6.23.2014

மனக்கோலம்




விலங்கொன்று ஊளையிடுவது போலவேயிருந்தது அந்த ஓசை. கனவு காண்கிறோம் என்று உள்ளுணர்வுக்குத் தெரிந்து கண்டுகொண்டிருக்கும் கனவொன்றிலிருந்து அவ்வோசை மிதந்து வருவதாக முதலில் சாந்தன் எண்ணினான். மது அவனை மெதுவாகத் தொட்டு ‘என்னாலை நித்திரை கொள்ள முடியேல்லை’என்றதும்தான், அந்த ஓசை அக்காவின் அறையிலிருந்து வருகிறது என்பதை உணர்ந்தான்.

மது எழுந்து அமர்ந்து, “என்னாலை முடியேல்லை”என்று முனகியபடி மேடிட்டிருந்த வயிற்றைத் தடவிக்கொண்டிருந்தாள். வயிற்றினுள்ளிருந்து பதட்டப்படும் குழந்தையை ஆசுவாசப்படுத்துமாப் போலிருந்தது அந்தத் தடவல். உயிரின் மூலத்தைத் தேடி உருக்கும் விசித்திரமான ஓசையை சற்றைக்கு நிறுத்திய ராசாத்தி இப்போது அனுங்கத் தொடங்கியிருந்தாள். தாங்கொணாத வேதனையை வேறுவழியின்றி தாங்கிக்கொண்டிருப்பதிலிருந்து பிறந்த அனத்தலாயிருந்தது அது. நிறைந்து சரிந்த வயிற்றைத் தூக்கிக்கொண்டு எழுந்திருக்க முயன்ற மதுவைக் கையமர்த்திவிட்டு எழுந்து வெளியில் போனான் சாந்தன். நிலாவெளிச்சம், அடைப்பற்ற யன்னல் வழியாகவும் இன்னமும் செப்பனிடப்படாத ஓடுகள் வழியாகவும் விறாந்தையில் இறங்கியிருந்தது. ஐப்பசி மாதத்துக் குளிரில் தரை சில்லிட்டிருந்தது. ராசாத்தியின் அறைக்கதவருகில் போய் நின்று கூப்பிட்டான்.

“அக்கா…!”

“ம்…..”

“நித்திரை கொள்ளேல்லையா?”

‘க்றும்… ரும்’என்று புரிபடாத ஓசையொன்று பதிலாக வந்தது.

மதுவும் எழுந்து வந்துவிட்டிருந்தாள். அவளது வயிற்றைப் பார்க்கும்போதெல்லாம் அபிக்குட்டி ஞாபகத்தில் வந்தாள். முள்ளிவாய்க்காலை நோக்கி நெருக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருந்த இறுதிநாட்களில், சாப்பாட்டுக்கு நின்ற சனங்களின் வரிசையில் ஷெல்விழுந்ததில் அபி செத்துப்போனாள். அப்போது அபிக்கு இரண்டரை வயது. மதுவின் இடதுதோள்பட்டையிலிருந்து முழங்கைவரை நீளமான சப்பாத்து வடிவில் சதை பிய்ந்த அடையாளம் இருக்கிறது. வெளியில் போகும்போது கையை மறைப்பதற்காக சேலையை இழுத்து இழுத்து விட்டுக்கொள்வாள். இந்த நான்கு ஆண்டுகளில் அவள் அபியை நினைத்து அழாத நாளே இல்லை. இப்போது நிறைமாதப் பிள்ளைத்தாய்ச்சி. இரத்த அழுத்தம் வேறு அதிகமாக இருந்தது. இந்நிலையில் இரவு தூக்கமில்லாதிருப்பது மதுவின் உடல் நலத்திற்குக் கேடானது என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால், அக்கா எழுப்பும் அமானுஷ்ய ஓசைகளால் உறங்கமுடிவதில்லை.

“அக்கா…!”

