5.21.2010

குருதி பிசுபிசுக்கும் கொலைக்களத்தில் கூத்து, கும்மாளமா? -கவிஞர் தாமரை


குருதி பிசுபிசுக்கும் கொலைக்களத்தில் கூத்து, கும்மாளமா?
தடுக்கவேண்டும் தமிழ்த் திரையுலகம்!


குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறி்த்த கதை பழையது.குழியில் போட்டுப் புதைத்துவிட்டு மேலே ஏறிக் கூத்தாடும் கதை புதியது.வருகின்ற ஜுலை 3,4,5 ஆம் தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இதுதான் அரங்கேறப்போகிறது. ஆம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களை மொத்தமாகக் கொன்று புதைத்தவர்கள் கும்மாளமிடத்தான் ஐய்ஃபா (IIFA) விருது வழங்கும் விழாவைக் கொழும்புக்கு மாற்றியுள்ளனர்.

தென்கொரியத்
தலைநகர் சியோலில் நடப்பதாக இருந்த சர்வதேச இந்தியத் திரைப்படக்கழக விருது விழாவை சந்தடியின்றிக் கொழும்புக்கு மாற்றியதில் இந்திய அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது. கொழும்பின் கையில் படிந்துள்ள தமிழனின் இரத்தக்கறையைத் துடைத்து, தன் பாவத்தையும் மறைத்துக்கொள்வதே அது! இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) இந்த விழாவில் வைத்து பல ஆதாய வாசல்களைத் திறக்கவும், இலங்கைச் சந்தையில் விரிவாக வலைவீசவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழர் பகுதிகளில் மறுநிர்மாணம் என்ற பெயரில் கிடைக்கப்போகும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 'கன்ட்ராக்டுகள்'மீது குறி வைத்துள்ளது. புதிய செல்பேசி சந்தைக்காகவும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மூன்று
நாள் விழாவில் ஒருநாள் படங் காட்டுவதற்காம்! ஒருநாள் வணிக ஒப்பந்தங்களுக்காம்! ஒருநாள் 20 - 20 கிரிக்கெட் கேளிக்கைக்காம்! எல்லாவற்றிலும் கவர்ச்சிக்குக் குறைவைக்காமல் இந்தியத் திரைப்படத் தாரகைகளின் ஆட்டம் பாட்டம் இருக்குமாம்!

ஐய்ஃபாவின்
முதல் விருது விழா 2000-ல் இலண்டனில் நடைபெற்றது. இது புகழையும் பணத்தையும் வற்றாமல் அள்ளிக்கொடுக்கும் அட்சயபாத்திரம் என்று அப்போதே தெரிந்துவிட்டது. அதிலிருந்தே கனடா, அயர்லாந்து, தென்கொரியா போன்ற வளர்ந்த நாடுகள் 'இந்நிகழ்ச்சியை எங்கள் நாட்டில் நடத்துங்கள்'என்று கேட்க ஆரம்பித்துவிட்டன. இந்நிகழ்ச்சியின் மூலமாகத் தங்கள் சுற்றுலாத் துறை வளம்கொழிக்கும் என்பது இந்நாடுகளி்ன் கணக்கு. நான்காண்டுகளுக்கு முன்பே ஐஃப்பா விழாவைத் தொலைக்காட்சியில் கண்டுகளித்தவர்கள் 45 கோடிப் பேர். உலக அளவில் ஆஸ்காருக்கு அடுத்த இடம் ஐய்ஃபாவுக்குத்தான்.

இந்த
விழாவை நடத்த விரும்பும் ஒவ்வொரு நாடும் அதற்காக ஐய்ஃபா அமைப்புக்கு 560 கோடி ரூபாய் தரத் தயாராக உள்ளன. ஐய்ஃபா -2010 விழாவை நடத்துவதற்கான போட்டியில் 2009 இறுதிவரை அயர்லாந்துதான் முன்னணியில் நின்றது. பிறகு தென்கொரியா மூக்கை நீட்டி முந்திக்கொண்டது. 2010 ஜனவரி 26 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தென்கொரிய அதிபர் லீமியூங்பாக் அவர்களிடம் இதற்கான அறிவிப்பை இந்தியத்தரப்பு அதிகாரப்பூர்வமாக வழங்கியது.

