இதை வாசிக்க ஆரம்பித்திருக்கும் நீங்கள் நினைப்பது சரி. இது வேலையற்றவர்களின் வேலைதான். ஷோபா சக்தி ‘தமிழ்நதிக்கு மறுப்பு’என்று தனது வலைத்தளத்தில் எழுதி நாளாகிறதுதான். இருந்தபோதிலும், கீற்று இணையத்தளத்தில் ஷோபா சக்தியின் பினாமியைப் போலவே பிதற்றிக்கொண்டிருக்கும் குணாளன் என்பவரின் கட்டைப் பஞ்சாயத்து தாங்கமுடியவில்லை. ‘பதில் சொல்’ என்ற தொனியில் அந்தக் குரல் கீச்சிடுகிறது. ஷோபா சக்தியோ நான் கொலை செய்துவிட்டு ‘கள்ள மௌனம் சாதிப்பதாக’வும் ‘பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்’என்றும் தனது இணையத்தளத்தில் அருட்டியிருக்கிறார். (மிரட்டுகிறார் என்று எழுதினால் ‘தமிழ்நதி கழிவிரக்கத்தில் கதைக்கிறார்’ என்று கண்ணைக் கசக்க ஆரம்பிப்பார்) ‘இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் குண்டியைக் குண்டியைத் தூக்கி அடிப்பான்’என்றொரு பழமொழி உண்டு. நான் இரும்புமில்லை. இளகினவளுமில்லை. ஆனாலும், புலியெதிர்ப்பையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களைப்போல எனக்கு நேரமில்லை என்பதைச் சொல்லித்தானாகவேண்டும். சில நாட்களுக்கு முன்னரே ஆதவன் தீட்சண்யாவுடனான அக்கப்போர் நடந்துமுடிந்தது. எனது கவிதைத் தொகுப்பு வேலைகளை அது மிகவும் பாதித்திருந்தது. அடுத்து திருவாளர் ஷோபா சக்தியுடன் பொருதி எனது சக்தியை வீணடிக்கக் கூடாதென்பதனால் ஒதுங்கியிருந்தேன். வழக்கம்போல எனக்குள்ளிருக்கும் கோபம் என்னைச் சும்மா இருக்கவிடுவதாயில்லை. ஆகவே ஷோபா சக்தியின் மறுப்புக்கு மறுப்போ பருப்போ ஏதோவொன்றை எழுதித் தொலைத்தாக வேண்டியிருக்கிறது.
இதை வாசிக்கும் உங்களில் அநேகரைப் போல ‘அங்கே அத்தனை இலட்சம் பேர் தடுப்புமுகாம்களில் அவதிப்பட இங்கே இவர்கள் தின்றுகொழுப்பெடுத்து மீந்த நேரத்தில் மயிர்பிளக்கும் விவாதங்களைச் செய்கிறார்கள்’என்ற கருத்தே எனக்கும் இருக்கிறது. இவர்களோடு விவாதித்துப் பயனில்லை, இல்லாத ஊருக்கு வழி இதுவென்று நான் ஒதுங்கியிருப்பதை ‘கள்ள மௌனமாக’இவர்கள் சொல்வதன் பின்னாலிருக்கும் காழ்ப்புணர்வைத் தாளமுடியவில்லை.
