10.03.2011

சாதலின் அழகியல்






“மிதமிஞ்சிய பித்துநிலையே தெய்வீகமான அறிவு”
-எமிலி டிக்கின்சன்

பெப்ரவரி 11, 1963. இலண்டனில் அது கடுங்குளிர் காலம். ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அத்தகைய கொடிய பனிக்காலம் வந்து சேர்ந்திருந்தது. அதிகாலையில் இரு குழந்தைகளும் உறக்கத்தில் தேவதைகளுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களது கனவு கலைந்துவிடாதபடி மென்மையாக முத்தமிட்டாள் சில்வியா. காலை உணவாக ரொட்டியும் பாலும் எடுத்துவைத்தாள். சமையலறைக்குச் சென்று அதன் கதவிடுக்கின் வழியாகவோ யன்னல்கள் வழியாகவோ மரணம் வெளியில் கசிந்துவிடாதபடி ஈரத்துணிகளால் இறுக அடைத்தாள். அடுப்பைத் திறந்து அதனுள் ஒரு துவாலையை மடித்துவைத்தபின் எரிவாயுவைத் திறந்துவிட்டாள். துவாலையில் தலைசாய்த்து நிதானமாக சாவைச் சுவாசிக்க ஆரம்பித்தாள். குறிப்பிட்ட நேரத்தில் தாதி வந்துவிடுவாள் என்ற நினைவு, மயங்கத் தொடங்கியவளுள் நிழலாடி மறைந்தது.

தனது முப்பதாவது வயதில் சொற்களிடமிருந்தும் துயரங்களிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டாள் சில்வியா பிளாத்… வாழ்நாள் முழுவதும் உளவியல் சிக்கல் சில்வியாவை ஒரு நிழலெனத் தொடர்ந்துகொண்டிருந்தது. அது, அவளை வீழ்த்துவதும் - அவள் அதனைத் தற்காலிகமாக முறியடித்து விரட்டுவதுமான இடையறாத போராட்டம். சிறுவயதில், சில்வியாவின் தாயார் அவளது கால்களில் காயத் தழும்புகளைக் கண்ணுற்று என்ன நடந்ததென்று வினவியபோது, ஏதேதோ சொல்லி மழுப்பினாள். வற்புறுத்திக் கேட்டபோது, “நான் சாக விரும்பினேன்”என்று பதிலளித்தாள். அதனையடுத்து- மனவழுத்தத்திலிருந்து மீள்வதற்காக உளவியல் ஆலோசனை சிகிச்சை, விரைவில் குணப்படுத்துமென நம்பப்பட்ட மின்னதிர்ச்சி உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டாள். அவளது இருபதாவது வயதில், மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்தாள். நடக்கப் போவதாக குறிப்பொன்றை எழுதிவைத்தபின் நாற்பது தூக்கமாத்திரைகளை விழுங்கிவிட்டு நிலவறையிலுள்ள புழங்காத பகுதியொன்றில் மறைந்துகிடந்தாள். அந்தச் செய்தி பத்திரிகைகளில் முதற்பக்கத்தில் பிரசுரமாயிற்று. ஊரே திரண்டு தேடியது. நாற்பது மணித்தியாலங்களுக்குப் பிறகு, வாந்தியால் ஈரமாகி நாற்றமெடுத்த ஆடைகளோடு அரைமயக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டாள். ‘லேடி லாசரஸ்’என்ற கவிதையில் அந்தக் காட்சியை இவ்விதம் சித்தரித்திருக்கிறாள்.

இரண்டாம் முறை,

இதுவே கடைசி

இனித் திரும்பேன் எனும் முத்தாய்ப்போடு

இறுக்கி மூடினேன்
என்னையொரு சிப்பியென.
மீண்டும் மீண்டும் கூவியழைத்து மீட்டபின்

பிரித்தகற்றினர்

முத்துக்களைப் போல
ஒட்டியிருந்த புழுக்களை.

சாதலும்

ஏனைய கலைகளைப் போலொன்றே

அபூர்வ அழகோடு

அதனை நான் நிகழ்த்துகிறேன்.


தற்கொலைக்கு முயன்று தப்பிப் பிழைத்த பிற்பாடு எதிர்கொள்ளவேண்டியிருந்த வாதைகளை ‘செய்யுந்தோறும் நரகம்’என மேற்குறித்த கவிதையில் குறிப்பிட்டிருக்கிறாள். பிறகொரு தடவை கார் விபத்தில் சிக்கினாள். அது விபத்தன்று- தற்கொலை முயற்சி என்று, பிறகு அவளாகவே ஒப்புக்கொண்டாள். நீண்ட நாட்களுக்கு – வாரங்களுக்குக் கூட உறங்காமல் ‘இன்சோம்னியா’வினால் தொடர்ந்து அவதிப்பட்டுவந்தாள்.


“ஓய்வெடுத்தால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினால் நான் பைத்தியம் ஆகிவிடுகிறேன்”

எட்டு வயதில் முதல் கவிதை பிரசுரமாகும் உவகையை அனுபவித்த சிறுமி, படித்த பள்ளிக்கூடங்களில் படிப்பு-படைப்பாற்றலால் புகழ்பெற்ற மாணவி, கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசல் பெற்றுப் படிக்கக்கூடிய திறன்வாய்ந்தவள், உரைநடை, கவிதை எனப் பன்முக ஆற்றல் மிக்கவளாக அறியப்பட்டு பிரபலமான சஞ்சிகைகளில் படைப்புகள் வெளிவரப் பெற்றவள், சமூகத்தில் மதிப்புக்குரியவர்கள் எனப் போற்றப்பட்டவர்களால் அங்கீகரிக்கப்பட்ட கவிஞர் - மீண்டும் மீண்டும் மரணத்தை நேசித்தது ஏன்? தனது குறிப்பொன்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறாள்:


“தன்னை அழிப்பதன் மூலமாக இந்த உலகத்தை அழிக்க நினைக்கும் அதீத அகங்காரத்தினால் என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருந்தேன். உண்மையில், என்னுடைய பொறுப்பிலிருந்து தப்பித்து மீண்டும் கர்ப்பப்பையினுள் சென்று ஒளிந்துகொள்ளவே தற்கொலை செய்துகொள்ள விரும்பினேன்.”

சிறு வயதில் தந்தையை இழந்ததானது சில்வியாவின் இறுதி நாட்கள் வரை அவளைப் பாதித்தது என்கிறார்கள். தந்தையின் மரணச்செய்தியை அவளிடம் தெரிவித்தபோது
“இனி நான் ஒருபோதும் கடவுளோடு பேசமாட்டேன்”என்றாளாம். சில்வியா தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாட்கள் முன்பு எழுதிய‘டாடி’ என்ற கவிதையில் அந்த இழப்பானது கோபம், வெறுப்பு, துயரம் கலந்து வெளிப்பட்டிருக்கிறது.

அவர்கள் உங்களைப் புதைத்தபோது

எனக்கு வயது பத்து

இருபது வயதில்
மரணத்தை விழைந்தேன்
மீண்டும் மீண்டும் மீண்டும்
...
உங்களை வந்தடைய

எலும்புகள் கூட விழைந்தன
Electra on Azalea Path என்ற கவிதையில்…

எவரதும் போலவே

உங்களது மரணமும்
இயல்பென்றாள் என் தாய்
அம்மனநிலையை உள்வாங்கும்
வயதேறுதல்
சடுதியில்
எங்ஙனம் நிகழும்?
தற்கொலையின் அபகீர்த்தியைச் சுமந்தலையும்
ஆவி நானே… எனதே எனதான
நீலநிற கூரிய கத்தியொன்று

என் தொண்டைக்குள்ளே

துருவேறிக்கொண்டிருக்கிறது.

‘ஆசிரியன் இறந்துவிட்டான்’ (ஆசிரியை இறக்கமாட்டாளா?) என்பதற்கு அமைவுற, சில்வியாவின் கவிதைகளை வாசித்தவர்கள் அவற்றைத் தமதெனக் கொண்டார்கள். கொண்டாடினார்கள். அவளுடைய படைப்புகளிலும் தற்கொலையிலும் தங்களைப் பொருத்திப் பார்த்தார்கள். அவளுடைய கண்களால் பார்க்கவும், காலணிகளில் புகுந்துகொள்ளவும் விழைந்தார்கள். கணவன்மாரால் துரோகிக்கப்பட்டவர்கள் அந்தக் கவிதைகளைத் தங்களுக்கானவையாகச் சுவீகரித்துக்கொண்டார்கள். குளிரிலும் தனிமையிலும் வறுமையிலும்-இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் சித்திரம் சமூகத்தின் கோபத்தைத் தூண்டப் போதுமானதே. சில்வியா பிளாத்தின் கணவர், கவிஞர் ரெட் ஹியூஸின் பெயரை சில்வியாவின் கல்லறையிலிருந்து அழித்துவிடும்படி தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதும் அதன் பொருட்டே. ‘கொலைகாரன்’என்ற சாபங்கலந்த தூற்றுதல்கள், குற்றச்சாட்டுகள், துரத்தும் கேள்விகள், கொலை மிரட்டல்களுக்கு தனது வாழ்நாள் முழுவதும் முகங்கொடுக்கவேண்டியவராக ஹியூஸ் இருந்தார். சில்வியா பிளாத்தின் தற்கொலைக்குப் பிற்பாடு சில்வியாவின் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் “என்னுடைய வாழ்வு முடிந்துபோயிற்று”என்று துக்கித்திருக்கிறார். சில்வியாவின் அனுதாபிகள், ஆதரவாளர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “அவர்களுக்குத் தேவையாக இருந்ததெல்லாம் உண்மைகளல்ல- சில்வியா மீது புனையப்பட்ட மாயைகளே”என்றிருக்கிறார்.

அவர் தன்னுடைய கருத்தை மகளுக்கும் தரத் தவறவில்லை.
சில்வியா பிளாத்தின் இறுதி நாட்களில் எழுதப்பட்ட கவிதைகள் 2004ஆம் ஆண்டில், அவரது மகளான பிரீடா ஹியூஸினால் ‘ஏரியல்’என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது. (சர்ச்சைக்குள்ளான முதல் தொகுப்பு கணவரால் வெளியிடப்பட்டது.) அதன் முன்னுரையில், “என்னுடைய தந்தையால் வெளியிடப்பட்ட ‘ஏரியல்’தொகுப்பை, என் தாயின் தற்கொலையால் கட்டமைக்கப்பட்ட புனிதத்தன்மையோடு சேர்த்துப் பார்க்கிறார்கள்.”என்று குறிப்பிட்டிருக்கிறார் பிரீடா. மேலும், “எனது தாய் எத்தனைக்கெத்தனை மகத்தான கவிஞராக இருந்தாரோ, அத்தனைக்கத்தனை ஒரு சாதாரண மனிதப் பிறவியாகவும் இருந்திருக்கிறார் என்பதை நான் பின்னாட்களில் உணர்ந்துகொண்டேன். என் தந்தையின் பொறுமையோடும் நன்மை விழையும் தன்மையோடும் ஒப்பிடுமிடத்து என் தாய் பொறாமையும் மிகுந்த கோபமும் உடையவராக இருந்திருக்கிறார் என்பதையும் உணர்ந்துகொண்டேன். எனது தந்தையின் கவிதைகளை ஒரு சமயம் கிழித்தும் மற்றோர் சமயம் எரித்தும் அழித்ததை அறிந்து நான் திகைப்புற்றேன்”என்கிறார். அஸ்ஸியா வேவெல் (டேவிட் வேவெல் என்ற கவிஞனின் மனைவி)என்ற பெண்ணுடன் கணவருக்கு ஏற்பட்டிருந்த உறவை அறிந்த சில நாட்களில், பெருங்கோபமுற்ற சில்வியா ‘பெல் ஜார்’நாவல் எழுதுவதற்கான குறிப்புகள் சிலவற்றையும், தனது தாயாரால் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான கடிதங்களையும், ஒரு பெட்டி நிறையக் குவிந்திருந்த ரெட் ஹியூசின் கடிதங்களையும், அவரது சில கவிதைகளின் ஆரம்ப வரிகளையும் தீயிலிட்டு எரித்திருந்தாள்.

பிரீடா தன் தந்தையை நியாயப்படுத்துவதில் நியாயமேயில்லை. ரெட் ஹியூஸ் ஒரு தண்மையான மனிதராகவே இருந்திருக்கலாம். சில்வியா பிளாத் இறந்தபிறகு அவளுடைய கவிதைகளில் தற்கொலை ஏற்றிவைத்துப் பேசப்பட்டதானது, ஊடகங்களின் உருப்பெருக்கிக் காட்டும் முயற்சி என்பதையும் ஓரளவு ஒத்துக்கொள்ளவே வேண்டும். சில்வியாவின் வாழ்வையும் தற்கொலையையும் மறந்துவிட்டு ஒரு கவிதையைத்தானும் வாசிக்கமுடியாது என்பதும் உண்மையே. ஆனால், சிறுவயதிலிருந்தே மனவழுத்தத்தால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலையிலிருந்த (சில்வியாவின் மனநல மருத்துவர் அவளை வைத்தியசாலையில் அனுமதிக்க இடம் தேடிக்கொண்டிருந்தார்) தன் மனைவியை, (காதல் மனைவி என்று சேர்த்துச் சொல்லவேண்டும்) தற்கொலையின்பால் தீரா வேட்கை கொண்டிருந்தவளை, பொருளாதார நெருக்கடியில் அவதியுற்றுக் கொண்டிருந்தவளை, படைப்பெழுச்சிக்கும் - பெண்ணாக இருந்த காரணத்தால் குழந்தை வளர்ப்பு இன்னபிற பாடுகளுக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருந்தவளை, நோய்வாய்ப்பட்டிருந்த இரு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் அந்தக் கடுங் குளிர்காலத்தில் (கோடையில் நீங்கியிருக்கலாம் என்று சொல்லவில்லை) வேறொருத்தியின் பொருட்டு, அதிலும் குறிப்பிடத்தக்க அழகி என்று கருதப்பட்ட ஒருத்தியோடு நீங்கிச் சென்றதன் அடித்தளத்தில் இயங்கிய சுயநலமானது எவ்வகையிலும் எவராலும் நியாயப்படுத்தப்பட முடியாதது; கூடாதது.

சில்வியா பிளாத்தைப் பொறுத்தமட்டில், உளவியல் சிக்கல்கள் காரணமாக அவள் தற்கொலையை நோக்கி இலகுவில் தூண்டப்படக்கூடியவராக இருந்தாள். ஒரு கைவிரல் சொடுக்குக்குக் காத்திருக்கும் விசைபோல மரணம் அவளுக்காகக் காத்திருந்தது. தந்தையை இழந்து, தந்தையின் இடத்தை நிறைத்ததாக எண்ணியிருந்த கணவனும் நீங்கிச்சென்ற அந்தக் குளிர்காலத்தில் ‘டாடி’யை எழுதினாள். தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாட்கள் முன்பாக எழுதப்பட்ட பல கவிதைகளில் ‘டாடி’யும் ஒன்று.

நான் ஒருவனைக் கொன்றிருந்தால்
இருவர் அழிந்திருப்பர்.

அந்தக் காட்டேரி

தானே நீங்களென விளம்பிற்று.

அது எனது குருதியை
ஓராண்டு…
ஏழாண்டுகளாகக் குடித்திருந்தது

…………………………… ……………………………..

எந்தப் பெண்ணின் பொருட்டு சில்வியா பிளாத்தை அவரது கணவர் நீங்கிச் சென்று தீராப் பழிக்கு ஆளானாரோ, அந்தப் பெண்ணும், ஆறு ஆண்டுகளின் பின் (25 மார்ச், 1969) சில்வியாவைப் பின்பற்றி அதே பாணியில் சமையல் எரிவாயுவைத் திறந்துவிட்டு மூச்சுத்திணறி இறந்துபோனாள், தனியாகவல்ல; தனது நான்கு வயது மகள் சுராவையும் தன்னோடு சேர்த்துக்கொண்டாள். இறந்தவளின் நிழல் போகுமிடமெல்லாம் தொடர்வதை எவரோ சகித்திருப்பர்? இதனையடுத்து ரெட் ஹியூஸ் தன்னை நியாயப்படுத்துவதற்கான தகுதியை முற்றிலும் இழந்தவரானார். ‘அவர் ஒரு வன்முறையாளன்’என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக பெண்ணியவாதிகள் குற்றஞ்சாட்டினர். சில்வியா பிளாத்தின் மகன் நிக்கலஸ் மார்ச் 16, 1989இல் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோனார். அந்தச் செய்தியை “சில்வியா பிளாத்தும் அவரால் கொல்லப்பட்ட அவரது மகனும்”என்று, பத்திரிகா தர்மம் மீறாமல் எழுதியது ஒரு சஞ்சிகை. தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்களின் பிள்ளைகளுக்கு சொந்தமாக மனவழுத்தங்கள் இருக்கக்கூடாதென்பது அத்தகையோரின் விதியாக இருக்கலாம். தனது சகோதரர் நீண்ட காலம் மனவுளைச்சலில் இருந்தபின் தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய சகோதரி பிரீடா தெரிவித்தாள். சில்வியா பிளாத் தற்கொலைக் குறிப்பு எதனையும் எழுதிவைத்திருக்கவில்லை. ஆகவே, அவளால் கடைசியாக எழுதப்பட்ட கவிதைகளை வெளியிடும் பொறுப்பை கணவர் தன்னுடையதென எடுத்துக்கொண்டார். அப்படி ‘எடுத்துக்கொள்ளப்பட்ட உரிமை’யானது சில்வியா பிளாத்தின் ஆதரவாளர்கள், அனுதாபிகள், பெண்ணியவாதிகளிடையே பெருங்கோபத்தைக் கிளப்பியது. தற்கொலைக்குத் தூண்டிய ஒருவருக்கு அந்த உரிமை கிடையாது என்று பொங்கியெழுந்தார்கள். ‘ஏரியல்’தொகுப்பில், கவிதைகளை சில்வியா ஒழுங்கமைத்திருந்த வரிசையின்படி அல்லாமல் மாற்றி வெளியிட்டதும், சில கவிதைகள் வெளியிடத் தகுதியற்றவையென நீக்கப்பட்டிருந்ததும் அவர்களது கோபம் அதிகரிக்கக் காரணமாயிற்று. ஆனால், சில்வியா ஒழுங்கமைத்திருந்த வரிசையின்படி அவற்றை உள்ளபடியே வெளியிட்டிருந்தால், ‘குடும்பத்திலுள்ள அங்கத்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் சில அயலவர்களுக்கும்கூட அபகீர்த்தி விளைவிப்பனவாகவும், மனம் புண்படுத்தும்படியாகவும் அவை அமைந்திருக்கும்’என்று, பிரீடா தனது தொகுப்பின் முன்னுரையில் கூறியிருக்கிறார். சில்வியாவின் கணவரால், அவளது மரணத்தின் வெளியிடப்பட்ட ‘ஏரியல்’ தொகுப்பு பற்றி கருத்துத் தெரிவித்த அல்வாரஸ், ‘இவ்வகையில் கவிதைகளை வரிசைப்படுத்தியிருப்பது கொலையின் அழகியலைக் கொண்டிருக்கிறது’என்கிறார்.

உண்மையில் சில்வியா பிளாத் அன்று மரணத்தை விரும்பினாளா? மனப்பூர்வமாக விரும்பியிருந்தாளெனில், தனது மனநல மருத்துவரை அழைக்கும்படியாக தாதிக்கு குறிப்பொன்றை எழுதிவைத்திருந்தது ஏன்? சிலர் சொல்வதுபோல, அந்தத் தற்கொலை (முயற்சி) வெறுமனே ‘உதவி வேண்டிய அழுகுரலாய்’ ஆரம்பித்து துன்பியலாய் முடிவடைந்ததா? அன்று காலை தாதி குறித்த நேரத்திற்கு வந்திருந்தால், ‘முப்பதாவது வயதில் மீண்டும் உங்களை வந்தடைய முயன்று தோற்றேன் தந்தையே….’என்றொரு கவிதை எழுதப்பட்டிருக்குமோ? சாவிலும் கொடியது, துயருள் தள்ளியவர்களைப் பழிவாங்குவதற்காக அல்லது பயமுறுத்துவதற்காக அப்படியொரு முயற்சியைச் செய்து சாக விரும்பாமலே செத்துப் போவதாகும்.


“மனநோய் என்பது, குடும்பம் மற்றும் அதனையொத்த அமைப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சுயத்தை நோக்கி வெளியேறத் துடிப்பதாகும்”என்கிறார் ‘மனநோயின் மொழி’யில் டேவிட் கூப்பர்.

சமூகம், குடும்பம், மதம், கல்வி இன்னபிற அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்படுவதற்கு முன் குழந்தையின் படைப்பாற்றல் கட்டற்றதாக அமைந்திருக்கிறது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தின் விதிமுறைகள், ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் மூளைக்குள் உருவேற்றப்பட்டு சமூகப் பிராணியாக மாற்றப்படுகிறாள்-ன். இயந்திரமயமான அந்த ஓட்டத்தில் மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் இணைந்துகொள்ள மறுப்பவர்கள், ஓடிக்களைத்துப் பின்தங்கியவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். சமூகத்தின் பொத்தாம்பொதுவான அளவுகோல்களின்படி அவர்களால் இயங்கமுடிவதில்லை. அவர்கள் இப்போது வலிந்து எழுதப்பட்ட எல்லா நியதிகளுக்கும் எதிரான புரட்சியாளர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களளவில் சமூகம் என்பது ஒரு நாகரிக பாவனைக் கூடம். அந்த இருண்ட கூடத்திலிருந்து கலையின் உன்னத வெளிச்சத்தின் உதவியால் தப்பிக்க எத்தனிக்கிறார்கள். புறவுலகிலிருந்து அந்நியமாதல், உள்ளொடுங்கிப் போயிருந்த படைப்பாற்றலை நோக்கி மீண்டும் அவர்களைத் தள்ளுகிறது. படைப்பெழுச்சியானது, இலகுவில் மனப்பிறழ்வு முத்திரை குத்தப்பட்டுவிடக்கூடிய நடத்தைகளைக் கொண்டவர்களாக மாற்றிவிடுகிறது. (அதைச் சாக்காக வைத்து ‘போலச் செய்பவர்’களுக்கு இது பொருந்தாது.)

சில்வியா பிளாத், ஆன் செக்ஸ்டன் இன்னபிற கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் ஏதோவொரு வகையில் பயிற்றப்பட்ட சமூகத்தை மறுத்தோடியவர்களே. எந்த மனவுளைச்சல் அவர்களைத் தனிமைப்படுத்தியதோ, அதுவே உன்னத கலை வெளிப்பாட்டுக்கும் அவர்களை இட்டுச் சென்றது. உளவியல் சிக்கல்களால் பீடிக்கப்பட்டவர்களை மின்னதிர்ச்சி சிகிச்சை முறை மூலம் குணப்படுத்த முயற்சிப்பது என்பதே அடிப்படை மனிதாபிமானமற்றது. அப்படிச் செய்வதன் வழியாக மூளையின் பேராற்றல் வலுவிழக்கச் செய்யப்பட்டு தனிமனித ஆளுமை சிதைக்கப்படுகிறது. அச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் ஒருவர் தளர்ச்சியடைந்து கீழ்ப்படிவுள்ள நாய்க்குட்டி போலாகிவிடுவார். ஒழுங்கமைக்கப்பட்ட சமூகம் என்ற கற்பிதத்திற்கு அத்தகைய கீழ்ப்படிதலே வேண்டியிருக்கிறது. அண்மைக்காலமாக அத்தகைய சிகிச்சை முறைக்கெதிராக மனிதாபிமானத்தோடு சிலர் குரலெழுப்பி வருகிறார்கள். மேலும், உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்திச் சிகிச்சையளிப்பதைக் காட்டிலும், அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக ஊடாட விடுவதே விரைவில் குணப்படுத்தும் என்கிறார்கள் மரபார்ந்த அல்லது வழக்கத்திலுள்ள சிகிச்சை முறைகளுக்கெதிரான மனிதவுரிமையாளர்கள். சில்வியா பிளாத்தும் மின்னதிர்ச்சி உள்ளடங்கலான சிகிச்சைக்குமுறைக்கு ஆட்படுத்தப்பட்டவளே. ஆனால், அவளது ஆளுமையின் வீச்சு மின்னதிர்ச்சியையும் மீறியதாக இருந்ததால் தப்பித்தாள். சில்வியா பிளாத்திற்கு ரெட் ஹியூஸ்ஸிடமிருந்து கிடைத்திருக்க வேண்டிய பரிவும் பராமரிப்பும் கிடைத்திருந்தால் அவள் இன்றும் இருந்திருக்கக்கூடும். படைப்பாளியின் இருப்பும் எழுத்தும் பிரித்துப் பார்க்கக்கூடியனவல்லவே…!

ஆன் செக்ஸ்டனுக்கும் சில்வியா பிளாத்துக்கும் குறிப்பிடத்தக்களவு ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் அமெரிக்காவின் மாசாசுசெட்ஸ் என்ற இடத்தில் பிறந்தவர்கள். இருவருமே தற்கொலையைப் பற்றி இடையறாது சிந்தித்தவர்கள். பேசியவர்கள். கடைசித் தடவை தவிர்த்து, தற்கொலையை முடிந்தபோதெல்லாம் முயன்றுபார்த்துத் தோற்றவர்கள். (இதுவொரு பைத்தியக்காரத்தனமான வாசகமே.)இருவருமே தமது வாழ்நாள் முழுவதும் உளவியல் சிக்கல்களால் அலைக்கழிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். தோழிகள். இருவரும் றொபேர்ட் லோவல் என்ற பேராசிரியரிடம் கவிதை குறித்துத் தெரிந்துகொண்டவர்கள். இருவருடைய கவிதைகளும் தன்வரலாற்றுத் தன்மை கொண்டனவாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. இருவரும் கவிதைக்கான ‘புலிட்சர்’விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர்கள். ஆனால், சில்வியா பிளாத்தை ஏதோவொரு வகையில் ஆன் பின்பற்றினாள் என்று சொல்வாருமுளர்; தற்கொலையின் வடிவத்தைத் தேர்ந்ததில்கூட.

“நானும் சில்வியாவும் எங்களது முதல் தற்கொலை முயற்சியைக் குறித்து நீண்ட நேரம் பேசுவதுண்டு.”என்கிறாள் ஆன் செக்ஸ்டன்.

எழுத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் இருவர் பொழுது சாய்ந்து, இருள் வடிந்து விடிகாலையில் உறங்க விரும்பாமல் உறங்கச் செல்வதுபோல, சாவைக் குறித்து சில்வியா பிளாத்தும் ஆன் செக்ஸ்டனும் இதர கவிஞர்களும் தங்கள் படைப்புகளில் சலிக்காமல் பேசியிருக்கிறார்கள்.

சில்வியாவின் மறைவுக்குப் பின் ஆன் செக்ஸ்டன் தன் மனநல மருத்துவரிடம் சொன்னாள்.

“சில்வியாவின் மரணம் என்னை அலைக்கழிக்கிறது. என்னையும் அதுபோல செய்யத் தூண்டுகிறது. எனக்குரிய மரணத்தை அவள் தன்னுடையதாக்கிக் கொண்டாள்.”

இருபத்தாறாவது வயதில் (முதல் குழந்தையின் பிறப்பினை அடுத்து) கடுமையான மனவழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆன் செக்ஸ்டன், தொடர்ந்து வந்த காலங்களில் அடிக்கடி அங்கு நாட்களைக் கழிக்கவேண்டியவளானாள். தான் எழுத ஆரம்பித்ததைப் பற்றிச் சொல்லும்போது…


“எனது சிகிச்சைகளுக்கிடையில் நான் உணர்ந்ததையும் யோசித்ததையும் கண்ட கனவுகளையும் எழுதும்படி எனது மனநல மருத்துவர் என்னைப் பணித்ததற்கிணங்க நான் எழுதவாரம்பித்தேன்.”


ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கும்போது கைகளில் புகைந்தபடியிருக்கும் சிகரெட்டும், பேச்சில் மிளிர்ந்தபடியிருக்கும் அலட்சியபாவமும் கேலியும், பித்தின் ஆழங்களில் அவ்வப்போது போய் நிலைத்துவிடும் கண்களுமான ஆன் செக்ஸ்டன் என்னை ஆகர்சிக்கும் பெண்ணாயிருக்கிறாள். ‘அவையெல்லாம் வலிந்து பொருத்திக்கொள்ளப்பட்ட பாவனைகளோ..?’என்ற எண்ணம் உள்ளோடுகிறபோதிலும், அப்படியொருத்தியைப் பார்க்கும்போது ஏற்படும் நிறைவு, வாஞ்சை கலந்த புன்னகையாக வெளிப்படுகிறது. அந்த வாஞ்சையானது மறுக்கப்பட்டவற்றிலிருந்து மலர்கிறது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. ‘தன்வரலாற்றுத் தன்மையுடைய கவிதை’ என்று கட்டம் கட்டி அடைக்கும் விமர்சனம் எரிக்கா யோங் போன்றவர்களை எரிச்சலடைய வைக்கிறது. ‘படைப்பாளியின் மனமே கவிதையில் இயங்குகிறது. சில விமர்சகர்கள் கவிதையைக் கவிதையாகப் பார்க்காமல், இத்தகைய சொற்களைக் கண்டுபிடித்துச் சொல்வதன் வழியாக அதை குறைமதிப்பீடு செய்கிறார்கள்’என்று சாடுகிறார் அவர். இரண்டு பெண்களுமே ரொமான்டிசத்திலிருந்த கவிதையை யதார்த்தத்தை பேசும் தளத்திற்கு எடுத்து வந்தவர்கள். இருவருமே, அதுவரையில் பெருமளவில் வெளிப்படையாகப் பேசப்பட்டிராத அன்றேல் பேசத் தயங்கிய பெண்களின் காமத்தைப் பற்றி, ஆசைகளைப் பற்றி, மாதவிடாய், கருக்கலைப்பு ஆகியவற்றைப் வெளிப்படையாக எழுதினர்.

சில்வியா பிளாத்தைப் போலவே ஆன் செக்ஸ்டனும் எப்போதும் சாவின் அருகாமையை உணர்ந்தபடியிருந்தாள். 27ஆவது வயதில் (இரண்டாவது மகள் பிறந்தபிற்பாடு) தனது பிறந்தநாளன்று தற்கொலைக்கு முயற்சித்தாள் ஆன்.

“மரணத்தின் நாற்றம் காற்றில் நிறைந்திருக்கிறது

அழுகிய உருளைக்கிழங்கைப் போல…”

சில்வியா தற்கொலை செய்துகொண்ட பிற்பாடு அவளை விளித்து எழுதிய கவிதையில்....
இரண்டுமுறை என்னைப் பிரகடனித்தேன்
எதிரியை வெற்றிகொண்டேன்

அவனை உண்டு மகிழ்ந்தேன்

அவனது கலைநேர்த்தியை
மாயத்தை எனதாக்கினேன்
.
……………… ………………

இன்னமும் எனக்கான அவளது காத்திருப்பு நீள்கிறது,

ஆண்டுகளாக

பழைய காயமொன்றின் கட்டினை நேர்த்தியோடு அவிழ்க்க,

மோசமான சிறைக்கூடத்திலிருந்து எனது மூச்சை விடுவிக்க.


முதலில் ‘எனக்குரிய மரணத்தை உனதாக்கினாய்’என்கிறாள். பிறகோவெனில், ‘உன்போலவே நானும் மரணத்தை அறிந்திருந்தேன். அதனை வெற்றியும் கொண்டேன்’என்று மரணத்திற்கும் தனக்குமுள்ள நெருக்கத்தை, பாத்தியதையை (சில்வியாவைக் காட்டிலும்)அழுத்திச் சொல்ல முனைவதைக் காணமுடிகிறது.
ஒப்பீட்டளவில் ஆன் செக்ஸ்டனின் தற்கொலை, சில்வியா அளவிற்கு மன அதிர்வைக் கொணரவில்லை என்பது வெளிப்படை. முன்பொரு தடவை நிகழ்ந்து பார்த்த காட்சியின் அசுவாரசியமாகவோ, ஆன் செக்ஸ்டனால் வரையப்பட்ட சுயசித்திரம் காரணமாகவோ அது கூடுதல் கவனம் பெறவில்லை.

வெளிப்படையான பாலியல் உறவுகள் அல்லது அவை குறித்த பிரகடனங்களை- ஒழுக்கத்தைப் பேணும் (முற்றிலும் அது உண்மையன்று; பல நேரங்களில் அவ்வாறான தோற்றமே காட்டப்படுகிறது.) சமூகத்தால் செரித்துக்கொள்ள முடிவதில்லை.
ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண், படைப்பாளியாக நிலைத்திருப்பது என்பது தொடர்போராட்டம். அதுபோலவே, உளவியல் சிக்கலும் கலையின்பால் செலுத்திச்செல்லும் பித்துநிலையும் சேர்ந்தியங்கும் ஒருவருடைய பிள்ளைகள், கணவர், உறவினர்களுக்கென்றொரு பக்கமும் உண்டு. அப்படியொரு பக்கத்தை முற்றிலுமாகப் புறமொதுக்கிச் சென்றுவிடல் பக்கச்சார்புடையதாகும். உளவியல் சிக்கலுக்கும் படைப்பாற்றலின் அழைப்புக்கும் இடையில் சிக்கித் திண்டாடிய தனது தாயின் ஞாபகங்களை Searching for Mercy Street, My Journey Back to Mother:Anne Sexton என்ற புத்தகமாக அவரது மகள் லின்டா கிரே செக்ஸ்டன் வெளியிட்டிருக்கிறாள். அதில் தாயின் அரவணைப்புக்காக ஏங்கிய குழந்தையின் குரலை இனங்காண முடிகிறது. மனவழுத்தத்தின் மிகுதியால் குழந்தைகளிடத்தில்கூட வன்முறையாக நடந்துகொண்டாள் என்ற குற்றச்சாட்டு ஆன் செக்ஸ்டன் மீது உண்டு. ‘தற்கொலை செய்துகொண்டு விடுவேன்’என்று குழந்தைகளை மிரட்டுபவளாக ஆன் செக்ஸ்டன் இருந்திருக்கிறாள். அதனால், கைவிடப்பட்டுவிடுவோம் என்ற பயத்தினால் தனதும் சகோதரியினதும் இளமைக்காலம் சூழப்பட்டிருந்ததாக லின்டா கிரே தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறாள். ஆக, படைப்பெழுச்சியின் உக்கிர ‘வீச்சு’ படைப்பாளிகளைச் சுற்றி இருப்பவர்களையும் விட்டுவைப்பதில்லை.