“ம்…”

“நித்திரையைக் கொள்ளுங்கோ…”

“நித்திரைகொள்ள விடமாட்டாங்களாம்”

அவனுக்கு கதவை உடைத்துக்கொண்டு வெளியே ஓடி வானத்தை நோக்கிக் கதறியழவேண்டும் போலிருந்தது. மூச்சு விடச் சிரமப்பட்டான். மதுவின் கைகள் அவனது தோளைத் தடவின.

அக்கா திடீரென இரவைக் கிழித்துக்கொண்டு வீரிட்டுக் கத்தினாள்.

“அவளை விடுங்கோ….. பச்சைப் பாலன்…. அவளை விடுங்கோ…”

முன்புறத்தில் இறக்கப்பட்டிருந்த பத்திக்குள் படுத்திருந்த சிவலை திடுக்கிட்டு எழுந்து குரைக்கத் தொடங்கியது. யன்னலருகில்  மூக்கை வைத்து மூசித் தானும் விழித்திருப்பதாக அறிவித்தது. பின் ஒன்றும் நடவாததுபோல் மறுபடியும் உறக்கத்திலாழ்ந்துவிட்டது. ராசாத்தியின் அனுக்கத்திற்கும் அலறலுக்கும் அக்கம்பக்கத்தைப் போலவே சிவலையும் பழகிவிட்டிருந்தது. முன்னர் அவர்கள் வளர்த்த நாயின் பெயர் வீரன். இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து போன வழியில் வீரன் எங்கோ தொலைந்துவிட்டிருந்தது. வீரனின் கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு சிரித்தபடியிருக்கும் அபியின் புகைப்படம் மட்டும் அழிவுக்குத் தப்பி எஞ்சிவிட்டிருக்கிறது.

மது குசினிக்குள் போய் விளக்கைக் கொளுத்திக்கொண்டு வந்தாள். வலிப்பு வந்தாற்போல ராசாத்தியின் உடல் தூக்கித் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தது. கண்களும் உதடுகளும் துடித்துக்கொண்டிருந்தன. வாயிலிருந்து வீணீர் ஒழுகிக்கொண்டிருந்தது. கைகளை மார்புக்குக் குறுக்காக மறைப்புப்போல கட்டி, கால்களை இறுக்கி ஒடுக்கி தன்னைச் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தாள். மது அருகில் அமர்ந்து முதுகைத் தடவிக் கொடுத்தாள். விசும்பல் மெதுமெதுவாக அடங்கி ராசாத்தி உறங்கும்வரை தடவிக்கொண்டிருந்தாள். சாந்தனுக்கு மதுவைப் பார்க்கப் பாவமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. மதுவுக்கு வேறுவிதமாக இருக்கத் தெரியாது. அவளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து, அவளது அண்ணனிடம் அடிவாங்கி காதலித்துக் கலியாணம் கட்டியது அந்தக் குணத்திற்காகவுந்தான்.

“இப்பிடியே வீட்டிலை வைச்சுக்கொண்டிருந்து உபத்திரவந்தான். ஆஸ்பத்திரியிலை கொண்டுபோய்க் காட்டுங்கோ… உங்கடை அக்காவுக்கு மூளை பிசகிப் போச்சுதெண்டதை ஏன் மறைக்கிறீங்கள்?” என்று ஊரில் பலபேர் சாந்தனைக் கேட்டுவிட்டார்கள்.

