Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

6.11.2012

என் சகோதரியை நான் மெச்சுகிறேன்... -பரீட்சார்த்தப் பதிவு


 என் சகோதரி கவிதைகள் எழுதுவதில்லை
அவள் திடீரென்று கவிதைகள் எழுதத் தொடங்குவாள் என்றும்
நான் நினைக்கவில்லை
அவள் கவிதைகள் எழுதாததென்பது அம்மா போலத்தான்
அப்பாவையும் போலத்தான்
அவரும் கவிதைகள் ஏதும் எழுதவதில்லை
என் சகோதரியின் வீட்டுக் கூரையின் கீழ் நான்
மிகப் பாதுகாப்பாக உணர்கிறேன்
எனது சகோதரியின் கணவரும் கவிதை எழுதுவதை விட
செத்துப் போவதையே விரும்புவார்
இது - ஏற்கெனவே நிலவும் ஒரு கவிதையைப் போல
எனக்குத் தோன்றுகிறது - எனது சொந்தக்காரர்கள்
எவரும் கவிதை எழுதுவது இல்லை என்பது..

எனது சகோதரியின் காகிதக் கட்டுக்களினிடையில்
ஏதும் பழைய கவிதைகள் காணப்படவில்லை
அவளது கைப்பையிலும் கூட
புதிதாக எழுதப்பட்ட கவிதைகள் ஏதும் இல்லை
எனது சகோதரி என்னை மதிய உணவுக்குக் கூப்பிட்டபோது
அவள் கவிதைகளை எனக்கு வாசித்துக் காண்பிக்கிற
திட்டமேதுமில்லை என்பதையும் நான் அறிவேன்
அவளது சு+ப்புகளில் அற்புதமாக ருசி கூடியிருக்கிறது
அவளது கையெழுத்துப் பிரதிகளில்
காபியின் சிதறின சொட்டுகள் ஏதுமில்லை

நிறைய குடும்பங்கள் இருக்கின்றன 
எவருமே கவிதைகள் எழுதாமல்
அப்படியே எங்கேயேனும் எழுதுபவரிருப்பாரானால்
அநேகமாக ஒரே ஒருவராகத்தான் இருப்பார்
சிலவேளை கவிதை தலைமுறைகளினிடையே அருவியாகத் 
தெளித்துக் கொண்டிருக்கும்
பரஸ்பர அனுபவத்தில் பெருநீர்ச்சுழிப்பாய்த் தங்கியிருக்கும்

எனது சகோதரி அற்புதமான பேச்சுநடை கொண்டவள்
அவளது கருத்துகள் விடுமுறை காலத் தபால் கார்டு
எழுதுவதற்கு அப்பால் போனதில்லை
ஒவ்வொரு வருடமும் மாறாமல் அதே வாசகங்கள்தான்
இருக்கும்
ஆனால், அவள் திரும்பவும் என்னிடம் வரும்போது
அவள் சொல்வாள்
அனைத்தும் பற்றி
அனைத்தும் பற்றி
அந்த எழுத்துக்களிலிருக்கும் அனைத்தும் பற்றி.

-விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா

'ஹிட்லரின் முதல் புகைப்படம்' தொகுப்பிலிருந்து....
தமிழில்: ஆர்.பாலகிருஷ்ணன், யமுனா ராஜேந்திரன்

12.24.2009

ஆனந்தவிகடனில் எனது கவிதைகள்

குறுக்கித் தறித்து
இதை எழுதிக்கொண்டிருக்கிறபோது
‘காட்டுப்பூ போல மலரவேண்டும் கவிதை’
என்ற வரி உள்ளோடிச் சுடுகிறது
காற்றில் தனித்தசையும் காட்டுப்பூவை
நின்று கவனிக்க எவருமில்லை
எல்லோருக்கும்
வேண்டித்தானிருக்கிறது வெளிச்சம்!
--

புளியமரங்கள் கிளையுடல் வளைத்து
கூடல் நிகழ்த்தும் சாலையின் வழியே
மிதந்துசெல்கிறார்கள்
கார்காலத்தில் மானசியும் ஜான்சனும்
இளவேனிலில் மானசியும் மௌலியும்
ஆகஸ்டின் கொதிவெயிலில்
மானசியும் தாமோதரனும்
ஒன்றிற்கொன்று குறைவிலாத
புதிர்ப்பெண்ணின் காதலின்மேல்
படர்ந்துகொண்டிருக்கிறது வெயில்
பொழிந்துகொண்டிருக்கிறது மழை.
--

ஊழல்சாந்து குழைத்த கட்டிட இடிபாடுகளினின்று
தப்பிப்பிழைத்த பால்புட்டியைப்
பார்த்துக்கொண்டிருக்கிறாள் தாயொருத்தி.
சட்டத்தில் ஒரு கொலையின் விலை
ஒரு மாத வாடகையிலும்
மலிவானதெனச் சொல்லியபடி
காற்சட்டைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டிருக்கிறான்
பதினெட்டு வயதுப் பையனொருவன்
எப்போதும்
வெட்டரிவாள் சின்னத்துக்கே
விழுந்துகொண்டிருக்கிறது ஓட்டு

நீங்கள் விரைந்துகொண்டிருக்கிறீர்கள்
வண்ணத்தொலைக்காட்சியை வாங்க.
---

‘உன்னை மறந்தால் இறப்பேன்’என்றவனை
நீண்ட நாட்களின் பின்
நேற்றொரு கூட்டத்தில் பார்த்தேன்
கருநீலமும் சிவப்பும்
அழுத்தமாய் மேலும் கீழும் ஓடும் மேற்சட்டையும்
காக்கிக் கலர் காற்சட்டையும்
தோள்தொங்கும் ஜோல்னாப்பையுமாய்
அழகாகத்தானிருந்தது
ஆவி!
--

ஒரு சொல் உதிர்க்கும்வரை தேவதை
கண்ணிறங்கிக் கலந்தால் மானுடத்தி
முயங்கிக் களித்துச் சலித்தபின்னே ராட்சசி
தாபித்துத் தொடர்ந்தாலும்
காதலித்துக் கரைந்தாலும்
மணந்து புணர்ந்தாலும்
உனக்கென்ன
நீ மட்டும் எப்போதும் தேவகணம்!

----
கொலைகாரர்கள் நீதிமான்களாக இருக்கும் தேசத்திலும்
அடித்துப் பொழிகிறது மழை
பட்டாம்பூச்சிகள் வண்ணங்களை உதிர்த்துவிடவில்லை
குழந்தைகள் சீவிக்கிறார்கள்
உனது காதல் ஆன்மாவிலிருந்து புறப்பட்டு வருவதாக
நீ கண்ணீர் வழியச்சொல்லிக்கொண்டிருக்கிறாய்.
---

கணவனைப் பின்னிருத்தி
இருசக்கர வண்டியை ஓட்டிச்செல்லும்
தாட்டியான பெண்ணை
வினோதரசம் மிதக்கும் விழிகளால் ஏறிடுகிறீர்கள்.
மதுவிடுதிக்குள் சுவாதீனமாக நுழையும்
இளம்பெண் குறித்த சித்திரமும் உவப்பானதாக இல்லை.
‘அவள்’ எழுதும் கெட்டவார்த்தைகளை மட்டும்
அவளை மறந்துவிட்டு வாசிக்கமுடிவதில்லை.
நண்பரின் வீட்டில்
அதிசயமாக அரசியல் பேசுகிற பெண்
சமையலறைக்குள் எழுந்துபோகும்வரை
மனஅவச மௌனம் காத்துப்
பின் விட்ட இழையிலிருந்து
விவாதத்தைத் தொடர்கிறீர்கள்.