2010 பிப்ரவரி 27 வரை இந்தப் பட்டியலிலேயே கொழும்பு இல்லை. பிறகுதான் கொழும்பின் பெயர் அடிபட்டது. உடனே அதற்குத்தான் என்று உறுதியும் செய்யப்பட்டுவிட்டது. "இது இலங்கையின் மாபெரும் உலக சாதனை"என்று சொல்லி மகிழ்கிறார் அந்நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சர் அச்சாலா ஜகோடா.

கொழும்பு ஐய்ஃபா விழாவின் முதன்மைத் தூதர் அமிதாப் பச்சன். அவரும் ஷாருக்கானும் ஐஸ்வர்யாராயும் உலகப் புகழ்பெற்ற பாலிவுட் கலைஞர்களும் மேடையில் தோன்றி, இலங்கையில் 'அழகும் அமைதியும் குடிகொண்டிருப்பதை'உலகமே பார்க்க உதவப்போகிறார்களாம். உலக மக்கள் தீர்ப்பாயம் (people's tribunal) டப்ளினில் வைத்து இலங்கையைப் போர்க்குற்றவாளியாக அறிவித்த இரண்டு மாதங்களில் எப்படி 'அழகும் அமைதியும்' அங்கு குடிகொண்டன என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும்.

தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று அமிதாப் விலகிக்கொண்டதாக ஒரு செய்தி! அது உறுதியானால் மகிழ்ச்சி! மற்றவர்களும் விலகிக்கொண்டு, விழாவை வேறிடத்தில் நடத்த வழி செய்யவேண்டும். (சல்மான்கான் தான் இப்போதைய தூதர் என்பது கடைசிச் செய்தி!)

சர்வதேச
இந்தியத் திரைப்பட விழா என்று பெயருக்குச் சொல்லப்பட்டாலும், பெரும்பாலும் இந்தித் திரைப்பட விழாவாகவே இதுவரை நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை தமிழ்த் திரைக் கலைஞர்களையும் இழுக்கச் சந்தடியின்றி ஒரு முயற்சி நடைபெறுகிறது. மணிரத்னத்தின் 'ராவணன்'கொழும்பு விழாவில் திரையேறும் என்று வந்த செய்தியை அவர் மறுத்திருக்கிறார். ஃபிக்கியின் ஊடக/ வணிகக்கேளிக்கைப் பிரிவின் தலைவர் கமலஹாசன் அவர்களையும் ரஜனியையும் ரஹ்மானையும் கொழும்பு ஆட்கள் தனித்தனியாக அணுகி அழைத்ததாகவும் இவர்கள் மறுத்துவிட்டதாகவும் ஒரு செய்தி. "தமிழன் ரத்தம் படிந்த கொழும்பில் விழா நடத்த நாங்கள்தானா கிடைத்தோம்?"என்று சூடாகக் கேட்டாராம் பிரகாஷ்ராஜ். இந்தச் செய்திகள் எல்லாம் உண்மையாக இருக்கவேண்டும் என்பதே நமது விருப்பம்.

ஆனால்
, இது போதாது. தமிழ்த் திரைப்பட அமைப்புகள் உடனடியாக களமிறங்கி, இந்திய அளவில் யாரும் கொழும்பு விழாவில் கலந்துகொள்ள விடாமல் செய்ய வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலையைத்தான் நம்மால் தடுக்கமுடியவில்லை. கொலைக்களத்தில் கூத்தடிப்பதையாவது தடுக்கலாந்தானே? இது நம் தமிழுறவுகளுக்கு ஆறுதலாக மட்டுமல்ல; கொழும்புக்கும் அதன் இந்தியக் கூட்டாளிகளுக்கும் நம் உணர்வுகளைச் சொல்லி எச்சரிப்பதாகவும் அமையும் அல்லவா?