மனப்பிறழ்வின் அழுத்தம் தாளமுடியாமல் போன ஒருநாளில், சொன்னபடியே நடந்தது. அக்டோபர் 04, 1974 அன்று, மாக்ஸின் குமின் என்ற கவிஞருடன் (நீண்டகால நண்பர்) மதிய உணவருந்திவிட்டு வீடு திரும்பிய ஆன் செக்ஸ்டன் மதுவருந்தினாள். தன்மீதும் சிறிது ஊற்றிக்கொண்டாள். பிறகு, தாயின் கம்பளிக்கோட்டை அணிந்துகொண்டு மோட்டார் வண்டி நிறுத்தும் கொட்டகைக்குச் சென்றாள். கொட்டகையின் கதவுகளை இறுகச் சாத்தி மோட்டார் வண்டியின் இயந்திரத்தை இயங்கப் பண்ணினாள். இசையை உரத்து ஒலிக்கவிட்டாள். மோட்டார் வண்டி வெளித்தள்ளிய கார்பன் மோனோக்சைட்டைச் சுவாசித்துச் செத்துப்போனாள்.

தற்செயலாகத் திறக்கப்பட்டுவிட்ட பக்கம் திறந்தபடியிருக்க,

சொல்லப்படாதவை எஞ்சியிருக்க,

தொலைபேசி எடுத்தது எடுத்தபடியிருக்க,

மேலும், காதல்….
அது எதுவெனினும்,
ஒரு தொற்றுநோய்.


குணப்படுத்தமுடியாத அந்த நோயை, திறந்த புத்தகத்தை, சொல்லப்படாத வார்த்தைகளை விட்டுவிட்டுப் போனாள். அவளும் போனாள்.


மனவழுத்தத்தால், பிறழ்வால் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு தன் கவிதைகள் மூலம் ஆறுதலளித்துவந்த, தங்களை அடையாளங் கண்டுகொள்ள வைத்த கவிதைகளை அளித்த துணிச்சல்மிகு பெண்ணின் மூச்சு நின்றுபோயிற்று. தனது காலணியையே சாம்பல் கிண்ணமாக உபயோகித்த- தொடர் புகைப்பிடிப்புப் பழக்கத்தைக் கொண்ட அந்த விசித்திரமான பெண் சாம்பலாகிக் காற்றில் கலந்தாள். ஆம்…. நீங்கள் மிகச் சரியானதை ஞாபகங்கொள்கிறீர்கள்: அழுகிய உருளைக்கிழங்கினையொத்த வாசனையுடன்கூடிய மரணங் கலந்திருந்த காற்றில்.


உலகிலுள்ள அனைத்துப் பெண்களினுள்ளும் ஏதோவொரு துயரத்தின் அழகியல் குடிகொண்டிருக்கிறது. அதைக் கலையாக வெளிப்படுத்தத் தெரிந்தவர்கள், வரலாற்றில் சில தசாப்தங்கள் நீடித்திருக்கிறார்கள். ஏனையோரைக் காலம் கனகதியில் கபளீகரம் செய்துவிடுகிறது.

மறந்ததாகவே இருக்கட்டும்

உதிர்ந்துவிட்ட ஒரு மலரைப்போல.

மறந்ததாகவே இருக்கட்டும்

முன்னொருகாலம்
பொன்னொளிர்ந்து
மறக்கப்பட்ட
தீயினைப் போல்
நினைவிலிருந்து உதிரட்டும்

என்றென்றைக்குமாய்,

காலம் ஒரு கனிவுமிகு நண்பன்

அவன் நமக்கு
அந்திமத்தை அருள்வான்.

எவராவது வினவுவாரெனில் சொல்…

மிக நீண்ட நாட்களுக்கு முன்னரே
மறந்தாயிற்று என
ஒரு மலரென, ஒரு தீயென
நீண்டநாட்களின் முன் பொழிந்த பனியில்
புதைந்து மறக்கப்பட்ட கால்பந்தென.


மேற்கண்ட கவிதையில் எழுதியிருப்பதைப்போல, உதிர்ந்த மலராகவோ, நடனம் ஒடுங்கி அவிந்த தீயாகவோ சாரா டீஸ்டேல் மறக்கப்படவில்லை. எழுத்தால் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். இயற்கையின் காதலியும் அழகின் உபாசகியுமாகிய சாரா டீஸ்டேல், ஆகஸ்ட் 8, 1884ஆம் ஆண்டு, செயின்ற் லூயிஸ் மிசூரியில் பிறந்தவள். அங்குதான் கவிஞர் டி.எஸ்.எலியட்டும் மரியன் மூரும் பிறந்தார்கள். சாரா இலகுவில் நோய்வாய்ப்படக் கூடியவளாக, எப்போதும் பணிப்பெண்ணின் பராமரிப்பை வேண்டிய பூஞ்ஞை உடம்புக்காரியாக இருந்தாள். அவளது கவிதைகள் எளிமையானவை போன்று தோற்றமளிப்பினும், மீண்டும் மீண்டும் வாசிக்கும்போது ஆழ்ந்த பொருளுடையவையாகவும் உள்ளடங்கியிருக்கும் துயரைக் கிளர்த்துவனவாக அமைந்துள்ளன.

புகழ்பெற்ற கவிஞரும் ஓவியருமான வாசெல் லின்ட்சேயின் கனவு தேவதையாக இருந்தவள் சாரா டீஸ்டேல். கடிதங்களிலும், கவிதைகளிலும் தன் காதலை வெளிப்படுத்தினார் லின்ட்சே. சில கவிதைகளை தன் காதல் தேவதைக்கு சமர்ப்பணமும் செய்தார். சாராவும் அவரை விரும்பியபோதிலும், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஏழைக் கவிஞனால் தான் எதிர்பார்க்கும் வாழ்வைத் தரமுடியாது என்றெண்ணியோ என்னவோ எர்ன்ஸ் பில்சிங்கர் என்ற தொழிலதிபரை மணந்தாள். சாராவின் கணவர் பணத்தின் பின்னாலும், அதனை ஈட்டுவதன் பொருட்டான பயணங்களிலும் ஓடிக்கொண்டேயிருந்தார். அந்நாட்களில் சாராவின் துணை தனிமை மட்டுமே. 1929 இல், மனமுறிவு மணமுறிவில் முடிந்தது; கணவரின் விருப்பத்திற்கு மாறாகவே. அன்றிலிருந்து கவிதையுடனேயே சாரா வாழ்ந்திருந்தாள். லின்ட்சே தன்னிலும் மிக இளைய வயதினளான பெண்ணொருத்தியை மணந்தார். பெரும் பொருளாதாரச் சிக்கலுக்கு மத்தியில் சாரா டீஸ்டேலுக்கு அண்மையிலேயே அவர் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒருநாள் லின்ட்சேயும் தற்கொலை செய்துகொண்டார். இறுதிவரையில் சாராவும் அவரும் புரிந்துணர்வுள்ள நண்பர்களாகவே நீடித்திருந்தனர்.


சாராவின் கவிதைகள், கலையின் சிகரங்களில் பயணித்தன. மனமோ தனிமையின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்தது. ‘ஒரு குளிர்கால இரவு’என்ற கவிதையில் அத்தனிமையின் அழுகுரலைக் கேட்கமுடிகிறது.

எனது யன்னல் கண்ணாடி உறைபனியில் இறுகியிருக்க,

இன்றிரவு இவ்வுலகம் கொடிய குளிரில்

கருணையற்றுப் பொழிகிறது நிலவு,
காற்றோவெனில்

இருபுறமும் கூருடைய கொலைவாளினை ஒத்தது.


கடவுளே, வீடற்றவர்கள் மீதினில் இரக்கமாயிரும்

பிச்சைக்காரர்கள் அந்தரித்து அலையும் இக்கொடிய குளிர் இரவில்

விளக்குகள் ஏற்றப்பட்டதென பனியொளிரும் வீதிகளில்
நடந்து செல்லும் ஏழைகளில் கருணை காட்டும்.

எனதிந்த அறை ஜூன் மாதத்தின் சாயலொப்ப

இதந்தரும் வெம்மையானது,

ஒன்றின் மேலொன்றாய் படிந்த
திரைச்சீலைகளால் மூடப்பட்டது
இருந்தும் எதனாலோ,
வீடற்ற சிறுமியொருத்திபோல

என்னிதயமும் அழுதுகொண்டிருக்கிறது
இந்தக் குளிரில்.


1917இல் வெளியான, சாராவின் கவிதைத் தொகுப்பான ‘காதல் பாடல்கள்’ கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் கவிதைக்கான விருதுக்குத் (பின்னாளில் புலிட்சர் விருதாக மாற்றப்பட்டது) தேர்வாயிற்று. தொகுப்புகள் பல பதிப்புகள் கண்டன. ஜனவரி 29, 1933 அன்று, அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரைகளை உட்கொண்டபின் குளியலறைக்குள் சென்று தொட்டியினுள் தண்ணீரை நிறைத்து அதனுள் அமர்ந்துகொண்டாள் சாரா. அப்படியே உறங்கிப் போனாள். எப்போதும் எழுந்திருக்கவேயில்லை. உலகிலுள்ள பொருளிலெல்லாம் அழகினைத் தரிசித்த சாரா டீஸ்டேலின் உயிர் தண்ணீரில் நிறைந்தது.

படைப்பாளிகளாக இருந்து தற்கொலை செய்துகொண்டவர்கள், தங்கள் துயரத்தைக் காலத்திடம் கையளித்துவிட்டுப் போகிறார்கள். அத்துயரம், வழிவழியாய் ஆண்டாண்டுகளாகத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. அப்படி இன்னமும் வாசிக்கப்படும் கவிதைகளை எழுதியவள் அமி லெவி.
அவளது ‘கடைசி வார்த்தைகள்’என்ற கவிதை இப்படி ஆரம்பமாகிறது….

நான் கொண்டு வந்த மலர்ச்சி

நான் இசைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பாடல்

இப்போது சிந்தும் இந்தக் கண்ணீர்த்துளிகள்
எல்லாவற்றையும்

மரணத்திடம் கையளித்துவிடுகிறேன்
…….


‘த பெலிக்கன்’என்ற இதழில் அமி லெவியின் கவிதை வெளியாகியபோது அவளுக்கு வயது பதின்னான்கு. . Xantrippe and other verses என்ற முதல் தொகுப்பு 19 வயதிலேயே வெளியிடப்பட்டுவிட்டது. அமி லெவியின் படைப்புகளாக மூன்று கவிதைத் தொகுப்புகள், மூன்று குறுநாவல்கள், பல சிறுகதைகள், கட்டுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. யூத இனத்தில் செல்வந்தக் குடும்பமொன்றில் பிறந்த அமி லெவி, சிறு வயதிலேயே கல்வி கற்றலின் பொருட்டு குடும்பத்திலிருந்து பிரித்து வேறிடத்திற்கு அனுப்பப்பட்டாள். அவளுடைய எழுத்துக்கள் யூத எழுத்தாளர் என்பதன் அடிப்படையிலேயே பல விமர்சகர்களால் பார்க்கப்பட்டன. அந்தக் கலாச்சாரத்திற்கு முரணான விடயங்களை எழுதுகிறாள் என்று சிலரால் குற்றஞ்சாட்டப்பட்டார். தனிமையை நேசித்தபோதிலும், தொடர்ந்து மனவுளைச்சலுக்கு ஆளானவராகக் காணப்பட்டாள். செவிப்புலன் படிப்படியாகக் குறைந்து சென்றதும் அவளது மனவழுத்தத்திற்கு ஒரு காரணம் என்று கூறப்பட்டது. கார்ல் மார்க்ஸின் மகள் எலினோர் மார்க்ஸ் இவளது தோழி. அவரும் தனது 43ஆவது வயதில், மகிழ்ச்சியற்ற உறவு காரணமாக தற்கொலை செய்து இறந்தார்.

செப்டெம்பர் 10, 1889 அன்று தனது அறைக் கதவைச் சாத்திக்கொண்டு சார்க்கோலைக் கொழுத்தி அதிலிருந்து புகைந்த கார்பன் மோனொக்சைட்டைச் சுவாசித்து அமி லெவி தற்கொலை செய்துகொண்டாள். அவளது தாயும் சகோதரியும் அவள் இறந்து கிடந்ததை பிற்பாடு கண்டுபிடித்தனர். இறக்கும்போது அமி லெவிக்கு வயது 27. புகைப்படங்களில் பார்க்கக் கிடைத்த துயரம் கப்பிய விழிகள் மறக்க முடியாதன; அவளது கவிதைகளைப் போலவே.
சில்வியா பிளாத் The applicant என்ற கவிதையில் பெண்ணை ஒரு பொருளாகச் சித்தரித்திருப்பாள்:

“அதனால் தைக்க முடியும்
சமைக்க முடியும்

அதனால் பேச முடியும்”


அப்படியொன்றை பாலியல் பண்டமாகவும் பயன்படுத்தலாம்; அதை வைத்திருக்க முடியாத சூழலில் தூக்கியெறியவும் செய்யலாம் என்பதற்கு பல்லாயிரம் உதாரணங்களைக் காட்டமுடியும். அவற்றுள் ஒருத்தி அல்போன்சினா ஸ்ட்ரோனி.
அல்போன்சினா ஸ்ட்ரோனிக்கு இருபது வயதாக இருந்தபோது, புகழ்பெற்ற பத்திரிகையாளரும் அரசியந்திரத்தில் உயர்பதவி வகித்தவருமான ஒருவரில் காதல் வயப்பட்டாள். அதன் விளைவாக கருத்தரித்தாள். அந்த மனிதருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தது; அதனால் அல்போன்சினாவைத் திருமணம் செய்ய முடியாது என்று திடீரென்று தெரியவந்த ‘நியாயத்திற்கு’இணங்கவும், அந்தப் பெரிய மனிதரின் புகழுக்குக் களங்கம் நேராதிருக்கும்பொருட்டும் அந்த நகரத்தை நீங்கி வேறோரிடத்திற்குச் செல்லவேண்டியவளானாள். அங்கு அவளுக்கு ஒரு மகன் பிறந்தான்.

ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் தனித்து வாழ்வதிலுள்ள சிக்கல்களையும், எதிர்கொள்ளநேரும் பாரபட்சங்களைப் பற்றியும் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதிய பெண்களுள் மிக முக்கியமானவள் அல்போன்சினா. உறவுகளுக்குத் தமது தனித்தன்மையை விட்டுக்கொடுக்கும் பெண்களைப் பற்றியும், ஆண்-பெண் உறவு அறிவுத்தளம் சார்ந்து இயங்கவேண்டியிருப்பதன் அவசியத்தையும் எழுதினாள். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வேண்டினாள். நாளடைவில் கலைஞர்களிடையே அறியப்பட்ட எழுத்தாளரானார்.

ஆர்ஜென்ரினாவிலுள்ள ‘லா பீனா’ என்ற உணவகம் அந்நாட்களில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள் கூடும் இடமாகத் திகழ்ந்திருந்தது. அத்தகைய கலைஞர்கள் மத்தியில் தனது கவிதைகளை வாசித்துக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் அல்போன்சினா.

வானம் ஒரு கறுப்புக் கோளம்

கடல் ஒரு கருந் தகடு

கலங்கரை விளக்கம்
கரை மீதினில்
சூரியக் காற்றாடியை
இடையறாது விசுக்கி
இரவுகளில்
யாரைத் தேடுகிறது?

