![](http://1.bp.blogspot.com/_g3IwMb8UKn4/Rn8lJ91ICPI/AAAAAAAAAKQ/EpykPzQ1hWk/s400/woman.jpg)
பூக்கள் இறைந்த கனவின் வழியில்
இதழ்பிரியச் சிரித்த முகம்விலக்கி
இருளுள் கரைகிறான் சித்தார்த்தன்
அரசமரத்தடியில் நெடிய இமையிறுக்கி
மறந்துபோகிறான் துணையை
அவன் தேர் நகர்ந்த வீதியும்
நெகிழ்ந்ததோ…! நனைந்ததோ…!
சாளரத்தின் ஊடே அனுப்பிய
யசோதரையின் விழிகள்
திரும்பவேயில்லை
பௌர்ணமி நாளொன்றில்
அவன் புத்தனாயினான்
அவள் பிச்சியாகினாள்
“அன்பே! என்னோடிரு... என்னோடிரு…!”
கண்ணீரில் நெய்த குரலை
அரண்மனைச்சுவர்கள் உறிஞ்ச
வரலாற்றிலிருந்தும் போனாள்
அவளும் போனாள்!!!
சுழலும் ஒளிவட்டங்களின்
பின்னால்தானிருக்கிறது
கவனிக்கப்படாத இருட்டும்.