10.15.2006

உதிரா நினைவு

கக்கத்தில் தகரக்குவளை இறுக்கி
பேரங்காடி முன் பிச்சையெடுக்கிறாள்
குஷ்டம் முற்றிய முதியவள்.
உதிர்ந்த விரல்கள்
விலக்க விலக்க
முளைக்கின்றன மீளவும் மீளவும்.

-----


கடலை மூசித் தழுவும்
நீரின் வடிவங்கள் நீயறிவாய்
கலந்தபின் பிரித்தறிய முடிந்ததா உன்னால்…
நம் இருவருக்கிடையில்
நின்றெரியும் பெருந்தீக்கும்
விதவிதமாய்ப் பெயர் சூட்டு…!
அணைந்தபின்
சரிந்த சாம்பலில் எழுதி விடைபெறு
அதன் பெயரை.

No comments: