5.10.2010

சாந்தாமணியும் இன்னபிற நாவல் கதைகளும்…

‘விதி வலியது’ன்னு சொல்றதுல எதோ இருக்குன்னுதா தோணுது. இல்லேன்னா ‘சொற்கப்பலும் தக்கையும் சேர்ந்து நடத்துற கூட்டத்துல வந்து கருத்துரை சொல்லுங்க’ன்னு அஜயன் பாலா என்னைக் கூப்பிட்டிருக்கமாட்டார். நானும் பொட்டியத் தூக்கிட்டு சேலத்துக்கு பஸ்ஸேறிப் போயிருக்கமாட்டேன். அதெல்லாஞ் சிக்கல் இல்லே. வா.மு.கோமுவோட ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’பத்தி நான் கருத்துரை சொல்றேனேன்னு என்னய சொல்லவைச்ச பல்லி எதுன்னு தெரியலை. ‘விதிங்கிறாங்க… பல்லிங்கிறாங்க… சரியான பிற்போக்குவாதியா இருப்பாங்க’நல்லாப் படிச்ச செலபேர் கதைய அவுத்து விடுவீங்கன்னு எனக்குந் தெரியுது. உப்பு,புளி,காரசாரத்துக்காக இதெல்லாம் எழுதிக்கிறதுதான தவிர்த்து வேற புனித நோக்கம் ஒண்ணுங் கெடயாது.

ஆங்… அந்தப் புத்தகம் கைல இருக்குங்றதனால அதைப் பத்திக் கருத்துச் சொல்றதா ஒப்புக்கிட்டனோ என்னமோ…. அந்தப் புத்தகத்த மொதல்லயும் ஒருவாட்டி புரட்டிப் பாத்திருக்கேன். எப்பிடி எப்பிடிப் படுத்துக்கலாம்னு செல விசயம் கண்ணுல படத்தான் செஞ்சுது. ஆனாலும், புத்தகம் முழுசுமே வில்லங்கம் விவகாரம்னு தெரிஞ்சிருந்தா வேணாஞ் சாமீன்னு ஒதுங்கியிருப்பேன்.

அண்மைல (அண்மைங்கிறது இலக்கிய காலத்துல எத்தனை வருஷங்கிறது நமக்கெல்லாம் தெரியும்) வெளியாகியிருக்கிற ஆறு நாவல்களப் பத்தின கூட்டம் அது. தாண்டவராயன் கதை (பா.வெங்கடேசன்), நிலாவை வரைபவன் (கரிகாலன்), துருக்கித் தொப்பி (கீரனூர் ஜாகிர் ராஜா), சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும் (வா.மு.கோமு), நெடுஞ்சாலை (கண்மணி குணசேகரன்), வெட்டுப்புலி (தமிழ்மகன்) இந்த ஆறைப் பத்தியுந்தான் விமர்சனக்கூட்டம். இது மே மாசம் 8ஆந் திகதி நடந்தது. ஆண்டு ஒங்களுக்கெல்லாந் தெரியும். நடக்கிற நடப்பைப் பாத்தா 2010இல புத்தகம் வெளிவந்தா 2020ல தாங் கூட்டம் போடறாங்கன்னு நீங்க சொல்வீங்க. சேலத்துலயும் நல்ல வெயில் காயுது. சிவகாமி அம்மையப்பர்னு ஒரு பள்ளிக்கூட மரநிழல்லதான் கூட்டம் நடந்துச்சு. இந்த வெயில்ல எப்டித் தாக்குப் புடிக்கப்போறம்னு ஆரம்பத்துல தோணிட்டே இருந்துச்சு. அப்றம் விமர்சனக்கூட்டத்துல பறந்த சூட்டுல வெயில் சூடு அடங்கிப்போச்சு. ஆனா ஒண்ணு சொல்லிக்கணும். வழக்கமான இலக்கியக் கூட்டம் மாதிரி இல்லை இது. மேடைல பத்துப் பேர் ஏறி ஒக்காந்துக்கிட்டு சபைல இருக்கிறவங்க விடுற கொட்டாவியைக் கண்டுக்காம இஷ்டத்துக்குப் பேசிட்டே போற வில்லங்கம்லாம் இதுல இருக்கலை. எல்லாரும் பேசினாங்க. எல்லாரும் கேட்டுக்கிட்டாங்க, செலபேரு கேட்காம சத்தம் போட்டாங்க. அதிகமா முக்கல் முனகல் வந்தது எதுக்குன்னு கேட்டீங்களானா ‘சாந்தாமணி’க்குத்தான்.

‘தாண்டவராயன் கதை’படிக்கப் படிக்க மறந்து பின்னால போயிட்டே இருந்துச்சுன்னு ஸ்ரீநேசன் சொன்னதுபோல ஒரு மறதி கூட்டம் முடிஞ்சதும் எனக்கும் வந்திருக்கு. ஆனாலும், ஞாபகத்துல என்னெல்லாம் இருக்கோ அதெல்லாம் எழுதிப்புடலாம்னு நெனைக்கிறேன். இல்லைன்னா வரலாற்றைப் பதிவு பண்ணலேன்னு யாராச்சும் சொல்லிடுவாங்க பாருங்க. இதே வரியை நீங்க வேற ஒருத்தரோட பதிவுலயும் சமீப காலங்கள்ல படிச்சிருப்பீங்க. ஜமாலனோட வலைப்பூவிலன்னு நெனைக்கிறேன்.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தலைமைலதான் கூட்டம் நடந்துச்சு. அஜயன் பாலா கூட்டம் தெசைமாறிப் போயிடாம ‘வந்த வேலையை ஒழுங்காப் பாக்கணும்’ங்கிற தோரணையோட கூட்டத்தை நடத்தினார். தக்கை பாபு நன்றியுரை சொன்னார். வரவேற்புரை சொன்னது ஈசன் இளங்கோன்னு நெனைக்கிறேன். கடேசிவரைக்கும் ரொம்ப ஒழுங்கும் அமைதியும் காத்த ஒருத்தரைச் சொல்லணும்னா கூட்டத்துக்குத் தலைமை தாங்கின சுப்ரபாரதிமணியனத்தான் சொல்லியாவணும். அஜயன் பாலா, தக்கை பாபு, விஷ்ணுபுரம் சரவணன், கண்டராதித்தன், அய்யப்ப மாதவன், சந்திரா, சக்தி அருளானந்தம், கீதாஞ்சலி பிரியதர்ஷினி, தமிழ்நதி(நாந்தான்), தமிழ்மதி, (அவங்க கூட இன்னொருத்தங்க பேர் தெரியலை) ஜோஸ் அன்றாயின், (தமிழ்க்காரர்தாங்க) இசை, இளங்கோ கிருஷ்ணன், விஷ்ணுபுரம் சரவணன், (பக்கத்துல பக்கத்துல எப்பவும் வந்துடுவாங்க)ஸ்ரீநேசன், சாஹிப்கிரன், அசதா, வா.மு.கோமு, சிபிச்செல்வன், க.மோகனரங்கன், பால்நிலவன், தூரன் குணா, மு.ஹரிகிருஷ்ணன், கண்ணன் இப்டி கணிசமான கவுஞ்ஞர்களும் எழுத்தாளர்களும் பார்வையாளர்களும் வந்திருந்தாங்க.

நிலாவை வரைபவனை வரைஞ்ச கரிகாலன் எதோ சோலி இருக்குன்னுட்டு வரலை. காலைல நடந்த முதல் அமர்வில கரிகாலனோட புத்தகத்தைப் பத்தி அசதா பேசினார். நான் அப்போ என் கருத்துரைய அச்சுல எடுத்துட்டு வராத கடுப்புல இருந்தேன். அதனால அத சரியா கவனிக்க முடியலை. ஆனா அந்தக் கட்டுரையை வளர்மதி முகப்புத்தகத்துல எடுத்துப் போட்டிருக்காரு. ‘நான் அண்மைல படிச்ச கட்டுரைகள்ள இதுவும் முக்கியமானது’னு வளர்மதி அதுல சொல்லியிருக்கார். அதப் படிக்கலாம்னுட்டு தேடிப் பாத்தா கெடைக்கலை. காரணம் என்னோட முகப்புத்தகத்துல வளர்மதி எப்டியோ விடுபட்டுப் போயிருக்கிறார். அசதாவோட பக்கத்துலயும் கெடைக்கல. அடிக்கடி பேசாட்டி இப்டித்தான். சேத்துக்கச் சொல்லி ரிக்வெஸ்ட் அனுப்பியிருக்கேன். அப்புறம் கீரனூர் ராஜாவோட ‘துருக்கித் தொப்பி’பற்றி இளங்கோ கிருஷ்ணன் ஒரு அருமையான கட்டுரை வாசிச்சார். ரொம்பவே மெனக்கெட்டு எழுதின கட்டுரையா அது இருந்துச்சு. ஒரு ஆய்வுக் கட்டுரையோட நேர்த்தி அதுல இருந்ததா அஜயன் பாலா சிலாகிச்சுச் சொன்னார். கீரனூர் ஜாகிர் ராஜாவோட மற்ற நாவல்களையும் மத்த முஸ்லிம் எழுத்தாளர்களால தமிழ்ல எழுதப்பட்டிருக்கிற நாவல்களையும் பத்தி கொஞ்சநேரம் கூட்டத்துல பேச்சு ஓடிட்டிருந்துச்சு.

அப்புறம் சாஹிப்கிரன் வா.மு.கோமுவோட ‘சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும்’பற்றி கட்டுரை வாசிச்சார். ஆ… அதுக்கு முன்னாடி வா.மு.கோமுவை மணல்வீடு ஹரிகிருஷ்ணன் அறிமுகம் செய்ஞ்சுவைச்சுப் பேசினார். ‘அவர் என்னோட வாத்யார். அவர் எழுத்துக்கள நான் காதலிக்கிறேன்’அப்டீன்னு ஆரம்பிச்சு அவருக்கேயுரிய மண்வாசனை நடைல சுவாரசியமாப் பேசினார். சரிதான் அப்டீன்னு நெனைச்சுக்கிட்டேன். ‘இதுவொரு இன்பமூட்டக்கூடிய எழுத்து… ஆனாலும், ஏனைய விடயங்களிலும் வா.மு.கோமு கவனஞ் செலுத்தியிருக்க வேணும்’ங்கிற ரீதியில சாஹிப்கிரனோட பேச்சு அமைஞ்சிருந்துச்சு. எதோ சொல்ல வந்து சொல்ல வந்து சொல்லாம தொண்டைக்குள்ள இறுக்கிப் பிடிச்சுக்கிட்ட மாதிரி ஒரு விமர்சனக் கட்டுரை அது. அப்றந்தான் ஆரம்பிச்சுது வெனை. ‘யாராச்சும் கருத்துச் சொல்லுங்கப்பா’ன்னார் அஜயன். நான் கம்யூட்டர்ல தட்னத பேப்பர்ல எடுத்துட்டுப் போகலை. சேலத்துல அப்போ மின்சாரம் அறுந்திருந்த நேரம். சரிதான்னுட்டு ஞாபகத்துல இருந்தவரைக்கும் எங் கருத்தைச் சொன்னேன். நான் என்ன பேசுனேன்கிறதோட சாரம் இதுதாங்க:

“நான் இந்தப் புத்தகத்தப் பத்தி கருத்துரை சொல்றதுக்கு முன்னாடி ஒரு விசயம் சொல்லியாகணும். அதாவது நான் ஒரு அடிப்படைவாதி கெடையாது. அப்றம் இந்தக் கற்பு, கலாச்சாரம் ஒழுக்க மதிப்பீடுகள்ளயும் கறாரான ஆள் இல்லை. நான் தமிழ்ல ஒரளவுக்கு படிச்சுக்கிட்டிருக்கிற ஆள்தான். அதனால இதையொரு நாவல்னு என்னால ஏத்துக்க முடியலை. இந்தப் புத்தகத்த நான் வாசிக்க ஆரம்பிச்சு ஒரு நூறு பக்கத்துக்கு மேல போனப்புறமும் என்னால கதையோட ஒன்ற முடியலை. பள்ளிக்கூடத்துல படிக்கிற பழனிச்சாமி சாந்தாமணியை விரட்டி விரட்டிக் காதலிக்கிறான். அவ அவனைப் பாக்காம மூஞ்சியத் திருப்பிக்கிறா. பழனிச்சாமிய ஜான்சி காதலிக்கிறா. அப்றம் பழனிச்சாமி ஜான்சியோட சில்மிஷம் பண்றான். சாந்தாமணி கதை முடிஞ்சப்புறம் பழனிச்சாமி அவளோடயும் இவளோடயும் எவளோடயும் படுத்துக்கிறான். அவன் எப்டி எப்டியெல்லாம் யார் யாரோடல்லாம் படுத்துக்கிறாங்கிறதப் பத்தின பக்கம் பக்கமான விஸ்தாரமான விவரிப்புதா இந்த நாவல். என்னடாது இப்டி வில்லங்கமாயிருக்கேன்னு முன்னுரையப் போய்ப் படிச்சுப் பாத்தா ‘இந்தக் கதைல வர்ற கீதாவும் பழனிச்சாமியும் அவளும் இவளும் இப்பயும் இருக்கத்தான் இருக்காங்க. இதெல்லாம் அசாத்தியம்னு நீங்க நெனைக்கப்படாது’ன்னு எழுதியிருக்காரு. இதெல்லாம் தனக்கு பாதகமான எதிர்வினை வரும்னு தெரிஞ்சுக்கிட்டு அதத் தடுக்க கவசமா முற்கூட்டியே எழுதிவைக்கிறது. பக்கம் பக்கமா பாலியலை எழுத்தா நிரப்பி வைச்சிருக்கிறதத் தவிர்த்து வா.மு.கோமுவோட இந்தப் புத்தகத்துல ஒண்ணுங் கெடயாது. காமத்தை எழுதக்கூடாதுன்னு நாஞ் சொல்லவரலை. நானுங்கூட எழுதியிருக்கேன். ஆனா, எழுத்துக்குள்ள காமம் வரலாம். காமம் மட்டுமே எழுத்தாயிருந்தா அதுக்கு வேற பேரு.

