரு said...

ஒருவேளை அடக்குமுறைக்கெதிராகப் பேசுவது என்பதன் பொருள் உங்கள் அளவில் ‘விடுதலைப்புலிகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான பேச்சு’என்ற புனிதக் கோட்டைத் தாண்டாததா? ///


சமகாலத்தில் முதலாளித்துவ அரசுகளும்
ஏகாதிபத்தியங்களும் நிகழ்த்திகொண்டிருக்கும்
மனித அவலங்களைப் பற்றி பேசத்துவங்கினாலே
ஸ்டாலினிச ஆட்சியின் அராஜகம் அதிகார
முறைகேடுகள் என்று ஒப்பாரிவைக்கத் துவங்கி
விடும் நம் பின்நவீனத்துவ பிதாமகர்களின் இயல்பை
அடையாளம் காட்டியிருக்கிறீர்கள்.

இடதுசாரிய இயக்கங்கள் நிகழ்த்திய அதிகார
முறைகேடுகளையும் மனித உரிமை மீறல்களையும்
சுட்டிக்காட்டுவது குறைகளை களைந்துவிட்டு
போராட்டத்தை முன்னெடுப்பதை நோக்கமாக
கொண்டிராமல் சோசலிசத்தை விட முதலாளித்துவமே
மேல் என்கிற கருத்தியலை பரப்பவே பயன்படுகின்றன

அ.மார்க்ஸ்.ஷோபாசக்தி,சுகன் போன்றவர்களின்
எழுத்துக்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும்
இந்த கருத்தே வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பெரியார்,அம்பேத்கர்,மார்க்ஸ் என்று கலர் கலராக
என்ன படம் இவர்கள் காட்டினாலும் இந்துத்துவ
பாஸிஸ்டுகளும் இவர்களும் முதலாளித்துவ
அதிகாரத்துவத்தையும்,அரசையும் காப்பாற்றுவதில்
ஒரே புள்ளியில் இணைந்துதான் நிற்கிறார்கள்
என்பதுதான் யதார்த்தமான உண்மை.

ஸ்டாலின் குரு said...

எளிமையாக சொன்னால் (முதலாளித்துவ)
அதிகாரத்துவத்துக்கு எதிரான் போராட்டங்களை
அதிகாரம் பற்றிய உரையாடல்கள் வழியே
திசைதிருப்பி யதார்த்தத்தில் நிலவும் சுரண்டல்
சமூக அமைப்பை பாதுகாப்பதை மட்டுமே
இவர்கள் எழுத்துக்களின் நோக்கமாக இருக்கிறது.

மார்க்சிய மொழியில் சொன்னால் இவர்களின்
எழுத்துக்கள் இயக்க மறுப்பியலைத்தான்
அடிப்படையாக கொண்டிருக்கின்றன.

யுவன் பிரபாகரன் said...

ஸ்டாலின் குரு

முதலில் அவர்கள் உயிர்வாழ எதாவது செய்யலாம்..
அப்புறம் அவர்கள் முதலாளியா வாழ்றாங்களா ? இல்ல தொழிலாளியா வாழ்றாங்களான்னு பார்ப்போம்.
இன்னமும் இனப்படுகொலை என்பதை மறந்துவிட்டு...மனித உரிமை மீறல் என்றே கத்தி கொண்டிருப்பவர்களை என்ன செய்ய ? அ.மார்க்ஸ்.ஷோபாசக்தி,சுகன் போன்றோர் ஒரே சங்கை தான் ஊதுகிறார்கள் ஆனா வாய் தான் வேற வேற..

Anonymous said...

//அனானி,

ஏன் நாட்டாமை சொன்னால்தான் ஆட்டுமந்தை கேட்குமா?//

இன்னமும் சந்தேகமா?
இருந்தாலும் புலி ஆதரவாளர்களை நான் கூட ஆட்டு மந்தை என உரைப்பதில்லை.

தமிழ்நதி said...

ஏன் கதிரவன் அவ்வளவு மோசமாகவா எழுதியிருக்கிறேன்:)

சிவா,

ஆம். அகதிமுகாம்கள் என்று சொல்லப்படும் வதைமுகாம்களிலிருந்து எமது மக்களை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டிய நேரம் இது. ஆனால், மஹிந்தவும் கோத்தபாயவும் 'உனக்கும் பெப்பே... உங்கப்பனுக்கும் பெப்பே'என்கிறார்களே... வலிதான் தெரிகிறதேயொழிய வழி தெரியவில்லை.

மதிபாலா,

நம்மில் அநேகர் ஒன்றேபோல சிந்திக்கிறோம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஒரு சிலர்தான் குறுக்கறுத்து ஓடுகிறார்கள்.

அனானி,

இந்த நாட்டாமை சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. நான் ஆட்டுமந்தை என்று குறிப்பிட்டது அநாமதேயத்தைத்தான். கடைசியாக வந்து

"இன்னமும் சந்தேகமா?
இருந்தாலும் புலி ஆதரவாளர்களை நான் கூட ஆட்டு மந்தை என உரைப்பதில்லை."

என்று பின்னூட்டமிட்ட அனானியும் நீங்களும் ஒருவர்தானென்பதன் அடிப்படையில் பதிலளிக்கிறேன்.

அவசரத்தில், கோபத்தில் நீங்கள் 'கூட'என்ற சொல்லை மாற்றிப் போட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்லவந்தது இதுதானே...

"இருந்தாலும் புலி ஆதரவாளர்களை நான் ஆட்டுமந்தை என்று கூட அழைப்பதில்லை"

நியாயமான காரணங்களுக்காகப் போராடுபவர்களைப் பின்தொடர்பவர்கள் ஆட்டு மந்தைகளிலும் கீழானவர்கள் என்றால், அநியாயத்தைப் பின்தொடர்பவர்களை என்னவென்பது? எனக்கும் வேண்டாம்... உங்களுக்கும் வேண்டாம்... வாத்தூ என்று வைத்துக்கொள்வோமா?

தியாகு,

விமர்சனங்களின்றி புலிகளை ஆதரிப்பது தவறு என்றுதான் நானும் சொல்கிறேன். 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளின் உயிர்த்தியாகம் அண்மைக்காலங்களில் கொச்சைப்படுத்தப்படுவதைத்தான் தாங்கமுடியவில்லை.

ஆம் சூரியா,

அவர் அரசியல்வாதியாகியிருந்தால் ஆடம்பர வாழ்க்கை கிடைத்திருக்கும். என்ன செய்வது? போராளியாகிப் 'போனாரே....'


மதிப்பிற்குரிய சித்தன்,

நடுநிலைமை என்று ஒன்று உண்மையில் உள்ளதா என்ற சந்தேகம் எனக்கு வலுத்துவருகிறது. நமது கருத்துநிலைப்பாடுகளுக்கேற்ப அங்கிங்கு சாயுந்தன்மைதான் உண்மை. அது தனிப்பட்ட வாழ்வு மற்றும் பொதுவெளிக்கும் அது பொருந்தும். ஆராயத்தக்கது.

ஆனால் இலங்கையின் இனப்பிரச்சனை விடயத்தில் எப்படி நடுநிலைமை எடுப்பது? அந்தச் சொல் அங்கே அபத்த அர்த்தம் கொள்கிறது. ஒடுக்குபவன்-ஒடுக்கப்படுபவன் (ன் தான் பழகிவிட்டது) என்ற இரண்டு தரப்புகளே உள்ளன. அல்லது கொல்பவன்-கொல்லப்படுபவன். இதில் நாம் யார் பக்கம் சார்ந்திருத்தல் நியாயம் என்பது சொல்லாமலே புரியும். யாவருக்குமான பொது நீதி ஒன்றின் அடிப்படையில் நாம் ஒடுக்கப்படுபவர்கள் பக்கம் சாய்கிறோம். ஒடுக்கப்படுபவன் மீதான விமர்சனங்களை நாம் இரண்டாம் இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமேயன்றி, ஒடுக்குபவனை முன்னிலைப்படுத்தி நியாயப்படுத்தலாகாது.

ஏனைய சமூக விடயங்களில் நடுநிலைமை காப்பதென்பதே அசாத்தியமாக இருக்கையில், அரசியலில் நடுநிலைமை என்பது என்னளவில் அபத்தம். அங்கே ஒரு நூலிழையேனும் சார்புத்தன்மை இருக்கவே இருக்கும். அது நாம் படித்த, பார்த்த, அனுபவித்த, கேட்ட கருத்துநிலைகளின் அடிப்படையில் உருவாவது.

தமிழ்நதி said...

வாங்க சந்தனமுல்லை,

உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கிறேன். பப்புவும் அமித்துவும் சுவாரசியமாக இருக்கிறார்கள்.:)

வணக்கம் பதி,

அருள் எழிலனின் கட்டுரையை நான் கீற்றுவில் படித்தேன். அதைத்தான் நீங்கள் குறிப்பிடும் இணையத்தளத்திலும் போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கீற்றுவில் யமுனா ராஜேந்திரனும் இதைப்பற்றி எழுதியிருக்கிறார். யார் எழுதி என்ன? அடங்கமாட்டாங்க போல:) (இது வேறு அடக்கம். பிறகு ஐயோ தமிழ்நதி அடங்கச்சொல்கிறார். புலியின் ஆதிக்கத்தைத் தொடரும் குணம்... அப்படி இப்படி என்று அலறுவார்கள்)

அனானி நண்பரே,

"இதனோடு புலிகளை ஒழித்து தமிழ்தேசியவாதத்தை ஒழிக்க திட்டமிட்டு செயல்பட்ட டெல்லி வாழ் தென்னிந்திய மேற்சாதியினரை அவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு விலைபோன கலைஞரையும் காரணமாகச் சொல்லலாம்."

