10.08.2006

நம்பிக்கை

ஓரிரவு கனவில் கண்ட
சாம்பல் காடாய் கண்முன் விரிகிறது ஊர்.
மிகுபசி உற்ற தீயெனப்
தினம் தினம் போர் தின்னும் என் தேசம்.

தொடக்கமும் முடிவும் அழிந்துபோன தெருக்களில்
மரணம் சாவதானமாக உலவ
கூரையும் கதவுமற்ற சுவர்களில்
இரத்தம் எழுதிய இறுதிக்கவிதைகள்…
நடுங்கும் விரல்களால் மெல்லப் பற்றுகிறேன்
பாதி எரிந்துபோன மிகச்சிறிய சட்டை
ஐயோ! சிறுமொட்டே…!
என்னிடம் வார்த்தையில்லை…!!!

மரத்தில்… நிலத்துள்…வீட்டில்
சாவு ஒளிந்துளது
சின்ன மணிக்கண் உருட்டி விழிக்கும் குருவீ…!
இங்கேன் வந்தாய்…?
முன்னொருபொழுதில் நீ வந்து கொத்திய
முகம் பார்க்கும் கண்ணாடிபோல்
சிதறிப்போனதெம் வாழ்வு…!
உன்னையும் சொல்வதற்கில்லை
மழையற்றபோதும் இருண்டிருக்கும் வானில்
உனக்கேது உலவ இடம்…?

சூழல் அறியாமல்
சூட யாருமற்றுச் சொரிகிறது மல்லிகைப்பூ.

வருவர் வருவரென காத்திருந்து
உயிர்விட்ட நாயின் எலும்புக்கூடு
ஒரு வீட்டின் வாசலென
அடையாளம் கொள்கிறேன்.

எனது அடையாளங்களைக் காவுகொள்ளும்
பனிதேசத்திலிருந்து மீண்டும் வரும்போது
சாம்பல்மேடு உயிர்த்திருக்கும்.
மல்லிகைக் கூந்தல் மணக்க
என்னை எதிர்கொள்ளும் சிறுமியிடம் கூறுவேன்
இறந்த நகரத்தில் ஒருபொழுதில் இருந்தேன் என.

1 comment:

இளங்கோ-டிசே said...

துயரைப்படியவிடும் இன்னொரு கவிதை.