10.26.2006

எழுதா விதிகள்





இருளடர்ந்த தெருவோரம்
காற்றலைக்கும் மரங்களை உணர்ந்தபடி
நடக்க விரும்புகிறேன்.

வேண்டியிருக்கிறது துணை.

பின்னிரவில் துயில்கலைய
வாசித்த வரிகள் அலைக்கழிக்கின்றன.
நான் வேண்டுவதெல்லாம்
சுத்தமான காற்றும்
அசைபோடலுக்கான வெளியுமே.

இரவுகளில் என்னுடையதல்லாதிருக்கிறது
வீட்டின் முன்புறம்.

சபைகளில் நானொரு மிதவாதி
அதிகபட்ச கவனிப்பையும்
புருவ உயர்த்துதலையும்
பார்வை பரிமாற்றங்களையும்
தவிர்த்தல் அவசியம்.

அதனால்
என்னுள் எழும் கேள்விகளுக்கோ
ஆயுள் தண்டனை.

இளவேனில் மாலை…
மழை வருவதன் முன்னான பொழுது…
புகாருள் அழகாகும் மனிதர்கள்…
இவையிணைந்த
சாலையோரத் தேநீர்க்கடையொன்றில்
எனக்கான தேநீர் ஆறிக்கொண்டிருக்கிறது

பருகியதேயில்லை.

இதை வாசித்தபின்
நீங்கள் என்னை
நிமிர்ந்து பார்க்க வேண்டியதில்லை.

நானொரு பெண்
அதிலும் மண்ணிறத்தவள்.

4 comments:

deep said...

unkalin entha kavitha enakku niraiya pidiththamana ontru. pulam peyarntha pennin oru 'adaiyalam'/kural pola olikkum!

தமிழ்நதி said...

Thank you Theeba. I wrote this poem 3 years ago.

Anonymous said...

touchy

Ayyanar Viswanath said...

ஒரு சிறிய மலர்தலைக் கூட அனுமதிக்கவில்லை உங்களின் கடைசி வரி..