6.19.2010

கவிஞர் கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்களை’முன்வைத்து…

எழுத நினைத்ததற்கும் எழுதிமுடித்ததற்கும் இடையில் நிற்கிறது எவராலும் அவிழ்க்கமுடியாத எழுத்தின் புதிர். எழுதுபவர் தெரிந்தே இழக்கும், ஆனால் நினைத்தாலும் கையகப்படுத்தவியலாத இடம் அது. இந்த அழகிய தோல்வியை வாசிப்பவர் உணர்ந்திடா வண்ணம் நீரோட்டத்தை வகிர்ந்துவலிக்கும் துடுப்பாய் செலுத்திச் செல்வது அற்புதமானதொரு கலை. அந்தக் கலையை கலாப்ரியாநினைவின் தாழ்வாரங்கள்இல் வெளிப்படுத்தியிருக்கிறார். பால்யம் மற்றும் விருத்தெரிந்த இளம்வயது ஞாபகங்களின் தொகுப்பே இந்நூல். உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய விருதுகளில், இந்நூல் இவ்வாண்டின் உரைநடைக்கான விருதினைப் பெற்றிருக்கிறது. இந்நூலைப் பரிந்துரைத்த பிரபஞ்சன் அவர்களின் வார்த்தைகளில் சொல்வதானால், ‘அன்பின் ஈரம் படரும் தமிழ் வசனம் கலாப்ரியாவுடையது’.

பாராட்டை மட்டுமே விரும்புகிற சாதாரணனாகிய நான்என்று தனது முன்னுரையில் கலாப்ரியா குறிப்பிட்டிருப்பது நினைவிலிருக்கிறபோதிலும், ஓருண்மையைச் சொல்லவேண்டியிருக்கிறது. ஒரு கவிஞராக கலாப்ரியாவைப் பிடித்ததைவிடநினைவின் தாழ்வாரங்கள்இல் உரைநடையாளராக அதிகமும் பிடித்தது. ஐந்தாறு புத்தகங்களை ஒரே நேரத்தில் வாசித்துக்கொண்டிருக்கிற பலரில் நானும் ஒருத்தி. நடைவரண்ட, ஆனால் படித்தேயாகவேண்டுமென என்னை நானே நிர்ப்பந்திக்கிற புத்தகங்களை வாசித்து முடிக்க மாதக்கணக்காகும். நாவல்களோவெனில் அவற்றின் பருமன்பொறுத்து சில வாரங்கள் எடுக்கும். கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்களைக் கையில் எடுத்தபிறகு, போகும் வரும் இடமெல்லாம் அந்த நினைவன்றி வேறில்லை. அதுவொரு புதினம் இல்லை; அறிவியல், அரசியல் கட்டுரையும் இல்லை; இருந்தும் அது என்னைத் தொடர்ந்தது. அன்றேல் அதை நான் தொடர்ந்துகொண்டிருந்தேன். ‘கவிதைகளின் வழி நாமறிந்த ஒருவரின், அறியக்கிடைக்காத தனிப்பட்ட வாழ்வினைப் பேசும் எழுத்துஎனும் ஈர்ப்பினால், நினைவின் தாழ்வாரங்களைத் தொடர்;ந்திருக்கக்கூடும். மனிதமனம் அப்படித்தான் அவாவும்போலும். மேலுக்கு எளிய சொல்முறைபோல் தோற்றமளிப்பினும் துயரமும் எள்ளலும் தூவிய வசீகர நடை அது. வியப்பென்னவெனில், எள்ளலுக்கு நகைத்துவிடமுடியாதபடி அதன் பின்னொளிந்திருக்கும் துயரமும் - துயரத்தில் ஒரேயடியாக மூழ்கிவிடமுடியாதபடி முன்னகர்த்திச்செல்லும் பகிடியும் இணைந்த சீர்சரடாய்ப் போய்க்கொண்டிருந்ததுதான். தன்வரலாறும் அக்காலகட்டத்தின் சமூகவரலாறும் ஒருங்கிணைந்து வெளிப்பட்ட எழுத்து அது. இன்னொருவகையில் கூறினால், கலாப்ரியா என்ற தனிமனிதரின் கண்களினூடாக சுற்றவரவுள்ள சமூகத்தைக் காட்சிப்படுத்தும் கலையென்றும் சொல்லலாம்.