சில இணையத்தளங்கள் கலவியை மிருக சர்க்கஸா, மாமிசக்கூடலா மலினமாக்கிட்ட அதே வேலையை இலக்கியமுஞ் செய்றது சரிதானா? காமம் ஒண்ணும் பாவம் கிடையாது. ஆனாலும், காமத்தினால் மட்டுந்தான் இந்த உலகம் இயங்கிட்டிருக்கிறதுமாதிரியான ஒரு சித்திரம் இந்தப் புத்தகத்தைப் படிச்சிட்டிருந்தப்போ கெடைச்சுது. போர்க்களத்துல பிணங்களா விழுந்து கிடக்கிறது மாதிரி இந்தப் புத்தகம் நிறைய உடல்களா அவிழ்ந்து கிடக்குது. உயிர்மை கூட்டத்தில இந்தப் புத்தகத்தை வெளியிட்டுப் பேசின முருகேசபாண்டியன் சொன்னார்.“இதைப் படிக்கிறபோது பெண்கள் எல்லோரும் பாவாடை நாடாவை அவிழ்த்து கையில வைச்சுக்கிட்டு ரெடியா இருக்கிறமாதிரி தோணுச்சு”ன்னு. எனக்கும் அதே கருத்துத்தான். இந்த சமூகத்தில இருக்கிற அநேகமான பெண்கள் காமம் என்கிற தீர்க்கமுடியாத கொடிய வியாதியினால பீடிக்கப்பட்டு அங்கேயும் இங்கேயும் அந்தரிச்சு அலமலந்து ஓடித்திரிவதான ஒரு காட்சி என் மனக்கண்ணில வந்துபோச்சு. பெண்களை இந்த நாவல்ல ரொம்ப மலினப்படுத்தியிருக்கிறதா எனக்குத் தோணுது.


இந்தப் புத்தகத்துல வர்ற பழனிச்சாமி என்கிற ஆளுக்காக பெண்கள் வரிசையா நின்னுக்கிட்டு ஏங்கிறதைப் பார்த்தா மகாக்கொடும்மையா இருக்கு. அவனுக்கு உடம்பைக் குடுக்கிறதைத் தவிர்த்து அந்தப் பெண்களுக்கு வாழ்க்கைல இலக்குங்கிறது ஒண்ணுமே கிடையாதாங்கிற எரிச்சல் வருது. அத்தோட ஒரு ஆணால தன்னோட சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி எத்தனை பொண்ணுங்களை வேணும்னாலும் படுக்கைல சாய்ச்சுக்க முடியும்கிறது விரசமா இருக்கு. ‘இதெல்லாம் சாத்தியம்தானுங்கோ’ன்னு முன்னுரையிலயே கோடி காட்டியிருக்கிற வாமு.கோமுகிட்ட ஒரேயொரு கேள்வி கேட்கணும்னு தோணுது. எங்கயாச்சும் தான் காதலிக்கிற பொண்ணுமுன்னாடி, வயசுக்கு வந்த அவ தங்கையை எந்த ஒரு ஆணாவது கையில தூக்கிக்குவானா? அப்படியே தூக்கிக்கிட்டாலும் காதலி இருக்கும்போதே அவ தங்கைக்கிட்ட சில்மிஷம் பண்ணுவானா? அப்பிடிப் பண்ணின ஒரு ஆளை அந்தப் பொண்ணு சாந்தாமணி காதலிப்பாளா? (இப்டில்லாம் நடக்கும்ங்கிறாரு சிபிச்செல்வன்)

அப்புறம் தமிழில புதுசாப் படிக்கணும்னு வர்ற ஒருத்தன் அல்லது ஒருத்தி அவங்க காலக்கொடுமையினால இந்தப் புத்தகத்தைப் படிக்கிறாங்கன்னு வைச்சுக்கோங்க… இலக்கியம் பற்றி அவங்களுக்கு என்ன மரியாதை வரும்கிறீங்க…! இலக்கியத்துக்கு சமூகத்துல இப்பவும் ஒரு மரியாதை மயிருங் கெடயாதுன்னு செலபேர் சொல்லலாம். அதை உயிருன்னு நெனைச்சுட்டு வாழுற செலபேர் எல்லாக் காலத்துலயும் இருந்துக்கிட்டுத்தான இருக்காங்க.

பெண்ணெழுத்துப் பற்றி பரவலான சர்ச்சைகள் ஓடிட்டிருக்கிற இந்தக் காலகட்டத்துல ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’ஐ ஒரு பெண் எழுதியிருந்தா என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன். ரொம்ப காமெடியான (குரூரமானதும்) காட்சிகள் கண்முன்னாடி வந்துபோச்சு. தப்புப் பண்ணினவங்களை ஊருக்கு வெளியில ஒதுக்கிவைக்கிறதுமாதிரி சுடுகாட்டுக்குப் பக்கத்துல கொண்டுபோய்த் தள்ளிவைச்சிருப்பாங்கங்கிறதுல சந்தேகமேயில்லை. ‘முலைகள்’னு தன்னோட கவிதைத் தொகுப்புக்குத் தலைப்பு வைச்சதுக்காக கவிஞர் குட்டி ரேவதியை இருட்டடிப்பு செய்த சமூகந்தான இது?

வாமு.கோமு எழுத்தைப் பத்தி நீங்க கருத்துரைக்க வேண்டியதில்லை… தவிர்த்துடுங்க… எதுக்கு தேவையில்லாம பிரச்சனையை வளர்த்துக்கிறீங்கன்னு என்னோட நண்பர்கள்ல ரெண்டு மூணு பேர் சொன்னாங்க. “விமர்சனங்கிறதை ஏத்துக்கிற பக்குவம் அவருக்கு இருக்கும்னுதான் நான் நினைக்கிறேன். அதை தனிப்பட்ட வன்மமா அவர் வளர்த்துக்கமாட்டார்”னு நான் பதில்சொன்னேன். தவிர, இது அவரோட புத்தகம் தொடர்பானதுதான… அவரைப் பற்றிக் கிடையாதுல்ல. ஆட்களைப் பற்றித்தான் அதாவது அவங்க தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றித்தான் விமர்சனம் பண்ணக்கூடாது. அது தப்பு. அவர் படைப்பைப் பற்றி விமர்சனம் பண்ணலாம்ல. நான் இன்னும் கள்ளி, தவளைகள் குதிக்கும் வயிறு இதெல்லாம் படிக்கலை. கள்ளி நல்லா வந்திருக்கிறதா சொல்றாங்க. படிக்கணும்.”

இவ்ளோதான் நான் பேசுனது. ஒடன சிபிச்செல்வன்ட்ட இருந்து ஒரு ஆட்சேபக்குரல் கௌம்புது.

“இந்த சமூகத்துல இப்டியெல்லாமா நடக்கும்ங்கிற மாதிரி தமிழ்நதி பேசுனாங்க. ஏராளமா நடக்குது. தமிழ்நதிக்குத்தான் அதெல்லாந் தெரியலை”

நான் எவ்ளோ விசயம் சொல்லியிருக்கேன். இவர் இத எப்டி மாத்துறார் பாருங்கன்னு நான் உள்ளுக்குள்ள நெனைச்சுக்கிட்டேன்.

சந்திரா ஒடன சத்தம் போட ஆரம்பிச்சா.

“இதெல்லாம் ஆணாதிக்க எழுத்து… இதயெல்லாஞ் சகிச்சுக்க முடியாது”அப்டிங்கறா,

“ஒரு ஆளத் தேடித் தேடிப் போய்ப் படுத்துக்கிறதத் தவிர்த்து பொண்களுக்கு வேற வேலையே கெடயாதுங்கிறீங்களா…?”;-இது நான்.

“பெண்களை வெறும் தசைப் பிண்டமாப் பாக்கிற வேலை இதுன்னு உங்களுக்குத் தோணலையா”-இது சந்திரா.

சிபிச்செல்வன் ‘இல்லல்ல… அவர் அப்டியெல்லாம் நெனைச்சு எழுதியிருக்கமாட்டார்’அப்டீன்னு தொடர்ந்து பேசிட்டே இருந்தார். ‘அப்புறம் இதெல்லாஞ் சமூகத்துல உள்ளதுதா’ங்கிற தொனியை கடேசிவரைக்கும் விடலை. அதுவா பிரச்னை? போதாக்குறைக்கு வா.மு.கோமு பக்கத்துல இருந்த ஒரு நண்பர் ஏதோ சத்தம் போட ஆரம்பிச்சார். அவர் பேரு தெரிலை.

“இதெல்லாம் மூடி மூடி வைக்கணும்கிறீங்களே… இப்பல்லாம் பள்ளிக்கூடங்கள்லயே சொல்லிக் குடுக்கிறாங்க தெரியுமா?”ங்கிறாரு சிபிச்செல்வன்.

“எப்டி எப்டில்லாம் படுத்துக்கலாம்னா? இந்தப் புத்தகத்த ஒங்க கொழந்தைக்கு நீங்க வாசிக்கக் குடுப்பீங்களா?”ன்னு கேக்கிறா சந்திரா.

“நாங்க முலை, யோனின்னு ஒண்ணு ரெண்டு வார்த்தைகள கவிதைல வைச்சு எழுதினா கலாச்சாரத்தைக் கெடுக்கிறாங்க லபோதிபோன்னு வயித்துல அடிச்சுக்கிட்டு சத்தம் போடுறீங்களே… இந்தப் புத்தகம் கெட்டவார்த்தைக் களஞ்சியம் மாதிரி இருக்கே… இதுக்கு ஒண்ணுஞ் சொல்லமாட்டீங்களே”-நான்.

“இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிற யாரும் பெண்ணெழுத்துக்கு எதிரானவங்க கெடயாது”-சிபிச்செல்வன்.

“இதுல நாவலுக்குரிய எந்தக் கூறு இருக்கு?”

“இது இப்டித்தான் இருக்கணும்னு எதாவது உண்டா? எல்லாத்தையும் கலைச்சுப் போடறதுதான இலக்கியம்”

“அப்ப நாவல் விமர்சனக் கூட்டத்துல இந்தப் புத்தகம் எப்டி வந்துச்சு?”

சந்திரா நல்லா சண்டை போட்டா.அப்புறம் சிபிச்செல்வனும் ஜோஸ்ம் ஒருத்தரையொருத்தர் பாத்து எதோ பேசிக்கிட்டாங்க. அவங்க ரெண்டு பேரும் ‘சட்டகம், பின்னவீனத்துவம், கட்டுடைத்தல்’இந்த மாதிரி வார்த்தைகளப் போட்டு மெரட்டிட்டிருந்தாங்க. அப்பறம் அஜயன் ‘அமைதி… அமைதி…’ன்னு எந்திரிச்சாரு. ‘யாராவது கருத்துச் சொல்லணும்னா முன்னாடி வந்து பேசுங்க… இப்டி உங்களுக்குள்ளயே பேசிட்டிருந்தா எப்டி’ன்னாரு.

இளங்கோ கிருஷ்ணன் எழுந்து வந்தார். வழக்கமான நிதானமான பாவம்.

“போர்னோகிராபிக்கும் போர்னோ இலக்கியத்துக்கும் வித்யாசம் இருக்கு. இது போர்னோவா நின்னுடுச்சு. ஆர்ட் பார்மா மாறலை… இத வைச்சு கைமுஷ்டி அடிச்சுக்கலாம்.”அப்டின்னார் இளங்கோ.

பால்நிலவன் எழுந்து வந்தார்.

“தமிழ்நதி சொன்னதுல ஒரு விசயத்த மட்டும் எடுத்துக்கிட்டுப் பேசப்படாது. பெண் எழுத்து தொடர்பான சர்ச்சைல்லாம் ஓடிட்டிருக்கிற இந்தக் காலத்துல இதையே ஒரு பெண் எழுதியிருந்தா என்னவிதமான எதிர்வினை ஏற்பட்டிருக்கும்னு அவங்க கேட்டாங்க. அப்புறம் இதுல வர்ற பெண்கள் காமப்பண்டங்கள்ங்கிறதுக்கு மேல பேசப்படலையேன்னு கேட்டாங்க. பேச்சு திசைதிரும்பிடப்படாது”ன்னார்.

“சரி… இந்தப் புத்தகத்த எழுதி இப்டியெல்லாம் சர்ச்சையக் கிளப்பிவிட்ட வா.மு.கோமு என்ன சொல்றாருன்னு இப்ப கேட்டுக்கலாம்”னாரு அஜயன்.

“நாவல் எழுதினா நல்லா விக்கும்னு நண்பர்கள் சொன்னாங்க. அதுக்காக எழுதினதுதான் இது. எங் கள்ளி நாவல் தோத்துப்போயிடுச்சு. பெருசா விக்கலை. இதாவது காசு குடுக்கும்னு நெனைச்சு எழுதினேன். வேற பெரிய நோக்கங்கள் எல்லாம் கெடயாது. தஞ்சைப் பிரகாஷோட மீனின் சிறகுகள் புத்தகவத்தைப் பக்கத்துல வைச்சுக்கிட்டுத்தான் இத எழுதினேன். தமிழ்நதியோட கானல் வரிய மூணு நாளைக்கு முன்னால படிச்சேன். கடுப்பாயிடுச்சு. என்னோட கொளத்தங்கரை இதெல்லாங்கூட அச்சுக்குக் குடுத்திருக்கலாமேன்னு அப்போ தோணுச்சு.”ன்னு பதிலுக்கு வாரினாரு.

அட கொக்கமக்கா! நானும் சந்திராவும் கொழுத்துற வெயில்ல மிச்சமிருந்த தொண்டத் தண்ணி காயுறவரைக்கும் சத்தம் போட்டிருக்கோம். இவுரு சாவதானமா எந்திருச்சு வந்து ‘இப்டி எழுதுனா விக்கும்னாங்க… அதனால அப்டி எழுதினேன்’ங்கிறாரே… நம்மள இப்டிக் காலி பண்ணிட்டாரேன்னு நெனைச்சுக்கிட்டேன். ஒலகந் தெரிஞ்ச ஆளு. நம்மள மாதிரியா?

மொத அமர்வு கலகலப்பா இப்டி முடிஞ்சுபோச்சு. சாப்பிடக் கூப்டாங்க. எங்களுக்கெல்லாம் மரக்கறி (வெஜிடபில்னு சொல்வாங்கல்ல…. அது) சாதமும், தக்காளி சாதமும் பரிமாறினாங்க. நல்ல பசி. சாப்டிட்டு வந்து மரநிழல்ல ஒக்காந்துக்கிட்டோம். சாப்டும்போது ஹரிகிருஷ்ணன் பக்கத்துல இருந்தவங்களல்லாம் வாரிக்கிட்டே சாப்ட்டாரு.

ரெண்டாவது அமர்வைக் கலகலப்பாக்கினவங்கன்னு கண்டராதித்தனையும் கண்மணி குலசேகரனையுஞ் சொல்லலாம்.

தமிழ்மகனோட ‘வெட்டுப்புலி’புத்தகத்தப் பத்தி நம்ம பைத்தியக்காரன்(சிவராமன்) ஒரு கட்டுரை எழுதி அனுப்பியிருந்தார். அத தக்கை பாபு படிச்சார். கட்டுரை ஆரம்பமே அசத்தலா இருந்துச்சு. என்னய எது அசத்தும்னு ஒங்களுக்கெல்லாம் தெரியும்ல. அவரு சொல்றாரு… ‘அதிகாரங்களால் கழுத்து துண்டாடப்பட்ட புலி நமக்கு முன் இருக்கிறது. நான் இங்கே சொல்வது எந்தப் புலி என்பது உங்களுக்குப் புரியும்’இந்தப் பாணியிலயே கட்டுரை போய்ட்டிருந்துச்சு. அது ஒரு அழகான விமர்சன உத்தின்னு கூட்டத்துல இருந்தவங்க பேசிக்கிட்டாங்க. அதாவது, ஒரு புத்தகத்தை மையமா வைச்சு ஆரம்பிச்சு புத்தகத்துக்குள்ளயும் புத்தகத்துக்கு வெளில புறச்சூழல் பத்தியும் விமர்சனங்கள முன்வைக்கிறது. ரொம்ப சுவாரசியமான கேட்பனுபவமா அந்தக் கட்டுரை இருந்துச்சு. முடிஞ்சா அதோட ஒரு நகலை பைத்தியக்காரன்ட்ட கேட்டு வாங்கிக்கணும்.

அப்புறம் கண்மணி குணசேகரனோட ‘நெடுஞ்சாலை’நாவலைப் பத்தி முத்துவேல் கட்டுரை வாசிச்சார். ‘இயந்திரங்களோட வேலை பாக்கிற ஒரு மனுசனோட இதயம்’பத்தி அவர் பேசுனார்னு நெனைக்கிறேன். ஆழ்ந்து படிச்சு எழுதின நல்ல கட்டுரை. நம்ம ச.முத்துவேல்தான். விமர்சனத்த விடவும் சுவாரசியமா இருந்தது எதுன்னா கண்மணி குணசேகரனோட பேச்சுத்தான். அவர் பேசி முடியற வரைக்கும் கூட்டம் குலுங்கிக்கிட்டே இருந்துச்சு. அவ்ளோ சிரிப்பு.

“இதெல்லா எனக்குத் தெரியாதுங்க. யெங்கூர்ல காதலனும் காதலியும் முத்தம் குடுக்கிற காட்சி வந்தா பூவும் பூவும் ஒரசிக்கிற மாதிரி காட்டுவாங்கல்ல… அப்டித்தான். ரொம்ப சூதானமா இருப்பாங்க.”

அப்புறம் அவர்பாட்டுக்கு எலக்கியக் கூட்டங்களை வாருறாரு. மேட்டுக்குடிப் பொய்மைங்கள கலாய்க்கிறாரு. கடேசில சொல்றார் “என் புத்தகத்தை நம்பி வாங்கலாங்க. நான் ஒங்கள ஏமாத்தமாட்டேன்”அப்டிச் சொன்னதும் ஒருமாதிரி நெகிழ்ச்சியா இருந்துச்சு. மேலுக்கு அவர் பேசுனதெல்லாம் நகைச்சுவையா இருந்துச்சு. ஆனா அதுக்குப் பின்னாடி ஒரு சோகம் ஒட்டிக்கிட்டே இருந்தமாதிரி தோணுச்சு. ‘ஏலா மக்கா… எம்மாம் பொய் இந்த வுலகம்’ங்கிற எள்ளலைப் பாக்க முடிஞ்சுச்சு. அவர் புத்தகங்கள அவசியம் படிக்கணும்னு நான் நெனைக்கிறேன்.

இந்தக் கூட்டத்தோட முக்கியமான நிகழ்ச்சிக்கு நாம வந்தாச்சு. அதாவது, பா.வெங்கடேசனோட ‘தாண்டவராயன் கதை’விமர்சனம். பா.வெங்கடேசன் கூட்டத்துக்கு வர்லை. ஸ்ரீநேசன்தான் ‘தாண்டவராயன் கதை’பத்திப் பேசுனாரு. ஒரு மனுசன் ஒரு புத்தகத்துக்குள்ள போயி ஒக்காந்துக்கிறது எப்டின்னு அவர் பேசுறதக் கேட்டிட்டிருந்தப்போ தோணுச்சு. ஒங்களுக்கெல்லாம் புரியிற மாதிரி சொல்லணும்னா ‘புத்தகத்துக்குள்ள வசிக்கிறது’. ஸ்ரீநேசன் மொதல்ல அந்தக் கதையச் சொல்றாரு. ஐயோ சொல்லாதிங்களேன்னு நான் மனசுக்குள்ள கூவிக்கிறேன். ஏன்னா நான் நிக்கிறது 73ஆவது பக்கத்துல. இவரு சொல்லிட்டா மீதியப் படிக்கிறதுல இருக்கிற சுவாரசியம் போயிடும்ல.

ஸ்ரீநேசனுக்குள்ள இருக்கிற கவிஞன்தான் அந்தப் புத்தகத்தைப் படிச்சிருக்கணும். சாபக்காடு, எலினார், ட்ரிம்ஸ்டாம்… இப்டி எதோ சொந்தவூரு சொந்தக்காரங்களப் பத்திப் பேசுறமாதிரி பேசிட்டே இருக்காரு. ‘இதை வெங்கடேசன்தான் எழுதினாரான்னு எனக்கு சந்தேகமா இருக்கு’அப்டீன்னு அவர் சொல்றப்போ கூட்டத்துல இருந்து ஒரு குரல். ‘எங்களுக்கும் அதே சந்தேகந்தான்’. நம்ம ஆளுங்களுக்கு இந்த நகைச்சுவை உணர்ச்சி மட்டும் இல்லேன்னு வைச்சுக்கங்களேன்… காக்கா கொத்திட்டுப் போயிடும்.

“என் மண்டைக்குள்ள ஒரு குரல் கேட்கும்போது எழுத ஆரம்பிப்பேன். அந்தக் குரலோட வேகத்துக்கு ஈடு கொடுத்து எழுத முடியாமத் திணறியிருக்கேன்”அப்டீன்னு வெங்கடேசன் ஸ்ரீநேசன்ட்ட சொன்னாராம்.

“இந்த நாவல் இவர வைச்சுத் தன்னையே எழுதிக்கிட்டதுபோல எனக்குத் தோணுது. அவ்ளோ மிஸ்டிக் இதுல இருக்கு”அப்டீன்னு ஸ்ரீநேசன் சொன்னார். இன்னும் அவர் நெறயச் சொன்னார். அவர் ‘தாண்டவராயன் கதை’யப் படிக்கப் படிக்க மறந்துட்டே போச்சுன்னு சொன்னதுமாதிரி எனக்கும் மறந்துபோச்சு. ஆனா அந்தப் பேச்சைக் கேட்டுட்டு இருந்தப்போ ஒரு புதிர்த்தன்மை எல்லாத்துலயும் சாம்பலா படர்ந்திருந்ததுபோல தோணுச்சு. ஸ்ரீநேசன் அவ்ளோ பரவசத்தோட அந்த நாவலைப் பத்திப் பேசினார்.

செல நாவல்களோட பேர்களைக் குறிப்பிட்டுச் சொல்லி… இதுகளை எல்லாம் விடவும் இந்த நாவல் ரொம்ப நல்லா வந்திருக்கிறதா ஸ்ரீநேசன் சொல்லிட்டு வந்து ஒக்காந்துக்கிட்டாரு. கண்டராதித்தன் கொஞ்சம் வெளில போய்;ட்டு ரொம்ப நிதானமா உள்ள வந்திருந்தார். ஸ்ரீநேசன் குறிப்பிட்ட நாவல்கள்ள ஜெயமோகனோட விஷ்ணுபுரமும் இருந்திச்சில்லயா… அவர் விஷ்ணுபுரத்தப் கப்னு புடிச்சுக்கிட்டாரு.

“இன்னா சொன்ன… விஷ்ணுபுரமா… அப்போ விஷ்ணுபுரம் முக்கியமான நாவல்னு நீ ஏத்துக்கற இல்ல…?”இப்டி ஆரம்பிச்சு விஷ்ணுபுரம் விஷ்ணுபுரம்னு பேசிட்டே இருந்தாரு. அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் இந்த நாவல் தொடர்பா ஏதாவது பிரச்னை முன்னாடி இருந்துச்சா… இல்லைன்னா ஜெயமோகன் மேல கண்டராதித்தனுக்கும் காண்டா… அதான் இப்டிப் போட்டு அழுத்தறாரான்னு எனக்கு ஒண்ணும் புரியலை. நல்லவேளை பின்னவீனத்துவத்தை ஒரக்க மொழிகிற யாரும் அங்க இல்லை. இல்லைன்னா ‘பிரதி என்ன சொல்லுதுன்னா… சொல்லப்படாத சொல்லுள் இருக்கிறது கதை’ன்னு ஆரம்பிச்சு கடுப்பேத்தியிருப்பாங்க.

அப்புறம் தூரன் குணா எந்திருச்சு முன்னாடி வந்தார். அவரும் ‘தாண்டவராயன் கதை’யைப் படிச்சிருந்தார்.

“இந்த நாவல் தமிழ்ல முக்கியமான நாவல் அப்டிங்கிறத நான் ஒத்துக்கிறேன். ஆனா முதன்மையான நாவல்ங்கிறத ஒத்துக்கமுடியாது”அப்டீன்னார். ஆனா அவரும் தாண்டவராயன் கதையோட எழுத்து ஒவ்வொரு கட்டத்துலயும் மாறி மாறிப் போயிட்டிருந்ததை சொல்லத்தான் சொன்னார். அதுவொரு வித்தியாசமான அனுபவம்னார். அவர் நெறயப் படிக்கக்கூடிய ஆள்னு அவர் பேச்சுலேர்ந்து உணர்ந்துக்க முடிஞ்சுது.

அப்புறம் குலசேகரனும் அந்த நாவலோட புதிர்த்தன்மை பத்தி சிலாகிச்சுச் சொன்னார்.

என்ட்டக் கேட்டாங்க.

“எனக்கு வெங்கடேசனோட மழை வீட்டின் தனிமை அல்லது மழை வீடு அப்டீங்கற கதை ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அப்புறம் யாரோ சொன்னாங்க… வெங்கடேசன் கதைக்குள்ள சில ஜோடனைகளைக் கொண்டுவராரு அப்டின்னு. அதனாலயோ என்னமோ அப்புறம் படிக்கலை. இப்போ இந்தக் கூட்டத்துக்காக தாண்டவராயன் கதையப் படிக்க ஆரம்பிச்சேன். மொழியோட இலாவகம் பிரமிக்க வைக்கிறதா இருக்கு. அப்புறம் அதோட புதிர்த்தன்மை நம்மைக் கூடக் கூடக் கூட்டிட்டுப் போய்ட்டே இருக்கு. நாவலை வைக்கவே முடியலை. நிச்சயமா இது தமிழ்ல ஒரு சிறந்த நாவலா பேசப்படும்”அப்டீன்னு சொன்னேன்.

கூட்டத்துல நெறயப்பேர் அதே கருத்தோட இருந்ததாத் தோணவும் அஜயன் பாலா ஒரு விஷயம் சொன்னார். அதாவது, தாண்டவராயன் கதைக்காகத் தனியா ஒரு கூட்டம் நடத்தணும்… அதுல ஒரு ஐந்தாறு கட்டுரைகள் வாசிக்கப்பட்டா அந்தக் கதையோட பன்முகத்தன்மை இன்னும் வெளிப்படுத்தப்படக்கூடிய சாத்தியப்பாடு அமையும் அப்டீன்னு சொன்னார். அத நாங்கல்லாம் ஆமோதிச்சோம். கூட்டத்துல இளங்கோ கிருஷ்ணன்… இன்னுங் கொஞ்சப்பேர சொல்லி அவங்கல்லாம் அதப் பண்ணலாம் அப்டீன்னு முடிவு செய்ஞ்சாங்க.

தடாகம்.காம் பத்தி ஒருத்தர் பேசினார். அவங்க எதிர்பார்த்தத விட ரொம்ப நல்லா அந்த இணையத்தளம் போய்ட்டிருக்கிறதா சொன்னார். அப்புறம் ஒரு அறிவித்தல். இதழ்கள்ள வந்திருக்கிற கவிதைகள்ளாம் சேத்து ஒரு தொகுதியாப் போடப்போறாங்களாம்னுட்டு. ஸ்ரீநேசனத் தொடர்புகொள்ளச் சொன்னாங்க.

இந்தக் கூட்டம் ரொம்ப நெறைவா நடந்துச்சு. இல்லேன்னா இப்டி ராத்தூக்கம் முழிச்சு பஸ்ஸேறி வந்ததுக்கு என்ன புரயோசனம்?

நான் கௌம்பறப்போ அஜயன் சொன்னார்.

“ஒரு நல்ல எழுத்தை நாம கட்டி இழுத்துக்கிட்டு வரணும்ங்கிற அவசியமில்லை. அதுக்குரிய எடத்தை அது தானாவே வந்து சேரும்ங்கிறத நீங்க இப்பவாவது நம்பறீங்களா?”

நம்பித்தானே ஆவணும். வேற வழி?

பிற்குறிப்பு: நான் எதுக்கு இந்த விமர்சனத்த இப்டியொரு லாங்வேஜ்ல (மொழின்னா புரியாதுல்ல) எழுதியிருக்கேன்னு நெனைப்பீங்க… ஒழுங்கா ஆடி ஆடி ‘போர்’அடிக்குதுங்க. கொஞ்சம் தப்பாட்டம் ஆடிப் பாக்கலாமேன்னுட்டுத்தான்.)



50 comments:

தமிழ்நதி said...

இந்தப் பதிவு தெளிவாகத் தெரிகிறதா என்று சொல்லுங்கள் நண்பர்களே... அதை மட்டும் சொல்வதற்கென்று பின்னூட்டம் போடாதீங்கப்பா... பதிவைப் பற்றியும் ஒரு வார்த்தை சொல்லுங்க.

J.P Josephine Baba said...

Dear TamilNathy
I am appreciate your genuity also courageous to express what you think. But I surprised to find some writers write books only for sales. Even the literature also hanging behind money. It is sad no one save the society!

Athisha said...

அங்க நடந்தத பூரா பக்கத்துல உக்காந்து சொல்றாப்ல இருக்கு பதிவு. ஓரளவு புரியுது ஆனா ரொம்ப,,,நீளம்..

Baski.. said...

நல்ல பதிவு. நானும் சாந்தாமணி படிச்சிட்டு ரொம்ப கடுப்பாய்ட்டேன் .. எப்படா முடியும்னு... உயிரோட்டமே இல்லாம சவ சவன்னு.....

Baski.. said...

இப்போ உங்க நந்தகுமாரன் தொகுப்பு தான் படிச்சிட்டு இருக்கேன்... அருமையா போயிடு இருக்கு....

தமிழ்நதி said...

ஆக பதிவு தெளிவாத் தெரியுது.

my thoughts,

Even the literature also hanging behind money.

என்பதனோடு எனக்கு உடன்பாடில்லை தோழி.

இலக்கியகாரர்கள் எல்லோரும் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறார்கள் என்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. தமிழில் நமக்கு முன்னோடிகளாக இருக்கும் பலரும் சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கக்கூடிய சிலரும் எழுத்தைத் தமது வாழ்வின் ஒரே உயிரோட்டமாகக் கருதியிருக்கிறார்கள், கருதுகிறார்கள். வெகுசிலர்தான் அதையொரு வணிகமாக நினைக்கிறார்கள்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அதிஷா,

அங்க நடந்தத பக்கத்துல இருந்து பாத்து எழுதினதுதான். பதிவு நீளமானதே. ஆனா அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது தோற்றாது என்று தோன்றுகிறது.

பாஸ்கி,

உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டு நான் ஒழுங்குசெய்த ஆள் என்று நினைத்துவிடப் போகிறார்கள்:) நந்தகுமாரன் உங்களை நொந்தகுமாரனாக ஆக்காவிட்டால் சரி.

ajayan bala baskaran said...

நன்றி தமிழ் நதி ...இவ்வளவு சீக்கிரம் பதிவு எழுதியதன் மூலம் பெண் ஜெ.மோ என பட்டம் தரலாம். சாந்தாமணிவிவகாரத்தில் வாமு.கோமுவுக்கு ஆதரவாக சிபிச்செல்வன் தவிர இன்னும் இருவரும் அழுத்தமாக பேசினர் அதில் தமிழ் நதி பெயர்தெரியவில்லை என குறிப்பிட்டிருந்த நபர் கவிஞர் ஷாராஜ்
சிறுகதை எழுத்தாளரும்கூட. இன்னொருவர் செந்தில்.

அத்ன்பிறகு அறைக்கு வந்தபைன் வாமு.கோமுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது உங்கள் இருவரையும் அப்போதைக்கு சமாளிக்கவே தான் வியாபாராத்துகாக எழுதுவதாக சொன்னதாக சொன்னார். ...

dondu(#11168674346665545885) said...

//“நாவல் எழுதினா நல்லா விக்கும்னு நண்பர்கள் சொன்னாங்க. அதுக்காக எழுதினதுதான் இது. எங் கள்ளி நாவல் தோத்துப்போயிடுச்சு. பெருசா விக்கலை. இதாவது காசு குடுக்கும்னு நெனைச்சு எழுதினேன். வேற பெரிய நோக்கங்கள் எல்லாம் கெடயாது.//
இதே தொனியில்தான் புஷ்பா தங்கதுரைங்கற பேர்ல சாஃப்ட் போர்னோ எழுதிய ஸ்ரீவேணுகோபாலனும் ஒரு பேட்டியில் சொன்னார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

வாங்க , இதே போல் இதே நிகழ்ச்சியைப் பற்றி மற்றவர்களின் விமர்சனங்கள் இருந்தாலும் நமக்கு அறிய தருக.

நேசமித்ரன் said...

பதிவு தெளிவாகத்தெரிகிறது

தப்பாட்டமும் உங்களுக்கு கைவருகிறது :)ஆனால் எனக்கு உங்கள் வழக்கமான மொழிதான் பிடித்தம் .கொஞ்சம் தமிழ் வாசிக்கலாம் என்று வரும் தளம் உங்களுடையது

நினைப்பதை சொல்ல முடியாத போது அதற்கு எழுதி பேசி ...

சிவராமன் கட்டுரை மிக முக்கியமானது அவர் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்

Unknown said...

"இலக்கிய சாளரம் said...

நன்றி தமிழ் நதி ...இவ்வளவு சீக்கிரம் பதிவு எழுதியதன் மூலம் பெண் ஜெ.மோ என பட்டம் தரலாம். சாந்தாமணிவிவகாரத்தில் வாமு.கோமுவுக்கு ஆதரவாக சிபிச்செல்வன் தவிர இன்னும் இருவரும் அழுத்தமாக பேசினர் அதில் தமிழ் நதி பெயர்தெரியவில்லை என குறிப்பிட்டிருந்த நபர் கவிஞர் ஷாராஜ்
சிறுகதை எழுத்தாளரும்கூட. இன்னொருவர் செந்தில்.

அத்ன்பிறகு அறைக்கு வந்தபைன் வாமு.கோமுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது உங்கள் இருவரையும் அப்போதைக்கு சமாளிக்கவே தான் வியாபாராத்துகாக எழுதுவதாக சொன்னதாக சொன்னார். ...

Monday, May 10, 2010"

உண்மைதான் , இது பற்றி நம்மிடமும் கூறினார்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதிவில் மட்டுமல்ல பின்னூட்டத்திலும் நீங்கள் வேறாய்த்தெரிகிறீர்கள் நதி :)
விற்கும் என்பதற்காக என்று சொல்லிவிட்டபின் வேறு என்ன சொல்றது.. :(

thiagu1973 said...

தமிழ் நதி மேடம் ,
படிச்சேன் உங்க கருத்து தான் என்னோடதும்

பெண்களை செக்சுக்கு அலைபவர்களாக எழுதிவது என்பது , பெரும்பாலும் பெண்களை செக்ஸ் வக்கிரத்தை தூண்டுவதாக பேசுவது எல்லாமே பெண் மேலே வன்முறை செய்வதுதான் .

ஏன் இதை ஒரு பெண் எழுதி இருந்தால் விடுவீங்களா ஒருவேளை அவளது சொந்த அனுபவமாக இருக்கலாம் என போட்டு கிழிச்சு இருப்பீங்க

எழுத்தில் ஊடுருவி இருக்கும் வன்மத்தை மறைக்க சமூகத்தில் அப்படி இருக்கிறார்கள் என சொல்வது சரியல்ல
ஒரு படைப்பாளன் சமூகத்துக்கு சொல்வது எதைன்னு ஒரு பொறுப்பு இருக்கு .
தனது படைப்பின் மூலம் அவர் பலவிதமான செக்ஸ் பொசிசன்களை சொல்லலாமே தவிர ?

வேறென்ன செய்ய முடியும்

காமத்தை சந்தைபடுத்துவது என்பது இது

செ.சரவணக்குமார் said...

எனக்கு கண்மணி குணசேகரனின் 'நெடுஞ்சாலை' பிடித்திருந்தது. தாண்டவராயன் கதை இனிமேல் தான் வாசிக்க வேண்டும். அந்த நிகழ்வை அப்படியே கண்முன் நிறுத்திவிட்டீர்கள். எனினும் பதிவு உங்கள் மொழியிலேயே இருந்திருக்கலாம் என்பது என் கருத்து.

கே.என்.சிவராமன் said...

அன்பின் தமிழ்நதி,

தவிர்க்க இயலாத காரணத்தால் கூட்டத்துக்கு வர முடியவில்லை. அந்த வருத்தத்தை உங்கள் இடுகை போக்கிவிட்டது.

தப்பாட்டமும் ஓர் ஆட்டம்தான். அந்த ஆட்டத்தையும் சிறப்பாகவே ஆடியிருக்கிறீர்கள் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

VijayaSelvan said...

//அத்ன்பிறகு அறைக்கு வந்தபைன் வாமு.கோமுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது உங்கள் இருவரையும் அப்போதைக்கு சமாளிக்கவே தான் வியாபாராத்துகாக எழுதுவதாக சொன்னதாக சொன்னார். ...//


நீங்க எப்பவுமே கூட்டதுல்ல ஒன்னு பேசுவிங்க அப்புறம் ரூம்ல ஒன்னு பேசுவிங்க அப்படிதானே !
நல்ல பொலப்பு இது !

Radhakrishnan said...