அடைபடலுக்குப் பழக்கப்பட்ட விலங்குகள்
கைமறதியில் திறந்திருக்கும் கூண்டுக் கதவை
விசித்திரம் படர்ந்த கண்களால்
வெறித்துக்கொண்டிருக்கின்றன.
----

அவசரமாய் கவிதையொன்றைத் தயாரிக்க வேண்டியிருக்கிறது
அனுப்பிவைக்கக் கேட்டவரின் அனுக்கமுகம்…
வாசிப்பவள்-ன்
கைவண்டி இழுத்துக் களைத்தவனா
சமையல் விடுமுறையில்
கூடத்தில் குப்புறக் கவிழ்ந்திருந்து படிப்பவளா
இலக்கிய நுணுக்குக்காட்டி அணிந்தவனா
சன்னல்களும் பூட்டப்பட்ட அறையினுள்
புத்தகங்களோடு மட்டும் வசிப்பவனா
இக்கவிதை
திறந்த இடுப்பருகில் இடம்பெறுமா
கொலைபடுகளத்தைச் சித்தரிக்கும் கட்டுரைக்கு
எதிர்ப்பக்கத்தில் வெளிவருமா
இறக்குவதா ஏற்றுவதா
இருண்மைசெய்வதா
வெளிச்சம் விழுத்துவதா
ஏதேதோ கேள்விக்கொக்கி பிடித்திழுக்கப் பிடித்திழுக்க
பொறாமல் முகம்சிணுங்கி
தெருவிறங்கிப் போகிறதே என் கவிதை
என் செய்வேன்
இல்லாத என் தெய்வமே!
----

வாக்குப்பெட்டிகளுக்காக
பணப்பெட்டிகள்
பணப்பெட்டிகளிலிருந்து
ஆயுதப்பெட்டிகள்
ஆயுதப்பெட்டிகளிலிருந்து
சவப்பெட்டிகள்
சவப்பெட்டிகளிலிருந்து……...
எந்தப் பெட்டியை
எந்தப் பெட்டி
முதலில் குட்டி போட்டதென்று
உங்களுள் எவராவது
சொல்லமுடியுமா நண்பர்களே?
--

மாடியை ஒட்டிய புத்தக அறையினுள்
எப்படியோ சேர்ந்துவிடுகின்றன சருகுகள்…
வாசிப்பினிடை தலைதூக்கினேன்
செல்லமாய் சிணுங்கி
ஒன்றையொன்று துரத்திச் சரசரத்தன
கட்டிலுக்கடியில் பதுங்கின மேலும் சில
பெருக்க மனதின்றி விட்டுவைக்கிறேன்
ஈரமனைத்தும் உறிஞ்ச
வெயில் வெறிகொண்ட இக்கொடுங்கோடையில்
எந்த வடிவிலேனும்
இந்த மாநகர வீட்டினுள் இருந்துவிட்டுப்போகட்டுமே
மரம்.

நன்றி: ஆனந்தவிகடன்

12.20.2009

போதிமரம்




என்னை விறுக்கென்று கடந்த
உன் விழிகளில்
முன்னரிலும் முள்ளடர்ந்திருந்தது
உன் உதட்டினுள்
துருதுருக்கும் கத்திமுனை
என் தொண்டைக்குழியை வேட்கிறது.

மாறிவிட்டன நமதிடங்கள்
துடிப்படங்கும் மீனாக நான் தரையில்
துள்ளி நீர் கிழித்தபடி நீ கடலில்.
துரோகி-தியாகிச் சட்டைகள் அவிழ்ந்துவிழ
சற்றுமுன்பேஅம்மணமானோம்.
இடுகாட்டில் குளிர்காயும் குற்றவுணர்வில்
எரிகிறது எரிகிறது தேகம்

நம் அட்டைக்கத்திகளில்
எவரெவரின் குருதியோ வழிகிறது
நாம் இசைத்த பாடல்களைப் பிரித்துப் பார்த்தேன்
ஒழுகிற்று
ஊரும் உயிரும் இழந்த
பல்லாயிரவரின் ஒப்பாரிகள்

வன்மம் உதிர்த்து
வந்தொருக்கால் அணைத்துவிட்டுப் போய்த்தொலையேன்
மரணம் என்ற போதிமரத்தின் கீழ்
நிழலில்லை நீயுமில்லை நானுமில்லை
வதைமுகாம் மனிதர்களின்
கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்கிறது

தோற்றவரின் வேதம் என்பாய்
சரணாகதி என்பாய்
போடீ போ!
இனி இழக்க எவரிடமும் எந்த மயிருமில்லை!


நன்றி: காலம் (கனடா)

9.16.2009

திஸநாயகத்தின் தவறுகள்


தானியக் களஞ்சியங்களை
போர் கொள்ளையடித்துவிட்ட ஒரு தேசத்தில்
சகோதரனே!
உண்பதற்கு மட்டுமே
நீ வாயைத் திறந்திருக்க வேண்டும்।

உனது எழுதுகோலுள்
குருதியையும் கண்ணீரையும்
ஊற்றியது யார் தவறு?

உடற்சாற்றில் வழுக்கி
ஊடகதர்மம்
அலமலந்து விழுந்துகிடக்கும் மண்ணில்
உண்மையன்று;
நமக்கெல்லாம்
உயிரே வெல்லம் என்பதறியாயோ?

'ஜனநாயகம்' என்ற சொல்
பைத்தியம் பிடித்து
மலங்க மலங்க விழித்தபடி
தன் கண்களை ஒளித்துக்கொள்ள
இடம்தேடியலையும் தெருவொன்றிலிருந்து
நீ உச்சரித்திருக்கக்கூடாது
அந்த இற்றுப்புழுத்த வார்த்தையை...

மனிதவுரிமையாளர்களின்
குறிப்புகளைப் பிடுங்கிக்கொண்டு
தரதரவென்று இழுத்துப்போய்
விமானமேற்றும் நாட்டிலிருந்தபடி
என்ன துணிச்சலில் நீ எழுதினாய்
எரிதழல் சொற்களை?

அகதிமுகாமொன்றின்
மலக்குழியின் பக்கப்பலகைகள் இற்றுவிழுந்து
புழுக்களுள் புதையுண்டு
செத்தொழிந்த சிறுவர்கள் கேட்டார்களா
நாற்றமடிக்கும் சமவுரிமையை
எழுதக்கூடாதா என்றுன்னை?

போர்க்குற்றங்களை எழுதுவது
மாபெரிய போர்க்குற்றம்!!!

எனினும்
எமதினிய சகோதரா!
'அவர்கள்’ விடுவிக்காதுபோனாலும்
வரலாறு உன்னை விடுவிக்கும்.

7.05.2009

அகதி நாடு

கைவிடப்பட்டதும் துரோகிக்கப்பட்டதுமான
கண்களோடிருந்த அந்தப்
பூஞ்ஞை உடம்புக்காரனுக்கு
அழுத்தித் தரைதுடைக்கக் கற்றுக்கொடுத்தேன்.

பீங்கான்கள் கழுவும் இயந்திரத்தருகில்
சொதசொதவென்றிருந்த ஈரத்தில்
கால் விறைத்திருந்த அவனுக்கு
எனது
பழைய ஈரமுறிஞ்சா சப்பாத்துக்களைத்
தந்துவிடுவதாகவும் வாக்களித்தேன்.