இன
அழிப்புப்போரை நிறுத்தக்கோரி தமிழ்த்திரையுலகம் போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. இராமேசுவரத்திற்குச் சென்று சிங்களவனுக்குக் கேட்கட்டும் என்று குரல்கொடுத்தோம். நடிகர்கள், தொழிலாளர்கள், சின்னத்திரைக் கலைஞர்கள் என்று அடுத்தடுத்து உண்ணாவிரதப் போராட்டம் செய்தோம். பாரதிராஜா,செல்வமணி, மணிவண்ணன், சீமான், அமீர் போன்றவர்கள் திரையுலகின் முழு வலிமையோடும் தமிழக மக்களைத் தட்டியெழுப்பப் பாடுபட்டதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எல்லாமே முடிந்துவிட்டது என்று சோர்ந்துவிடவோ ஓய்ந்துவிடவோ கூடாது. ஐய்ஃபா விழா கொழும்பில் நடைபெற முடியாமல் செய்ய நம்மால் முடியும். கோலிவுட்டின் கோரிக்கையை பாலிவுட்டால் அலட்சியப்படுத்த முடியாது.

நிறவெறி தாண்டவமாடிய தென்னாபிரிக்க வெள்ளை அரசைத் தனிமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த அதே இந்தியாதான், இப்போது தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசு உலகில் தனிமைப்பட்டுவிடாமல் பாதுகாத்து வருகிறது. இந்தியா செய்வது பச்சை அயோக்கியத்தனம் என்று உணர்த்த இது சரியான தருணம், சரியான வாய்ப்பு! விழிப்புடன் செயற்பட வேண்டிய தருணத்தில் தூங்கிவிட்டுப் பிறகு என்ன செய்யவியலும்?

சீனாவில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்துக்கான சுடர் இந்தியா வந்தபோது, அதை ஏந்தி ஓடிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பெயர்களெல்லாம் மறந்துவிட்டது. திபெத்தின் சீன அரசு நடத்திவரும் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சுடர் ஏந்த மறுத்த இந்தியக் கால்பந்து வீரர் பெய்ச்சுதங் பாட்டியாவின் பெயர் எல்லோருக்கும் நினைவிருக்கிறது.

பாட்டியாவால்
சீன ஒலிம்பிக்கைத் தடுக்க முடியவில்லை. ஆனால், தமிழ்த்திரைப்படக் கலைஞர்கள் மனது வைத்தால் ஐய்ஃபா -2010 கொழும்பில் நடைபெறாமல் தடுக்க முடியும்.

செய்தக்க
அல்ல செயக்கெடும் - செய்தக்க
செய்யாமை
யானும் கெடும்

என்ற குறளை நினைவுபடுத்தி, என் சக திரைப்படக் கலைஞர்களை ஆதரவு தருமாறு அழைக்கிறேன்.

சென்னை
-24
15-05-2010



தங்கள்
உண்மையுள்ள
தாமரை

11 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ எத்தனை எத்தனை அரசியல் விளையாட்டுக்கள்.. :(

Bibiliobibuli said...

///கோலிவுட்டின் கோரிக்கையை பாலிவுட்டால்அலட்சியப்படுத்த முடியாது.///

செய்வார்களா? கூடவே Channel 4 மிக அண்மையில் வெளியிட்ட வீடியோ காட்சியையும் சேர்த்தே கோலிவுட், பாலிவுட் இரண்டையும் பார்க்கச்செய்தால் நல்லது. எங்கேயோ இருக்கிறவன் முள்ளிவாய்க்காலில் முடிந்துபோன ஈழத்தமிழனின் சாவுக்கு நீதி கேட்க, இந்திய திரைப்பட உலகம் அங்கு சென்று கூத்தடித்தால்..... எனக்கு தலையில் அடித்துக்கொள்ளத்தான் தோன்றுகிறது. மீண்டும், மீண்டும் ஈழத்தமிழன் விடயத்தில் வரலாற்றுப்பிழை, அரசியல் முதல் சினிமா வரை. Channel 4 சர்வதேசத்திற்கும் இலங்கையைப் பற்றி படம் காட்ட, இவர்கள் இலங்கைக்கு படம் காட்டட்டும்.

தமிழ்நதி said...