தன் அக்காவுக்குப் பைத்தியம் என்பதை அவனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ‘தகப்பனைத்தின்னி’என்று பெயர் கேட்ட அவனது பத்தாவது வயதில் தாயையும் இந்திய இராணுவத்தின் ஷெல்லடிக்குப் பலிகொடுத்தான். அவனைவிட ஏழு வயது மூத்த ராசாத்தி இரண்டாந் தாயாகி அவனை வளர்த்தாள். மாமா வீட்டில் இடிசோறு கிடைத்தது; சீதனம் கிடைக்கவில்லை. ஊரில் ஒரு முதிர்கன்னிக்குரிய அத்தனை மரியாதைகளும் ராசாத்திக்கும் கிடைத்தன. ராசாத்திக்கு முப்பது வயதுக்குப் பிறகு, வயது நகர மறந்து நின்றுவிட்டாற்போலொரு தோற்றம். அதெல்லாம் பழைய கதை. 

திரும்பிவந்த புதிதில் தன்பாட்டில் சுருண்டு சுருண்டு படுத்திருப்பாள் சாப்பிடுவதையும் உறங்குவதையும் விட மற்றெல்லாவற்றையும் மறந்துவிட்டவளைப் போலிருந்தாள். ஏதாவது கேட்டால் தலையைக் குனிந்தபடி மௌனம் சாதித்தாள். அவள் யாரையும் பார்ப்பதில்லை என்பதை, குறிப்பாக கண்களைத் தவிர்த்தாள் என்பதை சாந்தன் பலநாட்கள் கடந்தபின்பு கண்டுபிடித்தான். அவள் அநிச்சையாகச் செய்த செயல் ஒன்றே ஒன்றுதான்: அந்த அறையின் யன்னலை எத்தனை தடவைகள் திறந்துவிட்டாலும் அவசர அவசரமாக எழுந்து அதை இறுகச் சாத்தினாள். வெளிச்சத்தைக் கண்டு நடுங்கினாள். ஆரம்பத்தில், மதுவோ சாந்தனோ அவள் இருந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு உள்நுழைந்தால் அடிபட்ட மிருகம்போல கூச்சலிட்டாள். ஆகவே, அந்த அறையின் வாசலில் சாப்பாட்டை வைத்துவிட்டு குரல்கொடுக்கப் பழகினார்கள். விடிகாலையில் ஊர் விழித்தெழுவதற்குமுன் எழுந்து இயற்கைக் கடன்களையும் குளியலையும் முடித்துவிட்டு வந்து மீண்டும் அறைக்குள் புகுந்துகொண்டுவிடுவாள். இயல்புக்குத் திரும்பி கேட்ட கேள்விக்குப்பதிலளிக்கவே மூன்று மாதங்களுக்கு மேலாகின. அதுவும் ஒன்றிரண்டு வார்த்தைகள்தாம்.

சாந்தனும் மதுவும் செட்டிகுளம் முகாமிலிருந்து திரும்பிவந்தபோது பொட்டல்வெளியாகிப் போன வளவே அவர்களை எதிர்கொண்டது. தென்னைமரங்களை யானைகள் சு+றையாடியிருந்தன. கிணற்றடியினருகிலிருந்த பாக்குமரங்களும் பட்டுப்போயிருந்தன. பூச்செடிகள் இருந்தமைக்கான அடையாளமே இல்லை. அபிக்குட்டியின் ஞாபகத்தில் தின்னாமல் குடியாமல் கிடந்தாள் மது. சாந்தன்தான் சமையலிலிருந்து எல்லாம் செய்யவேண்டியிருந்தது.

விசாரணை நிலையத்திலிருந்து ராசாத்தியை யாரோ கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனார்கள். அவள் நேராக, கீறிவைத்த கோட்டில் தடம்பிசகாமல் நடப்பதுபோல நடந்துவந்தாள். கண்கள் பிணத்தினுடையவை போல நிலைகுத்தி நின்றன. உடலில் சதை என்று சொல்வதற்கு ஏதுமில்லாதபடிக்கு இளைத்துப்போயிருந்தாள். அப்படியே போய்ப் படுத்து உறங்கிவிட்டாள். உறக்கம் என்றால் உறக்கமில்லை! திடீரென்று அமானுஷ்யமாக ஊளையிடுவாள். இருந்தாற்போல எழுந்து வெளியில் ஓடுவாள். பெரும்பாலும் இராணுவமுகாமை நோக்கியே அவள் ஓடுவாள். எலும்பினால் செய்யப்பட்டதுபோலிருந்த அந்த உடலுள் எவ்வளவு சக்தி அடைபட்டிருந்தது என்பதை, அவளை இழுக்கமுடியாமல் இழுத்துக்கொண்டுவந்து வீடு சேர்க்கும் நாட்களில் சாந்தனால் உணரமுடிந்தது.