“ஒரு நல்ல எழுத்தை நாம கட்டி இழுத்துக்கிட்டு வரணும்ங்கிற அவசியமில்லை. அதுக்குரிய எடத்தை அது தானாவே வந்து சேரும்ங்கிறத நீங்க இப்பவாவது நம்பறீங்களா?” அழுத்தமான வார்த்தைகள்.

''சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்'' - கதையைப் படிக்காவிடினும் உங்கள் விமர்சனத்திலிருந்து இந்த கதை பற்றி ஒரே வாக்கியம்... வெட்கம் கெட்ட மனிதர்கள்.

இளங்கோ கிருஷ்ணன் said...

தமிழ்நதி,

உங்களுக்கு தப்பாட்டமும் நன்றாக வருகிறது.

//இசை, இளங்கோ கிருஷ்ணன், விஷ்ணுபுரம் சரவணன், (பக்கத்துல பக்கத்துல எப்பவும் வந்துடுவாங்க)//

இந்த பகடியை ரசித்தேன். நானும் இசையும் அடிக்கடி பேசிக்கொள்வதுதான். நீங்களாவது வரிசை மாற்றி எழுதியிருக்கலாம்.

எப்படி ரெக்கார்ட் பண்ணின மாதிரி அவ்வளவு துல்லியமா பதிவு செய்திருக்கீங்க? டெரரா இருக்கீங்கபா. இனி உங்ககிட்ட ஜாக்ரதையா பேசணும்.

Karthikeyan G said...

வாமு கோமுவின்
critics மீதான அவரது
கிண்டலான விமர்சனத்தை உங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை என தோன்றுகிறது..

Dhanaraj said...

Literature only for the sake of sale. It can very well be said as "Prostitute Literature". Dickens was accused of it. He was innocent. Vaa. Mu. Komu sccepted that he was guilty. For that, hats off to him.

About your language: Don't ever engage yourselves in it. You are good in your original style.

அகநாழிகை said...

தமிழ்நதி, நிகழ்வை பற்றி உங்கள் பார்வையில் அழகாக பகிர்ந்தீர்கள்.வழக்கமான நடையிலேயே நீங்கள் எழுதியிருக்கலாம். யாருக்கோ தப்பாட்டம் ஆடப்போய் முழு நிகழ்வு குறித்தும் கொச்சையான விமர்சனத்தில் எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். இப்படியாக எழுதியதன் மூலமாக என்ன தப்பாட்டம் ஆடிவிட்டீர்கள் என்றதும் புரியவில்லை. ‘சாந்தாமணி...‘ நாவல் தொடர்பாக உங்கள் கருத்துகளை தெளிவாக பதிவு செய்தீர்கள். அதற்கான எதிர்கருத்துகளும் வந்தது. நீங்கள் தப்பாட்டம் ஆட நினைத்தது அதற்குதானே? எனில் அங்கே வந்திருந்தவர்களை ‘கவிஞ்ஞர்கள், எழுத்தாளர்கள்‘ என்றும் என்றும் பகடி செய்திருப்பது ஏன்? ஒரு கருத்து விவாதத்திற்கான களமாகத்தானே சொற்கப்பல் கூட்டம் நடந்தது. கூட்டத்தைப் பற்றிய தொகுப்பினை பதிவு செய்திருக்கும் நீங்கள் நிகழ்ச்சியின் நடுவில் நடந்ததைப் பற்றிய விமர்சனத்தை தலைப்பாகவும், அதைப்பற்றி முதலில் எழுதி, வாமுகோமுவிற்கு விளம்பரம் தேடித்தந்திருக்கிறீர்கள். மேலும், உங்கள் கருத்தினை தெளிவாகச் சொன்ன பிறகு அதற்கான மாற்றுக்கருத்துகளுக்கு விமர்சனம் சொல்லியிருக்கத்தானே வேண்டும்? அதற்காக தப்பாட்டம் ஆடினால் எப்படி? சாந்தாமணி நாவல் வெளியாவதற்கு முன்பாகவே அதன் ஒரு பகுதி உயிர்மையில் வெளியானது. நீங்கள் வாசித்திருப்பிர்கள் என்று நம்புகிறேன். அதன்பிறகு ஏன் அந்த பிடிக்காத புத்தகத்தை வாங்கி வாசிப்பானேன்?

- பொன்.வாசுதேவன்

Anonymous said...

தமிழ்நதி,
வழக்கமா யாருக்கும் தெரியாம ஆடுவீங்க, இன்னைக்கு சொல்லிட்டு தப்பாட்டம் ஆடியிருக்கீங்க. தமிழ்நாட்டோட தலையெழுத்து இதெல்லாம். ஆடுங்க. எவ்வளவு நாளைக்கு உங்க தப்பாட்டம்னு பாக்கலாம்.

Anonymous said...

// Baski.. said...
இப்போ உங்க நந்தகுமாரன் தொகுப்பு தான் படிச்சிட்டு இருக்கேன்... அருமையா போயிடு இருக்கு..//

சூப்பர் காமெடிடா அம்பி. இதை இவ்வளவு நாளா சொல்லாம இப்படி ஒரு பதிவு போட்டப்பறம் சொன்ன பாரு, ஒத்துக்கறேன் நீயும் ரவுடிதான்.

விஷ்ணுபுரம் சரவணன் said...

தமிழ்..

சுடசுட எழுதிட்டீங்க..

தக்கை பாபு குழந்தைகளுக்கான அமைப்பாக "கண்ணாம்பூச்சி" நடத்திவருவதை அங்கு அவர் அறிவித்தாக நினைக்கிறேன். மாதந்தோறும் குழந்தைகளுக்கு கதை மற்றும் பல விஷயங்களை கொண்டுச்சேர்க்கும் மிக அழகான செயலை செய்துக்கொண்டிருக்கிறார். ஒரு முறை அதற்கு நேரில் சென்று வரணும் என்று இம்முறை சேலம் வந்தபோது நினைக்கத்தோன்றியது. [அண்ணன் வேலு.சரவணன் கண்ணாம் பூச்சிக்கு ஒருமுறை வந்ததாக சொன்னார் பாபு]

கோமு இதைதான் எதிர்ப்பார்த்தார், அவரின் எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்துவிட்டீர்கள் என்றே தோன்றுகிறது. அதுகுறித்து பேசமால் புறக்கணிப்பதே அந்த நாவலுக்கு [!] க்கும் தமிழிலக்கியத்திற்கு செய்கிற நேர்மையான செயலாக இருக்கும்.

விஷ்ணுபுரம் சரவணன்

தமிழ்நதி said...

வாங்க இலக்கியச் சாளரம்,

நடத்தியது, நடத்துவது எல்லாம் பரமாத்மாதான்:)

"இவ்வளவு சீக்கிரம் பதிவு எழுதியதன் மூலம் பெண் ஜெ.மோ என பட்டம் தரலாம்."

நான் நானாவே இருந்துவிட்டுப் போகிறேனே...அவர் வேறு கோபித்துக்கொள்ளப்போகிறார்.:)

"அத்ன்பிறகு அறைக்கு வந்தபைன் வாமு.கோமுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது உங்கள் இருவரையும் அப்போதைக்கு சமாளிக்கவே தான் வியாபாராத்துகாக எழுதுவதாக சொன்னதாக சொன்னார்."

ஓ.. சமாளிப்பதற்காகப் பொய் சொன்னாரா? என்னமோ போங்க அஜயன்:(

டோண்டு,

புஷ்பா தங்கத்துரையும் அதைத்தான் சொன்னாரா? அப்ப சரி.

வாய்ப்பாடி குமார்,

பைத்தியக்காரனின் பதிவில் அந்தக் கட்டுரை இருக்கிறது. பழைய பார்வைகளிலிருந்து வித்தியாசப்படும் விமர்சனம். இரண்டு பெண்களின் கேள்விகளிலிருந்து தப்பிப்பதற்காக அவர் அப்படிச் சொன்னது எந்தவகையில் நியாயம் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பரே.

அப்பாடா! முத்துலெட்சுமி நகைப்புக்குறி, வியப்புக்குறி,துயரக்குறி போடாமல் பேசிட்டாங்கப்பா:)

தியாகு,

"எழுத்தில் ஊடுருவி இருக்கும் வன்மத்தை மறைக்க சமூகத்தில் அப்படி இருக்கிறார்கள் எனச் சொல்வது சரியல்ல"

ம்... நான் திரும்பத் திரும்பக் கேட்டேன்... "இவ்வளவு மோசமாகவா இருக்கிறது?"என்று. "ஆமாம். அப்படித்தான். உங்களுக்குத்தான் தெரியவில்லை"என்றார்கள். என்னத்தச் சொல்றது...!

சரவணகுமார்,

கண்மணி குணசேகரனின் புத்தகங்கள் எதையும் நான் வாசித்ததில்லை. அன்று அவர் நிகழ்த்திய உரையின்பிற்பாடு அவசியம் வாசிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

நன்றி பைத்தியக்காரன்,

உங்கள் கட்டுரையை வலைத்தளத்தில் வந்து வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது.

விஜயசெல்வன்,

அறைக்குள் பேசியதும் பேசுவதும் எமக்கெப்படித் தெரியும்:)

ராதாகிருஷ்ணன்,

எழுத்தின் ஆயுளை எழுத்தே தீர்மானிக்கிறது. அதுவொன்றே ஆறுதல்.

இளங்கோ,

"நீங்களாவது வரிசை மாற்றி எழுதியிருக்கலாம்"

எப்பிடி எழுதுவது...? மூன்றுபேரும் அத்யந்த நண்பர்கள் ஆயிற்றே...பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் மாதிரி:)

"எப்படி ரெக்கார்ட் பண்ணின மாதிரி அவ்வளவு துல்லியமா பதிவு செய்திருக்கீங்க? டெரரா இருக்கீங்கபா. இனி உங்ககிட்ட ஜாக்ரதையா பேசணும்."

இதில் கடைசி வாக்கியத்தை வழிமொழிகிறேன்:)

தமிழ்நதி said...

"வாமு கோமுவின்
critics மீதான அவரது
கிண்டலான விமர்சனத்தை உங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை என தோன்றுகிறது.."

இருக்கலாம் கார்த்திகேயன்.

வாசுதேவன்,

"யாருக்கோ தப்பாட்டம் ஆடப்போய் முழு நிகழ்வு குறித்தும் கொச்சையான விமர்சனத்தில் எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்."

எனது விமர்சனத்தில் என்ன கொச்சையைக் கண்டீர்கள் என்பதை எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்வேன். நீங்கள் மீண்டும் ஒரு தடவை பதிவை வாசித்துவிட்டு வாருங்கள். மேலும், நான் யாருக்காகவும் தப்பாட்டம் ஆடுவதில்லை. கிருபாநந்தினி விவகாரம் பரபரப்பாக விற்பனையானபோது அங்கேயும் பாடி இங்கேயும் பாடி தப்பாட்டம் ஆடியது நீங்கள்தான். நானில்லை.

நீங்கள் வேறு ஏதோ கோபத்தில் (அது என்னவென்று எனக்குத் தெரியாது) இல்லாத குற்றச்சாட்டுகளோடு வந்திருக்கிறீர்கள்.

'தப்பாட்டம்'என்ற சொல்லால் நான் குறிப்பிட்டது எனது மொழிநடை மாற்றமேயன்றி வேறில்லை.

அந்தப் பதிவு முழுவதற்கும் பொதுவான ஒரு மொழிநடை இருந்தது. அதற்கியைபுறும் என எண்ணியே கவுஞ்ஞர்கள் என்ற சொல்லைப் பிரயோகித்தேன். நானும் கவிஞர் என்று சொல்லப்படுபவள்தான் (கருமம்... இதெல்லாம் சொல்லியாகவேண்டியிருக்கிறது)அப்படியிருக்க நான் மற்றவர்களை நான் கேலி செய்வதாக எப்படி எடுத்துக்கொள்ளலாம்? முட்டையில் மயிர் பிடுங்குவதுபோலிருக்கிறது நீங்கள் சிரமப்பட்டுக் குற்றம் கண்டுபிடிப்பது.

நான் எழுதும் பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கவேண்டுமென்பதை நான்தான் தீர்மானிக்கமுடியும். எந்த இலக்கிய அதிகார கொம்பனும் அதைத் தீர்மானிக்க முடியாது. எனக்கு 'சாந்தாமணி'பிரதானமாகத் தோன்றியதால் அப்படி வைத்தேன்; 'நாவல் காமம் கண்ராவி'என்றும் வைத்துக்கொள்ள எனக்கு உரிமையுண்டு.

"உங்கள் கருத்தினை தெளிவாகச் சொன்ன பிறகு அதற்கான மாற்றுக்கருத்துகளுக்கு விமர்சனம் சொல்லியிருக்கத்தானே வேண்டும்? அதற்காக தப்பாட்டம் ஆடினால் எப்படி?"

