10.20.2008

இராமேஸ்வரமும் இனவுணர்வும்


அநேக வீட்டுக்கூடங்களைப் போல எங்கள் வீட்டுக் கூடத்திலும்(விறாந்தையிலும்) மாலையானதும் அழுகையும் விம்மலும் பொங்கி வழியும். தொலைக்காட்சியில் நெடுந்தொடரொன்றில் யாராவது ஒரு பெண் அழுகையையும் வசனத்தையும் சமஅளவில் கலந்து வழங்கிக்கொண்டிருப்பாள். தொலைக்காட்சியின் முன்னால் அதற்குச் சற்றும் குறைவிலாத சோகம் ததும்ப யாராவது அமர்ந்திருப்பார்கள். நேற்று எனது அறையை விட்டு வெளியில் வந்து பார்த்தபோது (அவ்வப்போதுதான் வருவது:)) வழக்கத்திற்கு மாறாக குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் -நாய்க்குட்டியையும் சேர்த்து பத்துப்பேர்-(கண்ணைப் போட்டுறாதீங்க) தொலைக்காட்சியின் முன் அசையாது அமர்ந்திருந்தார்கள். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிக்கொண்டிருந்தார். “கவிஞர் வைரமுத்து என்ன மாதிரிப் பேசினார் தெரியுமா”என்று என்னையும் உள்ளே இழுத்துப்போட்டார்கள். வழக்கமான குசும்பால் ‘பகல் கனவில் கவிஞர் வைரமுத்து வரவில்லை’எனச் சொல்லிவிருந்தேன். நிகழ்ச்சியின் கனம் என் குசும்பில் கத்திவைத்தது.

"கடைசித் தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற தமிழர்களை அழிப்பதை லட்சியமாக கொண்டுள்ளார் ராஜபக்ச. அதற்காக உங்கள் ஓட்டுப்பெட்டிகளில் எங்கள் தமிழர்களின் தலை, வாக்குகளாக விழவேண்டுமா?" என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் உணர்வுபூர்வமாகக் கேட்டிருந்ததை பின்னால் இணையத்தளங்களில் வாசிக்கக் கிடைத்தது.


இலங்கைத் தமிழர்களும் தமிழக மீனவர்களும் சிங்கள அராஜக அரசினால் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து திரைத்துறையினர் இராமேஸ்வரம்வரை சென்று நடத்திய கூட்டத்தைப் பார்த்தபோது, கேட்டபோது ‘என்னடா நடக்குது இங்க…?’ என்ற வியப்புத் தாளவில்லை. கடந்த மாதம் வரை தமிழகம் இருந்த உறைநிலைக்கும் இன்றைய கரைதலுக்கும் இடையில் மலையளவு வித்தியாசம். விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினால் குற்றம், கூட்டம் நடத்தினால் கைது, ஈழத் தமிழர்களுக்கு வீடு கொடுக்கப் பயம் என வேற்றுக் கிரகவாசிகளென (சீமான், பழ.நெடுமாறன்,வைகோ,திருமாவளவன் போன்ற சிலரைத் தவிர்த்து) ஈழத்தமிழர்கள் மட்டில் பாராமுகமாயிருந்த தமிழகத்தில் இனவுணர்வு விழித்தெழுந்தது எப்படி? ‘நான் இந்தியன்’என்ற நிலைப்பாடு ‘நான் தமிழன்’எனக் கண்ணிமைக்குத் தருணத்தில் மாறியது எங்ஙனம்? ‘ராஜீவ் காந்தி கொலை’ என்ற பதினெட்டாண்டு கால இருட்திரை விலகி உண்மை கண்கூசும்படியான வெளிச்சத்துடன் அரங்கேற என்ன காரணம்?

ஆக,இனவுணர்வு என்பது தமிழர்களிடம் ஒளிந்திருந்திருக்கிறது. இருண்ட சிறைக்கூடங்கள் மற்றும் சித்திரவதைகளின் மீதான அச்சம்தான் அவர்களுக்கு வாய்ப்பூட்டுப் போட்டிருக்கிறது. அன்பு உலகைப் புரட்டிப்போடும் என்பதெல்லாம் வெறும்புரட்டு. அதிகாரம்தான் யாவற்றும் எசமானன்.