பகலில் வேகம் தணிந்து வேறு மனுசியாயிருப்பாள். எவரும் சொல்லாமலே தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் இழுத்து இறைத்தாள். வளவைக் கூட்டி அள்ளினாள். நாய்க்குட்டிக்குச் சாப்பாடு வைத்தாள். அதைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அதன் கண்களை உற்றுப் பார்ப்பாள். அது அவளது முகத்தை நக்கிக் கொடுக்கும். மனிதர்களது அடையாளங்களும் பெயர்களும் அவளது மனதிலிருந்து அழிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றியது.
பறவைகளோடும் விலங்குகளோடும் செடிகொடிகளோடும் நெருக்கம் காட்டினாள்.

மதுவும் சாந்தனும் தங்களது அறைக்குள் போய்ப் படுத்துக்கொண்ட சில நிமிடங்களில் ராசாத்திக்கு விழிப்பு வந்துவிட்டது. கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.

மூடிய விழிகளுக்குள் குறிகளாகத் தெரிந்தன. சமையலறையில் மரக்கறி வெட்டப் பயன்படுத்தும் கத்தியளவு நீண்ட, மெல்லிய, சதைப்பற்றான, தசையைத் துளைத்திறங்கும் கூரிய எலும்பு போன்ற குறிகள். இராணுவச் சீருடையினுள்ளிருந்து நீளும் குறிகள். சிலசமயங்களில் சிவில் உடையிலும் அவர்கள் வருவதுண்டு. விகாரமான இளிப்போடு, வாய்க்குள் திணிக்கப்படும் குறிகள். வியர்வை நாற்றமும் மூத்திரவாடையும் வீசும் குறிகள். தலையை ஆட்டி ஆட்டி அந்தக் குறிகளை நினைவிலிருந்து விலக்க முயன்றாள்.

“ராசாத்தி அக்கா! நான் செத்துப் போயிட்டனெண்டு அம்மாட்டைச் சொல்லுங்கோ.”

ராசாத்தி திடுக்கிட்டு விழித்து சுற்றுமுற்றும் பார்த்தாள். அறையின் மூலையில் துளசி நிற்பதை அவள் பார்த்தாள். துளசி பள்ளிக்கூடச் சீருடை அணிந்திருந்தாள். வெள்ளைநிறச் சீருடையில் அடர்ந்த செந்நிறக் குருதி திட்டுத்திட்டாகப் படிந்திருந்தது. நீளமான அவளது கண்களில் கண்ணீரும் கலவரமும் நிறைந்திருந்தன. அவள் நின்றிருந்த இடத்தில் காலருகில் குருதி கருநிறத்தில் தேங்கிநின்றது.

“என்னாலை நடக்கமுடியாமல் இருக்கு அக்கா!”அவள் அழுதாள்.

ராசாத்தி எழுந்து துளசியருகில் போனாள். துளசியின் தோள்பட்டையில் வைத்த கைகள் இருளுள் விழுந்தன. அவளைக் காணவில்லை. இப்போது அந்த அலைச்சத்தம் கேட்கத் தொடங்கியது. வர வர நெருங்கி வந்தது. கடலை அவள் கைவிரித்து வரவேற்றாள். அதனுள் புகுந்து தானுமொரு அலையாக மாறிவிட விரும்பினாள். அவள் நெருங்க நெருங்க கடலோ பின்வாங்கிச் சென்றது. இராட்சத நாகமொன்றின் படமென தலைவிரிந்து இடுப்பொடுங்கிய கரிய அலையொன்றின் நுனியில் நின்ற துளசி ‘அக்கா! நான் போறன்’என்றாள். அலையோசை அடங்கி றபான் ஒலிக்கத் தொடங்கியது.