சிருங்காரப் பாடலொன்றை முணுமுணுத்தபடி
எங்களைக் கடந்துபோன
இடைமெலிந்த பரிசாரகப் பெண்ணின்
அதிரும் பிருஷ்டங்களில்
அலையும் மார்புகளில் கண்புதைத்தபடி
அவளிடம் அவதானமாயிருக்கும்படி
வினயத்தோடு வேண்டிக்கேட்டேன்.

சமையலறைப் பகுதிக்குள்
திடீரென உள்நுழையும் மேற்பார்வையாளனின்
ஏகாதிபத்தியக் கண்களின் முன்
குரங்கு நடனம் புரிவதன் வழியாக
வேலையில் நீடித்திருக்கலாம்
என்ற விசயத்தையும்
கொஞ்சம் உரைத்து வைத்தேன்.

மேலும்
கள்ள இலக்கத்தில்
வேலை செய்வதை
குடிமயக்கத்திலும் உளறிவிடாதிருக்க
எச்சரித்த பிற்பாடு
அந்தப் புதிய வேலையாளின்
பெயரைக் கேட்டேன்.

‘நாடு’என்றான்.

அதிர்ந்தேன்
அயராமல்
அவன் இருப்பிடம் விசாரித்தேன்

‘இங்கே’என்றான்
சுட்டுவிரலை திடுக்கென நீட்டி
என் இதயத்தில் குத்தி.


கள்ள இலக்கம்: வேலை அனுமதிப் பத்திரம் கிடைக்கப் பெற்றிராத அகதிகள் இன்னொருவரின் இலக்கத்தில் வேலை செய்வதை ‘கள்ள இலக்கம்’என்பார்கள்.

சப்பாத்து: 'ஷு' எனப்படும் காலணி (இந்தக் கேள்வி முன்பும் சிலரால் கேட்கப்பட்டதால் விளக்க வேண்டியதாயிற்று.)

6.24.2009

கனவுகள்+கவலைகள்=கவிதைகள்

ஆதிரை என்றொரு அகதி

ஐந்து வயதான ஆதிரைக்கு
கடல் புதிது
கேள்விகளாலான அவள்
அன்றைக்கு மெளனமாயிருந்தாள்
துவக்குச் சன்னங்களுக்குப்
பிடரி கூசி
ஒவ்வொரு வெளிச்சப்பொட்டிலும்
படகினின்று உயிர் தளும்பிய அவ்விரவில்
கடல் குறித்த எல்லாக் கவிதைகளும்
எனக்கும் மறந்துவிட்டிருந்தன
கடல் ஒரு
நீர்க்கல்லறை என்பதன்றி.

கழிப்பறை வரிசை...
கல் அரிசி...
சேலைத் திரை மறைவில்
புரியாத அசைவுகள்...
காவல் அதட்டல்...
கேள்விகளாலான அவள்
ஊரடங்குச் சட்டமியற்றப்பட்ட
பாழடைந்த நகர் போலிருந்தாள்.

சுவர் சாய்ந்து
தொலைவனுப்பிய உன் விழிகளுள்
விமானங்கள் குத்திட்டுச் சரிகின்றனவா?
குருதிப் பிசுபிசுப்பு காலொட்டும்
முடிவிலாத் தெருவொன்றில்
நடந்து கொண்டிருக்கிறாயா?


என் சின்ன மயில் குஞ்சே!
போரோய்ந்து திரும்புமொரு நாளில்
பூர்வீக வீட்டைப் பிரிய மறுத்து
போருள் தங்கிவிட்ட
என் தாய்முன் இளகலாம்
கெட்டித்து இறுகிய உன் கேள்விகள்.

"அம்மம்மா! அவையள் ஏன் என்னை
அகதிப்பொண்ணு எண்டு கூப்பிட்டவை?"


---

தேவ வசனம்


தனிமைத் தாழியுள்
தன்னைக் கிடத்தியவளைப் பார்த்துவரப் போனேன்
அவள் கண்ணிலிருந்து
சுண்டியெறிந்த துளி
பல்திவலைகளாகப் பெருக
வீட்டினுள்ளே மூழ்கிக்கொண்டிருந்தாள்.

வெளியே அழைத்துப்போனேன்
மஞ்சள் பூவலைவுறும் வெளிகளில்
இல்லாத பட்டாம்பூச்சிகளை
குசலம் கேட்டாள்.
காலம் கால் நழுவும் கோயில்களில்
தானுமோர் கல்லென
இறுகிச் சொன்னாள்.
மதுச்சாலையொன்றில் ஒலித்த
ஒற்றை சாக்சபோன் இசையை
நிறுத்தும்படி பரிசாரகரிடம்
பணிந்து கேட்டாள்.

வெயில் கருக்கும் கூடல்மாநகரை
'நினைவின் மது'என்கிறாள்
'வின்கானிஸ்'உபயத்தில்
யன்னல்கள் பெயர்ந்து திரியும் இவ்விரவில்
மணிக்கூண்டில் ஒரு மணி அடித்து
பைபிள் ஒலிக்கிறது
'நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை
உன்னைக் கைவிடுவதுமில்லை'
எழுந்தமர்ந்து சிலுவைக்குறியிட்டு
'நெகிழும்படியான தேவவசனங்களை
சந்தர்ப்பத்திற்கேற்றபடி எதிரொலிக்கிறவர்களை
செருப்பாலடியும் என் தேவனே!'என்றவள்
தன் தனிமைத் தாழியுள்
இறங்கி மரிக்கிறாள்.


'வின்கானிஸ்'-ஒருவகை வைன்

----

திரும்பவியலாத வீடுகள்

மிகுதொலைவில் இருக்குமென் வீடு
ஒரு மரணப்பொறி
இல்லை...
கல்லாலாய கனவு
இருள்பச்சை நிற வாகனங்கள்
மின்சாரம் பாய்ச்சப்பட்ட முள்வேலிகள்
இரும்புத்தொப்பிகளின் அடியில்
வெறியில் மினுக்கிடும் விழிகள்
இவை தாண்டி
கண்ணிக்குத் தப்பி
விதை பொறுக்கும் பறவையென வருகிறேன்.

குளிர்தரையினுள்ளே துடிக்குமோ
வீட்டின்
வெம்மைசூழ் இதயம்...!

உருக்கி ஊற்றிய தங்கமென
முற்றம் படரும் வெயிலை
கண்களுள் சேமிப்பேன்
கிணற்றின் ஆழ இருளினுள்
பளிச்சிடும் நாணயங்களை
ஓராண்டு செலவழிக்க
பொறுக்கிக் கொள்வேன்
ஓ கிளைகொள்ளாத லசந்தரா!
என் கனவினில் சொரிக சொரிக
நின் இளஞ்சிவப்பு மலர்கள்.

பூனைக்குட்டி
என் வாசனையைத் தொடராதே
தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டவளாயினேன்
பூட்டப்பட்ட என் அறையின் முன்னமர்ந்து
தீனமாய் அழைக்காதே என் செல்லமே!
அங்கில்லை நான்.

திரும்பவியலாத
யாரோ ஒருவர்
இதை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்
விழி பனிக்க.