1935ஆம் ஆண்டு, இளவேனில் மாதமொன்றில், மார்பகப் புற்றுநோயால் தாக்கப்பட்டிருப்பதை அல்போன்சினா ஸ்ட்ரோனி அறிய நேர்ந்தது. சத்திரச் சிகிச்சையின் பிறகும் புற்றுநோய் குணமாகவில்லை. தான் பீடித்தவர்களை விட்டகலா நோய் அது. நோயும் அதன் விளைவான மனவுளைச்சலும் நாளாக நாளாக மிகுந்து வந்தன. புற்றுநோய் பரவுவதிலிருந்து தடுக்க ஒரு மார்பகம் அகற்றப்படுவதை குறைப்பட்ட பெண்ணுடலாகவே அவள் உணர்ந்தாள். முழுமை குறித்த சமூகத்தின் கற்பிதங்கள் அவளையும் விட்டுவைத்திருக்கவில்லை. மனவுளைச்சல் மிகுந்த நாட்களில் கவிதைகளால் கடலோடு பேசவாரம்பித்தாள். கடலுக்கு அடியில் பளிங்குக் கற்களால் அமைக்கப்பட்ட வீடொன்று தன்னை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக எழுதினாள். தன் மகனை அழைத்து, புற்றுநோய் தொண்டை வரை பரவிவிட்டதையும் ஆனால் மற்றுமொரு சத்திரசிகிச்சைக்குத் தான் தயாராக இல்லை என்பதையும் சொன்னாள். அக்டோபர் 18ஆம் திகதியன்று வீட்டை விட்டுக் கிளம்பிய அல்போன்சினா ஸ்ட்ரோனி ‘மார் டெல் பிளாட்டா’ என்ற சிறிய விடுதியில் தங்கினாள். அங்கே தங்கியிருந்த நாட்களில் “நான் உறங்கப் போகிறேன்’என்ற தலைப்பிலான கவிதையை எழுதி பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பினாள். பின் தனது ஒரே மகனுக்கு கடைசியாக கடிதமொன்றை எழுதியனுப்பினாள். அக்டோபர் 25, 1938 அன்று, தங்கியிருந்த விடுதியிலிருந்து வெளியேறிய அவள், கடலில் இறங்கி கரைந்துபோனாள். அந்நேரம், அவளுடைய கவிதையும் கடிதமும் வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

அடுத்த நாள் காலையில் அவளது உடல் கரையொதுங்கியிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. அது கவிதை போன்றதொரு மரணம். மரணத்தைக் கவிதையில் எழுதுவது சாத்தியம். மரணத்தையே கவிதையாக எழுதமுடியும் என்றுரைக்கிறது அல்போன்சினாவின் தற்கொலை. கடைசியாக அவளால் எழுதப்பட்ட கவிதை இவ்விதம் ஆரம்பிக்கிறது.


நான் உறங்கப் போகிறேன் பணிப்பெண்ணே
என்னைப் படுக்கையில் இடு
என் தலைமாட்டினருகில்

ஒரு விளக்கினை ஏற்றிவை

ஒரு விண்மீன்கூட்டம்;
நீ விரும்பும் ஏதாவதொன்று

யாவும் சிறந்தனவே;
சிறிதாய் ஒளிரச்செய்.


ஆன் செக்ஸ்டனின் மரணச் சடங்கில் கலந்துகொண்ட அமெரிக்கக் கவிஞர் டெனிஸ் லெவெற்றோவ் சொல்கிறார்.


“சுய அழிவுக்கும் படைப்பாற்றலுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை ஆன் செக்ஸ்டனால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. உயிரோடு இருக்கும் நாங்கள் அதில் தெளிவுடன் இருக்கவேண்டும்.”

தெளிவுக்கும் பித்துநிலைக்கும் ஒரு நூலிழையே இடைவெளியாம். சமூகத்தை மறுத்தோடுபவர்களுள், புறவுலகுக்கும் தங்களுக்கும் இடையில் ஓரளவேனும் சமன்பாட்டைப் பேண முடிந்தவர்கள் கலைஞர்களாகிறார்கள். அல்லது தனியன்களாகிறார்கள். முற்றிலும் முரண்படுகிறவர்கள் மனநோயாளிகளாகிறார்கள். சமூக நியதிகளுக்கியைபுற வாழமுடிந்தவர்கள் ‘சாதாரணர்’களாக இப்பூவுலகில் தொடர்ந்து உலவுகிறார்கள்.


தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றி எழுதுவதும் தற்கொலைக்கு ஈடானதே. நம்மைப் பித்துநிலைக்கு இட்டுச் செல்வதே. இருண்ட குகையினின்று வெளியேறத் துடிக்கும் பதைப்புக்கும் அதன் அமானுஷ்ய ஈர்ப்புக்கும் இடையில் கிடந்து திண்டாடும் மனம்போல ஒரு மாயம்!

சில நாட்களுக்கு முன் சென்ற பயணத்தின்போது கல்லறைத்தோட்டமொன்றைக் கடந்து வந்தேன். மலர்களும், மரங்களும், மழையும், புகைத் திரையெனப் படர்ந்திருந்த புகாரும் அவ்விடத்தையொரு கனவுக் காட்சியாக்கியிருந்தன. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது, அந்தக் காட்சியைக் கண்டதானது, அமானுஷ்யம் கலந்த உடனிகழ்வாய் தோன்றியது. ‘இதைப் போன்றதொரு கல்லறையில்தான் சில்வியா பிளாத்தும் உறங்கிக்கொண்டிருப்பாள்’என்று நினைத்துக்கொண்டேன். வார்த்தைகளில் விபரிக்க முடியாத நெருக்கமும் துயரமும் தனிமையும் கலந்த ஓருணர்வில் சிலிர்த்தது உடல்.

நன்றி: அம்ருதா (செப்டெம்பர் மாத இதழ்)

8.16.2011

துாக்குத் தண்டனையைத் துாக்கிலிடவேண்டும் - கே.எஸ்.இராதாகிருஷ்ணன்



வால்மீகி ஒரு கொள்ளைக்காரராக இருந்தார். ஏழ்மை நிலையில் உள்ள பல உயிர்களைக் காப்பதற்காக அவர் கொள்ளையடித்தார். அந்த வால்மீகிதான் பிற்காலத்தில் உலகின் தலைசிறந்த இராமாயணம் என்ற இதிகாசத்தைப் படைத்த வால்மீகியாக, இலக்கியப் படைப்பாளியாக மாறினார். இதேநிலை யாருக்கும் வரலாம்.
- நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்

உலக நாடுகள் எங்கும் தூக்குக் கயிறு வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதங்கள் நீண்டகாலமாகவே நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் 21ஆம் நூற்றாண்டிலாவது இதற்கு தீர்வு கிடைக்குமா? என்ற ஏக்கம் மனித உரிமை ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் அப்துல் கலாம் மரண தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார். அச்சமயம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.சி.லகோதி, மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் போன்றோர் மரண தண்டனை தொடர வேண்டும் என்ற கருத்தைத் தனித்தனியாகத் தெரிவித்தனர். உச்சநீதிமன்றம் மரண தண்டனை வழக்கில் அமைச்சரவையின் ஆலோசனையை குடியரசுத் தலைவர் ஏற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்தியச் சிறைகளில் 50 மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர்.

1945லேயே அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. மக்களவையில் 25.11.1956இல் மரண தண்டனை ஒழிப்பு தனி நபர் மசோதா விவாதத்திற்கு வந்தபொழுது அன்றைய அமைச்சர் பொறுப்பிலிருந்த எச்.வி. படாஸ்கர் இதனை ஒழிக்க காலம் இன்னும் கனியவில்லை என்றார். 1957இல் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசு கேரள அரசாகும். இந்த அரசில் ஈ.எம்.எஸ். முதல்வராகவும், நீதிபதி கிருஷ்ணய்யர் உள்துறை அமைச்சராகவும் இருந்தனர். அந்நாளில், சி.ஏ.பாலனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சி.ஏ.பாலன் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்தார். கடைசியாக கேரள உள்துறை அமைச்சராக இருந்த நீதிபதி கிருஷ்ணய்யரிடம் மனு ஒன்றை அளித்தார். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு நீதிபதி கிருஷ்ணய்யர் அவருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரால் பாலனின் மனு நிராகரிக்கப்பட்ட போதும், கிருஷ்ணய்யர் போராடி பாலனை தண்டனையிலிருந்து காப்பாற்றினார். இதேபோன்று எடிகா அன்னம்மா என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனையிலிருந்தும் விடுவித்தார். அப்போது அவர், ‘கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை எந்த அரசுக்கும் கிடையாது’ என்று மகாத்மா காந்தி சொன்ன கருத்தை சொல்லி வாதாடியுள்ளார்.

1962-67களில் அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் மரண தண்டனை தேவையில்லை என்று தெரிவித்தார். டாக்டர் இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது பல்வேறு மாநிலங்களில் பல குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதன் மீதான மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு குடியரசுத் தலைவருக்கு ஏராளமான கருணை மனுக்கள் பரிசீலனைக்கு வந்தன. அவற்றைத் திருப்ப அனுப்பாததால் தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் நின்றன. அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் இதுகுறித்து பிரதமர் நேருவிடம் முறையிட்டார். ஜவஹர்லால் நேருவும் ஒரு சிறப்புத் தூதரை குடியரசுத் தலைவரிடம் அனுப்பிக் கருணை மனுக்களை நிராகரித்துத் திருப்பி அனுப்பும்படி வேண்டிக் கொண்டார். ஆனால், குடியரசுத் தலைவர் நேருவின் கோரிக்கையை ஏற்கவில்லை. அதனால் டாக்டர் இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்த காலம் வரை குற்றவாளிகள் மீதான மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

1967இல் சட்டக் கமிஷன் அறிக்கை தூக்குத் தண்டனைக் கெடுபிடிகளை குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. 1953லிருந்து 1963 வரை இந்தியாவில் மட்டும் 1422 பேர் தூக்கிலிடப்பட்டனர். இதன் காரணமாக, ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி, அவ்வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கிறார் என்றால், அதற்கான அத்தியாவசியமான காரணத்தை குறிப்பிட்டாக வேண்டும் என்று 1973இல் மத்திய அரசு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு போன்ற தியாகத் தீபங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1947இல் விடுதலைப் போராட்டத்தில் வெள்ளைக்கார சார்ஜண்டை கொலை செய்ததற்காக குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜகோபாலன், காசிராஜன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, இந்திய விடுதலைக்குப் பின் 1947ஆம் ஆண்டு அவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். நேதாஜி இயக்கத்தில் இருந்த கேப்டன் நவாஸ்கான், கேப்டன் தில்லான் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தெலுங்கானா போராட்டத்தில் 11 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மலேசிய கணபதி தூக்கிலிடப்படும்போது பண்டித நேரு அதைத் தடுக்கக் குரல் கொடுத்தார். 1946இல் கோவை சின்னியம்பாளையத்தில் ஆறு கம்யூனிஸ்டு தோழர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டபோதும், நக்சலைட் தலைவர் நாகபூஷண் பட்நாயக், தமிழகத்தில் கலியபெருமாள், தியாகு ஆகியோருக்கு தூக்குத் தண்டனை வழங்கியபோது தமிழகத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டது.


பண்டைய இந்தியாவில் மரண தண்டனையை பற்றி எவரும் அறியவில்லை. அய்ந்தாம் நூற்றாண்டில் சீனத்திலிருந்து வந்த பாகியான் என்ற பௌத்த அறிஞர், மரண தண்டனை இந்தியாவில் நடைமுறையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். எட்டாம் நூற்றாண்டில் கொரிய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஹொய்சோ என்ற அறிஞர் இதே கருத்தை கூறியுள்ளார். ஆனால் ஆதி காலத்தில் உலகில் மரண தண்டனை நடைமுறையில் இருந்தது என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் பரங்கியரால் தூக்கிலிடப்பட்டார்; ஆனால் அவரது வாரிசான குருசாமி மூன்று முறை தூக்குக் கயிறு முனை வரை சென்று வைகோவின் முயற்சியால் இக்கட்டுரையாளர் மூலம் காப்பாற்றப்பட்டார். இச்சம்பவம் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்றது. 1984 செப்டம்பர் 27 சென்னை உயர்நீதிமன்ற மண்டபங்களில் புதிர் இறுகிக் கொண்டே போகிறது. ஏழாண்டுகளாக நடந்து வந்த ஒரு வழக்கின் இறுதித் தீர்ப்பு அன்று கூறப்பட்டது.

தீர்ப்பு மனுதாரருக்கு எதிராகப் போகுமானால், இந்திய விடுதலைப் போரின் முதல் வீரர், நமது செவிகளில் பெயரும் புகழும் எதிரொலித்துக் கொண்டிருக்கிற விடுதலைப் போராட்ட முன்னோடி வீரபாண்டிய கட்டபொம்மனின் சட்டப்பூர்வ வாரிசை, இந்தியா இழக்கும்! தீர்ப்பு மனுதாரருக்கு ஆதரவாக அமையுமேயானால் தண்டனைக்குரிய குற்றத்திற்குத் தூக்குத் தண்டனை வழங்குவது நமது நாட்டில் அரிதானதில்லை. எனினும், தீர்ப்பு மனுதாரருக்கு ஆதரவாக வருமானால் மனுதாரர் குருசாமியின் வழக்கு நமது நாட்டின் சட்ட வரலாற்றில் தனித்தத் தன்மை கொண்டதாக ஈடு இணையற்றதாக அமையும்.

1977இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் வைகோ அவர்கள் இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டப்படி (மிசாவின் கீழ்) பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதுதான் அதே சிறையிலிருந்த கைதி குருசாமியை அவர் அறிய நேர்ந்தது. குருசாமி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுத் தூக்கிலிடப்படுவதற்காகக் காத்திருந்தார். குருசாமியின் சிலம்பம் செய்யும் முறை, தேவராட்டம், ஜக்கம்மா குறித்து பாடிய பாடல்கள், குருசாமியின் அப்பாவித்தனம் ஆகியவை வைகோ அவர்களை ஈர்த்தது. அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று வைகோ மனதிற்குள் உறுதி செய்தார். அவரது மரணத் தண்டனை ஏற்கனவே மும்முறை (1977 ஜூன் 15, 1981 செப்டம்பர் 15, 1984 ஜூன் 21 ஆகிய நாள்களில்) உறுதி செய்யப்பட்டிருந்தது. குருசாமி போட்ட கருணை மனு இந்திய அரசால் மும்முறை தள்ளப்பட்டுவிட்டது.


அவர் தமிழ்நாட்டு திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார். சென்னை உயர்நீதி மன்றமும் தண்டனையை உறுதி செய்தது. அவரது வழக்கு எண். எஸ்.சி.87/1976. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் தந்த சிறப்புரிமை முறையீட்டை 1977இல் இந்தியத் தலைமை நீதிமன்றம் தள்ளிவிட்டது. சிறையில் வைகோ அவர்களும், குருசாமியும் அவ்வப்போது பேசிக் கொண்டதில், குடும்பச் சொத்து காரணமாக குருசாமியின் மாமனாருடன் கடும் சண்டை ஏற்பட்டு, அப்போது குருசாமியின் மாமனார் ஆயுதமேந்தி குருசாமியைத் தாக்க வந்தார். குருசாமி தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார். அதனால் அவரது மாமனார் இறந்தார்.


வைகோ மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றவுடன் குருசாமியைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு சஞ்சீவ ரெட்டி அவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்ட முறையீடு ஒன்றுடன் வைகோ சந்தித்தார். சஞ்சீவ ரெட்டி அவர்கள், குருசாமியின் புகழ்பெற்ற மூதாதையரான வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி நன்கு அறிந்தவர். அவர், 1969இல் நெல்லை மாவட்டத்தில் கயத்தாற்றில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அமைத்த கட்டபொம்மன் சிலையைத் திறந்து வைத்தார் என்ற சம்பவங்களை எல்லாம் வைகோ விவரிக்க, குருசாமி கதை கேட்டு குடியரசுத் தலைவர் மனம் இரங்கி இடைக்காலத் தடையும் வழங்கினார்.

துரதிர்ஷ்டவசமாக, மேல் குறிப்பிட்ட கருணை மனு தள்ளுபடி ஆகிவிட்டது. (ஏற்கனவே ஒரு முறையும் கருணை முறையீடு தள்ளப்பட்டுள்ளது) தூக்கிலிடப்பட வேண்டிய நாள் 1981 செப்டம்பர் 15 என்றும் குறிக்கப்பட்டுவிட்டது. வைகோ மீண்டும் ஒரு கருணை முறையீட்டை நாடாளுமன்ற உறுப்பினர் அய்ம்பது பேர் கையெழுத்திட்டு 1981 செப்டம்பர் 8 அன்று (குடியரசுத் தலைவரிடம்) தந்தார். அதை (அப்போதைய) உள்துறை இணை அமைச்சர் வெங்க சுப்பையாவிடம் தருமாறு வைகோ கேட்டுக் கொள்ளப்பட்டார்.


இந்தத் தண்டனையை நிறுத்த இந்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று, அப்போதைய மத்திய உள்துறைச் செயலாளர் உள்துறை அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி அவரை ஏற்க வைத்துத் திரும்பவும் தூக்குத் தண்டனைக்கு ஐந்தே நாள்களில் இடைக்காலத் தடை மட்டும் வழங்கி தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், தண்டனை தள்ளுபடி செய்யப்படவில்லை. அப்பொழுது நாள் செப்டம்பர் 9 ஆகிவிட்டது. குருசாமிக்குச் சாவு மணி அடிக்க அய்ந்தே நாட்கள்தான் இருந்தன. வைகோவின் வேகமான முயற்சியால் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டது. ஆனால் தள்ளுபடி செய்யப்படவில்லை.