ஒரு குடும்பத்தின் கடைசிப்பிள்ளை, எம்.ஜி.ஆரின் அதிதீவிர ரசிகன், தி.மு..வின் ஆதரவாளன், விடலைப்பருவம் கொண்டலைக்கிற சேட்டைக்காரன், அழகிய பெண்களின் மகாரசிகன், குற்றவுணர்வும் கர்வமும் இரக்கமும் சமவிகிதத்தில் கலந்த சகோதரன், அத்யந்த தோழன் அனைத்திற்கும் மேலாக பின்னெழுதவிருந்த கவிதைகளுக்கான காட்சிகளை முன்னரே மனசுள் சேமித்துவைத்திருந்த மென்மனசுக்காரன் எனப் பல முகங்கொண்ட சோமுவாகிய கலாப்ரியா எங்கேயும் தன்னைத் துருத்திக்கொள்ளாதவராக, பிரசங்கிக்காதவராயிருந்தது தனிச்சிறப்பு. கனவான்களாக எந்நிலையிலும் தம்மைக் காண்பித்துக்கொள்ளாதவர்களே உண்மையான கனவான்களாகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் கதையேநினைவின் தாழ்வாரங்கள்’. சேரகுளம் சின்னப்பண்ணையாரின்(கலாப்ரியாவின் அப்பா) குடும்பம் பெரிய வீட்டிலிருந்து சின்னவீட்டுக்குப் பெயர்ந்து (இந்நூலில்சின்னவீடுகள் நிறையவே இடம்பெற்றிருக்கிறபோதிலும், இது உண்மையாலுமே சின்னவீடு), அண்டாக்கள், ஜாடிகள், படங்கள், கண்ணாடிகள், ரேடியோ, சட்டகங்கள், இரும்புப்பெட்டி எல்லாமும் விற்றுச் சாப்பிட்டுத் தீர்க்கும் நிலைக்குக் கீழிறங்குவதே சாரம். ‘காலமாற்றத்தில், நிலவுடைமைசார்ந்த, செல்வவளமுள்ள ஒரு குடும்பத்தின் சிதைவே இந்நூலின் மையப்படிமம்என்கிறார் தன்னுரையில் ஷங்கர்ராமசுப்ரமணியன்.

நிலங்களை மையங்கொண்டமைந்த கதைகள் மனதில் நிலைத்துவிடுகின்றன. திருநெல்வேலியில் புதுமைப்பித்தன் இருந்தார். வண்ணநிலவனும் வண்ணதாசனும் விக்ரமாதித்தனும் தமயந்தியும் கலாப்ரியாவும் இன்னும் பலரும் இருக்கிறார்கள். நாம் கண்ணால் பார்த்திராத நெல்லையப்பர் கோவிலின் பிரகாரத்தில் அவர்கள் நம்மை நடத்திச் செல்கிறார்கள். தாமிரபரணித் தண்ணீரின் குளிர்ச்சியை நம்மீது அள்ளித் தெளிக்கிறார்கள். அமர்ந்து அமர்ந்து வழுவழுப்பாகிவிட்ட திண்ணைகளைப் போல, எழுதி எழுதி மேலும் மெருகேறிவிட்டிருக்கக்கூடும் திருநெல்வேலிக்கு. தி.ஜா.காட்டிய கும்பகோணத்திலும் வண்ணநிலவன், வண்ணதாசன் காட்டுகிற திருநெல்வேலியிலும் இன்னுந்தான் கால்பதிக்க இயலவில்லை என்ற குறை எப்போதும் உளது.

அநேகமாக படிக்கிற புத்தகங்களில் எல்லாம் நம்மைத்தான் தேடுகிறோம் என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம் நம்மில் ஒரு கூறையேனும் கண்டடைய முடிகிற பிரதிகள் நமக்கு நெருக்கமாக அமைந்துவிடுகின்றன. நினைவின் தாழ்வாரங்களில் நான் நெகிழ்ந்து மனங்கரைந்த இடங்களில் பெண்களே இருக்கிறார்கள்.