----

பிதாமகனின் மீள்வருகை


இம்முறை பிதாமகன்
புத்தக அடுக்குப் பக்கம் வரவில்லை
மாமிசவாடை தூக்கலாக இருப்பதாக
சலித்துக்கொண்டார்.
அவரால் நிராகரிக்கப்பட்ட பெண்களின் பட்டியலை
தம்பி பட்டத்திற்கு வாலென
எடுத்துப் போனபிறகு
அடுக்களைக்குள் வந்து தண்ணீர் கேட்டார்.
என் வீட்டுக் குழாயில்
கடல் வருவதில்லை என்றதற்கு
அஞ்சலோட்டத்தில் நான் பின்தங்கிவிட்டதாக
குறைப்பட்டார்.
வெறுங்கால்கள் = அடிடாய்ஸ்
என்ற சூத்திரம் எனக்குப் பிடிபடவில்லை
கைதட்டல்களின் ஓசையில்
தன்னால் உறங்கமுடிவதில்லை
என்றவரைக் குறித்து
தோழியிடம் கேட்டேன்
'ஓடுகளத்தில் அவரைக் கண்டதேயில்லை'என்றாள்.

---

ஒரே மாதிரி

காலையில் எழுந்ததும்
இந்தக் கண்ணாடியைத்தான் பார்க்கிறேன்
கண்ணில் ஒற்றும்
அம்மன் முகத்தில்
பன்னிரு வருசப் பழமைக் கருணை
நேரே நடந்து
இடதுபுறம் திரும்ப குளியலறை
தண்ணீர் நிறமற்றது
தேநீரில் துளி சுவை மாற்றமில்லை
பகல் கனவுகளின் நீட்சியாய்
துரோகமும் கோபமும்.
மாலை நடக்கப்போகும் தெருவில்
மிஞ்சி மிஞ்சிப் போனால்
ஒரு பூ அதிகமாகப் பூத்திருக்கலாம்
'பாப்பா'என்ற பைத்தியக்காரி
இன்றைக்கும் அதே சேலையோடும்
மாறாத வார்த்தைகளோடும்.

இரண்டாவது தலையணை
எப்போதும் நீள்வாட்டில்
டார்ச் லைட்
பாம்புக் கறுப்பாய் பழுப்பு மஞ்சளாய்
10.32 ஆகலாம் இன்று தூங்க
நாளை
இந்த மின்விசிறியில்தான்
தொங்குவேனாயிருக்கும்
அப்போதும் கால்கள்
ஒரே மாதிரியாகவா இருக்கும்?


---

குருதியினும் கனம் மது

நாங்கள் உங்களைப்போலவே வெளியேறினோம்
அன்றேல் வெளியேற்றப்பட்டோம்
பிரிவு கொடியது
எனினும் மரணத்திலும் மெலியது
நெஞ்சுக்கூட்டுக்குள்
குண்டுகள் சிதறும் அதிர்வுடன்
தேசங்களின் எல்லைகளைக் கடந்தோம்.

ஒரு நிந்தனையில்லை

செய்திகளாலும் மரணங்களாலும்
மட்டுமே அறியப்படும் நிலத்தை
காலப்புல் படர்ந்து மூடுகிறது.
மீட்சியிலா பனிச்சேற்றுள்
புதைந்தன எங்கள் பாதங்கள்.

இழித்தொரு சொல்லும் எழுதேன்

எது உனக்குத் திருப்திதரும்?
சமாதானப் பணியாளர்களின் வெளியேற்றம்?
ஆட்சியாளரின் கொடியேற்றம்?
போராளிகளின் பின்னடைவு?

வேலை சப்பித் துப்பிய
விடுமுறை நாட்களில்
சலித்த இசங்களையும்
அழகிய நாட்களையும்
பேசித் தீர்ந்த பொழுதில்
மதுவின் புளித்த வாசனையில்
மிதக்கவாரம்பிக்கிறது தாய்தேசம்.
ஊறுகாயிலும் தொட்டுக்கொள்ள உகந்தது
எதிர் அரசியல்.

வெள்ளை மாளிகையும்
மெளனம் கலைத்த இந்நாட்களில்
உன் மூளைச்சலவை
மிக நன்று.

பேசு!

அவன்...
விமானங்கள் சிதைத்துப்போன
தசைத்துணுக்குகளைப் பொறுக்குகிறான்
தலைகளையும் உடல்களையும்
சரிபார்த்துப் பொருத்துகிறான்
அவள்...
இடம்பெயர்ந்து
சேலைத்திரை மறைவில்
இறுதி இழுபறிபடும் கர்ப்பிணியின்
கைகளைப் பற்றியபடியிருக்கிறாள்
மேலும்
அவனும் அவளும்
எல்லைகளில் இறந்துபோகிறார்கள்
ஒரு புகைப்படமாய்...
தாயின் முகத்தில் கண்ணீர்த்துளியாய்...
தோழர்களின் விழிகளில் கோபமாய்...
துயரம் ததும்பும் ஞாபகமாய்...
உறைகிறான் உறைகிறாள்.

நீ பேசு நண்ப!
பேசுவது எத்தகு இனிமையானது
சுலபமானதும்கூட!

-இந்தக் கவிதை தோழர் ஷோபா சக்திக்கும் போல்வார்க்கும் சமர்ப்பணம்:)


இம்மாதம் வெளிவந்த 'புது எழுத்து'சஞ்சிகையில் மேற்கண்ட கவிதைகள் வெளியாகியிருந்தன. அனைத்து அதிகாரங்களும் கைகோர்த்து எங்கள் கதையை முடித்துவைப்பதன் முன் எழுதப்பட்ட கவிதைகள்(?)இவை.

நன்றி:புது எழுத்து

4.03.2009

மலைகளுக்குச் செவிகள் இல்லை

மேடைகளில்
கனன்ற சொற்பொறிகள்
நேரே உங்கள் இதயத்துள்
இரத்தம் கண்ணீராய் திரிந்தது.

நம்பித்தானிருந்தோம்!

பேசிய நாக்குகளைக் கைதுசெய்தார்கள்
விரல்களையும்.
சிறையிருளைக் கிழித்திறங்கும்
ஒற்றைச் சூரியவிரல்
இரத்தக்கறை படிந்த சுவர்களில் எழுதுகிறது
உங்களில் இரக்கமுள்ளோரின் பெயர்களை.

ஊர்வலங்களில் சீரான காலசைவில்
எழுச்சியுற்று நடந்தீர்கள்
பட்டொளிப் பதாகைகள்
காக்கிகளால் சுருட்டப்பட்டன
அதிகார நகங்களில்
உங்களது சதைத்துணுக்குகள்
நீதியின் உதடுகள்
லத்திகளால் அடித்துச் சாத்தப்பட்டன.

முத்துக்குமாரிலிருந்து
தீப்பந்தமாகிய உடல்களால்
சற்றைக்குப் பாதை ஒளிர்ந்தது
பிறகு கும்மிருள்.

எனினும் நம்பித்தானிருந்தோம்!

நாங்களும் நீங்களும்
செவிட்டு மலைகளிடம்
வியர்த்த வார்த்தைகளால்
உரையாடினோம்.
அதிகாரங்களின் பள்ளத்தாக்குகளில்
எங்களால் இசைக்கப்பட்ட துயரத்தின் பாடல்கள்
கையேந்தித் திரிகின்றன.

வரும் எல்லாச் செய்திகளிலும் குருதி
எதிர்ப்படும் எல்லா மனிதரிலும் கண்ணீர்
நாங்கள் இரண்டு வேளை பல்துலக்குகிறோம்
மூன்று வேளை அழுகிறோம்.