சிபிச்செல்வனால் சொல்லப்பட்ட மாற்றுக்கருத்துக்களுக்கு நான் விடையளித்துவிட்டேன். வன்மத்தோடு மறுபடியும் இங்கு வந்து கேட்பவர்களுக்குப் பதிலிறுத்துக்கொண்டிருக்க இயலாது.

'தப்பாட்டம்'என்ற சொல்லை எனது மொழி குறித்தே பிரயோகித்தேன். அதை எனக்கெதிராகத் திசைதிருப்ப முயற்சிக்கவேண்டாம். நான் என்ன தப்பாட்டம் ஆடிவிட்டேன் என்பதற்கு உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.

"சாந்தாமணி நாவல் வெளியாவதற்கு முன்பாகவே அதன் ஒரு பகுதி உயிர்மையில் வெளியானது. நீங்கள் வாசித்திருப்பிர்கள் என்று நம்புகிறேன். அதன்பிறகு ஏன் அந்த பிடிக்காத புத்தகத்தை வாங்கி வாசிப்பானேன்? "

உங்கள் மூளை வந்துசேரும் முடிவுகளுக்கு இயைபுற நான் நடந்துகொள்ள வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? உயிர்மையில் வெளியான அத்தனையையும் நான் அவசியம் வாசித்திருப்பேன் என்ற முடிவுக்கு வந்தது உங்கள் தவறு.

எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது. இந்த வன்மம் இந்தக் கூட்டம் தொடர்புடையது மட்டுமல்ல.

வாங்க யமுனா,

அனானியா வந்து அடிச்சு ஆடிக் களைச்சுப் போயிட்டீங்கன்னு ஒரு வலைப்பூவே ஆரம்பிச்சுட்டாப்ல... தூள் கிளப்புங்க.. தமிழ்நாட்டோட தலையெழுத்து...! அதுவொரு துயரநாடகந்தான்.

பாஸ்கிக்கு ஒரு வலைப்பூ இருக்கிறது. அவர் அதில் சொந்தப்பெயரில் எழுதிக்கொண்டிருக்கிறார். யமுனா கரீனா வனஜா சுகுணா என்ற பெயர்களுள் எல்லாம் புகுந்துகொண்டிருக்கவில்லை. 'நீயும் ரவுடிதான்'என்று ஒவ்வொருவரிடமும் ஒத்துக்கொண்டே வருகிறீர்களே.. என்னாச்சு.. நொந்து போயிட்டீங்களா?

Anonymous said...

யமுனா தொடுப்பைக் கிளிக்கினா பொன்.வாசுதேவன் மட்டும்தான் இருக்கார். எங்கயோ இடிக்குதே...

padmanabhan said...

‘தேடிச் சோறு நிதந் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர்
வாடப் பல செயல்கள் செய்து‘


என்பது தான் நினைவுக்கு வருகிறது.இப்படியா முடிய வேண்டும் ஒரு கருத்தரங்கம்
பதிவைப் பற்றி்:
நேரலை போன்ற நிமிர்ந்த நன்னடை.

kuthu said...

பதிவு கொஞ்சம் சுருக்கமா இருந்திருக்கலாம்..

பிரவீண் said...

இந்த வாமு.கோமு ஒரு மொக்கை..பாலியலின் அரசியல், வரலாறு குறித்து நவீன/ பின் நவீன அறிவுத்திரட்சிகளின் வெளிச்சத்தில் மிக எழுச்சிமிக்க விவாதங்கள் உலக அரங்கிலும் தமிழிலும் நடைபெற்று ஓய்ந்துள்ள தருணத்தில் அவைபற்றி எந்த சுரணையும் அற்று நிலப்பிரபுத்துவ கால, சிற்றிலக்கிய கால மன நிலையோடு பாலியலை வெளிப்படுத்தும் படைப்பை எப்படி நவீன இலக்கியத்தில் சேர்ப்பது.
அரசியல் ஞானமும் கவித்துவமும் கூடாமல் கம்யூனிசத்தை எழுதினாலும் சரி காமத்தை எழுதினாலும் சரி அது ஆபாசம்தான்.
ஜி. நாகராஜனும்தான் எழுதினார் பாலியலை...அந்த எல்லைகளைக் கொஞமாவது தொட முயற்சிக்க வேண்டாமா.

தமிழ் நதியின் இந்த style of narration அவருக்குள் இருக்கும் நல்ல புனைகதைப் படைப்பாளியை இனம்காட்டுகிறது.உயிரோட்டமாக இருக்கிறது.

Perundevi said...

//பக்கம் பக்கமா பாலியலை எழுத்தா நிரப்பி வைச்சிருக்கிறதத் தவிர்த்து வா.மு.கோமுவோட இந்தப் புத்தகத்துல ஒண்ணுங் கெடயாது. காமத்தை எழுதக்கூடாதுன்னு நாஞ் சொல்லவரலை. நானுங்கூட எழுதியிருக்கேன். ஆனா, எழுத்துக்குள்ள காமம் வரலாம். காமம் மட்டுமே எழுத்தாயிருந்தா அதுக்கு வேற பேரு.//
வா.மு. கோமுவுடைய “தவளைகள்….” புத்தகம் நன்றாக இருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். அதனாலேயே இந்தமுறை சாந்தாமணியைத் தேடிவாங்கினேன். உடனே வாசித்தேன். பெரிதும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
//தப்புப் பண்ணினவங்களை ஊருக்கு வெளியில ஒதுக்கிவைக்கிறதுமாதிரி சுடுகாட்டுக்குப் பக்கத்துல கொண்டுபோய்த் தள்ளிவைச்சிருப்பாங்கங்கிறதுல சந்தேகமேயில்லை. ‘முலைகள்’னு தன்னோட கவிதைத் தொகுப்புக்குத் தலைப்பு வைச்சதுக்காக கவிஞர் குட்டி ரேவதியை இருட்டடிப்பு செய்த சமூகந்தான இது?//
உண்மைதான். ஆணுக்கு ஒன்று, பெண்ணுக்கு ஒன்றாக இரட்டைநாக்குகள் அதிகம் உலாவும் இடம் தமிழ்நாட்டு இலக்கியச்சூழல். ஆனால் ஒரு திருத்தம், கவிஞர் குட்டிரேவதியின் “முலைகள்” தலைப்பினால் இருட்டடிப்பு செய்யப்பட்டார் என்பதில் நான் மாறுபடுகிறேன். குட்டிரேவதிக்கு முன்னால் எழுதத்தொடங்கிய பெண் எழுத்தாளர்கள் மட்டும் கவனிக்கப்பட்டார்களா என்ன? எடுத்துக்காட்டாக ரிஷியின், என் எழுத்துகள். இதுவரை என் கவிதைத்தொகுப்புகளுக்கு ஒரு விமரிசனக்கட்டுரை அல்லது வாசிப்புகூட வந்ததில்லை, தமிழ்நதி. அதேபோல சிலவருடங்களுக்கு முன்னால்வரை அம்பையின் எழுத்துகளைப்பற்றிக்கூட பெரிதாக எழுதப்பட்ட மாதிரி தெரியவில்லை. கிருத்திகாவுக்கும் அதே கதிதான். ஆதங்கத்தினால் அல்ல, தகவலுக்காக மட்டுமே இவற்றைப் பதிவுசெய்கிறேன்.

மரா said...

அன்பின் தமிழ்நதி,
விழாவை பற்றிய விரிவானதொரு கட்டுரைக்கு நன்றிகள் பல.மேற்கொண்டு விளக்கம் அளித்த நண்பர் அஜயன் பாலாவிற்கும் நன்றிகள்.

அப்புறம் உங்களிடத்தில் ஒரு கேள்வி -கோமுவுக்கு பக்கத்தில் இருந்து கூச்சல் போட்டுக்கொண்டிருந்த(கேள்வி கேட்டுக்கிட்டிருந்தேன்னு பொய் சொன்னார் ஷாராஜ்!) பெயர் தெரியாதவர் சார்பாக:

இந்த புத்தகத்தை 15 வயது பெண்களிடம் கொடுத்து படிக்க சொல்ல முடியுமா? என்று நீங்களும்,சந்திரா மேடமும் கேட்டீர்களாம்.

இந்த புத்தகத்தை கொடுத்தால்- இதெல்லாம் பாங்குப்பை, இதைதாண்டிய சங்கதிகள் எங்களுக்குத் தெரியும்னு சொல்லிருவாங்களாம்.

கோமு நண்பர் ஷாராஜ் கேட்கும் கேள்வி: சில பெண் எழுத்தார்கள் (eg: சல்மா,சுகிர்தராணி,லீனா) இவர்கள் எழுதும் கவிதைகளை 15 வயது பெண்குழந்தைகளிடம் கொடுத்து படிக்க சொல்ல முடியுமா?

கூட்டம் நடந்த இடத்தில் எத்தனை முறை இதே கேள்வி கேட்டும் உங்களிருவரிடத்திலும் பதிலில்லையாதலால் இங்கே அவர் சார்பாக கேட்கிறேன். நன்றி.

அகநாழிகை said...

தமிழ்நதி,

//இப்படியாக எழுதியதன் மூலமாக என்ன தப்பாட்டம் ஆடிவிட்டீர்கள் என்றதும் புரியவில்லை//

இப்படித்தான் நான் கேட்டிருக்கிறேன். தவிர ஏற்கனவே நான் கிருபாநந்தினி பதிவில் எனக்கு தோன்றிய கருத்தையும், உங்கள் பதிவில் எனக்கு தோன்றிய கருத்தையுமே பதிவு செய்தேன். இதில் எந்த தப்பாட்டமும் இல்லை. அது என்ன விஷயத்திற்கு என்பதைப்பற்றி குறிப்பிடாமல், பொத்தாம்பொதுவாக நான் தப்பாட்டம் ஆடியதாக சொல்லியிருக்கிறீர்கள்.

நான் பின்னூட்டமாக பதிவு செய்தது, சொற்கப்பல் நிகழ்வை பற்றிய உங்கள் பதிவிற்கு மட்டும்தான். வேறு எதன்பொருட்டும் அல்ல.

உங்கள் பெரிய்ய புத்திஜீவி மூளைக்கு வந்து சேர்கிற கழிவுகளின் அடிப்படையில் நீங்களாக நான் வேறு ஏதோ கோபம் கொண்டு பேசுகிறேன் என்ற முடிவுக்கு எப்படி வருகிறீர்கள்? உங்கள் கருத்தின் மீதான பதில்தான் எனதேயொழிய வேறெந்த கோபமும் எப்போதும் இல்லை.

புதுசா படிக்க வர்றவங்க வாமுகோமுவோட புத்தகத்தை படிச்சு கெட்டுப்போயிடக்கூடாதேங்கற உங்க சமூக உணர்வு ரொம்ப நல்லது. எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளையும் இதே சமூக கண்ணோட்டத்தோட அணுகி ஒழுங்கமைவோட படைப்புகள் வருகிறதான்னு பார்த்து விமர்சனம் செய்ய வாழ்த்துகள்.

அப்புறம் முக்கியமான விஷயம், இந்த முட்டையில மயிர் பிடுங்கறது, முட்டைகோசுல மயிர் பிடுங்கறதெல்லாம் உங்களோட வெச்சுக்கோங்க. அது எனக்கு அவசியமில்லாத விஷயம். அப்படி முட்டையில மயிர் பிடுங்கற ஆளாயிருந்தா என்னோட 20 வருட கால வாசிப்பில இந்நேரம் நானும் சில கவிதைத் தொகுதி, அப்புறம் சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரைன்னு ரூம் போட்டு எழுதி முழுநேர இலக்கிய வியாதியாகியிருப்பேன்.

- பொன்.வாசுதேவன்

தமிழ்நதி said...

தகவலுக்கு நன்றி நேசமித்ரன்,

பைத்தியக்காரனின் கட்டுரையை அவரது வலைத்தளத்தில் வாசித்தேன்.

"எனக்கு உங்கள் வழக்கமான மொழிதான் பிடித்தம் .கொஞ்சம் தமிழ் வாசிக்கலாம் என்று வரும் தளம் உங்களுடையது."

சும்மா பரீ்ட்சார்த்தமாக எழுதிப் பார்த்ததுதான் நேசமித்ரன். மற்றபடி அதைத் தொடரும் எண்ணமில்லை. உங்கள் அபிமானத்துக்கு நன்றி.

தன்ராஜ்,

மேலே உள்ள பதிலை உங்களுக்கானதாகவும் எடுத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து எனது தளத்திற்கு வந்து கருத்துச் சொல்லிவரும் உங்களைப் போன்றவர்களால் ஈயாடாமல் இருக்கிறது தளம்:)

சரவணன்,

"கோமு இதைதான் எதிர்ப்பார்த்தார், அவரின் எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்துவிட்டீர்கள் என்றே தோன்றுகிறது. அதுகுறித்து பேசமால் புறக்கணிப்பதே அந்த நாவலுக்கு [!] க்கும் தமிழிலக்கியத்திற்கும் செய்கிற நேர்மையான செயலாக இருக்கும்."