பால்வற்றிப்போன தாய்மாரின் குழந்தைகளுக்கு அலட்டிக்கொள்ளாமல் முலையூட்டும்- சேலைக் கனமா அழுக்குக் கனமா என்று யோசிக்கத் தூண்டும், மகேந்திரனின் தாய்- தன் கணவனும் வேறொரு பெண்ணும் அவளது கணவனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கணவன் இறந்தபிற்பாடு அவரது பெட்டியில் கண்டு கண்கலங்கும் அம்மா- எவனோ ஒரு பெட்டிக்கடைக்காரனால் வல்லுறவுக்காளாக்கப்பட்ட காரணத்தால் கணவனால் தள்ளிவைக்கப்பட்டு, பிள்ளைப்பாசத்துக்காக ஏங்கும் தாய்- தங்கையின் கல்யாணத்துக்காக காசுசேர்த்து முடிந்ததும் கன்னியாஸ்திரியாகப் போய்விடுவதாகச்சொன்ன ஜெசிந்தா- எதிர்மாறாக, ஜெசிந்தாவுக்குக் கல்யாணமாகிவிட, வாழ்வின் குரூரமான அலைக்கழிப்பில் கன்னியாஸ்திரியாகக் கரையொதுங்கிவிட நேரும் அதே தங்கை மெர்வின்- வெள்ளத்தோடு அள்ளுண்டுபோகவிருந்த பசுவைக் காப்பாற்றிக் கரைசேர்த்த, பசுவின் பின்கால் பருமன்கூட இல்லாத சருகுக்கிழவி- அத்தை மகன் வந்துபோவதை அனுமதிப்பதற்காக கணவனிடம் கயிற்றால் அடித்தண்டம் பெறும் பத்மா- செக்கச்சிவந்த சிறுபெண்ணாகப் பார்த்த சில ஆண்டுகளின் பின் அதிபோகத்தால் தேமல் விழுந்து உருச்சிதைந்து போதையில் தள்ளாடியபடிகாசு போட்டுண்டி தேவடியாளேஎன்று மூக்கம்மாளிடம் கத்தும் பொன்னம்மே- கையில் ஆலங்கட்டியும் கண்ணில் நிறைவேறவியலாத கனவுமாய் நின்ற ரேவதி- கனத்த சங்கிலிகளும் மூக்குத்தியுமாய் நின்ற கோலம் போய் வீடு வீடாக அப்பளம் விற்றுப் பிழைக்குமளவு வக்கற்றுப்போய், ‘நீராவது ஆத்துப்பக்கம் வாருமே..’என்று வறுமைக்குரலில் அழைத்த காமாட்சியாரையும் மறக்க முடியவில்லை. அந்தப் பெண்கள் அக்காலச் சமூகத்தைக் கண்ணாடிகளாகப் பிரதிபலித்த உயிர்ச்சாட்சியங்கள். ஒவ்வொரு பெண்ணும் மனசைக் கலங்கடிக்கவல்ல அவலச் சிறுகதைகளுக்கு நாயகியராகக் கூடிய பாத்திரவார்ப்புகள். வாழ்வியந்திரமும் ஆண்களும் சப்பித் துப்பிய சக்கைகள்.

ஒரு குடும்பத்தின் சரிவு வழி நொருங்கும் சார்புமனிதர்களையும் நினைவின் தாழ்வாரங்களில் காணமுடிகிறது. எண்ணெய்ச் செட்டியார், பாத்திரத்தில் பெயர்பொறிப்பவன், கண்ணாடிக்கு ரசம் பூசுகிற குறவர்கள்கொஞ்சநாட்களுக்கு நினைவின் பாதைகளில் அலைந்து திரிந்துகொண்டிருப்பார்கள்.

இதைப் படிக்கிறபோது எப்போதுமுள்ள ஏக்கம் எழுந்தடங்கியது. ஆண்களின் உலகம் ஒப்பீட்டளவில் மிக விரிந்ததென்று தோன்றியது. திருமணம் முடிந்து போகும்வரையிலான கிராமத்துப் பெண்களின் வாழ்க்கையில் என்ன அற்புதங்கள் நிகழ்ந்துவிடல் கூடும்? மரப்பாச்சி பொம்மைகள், கூட்டாஞ்சோறு, சில்லுக்கோடு, கோவில், கொஞ்சம் பார்வைகள், மிஞ்சி மிஞ்சிப் போனால் தோழிகளோடு எப்போதாவது போகக்கிடைக்கும் திரையரங்குஅவ்வளவுதான்!

கவிஞர் கலாப்ரியாவுக்குள் இத்தனை குசும்பு இருக்குமென்று முன்னர் அறிந்திருக்கவில்லை.

நாம ரயில்ல ஏறினா, நம்ம விதி இஞ்ஜின்ல ஏறி நமக்கு முன்னேயே ப்ளாட்பாரத்தில இறங்கி நிக்கிது

புள்ளை முழிக்கிறது பேளறதுக்குத்தாண்டோய்

என்றெல்லாம் வாசிப்பின் இடையில் சிரிப்பைத் தூவி வைத்திருக்கிறார் கலாப்ரியா. லாரி விபத்தில் இறந்துபோன அண்ணனை எரியூட்டித் திரும்பும்போது எதை அவர் நேசித்தாரோ அதன்வழியே மரணத்தையும் நினைத்துப் பார்க்கிறார்.

