10.13.2006

ஒரு பிதாமகனின் வருகை

வந்தமர்ந்த சில நொடிக்குள்
ஒளிவட்டம் சுழலத்தொடங்கிற்று
அதன் வண்ணக்கதிர்கள் சிதறிப்பரவின
என் சிறிய அறையெங்கும்.

வியந்து பார்த்திருந்தேன்.

நாற்காலி அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்க
மேகங்களைத் திரித்து பஞ்சாக்கி
காது குடைந்தான்
சட்டையில் ஒட்டியிருந்த நட்சத்திரங்களை
அலட்சியமாக உதற
அவை மின்னலில் போய்விழுந்தன.
தொண்டை வறண்டுபோக
கடலைக் குடிக்கக் கேட்டான்
எலுமிச்சைச்சாறு கொடுத்தும் பயனில்லை.

சற்றைக்கெல்லாம் ஊழிக்கூத்து தொடங்கிற்று
செஞ்சடை விரிந்து பறக்க
உயர்த்திய காலில் தட்டுண்டு
உருண்டது பூமிப்பந்து.

‘பாரதியைத் திருத்தி பதிப்பிக்க உத்தேசம்
முடிந்தால் புதுமைப்பித்தனையும்’ என்றவனின்
விஸ்வரூபத்தில் வீடு நாணிற்று.

திருவருகை நிகழ்ந்து ஒருமாதம்
இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறது
அவனிருந்த நாற்காலி
வெறுப்பின் சுழற்காற்றில்.

7 comments:

Anonymous said...

அருமை
-/பெயரிலி.

கார்திக்வேலு said...

//‘பாரதியைத் திருத்தி பதிப்பிக்க உத்தேசம்
முடிந்தால் புதுமைப்பித்தனையும்’ //

இந்த ஆர்வத்திற்காகவேனும் பிதாமகன்களை இருக்க விட்டுவிடலாம் :-)
----
நல்ல கவிதை

தமிழ்நதி said...

நன்றி பெயரிலி மற்றும் கார்த்திக்வேலு,

பாராட்டுவதற்கு ஒரு மனம் வேண்டும். அடுத்தவரின் எழுத்தை நேசிக்க குறைந்தபட்சம் வாசிக்கக்கூட மறுக்கிறவர்களைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கும். விதிவிலக்குகள் எனக்கு எப்போதும் பிடிக்கும்.

நிலவன் said...

அருமையான கவிதை. அத்துடன் பூங்கா இணைய இதழிலும் உங்களின் கவிதை தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. மிகுந்த பாராட்டுக்கள்

தமிழ்நதி said...

நன்றி நிலவன்,

இந்தக் கவிதையை நிறையப் பேர் சிலாகித்துச் சொன்னார்கள். பாராட்டுக் கேட்கும்போது எல்லோருக்கும் உண்டாகும் இயல்பான மகிழ்ச்சி எனக்கும் ஏற்பட்டது. ஆனால், சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறவர்கள் தங்களது தற்புகழ்ச்சி காரணமாக மிகத் தாழ்ந்துபோவது வருத்தமாக இருக்கிறது. அந்தக் கண கோபத்தில் எழுதினேன். ஆனால், ‘பாவம்’என்றொரு குற்றவுணர்ச்சியும் இருக்கிறது. ‘பூங்கா’வில் போட்டிருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும். அதற்கென் நன்றி.

Anonymous said...

தாமத வாசிப்பிற்கு மன்னிக்க...

மிக நல்ல கவிதை...
வாழ்த்துக்கள்.

செல்வநாயகி said...

நல்ல கவிதை