நடப்பவற்றையெல்லாம் பார்க்கும்போது“கலைஞர் எப்போதடா பேசுவார்” என்று காத்துக்கொண்டிருந்த மாதிரி இருக்கிறது. அவருடைய நீண்ட மௌனத்தின் விலை அதிகம். ஹிட்லரின் பேச்சு-யூதர்களை அழித்தது. கலைஞரின் மௌனம்…? அரசியல் சூத்திரங்கள், சதுரங்கக் காய்நகர்த்தல்கள், தொலைநோக்கு இலாபம் எனப் பல சொற்றொடர்கள் சமகால நிலையை விளக்குவதற்கான பிரயோகத்தில் உள்ளபோதிலும், நாற்காலிகளையே கரைத்தது ஒரு இறுவட்டில் இடம்பெற்ற இனவழிப்புக் காட்சிகள்தான் என்ற கதையும் உலவுகிறது. இருக்கலாம்! கலைஞர் வெறுமனே ஒரு அரசியல்வாதியாக மட்டும் இருந்திருந்தால் மேற்குறித்த கூற்றைப் புறங்கையால் புறந்தள்ளிவிடலாம். அவருடைய கலையுள்ளம், கவியுள்ளத்தை அக்காட்சிகள் ஏன் கரைத்திருக்கக்கூடாது? ‘நீயறியாய் நீராழம்’என்று இதை வாசிக்கும் எவரேனும் இந்நேரம் சிரித்துக்கொள்ளவும் கூடும்.


‘இந்த மலர் யாரால், எதனால் மலர்ந்தது?’என்ற கேள்விகள் வியர்த்த வியாக்கியானங்கள். மலர்ந்திருக்கிறது. அதுவொரு தேவமலரைப் போலிருக்கிறது. அதன் வாசனையூடே நடந்துபோகும்போது உண்டாகும் பரவசத்திற்கு இணையில்லை.


இராமேஸ்வரத்தில் திரைத்துறையினரால் நடத்தப்பட்ட கூட்டத்தைப் பார்த்தபோது, அவர்களெல்லாம் பேசியதைக் கேட்டபோது ‘‘இந்நிலை வந்தடைய எப்பாடுபட்டோம் எம் தேவா’ என்று நெகிழ்ந்துபோய் அழத் தோன்றியது. 'தமிழகம் விழித்துக்கொண்டதென மகிழாதீர். இந்திய இறையாண்மை அதன் கண்களை மறுபடியும் மூடிவிடும்'என்று யாரோ அசரீரியாகச் சொல்லிக்கொண்டிருந்தாலும், பதினெட்டு ஆண்டுகள் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் விலக்கப்பட்டவர்களாக வாழ்ந்திருந்த வலி கொடிதிலும் கொடிது. பதினாறு மைல் தொலைவில் ஒரே மொழி பேசுகிற சகோதரர்கள் இருந்தும் யாருமற்ற ஏதிலிகள் போல – ஒரு கை வெட்டப்பட்ட நிலையிலும் மறுகையால் எங்கள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தோம். எண்பதுகளுக்குப் பிற்பாடு தமிழகத்தில் இப்படியொரு இன அலை அடிப்பது இதுதான் முதற்தடவை. பேச்சு-அதிலும் திரைத்துறையினரின் பேச்சு அரிதாரம் கலைத்ததும் அதுவாக கரைந்துவிடும் என்பது சில ‘அறிவுஜீவி’களின் கணிப்பாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரிதாரர்கள்தான் அதிகாரர்களாக மாறியிருக்கிறார்கள். வரலாற்றை மாற்றியுமிருக்கிறார்கள். தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு துரும்பு கிடைத்தாலும் பற்றிக்கொள்ளவே துடிப்பான். நாங்களோ கண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறோம்.


இனி இராமேஸ்வரம் பேச்சு: திரு.டி.ராஜேந்தர் ‘நான் எப்பேர்ப்பட்டவன்’ என்று கொஞ்ச நேரம் எடுத்துரைத்துவிட்டு, வழக்கமான தன் பாணியில்…
“நாங்கள் மீனுக்குப் போடுவோம் வலை

உத்தரவு கொடுத்தால் எதிரிகளைச் செய்வோம் கொலை

தமிழன் உணரவேண்டும் தன் நிலைஎன்றார்.