ஆழி அலையாழி, பனி தீராத வீடு என்று மலையாளப் படங்களாக நினைவுக்கு வந்தன. ‘ஓரிடத்து ஜனனம், ஓரிடத்து மரணம்என்று ஜேசுதாஸ் குரல் கேட்டது. ‘துலாபாரம்நினைவுக்கு வந்தது.”

வாழ்வும் சிதைவும் ஆறும் ஊரும் ஜனனமும் மரணமும் நட்பும் பிரிவும் எழுதிய விரல்களால் காதலை எழுத இயலவில்லை. நினைவின் தாழ்வாரத்தில் ஓரிரு வரிகளில் முகங்காட்டியதன்றி, மழைக்கோ வெயிலுக்கோ ஒதுங்கவில்லை சசி.

எல்லாவற்றையும் எழுதமுடிந்த விரல்களை, எழுதமுடியாதபடிக்கு நடுக்குற வைக்கும் தீராத்தாபமோ இழந்த காதல்?

நன்றி: அம்ருதா

6.14.2010

மிக்கி என்றொரு தமிழ் நாய்…


கொழும்பு விமானநிலைய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் மிக்கியை அந்நாட்டினுள் நுழையவிடாது தடுத்த செய்தி தொலைபேசி வாயிலாக என்னை வந்தடைந்தது. ‘கலங்கிப்போனேன்’ என்ற தேய்ந்த சொல்லால் எனது மனநிலையை முழுவதுமாக வெளிப்படுத்திவிட இயலாது. மிக்கிக்கு உத்தேசமாக இரண்டு வயது. வெள்ளை நிற பொமரேனியன். கறுப்பு, வெள்ளை என்ற நிறம் தவிர்த்து அந்தவகை நாய்களுக்கு சிறப்பு அடையாளங்கள் இல்லை. அனைத்தும் ஒன்றேபோல இருக்கும். கூட்டத்தில் தவறவிட்டுவிட்டால்கூட நம்மைப் பார்த்து வாலாட்டுவதை வைத்துத்தான் கண்டுபிடிக்கமுடியும். ‘அந்த முட்டாள் நாய்க்காக இவ்வளவு கவலைப்பட வேண்டியதில்லை’என்றார் என் நண்பர். அதற்கு அவர் சொன்ன காரணம் நாட்டு நாய்களைவிட பொமரேனியன் வகையறாக்களுக்கு நுண்ணுணர்வு குறைவாம். ‘மனிதருள் அறிவுஜீவிகள் இருந்து பண்ணுகிற அழிச்சாட்டியம் போதுமென்பதால், நாய்களிடமும் நாம் அதை எதிர்பார்க்க வேண்டியதில்லை.’என்று நான் அவருக்குப் பதிலளித்தேன்.

“பொதிகள் போடும் இடத்தில் மிக்கியை கூண்டுக்குள் விட்டிருக்கிறார்கள். அது என்னைப் பார்த்து அழுதுகொண்டிருக்கிறது”என்றார் அண்ணா.
அது அனுங்கும் சத்தம் தொலைபேசியூடாகக் கேட்டது. முன்னங்கால்கள் இரண்டையும் கம்பியில் தூக்கிவைத்துக்கொண்டு ‘என்னை வெளியில் விடு’என்று, ஈரம்படிந்த கறுப்புக்கண்களால் இறைஞ்சுவதை என்னால் மானசீகமாகக் காணமுடிந்தது. ‘சாப்பிடு’, ‘நடக்கப்போகலாமா?’, ‘சத்தம் போடாதே’போன்ற சாதாரண கட்டளைகளைப் புரிந்துகொள்வதைப் போல, ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை மிக்கியால் புரிந்துகொள்ள இயலாதுதான்.