முதலில் ஷோபா சக்தியின் அரசியலுக்கு வருவோம். என்னை ‘அரைகுறை’ என்று சொல்லும் ஷோபா சக்திக்குப் புலியெதிர்ப்பு அரசியலைத் தவிர வேறெதுவும் தெரிந்ததாக எனக்குத் தெரியவில்லை. அவர் அதிமேதாவித்தனமாகக் கொடுத்துவரும் நேர்காணல்கள், இணையத்தளங்களிலும் சஞ்சிகைகளிலும் எழுதிவரும் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு இவரது நிலைப்பாடு தௌ;ளத்தெளிவாகத் தெரிந்திருக்கும். பௌர்ணமியன்று நிலவு உதிக்கவில்லை என்றால்கூட ‘புலிகளின் சதியால் நிலவு மறைந்துவிட்டது’என்று கூசாமல் சொல்லக்கூடியவர்தான் இவர். தவிர, அரசியல் என்பது பட்டறிவிலிருந்தும் படிப்பிலிருந்தும் கேள்வி ஞானத்திலிருந்தும் வரக்கூடியது. ஒரு குழந்தை பிறக்கும்போதே ‘பூர்ஷ்வா’என்றுசொல்லிக்கொண்டு பிறப்பதில்லை. சும்மா ‘அரசியல்… அரசியல்’என்று எங்களுக்குப் பூச்சாண்டி காட்டவேண்டாம். நீங்கள் இயக்கத்தில் இருந்தீர்கள் என்றால், நாங்கள் இயக்கத்துள் இருந்தோம். உங்களைப் போல மொண்ணையான-ஒற்றைச்சாயலுடைய புலியெதிர்ப்பு அரசியலைத்தான் உங்கள் அகராதிப்படி ‘அரசியல்’என்ற பதத்திற்குள் அடக்குகிறீர்கள் என்றால், அந்த அரசியல் எங்களைப் போன்றவர்களுக்கு வேண்டியதில்லை.
வேதாளம் எதிலிருந்து என்மீது தொற்றுகிறது என்று பார்த்தால், “புலிகள் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருக்கவில்லை”என்று கீற்று இணையத்தளத்துக்கு நான் கொடுத்திருந்த நேர்காணலிலிருந்துதானாம். அதற்கான எதிர்வினையை மட்டும் ஷோபா சக்தி காட்டவில்லை. புலிகள் மீதான ஒட்டுமொத்த கெட்டித்த கோபத்தையும் என்மீது உருக்கி ஊற்றப்பார்க்கிறார். என்மீது எகிறிப்பாய்வதன் வழியாக அவர் தனது அரசியல் நேர்மையை நிரூபிக்கப் பார்க்கிறார். என்னைப் புலிகளின் பிரதிநிதியாக நினைத்து வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கிறார். நான் குற்றவாளிக் கூண்டில் தலைகுனிந்து நிற்கவேண்டும்@ கண்ணீர் மல்கி கதறிக் கதறியழ வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்போல. ஏனென்றால், அவர் மனதில் எனது சித்திரம் மஞ்சளும் கறுப்புமாய்த்தான் படிந்திருக்கிறது.
நான் கீற்று நேர்காணலில் நான் சொல்லியிருந்தது எனது அப்போதைய அறிதலின் பாற்பட்டது. “சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெறுவதற்காக வன்னியின் போர் மிகைப்படுத்திச் சொல்லப்படுகிறது”என்று சுசீந்திரன் வகையறாக்கள் என்று புதுவிசைக்கு, உண்மைக்கு மாறாக நேர்காணல் கொடுத்தபோது வாயை மூடிக்கொண்டிருந்த ஷோபா சக்தி, புலிகளுக்கு ஆதரவான குரல்களுக்கு மட்டும் கொதித்தெழும் மாயந்தான் என்ன? நான் அறி;ந்தவரை புலிப்போராளிகள் மக்களின் பாதுகாவலர்களாக, மக்கள் நலன்களுக்காகத் தங்களை அர்ப்பணிக்கிறவர்களாகவே இருந்தார்கள். இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான போராளிகளும் தளபதிகளும் தம்மைக் களப்பலியாக்கியது அதன் பொருட்டே. பிரபாகரன் அவர்களும் அவ்வாறான கட்டுப்பாடுடைய இயக்கத்திற்குத் தலைவராக இருக்கத்தகு தகுதிகளோடுதான் இருந்தார். அத்தகைய தலைமையின் கீழ் தவறேதும் நடக்க வாய்ப்பில்லை என்று நான் கருதினேன். கடைசிநேரத்தில் அந்த நம்பிக்கை வீண்போயிற்றென்பதை (மக்களை அரண்களாகப் பயன்படுத்தியதில்) நானும் அறிகிறேன். அப்படி நிகழ்ந்திருந்தால் அதை எவ்விதமும் நியாயப்படுத்துவதற்கில்லை. மறுவளமாக, அவ்விதம் நிர்ப்பந்திக்கப்படுமளவிற்கு களநிலைமைகள் மோசமாக அமைந்திருந்தன என்பதும் வருத்தத்திற்குரியதே. அதனால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களின் துயருக்கு ஈடாகச் சொல்ல ஒரு வார்த்தைதானும் இல்லை.