ராசாத்தி செவிகளைப் பொத்திக்கொண்டாள். அவளது விரல்களையும் மீறி உள்நுழைந்தது பாட்டு. மதுவின் வாசனை வீசும் பாடல் நள்ளிரவு தாண்டியும் ஒலிக்கும். பிறகு, பெண்கள் அடைக்கப்பட்டிருக்கும் அறைகளை நோக்கித் தள்ளாடியபடி வரும்.

வினோதினி தனது மார்புச் சட்டையை விலக்கிக் காட்டினாள். பல் ஆழப்புதைந்த தடயம். புத்தரின் பல்! புத்தர் கடிக்கமாட்டார் என்றுதான் ராசாத்தி அதுகாறும் நினைத்திருந்தாள்.

ஊர் உறங்கிக்கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் விழித்திருந்தன.

ராசாத்தி எழுந்து வெளியில் வந்தாள். ஓசையெழுப்பாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினாள். சிவலை ஒற்றைச் செவியை உயர்த்தி அவளைப் பார்த்தது. முன்னங்கால்களை நீட்டி நெட்டுயிர்த்திவிட்டு தலையை உடம்புக்குள் புதைத்துக்கொண்டு உறங்கிப்போனது.

முன்னரெல்லாம் கழிப்பறையில் அமரமுடியாது. கால்களை அகட்டி அமர்ந்தபோதெல்லாம் வலி உயிர்பிடுங்கியது. மலத்திலும் சிறுநீரிலும் இரத்தம் கலந்திருந்தது. அவளது அறைக்கதவின் இடுக்கினூடாக நாட்பட்ட குருதியின் நாற்றம் கிளம்பி முகத்திலறைந்தது. மதுதான் வைத்தியரிடம் அழைத்துப் போனாள். வைத்தியரது அறை வாசலில் காத்திருந்தபோது அங்கிருந்த பெண்களிலொருத்தி ராசாத்தியை உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இவவுக்கு என்ன வருத்தம்?”

“காய்ச்சல்”என்றாள் மது.

அந்தப் பெண் ‘எனக்கு எல்லாம் தெரியும்’என்ற சிரிப்பைச் சிரித்தாள். அவள் ராசாத்தியைப் பார்த்த பார்வையில் அருவருப்பு தெரிந்தது.

ராசாத்தி கால்களை அகட்டிப் படுத்திருந்தபோது, வைத்தியர் அனிச்சையாகத் தன் மூக்கைத் தேய்த்தார். ஆனாலும் அவர் கருணையோடுதான் நடந்துகொண்டார். ஊரிலுள்ளவர்களைப்போல அவர் ஒதுங்கிப் போகவில்லை. அந்தப் பெண்போல விஷமூறிய கண்களால் சிரிக்கவில்லை.

ராசாத்தி வானத்தை உறுத்துப் பார்த்தாள். நிலவுக்குப் பெரிய வயிறு. மதுவைப்போல அதுவும் நிறைசு+லி. வயிற்றைக் கிழித்துக்கொண்டு சின்னஞ்சிறிய கையொன்று நீண்டது. அது அபிக்குட்டியின் கைகளைப் போல வெண்ணிறமான, குண்டுக்கை. இப்போது நிலவு செந்நிறமாகிவிட்டது. வெளிச்சம்போல இரத்தம் ஒழுகியது. இவள் தலையை ஆட்டினாள். பிறகு கடப்பைத் திறந்துகொண்டு வெளியில் ஓடினாள். அவள் ஓடிய திசையில் இராணுவ முகாம் இருந்தது.
…..