குற்றச்சாட்டு இதுதான்: இந்தியாவிலிருந்து மிக்கியை இலங்கைக்கு எடுத்துச்செல்வதற்கு முன்னம் இலங்கையின் பேராதெனியாவிலுள்ள ‘விலங்குகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார’த் திணைக்களத்திடமிருந்து அனுமதி பெற்றிருக்கவேண்டுமாம். ‘விலங்கினை ஏற்றுமதி செய்வதற்கான விண்ணப்பப் படிவம்’ என்ற ஒன்றை நிரப்பி வைத்துக்கொண்டு முன் அனுமதிக்காக நாங்கள் அலைந்த கதையை அறுபது பக்கங்களுக்கு மேற்பட்ட புத்தகமாக எழுதலாம். (கைவசம் வேறு கதைகள் இருந்ததால், அந்த அனர்த்தத்திலிருந்து தப்பித்தீர்கள். ‘அந்த அனர்த்தத்திலிருந்தும்’என்ற குரல் எனக்குக் கேட்கவில்லை) அரசாங்கத் திணைக்களங்களில் பணியாற்றுபவர்களின் சுறுசுறுப்பு மழைக்கால எறும்புகளுக்கு இணையானதென்பதை நாமனைவரும் அறிவோம். அவர்களின் கடமையுணர்வும், சேவை மனப்பாங்கும் புல்லரிக்க வைப்பவை. அவ்விதமிருந்தும்கூட, ‘இந்த விலங்கு ஏற்றுமதி செய்யப்படத்தக்க நிலையில் உள்ளது’என்றொரு கடிதத்தை இறுதியில் பெற்றோம். ஒரு பெரிய கூண்டு செய்து அதில் பதினொரு கிலோ எடையுள்ள மிக்கியை வைத்துத் தூக்கிச் சென்றார் அண்ணா. ‘இந்திய அரச அனுமதி இங்கு செல்லாது; இலங்கை அரசிடமிருந்து நீங்கள் முன்னனுமதி பெற்றிருக்கவேண்டும்’என்றது கொழும்பு விமானநிலையம்.

மிக்கி கூண்டுக்குள் அடைபட்டு அவதிப்பட்டுக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அதைப் பற்றிய ஞாபகங்கள் சுற்றிச் சுற்றி வந்து முனகின. அது கூண்டுக்குள்ளிருக்கிறது என்ற நினைவை ஒரு விநாடிகூட மனதிலிருந்து அகற்றமுடியவில்லை. உணவு உண்ணவோ சரியாக உறங்கவோகூட முடியவில்லை என்பது சில ‘மனிதாபிமானி’களுக்கு எரிச்சலூட்டக்கூடியதாக இருக்கும். பணக்காரத்தன புளிச்சேப்பறை, சீமாட்டிகளின் பந்தா, அலப்பறை, மேட்டுக்குடி மனோபாவம் இன்னபிற சொற்களை நீங்கள் சொல்லவிரும்பலாம். ஆனால், மிக்கி என்பது நான்கு கால்களுள்ள, பேசத்தெரியாத ஒரு குழந்தை என்பதை நாய் வளர்த்தவர்கள் அறிவார்கள்.

ஒரு கொடுங்காலத்தில் அக்கா, அண்ணாவின் பிள்ளைகளோடு (ஐந்து பேர்) இந்தியாவுக்கு வந்து சேர்ந்தேன். அவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் மிக முக்கியமானது ‘நாய்-பூனை வளர்க்கக்கூடாது’என்பதாகும்.(பாம்பு வளர்க்கலாம் என்று அதற்குப் பொருளில்லை) அண்ணாவின் மகள் தெருவில் காணும் நாய்க்குட்டி – பூனைக்குட்டிகளை ஆசை ஒளிரும் கண்களால் பார்ப்பாள். நாய்,பூனை மினுங்கும் கண்களை என்னை நோக்கி அவள் திருப்பிக்கொண்டு வந்துசேரும் நேரம் நான் அவளிடமிருந்து எனது கண்களைத் திருப்பிக்கொண்டுவிடுவேன். வளர்ப்புப் பிராணிகளைத் தெருவில் அலையவிட்டு வருவது பாவங்களில் பெரும்பாவம். குண்டுவீச்சுகளுக்கு அஞ்சி இடம்பெயர்ந்துசெல்லும் குடும்பங்கள் தங்கள் உடமைகளுடன் வளர்ப்புப் பிராணிகளையும் வண்டிகளில் ஏற்றிச்செல்லும் படங்களை நீங்களும் இணையத்தளங்களில் பார்த்திருப்பீர்கள். போரைப் புரிந்துகொண்டிருப்பதான மனுசதோரணை அவற்றின் கண்களில் படிந்திருக்கும். ‘விதியே… விதியே…’என துக்கத்தில் விழுத்தக்கூடிய படங்களில் அவை குறிப்பிடத்தக்கவை. யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்தபோது தனது தந்தை ஆடு,மாடுகளை விட்டுவிட்டு நாயை மட்டும் கையில் தூக்கிக்கொண்டு வந்ததாக, எனது நண்பர்களில் ஒருவர் (அவர் ஒரு கவிஞரும்கூட) யாழ்ப்பாணத்திலிருந்து எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். “ஆடு,மாடுகளைக் கொண்டுவந்திருந்தால் ஆறு மாத காலச் சாப்பாட்டுச் செலவுக்காவது காசு கிடைத்திருக்கும். ஆனால், அப்பா நாயைத் தூக்கிக்கொண்டு வந்தார்”என்று எழுதியிருந்தார்.