மனசுக்குள் இருந்தது. கட்டுரை எழுதும்போது மறந்துபோயிற்று. எல்லாத் துரோகங்களும் முண்டியடித்துக்கொண்டு முன்னே வரும்போது சில பின்தள்ளப்பட்டுவிடுகின்றன.

வருகைக்கு நன்றி சுபாஷ்,

ஆதவன் பற்றிய கட்டுரை அன்றேல் மறுத்துரையிலும் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் பெண்தான்:) வேண்டுமானால் கற்பூரத்தை ஏற்றி அணைத்து சத்தியம் செய்கிறேன்:)

புரிதலுக்கு நன்றி தீபா,

வாழ்க்கை மிக மந்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனை நாள் எந்த அச்சில் சுழன்றுகொண்டிருந்தோம் என்று இப்போது புரிகிறது. அச்சு தெறித்ததும் விடுபட்டுப் பறக்கிறோம் திசையறியாமல்:(

ஸ்டாலின் குரு,

"முதலாளித்துவ)
அதிகாரத்துவத்துக்கு எதிரான் போராட்டங்களை
அதிகாரம் பற்றிய உரையாடல்கள் வழியே
திசைதிருப்பி யதார்த்தத்தில் நிலவும் சுரண்டல்
சமூக அமைப்பை பாதுகாப்பதை மட்டுமே
இவர்கள் எழுத்துக்களின் நோக்கமாக இருக்கிறது."

என்று எழுதியிருந்தீர்கள். இவர்கள் ஏகாதிபத்தியங்களுக்கெதிராகப் பேசுவதாகப் பாவனை பண்ணிக்கொண்டே ஏகாதிபத்தியங்களுக்குச் சார்பான நிலைப்பாடுகளையே கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

மற்றபடி, யுவன் பிரபாகரன் சொன்னதுதான். முதலில் அங்கிருப்பவர்கள் உயிரோடிருக்கட்டும். வர்க்கப்பிரச்சனையைக் காட்டிலும் முக்கியமானது உயிர்த்திருத்தல். முதலாளி-தொழிலாளி, இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவம், வேளாளர்-சக்கிலியர் இவையெல்லாம் பேச முதலில் உயிரோடு இருக்க வேண்டுமே..

வருகைக்கும் யதார்த்தமான கருத்துக்கும் நன்றி யுவன் பிரபாகரன்.

வினவு said...

தமிழ்ந்தி

உங்கள் உணர்ச்சியில் உண்மை இருக்கிறது. புலிகளை விமரிசிப்பவர்களில் சிங்கள கைக்கூலிகளும் உண்டு என்பதோடு நேர்மறையில் ஈழமக்களுக்காக போராடும் எங்களைப் போன்ற அமைப்புகளும் உண்டு. தற்போதைய சூழலில் சிங்கள பேரினவாத்ததின் கொடுமைகளை முன்னிருத்தாமல் புலிகளின் தவறுகளை நேருக்குநேர் வைப்பது பிழை என்றே நாங்களும் கருதுகிறோம். ஆனாலும் உங்களைப் போன்ற நண்பர்கள் முப்பதாண்டு ஈழப் போராட்டத்தின் சரி தவறை உணர்ச்சியை வென்று ஈடுபாட்டுடன் கற்கவேண்டும். அதிலிருந்துதான் எதிர்காலம் குறித்த அவசியமான கனவுகளை இன்றைய ஈழத்தின் இளந்தலைமுறைக்கு கைமாற்றி கொடுக்க முடியும். சென்னை வந்தால் தெரிவியுங்கள். சந்திப்போம்.

வினவு

அற்புதன் said...

//போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் அது ஒட்டுமொத்தத் தமிழனுக்குச் சொந்தம். வீழ்ச்சியுற்றிருப்பதால் அது பிரபாகரன் என்ற தனிமனிதனுக்கு மட்டுமே சொந்தம்’என்பது அபத்தாபத்தமாக இல்லையா? //

உறைக்க வேண்டியவர்களுக்கு உறைத்தால் சரி.உங்கள் உணர்வுகளே எனதும்.உண்மைகள் என்றும் உறங்கப் போவதில்லை.கட்டுரைக்கு நன்றிகள்.உன்னதமானவர்களை இழந்தன் வலி எதிலுமே சோர்வையே தருகிறது.தொடர்ந்து எழுதுங்கள்.

பாண்டியன் said...

தாங்கள் கேட்ட கடைசி பத்திக்கு விடையளிக்க விரும்புகிறேன்.. இதற்கெல்லாம் காரணம் தமிழினத்திற்கே உரித்தான எட்டப்ப குணம் அதாவது உங்கள் ஊர் வழக்கபடி காக்கைவன்னியர் குணம்.. எனக்கு தலைவரிடம் நான் கண்ட முழுமையான குறை யாரையும் எளிதாக நம்பிவிடுவது.. இதனால் தான் மாத்தையா முதல் கருணாவரை பட்டியல் நீளுகிறது.. தலைவர் பிரபாகரன் கடைசிவரை சர்வதேசத்தினை நம்பியிருந்தார் எனவே வெளியில் உள்ள களவாணிகள் யாரோ நம்பவைத்து கழுத்தறுத்திருக்கிறார்கள்.. இல்லையென்றால் தலைவர் இந்நேரம் கொரில்லா போராளியாக காட்டுக்குள் உலவிகொண்டு இருப்பார்.. இதில் யாரோ நம்பவைத்து கழுத்தறுத்திருக்கிறார்கள்..

இரண்டாவது தற்போது உலகை ஏமாற்றும் வழி முறை ஜன நாய் அகம், தலைவர் நாங்களும் இதை விரும்புகிறோம் என்று குறைந்த பட்சம் கிராமசபை தேர்தல்களையாவது வன்னி பகுதியில் நடத்தியிருக்கலாம்.. அதாவது சர்வதேச தலையீடு அமைதி ஒப்பந்த காலத்திலேயே! இதையெல்லாம் செய்யததால் தான் சிங்களம் பிரபாகரன் தீவிர வாதி சர்வாதிகாரி.. என்று ஓலமிட்டு திரிந்தது. குறைந்தபட்சம் வல்லரசு நாடுகளுடைய இசம் சாம்பார்களையாவது ஏற்று கொண்டிருக்கவேண்டும்..அதில் தலைவரை குற்றம் சொல்ல ஏதும் இல்லை ..எவனோ மடபயல்கள் பிறக்கும் போதே தமிழினத்திற்கு தொழிலை நிர்ணயம் செய்துவிட்டு போய்விட்டான்.. பிறகு எங்கு பாட்டாளிவர்க்கத்தினை தேடுவது .. இன ரீதியாக ஒருவன் இன்னோருவனுடன் ஒன்றுபட முடியாதே!

எல்லாம் முடிந்த்து விட்டது இனி பேசி ஒன்றும் ஆக போவது இல்லை.. இன்று ஈழதமிழர்களுக்கான் விடிவு புலம்பெயர்ந்த தமிழர்கள் கையிலே உள்ளது....நரியோடு ரூம் போட்டு பழகினாலும் பரவாயில்லை நரியைவிட இன்று ஈழதமிழனுக்கு நரிபுத்தி தேவைபடுகிறது.. தாங்கள் கூறுவது போல
சிங்களவனிடம் பணம் வாங்கி கொண்டு பலர் எழுதுவது போல சிங்களவர் சிலரைவாவது எழுதவைக்க முடியாதா? ஈழ தமிழர்கள் சுட்டு கொல்லபடும் காணோளியை வெளியிட்டதே சிங்கள படைவீரன் தான் அதை விலை கொடுத்து வாங்கியது சேனல் 4 தான் என அனைவருக்கும் தெரியும்.. இன்னும் பல கிளிப்புகள் ராணுவ வீரர்களிடம் உலவிகொண்டு உள்ளனவாம்.. யாரவது சிங்களம் கற்ற தமிழர்கள் ஒன்றிணைந்து அவற்றை மீட்டு உலகத்திடம் நீதி கேட்க வேண்டும்...

பிரம்மபுத்திரன் said...

ஆனால், அவரைக் குற்றம் சொல்ல நமக்குத் தகுதி இருக்கிறதா? வன்னியில் வதைபட்ட, வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் புல்மோட்டையிலும் அகதிமுகாம்களில் வதைபட்டுக்கொண்டிருக்கிற மக்களுக்கு அந்தத் தகுதி இருக்கிறது.//

அதைத்தான் காலச்சுவட்டிலும் அகிலனின் தளத்திலும் செய்தார்கள். ஆனால் நீங்கள் ஒரு நக்கல் பார்வையில் எழுதியிருக்கிறீர்கள் ( என நினைக்கிறேன். இல்லையெனில் மன்னிக்க..)

இருவரில் ஒருவரை நீங்கள் நன்றாக மிக மிக நன்றாக அறிவீர்கள்.