அப்டிங்கிறீங்க... என்னமோ போங்க சரவணன்... தனிமடல் இடுகிறேன்.

பத்மநாபன்,

விமர்சனக்கூட்டம் உண்மையில் ஒழுங்கமைவோடு நன்றாகவே நடந்தது. இடையில் நாவலைப் பற்றி ஒரு சர்ச்சை அவ்வளவுதான். அதுவும் வேண்டியிருக்கிறது அல்லவா? பாராட்டுரையாக இல்லாமல் விமர்சனமாக இருக்கும்பட்சத்தில் இத்தகைய குத்திமுறிதல்கள் நடக்கவே செய்யும்.


குத்து,

"பதிவு கொஞ்சம் சுருக்கமாக இருந்திருக்கலாம்"

ஒன்றுவிடாமல் பதியவேண்டுமென நினைத்தேன். அப்படியும் தவறிவிட்டது. அவையும் இடம்பெற்றிருந்தால் இன்னமும் நீளமாகியிருக்கும். இந்த வலைப்பூவை எனது ஞாபகங்களின் சேமிப்புக் கிடங்காகவும் பார்க்கிறேன். எதோ ஒரு காலம் என்னை நான் மீளுருவாக்கம் செய்ய இத்தளம் உதவலாம்.

பிரவீண்,

"மிக எழுச்சிமிக்க விவாதங்கள் உலக அரங்கிலும் தமிழிலும் நடைபெற்று ஓய்ந்துள்ள தருணத்தில் அவைபற்றி எந்த சுரணையும் அற்று நிலப்பிரபுத்துவ கால, சிற்றிலக்கிய கால மன நிலையோடு பாலியலை வெளிப்படுத்தும் படைப்பை எப்படி நவீன இலக்கியத்தில் சேர்ப்பது.
அரசியல் ஞானமும் கவித்துவமும் கூடாமல் கம்யூனிசத்தை எழுதினாலும் சரி காமத்தை எழுதினாலும் சரி அது ஆபாசம்தான்."

ஒவ்வொரு சொல்லையும் வழிமொழிகிறேன். எதிர்த்துச் சொன்னால் கோபம் வருகிறது. அப்படியே ஏற்றுக்கொண்டு வாயை மூடிக்கொண்டிருந்தால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியைக் கொடுக்காதவர்கள் 'தப்பாட்டம்'ஆடுவதாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

தமிழ்நதி said...

வாசுதேவன்,

கடைசியாக நீங்கள் இட்டிருக்கும் பின்னூட்டத்தின் முதல் பகுதியை வாசித்துவிட்டு இதைத் தொடருங்கள்.


"நீங்கள் தப்பாட்டம் ஆட நினைத்தது அதற்குதானே?"

"அதற்காக தப்பாட்டம் ஆடினால் எப்படி?"

என்ற வாக்கியங்களெல்லாம் உங்கள் முதல் பின்னூட்டத்தில் இடம்பெற்றிருந்தன. அவற்றை நீங்கள் எழுதவில்லையா? நான் எதோ தப்பாட்டம் ஆடவே கூட்டத்திற்குப் போனதுபோல ஒரு தொனி அதில் தென்படுகிறது. பெண்கள் ஏன் இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை என்ற உண்மையை நான் உணரத்தொடங்கியிருக்கிறேன். அஜயன் பாலாவுக்கு நன்றி.

"எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளையும் இதே சமூக கண்ணோட்டத்தோட அணுகி ஒழுங்கமைவோட படைப்புகள் வருகிறதான்னு பார்த்து விமர்சனம் செய்ய வாழ்த்துகள்."

எனக்குத் தோணுனா நான் விமர்சனம் செய்கிறேன். இல்லையென்றால் பேசாமல் இருக்கிறேன். 'நீ அதைச் செய் இதைச் செய்'என்பதையெல்லாம் உங்கள் வீட்டோடு நிறுத்திவிடுவது நல்லது. வன்மம் கலந்த வாழ்த்துக்கள் வந்தவழியே திரும்பிச் சென்றுவிடுகின்றன.

"முட்டையில மயிர் பிடுங்கற ஆளாயிருந்தா என்னோட 20 வருட கால வாசிப்பில இந்நேரம் நானும் சில கவிதைத் தொகுதி, அப்புறம் சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரைன்னு ரூம் போட்டு எழுதி முழுநேர இலக்கிய வியாதியாகியிருப்பேன்."

என்ன சொல்ல வருகிறீர்கள்? நீங்கள் இருபது வருடங்களாக வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதையா? அல்லது மேற்கண்ட படைப்புகளை வெளியிடுபவர்கள் யாவரும் இலக்கிய வியாதிகள் என்பதையா? என் தந்தை 50ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்துக்கொண்டிருக்கிறவர். வாசகனாகவே இருந்து அவர் இறந்துவிடுவார். வாசிப்புக்கும் முட்டையில் மயிர் பிடுங்குவதற்கும் பெரிதாக சம்பந்தம் ஒன்றுமில்லை.

நான் 'கவுஞ்ஞர்கள்'என்று சொன்னால் கோபம் வருகிறது. 'இலக்கிய வியாதிகள்'என்று நீங்கள் சொல்லலாமாக்கும்! ஆமாம்.. உங்களுக்கு பிறப்புரிமை இருக்கிறதல்லவா? அதை யார் மறுக்கப்போகிறார்கள்?

தமிழ்நதி said...

நிறைய எழுதினால் பின்னூட்டப்பெட்டி ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்கிறது. அதற்காக பிரித்துப் பிரித்துப் போடுகிறேன். பின்னூட்டங்களை அதிகரிக்கும் உத்தியாக இதை எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என நம்புகிறேன்.

பெருந்தேவி,

"குட்டிரேவதிக்கு முன்னால் எழுதத்தொடங்கிய பெண் எழுத்தாளர்கள் மட்டும் கவனிக்கப்பட்டார்களா என்ன? எடுத்துக்காட்டாக ரிஷியின், என் எழுத்துகள்."

உங்கள் விசனத்தில் நியாயம் இருக்கிறது. எனது கோணத்தில் இதற்குப் பதிலளிக்கலாம் என்று நினைக்கிறேன். நான் தமிழிலக்கியத்திற்குள் பிந்திநுழைந்த ஆள். தீவிர இலக்கியம் படிக்கவும் பிடிக்கவும் தொடங்கியது ஒரு ஏழு எட்டு ஆண்டுகளாகத்தான். அதற்குமுன் ஜனரஞ்சகமாகப் படித்துத் தள்ளிக்கொண்டிருந்தேன். நான் தீவிர இலக்கியத்துள் வந்தபோது மாலதி மைத்ரி, சுகிர்தராணி, குட்டி ரேவதி, என்ற அலையைக் கண்ணுற்றேன். அவர்களைப் படித்தேன். (இந்தப் பட்டியல் எல்லோரும் சொல்வதே. அண்மையில் பிரபஞ்சன் சார்கூட ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார்.)

அதற்குமுன் எழுதியவர்களை அதன்பிறகுதான் படிக்கவாரம்பித்தேன். உதாரணமாக உங்களது, லதா ராமகிருஷ்ணன், சுகந்தி சுப்பிரமணியம்... இந்த வரிசையில் நிறைய. ஆனால், நீங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளையோ கண்டுகொள்ளப்படாமல் போனதையோ குறித்து நான் அறிய முற்படவில்லை. அது என் தவறுதான். குட்டி ரேவதி எனது தோழி. அதனால், அவரைப் பற்றி அறிந்திருக்கிறேன். அந்த வலியை நெருக்கமாக என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதனாலேயே அவரது பெயரைக் குறிப்பிட்டேன்.

பெருந்தேவி,இந்தக் கூட்டங்களுக்குச் சென்று வந்த பிறகு... இனிப் போவதில்லை என்று முடிவுசெய்கிறேன். ஆனாலும், நான் இந்தியாவில் தங்கியிருக்கும் காலம் குறைவு என்றபடியால் எனக்குக் கிடைக்கும் இலக்கிய அறிதல்களைத் தவறவிடக்கூடாதென்ற முனைப்பினால் செல்கிறேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை உங்களால் புரிந்துகொள்ளமுடிகிறதா? நாங்கள் வீழ்த்தப்படுபவர்களாகத் தொடர்ந்து இருக்கிறோம். பெண்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் 'ஆண்களாலேயே' எதிர்கொள்ளப்படுகின்றன.

மயில்ராவணன்,

"கோமு நண்பர் ஷாராஜ் கேட்கும் கேள்வி: சில பெண் எழுத்தார்கள் (eg: சல்மா,சுகிர்தராணி,லீனா) இவர்கள் எழுதும் கவிதைகளை 15 வயது பெண்குழந்தைகளிடம் கொடுத்து படிக்க சொல்ல முடியுமா?

கூட்டம் நடந்த இடத்தில் எத்தனை முறை இதே கேள்வி கேட்டும் உங்களிருவரிடத்திலும் பதிலில்லையாதலால் இங்கே அவர் சார்பாக கேட்கிறேன்."

நண்பர் ஷாராஜை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். கூட்டம் நடந்த இடத்தில் எங்களிடம் மேற்கண்ட கேள்வி கேட்கப்படவில்லை. அல்லது கேட்டு, அந்த இரைச்சலில் எங்கள் காதுகளில் விழாமல் இருந்திருக்கலாம். இந்தக் கேள்வி இப்போதே எழுந்ததுபோல புதிதாகத் தோன்றுவது அதனால்தான்.

அப்போது அந்தக் கேள்வி செவிகளில் விழுந்திருந்தாலும் என் பதில் இதுவாகத்தான் இருந்திருக்கும்.

"நாங்கள் பேசிக்கொண்டிருப்பது வா.மு.கோமுவின் புத்தகம் பற்றி. மேற்கண்டவர்களின் கவிதைகள் அவர்கள் எழுதியது. என் கவிதைகளைப் பற்றிய கேள்விகளுக்கு என்னிடத்தில் பதில் இருக்கும். 'அவங்க தப்புப் பண்றாங்க... அதெல்லாம் கேக்க மாட்டீங்களாக்கும்'என்ற தொனியை இந்தக் கேள்வியில் காணமுடிகிறது. ஆனாலும் ஒன்று சொல்லமுடியும். உங்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் பெண் கவிஞர்கள் எழுதவந்த காலத்து சூழலை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அடக்கி முறுக்கி ஒடுக்கி வைக்கப்பட்ட இரண்டாம் பாலினத்தின் அவச வெளிப்பாடு அது. வா.மு.கோமுவுக்கும் அந்த அவசம் பொருந்துமா? ஆணாகப் பிறந்ததன் உரிமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் பல்கோடி மனிதர்களில் அவரும் ஒருவர்.

சாந்தாமணியின் பக்கங்களில் உள்ள கலவிக் காட்சி வர்ணனைகளைக் காட்டிலும் மேற்கண்ட கவிஞர்களின் கவிதைகள் அப்படியொன்றும் குழந்தைகளைப் பாதித்துவிடாது. தவிர, பதின்ம வயதுக்குப் பிறகு அந்தப் பிள்ளைகளால் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய கவிதைகள் அவை என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில், அவர்கள் காமக்கிளர்ச்சியை மட்டும் கவிதைகளில் எழுதவில்லை. ஒரு பெண்ணாக அவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்களோ அதன் வெளிப்பாடுகளையும் அக்கவிதைகளில் காணலாம். பாவம் வா.மு.கோமு முதலாம் பாலினமாயிருந்தும் அவர் பாதிக்கப்பட்டார் போலும்!!!

கவிஞர் இசை said...

"நம்ம ஆளுங்களுக்கு இந்த நகைச்சுவை உணர்ச்சி மட்டும் இல்லேன்னு வைச்சுக்கங்களேன்… காக்கா கொத்திட்டுப் போயிடும்"...
இதை பல முறை நான் சொல்லி இருக்கேன்... எங்க ஊர்ல அதிகம் படிக்காத நண்பர் ஒருவர் ஒரு முறை சொன்னார்...." உங்க கிட்ட இந்த எகத்தாளாம் மட்டும் இல்லைன்னா நாய் வால்ல தள்ளி விட்டுடுண்டா". ஆம்.. நாய், வாலில் தள்ளி விடும் பலவீநனங்களோடு தான் வாழ்கிறோம் நாங்கள். எனக்குள் இருக்கிற வெளையாட்டு பையனாவது சிரித்துக் கொண்டு சந்தோசமாக இருக்கட்டுமே...

ajayan bala baskaran said...

சரி..சரி... சொற்கப்பல் நாவல்களுக்கான அரங்கு இன்னும் முடியவில்லை போல .

தமிழ்நதி said...

