Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

4.14.2008

இது இப்படி முடிந்தது.....



எல்லா நாட்களும் ஒன்றுபோலில்லை. கடந்த வாரம், மனசில் விழுந்த நெருப்புக்கங்காய் கனன்றுகொண்டேயிருந்தது. ஆதங்கம், பரபரப்பு, ஆற்றாமை, வஞ்சிக்கப்பட்ட துக்கம், பேசப்படுவதனாலாய சிறுபிள்ளைத்தனமான உள்ளார்ந்த கிளர்ச்சி, மின்னஞ்சல் ஆறுதல்கள், ஆலோசனைகள், அனானிகளின் மிரட்டல்கள் எல்லாம் ஏறக்குறைய இன்று ஓய்ந்துவிட்டன. அடிக்கடி உயிர்த்துயிர்த்து அழைத்துக்கொண்டிருந்த தொலைபேசி மறுபடி சடப்பொருளாகிக் கிடக்கிறது. என் பெயரில் அதிகப்பிரசங்கித்து சர்ச்சை வழி அடையாளப்படுத்திய நண்பருக்கும், எனது மறுப்பினை வெளியிட்டு ‘மீள் கருணை’ காட்டிய ஆனந்த விகடனுக்கும் (குறிப்பாக கண்ணனுக்கு) பெயர் குறிப்பிட முடியாத சில நண்பர்களுக்கும், வீழ்ந்துவிடுவேனோ என்று அஞ்சுகிற போதெல்லாம் தாங்கிப்பிடித்து தலைகோதி, தொடர்ந்து எழுதத் தூண்டும் என் சக பதிவர்களுக்கும் நன்றி.

பரபரப்பிற்காளாக்கியவர் தவிர்த்து வேறெவரையும் இழக்காமல் இக்கோடையைக் கடந்தேன் என்பதே எஞ்சியிருக்கக்கூடிய மிகப்பெரிய ஆறுதல். அந்த நேர்காணலை காலம் தாழ்த்தி வாசித்து, விளக்கத்தை அறியாத ஒரு சிலர் இன்னமும் மின்னஞ்சல் வழியாக ‘ஏன் நாயே இப்படிச் சொன்னாய்?’என்ற தொனிப்படக் கேட்கும்போது மட்டும் ரணம் வாய்பிளந்து மூடுகிறது.

பெரிதாக ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லைத்தான். எனது பெயருக்கு அருகில் புதிதாக அடைமொழி சேர்ந்திருக்கக்கூடும். ஏதோவொரு மதுச்சாலையில் எல்லா அரசியலும் பேசி ஓய்ந்த கணமொன்றில் யாரோவொருவரால் எனது பெயர் குறிப்பிடப்பட்டு ஆரம்பிக்கப்படும் உரையாடலில் ‘ஆனந்த விகடன்’என்ற பத்திரிகை குறிப்பிடப்படுவதற்கான சாத்தியங்கள் அநேகம். நியாயம்-அநியாயம், அறம்-கயமை, சுதந்திரம்-வன்முறை என்பதன் பொருளெல்லாம் அவரவர் அளவுகோல்களின்படி மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஓங்கியிருக்கும் கையின் அளவினதாயிருக்கிறது அறம்.


16.04.08 திகதியிடப்பட்ட விகடனில் 177ஆம் பக்கத்தில் ‘நான் என்ன சொன்னேன்’என்ற தலைப்பின் கீழ் எனது விளக்கம் வெளியாகியிருக்கிறது. விகடன் அதைப்பற்றி என்ன நினைக்கிறது என்பதையும் தெரியப்படுத்தினால் நன்று என நினைத்தேன். ஆனால்,எனது மறுப்பைப் பிரசுரிப்பதே விகடனின் பெருந்தன்மையையும், வருத்தத்தையும் உணர்த்துவதற்குப் போதுமானதாயிருக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள். ‘போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’, ‘இந்தளவில் திருப்தி கொள்’, ‘மற்றவர்களுக்கு இதுகூடக் கிடைக்கவில்லை’என்றெல்லாம் சொல்லப்பட்டன. சரிதான்!ஓரளவு நீதி கிடைத்தது என்று ஒதுங்கவேண்டியதுதான். ‘அதுவுமில்லை’ என்று கைவிரித்தாலும் மேற்கொண்டு செய்வதற்கொன்றுமில்லை. பல சமயங்களில் வாளாதிருக்க விதிக்கப்பட்ட வாழ்வெமது.

நேர்காணல் வெளியாகியதும் இரண்டு நிலைப்பாட்டுடன் தொலைபேசி அழைப்புகள் வந்தன. “நன்று சொன்னீர்கள்”என்றவர்கள் ஒருபுறம். “எப்படி இப்படிச் சொல்லப்போயிற்று?”என்றவர்கள் மறுபுறம். “நான் சொல்லவில்லை”என்ற சுயபுராணம் கேட்டதும் “அதுதானே நீங்கள் அப்படிச் சொல்லக்கூடியவரில்லையே….”என்றார்கள்.
விகடன்.காம் இல் வந்து கருத்துத் தெரிவித்த சிலர் “நீங்கள் சென்னையிலேயே வாழ்ந்துகொண்டு எப்படிச் சென்னையைப் பற்றி குறைத்துச் சொல்லலாம்?”என்று கேட்டிருந்தார்கள். இன்று காலையில் வந்த மின்னஞ்சலில்கூட
I WOULD APPRECIATE IF YOU CAN ATLEAST CLARIFY YOUR POINT OF VIEW WITHOUT AFFECTING OR OFFENDING TAMIL WRITERS AND CHENNAI.
என்றும்
BEING IN CHENNAI AND TALKING ILL OF CHENNAI IS NOT GOOD COURTESY.
என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தவிர,அனானியாக நிறைய மிரட்டல்கள் வந்தன. அதன் சாரமானது "அகதி நாயே! உன் ஊருக்கு ஓடிப்போ"என்பதாக அமைந்திருந்தது. அவற்றை நண்பர்கள் கேட்கும் பட்சத்தில் பிரசுரிக்கவியலும். இதற்கெல்லாம் நான் மிரண்டு போய்விடவில்லை. என்றாலும், சுகதுக்கம் கடந்த பரமாத்மாவில்லை இது. அதை வாசிக்கும் கணத்தில் காரணமற்றுப் பாதிக்கப்படும் வேதனை பொங்கியது. என்னை இவ்வாறான இக்கட்டில் சிக்கவைத்து ஏதோவொரு இலாபம் தேடவிளைந்த நபரின் கண்களைப் பார்த்து 'திருப்தியா?'என்று கேட்கத் தோன்றுகிறது.

"சென்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?"என்ற கேள்விக்கு நான் அளித்த பதில் “நிம்மதியான உறக்கம், உணவு, அமைதியாக எழுதக்கூடிய சூழல். ஆனால், சென்னை என்பதும் ஒரு வேடந்தாங்கல்தான். எங்கோ தொலைவில் இருக்கும் வீட்டிற்குத் திரும்புவதற்கான காத்திருப்பு, ஏக்கம் மனதுள் எப்போதுமிருக்கிறது.”என்ற எனது பதிலை, இக்கோடை விழுங்கித் தொலைத்ததா நானறியேன். எனது வலைப்பூவில் இடப்பட்டிருந்த 'சென்னை என்றொரு வேடந்தாங்கல்'என்ற கட்டுரையிலிருந்து உருவியெடுக்கப்பட்ட ஒரு சில வாக்கியங்களே விடையாக அமைந்திருக்கக் கண்டேன். "அவளது கணவன் இறந்துபோய்விட்டான். பிள்ளைகள் பசியில் கதறின. வேறு வழியின்றி அவள் திருட வேண்டியதாயிற்று. அவள் இப்படித்தான் திருடியானாள்"என்றொரு பந்தியின் முதற்பகுதியை நீக்கிவிட்டு கடைசி வார்த்தையை எடுத்துக்கொண்டால் "அவள் திருடி"என்றே வரும். இத்தகைய கைங்கரியத்தைத்தான் என்னை நேர்கண்டவர் செய்திருக்கிறார்.

"நான் பாதிக்கப்பட்டேன்", "மன உளைச்சலுக்குள்ளானேன்", "திரிக்கப்பட்ட வார்த்தைகளால் விரோதிகளைப் பெற்றுக்கொண்டேன்"என்றெல்லாம் புலம்புவது வெறுத்து, சலித்துப் போய்விட்டது. சொல்லக்கூடியதெல்லாம் ஒன்றுதான்.

எல்லாப் புனிதங்களும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றபோதிலும், எழுத்தின் மீது இன்னமும் மதிப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. அது கண்ணுக்குப் புலப்படாத அறத்தின் இழையால் இயக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். தொழில் என்று பார்த்தால்-கள்ளச்சாராயம் காய்ச்சுவதைக் காட்டிலும், கடத்தல் செய்வதைப் பார்க்கிலும் எழுதுவது ஏதோவொரு வகையில் பெருமிதந் தரத்தக்கதே. எழுத்தினை அடிப்படையாகக் கொண்டியங்கும் பத்திரிகையாளர்கள் தங்கள் வயிற்றையும் வசதிகளையும் மட்டும் கருத்திற்கெடாது, சக மனிதர்களின் இதயங்களையும்(மனசு இதயத்தில் இருக்கிறதெனில்)கவனத்திற் கொள்ள வேண்டுமென்பதே என் விருப்பம்;வேண்டுகோள். செவ்வி வழங்குபவர்களும் இனி கூடுதல் அவதானத்தோடு இருக்க வேண்டுமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

பிற்குறிப்பு: பதிவின் நீளம் கருதி, வாசிப்பவர்களை சலிப்பிற்காட்படுத்த மனமின்றி என்னால் தட்டச்சி அளிக்கப்பட்ட ‘உண்மையான’செவ்வியையும், விகடனில் வெளியாகியிருந்த எனது மறுப்பையும் இதில் போடவில்லை.



