7.18.2007

கலகக்காரன்


கையிலொரு மதுக்குவளையுடன்
தாவரங்களுடனும்
தத்தும் அணில்களுடனும் பேசுகிறவன்
புனித பீடங்களின் மீதெல்லாம்
சிறுநீர் கழிக்கிறவன்
புனையப்படும் தேவதைகளில்
பச்சை இறைச்சி வாடையடிக்குதென
உரத்த சிரிப்புடனே எள்ளுபவன்
துணுக்குறும்படியான கெட்டவார்த்தைகளை
வாசிப்பிற்கிடையில் இயல்பேயெனப் போட்டு
அடுத்த வரியில்
அன்றைய காலநிலை குறித்துப் பேசிச்செல்பவன்
இன்னபிற விதங்களில்
கலகக்காரச் சட்டகத்துள் அடைபட்டிருந்தவனை
பன்றிகள் சேறுழன்று திரியும் தெருவொன்றில்
தற்செயலாகச் சந்தித்தேன்
குனிந்து தலையிடிபடாமல்
குடிசையினுள் வரச்சொன்னான்
தூளி நனைத்த மூத்திரம்
எங்களை நெருங்குவதற்கிடையில்
துடைத்துவிடும்படி
மற்றொரு மூலையில் சுருண்டிருந்த மனைவியை
கெட்டவார்த்தை இணைப்புடன் ஏவியபின்
இலக்கியம் பேசினான்
விடைபெறும்போது
தொய்ந்திருந்த சட்டைப்பையைத் தட்டி
பசிக்குதென்று இருநூறு ரூபா கடன்கேட்டுத் தாழ்ந்த
விரல்களைப் பார்த்தேன்
எரவாணத்தில் இடித்துக்கொள்ளாமலே
கண்கள் கலங்கிவிட்டதெனக்கு.

பிற்குறிப்பு: இப்படியொரு கவிதையை எங்கோ வாசித்த நினைவு... உங்களில் யாருக்காவது வேறேதாவது கவிதை ஞாபகம் வருகிறதா?

7.15.2007

காதல் கவிதைப் போட்டி முடிவு


நானும் கவிதை எழுதுவதாக நம்பும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருவதாக (பிரமையாகவும் இருக்கலாம்) எனக்குத் தோன்றுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக நண்பர் சிந்தாநதி அவர்கள் 'காதல் கவிதைப் போட்டி'யில் வடிகட்டியெடுக்கப்பட்ட சில கவிதைகளை அனுப்பி அதிலொன்றைத் தேர்வு செய்து தரும்படி கேட்டுக்கொண்டார். நமது சகபதிவர்கள் எல்லோருக்குள்ளும் காதல் பொங்கிப் பிரவகித்துக்கொண்டிருந்ததை கவிதைகள் உணர்த்தின. காதல்வெள்ளம் எத்தனை காலமானாலும், வயதானாலும் வடிவதேயில்லை என்று நினைத்துக்கொண்டேன். நல்லவேளையாக எனக்கு அனுப்பப்பட்ட கவிதைகளை யார் எழுதியது என்ற விபரம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால், கவிதையின் முகத்தை மட்டுமே பார்த்து ஒரு கவிதையைத் தேர்ந்தெடுத்தேன். அந்தக் கவிதையை எழுதியவர் குறைகுடம் பிரசன்னா என்ற நண்பர். ஏனைய நண்பர்கள் என்மீது சாபங்களை எறியாதிருப்பார்களாக.

தினமும் கடக்கும்
வழக்கமான சாலையில்
பழகிய பள்ளங்களைப் போன்றது
உன்னைப் பற்றிய நினைவுகள்
தவிர்க்க நினைக்கும்
கவனமான பயணங்களிலும்
நிலைகுலைந்து விழ நேர்கிறது
ஓரிரு முறையேனும்

என்ற கவிதை தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. பிரசன்னாவுக்கு வாழ்த்துக்கள். 'இவளும் கவிதை எழுதுறாளாம்'என்றெண்ணி எனக்கு வாய்ப்பளித்த நண்பர் சிந்தாநதிக்கும் நன்றி.
இந்தப் பதிவின் நதிமூலம்:

7.14.2007

போலிப் பின்னூட்டங்கள்

அன்பு நண்பர்களுக்கு,

எனது கவிதைத் தொகுப்பு முயற்சியில் ஈடுபட்டிருப்பதன் காரணத்தால் முன்புபோல் தங்களது பக்கங்களுக்கு வந்து பின்னூட்டமிடுவதில்லை. தமிழ்மணம் பக்கமும் முன்போல வர நேரமிருப்பதில்லை. இந்தச் சந்தடி சாக்கில் யாரோ 'தமிழ்நதி'யாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது, எனது பெயரில் பின்னூட்டங்கள் வருவதாக அறிகிறேன். சற்றுமுன் மிதக்கும் வெளி சுகுணா திவாகர் அழைத்து 'என் மேல் ஏனிந்தக் கோபம்...?'என்று கேட்டபின்னரே விழித்துக்கொண்டேன். 'சீதாபாலம்'என்ற அவரது கவிதைக்கு எனது பெயரில் இடப்பட்டிருக்கும் பின்னூட்டம் என்னுடையதல்ல. அந்தப் பின்னூட்டத்தைத் தொடர்ந்து போனால் எனது பக்கத்தையே வந்தடைகிறது. இதனைச் செய்பவர் யாரென்று என்னால் ஊகிக்க முடிந்தாலும், நேரடியாகக் கடிந்துகொள்வதற்கில்லை. தன்னை 'எல்லாம் தெரிந்த' மேதாவியாகக் காட்டுவதற்காக ஏனையோரைப் பற்றிக் கதைகளைத் திரித்துப் பரப்பிவரும் அவரிடம் நாகரிகத்தை எப்படி எதிர்பார்க்க இயலும்? நரிகளிடம்கூட தந்திரத்தைப் பிரயோகிக்க முடியாத என் போன்றவர்கள் ஒதுங்கிக்கொள்வதே நன்று.

எனது பெயரில் வரும் பின்னூட்டங்களைப் பிரசுரிப்பதன் முன் தயவுசெய்து என்னை ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ள வேண்டுகிறேன். நன்றி.

தமிழ்நதி

7.12.2007

அதிகாரமும் தேவதைக்கதைகளும்



வல்லுறவுக்கிடையில்
தண்ணீர் மறுக்கப்பட்ட கிருஷாந்தியின்
நெஞ்சு கிழிபடும் ஓலத்தைப்போல
எனது குரலையும் விழுங்க முனைகிறது தொலைவு
முதலில் துயரத்தின் நிலத்திலிருந்து
கொஞ்சம் வார்த்தைகளை எடுத்துக்கொள்கிறார்கள்
தசைத்துணுக்குகளும் கண்ணீரும் வடிகட்டப்பட்டபின்
அழகிய பொலித்தீன் பைகளில் போடுகிறார்கள்
பாத்திரம் வாங்கினால் குவளை இலவசம் என்பதாய்
சில வாக்குறுதிகளைச் சேர்த்துக் குலுக்கியபின்
பெட்டிகளில் அடைத்து அனுப்பிவிடுகிறார்கள்
சலிக்காமல் பரப்பப்படும் தேவதைக்கதைகள்
நம் பாட்டிமார் சொன்னதை விஞ்சுகின்றன.

எறிகணைகள் கூவிக்கொண்டிருக்கும் இவ்விரவின் முடிவில்
இந்தக் காகிதத்தில்
குருதி எழுதிக்கொண்டிருக்கலாம்

காற்றோடு சர்ச்சையிடும் யுனிசெப்பின் கூடாரத்தை
கார்காலக் குளிரும் கனல்சொரியும் வெயிலும்
மாறி மாறிச் சொடுக்கியதில்
இறந்துபோன குழந்தையை
அந்தப் பாலைமரத்தடியில் விதைத்து வந்தேன்
இரவெல்லாம் பாலைமரம் தீனமாய் அழுகிறது
என் மழலையின் பசிக்குரலில்

எஞ்சிய குழந்தைகளை முன்னிட்டு
மூதாட்டியொருத்தியைச் சாகவிட்டேன்
அவளை மூட்டிய சிதைநெருப்பு
தீராத நோயைப்போல்
வயிற்றினில் வளர்ந்துகொண்டேயிருக்கிறது
அவளை எரித்து வந்த அன்றிரா
இருவருக்குப் போதுமான உணவை
நான்காகப் பிரித்துண்டு
வாழும் நாளொன்றை நீடித்தோம்.