கேவலத்தில் கேவலமாய்
இன்னமும் வயிறு பசிக்கிறது.
ஒருபக்கக் கன்னம் கருகி
வலியில் துடித்த குழந்தையை
பலவந்தமாய் மறந்து எப்போதாவது
சிரிக்கவும் செய்கிறோம்.

நாடற்று அலைபவர்கள்
ஒவ்வொருவருள்ளும்
எரிமலை புகைகிறது
புயல் சீறுகிறது
பூகம்பம் குமுறுகிறது.

ஒரு குருவி சிறகசைக்கும் ஓசைக்கும்
பதறியழும் பைத்தியங்களாய்
எங்கள் மனிதர்களைச் சிதைத்தாயிற்று.

இந்தக் களரியின் பின்
குழந்தைமையற்ற குழந்தைகள்
எவரேனும் எஞ்சக்கூடுமெனில்
செடியிலிருந்து பூக்கள் உதிர்வதைப் பார்த்தே
பதுங்குகுழிக்குள் பாய்ந்தோடி இறங்குவர்.

இறந்தவர்களின் நினைவுகளோடு எனினும்
ஊர் திரும்பும் கனவை
இடிபாடுகளுக்குள்ளிருந்து
இனி மீட்டெடுக்கவே முடியாது.

ஒருவழியாய் நண்பர்களே!
உங்கள் கவனத்தை
சவப்பெட்டிகளிலிருந்து
வாக்குப்பெட்டிகளுக்குக் கடத்திவிட்டார்கள்.

நன்றி: சமூக விழிப்புணர்வு

2.26.2009

தடுப்பு முகாம்கள்


சூரியன் மஞ்சளாய் சரியும்வேளையில்
கொலைக்களத்திலிருந்து புறப்படும் இராணுவ வாகனங்கள்
உயிருள்ள பிணங்களை
வீதியோரத்தில் கொணர்ந்து கொட்டுகின்றன.
இரவானதும்
தடுப்புமுகாம்களின் கம்பிவேலிகளுள்
இடமாற்றப்படுகின்றவர்களின்
அகலவிரிந்துறைந்த கண்களுள்
விழுந்துகொண்டிருக்கின்றன
சடலங்கள் மேலும் பல சடலங்கள்

‘மீட்கப்பட்டவர்களை’ஓளியிழை நாடாக்கள்
அவசரமாய் விழுங்குகின்றன.
நியாயப்படுத்தல்களுக்கு
முற்கூட்டியே தயாராயிருக்கும் பெருந்தகையீரின்
நிறைவான தலையசைப்பினை
புகைப்படக்காரனே! கவனத்திற் கொள்க.
ஒரு குழந்தையை கிச்சுக்கிச்சு மூட்டியேனும் சிரிக்கவை.
உணவருந்திக்கொண்டிருக்கும்
வயோதிப மாதொருத்தியின்
நன்றிப்பெருக்கில்
குவியட்டும் காமெராக்கண்.

கம்பிச்சுருள்களாலும் ஆட்காட்டிகளாலும்
வடிகட்டப்பட்ட சொற்களிலிருந்து
மகனைக் குறித்தொரு
தகவலும் கிட்டாமல்
நடைதளர்ந்து திரும்புகிறாள் தாயொருத்தி!

விசாரணைக்கென அழைத்துச்செல்லப்படும்
தேவதைகளின் முன்
முதலில் நீட்டப்படுவன துப்பாக்கிகள்
பிறகு....
உளியாய் பிளந்திறங்கும் குறிகள்!

தடுப்புமுகாம் சுவர்களின் சுற்றளவுக்குள்
தாயக எல்லைகளைச் சுருக்கிவிடும் சிரிப்பு
கன்னக்கதுப்புள் ஒளிந்திருக்க
தொலைக்காட்சியில் அழுதுவடிகின்றன நரிகள்.

அகதிகளை முன்னிறுத்திப் பிச்சையெடுக்கும்
அரச நிருபத்தை
கவனமாய் மிகக் கவனமாய்
பரிசீலி்த்துக்கொண்டிருக்கிறது சர்வதேசம்.

நன்றி: உயிரோசை

2.22.2009

விழாக்காலத் துயரம்


எனது கதை, கவிதைகளில் நந்திதா என்ற பெயரை விளித்துப் பேசுவது வழக்கம். இந்தக் கவிதையிலும் நந்திதா இருக்கிறாள். பொங்கலையொட்டி எழுதப்பட்ட கவிதை இது.


நம்பிக்கையின் நாடித்துடிப்பு
மெல்ல மெல்ல
அடங்கிக்கொண்டு வருகிறது நந்திதா!

தேய்ந்த சொற்களால்
வழிந்து தீராத கண்ணீரை எழுதுகிறேன்.

நீல ஒளியுமிழும் சரவிளக்குகள்
மரங்கள் தோறும் காய்த்துத் தொங்கும்
இந்தத் திருவிழாத் தெருக்களில்
நானும் ஞாபகமும் நேற்றிரவு நடந்துபோனோம்.

அழகிய போர்வையாய் பனிபடர்ந்திருக்க
குளிரும் நிலவுமாய் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது இந்நிலம்.
தொலைவில் ஒலித்த துள்ளிசைக்கிணங்க

ஆடியபடி போயிற்று
கடலை வண்டியின் காடாவிளக்கு

இந்தப் பண்டிகை நாட்களில் என் அன்பே!
நமதூரின் எந்தப் பதுங்குகுழியில்
பதைக்கும் விழிகளோடு உயிர்தரித்திருக்கிறாய்?
வாழிடம் சுருங்கிப்போன இக்கொடுங்காலத்தில்
சாவின் சாத்தியங்கள் விரிந்துவிட்டன.
பறவைகளை இழந்த வானத்திலிருந்து
எந்தக் கணமும்
மரணம் சிறகுதழைத்திறங்கலாம்.

நேற்று
பொங்கலின் இனிப்பேந்தி வந்த குறுஞ்செய்திக்கெல்லாம்
குற்றவுணர்வோடு பதில் அனுப்பினேன்
நேற்று வழக்கத்தைக்காட்டிலும்
நிறையவே சம்பிரதாய வார்த்தைகளைப் பேசினேன்
நேற்று அனைத்து தொலைக்காட்சிகளிலும்
யாரோ ஒரு நடிகர் யாரோ ஒரு நடிகை
தொடர்ந்து பொங்கலைச் சிறப்பித்துக்கொண்டேயிருந்தார்கள்

நேற்று
நமது குழந்தைகளுக்கு உணவு கிடைத்ததா?
நேற்றைக்கும் சமைக்க எடுத்த அரிசியில்
குருதி ஒட்டியிருந்ததா?
பொங்கிச் சரிந்த ஏதோவொரு நாளின் ஞாபகத்தோடு
வேறொரு மரத்தடிக்கோ வயல்வெளிக்கோ
இடம்பெயர்ந்து போனாயா?

நந்திதா!
நாதஸ்வரமும் மேளச்சத்தமும் கலந்தொலிக்கும்
இத்திருவிழா நாட்களில்
கோயில் கேணி பிரதிபலித்த
நம் தலைகீழ்பிம்பங்கள் போலாயிற்று வாழ்க்கை!

அறிவுஜீவிகள் மெளனம் பழகுகிறார்கள்
அரசியல்வாதிகள் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்
அன்றன்றைய வாழ்வை
இழக்க விரும்பாத மக்களோ
சிறையிருளின் கனத்த காலணிகளை
கனவிலும் அஞ்சினர்.