4.03.2008

ஆனந்த விகடன் நேர்காணல்:தன்னிலை விளக்கம்



“கருத்து வெளிப்பாட்டுக்கான சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கும் கருத்துக்களுக்கான சுதந்திரம் மட்டுமல்ல. நம்மை அதிர்ச்சி அடையச் செய்யும் கருத்துக்களுக்கான சுதந்திரமும்கூட” –நோம் சோம்ஸ்கி

ஏப்ரல் 9,2008 எனத் திகதியிடப்பட்ட இவ்வார ஆனந்த விகடனில் எனது நேர்காணல் வெளிவந்திருக்கிறது. அதை வாசித்த எனது நண்பர்கள் அதிர்ச்சியடைந்திருக்கக்கூடும். அந்த அதிர்ச்சிக்கு நானும் விதிவிலக்கல்ல. அந்த நேர்காணலில் எனது பதில்கள் திரிபுபடுத்தப்பட்டிருந்த விதத்தைப் பார்த்து வியந்துபோனேன். 'ஊடக சுதந்திரம்' என்ற சொல்லாடல் பரவலாகப் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் 'ஊடகங்களின் வன்முறை'யைப் பற்றிப் பேசவேண்டிய கடப்பாடும் எமக்கு இருக்கிறது.

'பிரச்சனை' என்று எழுதும்போதெல்லாம் 'சுய இரக்கம்','கழிவிரக்கம்'போன்ற வார்த்தைகள் நினைவில் வந்து தடுக்கின்றன. ‘எனக்குக் கொஞ்சம் இரக்கம் தா’என்று கைதாழ்த்தி கண்ணீரைக் கறப்பது போன்றதொரு சலிப்பே மேலிடுகிறது. ஈழத்தமிழர்கள் மீதான முன்தீர்மானங்கள், விமர்சனங்களால் அழவேண்டிய சமயத்தில் கூட ஒருமுறை யோசித்தபின்னரே அழுகையைத் தொடரவேண்டியிருக்கிறது. எனினும், மேற்குறித்த நேர்காணலில் சொல்லப்பட்டிருந்த விடயங்கள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

‘தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் கோழைகள்’என்ற அதிரடியான தலைப்பொன்றுடன் அந்த நேர்காணல் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ‘உலகில் நடக்கும் ஒடுக்குமுறைகள் பற்றி பெண் கவிஞர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள். ஆனால், 25ஆண்டுகளாக ஈழத்தில் நடக்கும் படுகொலைகள் பற்றி அதிகமான பதிவுகள் இல்லையே… ஏன்?’என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ‘பெண் கவிஞர்கள் மட்டுமென்றில்லை. ஆண் படைப்பாளிகளில் கவிஞர் அறிவுமதி, இன்குலாப் போன்றோரைத் தவிர்த்து அநேகமானோர் எழுதுவதில்லை. காரணம் ஈழப்பிரச்சனையையும் பயங்கரவாதத்தையும் ஒன்றெனப் பார்க்கும் தமிழகத்து அரசியல் சூழ்நிலையால் இருப்புக் குறித்த அச்சம் (நான் உட்பட) யாவருக்கும் இருப்பதனால் அது பற்றி எழுதுவது குறைவு. ஆனால், சில கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன்.’என்றே பதிலளித்திருந்தேன்.

மேலும் அவரோடு உரையாடும்போது ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிய வைகோ,சுபவீ போன்றவர்களுக்கு நேர்ந்த கதி உங்களுக்குத் தெரியுமல்லவா…?இவ்விதமிருக்க எழுத்தாளர்கள் எப்படி எழுத முன்வருவார்கள்?’ என்று கேட்டிருந்தேன். ‘தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் அனைவரும் கோழைகள்’என்ற பிரயோகம் என்னால் மேற்கொள்ளப்படவில்லை. ஈழப்பிரச்சனையைப் பற்றி எழுதுமளவிற்கு அவர்கள் துணிச்சலற்றவர்களாக இருக்கலாம். ஆனால், அதை ஒரு வெகுஜன ஊடகத்தின் நேர்காணலில் சொல்வது எவ்வளவு அறிவுடைமை என்பது எனக்குத் தெரியும். ‘உண்மைகளை உரத்துப்பேச வேண்டியது எழுத்தாளர்களின் கடமை’ என்பது எந்தளவிற்கு நடைமுறைச் சாத்தியம் என்பதை அறிந்தவர் அறிவர். ‘உண்மை பேசுகிறேன் பேர்வழி’என்று என் தலையை நானே கொண்டுபோய் தண்டவாளத்தில் வைக்கிற தைரியமுள்ள ஆளாக இருந்திருந்தால் ஈழத்திலேயே இருந்திருப்பேன். இப்படி உயிரை முடிந்துகொண்டு ஊரூராக ஓடிக்கொண்டிருக்க மாட்டேன். வாசகர்களைக் கவரக்கூடிய தலைப்புகளை வைக்கவேண்டுமென்பதற்காக நேர்காணலை அளித்தவர்களையே அதிரவைப்பது எந்த அறத்தைச் சார்ந்ததென்று எனக்குப் புரியவில்லை.

மேலும், “ஈழத் தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிலை என்ன?”என்ற கேள்விக்கு நான் அளித்த பதில் முழுமையாக விழுங்கப்பட்டு, நேர்காணலைச் செய்தவர் என்ன சொல்ல விரும்பினாரோ, அதுவே பதிலாகப் பதியப்பட்டிருக்கிறது.அந்தப் பதிலில் பதிப்பகங்களுக்கும் எனக்கும் இடையில் சிண்டு முடிந்துவிட்டிருக்கிறார் என்னை நேர்கண்டவர்(?). புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் புத்தகம் போடவேண்டுமென்று தமிழகத்தின் பதிப்பகங்களை நாடும்போது, அவர்களிடம் ஒன்றுக்கு மூன்று மடங்காக காசைக் கறந்துகொண்டு புத்தகம் போடும் அநியாயம் இங்கு நடக்கிறது என்ற தகவலை(?) எனக்குச் சொன்னவரே அவர்தான். ‘எனது புத்தகங்களைப் போட்ட இரண்டு பதிப்பகங்களுமே அவ்வாறு என்னிடம் காசு பிடுங்கவில்லை. அதனால் எனக்கு அந்த அனுபவம் கிடையாது. நீங்கள் சொல்வது உண்மையெனில் எவ்வளவு வருந்தத்தக்கது. ஏனெனில், வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்கள் அத்தனைபேரும் ‘வைற் காலர்’வேலை பார்க்கிறவர்கள் இல்லை. அங்கு கழிப்பறை கழுவி, கோப்பைகள் கழுவி உழைக்கிறவர்கள்கூட இருக்கிறார்கள். அப்படியாக உழைக்கும் பணத்தை இவ்வாறு பதிப்பகங்களிடம் இழப்பது வருந்தத்தக்கது’என்று நான் கூறியது எப்படித் திரிபுபடுத்தப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். “புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் வேட்டிகளை இங்குள்ள பதிப்பகங்கள் உருவிக்கொண்டுதான் அனுப்புகின்றன”என்று எழுதப்பட்டிருக்கிறது.
ஊடக ‘கவர்ச்சி’க்காக ஈழத்தமிழர்களின் வேட்டிகளை அவர் உருவியிருக்க வேண்டாம்.
குறிப்பிட்ட நேர்காணலை வாசிக்கும் எவருக்கும் ஈழத்தமிழர்கள் யாவரும் வெளிநாடுகளில் கழிப்பறையும் கோப்பையும் கழுவிக்கொண்டிருப்பதான ஒரு சித்திரம்தான் தோன்றும். எத்தொழிலும் இழிந்தது அல்ல. எனினும், பல்லாண்டுகளுக்கு முன்பே புலம்பெயர்ந்து நல்ல நிலைக்கு வந்துவிட்ட பல ஈழத்தமிழர்களின் மனதில் இந்தப் பதில் எத்தகைய உணர்வலைகளை எழுப்பும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
"சென்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" என்ற கேள்விக்கு என்னால் அளிக்கப்பட்ட பதிலையும் அச்சியந்திரம் விழுங்கிவிட்டிருக்கிறது. பதிலாக, எனது வலைப்பூவில் பதியப்பட்டிருக்கும் 'சென்னை என்றொரு வேடந்தாங்கல்'என்ற பதிவிலிருந்து சில வரிகளை எடுத்து அதையே பதிலாக்கியிருக்கிறார்கள். அதுவொரு கட்டுரையின் பகுதி. தலையையும் காலையும் துண்டித்துவிட்டால் முண்டம் எவ்வளவு அசிங்கமாகக் காட்சியளிக்குமோ அவ்வளவு கேவலமாகப் பல்லிளிக்கிறது அந்தப் பதில். எனது வலைப்பூவைப் பார்க்கவேண்டும் என்று கேட்டபோது கேள்விகளுக்கான பதில் அதிலிருந்தும் எடுக்கப்படும் என்பது என்னிடம் தெரிவிக்கப்படவில்லை. நினைத்துப் பார்க்கும்போது, 'என்னே வஞ்சனை'என்றொரு கோபச்சிரிப்புத்தான் வருகிறது. பத்திரிகையாளர்களை இவ்வாறான சம்பவங்கள் தரமிறக்குகின்றன.