தமிழ்நதி said...

வணக்கம் அற்புதன்,

நலமா? இலண்டனிலிருந்து கிளம்பும்போது சொல்லிவிட்டு வரவில்லை. மன்னிக்கவும். 'உன்னதமானவர்களை இழந்ததன் வலி எதிலும் சோர்வையே தருகிறது'என்ற வார்த்தைகள் எங்களில் பலருக்குப் பொருந்தும். சும்மா இருக்கத்தான் நினைக்கிறேன். அது சுலபமாக இல்லை. இப்படி எதையாவது எழுதித்தான் தீர்க்கவேண்டியிருக்கிறது.

வாருங்கள் பாண்டியன்,

நீண்டநாட்களாக உங்களோடு கதைக்க வேண்டுமென்றிருந்தேன். நீங்கள் வயதில் இளையவர். உணர்ச்சி மிகுந்தவர் என்பதை உங்களது பின்னூட்டங்கள் வாயிலாக அறியமுடிகிறது. மேலும், சதிகார அதிகாரங்கள் மீது கடுமையான கோபத்தில் இருப்பவர் நீங்கள் என்பதை உங்கள் ஒவ்வொரு பின்னூட்டமும் காட்டுகிறது. பொறுமையாக இருங்கள் என்று சொல்வது இந்நேரத்தில் கேலிக்குரியதாகத் தோன்றினாலும், அதுவே இப்போதைக்கு நன்மையானது. ஏனென்றால், மூன்று இலட்சம் மக்கள் அகதிமுகாம்களுள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். தவிர, பல்லாயிரக்கணக்கானோர் சிறைக்கூடங்களுள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் அவசரப்படுவது 'கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறிவதற்கு'ஒப்பானது.

நீங்கள் சொன்னபடி தலைவர் கடைசிநேரம் வரை சர்வதேசத்தை நம்பியிருந்ததாகத்தான் சொல்கிறார்கள். வதந்திகளும் ஊகங்களும் நிறையவே உலவுகின்றன. எதை நம்புவது விடுவதென்றே தெரியவில்லை. மேலும், 'நரியோடு றூம் போட்டுக் குலவுவதை'த்தான் இனிச் செய்யவேண்டும் போலிருக்கிறது. ஆனால், நரி விழிப்போடிருக்கிறது என்று நினைக்கிறேன்:)

வினவு,

"உங்களைப் போன்ற நண்பர்கள் முப்பதாண்டு ஈழப் போராட்டத்தின் சரி தவறை உணர்ச்சியை வென்று ஈடுபாட்டுடன் கற்கவேண்டும்."

நீங்கள் சொல்வது சரி. உணர்ச்சி வெள்ளத்தினுள் மூழ்கிப்போனால் அறிவு வேலைசெய்யாது என்பது எங்களைப்போன்றவர்களுக்கும் இப்போது புரிகிறது. சரி, தவறில் எவ்வளவு சதவீதம் உண்மை இருக்கிறதென்பதை அறிய நாம் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் சிறிலங்காவின் பிரச்சார இயந்திரம் மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அதன் விளைவுகளே அளவுக்கு மீறிய அவதூறுகள்.

பிரம்மபுத்திரன்,

'அதைத்தான் காலச்சுவட்டிலும் அகிலனின் தளத்திலும் செய்தார்கள்'என்கிறீர்கள். அவற்றில் பேசப்பட்டிருக்கும் விடயங்களோடு கூட அதை எழுதியதாகச் சொல்லப்படுகிறவர்களின் உண்மைத்தன்மையிலும் சந்தேகப்படுகிறோம். அதெப்படி அவரவர் பேசிக்கொண்டிருப்பதற்கியைபுற- எவ்வாறு, அக்குறிப்பிட்ட நபர்களுக்கே அத்தன்மையுடைய கட்டுரைகள் கிடைக்கின்றன என்பது கூடுதல் வியப்பளிக்கிறது. மேலும், இலங்கை அரசாங்கத்தின் புலியெதிர்ப்புப் பிரச்சாரப் பீரங்கி தறப்பாழின் கீழிருந்து நெருப்புக் கக்காதென்று எப்படிச் சொல்ல முடியும்?

நானும் சந்தேகங்களின் அடிப்படையில்தான் கதைக்கிறேன். மலிஞ்சால் எல்லாம் ஒருநாள் சந்தைக்கு வந்துதானே ஆகவேண்டும். அதுவரை காத்திருப்போம். நான் சொல்வதில், என் சந்தேகத்தில் தவறு இருக்கலாம்.

"இருவரில் ஒருவரை நீங்கள் மிக மிக நன்றாக அறிவீர்கள்"

என்று எழுதியிருந்தீர்கள். 'அறிவேன்'என்பதைக் காட்டிலும் 'அறிந்தேன்'என்று சொல்வதே இவ்விடத்தில் பொருத்தமாக இருக்கும்:)

சாந்தி நேசக்கரம் said...

//தலைவர் பிரபாகரன் இழைத்த ஒரே தவறு, வாழ்விலும் மரணத்திலும் சமரசம் செய்துகொள்ளாததுதான். //

சத்தியம் மிக்க வார்த்தைகள் தோழி.

பக்கத்தில் இருந்து பாட்டுப்பாடியவர்கள் இப்போ பெயர் ஒளித்து பிரபாகரன் கொலைகாரன் என்கிறார்கள். இவர்களை நம்பி நாசம் போன அந்தத்தலைவனை இழந்தது தமிழினம்.

பிழைப்புக்காக புலிவாழ்ந்த போது புலிப்புராணம் பாடினார்கள். புலி இல்லாது போனபோது பிரபாகரன் மீது பழிபோடுகிறார்கள்.
சாந்தி

பிரம்மபுத்திரன் said...

அதெப்படி அவரவர் பேசிக்கொண்டிருப்பதற்கியைபுற- எவ்வாறு, அக்குறிப்பிட்ட நபர்களுக்கே அத்தன்மையுடைய கட்டுரைகள் கிடைக்கின்றன என்பது கூடுதல் வியப்பளிக்கிறது. மேலும், இலங்கை அரசாங்கத்தின் புலியெதிர்ப்புப் பிரச்சாரப் பீரங்கி தறப்பாழின் கீழிருந்து நெருப்புக் கக்காதென்று எப்படிச் சொல்ல முடியும்?//

தனக்கு ஆதரவா எதிர்ப்பா கூட பார்க்காமல் சிங்களம் இன்னும் யாராவது தமிழர் எழுதுகிறார் என்றாலே பிடித்துக்கொண்டு போய்விடுகிற கறுப்பு அரசியலையே செய்து கொண்டிருப்பதால் -பெயர்களை தவிர்த்துவிடுகிறேன்.

யாழ்ப்பாண முகாம்களில் இருந்த 5000 மக்களில் கிட்டத்தட்ட 3000 பேர் வீடுகளுக்குப் போய்விட்டார்கள் என்பதை எங்கள் பிரசாரம் கருதி மறைத்துவிட்டோம். டக்ளஸ் தனது தேர்தலுக்காக - அதனைச் செய்தார் என்பதே மெய். ஆனால் கக்கூசுக்கும் சாப்பாட்டுக்கும் வரிசையில் நின்ற சனங்களுக்கு வெளிச்செல்வதுதான் முக்கியம். யாரேனும் டக்ளசைப்பார்த்து நீ தேர்தல் நோக்கம் கருதி என்னை விடுவிப்பதால் நான் வெளியேற மாட்டேன் எனச் சொல்லப்போவதில்லை. சொல்லும் நிலையிலும் இல்லை.

------------ ----------போன்றோரும் வெளியேறி விட்டார்கள். அண்மையில் ஒரு மூத்தவர் கட்டுரை எழுதியதால்தான் அவர்கள் போனார்கள் என்றார். சரி.. அப்படியானால் மிகுதி 3000 பேரும் எழுதிய கட்டுரைகள் எங்கே எனத்தேடுகிறேன்.

மற்றும்படி உங்கள் சந்தேகத்தை புரியமுடிகிறது. தமிழ்நதியென்கிறவர் கடைசி வரை முள்ளிவாய்க்காலில் நின்று விட்டு முகாம்களில் இருந்துகொண்டு கடைசியில் புலிகள் மிலேச்சத்தனமாக மக்களோடு நடந்துவிட்டார்கள் என சொன்னால் கூட.. அதனைச் சந்தேகப்பட இன்னொரு தமிழ்நதி கனடாவிலோ லண்டனிலோ சென்னையிலோ இருக்கத்தான் செய்வார்கள்.

கொஞ்சம் அதீத கற்பனையாக இருக்கலாம். உண்மையில் அப்படி நடக்கவில்லையென்பதற்காக ஆசுவாசப்படுகிறேன். என்னவென்றால் பிரபாகரன் ஏதோ ஒருமுடிவில் ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு சரணடைந்து ஆம்.. தற்போதைய உலக ஒழுங்கில் ஆயுதப்போர் சரியானதல்ல என்றொரு ஸ்டேட்மென்ட் விட்டிருந்தால் அதனையும் சந்தேகத்தோடுதான் பார்த்திருப்பீர்கள் அல்லவா..? அதுவும் சிங்களத்திடம் விலைபோன கதையாக உங்களுக்கு இருந்திருக்குமல்லவா..? நல்லவேளையாக அந்தக் கீழ்நிலையிலிருந்து அவர் தப்பித்தார் :(

யாழ்ப்பாணத்திற்கு தொலைபேசி வேலைசெய்கிறது என்பதை மட்டும் சொல்லி விடைபெறுகிறேன்.