‘மக்களுக்கு புலிகள் செய்த துரோகம்’ என்ற வாசகத்தை அடிக்கடி ஷோபா சக்தி பிரயோகிக்கிறார். இதுவரை புழக்கத்திலிருந்த ‘துரோகம்’என்ற வார்த்தையின் பொருளையே தலைகீழாக மாற்றத் தவண்டையடிக்கிறார். ஆம் ஐயா… அத்தனை ஆயிரம் புலிகள் மண்ணுக்காகத் தம்மை ஈந்து மண்ணோடு மண்ணாகியது துரோகந்தான். பிரான்சிலிருந்தபடி இன்னமும் நீங்கள் பிதற்றிக்கொண்டிருப்பது மாபெரிய தியாகந்தான்.
உங்கள் இணையத்தளத்தைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். நீங்கள் இனவாத அரசுக்கெதிராகப் பேசியது அதிகமா, அன்றேல் புலிகளுக்கெதிராகக் கொந்தளித்தது அதிகமா என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
“புலிகளிடமிருந்து தப்பிவரும்போது கொல்லப்பட்ட, புலிகளால் பணயமாகப் பிடிக்கப்பட்டிருந்து இராணுவத்தின் குண்டுவீச்சுக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்ட அப்பாவிச் சனங்களுக்கு இழைக்கப்பட்ட மன்னிப்பேயற்ற துரோகம் என்பதைத் தமிழ்நதி ஏற்றுக்கொள்கிறாரா?”
என்ற கேள்வியின் வழியாக உங்களது நிலைப்பாட்டை நீங்களே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள். ஷோபா சக்தி, நீங்கள் ஒரு புலியெதிர்ப்பாளரே அன்றி ஒட்டுமொத்த அதிகாரங்களுக்கெதிரானவர் அல்ல என்பது இதிலிருந்து புலனாகவில்லையா? உங்கள் மண்டைக்குள் புலிகள் மீதான கோபம் பிரமாண்டமான மலை போல உருத்திரண்டிருக்கிறது. அதன் முன் அரசாங்கம் செய்த-செய்துகொண்டிருக்கும் அராஜகமான படுகொலைகள் சின்னக் கட்டிபோலத் தெரிகின்றன. ‘புலிகளினால் பணயமாகப் பிடித்துவைக்கப்பட்டிராவிட்டாலும்’, ‘புலிகளிடமிருந்து தப்பிவரும்போதும்’சனங்கள் கொல்லப்பட்டே இருப்பார்கள். புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன்னாலும் பேரினவாதிகளால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ‘எல்லாம் தெரிந்த தெய்வமாகிய’உங்களுக்கு நான் நினைவுறுத்த வேண்டியதில்லை. இப்போது ‘புலி நீக்கம்’செய்யப்பட்ட மக்கள் தடுப்புமுகாம்களில் எப்படி வதைபடுகிறார்கள் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை என நினைக்கிறேன்.