ஒப்பீட்டளவில் பார்க்கும்போது ஆனந்த விகடன் ஈழத்தமிழர்கள் பற்றி ஓரளவிற்கேனும் கரிசனையோடிருக்கிற பத்திரிகை. தமிழ்நாட்டு வாசகர்களிடையே ஈழத்தமிழ் படைப்பாளிகளை இனங்காட்டிக்கொண்டிருக்கிற பத்திரிகை என்று சொல்வதுகூட தவறாக இருக்கமுடியாது. இனப்பிரச்சனையைப் பயங்கரவாதப் பிரச்சனையாகப் பார்க்கிற காலகட்டத்தில் துணிந்து சில விசயங்களைச் சொல்லவும் செய்திருக்கிறது என்ற வகையில் எங்களுக்கு ஆனந்த விகடன் மீது மதிப்பிருக்கிறது. ஆனால்,வளர்ந்துவரும் ஒரு படைப்பாளியை சக படைப்பாளிகளுடனும் பதிப்பகங்களுடனும் சிண்டு முடியும் வகையில் அந்த நேர்காணலில் அளிக்கப்பட்ட சில பதில்கள் திரிபுபடுத்தப்பட்டிருந்தன என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் எவர் மனமும் புண்படுத்தப்பட்டிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். இதற்கான எதிர்வினையை எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பியிருக்கிறேன். அவர்கள் அதை முழுமையாகப் பிரசுரிப்பார்கள் என்றே நம்புகிறேன்.
என்னை நேர்காணல் செய்தவர் ஓரளவிற்கு எனக்குப் பரிச்சயமானவர் என்பதால், அவரிடம் குறைந்தது பத்துத் தடவைகளாவது சொல்லியிருப்பேன். "தயவுசெய்து நான் சொல்லாததை எழுதி என்னைச் சிக்கலில் மாட்டிவிடாதீர்கள்."என்று. ஏனெனில், நான் ஒரு விடயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் அதில் சர்ச்சைக்குரிய பகுதியை மட்டும் சடாரென்று பிடித்துக்கொண்டு கண்கள் மினுக்கிட (அது அந்த வாக்கியத்தின் ஒரு பகுதியாகவே இருக்கும்) 'நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள் என்று எழுதட்டுமா?'என்பார். இவர் என்னைச் சிக்கலில் மாட்டிவிடப்போகிறார் என்ற உள்ளுணர்வு எனக்கு அப்போதே இருந்தபடியாற்தான் நான் அவ்வாறு பலதடவைகள் கேட்கவேண்டியிருந்தது. நான் இவ்வாறு கோபத்துடன் எதிர்வினையாற்றுவதற்கு, 'இத்தனை சொல்லியும் இந்த மனிதர் இப்படிச் செய்துவிட்டாரே'என்ற விசனமும் காரணம். 'என்ன நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்களே...'என்று வரும் தொலைபேசி அழைப்புக்களுக்குப் பதிலளிக்கும்போதெல்லாம்,
'தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி
வாடித் துன்பமிகவுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து.....
......................................................................
என்ற வரிகளே நினைவில் வருகின்றன. பாரதியாரின் வயிற்றெரிச்சலை எவரோ இதுபோன்றதொரு நாளில் கிளறிவிட்டிருக்கவேண்டும்.
“வன்முறை நமது சமூகத்தில் காட்டுச்செடி போல பரவிவிட்டது. வன்முறை என்பது வன்முறையாளர்களின் குற்றம் மட்டுமே என்று கூறிவிட முடியாது. தன்மீது அவிழ்த்துவிடப்படும் வன்முறையை அமைதியாக ஏற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் இந்தக் குற்றத்தில் பங்கு உண்டு”
என்ற கனிமொழியின் வார்த்தைகளோடு நான் முழுமையாக உடன்படுகிறேன். ஒருவரை அடிப்பதும் கொல்வதும் மட்டுமே வன்முறை ஆகாது. ஒருவரது உதடுகள் வாயிலாக தனது கருத்தைப் பேச முற்படும் ஊடகங்கள் செய்வதும் வன்முறைதான். அதைப் பார்த்துக்கொண்டு மறுப்புத் தெரிவிக்காது மௌனமாக இருப்பது வன்முறைக்குத் துணைபோவதாகிவிடும். பரபரப்புக்காக அடுத்தவரின் உணர்வுகளைப் பகடைக்காயாக்கும் மனச்சாட்சியற்ற ஊடக கலாச்சாரம் மாறும், மறையும் காலம் எப்போது? வணிக பத்திரிகைகளின் பெருந்தீனிக்கு தனிப்பட்ட மனிதர்களின் உணர்வுகள் இரையாக்கப்படுவது பற்றிய உரத்த உரையாடல் இனியேனும் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

தமிழ்நதி

3.06.2007

நேர்காணல்: குட்டி ரேவதி- நிறைவுப்பகுதி

சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர் குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம்(2000), முலைகள்(2002),தனிமையின்; ஆயிரம் இறக்கைகள்(2003) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்திருக்கிறார். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து,பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவரும் இவர், பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

“உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வெளி அறையின் தனிமைதான்”

தமிழ்நதி: இப்போதிருக்கும் இதே வீச்சுடன் பெண்கள் எழுதிக்கொண்டிருந்தால் அடுத்தடுத்த தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

குட்டி ரேவதி:கண்டிப்பாக நம்புகிறேன். இப்போது நாம் எழுதிக்கொண்டிருக்கும் இந்த உடல் அரசியல் என்பதனோடு மட்டும் இந்த வீச்சு தேங்கிப்போய் நின்றுவிடாது. அதற்கான மாற்றத்தை இப்போது உணரமுடிகிறது. முன்னரே நான் குறிப்பிட்டதுபோல முன்பு சிவசங்கரி,வாஸந்தி போன்ற மேட்டிமைசாதியினர்தான் எழுதிக்கொண்டிருந்தார்கள். இப்போது பார்த்தால் விளிம்புநிலையில் இருக்கிறவர்களும் அதிகமாக எழுதுகிறார்கள். வேறு வேறு பின்னணிகளில் இருந்து எழுத வருகிறவர்கள் தாம் சார்ந்த பின்னணி சார்ந்த அரசியல் விடயங்களையும் எழுதக்கூடிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. இது இப்போதிருப்பதிலிருந்து வேறொரு கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

இன்னுமொரு விடயம் என்னை மிகவும் பாதித்தது. அதாவது, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை. எப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் நான் இந்தப் பிரச்சனையை முன்வைத்துப் பேசப் பின்னின்றதில்லை. அதைப் பற்றி நான் பேச நினைக்கிறபோதெல்லாம் அப்படியொரு விஷயம் இருக்கிறதா என்ன என்று கேட்பார்கள். உதாரணமாக இப்போது நொய்டாவில் நடந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்த பிறகு ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். நான் இதைக் குறித்து சில களஆய்வுகள் செய்திருக்கிறேன். ஐந்து ஆறு வயதுடைய பெண்குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியபின் கொலை செய்வதென்பது சாதாரணமாக நடந்திருக்கிறது. கருப்பை சீரழிந்த நிலையிலெல்லாம் நான் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். தன்னுடைய பாலியல் அடையாளத்தைக் கூடப் புரிந்துகொள்ளவியலாத குழந்தையை உபயோகித்துக்கொள்வது பல வீடுகளில் நடந்துகொண்டுதானிருக்கிறது. குழந்தையானது அதை உடல்ரீதியாக அசௌகரியமாக உணருமேயன்றி என்ன நடந்ததென்று சொல்லக்கூடத் தெரியாமலிருக்கும். தவிர, தந்தை போன்ற தமது நெருக்கமானவர்கள் இவ்விதம் நடந்துகொள்ளும்போது அதை மறுத்து ஒன்றும் சொல்ல முடிவதுமில்லை. இதுகூட ஆணாதிக்கத்தினுடைய ஒரு வடிவம்தான். பெண்ணியத்தினுடைய நீட்சி எவ்விதம் அமையவேண்டுமெனில், குழந்தைகள் மீதான இந்தப் பாலியல் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய அளவிற்கு வளரவேண்டும். ஆண் தனது பாலியல் ரீதியான அதிகாரத்தைப் பிரயோகிக்கக்கூடிய ஒரு உயிராகப் பெண் எப்போதும் இருப்பது என்பது விசனத்திற்குரியது.

என்னை ஒரு கூட்டத்திலே ஒரு ஆண் கேட்கிறார்: “இந்தியாவில் எத்தனையோ வகையான பிரச்சனைகள் இருக்கின்றன. அணுவாயுதப் பிரச்சனை இருக்கிறது. பயங்கரவாதம்,முதலாளித்துவம்,ஏகாதிபத்தியம் போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் விடவா பெண்ணியம் உங்களுக்குப் பெரிதாகப் போய்விட்டது…?”என்று. அதற்கு நான் சொன்னேன் “நீங்கள் சொன்னவையெல்லாம் பிரச்சனைகள்தான். ஒத்துக்கொள்கிறேன். ஆனால், பெண்ணியம் என்பது பிரச்சனை கிடையாது. அதுவொரு கோட்பாடு,பயிற்சி முறை. ஆணும் பெண்ணும் இணக்கமாக வாழ்வதற்கான ஒரு பாதையை உருவாக்குவது. அது எப்படிப் பிரச்சனையாகும்…?”என்று கேட்டேன். முதலாளித்துவத்தைச் செயற்படுத்துவதில் பெண் எங்கு வருகிறாள் என்பது எனக்குப் புரியவேயில்லை. அதற்கும் பெண்களுக்கும் என்ன சம்பந்தம்…? எங்கோ ஓரிடத்தில் ஒரு மேசையைச் சுற்றியமர்ந்து நான்கு ஆண்கள் திட்டமிடுவதில் நமக்கென்ன பங்கு..?

இன்னொரு விடயம், நான் இந்தியாவிற்கான பெண்ணியம் என்று சொல்வது வந்து தலித் பெண்ணியம். தலித் பெண்ணியம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான பெண்ணியம் என்று பொருளல்ல. ‘சாதீயமற்ற பெண்ணியம்’என்பதைத்தான் சொல்ல வருகிறேன். எல்லா மட்டங்களிலும் சாதியினால் அறையப்பட்டிருக்கும் பெண்களை விடுதலை செய்வதுதான் ‘தலித் பெண்ணியம்’என்பதன் பொருள். இந்தியாவில் பெண்ணியம் என்று உருவானால் அது எல்லா அடுக்குகளிலும் இருக்கும் பெண்களை விடுவிப்பதாக அமையவேண்டும். ஒரு பெண் விடுதலை அடையும்போது பிரமையிலே கட்டுண்டிருக்கும் ஒரு ஆணும் விடுதலை அடைவதாகவே நான் கருதுகிறேன்.