இன்னுமொன்று சொல்ல இருக்கிறது. சோற்றை விட சுதந்திரம் முக்கியம் எனச் சொல்கிற எல்லாருமே தங்களது சோற்றுக்கு நிரந்தரமான வழியொன்றை ஏற்படுத்தி விட்டிருக்கிறார்கள்.

தமிழ்நதி said...

சாந்தி,

நீங்கள் குறிப்பிடுகிற ஆட்கள் யாரென்பதை என்னால் உணரமுடிகிறது. எழுதும் சாயலிலிருந்து ஊகிக்கப்பார்க்கிறோம். ஆனால், ஊகங்கள் எல்லாம் உண்மைகளாக இருக்குமென்பதில்லை. தெரியவில்லை... எல்லாவற்றின் மீதும் பெரிய கறுப்புத் திரையாகத் தொங்குகிறது.

பிரம்மபுத்திரன்,

ஆம் இன்றைய சூழலில் எல்லாவற்றையும் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. முன்பு மாத்தையா,இன்று கே.பி.யைச் சந்தேகப்படுகிறவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். சந்தேகிப்பதும் நம்புவதும்கூட அவரவர் உரிமைதான் இல்லையா?

ஆனால், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்று ஒரு சிலர் உண்டு. அவர்களுள் தலைவர் பிரபாகரன் முதன்மையானவர். பூமி உருண்டையானது என்பதுபோல நிறுவப்பட்ட விடயம் பிரபாகரன் இனத்திற்குத் துரோகம் இழைக்கமாட்டார் என்பது. தோற்பது துரோகத்தில் சேர்த்தியில்லை.

நான் யதார்த்தமான ஆள்தான்... சோறு இருந்தால்தான் சுதந்திரம். உணர்ச்சிவசப்பட்டு உண்ணாவிரதமிருந்தெல்லாம் செத்துப்போகிற ஆள் இல்லை. நன்றாகச் சாப்பிட்டுவிட்டுத்தான் எழுதுகிறேன். நன்றி.

யுவன் பிரபாகரன் said...

இன்னுமொன்று சொல்ல இருக்கிறது. சோற்றை விட சுதந்திரம் முக்கியம் எனச் சொல்கிற எல்லாருமே தங்களது சோற்றுக்கு நிரந்தரமான வழியொன்றை ஏற்படுத்தி விட்டிருக்கிறார்கள். /////

நன்பர் பிரம்ம புத்திரனுக்கு,


உயிரை விட தமிழின சுதந்திரம் முக்கியம் என்று எனச் சொல்கிற போராளிகள் எல்லாரும் தங்களது தமிழின சுதந்திரத்திற்கு நிரந்தரமான வழியொன்றை ஏற்படுத்தி தர உயிரை தான் விட்டிருக்கிறார்கள்.

யுவன் பிரபாகரன் said...

பக்கத்தில் இருந்து பாட்டுப்பாடியவர்கள் இப்போ பெயர் ஒளித்து பிரபாகரன் கொலைகாரன் என்கிறார்கள். இவர்களை நம்பி நாசம் போன அந்தத்தலைவனை இழந்தது தமிழினம். /////////



நோ டென்சன் முல்லை மண் அவர்களே....பிரபாகரன் என்ன ஹீரோவா இல்லை தமிழீழ சண்டை என்ன சினிமாவா ? ஹீரோ செத்தா படம் முடிய...முன்பு “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” என்று இருந்தது இப்போது தான் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்று மாறியுள்ளது..இனி நாம் தான் அத்தாகத்தை தணிக்க வேண்டும், முன்னெடுத்து செல்வோமே..

Ragztar said...

இப்போது கூட யோசிக்க மட்டும் மாட்டோம்; வெறும் உணர்வை மட்டுமே வெளிப்படுத்தொவோம் என்றால் என்ன நியாயம்? உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் எல்லாம் புளித்தவை, சலித்தவைதானா? ஏன் நாம் நடுநிலையோடு ஒரு பிரச்சினையை அணுக முடிவதில்லை? "புழுவுக்கும் அருகதை இல்லை" போன்ற சொற்றொடர்களின் அபத்தத்தை அறிந்துதான் எழுதுகிறீர்களா?

சரி, இது ஒன்றும் புதிதல்ல

Ragztar said...

இலங்கையில் இப்போது தேவை போர்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான பொது விசாரணை; இருபத்தோராம் நூற்றாண்டின் மிகபெரிய இனப்படுகொலை இது. அது போன்ற விஷயங்களை முடுக்கிவிடும் காரியங்கள் எங்கேனும் குன்னுக்குத்தேரிகிறதா தமிழ்நதி? சோகம்!

தமிழ்நதி said...

ஆம் அறிந்துதான் எழுதுகிறேன் ஓவியன். ஏனென்றால் புழுக்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் தெரிந்திருக்கிறது.

"சரி இது ஒன்றும் புதிதில்லை"

ஆக, நீங்கள் என்னைப்பற்றிய முன்முடிவோடுதான் இந்த வலைப்பூவுக்கு வந்திருக்கிறீர்கள். உங்களை மீள்வாசிப்பு செய்துகொண்டு திரும்பிவாருங்கள். நானும் என்னை மீள்வாசிப்பு செய்துகொண்டுதானிருக்கிறேன். உணர்ச்சிகளின் வழியாக மட்டும் நான் பேசவில்லை.

"இலங்கையில் இப்போது தேவை போர்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான பொது விசாரணை"

அதையுந்தான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒரு கட்டுரையை மட்டும் வைத்து ஏன் நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறீர்கள்? முழுவதும் படியுங்கள். ஒரு தரப்பின் நியாயப்பாட்டை மழுங்கடிக்கும், மறைக்கும் செயல்களைக் கண்டிக்க வேண்டியதும் நமது கடமையல்லவா? அறிவில் அவசரம் கூடாது.

kalyani said...

அவர்கள் போராடிக்கொண்டிருந்தபோது நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம்? தனிப்பட்ட வாழ்வில் மூழ்கிக் கிடந்தோம். வயிறு புடைக்க உணவருந்தினோம். குடித்தோம். படம் பார்த்தோம். நண்பர்களோடு சுற்றுலா போனோம். படுத்து பிள்ளை பெற்றுக்கொண்டோம். காதலித்தோம். உழைத்துச் சேமித்தோம். மேடைகளில் கவிதை வாசித்தோம். கைதட்டல்களை அள்ளிக்கொண்டோம். எப்போதாவது எதையாவது எழுதிக் கிழித்து ‘ஐயகோ நம்மினம் அழிகிறதே’என்று ஒப்பாரி பாடினோம். ஏதேதோ வழிகளில் நம் அடையாளங்களைப் பெருக்கப் பிரயத்தனப்பட்டோம். இன்று கூசாமல் குற்றம் சொல்கிறோம்.அவளவு வரிகளும் உண்மை.. நாம் செய்த பிழைகளை மறைப்பதற்கு அடுத்தவர் மீது பழியை போடுவது இயல்புதானே. .நாமாகட்டும் (புலம்பெயர் மக்கள் ),முகாமில் வாடும் மக்களாகட்டும்,கைதாகிய போராளிகளாகட்டும்,இவர்களுக்காக வேண்டாம் .விடுதலைத்தீயை நெஞ்சில் சுமந்து வித்தாகிப்போன மாவீரர்களுக்காக ,,சத்தியமும் தர்மமும் ஒருநாள் வென்றே தீரும்.

Ragztar said...

இது நாம் நிறைய பேச வேண்டிய ஒன்று

//ஆக, நீங்கள் என்னைப்பற்றிய முன்முடிவோடுதான் இந்த வலைப்பூவுக்கு வந்திருக்கிறீர்கள்.//

அப்படி நீங்கள் நினைக்கும்படி நான் ஏதேனும் எழதி இருந்தால் அது என்னையும் அறியாமல் நடந்ததாக இருக்கும் (மன்னிக்கவும்). மும் முடிவு ஏதும் இல்லை.

//கட்டுரையை மட்டும் வைத்து ஏன் நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறீர்கள்? //

சிக்கலே இங்குதான்; நான் உணர்ச்சி வசப்படுவதை நீங்கள் புரிந்து கொள்வது;

நட்புடன்,
ஓவியன்

Ragztar said...

ஒரு திருத்தம் "நான் உணர்ச்சி வசப்படுவதாக நீங்கள் புரிந்து கொள்வது"

உணர்வுப்பிழம்பாய் மட்டுமே இருப்பது நானா?

Ragztar said...

//அவர் ஒரு போராளி.. அரசியல்வாதி அல்ல..//

butterfly Surya!, அரசியல் இல்லாத போரில்லை என்பது வரலாற்று உண்மை

தமிழ்நதி said...

கல்யாணி,

நீண்டநாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். வேலை அதிகமா?

சத்தியமும் தர்மமும் வெல்லும் என்கிறீர்களா? இத்தனை விலை கொடுத்தபிறகு அதில் நம்பிக்கை போய்விட்டது. அதிகாரந்தான் வெல்லும். பணமும் பலமும் தந்திரமும் எல்லாமும் வெல்லும். அறம்? அது செத்துப்போய்விட்டது.