“மானம் போகுது”

சைக்கிளைப் பிடித்தபடி நின்ற மாமா உறுமினார். தேகம் கோபத்தில் நடுங்கியது.

“எதெண்டாலும் உள்ளுக்கை வந்திருந்து கதையுங்கோ மாமா”சாந்தன் அழைத்தான்.

அவரது கைகள் சைக்கிளின் மட்காட்டை இறுக்கிப்பிடித்திருந்தன. பெரிய பெரிய கறுத்த விரல்களில் உரோமம் அடர்ந்திருந்தது.

“நீ இவளைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலை கொண்டுபோய் விடு. இல்லையெண்டா நஞ்சைக் கிஞ்சைக் குடுத்து சாக்காட்டு. இப்பிடி வேசைப் பட்டம் கேக்கிறதிலும் சாகட்டும்.”

சாந்தன் அவரை முறைத்துப் பார்த்தான்.

“அவவுக்கு தான் எங்கை போறனெண்ட சுயநினைவு இல்லை”

“சுயநினைவு இல்லாதவள் அதெப்பிடியடா நேரா ஆமிக் காம்ப்புக்குள்ள போறாள்? ருசி கண்ட உடம்பு” மாமா காறித் துப்பினார்.

சாந்தன் மாமாவை சைக்கிளோடு தூக்கி வீதியில் எறிந்துவிடலாமா என்று நினைத்தான். அவரது சோற்றைத் தின்று வளர்ந்த நன்றி அவனது உடலில் மீதமிருந்தது. பிறகு பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னான்.

“நீங்க போங்கோ. அவ இனி எங்கையும் போகமாட்டா. அதுக்கு நான் பொறுப்பு”

“நல்லவேளையாக பற்குணம் தற்செயலாக் கண்டு பிடிச்சுக்கொண்டு வந்தான். இல்லையெண்டா நாறியிருப்பியள்”

மாமா கோபத்தோடு சைக்கிளை ஏறத்தாழத் தூக்கித் திருப்பினார். யாரையோ உழக்குவதுபோல உழக்கிக்கொண்டு வெகுவேகமாகப் போனார்.

மாமா கத்திவிட்டுப் போவதைப் பார்த்தபடி ராசாத்தி மாலுக்குள் அமர்ந்திருந்தாள்.

“அக்கா! ஏனிப்பிடிச் செய்யிறீங்கள்?”

அவள் சாந்தனை வெறுங்கண்களால் பார்த்தாள். பிறகு தலையைக் குனிந்துகொண்டாள்.

“ஊருக்கை எல்லாரும் என்னைத்தான் பேசுகினம் அக்கா”

நிமிர்ந்து பார்த்த விழிகளில் கண்ணீர் நிறைந்திருந்தது.

“எனக்கு…. தெரியாது தம்பி” குமுறிக்கொண்டு வந்து விழுந்தது பதில். கண்ணீர் தன்பாட்டில் வழிந்தது. அதைத் துடைப்பதற்கு அவள் முயற்சி எடுக்கவில்லை.

“இரவானதும்… இரவானதும்…”அவளால் முடிக்கமுடியவில்லை.

மது சாந்தனைப் பார்த்தாள். அவனது கண்கள் மகிழ்ச்சியில் மின்னிக்கொண்டிருந்தன. ‘தம்பி’என்ற வார்த்தை இத்தனை நாட்களுக்குப் பிறகு ராசாத்தியின் வாயிலிருந்து வந்ததைக் கேட்ட மகிழ்ச்சி அது.

“எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம்….”