“நீங்கள் தலித் பெண்களுக்காகப் பரிந்து பேசுகிறீர்கள். மேல்சாதிப் பெண்களுக்கு ஒடுக்குமுறை கிடையாதா….?” என்று மேல்சாதியைச் சார்ந்த பெண் படைப்பாளிகள் ஒருதடவை பாமா என்ற எழுத்தாளரைக் கேட்டபோது அவர் சொல்லுகிறார்: “மேல்சாதிப் பெண்களுக்கு ஒரு பக்கத்திலிருந்து அதாவது மேல்சாதி ஆண்களிடமிருந்து மட்டும்தான் ஒடுக்குமுறை வருகிறது. ஆனால், தலித் பெண்கள் மீது மூன்று விதமான ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. ஒன்று, மேல்சாதி ஆண்கள் கீழ்சாதிப் பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை. இரண்டாவது,மேல்சாதி பெண்கள் கீழ்சாதிப் பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை. மூன்றாவது, கீழ்ச்சாதி ஆண்கள் தங்களது பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை.”இந்த அடிநிலை ஒடுக்குமுறையிலிருந்து முதலில் விடுபட்டால்தான் எல்லா அடுக்குகளிலிருக்கும் பெண்களுக்கும் விடுதலை என்பது சாத்தியமாகும் என்பது எனது கருத்தாகும். அதற்கு சாதியம் என்ற தளையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். ஒரு பிரச்சனையைப் பார்க்கும்போது, முதலில் சாதிய ரீதியான பிரச்சனையாகவும் அதற்குப் பிறகு பாலியல் ரீதியான பிரச்சனையாகவும் அதனையடுத்து வர்க்கரீதியான பிரச்சனையாகவும் அதை அணுகுவதே சிறப்பு. ஆனால், எல்லாம் தலைகீழாகப் பார்க்கப்படுவதனால்தான் இங்கே தமிழ்நாட்டிலே எந்தவொரு முழுமையான மாற்றமும் நடக்கமாட்டேனென்கிறது.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் அதற்கெல்லாம் தாங்கள்தான் காரணமென திராவிட இயக்கங்கள் பேசிக்கொள்கின்றன. பெரியார் கூட கடவுள் வழிபாட்டை மறுப்பதனூடாகத்தான் பகுத்தறிவைப் பார்த்திருக்கிறார். அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடயங்களை முன்வைக்கவில்லை என்று இன்று தலித் மக்களால் விமர்சிக்கப்படுகிறார்.

தமிழ்நதி:பெண்கள் குறித்த விழிப்புணர்வை அவர் பரப்பவில்லையா…?

குட்டி ரேவதி:ஆமாம் சொன்னார்… ‘பெண்கள் தங்களுடைய கருப்பையை அறுத்தெறிந்து விட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்’என்று சொன்னார். ஆனால், என்ன மாற்றம் வந்தது…? குஷ்புவை விளக்குமாற்றைக் காட்டி விரட்டினார்கள். திராவிட இயக்கங்கள் மேடையில் பேசும்போதெல்லாம் நன்றாகத்தான் பேசுவார்கள். ஆனால், உங்கள் வீட்டில் - ஒரு தனிப்பட்ட பெண்ணின் மனத்தில் மாறுதல் வந்துவிடக்கூடாதென்பதில் அவர்களும் கவனமாகத்தான் இருக்கிறார்கள். ஏனென்றால், தாங்களெல்லாம் நல்லதொரு வாழ்க்கை வாழ்வதாகத்தான் அவர்களுடைய மனைவிமாரெல்லாம் நம்பிக்கொண்டிருப்பார்கள். அந்த நம்பிக்கையைத் தளர்த்தும் எந்தவொரு விடயத்தையும் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

தமிழ்நதி:உங்களுடைய ஒரு கவிதைத் தொகுப்பிற்கு ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’எனத் தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ‘பூனையைப் போல் அலையும் வெளிச்சம்’தொகுப்பிலும் நான் வாசித்தவரையில் ‘தனிமை’, ‘உள் தனிமை’ என்ற இரண்டு கவிதைகள் இருக்கக் கண்டேன். பெண்களின் தனிமை என்பது உங்களை மிகவும் உறுத்துவதாக அமைந்திருந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

குட்டி ரேவதி:நீங்கள் ஒருவர்தான் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். எனக்கு என்றில்லை, நீங்களே கூட கொஞ்ச நேரத்திற்கு முன்னால் சொன்னீர்கள்… ‘நான் மிகவும் தனிமையில இருந்தேன்’ என்று. பொதுவாக ஆண்களால் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரே வெளி தனிமைதான். வீட்டின் ஏதாவது அறைகளிலொன்றில் குறிப்பாக சமையலறையில் பெண்களாகிய நாம் இருப்போம். அதுதான் வழமை. எல்லாப் பெண்களும் அளவில்லாத ஒரு தனிமையில் இருப்பதுபோல எனக்குத் தோன்றியது. இது என்னுடைய ஒரு கண்டுபிடிப்பு என்றுகூடச் சொல்லலாம். ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’என்பது என்னுடைய ஒற்றைக்குரல் அல்ல. நான் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருக்கும் பெண்களுடைய வெளி தனிமையால் மூழ்கடிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட எல்லைகளைக் கடந்து போய்விடக்கூடாதென்பதற்காக ஆண்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்தச் சமையலறை என்ற வெளி. ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’என்று அம்பைகூட ஒரு தொகுப்பு வெளியிட்டிருந்தார்கள். ஆணாதிக்கக் கட்டமைப்பின் இறுக்கத்தினால் உங்களுக்குக் கிடைக்கிற ஒரு தனிமை. ‘உடலே இல்லாத வெளியில் நாங்கள் மிதந்துகொண்டிருந்தோம்’என்று அம்பை ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். அதாவது, உடலை விரிப்பதற்கான ஒரு வெளிகூட உங்களுக்குக் கிடையாது.எத்தனை பெண்கள் தங்களுடைய உடலைத் தாங்களே பார்த்திருப்பார்கள்…? மார்பகப் புற்றுநோயிலிருந்து தப்புவதற்கு அல்லது அதன் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவதற்கு பெண்கள் தங்கள் மார்பகங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால்,அவ்வாறு செய்வதுகூட ஒரு தகாத செயல் என்பதான எண்ணம் எப்படியோ எங்கள் மனங்களிலே படிந்திருக்கிறது. எங்களை நாங்கள் பார்க்கக் கூச்சப்படுகிறோம் என்று சில மாணவிகள் என்னோடு பேசியபோது சொன்னார்கள். ஏனென்றால், நம்முடைய உடலில் நமக்கு உரிமையில்லை… அது வேறொருவருக்கு உடமையானது என்ற எண்ணம் விதைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் நாளின் இருபத்துநான்கு மணித்தியாலமும் நாம் உடலைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும் - அதாவது, இந்த உடலை வேற்று ஆட்கள் யாரும் பார்த்துவிடக்கூடாதே என்று என்று பொத்திப் பொத்தி வைத்துக்கொண்டிருக்க வேண்டும். பாலியல் விகற்பத்திற்கு ஆட்பட்டுவிடாமல் உடலைப் பாதுகாத்துக்கொள் என்று அடித்துச் சொல்லப்படுகிறது.இதெல்லாம் இயல்பாகவே ஒரு தனிமைக்கு இட்டுச்செல்கிறது. உங்களைச் சுற்றி எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தத்தில் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வெளி அறையின் தனிமைதான். அந்தத் தனிமையைக் கட்டியமைப்பதற்கான விடயங்கள்தான் குடும்பம்,சாதி,மதம் போன்றவை. இவற்றினடிப்படையில்தான் நான் தனிமையை முக்கியமான பேசுபொருளாகப் பார்க்கிறேன்.

தமிழ்நதி:உங்களுடைய அடுத்த கவிதைத் தொகுப்பைப் பற்றிச் சொல்லுங்களேன்.

குட்டி ரேவதி: ‘உடலின் கதவு’என்பது அதன் தலைப்பு. அந்தப் பெயரைப் பார்த்ததும் உறுப்பைச் சார்ந்தது அப்படியென்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், அது ஒரு சொல்லாக, ஒரு முத்தமாக, ஒரு அனுபவமாக, நல்ல கலந்துரையாடலாக இருக்கலாம். அது உங்கள் உடலைத் திறந்துகொடுக்கலாம். அந்தத் தலைப்பிலே உண்மையில் ஒரு கவிதைகூட இருக்காது. அந்தத் தலைப்பின் சாயலை பல கவிதைகள் கொண்டிருக்கும். இப்போது நான் செய்துகொண்டிருக்கும் வேலைக்கு, பயணத்துக்கு அந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்குமென்று தோன்றியது. துயரமான ஒரு தருணத்தில் வருகிற தோழியின் தொலைபேசி அழைப்பும் விசாரிப்பும் ஒரு கண்ணீர்த்துளியாக கன்னத்தில் உருள்கிறபோது அந்த ஒரு விசாரிப்பு உடலின் கதவாக அமைகிறது அல்லவா? அந்த முக்கியமான தருணங்களின் நெகிழ்வைக் கருதித்தான் அந்தத் தலைப்பை வைத்திருக்கிறேன்.

தமிழ்நதி:பொதுவாக உங்களுடைய கவிதைகளிலே ஒரு காட்சிப்படுத்தலைக் காணமுடிகிறது. கவிதை மொழியில் இது எப்படிச் சாத்தியமாகிறது?

குட்டி ரேவதி:உண்மையில் ‘காட்சிப்படுத்தல்’என்ற இந்தப் படிமத்தைத் தமிழில் தொடக்கிவைத்தவர் பிரமிள்தான். படிமம் என்றால் ஒன்றின்மீது ஒன்று படிந்து வார்த்தையை அர்த்தப்படுத்துவது என்று பொருள். கவிஞன் வார்த்தை அடுக்குகளை மூடி மூடி ஒரு காட்சியிலிருந்து அல்லது ஒரு படைப்பிலிருந்து வெளியே வருகிறான். கவிஞனால் மூடப்பட்ட அடுக்குகளைக் கலைத்துக் கலைத்துப் போட்டு அந்தக் காட்சியைக் கண்டுபிடிப்பவனாக வாசகன் இருக்கிறான். நவீன கவிதையில் காட்சியைப் பிரதானப்படுத்தி அதற்கான சொல்வீச்சைத் தேர்ந்தெடுக்கும்போது பொருளற்ற சொற்களையல்லாமல் கூர்மையான சொற்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கவேண்டும். இல்லையென்றால் படிமத்தின் நோக்கம் அடிபட்டுப்போகிறது. இந்தக் காட்சிப்படுத்தலுக்கு தமிழில் நீண்ட மரபு இருக்கிறது. தமிழர்கள் மிகுந்த அழகியல்வாதிகளாக இருந்திருக்கிறார்கள். திராவிட இயக்கங்கள் வந்த பிறகு இந்த அழகியல் என்பது அற்றுப்போய்விட்டது என்று சொல்லலாம். அழகியல் என்பது ஆழத்திலிருந்து மலர்வது, அதை ஒரு ஒப்பனை என்பதாகப் பார்க்கப் பழகியிருக்கிறார்கள். நீங்கள் தீவிரமாக ஒரு விடயத்தில் ஈடுபடும்போது அதன் இறுதி விளைவாகக் கிடைப்பதுதான் அழகியல் என்றும் சொல்லலாம். படிமம், காட்சிப்படுத்தல், அதற்கான சொல் தேடுதல் என்பதன் வழியாக அழகியலைச் சாத்தியப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ்நதி:உங்கள் மனதில் இருக்கிற கவிதையை உங்களால் வார்த்தைகளில் முழுமையாக வெளிக்கொணர முடிகிறதா?