தமிழகத்தில் அரசியல் விளையாட்டுக்குப் பஞ்சமா முத்துலெட்சுமி...? கபடி, கண்ணாமூச்சி, மல்யுத்தம் எல்லாம் பார்க்கலாம்:)

ரதி,

உங்கள் உள்ளக்குமுறலைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த வீடியோவைத் தேடினேன். காணக் கிடைக்கவில்லை. முடிந்தால் இணைப்புச் சுட்டி அனுப்பிவையுங்கள்.

"Channel 4 சர்வதேசத்திற்கும் இலங்கையைப் பற்றி படம் காட்ட, இவர்கள் இலங்கைக்கு படம் காட்டட்டும்."

யாருக்காவது யாராவது படம்காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அரசியலில் இதுவெல்லாம் சகஜமாம்:)

padmanabhan said...

கவிஞரின் அக்கினிக் குஞ்சின் தீ பரவட்டும்

Bibiliobibuli said...

http://www.lankasrinews.com/view.php?2b34OXJ4a4df54m34a0IAQK3e23OYBBacd35dmA4e0dK0Mmcce0ccYBZ2cdeRlmo30


http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bclid=0&bctid=86382573001

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=3486

மூன்று சுட்டிகள் கொடுத்திருக்கிறேன். முயற்சிசெய்து பாருங்கள். ஆனால் பார்க்க முதல் நெஞ்சை கல்லாக்கி கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.

தமிழ்நதி said...

பத்மநாபன்,

கவிஞரும் இந்த வலைப்பூவை வாசித்துவருகிறார். உங்கள் வாழ்த்து அவரைச் சென்றடையும்.

ரதி,

நான் இந்த வீடியோவைப் பார்த்துவிட்டேன் ரதி. வேறு ஏதோ என்று நினைத்தேன். (வேறும் வராது என்று இல்லை அல்லவா?)மினக்கெட்டு இணைப்புச் சுட்டி அனுப்பியமைக்கு நன்றி. இந்த உலகம் இன்னமும் சத்தியம், நேர்மை, ஜனநாயகம், மயிர் மட்டையெல்லாம் கதைத்துக்கொண்டிருக்கிறது. காரணமானவர்கள் உருப்படமாட்டார்கள் என்று சாபம் இட்டுப் பலிக்கப்போகிறதா என்ன? அதே வலியை அனுபவிக்கும் காலம் வரும். வரவேண்டும். சாதாரண மக்களைத் தவிர்த்து இந்த 'ஏவல்'பேய்கள் மடியும் நாள் வரவேண்டுமென்பதே என் பிரார்த்தனை.

ராஜா சந்திரசேகர் said...
This comment has been removed by the author.
ராஜா சந்திரசேகர் said...

சக திரைப்படக் கலைஞர்கள் இதன் ஆழத்தையும் அழுத்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.இணைந்து செயல்பட வேண்டும்.

சின்னப்பயல் said...

"ஊர் ரெண்டுபட்டா" தான் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்..
இங்கே நடக்கிறது என்னவோ தலகீழ்..

கே.பி. சுரேஷ் said...

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஜால்ரா அடிப்பது மட்டுமே கனவு தொழில்வாசிகளின் யதார்த்தம். கடந்த ஓராண்டில் நடந்த பாராட்டு விழாக்கலே சாட்சியம்.

எல்லா சினிமா நடிகர்களும், ஏனைய சினிமா சம்பந்தமானவர்கள் எல்லாம் சம்பிராதய உண்ணாவிரதம், போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள். தற்போதைய அவர்களின் நிலைபாடும் தமிழ் சினிமாவின் தற்கால வெற்றிக்கு அடிநாதமாக விளங்கும் வெளிநாட்டு வணிகத்தில் (புலம் பெயர் ஈழ தமிழரின் பணத்தை) இழக்க விரும்பாமை மட்டுமே.

இவர்களே இப்படி என்றால், bolywood நடிகர்களை என்னவென்று சொல்ல. இது சுயநல சந்தர்ப்பவாதிகளின் உலகம்.
இவர்களை நம்பவேண்டாம்.

அன்புடன்
கே.பி. சுரேஷ்

அன்புடன் நான் said...

தாமரை அவர்களுக்கு நன்றி.
பகிர்வுக்கும் நன்றி.