ராசாத்தியின் கண்கள் வானத்திற்குப் போய்விட்டன. இறந்தகாலம் வானத்தில் இருந்தது. அங்கு துளசி இருந்தாள். வாணியும் தமிழ்ச்செல்வியும் இருந்தார்கள். விசாரணை என்ற பெயரில் அகதி முகாமிலிருந்து அவர்களை இழுத்துக்கொண்டு செல்லப்பட்டார்கள். அடைத்துவைக்கப்பட்ட இடத்தில் ஒவ்வொரு இரவும் ‘விசாரணை’ நடந்தது. நள்ளிரவு கடந்தபிறகு உடலில் உயிர் மட்டும் மிச்சமிருக்க திரும்பக் கொண்டுவந்து போட்டார்கள்.

“என்ரை கழுத்தை ஆராவது நெரிச்சுக் கொல்லமாட்டீங்களா? என்னாலை முடியேல்லை… என்னாலை முடியேல்லை…”வாணி இரவிரவாக அழுதாள். அவளது சின்ன உடலில் காய்ச்சல் பொழிந்துகொண்டிருந்தது.

ராசாத்தி சீற்றத்தோடு தரையை உதைத்தாள். சிவலை பயத்தோடு எழுந்து போய் வேறிடத்தில் படுத்துக்கொண்டது.

“அவங்களைக் கொல்லவேணும்”

மது பாய்ந்தோடி வந்து ராசாத்தியின் வாயைப் பொத்தினாள். அவளது உடல் பயத்தில் நடுங்கியது. சுற்றுமுற்றும் பார்த்தாள். காற்றுக்கும்கூட கண்களும் செவிகளும் இருந்தன. அவர்கள் எந்நேரமும் அவ்வழியாக வரக்கூடும். துப்பாக்கி முதுகுறுத்த கூட்டிச் செல்லப்படும் சாந்தனை மது மனக்கண்ணில் கண்டாள். சாந்தன் ராசாத்தியின் அருகில் வந்து அமர்ந்தான்.

“அக்கா! அபிக்குட்டி செத்துப்போச்சுது. நாங்கள்தான் மிச்சமிருக்கிறம்”மன்றாட்டத்தில் முடிந்த குரல் உடைந்துபோய் அழ ஆரம்பித்தான்.

“மதுவுக்குப் பிள்ளை பிறக்கப்போகுது. இந்நேரம் நீங்கள் இப்பிடி நடந்துகொண்டால் எங்களையெல்லாம் வந்து பிடிச்சுக்கொண்டு போயிடுவாங்கள்”குழந்தைக்குச் சொல்வதுபோல தொடர்ந்தான்.

ராசாத்தி தலையை ஆட்டினாள். ஓசையெழும்படியாக பற்களைக் கடித்தாள். அவளது தேகத்திற்குள் நான்கு குதிரைகள் புகுந்துகொண்டாற் போலிருந்தாள்.

“அக்கா!”

“ஹ்ம்…”

“இனிப் பட எங்களாலை ஏலாது அக்கா!”

ராசாத்தியின் இமைகள் அவசரகதியில் மூடித் திறந்தன. மூடிய கண்களுக்குள் தோன்றிய முகங்களை கைகளைக் கொண்டு விலக்கப் பார்த்தாள். அப்படி அவள் செய்யும்போது காற்றைக் கைகளால் அறைவதுபோலிருந்தது. றபான் சத்தம் வேறு காதைக் கிழித்தது. உரு வந்தாற்போல தலையை ஆட்டினாள். பிறகு மயங்கிச் சரிந்தாள். மது தண்ணீர் எடுத்து வருவதற்காக உள்ளே போனாள்.

அன்றிரவு மதுவும் சாந்தனும் நீண்ட நாட்களுக்குப் பின் ராசாத்தியின் அமானுஷ்ய ஓசைகளின்றி ஆழ்ந்து உறங்கினார்கள். ராசாத்தி காணாமற் போனதை அவர்கள் கண்டுபிடித்தபோது வெயில் விறாந்தையில் ஏறியிருந்தது.



நன்றி-“உரையாடல்“-கனடாவில் வெளியாகும் சஞ்சிகை