குட்டி ரேவதி: அது மிகவும் கடினம். எல்லா இலக்கியவாதிகளும் சொல்வார்கள் நாங்கள் நினைத்த கவிதையை எழுதவேயில்லை என்று. அது அப்படியே அழிந்துபோய்விடுவதுமில்லை. அதனுடைய சாரம் காத்திருந்து வேறொரு கவிதையில் வேறொரு வடிவத்தில் வெளிப்படும். அதற்கு நாங்கள் கவிதையின் பாதையிலேயே பயணித்துக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் ஆழத்திலிருக்கும் அந்தக் கவிதையின் கவித்துவத்தை நாங்கள் வெளியில் கொண்டுவர முடியும்.சில கவிதை வரிகள் சட்டென்று வந்து விழுந்துவிடும். சில நேரங்களில் திருத்தங்கள் செய்யவேண்டியேற்படும். நிறைய திருத்தங்களை வேண்டி நிற்கும் கவிதையை நான் விட்டுவிடுவேன். கவிதையை எழுதுபவர்தான் முதல் விமர்சகராக இருக்க முடியும். தமிழில் சுய விமர்சன மரபு என்ற ஒன்று இல்லாமற் போனதுதான் பொதுவாக எல்லா இலக்கியங்களுமே நலிந்து போவதற்கான காரணமாக இருந்திருக்கிறது.

நிறைவு

மழையின் இரவுகளில் புத்தகங்கள் திறக்கப்படுகின்றன

மழையின் இரவுகளில்தாம் புத்தகங்கள் திறக்கப்படுகின்றன

பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த நாவல்களிலுள்ள
கதைமாந்தர்களான முதிய கிழவனும் அகதிப் பெண்ணும்
ஆட்டுக்குட்டியும் போலீஸ்காரனும்
தங்கள் கதைகளிலிருந்து வெளியேறி
நகரை உலா வருகின்றனர்
வாசகர்களோ சாலை நடைபாதைகளின் தாழ்வாரங்களில்
ஒதுங்கி நிற்கின்றனர் மழையின் கூச்சல் ஓயட்டுமென
அந்த அகதிப்பெண் தனது உடலின் ரசம்
புத்தகச்சுவரெல்லாம் வழியக் கீறி வெளியேறி
மழை பெருகிய வழிகளை நீந்திக் கடக்கிறாள்
காமத்தின் சாரல் முகத்தைக் கிழிக்கத்
தனியே கதைகளுக்குள் உறங்கும் கன்னிப்பெண்களும் ஏராளம்
மழைக்கு ஒதுங்கிய புறாவும்
இப்படித்தான் படைப்பாளியின் கதைக்குள் நுழைந்தது
புத்தகங்கள் நனையாமலிருக்க ஜன்னல் கதவுகளை மூடும்
அத்தோல் நரைத்த கைகள்
தனது அடுத்த புனைவை நெய்யத் துடிக்கின்றன

‘முலைகள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.

3.05.2007

நேர்காணல்:கவிஞர் குட்டி ரேவதி-பகுதி-2

பகுதி -2

சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர் குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம்(2000), முலைகள்(2002),தனிமையின்; ஆயிரம் இறக்கைகள்(2003) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்திருக்கிறார். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து,பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவரும் இவர், பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. ‘முலைகள்’என்று தனது கவிதைத் தொகுப்பொன்றிற்குப் பெயர் சூட்டிய காரணத்தால் ‘கலாச்சாரக் காவலர்கள்’ என்று சொல்லப்படுபவர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டவர். இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.


“தமிழ்த் தேசத்திற்கான பிரத்தியேகமானதொரு பெண்ணியம் உருவாக்கப்பட வேண்டும்”

தமிழ்நதி: இந்தப் பத்தாண்டுகளில் முன்னரைக் காட்டிலும் பெண்களின் எழுத்துக்கள் கவனிக்கப்படுகின்றன. பேசப்படுகின்றன. முன்னர் பெண்கள் இந்தளவிற்கு எழுதவில்லையா…? அல்லது எழுதியும் கவனிக்கப்படவில்லையா…? இப்போதிருக்கும் இந்த இணக்கமான சூழலுக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
குட்டி ரேவதி: முன்பு எழுதவில்லை என்று சொல்லிவிடமுடியாது. அம்பை குறுநாவல்கள்,சிறுகதைகள்,நாடகங்கள் என்று நல்ல ஆளுமையோடு எழுதிக்கொண்டிருந்தார். அவருக்கே நிறைய வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் ‘விளக்கு’விருது கொடுத்திருக்கிறார்கள். இடையில் ஒரு இருபது ஆண்டுகள் வாஸந்தி,அனுராதா ரமணன்,ராஜம் கிருஷ்ணன்,சிவசங்கரி போன்ற மேல்சாதியைச் சேர்ந்த பெண்கள்தான் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் வெகுஜன இதழ்களில் இடமிருந்தது. அவர்கள் வெகுஜன இதழ்களால் இருகரம் நீட்டி வரவேற்கப்பட்டார்கள். ஆனால், வாஸந்தி போன்றவர்கள் எழுதிக்கொண்டிருந்த ஒரு இருபது ஆண்டுக் காலம் தீவிர இதழ்களில் பெண்ணியம் சார்ந்த கருத்தாக்கங்கள் இடம்பெறவில்லை. அதற்கு இன்னொரு காரணம் என்னவென்று பார்த்தீர்களானால் தீவிர இதழ்கள் மேல்சாதி ஆண்களின் கைகளில் இருந்தன. அவர்கள் யாரையும் உள்ளே வரவிடாத சூழ்நிலையில், அம்பை கூட மிகவும் சிரமப்பட்டுத்தான் எழுதியிருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். அவரிடம் கேட்டால் தான் பட்ட சிரமங்களை எப்படி எதிர்கொண்டார் என முழுமையாக அறிந்துகொள்ள இயலும்.
அதுக்கப்புறம்தான் மெல்ல மெல்ல பெண்களின் கவிதைகள் வர ஆரம்பிக்கின்றன. மிகவும் கூர்மையாக எழுதுகிறவர்களே இப்ப ஒரு இருபது பேர் வரையில் இருக்கலாம். பனிக்குடத்தில் போடுவதற்கு தேர்ந்தெடுப்பதற்கே சிரமமாக இருக்கிற அளவிற்கு பெண்கள் தீவிரமான கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெண்களின் கவிதைகள் இப்போது கூடுதல் கவனம் பெற்றிருப்பதற்கு அவர்கள் தங்களுக்கென்றொரு அரசியலை எடுத்துக்கொண்டுவிட்டதுதான் காரணமாக இருக்கலாம். தமிழ்ச்சூழலில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் முதலில் பாயுமிடம் பெண்களின் உடல்கள்தான். எழுதிக்கொண்டிருக்கும் பெண்களுடைய சொந்த வாழ்க்கையைப் பார்த்தீர்களானால் துயரங்கள்,சிக்கல்கள் மிகுந்ததாக இருக்கும். அதையெல்லாம் அவர்கள் வெளிக்கொணரும் ஒரு ஊடகமாக கவிதை அமைந்தது. அதனால் கூடுதல் கவனம் பெற்றதாக எல்லாம் சொல்ல முடியாது. எழுதுகிறவர்களுக்கு ஒரு உத்வேகம் ஏற்பட்டதாக வேண்டுமானால் சொல்லலாம். இது ஒரு இணக்கமான சூழ்நிலை என்பதில் ஐயமில்லை. இது இந்த உடல் அரசியல் என்பதையும் கடந்து வேறு வேறு கட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும் என்று விரும்புகிறேன். இனியும் நிறையப் படைப்பாளிகள் வந்து புதிய கருத்தாக்கங்களைக் கொணர்ந்து தமிழ்த் தேசத்திற்கான பிரத்தியேகமானதொரு பெண்ணியம் உருவாக்கப்பட வேண்டும். மேலைநாட்டுப் பெண்ணியம், மாக்சியம் தொடர்பான பெண்ணியம் இவற்றை நாம் உள்வாங்கிக்கொள்கிறோம். அப்படி என்றில்லாமல் தமிழ் புவியியல் பரப்பிற்கேற்ற வலிய பெண்ணியம் உருவாவதற்கான ஒரு தளமாக இப்போதிருக்கும் இந்த இணக்கமான சூழ்நிலையைக் கொள்ள வேண்டும்.
தமிழ்நதி: பொதுவாக ஒரு பெண் படைப்பாளியாக இனங்காணப்பட்டவுடனேயே சமூகம் அவளையொரு பெண்ணியவாதியாகவும் கலகக்காரியாகவும் பார்க்கிற ஒரு கண்ணோட்டம் உருவாகிவிடுகிறது இல்லையா…? உங்கள் வாழ்வில் இதை உணர்ந்திருக்கிறீர்களா?