ஓவியன்,

மன்னிப்பெல்லாம் எதற்கு?

'முன்முடிவு'என்பது உங்களுக்கான பதில் மட்டுமில்லை. தமிழ்நதி என்றால் இப்படித்தான் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏன் ஒருவரை ஒரு சட்டகத்துள் அடைக்கிறீர்கள் என்பதே என் கேள்வி. புலிகள் மீது எங்களைப் போன்றவர்களுக்கும் விமர்சனங்கள் உண்டு. அதனைவிடக் கடுமையான விமர்சனம் அராஜக, பேரினவாத, ஆதிக்கவெறியோடு நடந்துகொள்ளும் அரசாங்கத்தின் மீது உண்டு. எங்கள் விடுதலைக்காகப் போராடி மடிந்தார்கள் என்பதனால் புலிகள்மீது அபிமானம் இருக்கிறது. அன்பும் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் எம்மவர்கள்... அவர்பக்கம் சாய்தல் இயல்பேயன்றோ? இந்த அளவு இந்த நீளம் என்று அளக்க முடியுமா மனத்தின் சார்புநிலையை... குழப்புகிறேனா? நானும் குழம்பியிருக்கிறேன் போல...

குழம்ப வாய்ப்பளித்தமைக்கு நன்றி ஓவியன்:)

Ragztar said...

//அவர்பக்கம் சாய்தல் இயல்பேயன்றோ// இதைத்தான் முற்சாய்வு என்கிறேன்

//'முன்முடிவு'என்பது உங்களுக்கான பதில் மட்டுமில்லை. தமிழ்நதி என்றால் இப்படித்தான் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏன் ஒருவரை ஒரு சட்டகத்துள் அடைக்கிறீர்கள் என்பதே என் கேள்வி.//

புரிந்து கொள்கிறேன்; மும் முடிவு எந்த வடிவத்திலிருந்தாலும் தவறு.

//ஏனென்றால் அவர்கள் எம்மவர்கள்..//

அதனால்தான் அவர்கள்பால் விமர்சங்களை வைக்க வேண்டி இருக்கிறது; அடுத்த வீட்டுக்காரனைப் பற்றி நமக்குத் தெரியுமே?

தமிழ்நதி said...

அது 'முற்சார்பு'இல்லை ஓவியன்; இனச்சார்பு. நாம் நாடு, மொழி, இனம் கடந்தவர்கள், துறந்தவர்கள் என்று சொல்லிவிடமுடியுமா? பக்கத்து வீடு உடைந்துபோனால் வலிக்கிற வலியை விட நம் வீடு உடைந்துபோனால் வலிக்கிற வலி பெரிது. அது யதார்த்தம். புலிகள் மீது நான் விமர்சனங்கள் அற்ற பக்தி கொண்டிருந்தது ஒரு காலம். இப்போது விமர்சனங்களோடு கூடிய பற்றுத்தான். ஆனால், அவர்களை ஒருபோதும் தூற்றேன். இழிவுசெய்யேன். அவர்கள் எனக்கும் சேர்த்துத்தான் இரத்தம் சிந்தினார்கள். இல்லாமல் போனார்கள்.

இப்போது இலங்கை அரசாங்கம், புலத்துப் புலியெதிர்ப்பாளர்கள் கருத்தின்பிடி புலிகள் களத்தில் இல்லை. அவர்கள்மீது விமர்சனம் வைப்பதைக் காட்டிலும் நமக்கு வேறு வேலைகள் உண்டு.

யுவன் பிரபாகரன் said...

////ஏன் நாம் நடுநிலையோடு ஒரு பிரச்சினையை அணுக முடிவதில்லை? ////

ஓவியன்,

நடுநிலையோடு அணுகுவது என்றால்...

இந்தியா, சீனா, போன்றவை தாங்கள் நடுநிலையோடு அணுகுகிறோம் என்பதை போலா ?

இரவி சங்கர் said...

என்று மார்கீசியம், மிதாவாதம், மதம், சாதி, அரசியல் பேசும் தமிழர்கள் அதையெல்லாம் விட்டுத் தொலைத்தது ஒற்றுமையுடன் குரல் கொடுக்கிறார்களோ அன்றுதான் விடியல்.

தேசியத் தலைவர் அவர் கடமையை செய்துவிட்டார் நாம் நமது கடமையை செய்வோம்.

அவர் என்றுமே என்னைப் போன்றவர்களுக்கு ஒரு கடவுள்தான் வாழ்விலும் சரி சாவிலும் சரி.

Anonymous said...

Tamilnathy,

Ungal Aathangam, Kopam ellam 100% Sariyaanathe!!!

Tamilnadu, Pulam Peyar Tamilargal, Srilanka Tamils, 3 Lacs Vanni Tamils ellam thandithan Army Reached Prabhakaran. Vetkapada vendiya ontru!

Ivarkal Aanaivarukkum poraadiya oru manithanai inru Vimarisippavarkal, Why can't you raise a voice against Indian Govt & Srilankan Govt?

Markshiam, Punnakku iyam ellam onru nadanthavatrukku vimosanam tharapovathillai. Polappu illathavarkalin Vetru vathangal than.

India'vai innum nampaatheergal. Pothum. Kaiyalagatha Indian'ai ithai solkiren!

Puligalin Thiyagathai mattum munneduthu sellungal! Vimarsana yokkiyarkale, konjam othunki pongal. Illavu veetile ooppari vaikkum pothu kooda intha Arivaalikalin vimarsanam aruvaruppaga irukirathu!!!

Mannikkavum, Tamilil type seiya mudiyavillai.

K.P.Suresh

சின்னப்பயல் said...

//நான் யதார்த்தமான ஆள்தான்... சோறு இருந்தால்தான் சுதந்திரம். உணர்ச்சிவசப்பட்டு உண்ணாவிரதமிருந்தெல்லாம் செத்துப்போகிற ஆள் இல்லை. நன்றாகச் சாப்பிட்டுவிட்டுத்தான் எழுதுகிறேன். நன்றி.//

(தமிழ்)நதி இறங்கி வருகிறதா?

Gopi said...

தமிழ்நதி,

உங்களுடைய பதிவிற்கு பின்னூட்டம் எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றியது. விடுதலைப்புலிகள் இயக்கமும், தலைவர் பிரபாகரனும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இப்போது எழும் விமர்சனங்கள அரைவேக்காட்டுத்தனமானவை மட்டுமல்ல, உள்நோக்கம் கொண்டவையும் ஆகும்.

விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதாகவும் ஈழத்தமிழ் மக்களின் அடுத்த நிலைப்போராட்டத்தை முன்னெடுக்க உதவுபவையாகவும் இருந்தால், அது எத்தகைய விமர்சனமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலானவை, சிங்கள பேரினவாதத்திற்கு தெரிந்தும்,தெரியாமலும் துணை போகின்றவையாகவே முன்வைக்கப்படுகின்றன.

அமைப்பு ரீதியாக சனநாயக முறையை கைக்கொள்ளாதவர்கள் எல்லாம், எதுவித தயக்குமில்லாமல், விடுதலைப்புலிகள் சனநாயக மறுப்பில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டுமா என்பதில் எனக்கு குழப்பமிருக்கிறது. இருப்பினும் உங்களைப் போல் தர்கரீதியாக பதிலளிப்பவர்களையிட்டு திருப்தியடைகிறேன்.

வாழ்த்துகள்
கோபி

பாண்டியன் said...

தாங்கள் கூறியபடி நான் இளையவனாக இருந்தாலும்..சில அறிவுரைகளை நான் உணர்ச்சிவயபடாமல் கூறவேண்டி இருக்கிறது..
16 பேருக்கு மேல் தீக்குளித்தும்..மனிதசங்கிலி உண்ணாவிரதம் என தொடர்ச்சியாக பல வழிமுறைகளை செய்து பார்த்தும் புதுடெல்லி ஏகாதிபத்தியம் ஒர் மயிற்றையும் நமக்காக புடுங்கவில்லை காரணம் ஆரிய திராவிட கலாச்சார ரீதியான ஒரு ஏளனம் அதை இயக்கும் வட நாட்டான்கள் தமிழர்கள் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் விலைபோவார்கள் என மிகச்சரியாக கணித்தது தான்..