பூர்வீக கலைகளை
அழியவிடாமல் விழா எடுத்துப் பாதுகாக்கும் இம்மண்ணில்
நந்திதா! நான் நம்புகிறேன்
ஈழத்தமிழர்களின் சாம்பலும்
காலத்தால் அழிபடாத தாழியொன்றில்
பத்திரமாய்த்தானிருக்கும்.



நன்றி: உன்னதம்

11.29.2008

புயலின் நாள்


மழை.. மழை... மழையன்றி வேறில்லை. கால்களில் எப்போதும் ஈர நசநசப்பு. இரண்டு மணி நேர மின்வெட்டே நாங்கள் மின்சாரத்தால்தான் இயக்கப்படுகின்றவர்களோ என்று நினைக்கத் தூண்டியிருக்க, முழுஅளவில் இருள் மூடினால் என்னதான் செய்வது? இணையத்தொடர்பு இல்லையென்றால் எத்தொடர்பும் இல்லையோ என்று ஒவ்வொரு நிமிடமும் நினைக்கும்படியாயிற்று. 26ஆம் திகதி எழுதிய பதிவை இன்று இடும் காரணம் இதுதான். ஆனால், சென்னையில் மழை எத்தனை அழகாயிருந்தது என்று எழுதும்போது ஆதவன் தீட்சண்யாவின் கவிதை ஒன்று நினைவில் வருகிறது. தலைக்கு மேல் கூரையுள்ளவர்கள் யன்னல் வழியாக மழை பார்த்துவிட்டு கவிதை எழுதுவதைப் பற்றி அந்தக் கவிதையில் சொல்லியிருப்பார். யார் எப்படிக் கோபித்துக்கொண்டாலும் மழையைப் பற்றி எழுதும் தாகம் மட்டும் தீராததாகவே இருக்கும்போல...


வேம்புகளில் புகுந்த காற்றுப்பேய்
எந்தச் சிமிழிலும் அடைபட மறுத்து
தலைசுழற்றியாடுகிறது.
அப்போதுதான் துரோகம் செவியுற்ற பெண்ணென
மூசியறையும் கடலிரைச்சல்
வீடுவரை வருகிறது.
கனத்த மழைத்திரை
சகலமானவற்றிலும் கவிந்து மூட
தெருக்களைத் தெப்பக் குளங்களாக்கி
கரைகடந்து போகிறாளொருத்தி.

மின்னறுந்த இவ்விரவில்
அலைக்கழியும் மெழுகுவர்த்தியின் துணையோடு
‘இன்றுதான் நீ பிறந்தாய்’என
எழுதிக்கொண்டிருக்கிறேன்.
எறிகணைகளால் கிழிபடும் அந்நிலத்தில்
இன்று
நீயுறையும் பேறுற்ற
பெரும் அடவி எதுவோ?

10.13.2008

தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம்

ஆயுதங்களைக் கைவிடும்படியாக
அறிவித்தல் கிடைத்தது.

நல்லது!

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்

எஞ்சிய வீடுகளை
நாங்களே தரைமட்டமாக்க...
சுவர்களில் மூளை சிதறி வழியும்
கனவுகளோடிருக்கும் உங்கள்
விழிகளை ஏமாற்றி
குழந்தைகளுக்கு முன்னதாகவே நஞ்சூட்டி விட…
அரச மரங்களை விடுத்து
கோயில்களைத் தகர்த்துவிட…
நீங்கள் வன்புணர்ந்து சிதைக்கவிருக்கும்
யோனிகளுடை பெண்களை
இழிவின்முன் கொல்லவும்

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.

சுறுசுறுப்பாக இயங்கவிருக்கும்
உங்கள் வதைகூடங்களைச் சுத்திகரிக்க…
புகட்டுவதற்கென
மலமும் மூத்திரமும் குடுவைகளில் சேகரிக்க…
நகக்கண்களுக்கு ஊசிகள்...
குதிகால்களுக்கு குண்டாந்தடிகள்...
முகம் மூடச் சாக்குப்பைகள்…
மேலும்
கொஞ்சம் மிளகாய்ப்பொடி தயாரிக்க

உங்களுக்கும் அவகாசம் வேண்டுமல்லவா?

எங்களது பூர்வீக நிலங்களில் குடியமர்த்த
ஆட்களையும் அடியாட்களையும்
தயார்ப்படுத்தியாயிற்றெனில்
யாவும் நிறைவு.

பூரண (மயான) அமைதி பொலிக!

ஆயுதங்களைக் கைவிடுமுன்
அவகாசம் வழங்கி
தேவரீர்
கருணை பாலிக்க வேண்டுகிறோம்.

10.08.2008

எழுதாத காரணம்

“எழுதாத காரணம் என்ன?”என்றாய்.

வாசிக்கவெனப் புரட்டிய பக்கத்தினின்று
சிறகு தழைத்தெழும் விழிப்பறவை
முடிவற்ற வானில்
திசைதப்பியலைகிறது.

வரிகள் வழிந்தோடிவிடும் வெற்றிடங்களில்
ஞாபகக் கத்திகள் சுழல்கின்றன.
உபரியாய்
ஊளையிடுதலே ஒரே பொழுதுபோக்கான
கீழ்வீட்டு நாய்கள்…
சாணை தீட்டுபவனின் கூர்மைக் குரல்…
வெறுமையைத் தெளிக்கும் வெயிலை
விரட்டுவதாக
சதா தற்பெருமையடிக்கும் மின்விசிறி…
ஆளற்ற தெருவில் ஒலிப்பானின்
அநாவசிய அலறல்கள்…
கதவுக்கு வெளியில்
பஞ்சாயத்து வேண்டும் பல்குரல்கள்...
பலவீனமறிந்த பிச்சைக்காரி
கூடவே அழைத்துவரும் சிறுகுழந்தையின்
பாவனைப் பசிக்குரல்...

இவை தாண்டி
பனிக்கால மரங்களுள்
சிறைப்பட்ட துளிர்களாய்
காத்திருக்குமோ கவிதை?



8.05.2008

சத்தியமாய் கவிதையில்லை

காதல்:
நரம்புமேடையில்
ஹோர்மோன்கள்
நடத்தும் நாடகம்

அரசியல்:
அவரவர் புண்களிலிருந்து
வழியும் சீழ்

எழுத்து:
முன்னால் நிற்பவனின்
கண்ணறிந்து கடைவிரிக்கும்
புனித வியாபாரம்

தாம்பத்யம்:
இரண்டுபேர் ஆடுகிற
கண்ணாமூச்சியாட்டம்

எல்லா மயிரும் தெரிந்தபிறகும்
மூடுபல்லக்கில் அசைந்தசைந்து
எத்தனை நளினமாய்
முகமினுக்கிப் போகிறது வாழ்க்கை.

7.02.2008

பக்கம் நிறைத்தல்



எழுதி ஏதும் நிகழப்போவதில்லை என்பதறிந்தும், எழுதாமலிருப்பது குற்றவுணர்வைத் தருகிறது. புலம்பெயர்ந்த நாட்டிற்கே மீண்டும் பெயர்ந்து வந்து, ஐந்தாண்டுகளின் முன் திரிந்த தெருக்களையும், கடந்த நாட்களையும் மனிதர்களையும் மீளக்கண்டுபிடிக்கவே பொழுது சரியாக இருக்கிறது. மேலும் ஒப்பீடுகளில் அலைக்கழிகிறது திருப்தியடையாத மனம். எதையாவது கொண்டு தன்னை நிரப்பச்சொல்லி தீனமாக அழைத்துக்கொண்டேயிருக்கும் இப்பக்கத்தை, கடந்த மாதம் 'உயிர்மை'இதழில் வெளியான கவிதைகளை இடுவதன் மூலம் தற்காலிகமாக சமாதானம் செய்கிறேன். என்னையும்.
------------------------
நெடுங்கோடை

காத்திருப்பில் தசாப்தங்கள் உதிர்ந்துவிட்டன
மலர்களைப்போல…
குருதிதோய்ந்த செம்பருத்தி மலர்கள்.