குட்டி ரேவதி:தமிழ்நாட்டிலேயே நிறையப் பெண் கவிஞர்கள்,எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்துவிட்டார்கள். சில பெண் எழுத்தாளர்கள் குறிப்பிட்ட சிலருடன் தாம் சேர விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்கிறார்கள். அதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள் என்றால், ‘இவர்கள் மிக ஆபாசமாக எழுதுகிறார்கள். உடல் என்பது ஒரு புதிர்… அந்தப் புதிரை இவர்கள் எழுத்தால் விடுவிக்கிறார்கள். அதனால், இவர்களில் ஒருத்தியாக நான் அடையாளங் காணப்பட விரும்பவில்லை’என்கிறார்கள். ஆண்கள் எப்படி எழுதுவார்களோ அதையொட்டியே இந்தப் பெண்களும் இணைய மற்றும் அச்சு இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் ஒரு பெண்ணியவாதிகளாக அடையாளங் காணப்பட விரும்பவில்லை. எழுதுகிறவள் ஒரு பெண்ணாக இருப்பதனாலேயே அவள் பெண்ணியவாதி என்று பொருளல்ல. எழுத்தின் உள்ளடக்கம்தான் அவள் யார் என்பதை வெளிப்படுத்துகிறது. உள்வாங்கும் விடயம் ஆணாதிக்கமாக இருந்தால் வெளிப்படுத்தலும் அதையொட்டியே நிகழ்கிறது.
எம்மை நாமே கேள்வி கேட்கும்போது சுயவிமர்சனத்திற்குட்படுத்தும்போது நமக்குள்ளேயே எவ்வளவு ஆணாதிக்கம்,இந்துத்துவம் சார்ந்த விடயங்கள் ஊறிப்போயிருக்கின்றன என்பது தெரியவருகிறது. எங்களைப் போன்றவர்களுடன் அடையாளப்படுத்தப்பட விரும்பாத பெண்கள் என்ன சொல்கிறார்களென்றால், ஆண்கள் எப்படி பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார்களோ பாலியல் உறுப்புகள் குறித்து எழுதுகிறார்களோ அதைப் போலத்தானே இவர்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்… இவர்கள் எப்படிப் பெண்ணியவாதிகளாக இருக்க முடியும் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். அதற்கு என்னுடைய பதில் என்னவென்றால் ‘நாங்கள் முன்வைக்கும் அரசியல் வேறு’என்பதாகும். ஆண்கள் வர்ணித்து எழுதுவார்கள். ‘அவளுடைய விழிகள் கயல் மீனைப் போலிருந்தன… அவள் மாம்பழம் போன்ற நிறத்திலிருந்தாள்… அவளுக்குப் பருத்த மார்பகங்கள் இருந்தன’என்றெல்லாம் வர்ணித்து எழுதுவார்கள். நாங்கள் வைக்கும் அரசியலில் அதே வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் வேறு பொருளில், வேறு நோக்கத்தில் அவற்றைப் பயன்படுத்துகிறோம்.

தமிழ்நதி: பெண்கள் இன்னின்ன சொற்களைத்தான் தனது படைப்பில் பிரயோகிக்கலாம் என்றொரு எதிர்க்குரல் சில கலாசார காவலர்களிடமிருந்து எழுந்தது. நீங்கள் எழுத உட்காரும்போது அந்தக் குரல் ஒருவித மனத்தடையை,வரையறையை,எச்சரிக்கை உணர்வை,சோர்வை உங்களுக்கு ஏற்படுத்துகிறதா?

குட்டி ரேவதி:நிச்சயமாக. என்னுடைய அடுத்த தொகுப்பின் தலைப்பு ‘உடலின் கதவு’என்பதாகும். அது அச்சுக்குப் போய்விட்டது. அதிலுள்ள சில கவிதைகள் குறித்து எனக்கு தயக்கம் இருந்தது. இவற்றைப் பற்றி என்ன விமர்சனம் வரப்போகிறதோ… எடுத்துவிடலாமா என்று குழப்பமாக இருந்தது. இவ்வாறு குழப்பத்தை உருவாக்குவதுதான் சம்பந்தப்பட்டவர்களின் நோக்கமே. ‘நான் என்னுடைய எழுத்துக்கள் பற்றித் தெளிவாக இருக்கிறேன்… குழப்பமே கிடையாது’என்றெல்லாம் சொல்வதற்கில்லை. இந்த சமூகத்தினுடைய தாக்கமும் அது ஏற்படுத்தும் குழப்பமும் களைப்பும் சோர்வும் நம்மோடு இருந்துகொண்டேயிருக்கும். நம்முடைய வேறுபட்ட அனுபவங்கள் ஊடாக நாம் அந்தச் சோர்விலிருந்து மீண்டு வரவேண்டும். இலக்கியம் என்பதே அதுதானே இல்லையா…? இவர்கள் விளைவிக்கும் குழப்பங்களுக்கெல்லாம் நாம் ஆடிப்போய்விட்டோமென்றால் அது அவர்களுடைய வெற்றியாகிவிடும் அல்லவா…?அதனால், மீண்டும் மீண்டும் நம்மைப் புத்துணர்ச்சியூட்டிக் கொள்வது மிக அவசியம். அதற்கு எனக்கு மிக உதவியாக இருப்பது என்னவென்றால், நிறையப் பெண்களைச் சந்தித்து ஆக்கபூர்வமாக உரையாடுவது. ஒரு கிராமப்புறத்திற்குப் போய் அங்கு வயல்வெளியில் இருக்கும் ஒரு பாட்டியிடம் உரையாடினாலே உங்களுக்கான புத்துணர்ச்சி கிடைத்துவிடும். அவர்கள் வாழ்வில் எத்தனை துயரங்களை எதிர்கொண்டிருப்பார்கள்… அதிலொரு துளிகூட நாம் அனுபவித்திருக்க மாட்டோம். அந்தத் துயரங்களையெல்லாம், சிக்கல்களையெல்லாம் அவர்கள் நம்மைவிட நுட்பமாகக் கையாண்டு கடந்துபோயிருப்பார்கள். அவர்களையெல்லாம் சந்தித்துப் பேசுவதுதான் எனக்கு உத்வேகம் தருகிறது.
நான் நிறையப் பயணம் செய்வேன். கேரளாவுக்கு ஒரு வகுப்பு எடுக்கப் போகிறேன் என்றால், அதையடுத்து வரும் நாட்களில் இரண்டொரு நாட்களையாவது அந்த இடத்தைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்க்கப் எடுத்துக்கொண்டுவிடுவேன். பெண்ணியத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக நிறையப் பயணம் செய்வதைப் பார்க்கிறேன். வீட்டின் அறைகளுக்குள் குறிப்பாக சமையலறைக்குள் முடங்கிப்போய்விடுகிறவளாக பெண் இருக்கக்கூடாது. பல்வேறுபட்ட நிலவெளிகளை நமக்கு அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். வேறு வேறு ஊர்களுக்குப் பயணம் செய்வது,திருவிழாக்களில் கலந்துகொள்வது இவையெல்லாம் எமது பார்வையை விரிவுபடுத்துவன. பெண்ணியத்தின் மற்றொரு கூறு என்னவென்றால், நிறையப் பெண்களைச் சந்தித்துப் பேசவேண்டும். பேசுவதென்றால் வம்பு பேசுவதல்ல. ஆக்கபூர்வமாகப் பேசவேண்டும். அதில் அப்படியொரு ஆசுவாசம் கிடைக்கும்.

தமிழ்நதி: .இந்த ஆணாதிக்க சமூகத்தை மீறி ஒரு பெண் தனது படைப்புகள் வழியாக அடையாளங் காணப்படுவதென்பது சிரமமானதுதான் இல்லையா…? உங்கள் அனுபவங்கள் பற்றி…

குட்டி ரேவதி:என்னுடைய வீட்டிலிருந்து பெரிய எதிர்ப்புக் கிளம்பவில்லை. என்னுடைய அப்பாவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான கல்வியறிவு கிடையாது. ஆகவே, அவர் தன்னுடைய பெண்கள் படிக்கவேண்டுமென்பதில் மிகுந்த ஆர்வத்தோடிருந்தார். நானும் என் தங்கையும் படித்து மேலே வரவேண்டுமென்பதே அவருடைய ஆசையாக இருந்தது. ஆனால், குடும்பம் என்ற எல்லையை விட்டு வெளியே வரும்போது நிறையப் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
‘முலைகள்’என்று எனது கவிதைத் தொகுப்பிற்குப் பெயரிட்டபோது தொலைபேசி மற்றும் அஞ்சல் வழியாகவெல்லாம் எனக்கு மிரட்டல்கள் வந்தன. இணையத்தளங்களில் கீழ்த்தரமான விமர்சனங்கள் வந்தன. ஒரு பெண்ணின் ஆழ்மனதில் சென்று தைக்கக்கூடிய வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து துல்லியமாகக் குறிபார்த்து எறிந்தார்கள். எனது குடும்பத்தினரும் இதனால் பயங்கரமான மனவழுத்தத்திற்கு ஆளாகவேண்டியிருந்தது. இதையெல்லாம் பெண்களாகிய நாம் செய்வோமா என்றால்… இல்லை! பொதுவாக ஆண்களுடைய வன்முறையைவிட அவர்களுடைய மூர்க்கம் என்னை மிகவும் பாதித்த விடயம். பெண்களாகிய நாமும் அவ்விதமான மனோநிலையை நமது ஆண் பிள்ளைகளிடம் வளர்க்கிறோமோ என்று சிலசமயங்களில் தோன்றுவதுண்டு.குடும்பத்தின் தூண்களாக பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களைப் பொறுத்தமட்டில் வீடு என்பது சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் பெண்களோடு படுத்துக்கொள்வதற்கும் இன்பங்களை அனுபவிப்பதற்குமான ஒரு இடம். அவர்களுக்கு அது ஒரு தற்காலிகமான தங்குமடமாக இருக்கிறதேயன்றி அது அவர்களுக்கான நிரந்தர இடம் கிடையாது. உண்மையில் வீட்டைச் சுமப்பவர்கள் பெண்கள்தான். அடுப்பு மூட்டுவதிலிருந்து பிள்ளைகளை வளர்ப்பது வரை அவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் அவர்கள் கற்பைக் கட்டிக்காக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். பார்த்துக்கொண்டே போனால் குடும்பத்தின் இத்தகைய இறுக்கமான கட்டமைப்பிற்கு மூல காரணமாக இருப்பது இந்துத்துவம்தான். இதற்கு மாற்று வழி என்று ஒன்று இல்லை. அதனால், குடும்பத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிற இந்தத் தூண்களைக் கொஞ்சம் இளக்குவதன் மூலம் நமது சுமைகளைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ள முடியுமேயன்றி, மற்ற விதிகள் எல்லாம் அப்படியேதான் இருக்கும். நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்களோ அதையேதான் மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருப்பீர்கள்.