நான் எப்போதாவது கனடாவுக்குப் போய் கணவரை ‘கண்ணில் வைத்துக்கொண்டு’வருவதுண்டு. அப்படிப் போயிருக்குமொரு நாளில் பிள்ளைகள் பன்னிப் பன்னி தொலைபேசியூடாக ஒரு விஷயம் சொன்னார்கள். பிள்ளைகளில் ஒருவருடைய நண்பரின் குடும்பம் வெளியூர் செல்லும்போது ஒரு நாய்க்குட்டியை எங்கள் வீட்டில் தற்காலிகமாக விட்டுச்சென்றிருப்பதாகவும் அதை அவர்கள் நான்கைந்து நாட்களில் மீளப்பெற்றுக்கொள்வதாக உறுதியளித்திருப்பதாகவும் சொன்னார்கள். மேலும், அந்த நாய்க்குட்டி இத்தினூண்டு சைஸில் இருக்குமாம். காலையில் அவர்களின் முகங்களை நக்கித் துயிலெழுப்புமாம். அதற்குக் கறுப்புக் கண்களாம். “எல்லாம் சரிதான்! அவர்கள் வெளியூரிலிருந்து திரும்பியதும் கொடுத்துவிடுங்கள்”என்றேன். “பின்னே….? வைத்துக்கொள்ளவாக போகிறோம்? கொடுத்துவிடுகிறோம்”என்று அடித்துச் சொன்னார்கள்.


ஒரு மழைநாளில் திரும்பிவந்தேன். சென்னை மழைநாட்களுக்கேயுரிய பசுமையழகுடன் வரவேற்றது. கூடவே நாய்க்குட்டியும். அதை நீண்டநேரமாக வீடுமுழுவதும் தேடி பல்கனியிலிருந்து கண்டுபிடிக்கவேண்டியிருந்தது. அவ்வளவு சின்னது. எனது கைகளில் தந்தார்கள். என் உள்ளங்கையை விட ஒரு சில அங்குலங்கள்தான் அதனுடல் பெரிது. பஞ்சுப்பொதி என்று சொல்லலாம். மல்லிகைப்பூக் குவியல் எனலாம். சின்னத்துண்டு மேகம் எனலாம். கடல்நுரை எனலாம். ஆனாலும், நான் தீர்மானமாக இருந்தேன். அது தன் கறுப்புமணிக் கண்களால் என்னை நிமிர்ந்து பார்த்தது. ‘இல்லை’என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். பிறகொரு காரியம் செய்தது. தன் குட்டியூண்டு நாக்கால் என் கைகளை நக்கவாரம்பித்தது. நெஞ்சோடு அணைத்துக்கொண்டபோது என் கழுத்துக்குள் தலையைச் சொருகிக்கொண்டது. அதுவொரு பட்டுக்குஞ்சு! அவ்வளவுதான்! உள்ளே எதுவோ நெகிழ்ந்ததுபோலிருந்தது. உள்ளுக்குள் ஒரு வாஞ்சைமழை பொழியவாரம்பித்தது. கொஞ்சம் கண்கள் பனித்தாற்போலவும் ஞாபகம்.


“சித்தி! நாங்களே வைத்துக்கொள்ளலாமா?”
“இல்லை… வேண்டாம்”என்று கண்டிப்பான குரலில் சொன்னேன்.

ஆனால், அது அங்கிருந்து போகவில்லை. மிக்கி என்று நாமகரணம் சூட்டப்பட்டு எங்களுடனேயே தங்கிவிட்டது. எனது தீர்மானத்தை, மிக்கி தந்திரமாக நொருக்கியதையிட்டு அக்கா-அண்ணாவின் பிள்ளைகள் என் முதுகுக்குப் பின்னால் சிரித்திருப்பார்களாயிருக்கும்.