மேப்பிள் மரங்களுள் சிறைப்பட்டிருந்த
கபிலநிறத் துளிர்கள் விடுபட்டன
இது பதினோராவது வசந்தம் நந்தா!
கடந்த குரூரப்பனியிலும்
வீடேக விதியற்றாய்.
மூடப்பட்ட பாதையை நோக்கி
ஒரு சேனையென
இரகசியமாய் நகர்கிறது காடு.

அகாலத்தில் ஒலிக்கும் தொலைபேசிக்கு
மரணத்தின் நாக்கு
பிராங்போட்டில் நேரம் நள்ளிரவு 2:16
அழாதே சந்தியா!
மூளை வெண்குழம்பாய் சுவர் தெறித்த
காட்சிபெறா கண்கள் வாய்த்தமைக்கு மகிழ்.
நினைவின் சாலையில் நிலைக்கட்டும்
கையசைத்துத் தளர்ந்தபடி திரும்பிப்போன
அவன் முதுகும் அம்மழைநாளும்.

குட்டிச்செல்லம் ஜனனி
தன் சின்னக்கைகளில் ஏந்தியிருக்கிறாள்
ஒரு புகைப்படத்தை.
மெழுகுவர்த்திகளும் இதயங்களும்
ஒருசேர உருகும் இந்நினைவிடத்தில்
இருளிலிருந்து கசியும் சிறு விசும்பலுக்காய் காத்திருக்கிறேன்
தனியே அழுவது வெட்கமடி கண்ணே!

சென்னையின் பெருநகரப் புறாக்கூடொன்றில்
கோடையைக் குடித்தபடி
உண்டியல்காரனுக்காய் காத்திருக்கிறான் நிலவன்.
'தொலைதூரக் கனவு'கள் மினுக்கிடும் விழிகளோடு
நாளையில்நடந்து கால்சலிக்கிறான் முகிலன்.

எலும்புகள் குருதியால் கெட்டித்த வீதிகளில்
'புற்கிழங்கு விழிக்கும்
பூக்கள் காற்றொடு இழையும்'
என்ற தேய்ந்த சொற்களால்தான்
முடிக்கவேண்டியிருக்கிறது
இந்தக் கவிதையையும்.


(மேப்பிள்:கனடாவின் தேசியக்கொடியிலுள்ள இலை அடையாளம், உண்டியல்காரன்:வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தை வீட்டில் கொணர்ந்து தருபவன்)

--------------------------------------
கண்ணாடிகளின் கதை

ஒவ்வொரு விடியலிலும்
வீட்டு வாசல்களில்
கண்ணாடிகள் விநியோகிக்கப்படுகின்றன
வாராந்தரக் கண்ணாடிகளிற் சில
கடைகளில் மார்புக்குவடு காட்டித் தொங்குகின்றன.

கண்ணாடிகள் காட்சிப்படுத்துகின்றன:
படுக்கையறைகளில் கலவுபவர்களை
விடுதிகளில் விபச்சாரிகளாகும் நடிகைகளை
உங்கள் கற்பெனும் கற்பிதத்தின்மேல்
காறியுமிழ்ந்தோடும் கள்ளக்காதலர்களை
நடிகரின் நாய்க்கு வாயு பறிந்ததை
மேலும் பிரமுகர்களின் வைப்பாட்டிகளை…
அந்தரங்க அரிப்பிற்குச்சுகச்சொறியல்!

மூளைக்குப் பதிலியாக
வரவேற்பறைகளில் வீற்றிருக்கிறது
சதுர வடிவிலொரு கண்ணாடி.
நடனித்தல் கழிந்தநேரம்
முகக்களிம்பிலிருந்து ஆணுறைவரை
பரிந்துரைத்தலதன் பணி.

பல்லாயிரம் கண்ணாடிகள் வழி
பல இலட்சம் கண்கள் குவிகின்றன
சின்னஞ்சிறுமியின் காலிடுக்கில் நிற்காத உதிரப்பெருக்கில்.
உங்கள் யன்னல்களிலெல்லாம்
கண்களும் புகைப்படக் கருவிகளும்.
பதறிப்போய் கண்ணாடியைக் கழற்றுகிறீர்கள்.

யாதொன்றும் செய்வதற்கில்லை நண்பரே!
நீங்கள் குருடாகிவிட்டிருக்கிறீர்கள்.


-----------------------------------------------

பறத்தல் அதன் சுதந்திரம்

உன் கோபத்தின் சூறை அணைத்துவிட்டது
என் வீட்டின் எல்லா விளக்குகளையும்.
காதலின் ஒப்பனைகள் கலைந்த
இவ்வரங்க இருள் அழகாயிருக்கிறது
அபத்த நாடகங்களைக் காட்டிலும்.

துதிபாடிகளின் தோழி…
ஒளிவட்டங்களின் காதலி…
சூதாடிகளின் கைப்பகடை…
வசைகளின் நிறுத்தற்குறியாய்
ஒரேயொரு கண்ணீர்த்துளி.

இப்போது கோபமில்லை.
நதிகளும் விழுந்துவிடும் பள்ளங்களை
கண்ணீர் எப்படியோ தாண்டிவிடுகிறது.

தன் திசை மீளும்
வலசைப் பறவையின் சிறகுகளுள்
சேகரமாயிருக்கின்றன மரமுதிர்த்த ஈரத்துளிகளும்
வசந்தத்தின் போதொலித்த பாடல்களும்.

புவியீர்ப்பை மீறி
பறத்தலே நியதி.

(தலைப்பிற்கு நன்றி:க்ருஷாங்கினி

நன்றி: உயிர்மை

5.15.2008

குற்றவாளி


அனலில் ஊறிய அறைகளுள்
இயலாமையுடன்
கைவிரித்துச் சுழல்கின்றன மின்விசிறிகள்.
வேம்பும் கருகிய வெளியை
உற்றுநோக்கி இருப்பவளின் கண்ணில்
எம்மரத்தின் இலையும் தளதளப்பும்
இக்கணம் அசைகிறதோ…!

அன்பின் நீரூற்றுகள்
மதவியாபாரிகளின் உதடுகளிலிருந்து
மட்டுமே பீறிடுகின்றன.

நவத்துவாரங்களிலும் தூசி இறைத்தபடி
வாகனங்கள் வெறிகொண்டலையும் வீதியோரம்
விழுந்து சுருண்டிருக்கும்
கிழவனைப் புறக்கணித்து
எலக்ரோனிக் அடிமைகளை
ஏற்றிச்செல்கின்றன
சொகுசுப் பேருந்துகள்.
தண்ணீர் தேடியலைகின்றன
கால்களுக்கிடையில் வால்நுழைத்து
எச்சில் இழையொழுகும் நாய்கள்.

எழுதியிருக்க வேண்டிய
அனைத்து வார்த்தைகளையும்
இரக்கமற்றுத் திருடிவிட்டது கோடை.