அன்புள்ள சின்னப்பயல்,

உங்கள் பின்னூட்டத்தில் ஒரு பெயரைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதனால் வெளியிடவில்லை. எனது comment moderation ம் என்ன காரணத்தாலோ சரியாக இயங்கவில்லை. அந்தப் பெயரை நீக்கிவிட்டு அனுப்புங்களேன். புண்ணியமாகப் போகும்.:) எல்லாவற்றிலும் தன்னைத் துருத்திக்கொள்பவர்கள் இதையும் பயன்படுத்திக்கொள்ளமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? தவிர, நான் சும்மா இருந்தாலும் பிரச்சனை வாசலில் வந்து அழைப்புமணியை அழுத்துகிறது. புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

அஜயன், நீங்க வேற... 'இப்படிப் புலம்ப வைச்சுட்டானே... வேணும் எனக்கு வேணும்'என்ற தருமியின் குரல் கேட்கிறதா:)

டங்கு டிங்கு டு(பாத்துப் பாத்துக் கண்டுபிடிச்ச பேரப் பாரு)

ஆம்... எங்கள் ஊர்களிலும் வெகண்டையாகப் பேசுகிறவர்களைப் பார்த்துச் சொல்வார்கள் "வாய் இல்லாவிட்டால் நாய் கொண்டு போய்விடும்"என்று. இங்கே சாதாரண மனிதர்கள் அசாதாரணமான நகைச்சுவை உணர்வோடு பேசுவதைக் கவனித்திருக்கிறேன். 'சாதாரண'என்ற சொல்லை வைத்து அரசியல் பண்ணாவிட்டால் சரி:)

VijayaRaj J.P said...

நீங்கள் என்ன எழுதினாலும் சர்ச்சைகள்
வந்து விடுகிறதே...

எழுதுவது தமிழ்நதி என்பதாலா?
எழுத்துக்களாலா?

சின்னப்பயல் said...

புரிகிறது...தவிர்த்துவிட்டேன்..:-)

senthil said...

material science
electrical machines
electronic device
material science
fulid mechanincs
thermodynamics
electromagnetic theory
electronics circuits
micro processor
dgital singnal processing
measurement and instrument
transimission and distribution
network analysis and synthtics......................etc..

அய்யயோ இந்த புத்தகத்த பதிலாம் விமர்சனம் பண்ண மாட்டிங்கள ...
எங்கள இதுல இருந்தெல்லாம் காபத்த மாடிங்களா .........:)

Deepa said...

//அட கொக்கமக்கா! நானும் சந்திராவும் கொழுத்துற வெயில்ல மிச்சமிருந்த தொண்டத் தண்ணி காயுறவரைக்கும் சத்தம் போட்டிருக்கோம். இவுரு சாவதானமா எந்திருச்சு வந்து ‘இப்டி எழுதுனா விக்கும்னாங்க… அதனால அப்டி எழுதினேன்’ங்கிறாரே… நம்மள இப்டிக் காலி பண்ணிட்டாரேன்னு நெனைச்சுக்கிட்டேன். ஒலகந் தெரிஞ்ச ஆளு. நம்மள மாதிரியா?//


விறுவிறுப்பாகப் படித்துக் கொண்டே வந்தேன். இந்த இடத்தில் சத்தம் போட்டுச் சிரிக்க வேண்டியதாயிற்று!

//மரக்கறி (வெஜிடபில்னு சொல்வாங்கல்ல…. அது) //
ந‌க்க‌ல் தான் உங்க‌ளுக்கு! :)

Unknown said...

நிகழ்ச்சிக்கு வர ஏலாமல் போனது நல்லதாகிப் போனது தமிழ். அந்த ஆசாமியின் (எழுத்தாளர் என்றால் என்னால் புதுமைப்பித்தன், லா.சா.ர, தி.ஜ, அ.முத்துலிங்கம், ஜெ.மோ, எஸ்.ரா..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்) சில்லரைத்தனமாக எழுதுபவர்களையும் பணத்திற்காக மட்டுமே எழுதுபவர்களையும் காலம் தன் புறங்கையால் வெகு சீக்கிரம் குப்புற தள்ளிவிடும். மேலும் உள்ளே இருப்பது தான் வெளியில் வரும். மீனின் சிறகை அருகில் வைத்துக் கொண்டு எழுதினாராம். தஞ்சை பிரகாஷ் மீது மதிப்பிருந்தாலும் அந்த நாவல் nothing but total fanatic. அதற்கும் வாசகர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். சிரங்கு வந்தவர்கள் சந்தோஷமாக சொறிந்து கொள்ளட்டும் தமிழ். ஆனால் காலப்போக்கில் உதிர்ந்து போகப் போகும் அவற்றுக்கெல்லாம் நல்ல எழுத்தை நொக்கிய தேடலில் இருப்பவர்கள் மதிப்பளிக்கக் கூடாது. அழகியலுடன் இருக்கும் eroticism மிற்கு இலக்கியத்தில் என்றும் மதிப்பிருக்கிறது. இது போன்ற குப்பைகளுக்கு இலக்கியப் பெருமை எல்லாம் கிடையாது. Intellectuals will ignore those filthy writings.

கொஞ்சம் பெரிய பதிவானாலும் தமிழ், உனக்கு தப்பாட்டம் நல்லாவே வருதுப்பா.ஆமா நம்ம ஊர் feminists எல்லாம் எங்க போனாங்க? அவங்களுக்கு நம்ம சொந்த செலவுல இந்த பொஸ்தகத்தை ரெண்டு காப்பி அனுப்பி அன்னாருக்கு நல்லது செய்யலாமில்லே?

Perundevi said...

//ஆனால், நீங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளையோ கண்டுகொள்ளப்படாமல் போனதையோ குறித்து நான் அறிய முற்படவில்லை. அது என் தவறுதான்.//
தமிழ்நதி, தவறு என்பதெல்லாம் பெரியவார்த்தை. தமிழ்நாட்டுக்கு எப்போது நீங்கள் வந்தீர்கள் என்பதை நான் அறிவேன். அதனால், இது அவசியமில்லை.:)
//(இந்தப் பட்டியல் எல்லோரும் சொல்வதே. அண்மையில் பிரபஞ்சன் சார்கூட ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார்.)//
பட்டியல்கள் எப்படி, யாரால், எந்த காலகட்டங்களில் கவிதைக்கு/இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட பல்வேறு அரசியல்களை முன்வைத்து போடப்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். என் பெயர் வந்திருக்கும் சிலபல பட்டியல்களையும் உள்ளிட்டுத்தான் இதைச் சொல்லுகிறேன். என்னைப்பொறுத்தவரை, தமிழ்நாட்டில் நல்ல இலக்கியத்தின்பால் கவனம்திரும்பாமல், எழுதுபவர்களைநோக்கி கவனம் திரும்புவதற்கு, இலக்கியச் சீரழிவுக்கு திறனாய்வு செய்யாமல், பெயர் உதிர்த்து போடப்படும் பட்டியல்கள் முக்கிய காரணம்.

நண்பர் குட்டிரேவதியை விசாரித்ததாகச் சொல்லவும். அவர் எப்படி இருக்கிறார்? அன்புடன் பெருந்தேவி

தமிழ்நதி said...

"நீங்கள் என்ன எழுதினாலும் சர்ச்சைகள்
வந்து விடுகிறதே...

எழுதுவது தமிழ்நதி என்பதாலா?
எழுத்துக்களாலா?"

தெரியவில்லை விஜயராஜ். ஒருவேளை நான் பூசிமெழுகாமல் சில உண்மைகளைப் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்துவிடுவதனாலாக இருக்கலாம். தமிழ்நதி மீது கோபங்கொள்ள வேறு எந்தக் காரணங்களும் இல்லை:)

நன்றி சின்னப்பயல்....மன்னிக்கவும் பெருந்தன்மையால் பெரிய பயல்:)

செந்தில்,

இல்லை... நீங்கள் குறிப்பிட்ட புத்தகத்திற்கு எல்லாம் விமர்சனம் எழுதமாட்டோம். இப்படிப் பிடிவாதமாகச் சொல்வதற்கு அந்தப் புத்தகங்களைப் பிடிக்காது என்பது காரணமல்ல; அவற்றில் ஒரு வார்த்தையும் எங்களுக்குப் புரியாது. அதையெல்லாம் கட்டிக்கிட்டு நீங்களே அல்லாடுங்க... ஆளை விடுங்கப்பா:)
----
//மரக்கறி (வெஜிடபில்னு சொல்வாங்கல்ல…. அது) //
ந‌க்க‌ல் தான் உங்க‌ளுக்கு! :)

ஆமாம் தீபா. குசும்பு மட்டும் இல்லையென்றால் கோழி தூக்கிக்கொண்டு போய்விடும்:) இங்கு சில நண்பர்களுடன் பேசிப் பேசி நானும் தமிங்கிலிஷ் பழகிக்கொண்டிருக்கிறேன். கொஞ்ச நாட்கள் போனால் நானும் வெஜிடபுள் என்றே 'தமிழில்'பேச ஆரம்பித்துவிடுவேன். விழித்து பிடரியில் தட்டிக்கொள்ள வேண்டும்.

பெருந்தேவி,

பட்டியல்களிலும் ஒரு அரசியல் இருக்கத்தான் செய்கிறது. அவரவர் சார்பு நிலை அதில் வெளிப்படுகிறது. உதாரணத்துக்கு விடுதலைப் புலிகளைப் பிடிக்காதவர்கள் யாரும் எனது பெயரைப் பட்டியலில் சேர்க்க மாட்டார்கள்:)

குட்டி ரேவதி நலமாக இருக்கிறார். நான் அவரைச் சந்தித்து ஒரு மாதம் இருக்கும். அவரவர் வேலைகளில் காலம் ஓடுகிறது. முன்பெனில் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். அவரைச் சந்தித்துத் திரும்பும்போதெல்லாம் உற்சாகமாக உணர்வேன். 'நல்ல எழுத்துத்தான் கடைசிவரை நிக்கும்... அக்கப்போர்களைக் கண்டுகொள்ளாதீர்கள்'என்பார்.

bogan said...

உழக்குக்குள் தொலைந்து போவது எப்படி என்ற சிக்கலான விளையாட்டை நாம் எல்லோரும் ரொம்பத் தீவிரமாக விளையாடிக் களைத்துப் போவது போல் தோன்றுகிறது

உண்மைத்தமிழன் said...

எக்கோவ்..

நான் இப்பத்தான் இதைப் படிக்கிறேன்..

முழுசா படிச்சிட்டேன்..!

கலக்கியிருக்கீங்க..! உங்களுடைய அபாரமான ஞாபக சக்திக்கு ஒரு சல்யூட்..!

உங்களோட இந்தத் தப்பாட்டம்தான் எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிச்சிருக்கு சிஸ்டர்..

இனிமே எது எழுதினாலும் இதே மாதிரி தப்பாட்டமாவே எழுதுங்கக்கா..!

யாழ்ப்பாணம் பற்றிய உங்களுடைய பதிவை வரிக்கு வரி மனப்பாடம் செய்வதைப் போல் படிக்க வேண்டியிருந்தது.. அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு..!

எங்களை மாதிரியான சின்னவங்களுக்காக லோக்கல் பாஷைக்கு வந்திட்டீங்கன்னா முடிஞ்சா கோவில் கட்டுறோம்.. இல்லைன்னா ஓட்டு பிளஸ் பின்னூட்டம் போட்டுடறோம்..!

நன்றி..

லேகா said...

தமிழ்,

உங்களின் இக்கட்டுரையை எப்படியோ தவறவிட்டுவிட்டேன்.

//நான் இன்னும் கள்ளி, தவளைகள் குதிக்கும் வயிறு இதெல்லாம் படிக்கலை. கள்ளி நல்லா வந்திருக்கிறதா சொல்றாங்க. படிக்கணும்.”//

ஏன் இந்த விபரீத ஆசை? "தவளைகள் குதிக்கும் வயிறு ",சிறுகதை தொகுப்பை படித்து விட்டு கொண்ட மனஉளைச்சல் கொஞ்ச நஞ்சம் அல்ல..கீழ் உள்ள உங்களின் வரிகள் அந்த தொகுப்பிற்கும் மிக பொருந்தும்.

//இந்த சமூகத்தில இருக்கிற அநேகமான பெண்கள் காமம் என்கிற தீர்க்கமுடியாத கொடிய வியாதியினால பீடிக்கப்பட்டு அங்கேயும் இங்கேயும் அந்தரிச்சு அலமலந்து ஓடித்திரிவதான ஒரு காட்சி என் மனக்கண்ணில வந்துபோச்சு. பெண்களை இந்த நாவல்ல ரொம்ப மலினப்படுத்தியிருக்கிறதா எனக்குத் தோணுது.//

தெளிவாக உங்கள் கருத்துக்களை சொல்லி இருக்கீங்க.நன்றி.

உடல் மொழிக்கதைகள் தமிழுக்கு புதிதல்ல....அவ்வகையில் தற்கால இலக்கியதில் ஜே.பி.சாணக்யாவின் படைப்புகள் சிறந்ததெனப்படுகின்றது எனக்கு.

ஆர். அபிலாஷ் said...

கூட்டங்களை விட உங்கள் அறிக்கைகள் அதிக சுவாரஸ்யம். அதனால் தொடர்ந்து செல்லுங்கள்.