குறுக்குசால் ஓட்டுவது என்பார்களே அதில் நம்மவர்கள் கைதேர்ந்தவர்கள் என மிகச்சரியாக புரிந்து வைத்தான் நம்மவர்களும் அவர்களுடைய நம்பிக்கை பொய்யாக கூடாதே என்பதற்காக 9 காங்கிரசு சீட்டுகளை வாரி வழங்கிய வள்ளல்கள் அல்லவா?
அப்படி தேர்ந்தடுத்த காங்கிரசு களவாணிகளும் ஒழுங்காக நம் இனத்தின் குரலை உயர்த்தி பிடித்தார்களா? இல்லையே! அல்லது இந்த துப்பு கெட்ட அரசியல் வியாதிகள் வெளியுறவு துறை அமைச்சர் பதவியை கேட்டு வாங்கினார்களா?நம் சொந்த இனத்தின் அப்துல் கலாமையே இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்காமல் விட்டவர்கள் அல்லவா இந்த அரசியல் வியாதிகள்?இவர்களை சொல்லி குற்றமில்லை வயிற்று வலியும் வேதனையும் அவனவனுக்கு வந்தால் தான் தெரியும்..
இவர்களுக்கு தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை
ஏற்படுகின்றன.. புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்!இவர்களுக்கு தமிழினத்தை காப்பதெற்கேன்று தனி கொள்கை எதுவும் இல்லை!இவர்கள் தமிழினத்தை காப்பார்கள் என அப்பாவித் தமிழர்கள் நம்பி நம்பி ஏமாந்துவிடக்கூடாது.
போராட்டம் செய்வதும் சாலைமறியல் செய்வதும் உண்ணாவிரதம் இருப்பதும் மெண்டல்களுக்கான ஒருவழிமுறையே இதை இந்த இந்தி தேசம் நமக்கு புரியவைத்து விட்டது.. உண்மையான தமிழ் உணர்வாளர்கள் இனி என்ன செய்யவேண்டும்? நம்மில் எத்தனை பேருக்கு (IFS)- INDIAN FOREIGN SERVICE EXAM என்ற ஒரு படிப்பு இருக்கிறது என தெரியும்.. மேலும் படிக்க
http://siruthai.wordpress.com/2009/06/01/எதிர்காலத்தில்-உலகத்தமி/

விஷ்ணுபுரம் சரவணன் said...

தோழமைமிக்க தமிழ்நதி..

வணக்கம்.

ஈழத்தின் போர் உச்சகட்டமாக நடந்துகொண்டிருந்தபோதும் அந்த இறுதிநாட்களின் போதும் எவ்வித‌மான‌ குர‌லும் எழுப்பாம‌ல் இப்போது ஆருட‌ம் சொல்லுவ‌து அவ‌ர்க‌ளுக்கு கைவ‌ந்த‌ க‌லைதானே..
ந‌டுநிலை என்ப‌து ஒருவித‌ மாயைதான் எங்கு ஒடுக்குமுறை நிக‌ழ்கிற‌தோ அத‌ற்கு ஆத‌ர‌வான‌ குர‌லே ச‌ரியான‌த‌ல்ல‌வா.. அந்த‌ இட‌த்தில் ந‌டுநிலை என்ப‌தே ஒடுக்குப‌வ‌னின் குர‌ல்தான்..

ஈழ‌ம் என்ப‌து சில‌ருக்கு தேர்த‌லோடு முடிந்துவிட்ட‌து. சில‌ருக்கு அடுத்த‌ தேர்த‌லி வ‌ரை நீட்டிக்க‌லமா என‌ திட்ட‌த்தோடும்... சில‌ர் இத‌ற்கு முன்னான‌ த‌ன‌து நிலைபாட்டிற்கு குந்த‌க‌ம் ஏற்ப‌ட்டிராதிருக்க‌ சில‌ அறிவிப்பு + போராட்ட‌முனைப்புக‌ள்.. என‌ ஓட்டிகொண்டிருக்கின்ற‌ன‌ர். இளைஞ‌ர்க‌ளின் ஈழ‌ உண‌ர்வை ச‌ரியான‌ திசைவ‌ழி ந‌ட‌த்த‌ ஆள‌ற்று கிட‌க்கிற‌து.

தேர்த‌கல் கூட்ட‌ணி போல‌ இல‌க்கிய‌ உல‌கிலும் புதுபுதுகூட்ட‌ணிக‌ள் உருவாகிவ‌ருகின்ற‌ன‌.
க‌ட்சிக‌ளுக்கு முத‌ல்வ்ர் உள்ளிட்ட‌ ப‌த‌வி என்றால் இல‌க்கிய‌கூட்ட‌ணிக்கு குருபீட‌ம், ஆருட‌ச்ச‌க்க‌ர‌வ‌ர்த்தி பொறுப்புக‌ளுக்கு அடித‌டியாக‌ இருக்கிற‌து.

புலி முக‌வ்ர் என‌ எழுதும்போது சிக்காத‌ பேனா சிங்க‌ள‌முக‌வ‌ர் என‌ எழுதும் பேனா மீது வ‌ன்ம‌ம் துப்புவ‌து பார்க்கையில் வெளிப்ப‌டையாக‌ தெரிகிற‌து..அப்ப‌ன் குதிருக்குள் இல்லை என்று..


விஷ்ணுபுர‌ம் ச‌ர‌வ‌ண‌ன்

சுரேகா.. said...

//பிரபாகரன்’என்ற மனிதரின் தனிப்பட்ட-பொது வாழ்வின் தூய்மை, நேர்மை குறித்துப் பேசுவதற்கு இங்கு எந்தப் புழுவுக்கும் அருகதை கிடையாது//

//ஆனால், அவரைக் குற்றம் சொல்ல நமக்குத் தகுதி இருக்கிறதா? வன்னியில் வதைபட்ட, வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் புல்மோட்டையிலும் அகதிமுகாம்களில் வதைபட்டுக்கொண்டிருக்கிற மக்களுக்கு அந்தத் தகுதி இருக்கிறது.//

இரண்டுமே உண்மைகள்!

ஆனால் முகாமில் உள்ளவர்கள் கூட
தலைவனை இழந்த சோகத்தில் இருப்பார்களே ஒழிய
அவனை குறை சொல்ல மாட்டார்கள்!

காலத்தைவிட யார் சொல்லமுடியும்
பதில்களை !
ஆனால் என்ன தாமதமான நீதி ...மறுக்கப்பட்டதுதான்!
:(

குசும்பன் said...

//தலைவர் பிரபாகரன் இழைத்த ஒரே தவறு, வாழ்விலும் மரணத்திலும் சமரசம் செய்துகொள்ளாததுதான்.//

இப்படிப்பட்ட ஒருவரை எப்படிதான் குறை சொல்ல மனது வருகிறதோ சிலருக்கு.:(

ஈழ முத்துக்குமரன் said...

தெளிவாக உணர்வுகளை வார்த்தைகளாக்கியிருக்கிறீர்கள் தமிழ்நதி,எங்களை போல எழுதத் தெரியாதவர்கள் உணர்ச்சியை வெளிப்படுத்த இயலாமல் குமுறிக் கொண்டிருக்கும் பொழுது அவற்றை உங்கள் வார்த்தை வெளிப்பாட்டில் கண்டு மகிழ்கிறோம். நீங்கள் என்ன நினைப்பினும் இவ்விடத்தில் கூற வேண்டிய விடயம் ஒன்றிருக்கிறது, புலியெதிர்பிலும், தேசிய தலைவரை அவதூறும், எள்ளல் ஏளனம் செய்வதிலும், சோபா சக்தி, அ.மார்க்ஸ், சுகன் இவர்களோடு வினவு சார்ந்திருக்கும் ம.க.இ.கவுக்கும் வேறுபாடே கிடையாது. இருப்பினும் "நான் ரொம்ப நல்ல பாம்பு..." என்ற ரீதியில் இங்கு வந்து ஒரு பின்னூட்டத்தை போட்டு ஆள் பிடிக்க வந்திருக்கிறார் திருவாளர் வினவு. தேசிய தலைவரின் மரணம் குறித்து இருவேறு கருத்துக்கள் எழுந்து அவற்றை குறித்து விவாதம் நடந்து கொன்டிருந்த வேலையிலேயே எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் தம்முடைய மன அரிப்பை தீர்த்துக் கொள்ளும் விதமாக 'புலித்தலைமை படுகொலை'என அவசரம் அவசரமாக எழுதியது ம.க.இ.கவின் புதிய ஜனநாயகம், அத்தோடு மட்டுமில்லாமல் அக்கட்டுரையில் புலி ஆதரவாளர்களை புலிகளின் விசுவாசிகளென்றும், தேசிய தலைவரை அரசியல் தெரியாத மூடரென்றும் எழுதியிருந்தது புதிய ஜனநாயகம். தலைவர் கொல்லப்பட்டது யாருடைய துரோகத்தால் என்று தெரிந்து கொள்ளும் உரிமை தமிழ்மக்களுக்கு உண்டு என்று மறைமுகமாக தலைவரின் மரணத்தை ஏற்றுக் கொள்ளூங்கள் என்றும் அந்த கட்டுரை கோரியது. இருக்கட்டும், இப்படி அரசியல் களத்தில் நஞ்சை கக்கித்திரியும் இந்த கும்பல், இப்போடு புலிகளுக்கு ஆதரவாக இணையத்தில் எழுதும் எழுத்தாற்றல் கொண்டவர்களை தம் பக்கம் இழுப்பதிலும், அவர்களை மெல்ல மெல்ல புலியெதிர்ப்பு அரசியல் (அ) தமிழ்தேசிய வெறுப்பு அரசியலின் பக்கம் வெண்றெடுப்பதிலும் திட்டமிட்டு இறங்கியிருக்கிறது. அதன் ஒரு வெளிப்பாடாகவே ரதி என்னும் புலிகளின் ஆதரவாளரை தம்முடைய தளத்தில் எழுதுவதற்கு தளம் அமைத்து கொடுத்திருக்கின்றனர். இதன் மூலமாக புலி ஆதவாளர்களை தம் அரசியலின்(புலியெதிர்ப்பு, தமிழ் தேசிய வெறுப்பு) பக்கம் வெண்றெடுக்கலாம் என்பது வினவு, ம.க.இ.க கும்பலின் திட்டம். இந்த கும்பலை பொறுத்த வரை எல்லாவிதமான போராட்டங்களும்,எழுத்துக்களும் ஆள்பிடிப்பது என்ற நோக்கத்தோடேயே நடத்தப்படுகின்றன. கரும்புலி முத்துக்குமரனின் இறுதி ஊர்வலத்தில் கூட இவர்கள் ஆள் பிடிக்கும் நோக்கத்தோடுதான் கலந்து கொண்டார்கள். நிற்க, வினவு கும்பலிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

dominic said...