தமிழ்நதி: கவிதையில் இருண்மை என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பல நவீன கவிஞர்களுடைய கவிதைகள் புரிவதில்லை என்றொரு முணுமுணுப்பு வாசகர்களிடையே நிலவுகிறதே…
குட்டி ரேவதி:இது மொழி அரசியல் தொடர்புடையது எனலாம். திராவிட இயக்கங்கள் பெரிய இலக்கியங்களைப் படைத்துவிட்டதான ஒரு கற்பனை உலவுகிறது. வைரமுத்து போன்றவர்களெல்லாம் பெரிய கவிஞர்கள் என்று பேசப்படுகிறது. அவர்களுடைய மொழி எல்லோருக்கும் புரியும் வகையில் இருப்பதனால் அப்படிச் சொல்லப்படுகிறது. எடுத்த எடுப்பில் ஒருவர் பல் வைத்தியராக ஆகிவிட முடியுமென்றில்லை. அதற்கு நாலோ ஐந்தோ ஆண்டுகள் படிக்க வேண்டியிருக்கிறது. நிறைய நாட்கள் மொழியைப் பயின்று ஒரு கவிஞன் எழுதுகிற கவிதை மட்டும் உடனடியாக ஒரே வாசிப்பில் புரிந்துகொள்ளப்பட வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? நவீன கவிதையானது பழைய மொழியினுடைய வீச்சைத்தான் உள்வாங்கியிருக்கிறதே தவிர அந்தச் சொற்களை அது வைத்துக்கொள்ளவில்லை. தனக்கான சொற்களோடு அதனுடைய இசைவுடன்தான் வருகிறது. பாலகுமாரன்,சுஜாதா,வைரமுத்து வகையறா எழுத்தாளர்களின் எழுத்துக்களோடு பரிச்சயம் கொண்டிருப்பவர்களுக்கு இந்த நவீன மொழிக்கட்டமைப்பை இலகுவில் புரிந்துகொள்ளமுடியவில்லை என்பதுதான் உண்மை. புதிய மொழியை உருவாக்கியதும் அதை வளர்த்தெடுத்ததும் வைரமுத்துவாலோ கலைஞராலோ உருவானதல்ல. ஆனால் அவர்கள் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். புதிதாக வரும் கவிஞர்கள் ஆழம் மிக்க சொல்லாடலுடன் வருகிறார்கள். அதன் மூலம் மொழியின் கதவுகள் திறக்கப்படுவதாக நான் உணர்கிறேன். அந்த அனுபவத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் தயாராக இருந்தால்தான் மொழி எம்முடன் உரையாடும்.


(தொடரும்)


நீளமான இரவுகள்

இப்பொழுதும் இரவின் நீளத்தை
வார்த்தைகளால் அளந்துகொண்டிருக்கிறேன்
வாடைக்காற்று காதருகில்
பலமான வார்த்தைகளைக் கொண்டுவருகிறது
பனி தனது பாதங்களை
எனது மேனியின் எல்லா இடுக்குகளிலும்
பதுக்குகிறது
எனது இரவைவிட அம்மாவின் இரவு நீளமாயும்
அதைவிட அவரது அம்மாவின் இரவு நீளமாயும்
மரங்களின் இரவுகளை விட
பறவைகளின் இரவுகள் நீளமானவை
அதிகாலையில் பறவைகள் அலகினால்
இறகைக் கோதுவதையும்
ஒரு சூரியக்கதிரினால் சுகமாய்ச் சொறிந்துகொள்வதையும்
காண்கிறேன்

கவிஞரின் ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.

3.04.2007

நேர்காணல்:கவிஞர் குட்டி ரேவதி-பகுதி-1

கவிஞர் குட்டி ரேவதியைப் பற்றி சிறிய அறிமுகம் தரும்படி கேட்டிருந்தீர்கள். சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், பூனையைப் போல அலையும் வெளிச்சம்(2000), முலைகள்(2002),தனிமையின் ஆயிரம் இறக்கைகள்(2003) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்திருக்கிறார். மிகவும் அற்புதமான கவித்துவம் நிறைந்தவர். எழுத்து,பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவரும் இவர், பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. ‘முலைகள்’என்று தனது கவிதைத் தொகுப்பொன்றிற்குப் பெயர் சூட்டிய காரணத்தால் கலாச்சாரக் காவலர்கள் என்று சொல்லப்படுபவர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டவர். இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

“கவிதை என்பது இலக்கியம் மட்டுமல்ல;அதுவொரு இயக்கமும் கூட”

பகுதி-1

தமிழ்நதி:உங்களைக் கவிதை எழுதத் தூண்டியது வாசிப்பு அனுபவமா அல்லது இயல்பாகவே எழுந்த உள்ளார்ந்த தூண்டுதலா? நீங்கள் எப்படி எழுத்துத்துறையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

குட்டி ரேவதி:வாசிப்பு அனுபவம் என்று சொல்லமுடியாது. நான் சித்தமருத்துவம் படிக்க ஆரம்பித்த பிறகுதான் கவிதையில் ஈடுபாடு வந்தது. ஆனால் புத்தகங்கள் படிக்கிறது உண்டு. நான் பத்தாவது பரீட்சையில் நல்ல புள்ளிகள் பெற்றிருந்தேன். மருத்துவம்,பொறியியல் என்று எது வேண்டுமானாலும் படிக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் எனக்கென்னவோ தமிழ் இலக்கியம் படிக்கவேண்டுமென்பதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. இவ்வளவு புள்ளிகள் எடுத்துவிட்டு எதற்காக தமிழ் இலக்கியம் படிக்கவேண்டுமென்று அப்பா நினைத்தார். அப்புறம் நான் சித்த மருத்துவம் படிக்கலாமென்று தீர்மானித்து அதில் இணைந்துகொண்டேன்.
சித்த மருத்துவத்தில் உள்ள சிறப்பு என்னவென்றால், அந்தப் பாடத்திட்டத்தில் பெரும்பாலும் எல்லாமே செய்யுள் வடிவத்தில் இருக்கும். அழுத்தமான மொழிநடை இருக்கும். அதிலே பிரயோகிக்கப்படுகிற சொல்லகராதி வந்து புழக்கத்தில் இல்லை. ஆனால் நவீனத்துடன் கூடிய ஒரு உக்கிரம் அதில் இருக்கும். சித்த மருத்துவத்தில் ஆர்வத்தோடு படித்து முதல் மதிப்பெண்கள் வாங்கியபோதிலும், தொடர்ந்து அதிலேயே ஆழ்ந்து அதன் தொடர்ச்சியாக ஒரு நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்ற இலட்சியமெல்லாம் எனக்கு இருக்கவில்லை.


அதனையடுத்து படிப்பதிலிருந்து விடுபட்டு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்த நாட்களில் எனக்கு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. எனக்குத் தோன்றியதை எழுதினேன். அதை வாசித்த ஒரு நண்பர் ‘நன்றாக இருக்கிறது… நீங்கள் ஏன் இதைப் பிரசுரத்திற்கு அனுப்பக்கூடாது…?’ என்று கேட்டார். சில சிற்றிதழ்களுக்கு அனுப்பியபோது அவை உடனடியாக வெளிவந்தன. அதன் பிறகு தமிழினி பதிப்பகத்தார்தான் தாமாகவே முன்வந்து என்னுடைய கவிதைகளைத் தொகுப்பாகப் போடலாமென்று சொன்னார்கள். பொதுவாகப் பார்த்தீர்களானால், அவர்கள் கவிதைப் புத்தகங்கள் போடுவதில்லை. அதன்படி 2000ஆம் என்னுடைய முதற்தொகுப்பான ‘பூனையைப் போல் அலையும் வெளிச்சம்’வெளிவந்தது. அதனையடுத்து 2003ஆம் ஆண்டு ‘முலைகள்’என்ற தொகுப்பு வெளிவந்தது. அந்தத் தலைப்புக் குறித்து ஆரம்பத்தில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. பிரச்சனையில்லை என்று உற்சாகமூட்டி, தயக்கத்தைப் போக்கி, அத்தொகுப்பையும் வெளியிட்டது தமிழினி பதிப்பகந்தான்.

தமிழ்நதி:கவிதையில் ஆதர்சம் என்று யாருடைய கவிதைகளை நீங்கள் குறிப்பிட்டுச் சொல்வீர்கள்? இதற்குப் பதிலளிப்பது உங்களுக்குச் சங்கடமாக இருந்தால் வேண்டாம்.

குட்டி ரேவதி:சங்கடம் என்றெல்லாம் இல்லை. நான் ‘பனிக்குடம்’இதழுடைய ஆசிரியராக இருக்கிறேன். அதனால் எல்லாக் கவிதைகளையும் உன்னிப்பாகக் கூர்ந்து கவனித்து வாசிக்க வேண்டியிருக்கிறது. ஒரு நல்ல கவிதையை, அது உருவாகும் பரிணாமத்தை என்னால் பகுத்துணர முடிகிறது. நானும் எழுதுகிறவள் என்ற வகையில் ஒரு நல்ல கவிதையை நிராகரிக்கவோ தரமற்ற கவிதையை முன்னெடுத்துச் செல்லவோ முடியாது. கூடாது. ஈழத் தலத்திலே இருந்து வந்து, தமிழகத்திலே இயங்கி, இன்றைக்கு ஏறக்குறைய எல்லோராலும் மறக்கடிக்கப்பட்டு விட்ட கவிஞர் பிரமிள் மற்றும் தேவதேவன் ஆகியோரை என்னுடைய ஆதர்சம் என்று சொல்லாம்.தமிழில் நவீன கவிதை என்பது பிரமிள் என்ற மொழிவீச்சுள்ள ஆளுமை பொருந்திய கவிஞன் இல்லையென்றால், இப்போதுள்ள தளத்திற்கு வந்திருக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவருடைய விசை இருந்திருக்கிறது. அண்மையில் அவருடைய கவிதை பற்றிய கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்றை வாசிக்கக் கிடைத்தது. கவிதையியல் என்பது குறித்த அவருடைய விமர்சனங்கள் எந்தக் காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக பிரமிக்க வைக்கின்றன. அதற்கு அவர் அரசியல் நிர்ப்பந்தங்கள் நிறைந்த ஒரு நிலத்திலிருந்து வந்தது ஒரு காரணமாக இருக்கலாம். நான் பெரும்பாலான கவிஞர்கள் எல்லோருடைய கவிதைகளையும் படித்திருக்கிறேன். ஆனால், ஆதர்சம் என்று வரும்போது தேவதேவன்,பிரமிள் ஆகியோரைத்தான் குறிப்பிட வேண்டியிருக்கிறது. தேவதேவனுடைய கவிதைகள் அதிநவீனமான பாணியைக் கொண்டிருக்கின்றன என்று சொல்லலாம். தொடர்ந்து கவிதையின் தளத்தில் இயங்கிக்கொண்டிருந்தால் மட்டுந்தான் அத்தகைய ஒரு இயைபாக்கத்தை நீங்கள் பெறலாம்.