இதற்கிடையே குருசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்தவர்தானா கட்டபொம்மன் பரம்பரை தானா என்ற உண்மையைக் கண்டறியும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசைப் பணித்தது. உண்மையைச் சரி பார்க்கும் பணி முடிய ஓராண்டானது. அதுவரை அவரது தூக்குத் தண்டனை தள்ளிப் போடப்பட்டது. பின்னர், அவரது வழக்கு தண்டனைக் குறைப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அந்த நிம்மதி ஓராண்டுதான் நீடித்தது. சஞ்சீவ ரெட்டிக்குப் பின் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங்கின் செயலகம், கருணை மனுவைத் தள்ளுபடி செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் நேரடி வாரிசு என்பதற்காகக் குற்றவாளி எவருக்கும் (கிரிமினல் எவருக்கும்) தண்டனையைக் குறைக்க முடியாது என்று காரணம் காட்டிவிட்டது.

இந்த நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி சின்னப்பரெட்டி, தூக்குத் தண்டனைக் கொட்டடியில் குற்றவாளி நீண்டகாலம் அடைக்கப்பட்டு கிடப்பதைக் கருதி, அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என ஒரு தீர்ப்பில் கூறினார். ஏற்கனவே, தந்த முறையீட்டுக்கு மாற்றாக நீதிபதி சின்னப்பரெட்டி அவர்களது தீர்ப்பினை அடிப்படையாக வைத்து இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மேலும் ஒரு முறையீடு தரப்பட்டது. அதில், குருசாமி ஏற்கனவே சிறையில் அய்ந்தாண்டாக வாடியுள்ளார் என்று கூறப்பட்டது.


1984 ஜூன் 14 அன்று குருசாமிக்கு ஜூன் 21 காலையில் தூக்கு நாளாக தேதியும், அதிகாலையில் நேரமும் குறிக்கப்பட்டுவிட்டது. சென்னையிலிருந்த வைகோ அவர்களுக்கு நெல்லையில் இருந்து நண்பர் குட்டி என்ற சண்முகசிதம்பரம் குருசாமிக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்பட்டு தூக்கு உறுதியாகிவிட்டது என்ற துயரச் செய்தியைத் தெரிவித்தார். உடனே வைகோ அவர்கள் மறைந்த சீனியர் வழக்கறிஞர் என்.டி.வானமாமலையை இரவென்று பாராமல் அவரை எழுப்பி இப்பிரச்சினையில் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தோம். அந்த ஆலோசனையின்படி டெல்லியில் உச்சநீதிமன்றத்துக்கும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் பாளையங்ககோட்டை சிறையில் இருக்கும் குருசாமி தன்னைக் காப்பாற்ற தந்திகளை தனித்தனியாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தந்திகள் குருசாமியிடமிருந்து முறையாக வந்து சேர்ந்தன. அந்த தந்திகளையே மனுக்களாக்கி விசாரிக்க அனுமதி கோர வேண்டும்.

இருந்ததோ இரண்டு, மூன்று நாட்கள். அதற்குள் அந்த தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் என்று அனைத்து மட்டங்களிலும் நிராகரிக்கப்பட்டு, இனி வேறு வழி இல்லை என்ற நிலை இருந்தது. என்ன செய்வது? முயற்சி செய்து பார்ப்போம் என்று நான் கருதினோம். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சந்தூர்கர் அப்போதுதான் பொறுப்பேற்று, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியில் தங்கி இருந்தார். மாலைப் பொழுதாகி விட்டது. இருப்பினும் எப்படியாவது இந்த வழக்கை விசாரிக்க அனுமதி வாங்கியாக வேண்டும் என்ற கடினமான சூழ்நிலை. அவரை சந்தித்த இக்கட்டுரையாளர், ‘நீதிபதி அவர்களே, குருசாமி நாயக்கரின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். அவர் சென்னை உயர்நீதி மன்ற பதிவாளருக்கு பாளையங்கோட்டை சிறையிலிருந்து தந்தி அனுப்பி உள்ளார். அந்த மனுவை ஏற்று வழக்கு எண் கொடுத்து உரிய நீதிமன்றத்தில் விசாரிக்க அனுமதி தர வேண்டும்’ என கேட்கச் சென்றபொழுது, நம்பிக்கை என்பது இக்கட்டுரையாளருக்கு துளியளவும் இல்லை. இருந்தாலும் முயற்சி செய்வோம் என்ற நிலையில் தான் தலைமை நீதிபதியை சந்தித்து முறையிட்டார். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நீதிபதி, இக்கட்டுரையாளர் கூறிய முழுமையான விவரங்களை கேட்டறிந்தார். மனிதாபிமானத்துடன் சட்டத்தில் வழி இருக்கிறதா என்று பார்த்து, இருந்தால் அதன் பலன் உரியவருக்கு கிடைக்க வேண்டும் என்ற அனுமதியை நீதிபதி அளித்த போது எனக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தந்தது.

அதன் பின் பதிவாளருடைய அனுமதியின் பேரில் வழக்கு எண்ணாகி, நீதிபதி இராமசாமி, டேவிட் அன்னுசாமி ஆகியோரிடம் காலை 10.30 மணிக்கு அவர்கள் அமரும்பொழுது விவரத்தை சொல்லி அனுமதி பெற்றாகி விட்டது. மதியம் 2.30 மணிக்கு இடைவேளைக்கு பிறகு வழக்கு வருகின்றது. வழக்கில் வழக்கறிஞர் என்.டி.வானமாமலை ஆஜரானார். இவ்வழக்கில் எவ்வித வழக்குக் கட்டணமும் வாங்காமல் என்.டி.வானமாமலை ஆஜரானார். என்.டி.வானமாமலை நீதிபதிகளிடம் தந்தியை ரிட் மனுவாகப் பாவித்து குருசாமிக்கு தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க இடைக்காலத் தடை வேண்டும் என்று வாதாடினார். அவரோடு வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியம் உடன் ஆஜரானார். அப்போது பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்த, பின் நீதிபதியான பத்மினி ஜேசுதுரை அழைக்கப்பட்டார். விசாரணை முடிந்து இறுதியில் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் செல்பேசி, தொலைநகல் (பேக்ஸ்) போன்ற தொலைதொடர்பு சாதனங்கள் கிடையாது. நீதிபதிகள் பப்ளிக் பிராசிக்யூட்டரிடம் தமிழக அரசு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் (அப்போது ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம்), பாளையங்கோட்டை சிறை நிர்வாகத்திடமும் உடனே இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததைத் தெரிவித்து, மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்ற ஆணையைத் தெரிவித்தனர். அன்று மாலை 4.30 மணிக்கு அரசிடம் தெரிவித்த கருத்துகளை, நீதிமன்றத்தில் பப்ளிக் பிராசிக்யூட்டர் தெரிவித்தவுடன், அந்தக் கருத்துகள் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் என்ற விவரமான ஆணையை பிறப்பித்தனர். அன்றைக்கு 24 மணி நேரத்தில் தூக்குக் கயிற்றைத் தூக்கிலிட்டது பெரும் செயலாக எனக்குப் பட்டது. இந்த பிரச்சினையை எப்படி தீர்த்தோம்? எப்படி சாதித்தோம்? என்பதை இன்றைக்கும் நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு முன்னால் சாதித்த இந்த அனுபவம், முயற்சி இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்ற படிப்பினையை தந்தது.

இவ்வழக்கு தூக்குத் தண்டனை வழக்கானதால், அப்போது பல நண்பர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என பலர் விசாரித்தனர். குறிப்பாக பழ.நெடுமாறன், இரா.செழியன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவரான ஏ. நல்லசிவம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ப.மாணிக்கம், சொ.அழகிரிசாமி, இலங்கைத் தலைவர்கள் அ.அமிர்தலிங்கம் தம்பதியினர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரன், பாரிஸ்டர் கரிகாலன், படைப்பாளர்கள் கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி போன்றோர் மட்டுமல்லாமல்; விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், பாலசிங்கம், பேபி சுப்பிரமணியன் (பேபி இளங்குமரன்), பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப் போன்ற எனக்கு நெருக்கமான பலர் இதுகுறித்து அக்கறையுடன் ஆர்வம் காட்டினர்.

அதைப்போன்றே உச்சநீதிமன்றத்தில் பிரசித்திப் பெற்ற வழக்கறிஞர் கார்க் ஆஜராகி அங்கும் இடைக்காலத் தடையும் வழங்கப்பட்டு பின்னால் அந்த மனு திரும்பப் பெறப்பட்டது. இந்தப் பிரச்சினையில் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்பார்ப்பு என்ன நடக்கப் போகிறதோ என்ற பரபரப்போடு கடமைகள் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வந்ததை தொடர்ந்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வெகுவாக வைகோ அவர்களைப் பாராட்டினர். “இந்து“ பத்திரிகை இதுகுறித்து எழுதியது. “இது நீதிமன்ற வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது“ என பிரபல வழக்கறிஞர் கோவிந்த சுவாமிநாதன் என்.டி.வியிடம் குறிப்பிட்டார்.

இக்கட்டுரையாளர் அன்று சென்னையில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல முறையீடு தாக்கல் செய்யும் பொறுப்பை நிறைவேற்றினார். அதில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம் நான்கு நிலைகளில்தான் தூக்குத் தண்டனை விதிப்பது நியாயமாகும் என்று கூறியது. அவையாவன:


1. வேறு மாற்றுக் கருத்து, எந்தக் கேள்வியுமின்றி இடம் இல்லாத நிலையில் ‘அரிதினும் அரிதான வழக்கு’களில்தான் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.

2. முதிர்ச்சி வாய்ந்த ஒரு சமுதாயத்தில் கண்ணியம் என்று மதிப்பிடப்படும் மதிப்பீடுகளின்படியும் கூட கொலையே தொழிலாகக் கொண்டோர் இரக்கத்திற்கு உரியோரில்லை.

3. கொலையுண்டவனுக்கு ஆதரவாக நிற்க யாருமில்லை என்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.

4. ஆயுள் தண்டனை என்பது போதவே போதாது என்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.

இவ்வாறு பிரமாண வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது. இதனுடன் (குருசாமியின்) நன்னடத்தை குறித்து பாளையங்கோட்டை மத்திய சிறைக் கூடக் கைதிகள் 150 பேரும் ஜெயிலர்களும் தந்த சான்றிதழ்களும் இணைக்கப் பட்டிருந்தன. இத்தனை பரபரப்புகளுக்கு இடையேயும் நடப்பது நடக்கட்டும் என்று பொறுமையோடும், வேதனையோடும் காத்திருந்த ஒரே மனிதன் குருசாமிதான். அப்படியே தான் தூக்கிலிடப்பட்டு விட்டாலும் தனது உடல் வைகோவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாக இருந்தது. தீர்ப்பு நாள் வந்தது. நீதிபதிகள் வி.இராமசாமியும் டேவிட் அன்னுசாமியும் தீர்ப்பைப் படித்தனர்.


“தொழில் முறைக் கொலைகாரர்களே தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிக்கப் படுகிறார்களென்றால், விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரின் வாரிசும் தூக்கு மேடை ஏறுவதிலிருந்து காக்கப்படுவதும் நியாயமே. மரண தண்டனையைத் தள்ளுபடி செய்கிறேன். அந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது!” என்றது அந்தத் தீர்ப்பு!

நீதிபதிகள் தம் தீர்ப்பில் விஷ ஊசி வழக்கில் டி.வி.வைத்தீஸ்வரனுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இருந்தனர். (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.361) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இரண்டாண்டு காலத்திற்கு மேல் தாமதம் ஆகுமானால், அரசியல் சட்ட 21ஆவது பிரிவை எடுத்துக்காட்டி, தூக்குத் தண்டனையைத் தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்க அதுவே (அந்தத் தாமதமே) மரண தண்டனை விதிக்கப்பட்ட மனிதனுக்குப் போதுமானது என்று அந்த வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

செர்சிங்குக்கும் பஞ்சாப் அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் (உயர்நீதிமன்றத் தீர்ப்பில்) எடுத்துக்காட்டப் பட்டது. (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.465) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டிருந்தால் அத்தண்டனையை நிறைவேற்றுவதா இல்லையா என்று தீர்மானிப்பதில் அந்த தாமதமும் முக்கியமான பரிசீலனையாகும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாண்டுக் காலத்திற்கு மேலான தாமதமே தூக்குத் தண்டனையைக் குறைக்க போதுமானதாகிவிட்டது என்றும், மரண தண்டனை அரிதினும் அரிதாகத்தான் தரப்பட வேண்டும் என்றும் பச்சன் சிங்குக்கும், பஞ்சாப் மாநில அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. (ஏ.அய்.ஆர்.1980, எஸ்.சி.898).

மேற்குறிப்பிட்ட வரையறைகளுக்குள் குருசாமியின் வழக்கு அடங்காது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாகக் கருத்துத் தெரிவித்தனர். தனிமைக் கொட்டடியில் வாடிய மரண தண்டனைக் கைதியின் உயிரைக் காக்க ஏழாண்டுகள் நடந்த போர் வீணாகவில்லை. குருசாமி தனது ஆயுள் தண்டனையை ‘கன்விக் வார்டர்’ ஆகக் கழித்து பத்தாண்டுகளுக்கு முன்பு விடுதலை ஆகி தன் குடும்பத்தோடு ஒட்டப்பிடாரத்திற்கு அருகே வாழ்ந்து, மறைந்தார்.


குருசாமி தூக்கிலிடப்பட்டிருந்தால், அவரும் தம் மூதாதையரைத் தேடிக் கல்லறைக்குத்தான் போயிருப்பார். அவரது வழக்கில் தரப்பட்ட முன் எடுத்துக்காட்டு இல்லா தீர்ப்பு இந்திய நீதியின் போக்கில் இடம்பெறும். ஏனெனில், இந்தியாவின் சட்ட நீதி வரலாற்றில் ஒரு முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் இல்லை; இல்லை மூன்று முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரது உயிர் காப்பாற்றப்பட்டது இதுவே முதன் முறை!

குருசாமி வழக்கு மூலம் திரு.பி.எச்.பாண்டியன் ஆஜரான வழக்கில் மாகாளி நாடார் போன்ற பல தூக்குத் தண்டனை கைதிகள் தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல உயர்நீதிமன்றங்களில் முன் உதாரணத் தீர்ப்புகளாக வழக்கறிஞர்கள் எடுத்து வைக்கின்றனர்.

உலகத்தின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்து விட்டன. இதுவரை 135 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. சதாம் உசேன், பூட்டோ போன்றோர் தூக்கிலிடும்பொழுது உலக அளவில் கடுமையாக எதிர்ப்புகள் எழுந்தன. தூக்குத் தண்டனை பிரச்சினையில் சீனா, ஈரான், ஈராக், பாக்கிஸ்தான், சூடான், அமெரிக்கா போன்ற நாடுகள் சற்றும் மனம் இரங்காமல் கடுமையாக நடந்து கொள்கின்றன. ஆனால், அமெரிக்காவில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டு, அங்கு பல மாநிலங்களில் கடுமையான முறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களைச் சேர்ந்த நாடுகளே தூக்குத் தண்டனையை அமல்படுத்துவதில் முனைப்பாக உள்ளன. சிங்கப்பூர் இதில் முதலிடம் வகிக்கிறது.

சிங்கப்பூரில் மரண தண்டனைகள் விதிக்கப்பட்டவர்கள், எந்தவித அறிவிப்புமின்றி ஏதாவதொரு வெள்ளிக் கிழமையன்று தூக்கிலிடப்படுவர். பின்னர் தான் வெளி உலகுக்கே தெரிய வரும். நைஜிரியாவை சேர்ந்த 21 வயதே ஆன கால்பந்தாட்ட வீரர் டோச்சி, துபாய் அணியில் விளையாடுவதற்கு ஆசைப்பட்டபோது, பலர் அவருக்கு பாகிஸ்தான் சென்று விட்டால் உனது கனவு நனவாகும் என்றனர். இதனை நம்பி இஸ்லாமாபாத் சென்றார். அங்கும் அவரது ஆசை நிறைவேறாமல், கையில் பணமில்லாமல் ஒரு சர்ச்சில் தங்கினார். அங்கு ஸ்மித் என்ற ஒரு நபர் டோச்சியை சந்தித்துப் பேசி, சிங்கப்பூர் மார்க்கமாக டோச்சியின் சொந்த நாடான நைஜீரியாவுக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து வழியனுப்பினார். அப்போது அவர் சில மாத்திரைகளை டோச்சியிடம் கொடுத்து இதனை சிங்கப்பூரில் மாலச்சி என்ற என் நண்பர் பெற்று கொள்வார் என்று சொல்லியுள்ளார். டோச்சி இந்த மாத்திரைகளுடன் சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்திருந்தபொழுது, அவரை சந்தேகப்பட்டு கைது செய்தனர். இரண்டு ஆண்டு கால வழக்கு விசாரணைக்குப் பின் அப்பாவியான டோச்சி தூக்கிலிடப்பட்டார்.