‘நாய்’என்பது பரவலான வசைச்சொல். நாய் என்றால் அத்தனை இளக்காரம். சாதிப்பெயரை முன்னால் இட்டு பின்னால் ஒரு நாயைச் சேர்த்துத் திட்டுபவர்கள் அதிகம். ‘பறைநாய்’, ‘சக்கிலியநாய்’என்ற பதங்கள் சர்வசாதாரணம். ‘வேளாளநாய்’என்று பதிலுக்கு யாரும் திருப்பித் திட்டிக் கேட்டதில்லை. ‘செட்டியார் நாய்’என்றோ, ‘முதலியார் நாய்’என்றோ திட்டினால் செவிகள் திடுக்கிட்டுப் போகுமென நினைக்கிறேன். பெண்களின் உடல் உறுப்புகளை வசைச்சொல்லாகப் பயன்படுத்துவதுபோலவொரு அரசியல் இதிலும் உண்டு. ஆண்களின் உறுப்புகள் வசைச்சொல்லாகவும் பிரயோகிக்கப்படக்கூடாத புனிதம்பொருந்தியவை. சரி… மிக்கிக்குத் திரும்பிவருகிறேன்.

மனிதர்களால் மகா மகா கேவலமாகப் பார்க்கப்படும் நாயானது எங்கள் வீட்டில் மனிதர்களைப் போலவே நடந்துகொண்டது. அண்ணாவின் தலையைக் கொஞ்சம் நெருக்கித் தள்ளிவிட்டு, தலையணையில் தலைவைத்துப் படுத்துறங்கியது. மாலையில் நாங்கள் தேநீர் அருந்தும்போது அதுவும் அருந்தியது. வீட்டில் யாராவது சத்தம் போட்டுச் சண்டை பிடித்தால் அவர்களது ஆடையில் பற்றி இழுத்து ‘தயவுசெய்து சண்டைபோடாதீர்கள்’என்று வினயமாகக் கேட்டுக்கொண்டது. அரைமணி நேரத்துக்கொரு தடவை தன்னை நடக்க அழைத்துச் செல்லும்படியாக வாயில் கயிற்றைக் கவ்விக்கொண்டு வந்து ஒவ்வொருவர் முன்னும் நிற்கப் பழகிக்கொண்டது. குளிப்பாட்டினால் உடல் சூடு தணிந்த மகிழ்ச்சியில் வீடு முழுவதும் ஓடி அதகளப்படுத்தியது. வீட்டிலிருக்கப் பிடிக்கவே பிடிக்காது அதற்கு. பிள்ளைகள் என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி மிக்கியை ‘சரியான பொறுக்கி’என்றார்கள். அந்த ஓரக்கண் பார்வையை நான் கவனிப்பதில்லை. எனக்கும் வீட்டில் இருப்பது பிடிக்காது. பெட்டியைத் தூக்கிக்கொண்டு அடிக்கடி எங்காவது போய்விடுவேன்.

இந்தியாவில் நெடியதும் தனிமையானதும் விசனம் மிக்கதுமான இரண்டாண்டுகளைக் கழித்த பிற்பாடு அண்ணா குடும்பத்தினர் ஊருக்குப் போக நினைத்தார்கள். மிக்கியை யாரிடமாவது வளர்க்கக் கொடுத்துவிடலாம் என்று சில நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள். புளு குறொசில் (இதை எப்படித் தமிழ்ப்படுத்துவது?) கொடுத்துவிடலாம் என்றார்கள். ‘நாய் என்றால் நீங்கள் நினைக்கிற நாய் அல்ல’ என்று எப்படி அவர்களிடம் சொல்வது? நாங்கள் அதை எப்படியாவது கொண்டுபோக நினைத்தோம்.


அது விமானநிலையத்தில் கூண்டுக்குள் அழுதுகொண்டு நிற்கிறது. மூன்று நாட்கள்… கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தாயிற்று. யார் யாரையோவெல்லாம் வைத்துக் கதைத்துப் பார்த்தாயிற்று. இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு முரணாக அதை உள்ளே விடமுடியாது என்பதே பதிலாக இருந்தது. உள்ளே அனுப்புவதும் வெளியே அனுப்புவதுமாகிய எல்லாம் சட்டதிட்டங்களின்படி நடக்கும் நாட்டில் ஒன்றும் செய்வதற்கில்லைத்தான்!
அண்ணா கொழும்பிலிருந்து மூன்று நாட்களுக்கு மிக்கிக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு நீர்கொழும்பிலிருந்த விமானநிலையத்துக்குப் போவார். அங்கிருக்கும் அலுவலர்களிடம் கெஞ்சுவார். மிக்கி கூண்டுக்குள்ளிருந்தபடி அழும் சத்தம் தொலைபேசியில் எனக்குக் கேட்கும். உறவினர்களில் ஒருவர் சுங்கஇலாகாவில் பெரிய பதவியில் இருக்கிறார். அவர் கதைத்தும் அவர்கள் கேட்பதாயில்லை. “இந்த நாய்க்கு ஏதாவது நோய் இருந்து, அது இலங்கையில் பரவிவிட்டால்…?”அவர்கள் கேட்டார்கள். (‘ஆமாம்.வெளியில் இருக்கிற நாய்களெல்லாம் எவ்வளவு ஆரோக்கியமாகத் திரிகின்றன’என்று நாங்கள் நினைத்துக்கொண்டோம்) ஆனால், அவர் விடாது தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சி செய்தார். அவர் செல்வாக்கே செயலிழந்துவிடுமோ என்று எங்களுக்கு அச்சமாக இருந்தது.