அப்புறம் கவிதை எனப்படுவது இலக்கியத்துள் மட்டும் அடங்காதது, அது ஒரு இயக்கம் என்றுதான் நான் சொல்வேன். சிறுகதை,நாவல் என்பதெல்லாம் ஓரளவுக்கு புனைவு கலந்த வடிவங்கள். கவிதைக்கென்றொரு அழகியல்,இலக்கியத்தன்மை,மொழிவளமை,நவீன தன்மை எல்லாம் இருக்கவேண்டுமென்பதால் அதனை இலக்கியம் என்பதனைக் காட்டிலும் இயக்கம் என்றுதான் சொல்லவேண்டும்.

தமிழ்நதி:‘முலைகள்’என்ற உங்கள் கவிதைத் தொகுப்பின் தலைப்பு இவ்வளவு சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்டதன் அடிப்படையான காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

குட்டி ரேவதி:இப்போது கேரளாவிலிருந்து என்னை நிறைய இலக்கியக்கூட்டங்களுக்கு அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலே என்னை இலக்கியக்கூட்டங்களுக்கு அழைப்பதில்லை. காரணம், என்மீது இருக்கின்ற அந்த அடையாளம்…! ‘முலைகள்’என்ற பெயரில் ஒரு தொகுப்புப் போட்ட காரணத்தினால் என்னை யாரும் அழைப்பதில்லை. அந்தச் சொல் ஆபாசமான,அசிங்கமான,அருவருப்பான ஒரு விடயமாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில், மலிவு இலக்கியத்தில், வெகுஜன இதழ்களில் பெண்களுடைய மார்பகங்கள் வணிகப் பொருளாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நான் அதை ஒரு எதிர்நிலையில் நின்று பார்க்கிறேன். அதாவது, நம்முடைய உடலை நான் ஒரு பெரிய நிலவெளியாகப் பார்க்கிறேன். ஒரு புவியியல் நிலப்பரப்பானது இலையுதிர்காலம்,இளவேனில்,கோடை என எப்படிப் பலவிதமான பருவங்களைக் கடந்து வருகின்றதோ அப்படியான ஒரு நிலவெளியாகத்தான் உடலைப் பார்க்கிறேன். அதையொரு உறுப்பாக,பொருளாகப் பார்க்கவில்லை.
அப்படி நான் அந்தச் சொல்லைப் பிரயோகித்தது ஆண்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கவேண்டும். பெண்கள் அவர்களுக்கென வரையறுக்கப்பட்ட எல்லைகளுள் நின்று எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், பாலியல் உரிமைகளைப் பற்றிப் பேசிவிடமுடியாது. அதற்கான அதிகாரம் பெண்களுக்குக் கிடையாது என அவர்கள் நினைக்கிறார்கள். இன்னுமொரு விடயம் என்னவென்றால், சாதீயம் மிகப்பெரியதொரு விடயமாக இருக்கிறது. இப்போது பாலியல் உரிமைகள் குறித்துப் பேசுவதற்கான வெளி திறந்துவிடப்படுகிறதெனில் அடுத்து சாதீயம் பற்றித் தயக்கமின்றிப் பேசப் புறப்பட்டுவிடுவார்கள் என்ற பயம். மூன்றாவதாக, தமிழ்த்தேசியவாதம் என்றொரு விடயம்…. இங்கு பேசப்படுகிற தமிழ்த்தேசியவாதம் என்பது வேறு. ஈழத்தில் அதன் பொருள் வேறு. இங்கே பேசப்படும் தமிழ்த்தேசியவாதத்திலே பெண்களின் கற்பு என்பது முக்கியமான அம்சம். தனக்கு உடமையான ஒரு பெண் இன்னொருவனோடு போய்விடக்கூடாது என்பதில் கவனமாயிருக்கிறார்கள்.
அதன் அடிப்படையிலேதான் கண்ணகியைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். இவர்கள் மணிமேகலை மற்றும் மாதவியைத் தூக்கிப் பிடிப்பார்களா என்றால்… இல்லை! என்னை மிகவும் ஈர்த்த கதாபாத்திரம் என்றால் அது மணிமேகலைதான். தன்னைக் காதலித்த உதயகுமாரன் மீது அவளுக்கும் காதல் இருக்கிறது. அதைக்; குறித்த மனவெளிப் போராட்டங்கள் அவளுக்கு இருந்திருக்கின்றன. ஆனால், அதை அவள் வெளிப்படுத்தாமல் அறநெறியில் போய் இணைந்துகொள்கிறாள். இந்த மாதிரியான கதாபாத்திரங்களை இவர்கள் தூக்கிப்பிடிப்பதில்லை. அதற்கு இன்னொரு காரணம் இங்கு வேரோடியிருக்கும் இந்துத்துவம் என்று சொல்லலாம். பௌத்தத்தைப் பேசும் மணிமேகலையை அவர்கள் கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டிருப்பதற்கு இந்த இந்துத்துவம்தான் காரணம். ஆணாதிக்கத்தினுடைய மூலாதாரம் இந்துத்துவம்தான். ஒரு பெண் பத்தினியாகச் சித்திரிக்கப்பட்டிருந்த சிலப்பதிகாரத்தை தலைமேல் தூக்கிவைத்துக்கொள்வதற்கும் மணிமேகலையை இருட்டடிப்புச் செய்ததற்கும் இதுதான் காரணம். என்னைக் கேட்டால் மணிமேகலையைத்தான் காவல்தெய்வம் என்று நாங்கள் வணங்கவேண்டும் என்று சொல்வேன். பெண்கள் என்றால் தாய்மை,பொறுமை,விட்டுக்கொடுப்பு,கருணை இவற்றின் வடிவமாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். பெண்களிடத்தில் வீரம்,போராடும் குணம்,பகுத்தறிவு இன்னோரன்ன குணாம்சங்கள் இருப்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மணிமேகலை தனது மனவெளியில் காதல் தொடர்பான ஊடாட்டங்கள் இருந்தபோதிலும் அதையெல்லாம் துறந்து பௌத்தத்திலே இணைந்து மக்களுக்குச் சேவை செய்யவேண்டுமென்ற வழியைத் தானே தேர்ந்தெடுக்கிறாள். இவ்வாறு ஒரு பெண் தனக்குரிய பாதையைத் தேர்ந்தெடுப்பது இவர்களுக்கு உவப்பானதல்ல என்ற காரணத்தினால் மணிமேகலை இருட்டடிப்புச் செய்யப்படுகிறாள்.
இவ்வாறான மனோநிலை கொண்ட ஒரு சமுதாயத்திற்கு ‘முலைகள்’என்ற சொல் எவ்வாறான அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அதனால் விளைந்த எதிர்வினைகளால் ஒரு ரெண்டு வருஷம் நான் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன்.

தமிழ்நதி:இதே சொல்லை ஒரு ஆண் எழுதியிருந்தால்…?

குட்டி ரேவதி:எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சங்க இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கிறது. இப்போதும் வெகுஜன இதழ்களில் பெண்களுடைய முலைகள் மிகவும் கவர்ச்சியாக வர்ணிக்கப்படுகின்றன. அதைப் பற்றி யாரும் சர்ச்சை எழுப்பத் தயாராக இல்லை. ஆண் எதைச் செய்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. என்னுடைய மிக நெருங்கிய ஒரு நண்பர் சொன்னார் “உங்களுடைய ‘முலைகள்’ கவிதைத் தொகுப்பு அத்தனையையும் நானே பணம் கொடுத்து வாங்கி எரித்துவிட விரும்புகிறேன்”என்று. இந்த அதிகார விடயத்தில் நட்பு,உறவு ஒன்றும் கிடையாது.

தமிழ்நதி:‘சண்டைக்கோழி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தின் பின்னால் நீங்கள் கூடுதல் கவனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறதே…!

குட்டி ரேவதி:எல்லோருமே அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால், என்னுடைய வாழ்க்கையிலே அதனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டதாகச் சொல்லமுடியாது. ‘முலைகள்’என்ற பெயரில் தொகுப்பு வெளியிடப்பட்ட பிறகு எந்தவொரு இலக்கியக்கூட்டத்திலோ கல்லூரிகளில் நடக்கும் விழாக்களிலோ கலந்துகொள்ள எனக்கு அழைப்பு அனுப்பப்படுவதில்லை. அதற்கான தகுதியை நான் இழந்துவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து என்னை அழைக்கிறார்கள். மாதத்தில் இரண்டு அல்லது மூன்று கூட்டங்களிலாவது நான் கலந்துகொள்கிறேன். அவர்களது பண்பாட்டில் ‘முலைகள்’என்பது வழக்கிலிருக்கும் ஒரு சொல். பாலியல் உரிமைகள்,மனிதவுரிமைகள்,சாதியம் இவை பற்றியெல்லாம் மாணவர்களிடையே பேசுவதற்கு கேரளாவில் படைப்பாளிகள் முன்வராத நிலையில் அதற்கான தேவை அங்கே நிறைய இருக்கிறது. அதனால் என் போன்றவர்களை அழைக்கிறார்கள். ‘சண்டைக்கோழி’படத்திலும் என்னுடைய பெயர் தேவையற்று இழுக்கப்பட்டிருந்தது. இங்கே சினிமா என்பதும் ஆணாதிக்கம் நிறைந்ததென்ற வகையில் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமிழகச் சூழலில் மேற்குறித்த சர்ச்சைகளால் நான் கூடுதல் கவனம் பெறவில்லை என்பதுதான் உண்மை. எனக்கு அதனால் சாதகம் என்று ஒன்றுமேயில்லை. அதனால் நான் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறேன் என்று சொல்வதே பொருந்தும்.


(தொடரும்)


உள் தனிமை

தனிமையில் மட்டுமே

கசியும் உள்தனிமை
பெருங்கடலாய் உருவெடுத்து
அலையெழுப்பும்
வேறு மனித வாசனை வீச
ஒரு துளியாய்த் திரண்டு விழி நிரப்பும்
கோள நீர்ப்பரப்பில்
காட்சியாகும் உள்தனிமை
காலச்சரிவில் உருண்டோடிப்
பழுத்த பாறைகளைப் போல்
பாரமாய் விழும் கண்ணீர்த்துளிகளை
ஏந்த வலுவுண்டா உன் கைகளுக்கு?

கவிஞரின் ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.