இங்கிலாந்து நாட்டில் டங்கன் பிரபு, பிரபுக்கள் அவையின் தலைவராக இருந்தபோது முதன் முதலாக தூக்குத் தண்டனை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்தார். மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்தவர்களுக்குகூட இங்கிலாந்து அரசு தூக்குத் தண்டனை வழங்கவில்லை. தென் ஆப்பிரிக்காவில் 1995இல் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஐ.நா. பொது மன்றம் தூக்குத் தண்டனை ஒழிப்புத் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் எதிர்த்தன. இத்தீர்மானத்தை 99 நாடுகள் ஆதரித்தன. 52 நாடுகள் எதிர்த்தன. 18 நாடுகளில் மரண தண்டனை போர்க்காலக் குற்றங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டும், 27 நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 1976ஆம் ஆண்டு கனடா நாட்டில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. கனடாவில் இதற்கு முன்பு கொலைக் குற்றங்கள் 3.09 சதவீதம் என்ற அளவில் அதிகமாக இருந்தது. மரண தண்டனை ஒழிக்கப்பட்ட காலத்திலிருந்து கொலைக் குற்றங்கள் குறைந்து விட்டன. 1983ஆம் ஆண்டளவில் அங்கு 2.74 என்ற அளவிலேயே கொலைக் குற்றங்கள் நடந்துள்ளன.

1985ஆம் ஆண்டு பன்னாட்டு அளவில் இலஞ்சம் வாங்கியதாக சோவியத் நாட்டிலும், சீனாவில் அரசுக்கு விரோதமாக உளவுத் தொழிலில் ஈடுபட்டதற்கும், விபசாரத்திற்கும், சீனா, கயானாவிலும், பொருளாதாரக் குற்றத்திற்காக ஈராக் நாட்டிலும், கற்பழிப்புக் குற்றத்திற்காக சீனா, எகிப்து, சவுதி அரேபியா, சிரியா, தாய்லாந்து, டுனீசியா ஆகிய நாடுகளிலும், களவு மற்றும் பயங்கர ஆயுதங்களை கையாண்டதற்காக சீனா, நைஜீரியா, சவுதி அரேபியா, சிரியா, உகாண்டா போன்ற நாடுகளிலும், போதைப் பொருள் குற்றத்திற்காக ஈரான், மலேசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளிலும், சீனாவிலும் மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இளைஞர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்ற வாதமும் உள்ளது. 1949ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற பன்னாட்டு சட்ட மாநாட்டில் 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது சுமார் 75 நாடுகளில் தற்பொழுது நடைமுறையில் உள்ளது. அய்க்கிய அமெரிக்க நாட்டில் நடந்த மாநாட்டில் 70 வயது கடந்த முதியவர்களுக்கு மரண தண்டனை கூடாது என்று தீர்மானம் நிறைவேறியது. இருந்தபோதிலும், 76 வயதான மகமத் முகமது தகா என்ற சூடான் நாட்டுத் தலைவரும், 78 வயதான பையோடர் ஃபெடரன்கோ என்பவரும் அமெரிக்காவிலிருந்து சோவியத் ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டு அரசியல் காரணமாக தூக்கிலிடப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்களுக்கும், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கும் மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் உலகளவில் நடைமுறையில் உள்ளது.

தூக்கிலிடுதல், துப்பாக்கியால் சுடுதல் ஆகிய இரண்டு நடைமுறைகள் இந்தியாவில் உள்ளன. இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கொலை, கொலை முயற்சி, கூட்டமாகச் சென்று கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல், அரசாங்கத்திற்கு எதிராகப் போர் ஆயத்த வேலைகளைச் செய்தல், எதிரிக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் பொய்ச் சாட்சியம் அளித்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது.


இந்திய இராணுவச் சட்டம் 1950இன் படியும், விமானப் படைச் சட்டம் 1950இன் படியும் கடற்படைச் சட்டம் 1956இன் படியும் படைவீரர்கள் தவறு செய்தால் மரண தண்டனை விதிக்க இடமுண்டு. பயங்கரவாதிகளுக்கு 1987ஆம் ஆண்டின் சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்க வழியுள்ளது. 1967ஆம் ஆண்டு சட்ட வரையியல் குழு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 18 வயதுக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு மரண தண்டனை அளிக்கக் கூடாது என்ற பரிந்துரையை அளித்தது. இந்தியாவில் மாவட்டத் தலைமை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் மற்றும் தனி நீதிமன்றம் ஆகியவை மரண தண்டனைகளை விதிக்கின்றன. ஆனால், குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள் மரண தண்டனைக் குற்றவாளிகள் மீது கருணை காட்ட அதிகாரமும் இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை அப்சல் குரு, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் இன்றைக்கும் தூக்குக் கயிற்றின் பிடியில் இருக்கின்றனர். அப்சலுக்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து அன்றைய காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் ‘இந்த தீர்ப்பு காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது’ என்று குறிப்பிட்டார். இந்தத் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டால் காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதி முயற்சிகள் தோல்வியடையும் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த கருத்தை ஒட்டியே எழுத்தாளர் அருந்ததி ராயும் கருத்து வெளியிட்டுள்ளார். இத்தீர்ப்பை எதிர்த்து, அப்சலின் மனைவி கருணை மனு ஒன்றை உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 2006ஆம் ஆண்டில் அனுப்பி இருந்தார்.


மரண தண்டனை குறித்து எதிர்மறையான சிந்தனைகளை விட்டு ஆக்கபூர்வமாக நாம் சிந்திக்க வேண்டும். மரண தண்டனைகள் விதிப்பதால் குற்றங்கள் குறைந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. அவ்வகையில், காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவைத் தூக்கிலிட்ட இந்தியாவில் இந்திராவும், ராஜிவும் படுகொலை செய்யப்பட்டனர். கொலை மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை எல்லாம் தூக்கிலிட்டு விட்டால் குற்றங்கள் குறையும் என்பது எள்ளளவும் உண்மையல்ல. கீதா சோப்ரா, சஞ்சய் சோப்ரா ஆகிய இருவரைக் கொன்றதற்காக 1980ஆம் ஆண்டில் பில்லா, ரங்கா ஆகிய இருவரும் தூக்கிலிடப்பட்டார்கள். 1984இல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக
மக்பூல் பட் என்பவர் தூக்கிலிடப்பட்டார். இதனால் எல்லாம் குற்றங்கள் குறைந்தனவா என்றால், இல்லை என்பதே பதிலாக உள்ளது. இந்த தண்டனைகளுக்கு பிறகுதான் ஆட்டோ சங்கர், தற்போது அப்சல் குரு போன்றவர்கள் உருவாகினர்.

தற்போது உலகளவில் 1,252 பேர் தூக்குத் தண்டனை நிழலில் தவிக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை 389 பேர் தூக்குத் தண்டனை கைதிகளாவர். ஐ.நா. பொது மன்றத்தின் தீர்மானத்தின்படி 2007இல் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா பிரச்சாரத்தின் அடிப்படையில் நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பினர். அக்கடிதத்தில் நீதிபதிகள் ராஜேந்திர சச்சார், சேத்தி, அட்மிரல் எல்.ராமதாஸ், மோகினி கிரி, உபேந்திரா பக்ஷி, ஆஸ்கார் அலி இன்ஜினியர், அருணா ராய், ஆஷிஸ் நந்தி, ஆனந்த பட்டவர்த்தன் என எண்ணற்றோர் கையொப்பமிட்டிருந்தனர்.

உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகளுக்கு பின் தான் கருணை மனுவைத் தாக்கல் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது. அவ்வாறு கருணை மனுவை அனுப்பினாலும் அதற்கான மேல் நடவடிக்கைகள் இல்லாததால் உடனடியாக நீதி கிடைப்பது தாமதமாகின்றது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இன்னொரு விசித்திரமும் நடைபெற்றது. ஒரு கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. மூவரும் தனித்தனியாக வெவ்வேறு நீதிமன்றங்களில் முறையிடுகின்றனர். அதில் ஒருவரது மனு நிராகரிக்கப்பட்டு அவருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மற்றொருவருக்கு அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. வேறொருவர் குடியரசுத் தலைவரின் கருணையால் உயிர் தப்புகிறார். இவ்வாறு நீதிபதிகளின் தீர்ப்புகள் மாறுபடுகின்றன.

1980ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ‘சாட்சிகளை ஆழ்ந்து விசாரித்து தீர்ப்பு அளிப்பதோடு மட்டுமல்லாது அதன் பின் விளைவுகளையும் பார்க்க வேண்டும். அரிதினும் அரிதாக மரண தண்டனைகள் விதிக்கப்படலாம்’ என்று கூறியுள்ளது. திருச்சி சிறையில் வாடிய பெரிய கருப்பன், கோவை சிறையில் இருந்த அவிநாசி ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இராஜஸ்தான் மாநிலத்தில் சதிக் குற்றத்திற்காக பலருடைய பார்வையில் படும்படி மரண தண்டனையை பலருக்கு விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து இந்திய அட்டர்னி ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் 1985ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கின் அடிப்படையில் இந்தத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், தனது தீர்ப்பில் ‘ஒரு மனிதத் தன்மையற்ற குற்றத்தை மனித தன்மையற்ற தண்டனையின் மூலம் சந்திக்கக் கூடாது’ என்று கூறியது.
1985ஆம் ஆண்டு மார்ச்சில் இந்திய நாடாளுமன்றத்தில் மரண தண்டனையைப் பற்றி விவாதம் நடந்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தனிப்பட்ட முறையில் மரண தண்டனையை நீக்க விருப்பம் உள்ளவராக இருந்தார். ஆனால், அன்றைய உள்துறை அமைச்சர், ‘தற்சமயம் மரண தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை’ என்று தெரிவித்தார். 28.4.1989 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் மரண தண்டனை போன்ற பயங்கரத் தண்டனைகளை ரத்துச் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 1977ஆம் ஆண்டு டில்லியில் மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட ஜெயபிரகாஷ் மரண தண்டனையை எதிர்த்தார்.

உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில், ‘அரசியலமைப்புச் சட்டம் 72, 161 பிரிவுகள் தவறான வழியில் அல்லது பொறுப்பற்ற தன்மையில் பயன்படுத்தப்படுகின்ற போது அதனை திருத்தும் உரிமை நீதிமன்றத்திற்கு உண்டு; ஒருவருக்கு மன்னிப்போ அல்லது கருணையோ காட்டும்பொழுது சமுதாயத்தில் ஏற்படக் கூடிய விளைவுகளையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப நிலைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இங்கிலாந்தின் அரசியலமைப்புச் சட்டத்தைச் சார்ந்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் குற்றவியல் சட்டம் 302ஆவது விதிப்படி மரண தண்டனை அளிக்கப்படுகிறது. இந்தச் சட்டம் ஆங்கிலேயர்கள் இயற்றியது. இதே போன்ற சட்டம் இங்கிலாந்தில் இன்று ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் மக்களாட்சி நடைபெறும் இந்தியாவில் இன்றும் நடைமுறையில் வைத்துக் கொண்டு மனித உயிர்களைப் பறிப்பது எந்த வகையில் நியாயம்?


இன்றைக்கு தூக்கு மர நிழலில் தவிக்கும் பலருக்கு வாழ்க்கை இருண்டு கிடக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் குருசாமி நாயக்கர் போன்று விடா முயற்சிகளை மேற்கொண்டால், அதற்கான பலன்களை அவர்கள் எட்டலாம்.
தூக்கின் மூலம் மானிட உயிர்களை பறிப்பதால் எந்தவித ஆக்கப்பூர்வமான பலன்களும் வரப் போவதில்லை. நாகரீகத்தைச் நோக்கிச் செல்கின்ற மானிடகுலம் மனிதாபிமானத்தோடு இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். ராஜிவ் காந்தி படுகொலையில் சிக்கித் தவிக்கும் மூன்று பேரும், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களும் இந்த தண்டனையின் கீழ் தான் உள்ளனர். இந்தியாவில் உள்ள மரண தண்டனைக் கைதிகள் அனைவரும் தவறிழைத்திருந்தாலும், அவர்கள் வாழ்க்கையில் பயணிக்கவே விரும்புகின்றனர். நீர்க் குமிழியின் ஆயுள் சில நிமிடங்களே; மானிடத்தின் ஆயுள் வருடங்களில். இந்தப் போக்கில் பழி வாங்கல், அழித்தல் ஆகியன பழங்கால, பிரித்தானிய வரலாற்றில், ஆங்கிலேய சாக்ஸன் ஆட்சிக் காலத்தில் இருந்த கொதிக்கும் எண்ணெயில் போடுவது, தீயில் போடுவது, காலை வெட்டுவது ஆகிய கொடூரமான தண்டனைகளைப் போன்றே இதுவும் உள்ளது. எனவே, இதில் மன மாற்றங்கள் வேண்டும். அந்த அடிப்படையில் தான் ஐ.நா. பெருமன்றமும் தூக்குத் தண்டனையை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை வலியுறுத்தியுள்ளது.


பொது மன்னிப்பு என்ற வார்த்தை நடைமுறையில் இருப்பது பயனற்று விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. பல வழக்குகளில் சம்பந்தமில்லாத பலர் பலியாகியிருக்கின்றனர். எல்லாவற்றும் சூழலும், நடைமுறைகளுமே காரணமாகின்றன. எது ஒன்றும் மாற்றத்திற்குரியதுதான். மாற்றங்கள் சில நொடிகளில் ஏற்படும். இன்றைக்குச் சரி எனப்படுவது நாளையே தவறாகி விடும். அப்போது வருந்தி என்ன பயன்? குரங்கிலிருந்து மனிதன் வந்தான். அதன்பிறகு பல அறிவியல் அற்புதங்களை அவன் படைத்தான். அந்த அற்புதங்கள் அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்றால் மரண தண்டனையில் மாற்றங்கள் அவசியம் வரவேண்டும். அதுவே நாகரீக பாதைக்கு அழைத்துச் செல்லும் அணுகுமுறையாகும்.

மரண தண்டனை குறித்து பிரச்சாரங்களை அதற்கான ஆர்வலர்கள் தொடர்ந்து எடுத்துச் செல்கின்றனர். இந்த இயக்கத்திற்கு உலக அளவில் ஆதரவு பெருக வேண்டும். அந்த ஆதரவில் தான் இந்த நோக்கம் வெற்றி பெறும். குழந்தைகள் பிறக்கும் பொழுது தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு பிறப்பதில்லை. வளர்ந்த பின் வளருகின்ற சூழலை ஒட்டியே தவறு செய்ய முற்படுகிறார்கள். மானிடவியலும், சமூகவியலும், அரசியலும் இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்தால் மரண தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் உறுதியாக ஏற்படும்.

ஆதிகாலத்தில் ஒரு சட்டம் நிலவி வந்தது. குற்றவாளி குற்றம் செய்தால் அவன் என்ன குற்றம் செய்தானோ அதற்குத் தகுந்தமாதிரியே தண்டனை அமையும். அதாவது பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்பது போன்ற தண்டனை. அதேபோன்று இப்பொழுதும் ஒரு உயிரை எடுத்தவனின் உயிரையும் எடுக்க வேண்டும் என்ற வாதம் சரியானதல்ல. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காகவே குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்புகிறோம். அந்தத் தனிமையில் அவர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு திருந்த வேண்டும். மரண தண்டனைகள் விதிப்பதால் குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை. தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்ட நாடுகளில் நடைபெறுகின்ற குற்றங்களைவிட, தூக்குத் தண்டனை நடைமுறையில் உள்ள நாடுகளில்தான் குற்றங்கள் அதிகமாக உள்ளன. நீதிபதி கிருஷ்ணய்யர் கூறியது போல, குற்றவாளிகள் திருந்த வாய்ப்பு கொடுக்க வேண்டுமேயன்றி அவர்களது உயிரைப் பறித்தல் தகாத செயலாகும்.


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

நன்றி-
http://www.keetru.com/


7.11.2011

ஊழல் எழுதும் ‘குற்றமும் தண்டனையும்…’


முன்னொருகாலத்தில்
இங்கு நதிகள் சுழித்தோடின
பறவைகள் கிக்கிக்கென்றிடும் ஓசையுடன்
காடுகள் மலர்ந்திருந்தன
வயல் வரம்பின் மீது அமர்ந்து
கதிர்களின் மினுக்கத்தைப் பார்த்திருந்த
காலங்கள் போயின என் மகளே…!

நதிகளின் மேலிருந்து
புகைவிடுகின்றன தொழிற்சாலைகள்
காடுகளிலிருந்து விரட்டப்பட்ட
நம் சனங்களின் இதயம்
உனது ஆடைபோலவே
கந்தலாகி விட்டது.

அழாதே அன்பே!
முன்னொரு காலத்திலே
எங்களுக்கொரு நிலம் இருந்தது
வானில் நிலவும்
மேலதிகமான
ரொட்டித் துண்டுகளும் இருந்தன.

மனித உரிமைப் போராளி மேதா பட்கர் ‘சிவில் சொசைட்டி’என்ற சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலில் ‘அரசியல் ஊழல்’என்ற ஒரு வார்த்தையைப் பிரயோகித்திருந்தார். இந்தியாவின் இன்றைய நிலைமையை அந்தச் சொல்லாடல் முற்றிலுமாகப் பிரதிபலித்திருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான (வெளிச்சத்துக்கு வந்த) ஊழல்களின் சூத்திரதாரிகள் கார்ப்பரேட் பணமுதலைகளும் அவர்களுக்கு பின்பலமும் பக்கபலமும் கொடுத்துத் தாங்கி நிற்கும் அரசியல்வாதிகளுமாக இருக்கக் காண்கிறோம்.

ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல், ஸ்பெக்ட்ரம் இரண்டாவது அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் தொடர்மாடி ஒதுக்கீடு விவகாரம், ஜார்கன்ட் மாநிலத்தின் மது கோடா ஊழல், காமன்வெல்த் போட்டி-2010 ஊழல் என்று பட்டியலிட அயர்ச்சியளித்து நீண்டுசெல்லும் ஊழல்களில் மேற்கண்டவர்களின் முகமூடிகள் தொடர்ந்து கிழிந்து செல்கின்றன. ஆகையினால், அவர்கள் மக்கள் சந்நிதானத்தில் தலைகுனிந்து நிற்கிறார்கள் என்றெல்லாம் கதைவிடப் போவதில்லை.

அரசியல்வாதிகளும்-கார்ப்பரேட் முதலாளிகளும்-தாதாக்களும்-சார்புநிலை ஊடகங்களும்-காவற்துறையும்-அரச அதிகாரிகளும் இணைந்து சாமான்ய மக்களின் மீது நிழல் யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஒரே குறிக்கோள் - பணம். பணத்திற்காக அதிகாரம் - அதிகாரத்திலிருந்து பணம் என்ற சுழற்சி முறையில் மேற்கண்டவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். தேர்தல் காலங்களில் மக்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தி அவர்தம் கால்களைப் பிடிப்பதெல்லாம் ‘மக்கள் சேவை… மகேசன் சேவை’என்ற நல்லெண்ணத்தினாலன்று. இந்தியா என்ற தேசத்தைக் கொள்ளையடித்து, தமது ‘மக்களுக்கு’ நல்வாழ்வு வழங்குவதற்காகவே. அத்தகையோரின் பேராசை சிலசமயங்களில் சறுக்கி பத்துக்குப் பதினைந்தடி திஹார் சிறையறையினுள் முடிந்துவிடுவதும் உண்டு.

“ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்?”என்ற டால்ஸ்டாயின் நெடுங்கதையை உங்களில் பலர் வாசித்திருக்கக்கூடும்.

“இதோ கண்முன் பரந்து கிடக்கிறதே இந்த நிலம் முழுவதும் எங்களுக்குச் சொந்தமானதுதான்… எவ்வளவு தூரம் நீ நடந்துபோய் வருகிறாயோ அவ்வளவு நிலமும் உனக்கே சொந்தம். சூரியன் சாய்வதற்குள் வந்துவிடவேண்டும்.”என்றார்கள் அவர்கள்.

பேராசை பிடித்த பாஹொம் போனான்… போனான்… போனான். அவ்வளவு தூரம் போனான். திரும்பிச் செல்ல முடியாது போய்விடுமோ என்ற பயத்தில் மூச்சு இரைக்கத் தொடங்கியது. ஆடைகள் வியர்வையில் நனைந்து ஒட்டிக்கொண்டன. வாய் உலர்ந்து விட்டது. இதயம் வேகமாகத் துடித்தது. கால்கள் அவனுக்குச் சொந்தமில்லாதன போல தொய்ந்து தொங்கின.

அவன் கீழே விழுந்தான். கைகள் நீண்டு அடையாளமாக வைத்துவிட்டுப் போன தொப்பியைத் தொட்டன. வேலைக்காரன் வேகமாக ஓடிவந்து அவனை எழுப்ப முயன்றான். பாஹொமின் வாயிலிருந்து இரத்தம் ஒழுகியது. அவன் இறந்துவிட்டான்!

“வேலைக்காரன் மண்வெட்டியை எடுத்து பாஹொமிற்கு (எசமானனது பெயர்) அளவான ஒரு குழியைத் தோண்டி அதனுள் அவனைப் புதைத்தான். தலையிலிருந்து கால்வரை அவனுக்குத் தேவைப்பட்டதெல்லாம் ஆறடி நிலம் மட்டுமே.”

‘ஸ்பெக்ட்ரம்’விவகாரத்தில் சிக்கி சிறைக்குள் இருக்கும் கனிமொழி டால்ஸ்டாயை வாசித்திருப்பார் என்பதில் ஐயமில்லை. இது ஒருவரின் வீழ்ச்சியில் எக்களிக்கும் துர்க்குணமன்று. நண்பர்கள் அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளிமையானவராகவும், வாசிப்பையும் எழுத்தையும் நேசிப்பவராகவும், தந்தையின் அரசியல் வெளிச்சத்தில் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல்- தனக்கென சுய ஆளுமைகளை வளர்த்துக்கொண்டவருமாகிய கனிமொழியை அதலபாதாளத்தில் தள்ளியிருப்பது பணத்தின் பாலான ஈர்ப்பு எனும் சாத்தானே.

ஒரு சில வழக்குகளிலன்றி ஏனையவற்றில் ‘சந்தேக நபர்கள்’, ‘தூய அரசியல்வாதிகள்’ நிலைக்குத் திரும்பிவிடுகிறார்கள். எந்தத் தரப்பு ஆட்சியில் இருக்கிறது, அதன் எதிர்காலக் கணக்கீடுகள், இலாபநட்டங்களைப் பொறுத்து அமைவனவே குற்றமும் தண்டனையும்.

ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கையூட்டுப் பெறவில்லை (ஏமாற்றியது, அரசுக்கு இழப்பீடு நேரக் காரணமாக இருந்தது என்ற திசைமாறியிருக்கிறது) என்று பெப்ரவரி, 2004இல் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சி இவ்வாண்டு மார்ச் மாதம் ‘தகுந்த ஆதாரங்கள்’இல்லாத காரணத்தால் அந்த வழக்கிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டிருப்பதும் இந்தியாவில் ‘குற்றமும் தண்டனையும்’ இயங்கும் முறைக்கு எடுத்துக்காட்டாகும். குவாத்ரோச்சி 64 கோடி ரூபாய்களை இலஞ்சமாகப் பெறவில்லை என்பதைக் கண்டுபிடிக்க இந்தியப் புலனாய்வுத் துறை 21 ஆண்டுகளையும் 250 கோடி ரூபாய்களையும் செலவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வராகிய செல்வி ஜெயலலிதா மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இன்மையால் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் கார்ப்பரேட் பணமுதலைகளின் தயவில் இயங்குகிறதென்றால், அதை வட்டியோடு திருப்பிக் கொடுக்கவேண்டிய கடப்பாடு உடையதாகிறது அரசாங்கம். இந்த அதிகார-முதலாளித்துவ கொடுக்கல் வாங்கலின்போது, அரசின் சட்டங்களும் ஷரத்துகளும்கூட தளர்த்தப்படுகின்றன. சட்டமீறல்கள் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. அதற்குப் பிரதியுபகாரமாக அரசியல்வாதிகளின் மாளிகைப் பின்கதவு வழியாக உள்ளே பிரவேசிக்கிறார் குபேரன்.

தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (Comptroller and Auditor General) அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். அதாவது, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமானது, கிருஷ்ணா-கோதாவரியை அண்மித்த இயற்கை எரிவாயு விவகாரத்தில், அரசுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்த விதிமுறைகளை மீறுவதற்கு பெட்ரோலியத் துறை அமைச்சு அனுமதித்துள்ளது அல்லது கண்டுகொள்ளாமலிருந்திருக்கிறது என்பதே அந்த எரிச்சல் அல்லது கடுப்பு மிகுந்த குற்றச்சாட்டாகும். அவ்வாறு ‘சிறப்புச் சலுகை’செய்ததன் வழியாக தேசத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். பெட்ரோலியத் துறை அமைச்சராக முர்ளி தியோராவை நியமிக்க காங்கிரசிடம் பரிந்துரைத்தவர் முகேஷ் அம்பானியே என்பதை, ஊடகத்தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலின் ஒரு பகுதி உறுதிப்படுத்தியிருக்கிறது. பெட்ரோலியத் துறை அமைச்சர் முர்ளி தியோராவும் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதோடல்லாமல், திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களாகவும் இருக்கும் காரணத்தால், தேசத்தின்-மக்களின் பணத்திற்கு நாமம் போட்டுவிடலாம் என்று நினைத்திருந்தால், அது அத்தனை எளிதானதில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி உணர்த்தியிருக்கிறார். ஆனால், ஒரு சில நியாயமுள்ள அதிகாரிகளின் விசனங்களை அரச தரப்பு பொருட்படுத்தாமல் முன்னகர்ந்து செல்லும் என்பதை கடந்தகாலம் கற்பித்திருக்கிறது.

குடும்பத்திற்குள் நடக்கும் அதிகாரசார்பு-முதலாளித்துவ பரிவர்த்தனைகளுக்கு உலகின் மிகப் பொருத்தமான எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்கள் இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்த்தோ குடும்பத்தினராவார். அவர்களையடுத்து யார் இடம்பெறுவர் என்பதை வரலாறு குறித்துக்கொண்டிருக்கிறது. இனிவருங் காலங்களில் அந்தப் பட்டியலில் நமக்குப் பரிச்சயமான பெயர்கள் இடம்பெறலாம்.

1967-1998 வரையிலான 31 ஆண்டு காலம் இந்தோனேசியாவை ஆண்ட சுகார்த்தோவும் அவரது பிள்ளைகளும் அந்நாட்டை எப்படிச் சுரண்டிக் கொழுத்தனர் என்பதை வாசிப்பவர்கள் மலைத்துப்போவார்கள். அதிகாரத் துஷ்பிரயோகம் என்பதை அவர்களிடமே கற்றுக்கொள்ளவேண்டும். மூத்த மகளான ரகுமானாவிற்கு சுங்கவரிச் சாலைகளை நிர்மாணிக்கும் அனுமதியை வழங்கினார் சுகார்த்தோ. அந்தச் சாலைகளில் பயணிக்கும் இராணுவ வண்டிகளிடமிருந்துகூட சுங்கக் கட்டணத்தை வசூலித்தார் ரகுமானா. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில், ரகுமானாவின் சுங்கச்சாலைகள் நாளொன்றுக்கு 210,000 டாலர்களை (86 இலட்சம் ரூபாய்கள்) வருமானமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. சுகார்த்தோவின் ஆறு பிள்ளைகளும் இந்தோனேசியாவைக் கொள்ளையடித்துக் குட்டிச்சுவராக்கினர். மாவு ஆலைகள், சீமெந்து உற்பத்தித் தொழில், விமான நிறுவனங்கள், கட்டுமானத் தொழில், தொலைத்தொடர்பு, எண்ணெய் மற்றும் மரக் கூட்டுத்தாபனங்கள், வனவளத் தொழில் இவை போதாதென்று வங்கிகளிலும் அவர்களுக்குப் பங்குகள் இருந்தன. மேலும், கடன் கொடுக்க மறுக்கும் அல்லது கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கும் வங்கி அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவைக்கவும் அவர்கள் தங்களது தந்தை வழியாக ‘அதிகாரம்’ பெற்றிருந்தனர்.

மொஹமட் ஹசன் என்ற பெரும் பணக்காரர் சுகார்த்தோக்களின் தொழில் பங்காளியாக இருந்தார். அவரது கட்டுப்பாட்டில் பெரும்பாலான ஊடகங்கள் இருந்தன. வாரத்தில் இரண்டு நாட்கள் கோல்ப் விளையாடியதுபோக, மீதமுள்ள நாட்களில் முக்கியமான பணியாக அவர் வைத்திருந்தது தனது தொழில் பங்காளியான சுகார்த்தோவின் புகழை தனது ஊடகங்களில் விதந்தோதுவது ஆகும். முரசொலி, தினத்தந்தி (ஆட்சியில் இருப்பவர் பக்கம் சாயும் நிலைப்பாடு இதற்கு உண்டு.), தினகரன், சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி இன்னபிற உங்கள் நினைவுக்கு வரலாம்.

ஆக மொத்தத்தில், சுகார்த்தோ ‘கோடு’போட்டால், அவரது பிள்ளைகள் அதில் ‘ரோடு’போட்டார்கள்.

உறவினர்களின் அதிகார பலத்தைப் பின்புலமாகவும் பலமாகவும் கொண்ட முதலாளிகள், எப்படி ஒரு மாநிலத்தில் ஏகபோக உரிமைகளையும் சலுகைகளையும் கொண்டிருக்க முடியும் என்பதற்கு, மாறன் சகோதரர்களைக் காட்டிலும் தகுந்த உதாரண புருசர்கள் இருக்கமுடியாது. Crony capitalism என்ற சொல்லாடல் அவர்களுக்கே முற்றிலும் பொருந்தும். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏழை எளிய மக்கள் உழைத்த நேரம் போக எஞ்சிய நேரத்தில் இன்புற்றிருக்கட்டுமே என்று இலவசத் தொலைக்காட்சிகளை வழங்கினார். அந்தத் தொலைக்காட்சிகளுக்கு ‘கேபிள்’வசதியை வழங்கியதன் வழியாக வீட்டுக்குள் சொர்க்கத்தைக் கொண்டு வந்தது ‘சுமங்கலி’; இலவசமாக அல்ல. மேலும், அவர்கள் குடும்பத்தினரே தயாரித்து, அவர்களே இயக்கி, அவர்களே நடித்து, அவர்களே விளம்பரம் செய்து, அவர்களே வரிவிலக்கு அளித்து, அவர்களே வெளியிட்டு (ஏனைய படங்களை வெளியிட விடாமல் முடக்கி) அவர்களே பணத்தை அள்ளிக்கொள்வதற்குப் பெயர்தான் தனியுடமை அல்லது கலப்பிலா சர்வாதீனம் என்பது.

ஒருநாள் விடிகாலையில் எழுந்து பார்க்கும்போது உங்களது வீட்டுத் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும்; நீங்கள் தொடர்ந்து சில மாதங்களாகக் கட்டணத்தைச் செலுத்தவில்லையானால். ஆனால், “தனது போட் கிளப் வீட்டுக்கும் சன் தொலைக்காட்சி அலுவலகத்திற்கும் இடையில் 323 தொலைபேசி இணைப்புகளைக் கொண்ட தனியான தொலைபேசி இணைப்பகத்தை நிறுவி, சட்டவிரோத பாவனையில் ஈடுபட்டதனூடாக பி.எஸ்.என்.எல்.க்கு 440 கோடி ரூபாய் இழப்பிற்குக் காரணமாக இருந்திருக்கிறார் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சரும், இந்நாள் ஜவுளித்துறை அமைச்சருமாகிய தயாநிதி மாறன்”என்று ‘த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’என்ற நாளிதழ் செய்தி அண்மையில் வெளியிட்டிருக்கிறது. தவறான செய்தியை வெளியிட்டதன் மூலம் தன்னை அப்பத்திரிகை அவதூறு செய்துவிட்டது என்று கொதித்து, மானநஷ்ட இழப்பீடாக பத்துக் கோடி ரூபாய் கேட்டிருக்கிறார் தயாநிதி மாறன்(கோடீஸ்வரர்கள் நட்ட ஈட்டையும் கோடிகளில்தான் கேட்பார்கள்). தவிர, ‘ஏர்செல்’லை சிவசங்கரன் என்பவரிடமிருந்து பிடுங்கி ‘மேக்சிஸ் கம்யூனிக்கேசன்ஸ்’உரிமையாளர் அனந்தகிருஷ்ணனுக்குக் கொடுத்தார்@ அதற்குப் பிரதியுபகாரமாக ‘மேக்ஸிஸ்’ தயாநிதி மாறனைக் கவனித்துக்கொண்டது”என்று தெஹல்கா வார இதழ் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டிருக்கிறது. அதற்கும் தயாநிதி மாறன் அவதூறு ‘வக்கீல் நோட்டிஸ்’ அனுப்பியிருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஊழலுக்கு முன்னாள்-இந்நாள் என்ற பேதங்கள் எல்லாம் இல்லை. கலைஞர் கருணாநிதி குடும்பத்திற்கு ஒரு காலம் என்றால், இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பத்தினருக்கு வேறொரு காலம். ஆட்சியில் இருப்பவர்களது ஊழல்கள் என்பவை புதைகுழிகள் போல. மண்ணுக்கடியில் புழுத்துக்கொண்டிருக்கும். ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டதும் கிண்டப்படும். இப்போது கலைஞரது குடும்ப உறுப்பினர்களைக் கிண்டிக் கிழங்கெடுத்துக் கொண்டிருப்பதைப் போல.

இந்தியா என்ற நாட்டில் கோடீஸ்வரர்களுக்கு ஒரு நீதியும் கோவணாண்டிகளுக்கு வேறொரு நீதியும் என்பதற்கு நீதிப் பானையிலிருந்து ஒரு சோற்றை எடுத்துக் காட்டலாம். சில வாரங்களுக்கு முன்னால் டெல்லி நீதிமன்றம் ஒன்றில் திருட்டு வழக்கொன்றுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தவர்கள் நான்கு இளைஞர்கள். இருவருக்கு ஏழாண்டுகளும் (கடூழியம்) மற்ற இருவருக்கும் நான்காண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் நான்கு பேருமாக 740 ரூபாய்களைத் திருடியிருந்தார்கள். 740ரூபாவை நான்கால் வகுத்தால் தலைக்கு 185 ரூபாய் திருடியிருந்தார்கள். ஒரு சாதாரண, அரசியல் செல்வாக்கற்ற மனிதனுக்கு 185 ரூபாயைத் திருட எவ்வளவு துணிச்சல் இருக்கவேண்டும்?