சில நாட்களுக்கு முன்னால் ‘எனக்கு மதம் பிடிக்காது’என்றொரு பதிவு எழுதினேன். நான் அம்மனிடம் ஒரு விண்ணப்பம் செய்துபார்க்கலாமென நினைத்தேன். ஏற்கெனவே ஒரு வேண்டுதல் பாக்கியிருந்தது. அது ‘இந்த’ நாயைப் பிடித்துவிடக் கூடாதென்பதை முன்னிட்டு வைக்கப்பட்ட வேண்டுதல். காலையில் எழுந்து திருவேற்காடு போய்விட்டு, சாந்தோம் தேவாலயத்திற்கும் போய்விட்டுத் திரும்பிவரும்வழியில் அண்ணாவின் தொலைபேசி அழைப்பு வந்தது.


“மிக்கியை வந்து எடுத்துக்கொண்டு போகும்படி விமானநிலையத்திலிருந்து அழைப்பு வந்தது”மறுமுனையில் அண்ணாவின் குரல் கரகரத்து ஒலித்தது. அழுதார் என்று நினைக்கிறேன். கொஞ்சம் அபத்தமாகத் தோன்றினாலும் எனக்கும் அழுகை வந்தது.

இப்படியான ‘அற்புதங்களால்’தெய்வ நம்பிக்கையும் கடல்-கரை விளையாட்டுப் போல ஆகிவிட்டது.
“ஒரு வாரத்திற்குள் மிக்கியை இரத்தப் பரிசோதனை செய்து கொண்டு வந்து தரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவித்திருக்கிறார்கள்”என்றார்.

மிக்கியைக் கூண்டிலிருந்து வெளியே வரும்படி அண்ணா கூப்பிடும்போது, அது எப்படித் தனது கறுப்புமணிக் கண்களை உயர்த்தி நம்பமாட்டாமல் பார்க்குமென்று நினைத்துப் பார்த்தேன். எப்படி அவரது மேலெல்லாம் விழுந்து புரண்டு கொஞ்சுமென்பதை நினைத்துப் பார்த்தேன். அவரோடு ஊருக்குப் போய் அங்கிருப்பவர்களின் வாசனையை இனங்கண்டு இரண்டு கால்களில் நிற்குமென்பதை நினைத்துப் பார்த்தேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்றைக்கு நான் மகிழ்ச்சியாக இருந்தேன். நாய் என்பது பொதுப்புத்தியில் இருக்கிற நாய் இல்லையல்லவா? அபத்தம் என்பது எப்போதும் அபத்தமானதா என்ன?

இது பெருந்தனக்காரர்களின் ஏப்பம் இல்லை. மேட்டிமைத்தனம் இல்லை. இதில் மனிதர்களின் விருப்புவெறுப்புகள், தீர்மானங்கள், அலைக்கழிதல்கள் இவற்றோடு கூடக் கூட ஓட விதிக்கப்பட்ட ஒரு குட்டிநாயின் குட்டி இதயம் இருக்கிறது.


மேலும், நாய் என்பதை நமக்குக் கீழான விலங்காக உருவாக்கி, ஒரு கவளம் சோற்றுக்காக வாலாட்டிக் குழையவைத்து நம் வாசலில் கட்டிவைத்திருப்பவர்கள் நாங்களன்றோ?
ஆறாம் அறிவு அதற்கிருந்திருந்தால்…. என்று நமது கற்பனை நாயை(கற்பனைக் குதிரை சலித்துவிட்டது) ஓடவிட்டுப் பார்ப்போமாயின்…

வாசலில் நாம் கட்டிவைக்கப்பட்டிருக்க, நாயானது சோற்றுப் பாத்திரத்தை ‘ணங்’கென்று நம் முன் வைத்துவிட்டுப் போகும் சித்திரம் தோன்றுகிறது. என்ன செய்வது? கண்களுக்கும் மனசுக்கும் பழக்கப்படாத காட்சிகள் அசிங்கமானதாகத்தான் தோன்றும். மனிதாபிமானிகள் என்னை மன்னிப்பார்களாக.