இத்தனை கொலை செய்தும்
இன்னமும்
வெளியிற்தான் திரிந்துகொண்டிருக்கிறது
வெயில்!

3.27.2008

கோடை மழை


இரத்தம் உறிஞ்சி
பளபளக்கும் உடலோடு
கழன்றுவிழுகின்றன உறவட்டைகள்.

எழுதுமேசையில்
திகிலுறுத்தும் கட்டணக்காகிதங்கள்
முதல்தேதியை முரசறைவித்தபடி...

மண்டைக்குள்
சிலந்திவலை படருமிக்காலம்
வாக்குறுதி மீறுகிறேன்
வாய்திறக்கவியலாத புத்தகங்களே!
மன்னித்துவிடுங்கள்.

கோடை தீங்கங்குகளோடு வருகிறது
அறைச்சுவர்கள் அக்கினித்தகடுகள்
நீ உவமித்தபடி
ஒரு அகதியின் கழிவிரக்கத்தை நினைவுறுத்திச்
சதா கரைந்துருகும் மின்விசிறி.

வீதியில் இறங்குகிறேன்
மாந்தளிர் விரலசைத்து
சின்னக்குமிழ் வாயால்
எச்சில் நூலிழைய
செல்லமே! நீ சிரித்துவிட்டுப்போகிறாய்.

மழையற்றும் குளிர்கிறது மண்.

3.08.2008

என் விமர்சனம்



உனது புத்தகத்தைத் தந்துபோகிறாய்
சொல்விழிகளால் அது
அண்ணாந்து பார்க்கிறது

விமர்சனங்களுக்கும் இதயங்களுக்கும்
இடையிலோர் பெருங்கடல்
இருள் திரைகளில் தீட்டப்படும்
பைசாச ஓவியங்கள்

மதுச்சாலைகளில்
கண்ணாடிக்குவளைகளை உயர்த்தி உரசிய ஒலி
சில நாட்களில் மீள்ரீங்கரிக்கிறது
சஞ்சிகையொன்றில்.

அறிவாய் நண்ப!
கடன்பட்டவர்களும்
சில வார்த்தைகளுக்குக் கடமைப்பட்டவர்களே!

விருந்தாட போன வீட்டில்
தட்டுக்கருகில்
தொட்டுக்கொள்ள கவிதைகளை வைப்பரெனில்
கைகழுவி எழுந்துகொள்ளலே தர்மம்.

பட்டியலிடுவோரும்
தரவரிசையிட்டு ஓங்கித் தலையில்
அரக்குமுத்திரை அடிப்போரும்
பல்கிப்பெருகிய இந்நாளில்
நான் சொல்லக்கூடியது ஒன்றுதான்....

மரணதண்டனையை எழுதிக்கொண்டிருக்கும் விரல்களைவிட

பொய்க்கணக்கு எழுதி
தற்கொலைக்குத் தூண்டுகிறவனைவிட
ஒரு மதுக்குப்பி வாங்க
வற்றியுலர்ந்த மனைவியின் மூக்குத்தியை
அடகுவைத்துக் கையெழுத்திடுகிறவனைவிட
திருப்தியோடிரு!
நாம் கவிதை எழுதுகிறோம்
அன்றேல் அவ்வாறு நம்புகிறோம்.

2.10.2008

நதியின் ஆழத்தில்… -2



இடையமர்ந்த குடத்தினின்று
புதுப்பெண்ணின் வெட்கமென
தெருவெல்லாம் தளும்பும்.
சேலைநுனிவிரல்
செல்லும் வழியெழுத நீர்க்கோலமாகும்.
பொசிந்து வேரிறங்கி
கரைமரத்தின் பசுந்துளிருள் புகுந்தோடி
வெயில்மினுக்கில் பகட்டும்..
பறித்துவைத்த பள்ளங்களில்
காலிடறி விழுந்து வெயில் நக்க
கானலெனும் பழிசுமந்து
வீதிகளில் விளையாடித் திரியும்.
ஊர்ந்துசெல்லும் ஊர்களின்மேல்
சொட்டுமதன் பசுங்கருணை..
எவரெவரோ இறக்கிவைத்த
அழுக்கைச் சுமந்துகொண்டு
துவைப்பார் எவருமின்றித் தொலைவேகும்..
அதன் ஈரமனசுள்ளும் இருக்குமோ
எந்நீரோ எந்நாளோ
நடந்து மணல் சலித்த
ஆழம் தாண்டி
கரையேறித் திசைமாறவியலாத
கவலை?

11.10.2007

போலச்செய்தல்


ஒருபொழுதில் உக்கிரக்காளி
புயல்வழி மரமென்றாடுகிறாய்
தீ பொதிந்து நீயனுப்பும் வார்த்தைகளால்
தீய்ந்து கருகு மென் இதயம்
வெப்பம் காற்றை இடையறாது
வன்கலவும் இவ்வூரின்
ஆளரவமற்ற பின்னிராச் சாலைகளில்
நினைவு பிடரியுந்தி விரட்ட
என்னைக் கரைத்தலைவேன்.
சிகரெட்டின் நுனி தசை தீண்டுகையில்
உன் உதடு கவ்வும் உச்சமடி தோழி!
தேசாந்தரியாகி
உண்டக்கட்டிக்கு கோயில் வாசலிலே
காத்திருந்ததற்கு கைமேல் பலன்!

எனதிந்தக் காயங்களின் மீது
கண்ணீரை ஊற்றுகிறாய்
ஒரு கணத்தில் உயிர்பெற்றிணைந்தன
தீய்ந்த திசுக்கள்
காதல் மதுவருந்திக் கண்கிறங்கி
‘இந்தக் கணமும் இறப்பேன்’என்றேன்.
ஒரு குழந்தையென
மடிசுருளும் என்மீதில்
மென்முலை பொதியப் பொதிய
இறுக்குகிறாய்
இற்று மறைகிறது புறவுலகு

தாயே!நின் வயிற்றில்
ஒரு துளியாகிச்
சூல்கொள்ளும் வரமன்றி
இனி யாதும் வேண்டேன்!

என்னவிதுவென புருவம் நெரிக்கவேண்டாம். ஒருவர்போல் எழுதிப் பார்த்தேன். வேறொன்றுமில்லை.

11.09.2007

தீபாவளி(லி)


தொடவியலாத உயரங்களை நோக்கி
எய்யமுடிந்த மகிழ்ச்சி
வானத்திலும் விழிகளிலும்
ஒளித்துளிகளாகச் சிதறுகின்றன.
நெருப்பும் கந்தகமும்
கூடும் உச்ச கணத்தில்
உள்ளுறங்கிக் கிடந்த மூர்க்கம்
வெடித்து ஒருவழியாய் வடிகிறது.
திடீர் விபரீதங் கண்டு
பதறிக்கிடக்கும் வீதிகளில்
அந்தரித்து அலைக்கழிகின்றன நாய்கள்.
நாளைவரை பிழைத்திருக்க
கையேந்துகின்றன செவிகள்.
வெறுங்கையுடன் கிராமம் திரும்பவியலாத
வேலையற்ற பிள்ளைகளின் கண்ணீர்
ஊர்ந்துகொண்டிருக்கின்றது நடைபாதைகளில்.
பண்டிகை நுனியில் தட்டுப்பட்டு
பொருக்குடைந்த காயங்களுடன்
மகிஷாசுரமர்த்தனீ!
இந்த நாள் உறங்கும்வரை
விழித்திருக்கிறோமடி!