‘இந்தியா ஏற்றத்தாழ்வுகளின் உதாரண தேசம்’ என்று சொன்னால், அதன் தேசாபிமானிகள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வரலாம். ஆனால், மனிதாபிமானிகளும் பொருளியலாளரும் அறிவியலாளரும் அதை ஒத்துக்கொள்வர். இந்த ஏற்றத்தாழ்வு ஒருநாள் பூகம்பத்தில் நிகழ்ந்ததன்று. அரசாங்கம் முதலாளித்துவ பெருமுதலைகளுக்குச் சார்பாகச் செயற்பட்டதே பொருளாதாரச் சமமின்மைக்குக் காரணம். ஊழலின் பிரமாண்டத்தின் முன் ‘சமமின்மை’ என்ற சொல் நலிந்து பிச்சைக்காரக் கோலத்தில் நிற்கிறது. இது முரண்களின் தேசம். சாக்கடையின் துர்நாற்றத்தைச் சகித்தபடி பன்றிகளோடு பன்றிகளாக சேற்றில் கிடந்துழலும் மனிதர்கள் வாழும் மும்பை நகரத்தில்தான் உலகத்திலேயே பெறுமதிவாய்ந்த, (பணப்பெறுமதி-2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீடு இருக்கிறது. 27 தளங்களைக் கொண்ட அந்த வீட்டையும், ஆறு பேரைக் கொண்ட முகேஷ் அம்பானியின் குடும்பத்தையும் பராமரிக்க 600 வேலைக்காரர்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1,76,000 கோடி ரூபாய்கள் இழப்பீடு ஏற்பட்டதாகக் கணிப்பிடப்பட்டது. 41.6 வீதமான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே, அதாவது நாளொன்றுக்கு இருபது இந்திய ரூபாய்களுக்குக் குறைவாக வருமானம் பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் 1,76,000 கோடிகளில் எத்தனை சமூக நலத்திட்டங்களை முன்னெடுக்கலாம் என்பதைப் பொருளியலாளர்கள் கவனத்திலும், கணக்கிலும் கொண்டிருக்கிறார்கள். இந்திய சனத்தொகையில் 75.6 வீதமானவர்களின் வருமானம் எண்பது ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதனிடையில் ஒருநாளைக்கு இருபது ரூபாவிற்குக் கீழ் வருமானம் பெறுபவர்களே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களாகக் கருதப்படுவர் என்றும், அவர்களுக்கே அரச மானியம் வழங்கப்படும் என்றும் திட்டமிடல் இலாகா அண்மையில் அறிவித்திருக்கிறது. அதிலும், நகரங்களில் வசிப்பவர்களுக்கே அந்தச் சலுகை! கிராமங்களில் வசிப்பவர்களில் பதினைந்து ரூபாய்க்குக் குறைவாக வருமானம் பெறுபவர்களே வறுமைக் கோட்டுக்குக் கீழே வருகிறார்களாம்! குடும்பக் கட்டுப்பாடு மற்றும் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வுகளுக்காக கிராமங்கள்தோறும் பணியாளர்கள் அனுப்பிவைக்கப்படுவதுபோன்று, கிராமங்களிலும் நகரங்களிலும் முறையே பதினைந்து, இருபது ரூபாய்களில் ஒரு நாளைக் கழிப்பது எப்படி என்ற விழிப்புணர்வைப் பரப்புவதற்கு அரசு ஆவன செய்தல் வேண்டும். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ சகாப்தம் முடிந்துவிட்டது. ‘சாப்பிடக் கூடிய’ஒரு கிலோ அரிசியின் விலை 25 ரூபாய். பருப்பின் விலை 140ரூபாய் என்ற விலை விபரங்களெல்லாம் திட்டக் கமிசனின் மேலாளராக இருக்கும் உயர்திரு. மன்மோகன் சிங்கிற்கோ துணை மேலாளர் மாண்டேக் சிங் அலுவாலியாவிற்கோ தெரிந்திருக்க நியாயமில்லை.

மதுரையில் பூ விற்கும் எழுபது வயதான மூதாட்டி மீனாட்சி சொல்கிறார்.

“வீட்டிலிருந்து பூக்கடைக்குச் செல்வதற்கு ஒரு நாளைக்கு இருபது ரூபாய்கள் பயணச் செலவாகிறது”

மஹாராஷ்டிராவிலுள்ள ஜசுபேன் என்ற பெண்மணி (கந்தை ஆடைகள், காகிதங்களைப் பொறுக்கி விற்பவர்) சொல்கிறார்.

“இருபது ரூபாயில் ஒருநாளைக்குத் தேவையான பழுதடைந்த காய்கறிகளுட் சிலவற்றை மட்டுமே வாங்கமுடியும். என்னுடையது வறுமை இல்லையென்றால், எதுதான் வறுமை என்று எனக்குத் தெரியவில்லை.” (தெஹல்கா – நிஷா சுசானின் சுற்றாய்விலிருந்து)

மானியங்கள் மூலமாக அரசாங்கத்தின் கஜானாவைக் காலி செய்பவர்களாக ஏழைகள் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, பதினைந்து ரூபாயில் ஒருநாளைக் கழிக்கலாம் என்று வறுமைக் கோட்டைக் கீழிறக்கும் இதே அரசுதான் கோடி கோடியாகப் பணத்தை ‘காமன்வெல்த்’விளையாட்டுப் போட்டிகளில் கொட்டியது. அரச விழாக்களை ஆடம்பரமாக நடத்துகிறது. ஊடகத் தரகர்களான நீரா ராடியாக்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் செல்வத்தில் மிதக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்தாசை செய்கிறது.

‘பணக்கார இந்தியா’வின் பெரும்பாலான குடிமக்கள் பூச்சியத்திற்கு இணையானவர்கள். கோடிகளைப் பின்தொடரும் பூச்சியம் அன்று. அவர்கள் பதினைந்து ரூபாய் வருமானத்தில் வாழப் பணிக்கப்பட்ட பெறுமதியற்ற சுழியங்கள்.

“இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது”என்றார் காந்தி. இரண்டு இலட்சம் விவசாயிகள் வறுமை தாளாமல், கடன்தொல்லை பொறுக்கமுடியாமல், முதலாளித்துவப் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்கமாட்டாமல் தற்கொலை செய்துகொண்டார்கள்.

“அபிவிருத்தி என்ற பெயரில் ஏழைகளின் நிலங்கள் போன்ற சொத்துக்கள் பணக்காரர்களின் கைகளுக்கு மாற்றப்படுவது கூட சட்டபூர்வமான ஊழலே” என்று மனிதவுரிமைப் போராளி மேதா பட்கர் கூறியிருப்பது இங்கு நினைவிற்கொள்ளற்பாலது.

அண்மையில், ஒரிஸ்ஸாவிலுள்ள கொபின்பூர் என்ற கிராமத்து மக்களது வாழ்நிலங்களை அபகரித்து, ‘பொஸ்கோ திட்டம்’என்ற மேலுமொரு முதலாளித்துவப் பண்ணைக்கு வழங்குவதற்கு அதிகாரத் தரப்பு வெட்கமின்றித் துணைபோயிருக்கிறது. அந்த மாவட்டத்தின் செயலாளர், காவற்துறை உயரதிகாரி இருபது ‘பிளாட்டூன்’கள் காவற்துறையினரோடு அந்தக் கிராமத்து மக்களை அச்சுறுத்தி வெளியேற்றச் சென்றிருந்தனர். பாடசாலை மாணவர்களும், பெண்களும், வயோதிபர்களும்கூட நிலத்தில் படுத்துக் கிடந்து வழிமறித்து ‘நிலக்கொள்ளையர்களை அனுமதியோம்’ என முழக்கமிட்டார்கள். அதிகாரத் தரப்பு வேறு வழியின்றித் திரும்பிச் சென்றது. ஆனால், அவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆக மொத்தத்தில், சனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியா போன்றதொரு நாட்டில், காவற்துறையும் அரசதிகாரமும் முதலாளித்துவத்தின் சேவகன் போலவே செயற்பட்டுவருவதை அவதானிக்கலாம்.

இப்போது இந்தியாவைப் பற்றிப் பேச்சு எழும்போது, அதிகமும் மேற்கோள் காட்டப்படும் வாக்கியம் ஒன்று உண்டென்றால், “ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு இந்தியா”என்பதாகும். உலகத்தின் பணக்காரர்கள் வரிசையில் நான்காவது (லட்சுமி மிட்டல்), ஐந்தாவது (முகேஷ் அம்பானி), ஆறாவது (அனில் அம்பானி), ஒன்பதாவது (குசல் பல் சிங்) இடங்களில் இந்தியர்கள் அமர்ந்திருக்கிறார்கள். மேலும், உலகிலேயே அதிகளவு கறுப்புப் பணத்தை ஸ்விஸ் வங்கியில் வவைத்திருக்கும் நாடுகளில் இந்தியா முதன்மை பெற்றுப் பெருமையடைந்திருக்கிறது. 7,280,000 கோடி ரூபாய் கறுப்புப் பணம் ஸ்விஸ் வங்கியிலும், பெயரைத் தமிழ்ப்படுத்த முடியாத ஜேர்மன் வங்கியொன்றிலும் (Liechtenstein Bank) வேறும் சில நாடுகளிலும் உறங்கிக்கொண்டிருக்கிறது. முடக்கப்பட்டிருக்கும் அந்தத் தொகையானது இந்தியாவின் தலையை அழுத்திக்கொண்டிருக்கும் கடனை பதின்மூன்றால் பெருக்க வருவது. அதாவது இந்தியாவின் கடன்தொகையில் பதின்மூன்று மடங்கு பணம் ஊழல் பெருச்சாளிகளால் அங்கு வைப்பிலிடப்பட்டிருக்கிறது.

ஆக, பளபள கார்களில், பப்பள பள முகங்களோடு விரைந்து செல்லும் கோடீஸ்வரர்களை வீதியோரங்களில் அமர்ந்து ஏக்கம் வழியும் கண்களால் பார்க்கவே விதிக்கப்பட்டிருக்கிறார்கள் இந்த நாட்டின் பெரும்பான்மைக் குடிமக்கள். உழைத்துப் பிழைப்பவர்களின் வயிற்றில் பசி அக்கினி கொழுந்துவிட்டெரியும்போது, ‘அக்கினி’ இன்னோரன்ன ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி எக்களித்துக் கொண்டிருக்கிறது இந்திய வல்லரசு. ‘உலக அழகி’களின் தேசம் இந்தியா என்கிறார்கள். வறுமை வரைந்த கேலிச் சித்திரங்களைப் போலத் தோற்றமளிக்கும் மனிதர்களும் இங்குதான் வாழ்கிறார்கள்.‘ஸ்கோர் என்ன?’என்று தெரிந்துகொள்ளாவிட்டால், தலையே வெடித்துவிடும்போல பதறியடிக்கும் மனிதர்கள் வாழும் தேசத்தில்தான் இலட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் போசாக்கின்மையால் இறந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தியா என்பது கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள், அவர்களால் பயன்பெறும் கார்ப்பரேட் முதலாளிகள், ஏழை மக்களிடமிருந்து அபிவிருத்தி என்ற பெயரில் நிலங்களைப் பிடுங்கத் துணை செய்யும் நிழல் வீரர்களான தாதாக்கள், மேற்சொன்னவர்கள் மீது சட்டம் பாய்ந்துவிடாது பாதுகாப்பளிக்கும் காவற்துறை, அரசியல்வாதிகளின் கட்டளைக்கும் கற்பனைக்கும் இயைபுற இயங்கும் ஊடகவியலாளர்கள் என்ற ஒரு வலைப்பின்னலால் சூழப்பட்டிருக்கிறது.

பசி தாளமாட்டாமல் உணவகத்தில் திருடியவன் நீதிமன்றத்தில் கைகட்டி நின்றுகொண்டிருக்கும்போது, 50,345 கோடி ரூபாய்களை வருமான வரியாகச் செலுத்தவேண்டியிருப்பதாகச் சொல்லப்பட்டுவரும் ஹசன் அலி கானை 2010ஆம் ஆண்டு ஏப்ரல் வரை ‘கண்டுகொள்ளாமல்’ வெளியில் விட்டு வைத்திருந்தது ஏன்? மேலும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 2010 மார்ச் மாதம் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில், ஹசன் அலி அரசுக்குச் செலுத்தவேண்டிய வருமான வரியைச் செலுத்திவிட்டதாகத் தெரிவித்திருந்தார். அந்த வருவாய் 2009-2010 இற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் காட்டப்படவில்லை. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஹசன் அலி கானைக் காப்பாற்ற முனைவதன் காரணம் என்ன என்பது 9 பில்லியன் டாலர் பெறுமதியான கேள்வியாகும். ஹசன் அலி உண்மையிலேயே 9 பில்லியன்களுக்கு அதிபதியா? அன்றேல் அந்த பில்லியன்களுக்கு அதிபதியாக இருப்பவர்கள் பவிலியனில் அமர்ந்திருந்தபடி வேடிக்கை பார்க்க, ஊழல் களத்தில் இறக்கிவிடப்பட்ட பலியாடா? என்பது இன்றுவரையில் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.

ஃபோபர்ஸ் பீரங்கி ஊழலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்திற்கு கையூட்டு எதுவும் கிட்டவில்லை; அவர் இந்திய அரசுக்கு பண இழப்பு ஏற்படக் காரணமாக இருந்தார் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இந்திய அளவிலும் காங்கிரஸ் அளவிலும் அவர் உதாரண ‘புருசனாகி’விட்டார். ஆனால், இந்திய எல்லையைத் தாண்டிய ஊடகங்களுக்கு நேரு குடும்பத்தின் தூய்மையைக் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை.

Schweizer Illustrierte என்ற, சுவிர்ட்சலாந்துப் பத்திரிகையில் நவம்பர் 19, 1991 அன்று வெளியிடப்பட்ட செய்தியொன்றில், 2.2 பில்லியன் டாலர்கள் (இன்றைய கணக்கின்படி பத்தாயிரம் கோடி ரூபாய்கள்) சோனியா காந்தி அவர்களது இரகசியக் கணக்கில் இருப்பதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. அது இன்றைக்கு 43,000 கோடியிலிருந்து 84,000 கோடி வரை வளர்ந்திருக்கலாம் என்று ஊகங்களும் கணிப்பீடுகளும் சொல்கின்றன. புலனாய்வு ஊடகவியலாளரும், அரசியல் விஞ்ஞானியுமாகிய வேர்ஜினியா அல்பர்ட்ஸ் (ரஷ்யர்) 1989 இல் The State within a Stake: KGB and Its Hold on Russia என்ற புத்தகத்தை எழுதினார். அதில், குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விடயம் இந்திய ஊடகங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷ்ய உளவு நிறுவனமான கே.ஜி.பி. மேலாளர் விக்ரர் செப்ரிகோ-1985இல் ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்குப் பணம் கொடுக்கப் பணித்ததாக அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. “ராஜீவ் காந்தி, சோனியா காந்தி,ராகுல் காந்தி மற்றும் பௌலா மைனோ (சோனியா காந்தியின் தாயார்)ஆகியோருக்கு அமெரிக்க டாலர்களில் அந்தப் பணம் கொடுக்கப்பட வேண்டும்” என விக்ரர் செப்ரிகோவ் பரிந்துரைத்துள்ளார்.

நிலைமை இவ்விதமிருக்க, “வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவின் கறுப்புப் பணம் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்”என்ற உரத்த குரலுக்கு, திருமதி சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செவிகளை மூடிக்கொண்டிருப்பதில் சித்தஇரகசியம் ஒன்றுமில்லை.

ஊழலுக்கெதிராக ‘லோக் பால்’ சட்டத்தைக் கொண்டு வருவதாலோ, காந்தியவாதி அன்னா ஹசாரேயும், யோகா குரு ராம்தேவும் உண்ணாவிரதம் இருப்பதாலோ, மெழுகுவர்த்திப் பிரார்த்தனைகளாலோ இந்தியாவிலிருந்து ஊழலை ஒழித்துவிட முடியாது.

இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு அடித்தட்டு மக்களுக்கானவையாகவும் மாற்றப்படாதவரையில் ஊழல் பெருச்சாளி நாட்டைக் கபளீகரம் செய்வது நிற்காது. ஆட்சிகள் மாறலாம்; ஆட்களும் மாறலாம்; மேற்கண்ட மாற்றம் நிகழாதவரையில், ஊழலே அரியணையில் அமர்ந்து பல்லை இளித்துக் காட்டி மக்களைப் பரிகசித்துக்கொண்டிருக்கும்.

நன்றி அம்ருதா ஜூன் மாத இதழ்