ஒரு போராட்ட இயக்கத்தின் குறைந்தபட்ச நியாயங்களின் அடிப்படையிலேனும் அவர்களை ஆதரிக்கும் நான் குற்றவுணர்வுகொள்ள வேண்டியவள் என்றால், ‘புலிகளின் தியாகங்களை தமிழ்மக்களுக்கெதிரான துரோகமாக’ச் சித்தரித்து, மறைமுகமாக பேரினவாத அழிப்புக்குத் துணைபோய்க்கொண்டிருக்கும் உங்களை என்னவென்பது? ‘எனக்குப் பின்னால் ஒருவன் பிலாப்பழத்தோடு நிற்கிறான் அவனை நினைத்துச் சிரித்தேன்;’ என்று வாய் கிழிபட கிழிபடச் சொன்ன மாம்பழக்காரனின் நினைவுதான் வருகிறது. ‘எத்தனை அருவியில் குளித்தாலும் கையிலுள்ள இரத்தக்கறை போகாது’என்று எழுதியிருக்கிறீர்கள். அப்படிப் பார்த்தால், தவிர்த்தே இருக்கமுடியாத அடிப்படை நியாயங்களைக் கொண்ட ஒரு போராட்டத்தை ‘மாபியா இயக்கம்’ என்று பரப்புரை செய்வதன் வழியாக இனவாதிகளுக்குச் சாமரம் வீசும், குடைபிடிக்கும் உங்கள் உடல்முழுவதும் தமிழ்மக்களின் இரத்தமாகவல்லவோ வழிந்துகொண்டிருக்க வேண்டும்?
ஒரு விடயத்தைப் பற்றி விமர்சிக்க வெளிக்கிடும்போது, முதலில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொண்டு ஆரம்பிப்பது நல்லது. நேரடியாக சம்பந்தப்படாதவர்கள் பொய்ச்சாட்சி சொல்ல வரக்கூடாது. “ஈழத்தமிழர்களது அவலங்களைப் பற்றி நீங்கள் ஏன் எழுதவில்லை?”என்ற கேள்விக்கு ஆதவன் தீட்சண்யாவிடமிருந்து வந்த பதிலே அடிப்படையில் தவறானது. நான் மக்களைப் பற்றிக் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லும்போது “விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை விரட்டியடித்தார்கள்”என்கிறார். விடுதலைப் புலிகளும் மக்களும் வேறு வேறு என்று சொல்லும் உங்களைப் போன்றவர்கள் இப்படியான பதில்களின்போது மட்டும் மக்களையும் விடுதலைப் புலிகளையும் ஒன்றாக்கிவிடுவது எதனால் என்பது எனக்குப் புரியவேயில்லை. ‘கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையெனில் மௌனமாக இருக்கப் பழகுவது நல்லது’என்பது உங்களுக்கும் தெரிந்த கவிதை வரிதான். (ஆம். அடுத்து என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்) ‘இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறை, தலித்துகள் மீதான ஒடுக்குமுறை’ என்று ஆதவன் அந்தச் சமயத்தில் கேள்வி எழுப்பவேண்டிய தேவை என்ன? ஒரு கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் வேறொரு கேள்வியை முன்வைப்பது போலத்தான் அது இருந்தது. தவிர, இஸ்லாமியர்கள் வடக்கிலிருந்து விரட்டப்பட்டது மாபெரிய தவறு என்பதை விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட எங்களைப் போன்றவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதைத் திரும்பத் திரும்பக் கேட்பது எதனால்? இது எப்படி இருக்கிறதென்றால், ‘பூமி உருண்டை’என்று நிறுவப்பட்ட பிற்பாடு, ‘பூமி உருண்டையாக இருக்கிறதா? இருக்கிறதா?’என்று நச்சரிப்பதைப் போலிருக்கிறது. அந்த வீடியோவை உங்கள் நண்பரிடமிருந்து ஒரு தடவை முடிந்தால் வாங்கிப் பாருங்கள். ‘முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டது தவறு என்றுதான் நாங்களும் சொல்கிறோம் ஆதவன்’என்று அதில் நான் சொல்லியிருக்கிறேன்.