தோழி - ஈழ முத்து குமாரின் - வரிகளை வழி மொழிகிரன். குறிப்பாக இறுதி வரிகள். எச்சரிக்கையாய் இருங்கள் அவர்களிடத்தில்.

தொடரட்டும் உங்கள் எழுத்து பணி. எழுத தெரியாமல் - கொதிக்கும் உணர்வுகளோடு உலாவும் எங்களின் அறுதல் நீங்கள்.
நன்றி.

Anonymous said...

தமிழ்நதி,
கட்டுரை படித்தபோது என் இதயம் விம்முவதை உணர்தேன். தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று செய்தி வந்த பொது நான் எழுதியதை இங்கு இணைக்கிறேன்.

http://thalaiyari.wordpress.com/who-killed-prabhakaran/

சிவா said...

சகோதரி,
ஆனையிறவு முகாம் கைப்பற்றப்பட்டபோது, புளகாங்கிதமடைந்தவர்கள் நாங்கள்தான். ‘ஈழத்தமிழர்களது போராட்டத்தால் தமிழினத்தை உலகமே அறிந்திருக்கிறது’என்றபோது பெருமிதத்தோடு பல்லிளித்தவர்களும் நாங்கள்தான். ‘விடுதலைப்புலிகள் கட்டுப்பாடும் வீரமும் நிறைந்த கெரில்லா வீரர்கள்’என்று மேற்கத்தேயம் வர்ணித்தபோது நம்மில் யாருமே புளகாங்கிதமடையவில்லை என்று நெஞ்சில் கைவைத்துச் சொல்லமுடியுமா? வெற்றிகளின்போது புல்லரித்ததெல்லாம், இப்போது செல்லரித்துப்போய்விட்டதா?
-- மிக சரியாக சொல்லப்பட்டிருக்கிறது.-தமிழனே புரிந்துகொள்

விடுதலைப் புலிகள் எதேச்சாதிகாரத்தோடு இயங்கியதை, சக போராளிக்குழுக்களைக் கொன்றுபோட்டதை, முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியதை, உலக ஒழுங்கைப் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் சரியான முடிவுகளைத் தேராததை வேண்டுமானால் தவறென்று சொல்லலாம். ஆனால், போராட்டம் முன்னெடுக்கப்பட்டதன் நோக்கம் தவறில்லை
-- போர் என்றால் என்னவென்பதை அறியாதவர்களால் எப்படி புரிந்துகொள்ள முடியும்?--

நான் இந்தியன் மற்றும் தமிழன். ஈழத்தில் நடந்தவைகளை சிலவற்றையே அறிவேன். எனவே ஓரிரு படைப்புகளை படித்துவிட்டு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நடந்து முடிந்தது ஒரு சகாப்தம்.குற்றங்கள் பல புறியப்பட்டன என்பது தான் உண்மை. என்ன நடந்ததது என்பதை சரித்திரமாக, அழிக்க முடியாத ஆதாரங்களை திரட்டி அவைகளை புத்தகமாகவும் இணைய தளத்தில் படிவமாகவும் வைக்கவேண்டும்
இதை பலர் செய்திருக்கலாம் இல்லை செய்து கொண்டிருக்கலாம். இனி செய்யவேண்டியதென்ன? என் கருத்துக்கள் வாசிப்பவர்களுக்கு வித்தியாசமானதாக இருக்கலாம் இல்லை எள்ளி நகைக்கலாம் அதன் கவலை
எனக்கில்லை.
1. அழிக்கப்பட்ட இனத்தின் இனவிருத்தி; இது மிக முக்கியம் (நிறைய குழந்தைகளை பெத்துக்கணும் தப்பா எடுத்துக்காதீங்க)
2.அகதிகளாக புலம் பெயர்ந்தவர்கள் மீண்டும் தாயகம் செல்லவேண்டும்( இது எவ்வளவு சாத்தியம் என்பது எனக்குத்தெரியாது)
3.ஒரு கட்டமைப்போடு இதை நடத்தவேண்டும்( இதை ஏன் சொல்கிறேன் என்றால் பிற்காலத்தில் தமிழின் குரல் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கவேண்டுமென்றால் இது கண்டிப்பாக வேண்டும்)
4.இலங்கைவாழ் தமிழர்களைப்பற்றி எனக்குத்தெரியாது ஆனால் சாதாரண மனிதனாக யோசித்தால் "இனி நம்ம கஞ்சி நம்ம குடும்பத்தைத்தான் கவனிக்கணும் என்ற எண்ணம் பலரிடம் வரக்கூடும்"
5.இந்த உணர்வு வருவது இயல்பு, எத்தனை நாட்களுக்குத்தான் சாதாரண மனிதன் அல்லல் படுவான். every one has break point
6.கடினமாக உழைத்து முன் வந்து பணக்காரனாகவேண்டும், யாழ் நிலங்களை வாங்கி வலிமை பெறவேண்டும்.
7.முக்கியமாக தமிழினத்திற்கு கெடுதலளிக்கும் சட்டம் வந்தால், அதை உலகறங்கிற்கு கொண்டு சென்று மாற்றங்கள் கொண்டுவரவேண்டும்
8.வெளியில் வாழும் தமிழீழர்கள் தங்கள் வரலாற்றை மறக்காமல் தம் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும். இல்லையெனில் இது வரை நடந்த போராட்டம் வீணாகிவிடும்

உங்கள் எழுத்துநடை மிக நன்றாக இருக்கிறது.- வாழ்த்துக்கள்

----வாசி--

பிரபாகர், சென்னை. said...

உங்கள் கட்டுரையைப் படித்தேன். உங்களுடைய பதிலடிகள் மிகச்சரியாக எதிர்தரப்பு ஆட்களை அடித்து நொறுக்குகின்றன.

போராடும் போராளிகளுக்காக ஒரு புல்லைக் கூட பிடுங்கிப்போட விரும்பாதவர்கள் எல்லாம் இப்போது ஜல்லியடித்து 'மக்களின் நியாயம்' பேசுவதன் விநோத காரணம் என்ன ? இவர்கள் 'புரட்சி'='ரௌடியிஸம்' என்று தான் பார்க்கிறார்கள்.
இவர்களை விட்டுத் தள்ளுங்கள்.

ஈழத்தமிழரின் விடுதலைக்கான தாகம் பிரபாகரன் காலத்தியது மட்டும் அல்ல. அதற்கும் முந்தையது. அவர்கள் எல்லா காலத்திலும் தங்களின் விடுதலைக்காக யார் உண்மையாக போராடினாலும் அவர்களின் தலைமையை அம்மனிதர்களின் குற்றங்களையும், தவறுகளையும் தாண்டி ஆதரித்து வந்திருக் கிறார்கள். முன்பு தந்தை செல்வாவின் பின் ஒன்றாகத் திரண்டு நின்றார்கள். பின் பிரபாகரனின் பின் நின்றார்கள். பிரபாகரன் கடைசி கட்டத்தில் 'வீட்டிற்கு ஒரு ஆள்' என்பது போய் 'வீட்டில் வயது வந்த எல்லாரும்' என்று வன்முறையாக ஆட்பிடித்த போது கூட, புலிகளை வாய்க்கு வந்தபடி திட்டினாலும் துப்பாக்கி ஏந்திப் போய் சண்டைதான் போட்டார்கள். ஈழத்தமிழ் மக்களுக்குத் தெரியும் பிரபாகரனுக்கும், ராஜபக்சேவுக்கும் என்ன வித்தியாசம் என்று. பிரபாகரன் அவர்களிடம் வீட்டிற்கு ஒரு ஆள் கொடுங்கள் எனக் கேட்க முடியும். ஆனால் ராஜபக்சே அதுமாதிரி கேட்பானோ ? மாட்டான். அதுதான் வித்தியாசம். ஆனால் இங்குள்ள காகிதப் புலிகள், போராட்டம் தோற்றவுடன் பிரபாகரனும் ராஜபக்சேவும் ஒன்றேதான் என்கிற எல்லை வரை போய்விட்டார்கள்.

பிரபாகரன் அவர்கள் மாவீரர் என்று கூறுவது, மகாத்மா என்று காந்தியைக் கூறுவதைப் போன்றது தான். விடுதலைப் போராட்டங்களின் தலைவர்கள் மகாத்மாக்களாக சித்தரிக்கப்படுவது போராட்டத்தின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கத்தான்; அதன் மூலம் சாதாரண மக்களிடம் விடுதலைத் தீயை அணைந்துவிடாமல் வளர்க்கத்தான்.