இயக்குனர் கே. எஸ்.ரவிக்குமார் ஈழத்தமிழர்களாகிய உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கையூட்டிப் பேசிவிட்டு “ஈழத்தமிழர்களுக்கு மேலும் இன்னல் நடந்தால் தமிழகம் இராமேஸ்வரக் கரையைத் தாண்டி வரத் தயங்காது”என்றார்.


இயக்னநர் சேரன் தன்னுடைய சினிமாவைப் போல யதார்த்தமாகவே பேசினார். “புரட்சி என்பது உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பிக்கட்டும். திரைத்துறையினர் செய்யட்டும்@ அரசியல்வாதிகள் செய்யட்டும்… என்று நீங்கள் கையைக் கட்டிக்கொண்டிருந்து ஆகாது. மக்களாகிய நீங்கள் உங்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனையாக அதைக் கருதிப் பங்கேற்கவேண்டும்.”என்றார்.


இயக்குனர் சீமான் என்ன பேசியிருப்பார், எப்படிப் பேசியிருப்பார் என்பதை அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்குப் போனவர்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. ‘பேச்சில் அனல் பறந்தது’என்று எழுதுவதை வாசித்திருக்கிறோம். அதை நேரில் பார்த்த அனுபவம் எனக்கு இரண்டு முறை கிட்டியது. விஷயஞானம்,தனது பேச்சோடு பார்வையாளரைக் கட்டிப்போடும் திறன், உணர்வுப்பெருக்கு… (வியர்வைப் பெருக்கும்) உடல்மொழி… என அவர் பேச ஆரம்பித்தால் கூட்டம் காதைக் கொடுத்துவிட்டுக் கட்டுண்டு கிடக்கிறது.


“பர்மாவில் தமிழனை அடித்தார்கள். பம்பாயில் தமிழனை அடித்தார்கள். மலேசியாவில் தமிழனை அடித்தார்கள். கேரளா, கர்நாடகா,ஆந்திராவில் தமிழர்களை அடித்தார்கள். ஆனால், நம்மை அடித்தவர்களை திருப்பி அடித்த ஒரே இடம் தமிழீழ மண்தான்”என்றார். கைதட்டல் காது கிழிந்தது.

மேலும், ‘தமிழீழம் இன்னமும் கிடைக்கவில்லை என்று யாரும் நினைத்துக்கொண்டிருக்கவேண்டாம். அது எப்போதோ கிடைத்துவிட்டது. அங்கே இப்போது எல்லை விரிவாக்கம் நடந்துகொண்டிருக்கிறது. மேலும் சர்வதேச அங்கீகாரத்தை தமிழீழம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது”என்றார்.


இயக்குனர் அமீர் “தமிழ்நாட்டிலிருந்து எம்.பிக்கள் மத்திய அரசுக்கு வேண்டும். ஆனால், தமிழர்கள் வேண்டாமா?”என்று கேட்டார். அவருடைய பேச்சும் ஆழ்ந்த கருத்துடையதாகவும் உணர்வுபூர்வமாகவும் அமைந்திருந்தது.


நடிகர் லிவிங்டனின் பேச்சு ஒரு பிரார்த்தனைபோல உள்ளத்தைக் கரைக்கும்படியாக அமைந்திருந்தது. தானும் கண்கலங்கி கூட்டத்தையும் கலங்கவைத்தார்.


நடிகர் வடிவேலு ஈழத்தில் நடக்கும் இனவழிப்பை தான் இணையத்தளங்களில் பார்த்து ஆழ்ந்த துயரமடைந்ததாக கண்கலங்கிப் பேசினார். அங்கே அமைதி நிலவ இந்தியா அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டும் என்றார். ‘பெரியவங்க என்ன சொல்றாங்களோ அதுக்கு கட்டுப்பட்டு’என்ற வாக்கியத்தை அடிக்கடி பிரயோகித்தார்.


நான் சீமானை வியந்துகொண்டிருக்க, எங்கள் வீட்டு ‘குட்டி நட்டி’களின் வாக்குகளை அள்ளிக்கொண்டு போனவர் மன்சூர் அலிகான்தான். ஏனென்றால் அவர்தான் நிறைய கெட்டவார்த்தைகளால் மஹிந்த ராஜபக்சவைத் திட்டித் தீர்த்திருந்தார். ‘பிச்சைக்கார நாய்’, ‘மயிராண்டி’ ‘அவனுக்குத் திறந்து காட்டவா இங்க இருக்கோம்’ இன்னபிற வசவுகளும் அவற்றுள் அடக்கம்.