“நீங்கள் கேட்காததால் நாங்களும் கேட்கவில்லை”என்ற தொனிப்பட ஆதவன் பேசவில்லை என்று வக்காலத்து வாங்கியிருக்கிறீர்கள். அப்படியானால் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும். “இல்லை… நீங்கள் சொல்வது தவறு. நாங்கள் எழுதியிருக்கிறோம்”என்று சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து, அவரே தனது கைப்பட வரிசைப்படுத்தியிருக்கும் கேள்விகளை என்னை நோக்கி எழுப்பியது எதனால்? உங்களுக்கு நேரம் இருந்தால் அவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றின் கீழும் ‘நாங்கள் ஏன் கேட்கவேண்டும்?’என்று எழுதிப்பாருங்கள். மிகப் பாந்தமாகப் பொருந்தும்.
உங்கள் நண்பர் ‘மூக்கைச் சிந்தி எழுதாதீர்கள்’, ‘தலைவிரிகோலமாக எழுந்திருக்கவில்லை என்பதில் மகிழ்கிறேன்’என்கிறார். நீங்களோ ‘வெற்றுப் புலம்பல்’, ‘கழிவிரக்கம்’, ‘அழுவாச்சி’என்றெல்லாம் எழுதுகிறீர்கள். நான் ஒரு பெண் என்கிற காரணத்தால் எடுத்ததற்கெல்லாம் அழுகிற ஆளாக என்னை நீங்கள் கற்பனை செய்துவைத்திருக்கிறீர்கள்.
ஆம்… நான் எனது மக்களுக்காக அழுதேன்தான். அதை ‘போலிக் கண்ணீர்’என்றும் ‘மாமிசம் விறைத்துப்போய்விடுமே என்றழுத ஓநாயின் கண்ணீர்’என்றும் பழிப்புக் காட்டுகிறீர்கள். போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பரப்புரைத்ததன் வழியாக குரூர சந்தோசம் கொள்ளும் உங்களால் மக்களுக்காக அழமுடியாமலிருக்கலாம். புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழகத்திலும் உங்கள் எழுத்தென்ற நச்சுவிதையைத் தூவுவதன் வழியாக பேரினவாத அரசாங்கத்துக்கு காவடி தூக்கும் உங்களால் மக்களுக்காக அழமுடியாமலிருக்கலாம். புலியெதிர்ப்புக் காய்ச்சலில் வெந்து தணலாகிக்கொண்டிருக்கும் உங்களால் எங்கள் மக்களுக்காக ஒரு துளிக் கண்ணீர் சிந்த முடியாமல் போயிருக்கலாம். ஆனால், வதைபடும், கொல்லப்படும் எல்லா மக்களுக்காகவும் (புலிகளாலோ அரசாங்கத்தாலோ) நான் உண்மையிலும் உண்மையாக அழுதேன் என்பதை உங்களைப் போன்றவர்களுக்கு நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை. அது பசப்புக் கண்ணீராகவே இருந்துவிட்டுப் போகட்டும். இணையத்தளங்களில் தலை கூழாகிக் கிடந்த குழந்தைகளைக் கண்டு ‘புலிகளைப் பின்தொடர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு நேர்ந்த கதி’என்று கைகொட்டி நகைத்திருக்கலாம். ஆனால், இணையத்தளங்களில் வந்த-வரும் புகைப்படங்களையும் செய்திகளையும் பார்த்து இரக்கமுள்ள எந்த மனிதராக இருந்தாலும் அழவே செய்வர். எப்படி எப்படியெல்லாம் வாழ்ந்த எங்கள் மக்கள் தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் இராணுவத்தான்களிடம் கையேந்தி நிற்பதைப் பார்த்து எவரால் அழாதிருக்க முடியும்? எந்த இனவாத அரசாங்கம் அந்த இனவழிப்பைச் செய்ததோ அதன் ஆட்சியின் கீழிருக்கும் சிங்கள இனத்தவரும்கூட அழவே செய்வர். நீங்களும் அழுதிருப்பீர்கள்; புலிகள் அழிக்கப்பட்டபோது ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பீர்கள். ஏனென்றால், என்ன விலைகொடுத்தும் புலிகளை அழிக்கவேண்டுமென்று தலைகீழாக நின்ற பேரினவாதிகளின் பெருவிருப்புக்குச் சற்றும் குறைந்ததன்று தங்களது புலிக்காய்ச்சல். அல்லது புலியெதிர்ப்புப் பாய்ச்சல்.