அவர் என்ன வானத்திலிருந்து குதித்தவரா என்ன ? நம்முடன் வாழ்ந்த சாதாரண மனிதர் தான் அவர் (இலங்கை ராணுவத்தோடு, 5 நாட்டு ராணுவத் தளபதிகளின் வயிற்றிலும் புளியைக் கரைத்தவர் தான் என்றாலும்). அவர் எப்படி வாழ்ந்தார், என்னென்ன தனிமனிதத் தவறுகள் செய்தார் என்பதைப் பட்டியலிடுவது இங்கே பெரிய விஷயமல்ல (எதிரணியினர் இதைச் செய்வது இந்தத் தீயை அணைக்கத் தான்.. இவர்களைப் பொறுத்தவரை சிங்களன் பத்துபேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொல்லுவது கண்ணில் தெரியவே தெரியாது.. 'பிரபாகரன் இரால் சமைத்துச் சாப்பிட்டார்' என்று குற்றப்பட்டியல் நீட்டுவார்கள்). அப்படியே அவர் தனிமனிதப் பலகீனங்கள் உள்ள தலைவரா யிருந்தால் தான் என்ன ? தனிமனிதத் தவறுகளே இல்லாத சொக்கத் தங்கத் தலைவர்களை உலக வரலாற்றில் விரல் விட்டுத் தேட வேண்டும். அது தான் யதார்த்தம்.

அப்படியானால் பிரபாகரன் மீது நமக்கு வருத்தமே இல்லையா ? இருக்கிறது. மிகப் பெரும் வெற்றி பெறும் என்கிற வலுவான நிலையிலிருந்து அழித்தொழிக்கப்பட்ட கூட்டம் என்கிற பரிதாபமான நிலைக்கு மிகக்குறுகிய காலத்தில் புலிகளும், ஈழத் தமிழர்களும், வந்துவிட்ட நிலைக்கு போராட்டத்தைத் தள்ளி விட்டு விட்டார் என்பது தான். அதுமட்டும் தான். இதை நான் கூறக்கூட விரும்பவில்லை. ஏனென்றால் எதிரணியினருக்கு இது அல்வா அல்லவா. சும்மா சும்மா கிண்டிக்கொண்டேயிருப்பார்கள். அதுதான் அவர்கள் செய்ய விரும்புவதும். அல்வா கிண்டுவது..

Unknown said...

இள்வேனி இலவு வீட்டில் கடலை விட்கிறார்கள் வாங்கள் செர்ந்து வாங்கி சாப்பிடுவம் இலவு காத்தனை என்னைநின் மதியோ எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் ... ஆலின் ஓங்கிய ஆனந்தக் கடலை அம்ப லத்தில்ஆம் அமுதைவே தங்கள் எல்லா வற்ருக்கும் காரனமும் உண்டு காரியமும் உண்டு

vimalatharani said...

நடுநிலை கருத்துக்களுடனான உங்கள் எழுத்தை படித்த பின் தான் தோன்றுகிறது காலம் தான் சில கேள்விகளுக்கு விடை கூற முடியும் என்று . உங்கள் எழுத்து நடை அழகாகவும் கருத்துகள் ஆழமாகவும் சிறிது காரமாகவும் இருக்கிறது . வாழ்த்துக்கள் !

Anonymous said...

ஐயா பிரம்மபுத்திரன்,
வணக்கம்.

காலச்சுவட்டிலும் அகிலன் பதிவிலும் எழுதியவர்கள் தமிழ்நதி சொன்ன வரையறைக்குள் வந்துவிட்டார்கள்தான். தமிழ்நதி அந்த வரையறையை இன்னும் சுருக்கியிருக்க வேண்டும்.
அதே அந்த இருவர் மட்டிலும் வன்னிச்சனம் என்ன நினைச்சுது எண்டதையும் நீர் பார்க்க வேண்டாமோ? கிடைச்சால் வவுனியாவில அடைபட்டிருக்கிற சிலரிட்ட கதைச்சுப் பாரும். (வவுனியாக் காம்பில எல்லாரிட்டயும் தொலைபேசி வசதிகள் இல்லையெண்டதையும் சொல்லித்தான் ஆகவேணும்.)
'எல்லைப்படை' எண்டு எல்லாரும் திரளேக்க இவை எல்லைக்கென்ன, எல்லைப் படைப் பயிற்சிக்கே போனதில்லை. ஆனா வெற்றிகளுக்குப் பரணி மட்டும் பாடிக் கொண்டிருந்தீச்சினம். அந்தநேரத்தில (நான் சொல்லிறது 1999, 2000 காலப்பகுதி.) சனம் இவர்களைப் போன்றவர்கள் மேல் கொண்ட ஆத்திரத்தை அறிவீரோ? அகிலன் அறிஞ்சிருப்பார். அந்தநேரம் இப்படிப்பட்டவர்கள் மேல் வந்த விமர்சனத்தை அமத்தினதும் இயக்கம்தான்.
இப்ப கடைசிநேரத்தில வீட்டுக்கொருவர் வரவேணும் எண்டேக்க கூட அவை குசாலாத்தான் இருந்தினம், ஏனெண்டா வயசு வந்த பிள்ளையள் அவைக்கில்லை. அப்பவும் ரீவியிலகூட வந்து தங்கட அறிவுசீவித்தனத்தைக் காட்டினவைதான். (ரெண்டு பேருமே வன்னிக்க இருந்து ரீவி நடத்தினது தற்செயலானதுதான்).
பிறகு வலுவுள்ளோர் எல்லாரும் சண்டைக்கு வரவேணும் எண்டேக்கதான் அவைக்கு உறைச்சுது போல.

நிக்கட்டும். தமிழ்நதி நல்ல விலாவாரியாச் சொல்லியிருக்கிறா ஒரு தொகுதி 'நடுநிலையாளர்' பற்றி.
அதாவது வெற்றிநேரத்தில அரோகரா பாடிறது, தோல்வி எண்ட உடன சாட்டைய எடுக்கிறது. இவர்களெல்லாம் தம்மேலான விமர்சனத்தை எதிர்கொள்ளப் பயந்த கோழைகள். தடாலடியாக 'கையெடுத்துக் கும்பிறடுறன், என்னை மன்னிச்சிடுங்கோ' எண்டு வன்னிச்சனத்திட்ட மன்னிப்புக் கேட்டு எழுதினா இனி ஒருத்தரும் புலியின்ர தோல்விக்கோ புலியின்ர கடசி நேரச் செயற்பாட்டுக்கோ தன்னை விமர்சிக்க ஏலாது எண்ட பிளான்தான்.
சரி, பிழை எண்டு எதுவுமில்லை கண்டியளோ. வெற்றி, தோல்வி எண்டுதான் ரெண்டு விசயங்கள் இருக்கு. வெண்டால் செய்தவைகள் சரி, தோத்தால் பிழை. இயக்கம் தனது செயற்பாடுகளை இதுவரை காலமும் வெற்றிகள் மூலமே நியாயப்படுத்தி வந்திருக்கிறது. வெற்றி கிடைத்திருந்தால் (குறைந்தபட்சம் இயக்கம் தப்பிப் பிழைத்திருந்தாற்கூட) இறுதிநேரத்தில் நடந்த அனைத்துமே வரலாற்றில் சரியெனவே பதியப்பட்டிருக்கும். இப்போது சாட்டையைத் தூக்கின கூட்டமும் கோவிந்தா போட்டிருக்கும். ஆனால் புலி தோற்றுவிட்டது. 'தோற்ற காரணத்தால் மட்டுமே' புலியை விமர்சிக்கும் கூட்டம்தான் மிக ஆபத்தானதும் அருவருப்பானதும். அக்கூட்டத்தைத்தான் தமிழ்நதியும் சாடுகிறார். அவர்களுக்குத்தான் விமர்சிக்க அருகதையில்லை என்கிறார்.

விடுபட்ட 2999 பேர்களின் எழுதாத கட்டுரைகளை ஏன் தேடுறீர். விடுபடாமலிருக்கும் ரெண்டரை லட்சம் பேரின்ர எழுதப்படாத கட்டுரைகள் தொடர்பா என்ன சொல்லிறீர்?
நீரே வசதியாக அவர்களை இனங்காட்டுறீர். நான் கேட்டா வன்மமா இருக்கும். ஆராரோ எதுக்கெதுக்கோ கைது செய்யப்படுறாங்கள். ஆனா அந்த ரெண்டுபேர் மேலயும் அரசுதரப்புத் தொடுக்கக்கூடிய வழக்குகளின் சாத்தியத்தன்மை பற்றி யோசித்தீரோ? ஜெனரேற்றர் ஸ்டார்ட் பண்ணினவனே அதே காரணத்துக்காகத்தான் உள்ள இருக்கிறான் அண்ணை. (இப்ப நான் 'போட்டுக் குடுக்கிறன்' எண்டு சொல்லி என்னைப் பிராண்டுவியள். கொஞ்சம் யோசியுங்கோ, உதுகள் அவனுக்குத் தெரியாமல் நான் பின்னூட்டத்தில சொல்லித்தான் தெரியுமோ எண்டு.)

----------------
நான் ஆரெண்டு பிரம்மபுத்திரனுக்குத் தெரியும்.
ஆ... சொல்ல மறந்துபோனன். பிரம்மபுத்திரன் எண்டபேரில தாயகத்திலயும் ஒருவர் எழுதிக்கொண்டிருந்தார்.

Bhupathi said...

I salute you for the post. It depicted my own state of mind. Prabhakaran has no equals on this earth. Never ever.