“ராஜ பக்சே! நீ ஒரு கோட்சே”
என்றார் இருந்தாற்போல. வில்லன் நடிகராகவே அவரைப் பார்த்திருந்தவர்கள் வியக்கும்படியாக திடீரென்று கதாநாயகனாகிவிட்டார். கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் யாரோ எழுந்துவந்து காதில் குசுகுசுக்க ‘எந்தச் சட்டத்தில உள்ள தூக்கிப் போடப் போறாங்க… 306 ஆ...----------- என்று கேட்டுத் தனது 'சிறையறிவை' நிரூபித்தார். ஆக, அஞ்சா நெஞ்சன் மன்சூர் அலிகானுக்கு உண்மையிலேயே ‘தில்’இருப்பதைக் கூட்டத்தில் பார்க்க முடிந்தது.


மன்சூர் அலிகான் கேட்ட அதே கேள்வியை சேரன் வேறு விதமாகக் கேட்டார். “மன்சூர் அலிகான் பேசிக்கொண்டிருக்கும்போது ‘அடக்கி வாசிங்க… பொலிஸ்காரங்க நிக்கிறாங்க’என்று குசுகுசுக்கிறார்களே… இங்கே காவலுக்கு நிக்கிற பொலிஸ்காரங்க என்ன மராட்டியங்களா… அவங்களும் தமிழங்கதானே… அப்படியானால் தமிழனுக்காகப் பேசவிடாமல் தடுப்பது யார்…? என்ன நடக்குது இங்க?”என்று குரலெழுப்பினார்.


கவிஞர் நா.முத்துக்குமாரின் கவிதையைக் கேட்டதும்… அழுததை இங்கே சொல்ல மாட்டோம். நல்லவேளை இரவாகியும் மின்விளக்குகள் அணைக்கப்பட்டே இருந்தன.


பேரணிக்குத் தலைமை தாங்கிய இயக்குனர் பாரதிராஜா தனது கரகரப்பும் கணீரும் கூடிய குரலில் இராமேஸ்வரத்தில் கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும் காரணத்தைச் சொன்னார்.
“இது ஈழத்தமிழர்கள் அகதிகளாக வந்து கால் பதித்த இடம். கண்ணீர் விட்ட இடம். எனவேதான் இங்கு வந்தோம். சென்னையில் உட்கார்ந்துகொண்டு முதுகையா சொறிய முடியும்? சாவு வீடு என்றால் நாம்தான் அந்த வீட்டுக்குப் போகவேண்டும். அதை விட்டுவிட்டு ‘பிணத்தைத் தூக்கிக்கொண்டு என் வீட்டுக்கு வா’என்று கூறுவது சரியாக இருக்காது”என்றார். மேலும் தமிழீழத்தில் விடுதலைப் புலிகளது நிர்வாகத் திறனையும் அங்கு வாழும் மக்களின் தமிழ் பற்றினையும் வெகுவாகச் சிலாகித்துப் பேசினார்.


இவர்களைவிட நடிகர்கள் ஜீவா, பாண்டியராஜன், கருணாஸ், பார்த்திபன், இயக்குனர் வி.சி.குகநாதன், தயாரிப்பாளர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், மீனவ சங்கத் தலைவர்கள் இன்னும் பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.
“பேசமாட்டேம் பேசமாட்டேன்னு சொல்லிட்டுப் பேசிட்டுப் போய்ட்டாங்கய்யா” என்பதுபோல ‘இங்கு அரசியல் பேசவேண்டாம். எதிரிகளைச் சாடும் மேடை இதுவல்ல’என்ற தொனியில் எல்லோரும் சொன்னாலும் ஒரு வார்த்தையாவது ‘உள்குத்து’வைத்துச் சொல்லாமல் மேடையைவிட்டு இறங்கவில்லை என்பதைக் கவனித்தோம். பதில்குத்து அடுத்த பக்கத்தில் இந்நேரம் தயாராகிவிட்டிருக்கும்.