‘தமிழ்நதிக்கு மறுப்பு’என்று உங்களால் எழுதப்பட்ட கடிதமோ கண்ராவியோ அதைப் படித்தபோது எனக்குத் தோன்றியது ஒன்றுதான்: “இது என்மீதான கோபமன்று. விடுதலைப் புலிகள் மீதான கோபந்தான். அது எப்படி என்மீது திரும்பியிருக்கிறதென்றால், புலிகளுக்கெதிரான அவரது காகிதப் புரட்சியை அன்றேல் புரட்டை ஆணித்தரமாக நிறுவுவதற்கெதிராக ஒலிக்கும் ஒரு சிறு முனகலாக எனது குரல் அவரைப் பாதித்திருக்கிறது. அதுதான் இத்தனை எள்ளல், துள்ளல்.”
திரு.அன்ரன் பாலசிங்கத்தை ‘மதியுரைஞர் அல்ல; மதுவுரைஞர்’ என்று தேனி சொன்னதை தனிமனித தாக்குதல் என்று கண்டிக்கத் தெரிந்த பெருந்தன்மையாளரான, பெருந்தகையாளரான தங்களுக்கு, ‘பொய்க்குப் பிறந்தவர் தமிழ்நதி’என்று சொல்வது மட்டும் தனிமனிதத் தாக்குதலாகத் தெரியவில்லையா? ‘நீலிக்கண்ணீர் வடிக்கிறார்’என்பது தனிமனிதத் தாக்குதலில் சேர்த்தியில்லையா? பொதுவெளியில் எழுதிக்கொண்டிருக்கும் ஒருவரை ‘கள்ளமௌனம் சாதிக்கிறார்’, ‘முதலைக் கண்ணீர் வடிக்கிறார்’என்பதெல்லாம் எந்த நாகரிகத்தில் சேர்த்தி?
உங்களுடைய நண்பரான ஆதவன் தீட்சண்யாவோ ‘தமிழ்நதி மூக்கைச் சிந்தி பதிவு எழுதாதீர்கள்’, ‘தலைவிரிகோலமாக எழுந்திருக்காமல் இருந்தாரே’என்கிறார். நீங்களோ நான் கழிவிரக்க அரசியல் செய்வதாக எழுதியிருக்கிறீர்கள். கழிவிரக்கத்தை வைத்துக்கொண்டு ஒரு பற்பொடிப் பக்கெட் கூட வாங்கமுடியாது என்று எனக்குத் தெரியாதா? நான் என்ன போர்க்களத்திலா இருக்கிறேன்? அல்லது தெருவோரத்தில் அமர்ந்து பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறேனா கழிவிரக்கத்தினால் இரந்து கேட்க? தமிழ்நதி என்பது ஒரு பெண்ணாக இருப்பதால் கழிவிரக்கம் என்று புறந்தள்ளிவிட உங்களுக்கு வசதியாக இருக்கிறது. (இதையும் கழிவிரக்கம் என்று சொல்லிவிடாதீர்கள்) இப்படியெல்லாம் பேசுவதன் மூலமாக உங்களுடைய ஆணாதிக்க மனோபாவத்தை, அடியில் படிந்துள்ள கறுப்புவண்டலை வெளியில் அள்ளிக்கொட்டுகிறீர்கள். உருப்படியாக ஒரு கவிதையை அல்லது கதையை எழுதத் தகுதியற்றவளாக, கழிவிரக்கத்தை மட்டும் நம்பிப் பிழைப்பு நடத்துமளவு எழுத்து வங்குரோத்தில் நான் இருந்துகொண்டிருக்கவுமில்லை.