நேற்று முன்தினம்
என் தோழி விடுமுறையில் வந்திருந்தாள்
அவள் மடியில்
சாதுவான குழந்தையைப் போலிருந்த துப்பாக்கியை
பிரியம் பொங்கத் தடவிக்கொண்டிருந்தாள்
இசையை
விழிகள் கிறங்க
ஒருவனொடு கூடிக்களித்துலவும் இனிமையை
குழந்தைகளின் பட்டுக்கன்னங்களை
வாழ்வின் நிறங்களையெல்லாம்
துப்பாக்கியினால் இட்டுநிரப்பியிருந்தாள்
தற்கொடையின் தாய்மை வழிந்த விழிகளை
முத்தமிட அவாவினேன்
கூச்சம் பொங்க அவள் விரல்பற்றி அழுத்தி
‘போய் வா’என்று சொல்லவே முடிந்தது
பாலை மரத்தினடியில் ஒருகணம் தயங்கினாள்
மண்மேட்டைத் தொட்டு வணங்கிக் கடந்தாள்
தானுமோர் எறிகணையாய்.

நகக்கண்களில் குருதி வடிய
மலவாசலைச் சுற்றி ஈக்கள் பறக்க
வயல்வெளியில்
என் கணவனை நிர்வாணமாகக் கண்டெடுத்தேன்
காதல் வழிந்த கண்கள்
குருதிநிறை குழிகளாகக் கிடந்தான்
எரியூட்டித் திரும்பிய அன்று
மூன்றாவது குழந்தை
இப்பிரபஞ்சம் காணும் பேராவலில்
தன் பிஞ்சுக்கால்களால்
உள்ளிருந்து உதைத்துக்கொண்டிருந்தாள்

குளிரூட்டப்பட்ட அறைகளுள் இருந்தபடி
இதை வாசிக்கிற கனவான்களே!
மன்னித்துக்கொள்ளுங்கள்
மழையைக் குறித்தும் மலர்கள் குறித்தும் எழுதாமல்
உங்கள் மெல்லுணர்வுகளின் மீது
அமிலம் எறிவதற்கு.

கண்ணீரால் எழுதப்படும் வரலாற்றை
கண் மூடி வாசிக்கும் வித்தையைக்
காணுந்தோறெல்லாம்
‘மனிதர்காள்… மனிதர்காள்…!’என்றிருக்கிறது.
'துன்பியல் நிகழ்வுகளை'
நெடுநாளாய் நினைவில் வைத்திருக்கும்
மகத்தான ஞாபகசக்தியுடையோரே!
எம்மை ஏன் கைவிட்டீர்?
எம்மை ஏன் கைவிட்டீர்?

7.05.2007

ஆண்மை


ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின்மதியநேரம்
தெருமுடக்கில் நீட்டிக்கொண்டிருந்தது
அன்று விசித்திரப் பிராணியாகி
சொல்லாமல் வகுப்பினின்று வெளிநடந்தேன்.
ஓடும் பேரூந்தில் திடுக்குற்று விழிதாழ்த்தி
அவமானம் உயிர் பிடுங்க
கால்நடுவில் துருத்திற்று
பிறிதோர்நாள் வீட்டிற்குள் புகுந்து
சோபாவிலமர்ந்தபடி காட்சிப்படுத்திற்று
இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி
இறைச்சிக்கடை மிருகமென வாலுரசிக்கடந்தது
ஆண்மையை நிரூபித்தல் நல்லதே!
ஆனால் தீபா
திகைப்பிருள் வீழ்ந்து
பதற்றத்தில் நெஞ்சு நடுக்குற்று
அவமதிக்கப்பட்டவளாய்
நீயும் அழுதிருப்பாய் என்றெண்ண
துப்பாக்கியால் ‘குறி’தவறாமல் சுடத்
தெரிந்திருக்க விரும்புகிறேன்.