எல்லோரும் நன்றாகவே பேசினார்கள். ‘தமிழரைய்யா நாங்கள் தமிழர்’என்று பெருமிதம் பொங்கி வழிந்தது. “பேச்சுப் பேச்சாவே இருக்கட்டும். ஆம்மா…”என்று வடிவேலு பாணியில் இம்முறையும் சொல்லிவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. எனினும்‘சொல்லில் விளையும் செயல்’என நம்பவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இம்முறையேனும் சொல் சொல்லாகவே உறையாதிருக்கட்டும். மேலும், வாராமல் வந்த இச்சாதகமான சூழ்நிலையை, விடுதலைப் புலிகள் பின்னடையும்போதெல்லாம் பட்டாசும் பலகாரமும் சுட்டுக் கொண்டாடும், அவர்கள் முன்னேறும்போதெல்லாம் புண்ணிலே புளிப்பற்றிக்கொண்டதுபோல பதறும், சுயலாபத்திற்காக ஒரு இனத்தையே இழிவுசெய்து அழிவுக்குத் துணைபோகும், சிங்கள பௌத்த இனவாதிகளுக்கு ஒத்தூதும் சில உள்ளுர் ஊதுகுழல்கள் தகிடுதத்தங்கள் செய்து கெடுக்காமலிருக்கவேண்டுமே என்பதே இப்போதைய முதன்மைப் பிரார்த்தனை.

10.13.2008

தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம்

ஆயுதங்களைக் கைவிடும்படியாக
அறிவித்தல் கிடைத்தது.

நல்லது!

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்

எஞ்சிய வீடுகளை
நாங்களே தரைமட்டமாக்க...
சுவர்களில் மூளை சிதறி வழியும்
கனவுகளோடிருக்கும் உங்கள்
விழிகளை ஏமாற்றி
குழந்தைகளுக்கு முன்னதாகவே நஞ்சூட்டி விட…
அரச மரங்களை விடுத்து
கோயில்களைத் தகர்த்துவிட…
நீங்கள் வன்புணர்ந்து சிதைக்கவிருக்கும்
யோனிகளுடை பெண்களை
இழிவின்முன் கொல்லவும்

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.

சுறுசுறுப்பாக இயங்கவிருக்கும்
உங்கள் வதைகூடங்களைச் சுத்திகரிக்க…
புகட்டுவதற்கென
மலமும் மூத்திரமும் குடுவைகளில் சேகரிக்க…
நகக்கண்களுக்கு ஊசிகள்...
குதிகால்களுக்கு குண்டாந்தடிகள்...
முகம் மூடச் சாக்குப்பைகள்…
மேலும்
கொஞ்சம் மிளகாய்ப்பொடி தயாரிக்க

உங்களுக்கும் அவகாசம் வேண்டுமல்லவா?

எங்களது பூர்வீக நிலங்களில் குடியமர்த்த
ஆட்களையும் அடியாட்களையும்
தயார்ப்படுத்தியாயிற்றெனில்
யாவும் நிறைவு.

பூரண (மயான) அமைதி பொலிக!

ஆயுதங்களைக் கைவிடுமுன்
அவகாசம் வழங்கி
தேவரீர்
கருணை பாலிக்க வேண்டுகிறோம்.

10.08.2008

எழுதாத காரணம்

“எழுதாத காரணம் என்ன?”என்றாய்.

வாசிக்கவெனப் புரட்டிய பக்கத்தினின்று
சிறகு தழைத்தெழும் விழிப்பறவை
முடிவற்ற வானில்
திசைதப்பியலைகிறது.

வரிகள் வழிந்தோடிவிடும் வெற்றிடங்களில்
ஞாபகக் கத்திகள் சுழல்கின்றன.
உபரியாய்
ஊளையிடுதலே ஒரே பொழுதுபோக்கான
கீழ்வீட்டு நாய்கள்…
சாணை தீட்டுபவனின் கூர்மைக் குரல்…
வெறுமையைத் தெளிக்கும் வெயிலை
விரட்டுவதாக
சதா தற்பெருமையடிக்கும் மின்விசிறி…
ஆளற்ற தெருவில் ஒலிப்பானின்
அநாவசிய அலறல்கள்…
கதவுக்கு வெளியில்
பஞ்சாயத்து வேண்டும் பல்குரல்கள்...
பலவீனமறிந்த பிச்சைக்காரி
கூடவே அழைத்துவரும் சிறுகுழந்தையின்
பாவனைப் பசிக்குரல்...

இவை தாண்டி
பனிக்கால மரங்களுள்
சிறைப்பட்ட துளிர்களாய்
காத்திருக்குமோ கவிதை?