மேலும், “கடந்த சில மாதங்களாக உக்கிரமாக நடத்தப்பட்ட இனத்துடைத்தழிப்புக்கு எதிராக உங்கள் குரல்கள் உயரவில்லையே… அது ஏன்?”என்பதே நான் மதுரையில் எழுத்தாளர்களைப் பார்த்துக் கேட்ட கேள்வி. யாரைப் பார்த்து அந்தக் கேள்வியை நான் எழுப்பினேனோ அவர்கள் அதைப் புரிந்துகொண்டார்கள். ‘ஈழப்பிரச்சனையில் ஈடுபாடு கொண்டு எழுதியவர்’களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இனவழிப்புக்கு எதிராக தக்க சமயத்தில் குரல் கொடுப்பது வேறு; ஈழப்பிரச்சனை பற்றி ஆற அமரப் பேசுவது வேறு என்ற புரிதல் ஷோபா சக்திக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஈழப்பிரச்சனை குறித்து கதைகளும கவிதைகளும் எழுதிய வேறும் பலருடைய (உங்களுடைய பட்டியலில் அடங்காத) பெயர்களை வேண்டுமானால் நான் உங்களுக்குத் தருகிறேன். உங்கள் (அ)நியாயத்திற்கு பெயர்களைப் பட்டியலிட்டுக் கூட்டுச்சேர்க்காதீர்கள். உங்களைப் பற்றி எப்படியொரு பிம்பம் அவர்களது மனதில் இருக்குமென்பதை அவர்கள் சொல்லாமலே நானறிவேன். உங்களுக்கு ஜால்ரா தட்டும் ஒரு சிலரைத் தவிர யாவரும் அறிவர்.
நீங்கள் மாக்ஸிசம், கம்யூனிசம், மயிரிசம் எல்லாம் படித்திருக்கலாம். புத்தகங்களில் படித்ததையெல்லாம் நடைமுறைக்கொவ்வாமல் கக்கியும்வைக்கலாம். ஆனால், சாதாரணர்களாகிய எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், பேரினவாத அரசாங்கம் எங்கள் இனத்தை ஆரம்பத்திலிருந்து காவுகொண்டுவந்தது, நாங்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்பட்டோம், கேட்டுக்கேள்வியின்றிக் கொல்லப்பட்டோம். எங்களது மீட்பர்களாக விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றமும் எழுச்சியும் பெற்றது. (ஆம். அவர்களும் கொலைசெய்தார்கள்) அதுவொரு நீதியான போராட்ட இயக்கமாக எங்களைப் போன்ற சாதாரணர்களுக்குத் தோன்றியது. நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் அவர்கள் வளர்ந்தார்கள். போராடினார்கள். பேரினவாதத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள். இது எங்களுக்கு தெரிந்த எளிய சூத்திரம். என்ன காரணத்தினால் உங்களுக்குப் புலியெதிர்ப்புக் காய்ச்சல் வந்தது என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த கம்பசூத்திரம்.
நீங்கள் பேசும் அரசியலில் “ஐயோ! புலிகள் வென்றுவிடுவார்களோ… வென்று விடுவார்களோ என்ற பதைப்பை இதுநாள்வரை கண்டோம். “தோற்றுவிட்டார்கள் ஹைய்யா தோற்றுவிட்டார்கள்” என்ற களிப்பை இப்போது காண்கிறோம். ஆக, உங்களுக்கு மக்களைப் பற்றி ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. புலிகள் தோற்கவேண்டும் அதுவொன்றே உங்களது ஒரே முனைப்பு. இலக்கு. குறிக்கோள். வேண்டுதல்.
தலைவர் பிரபாகரன் எனக்குக் கடவுளாயிருப்பதில் உங்களுக்கேன் இவ்வளவு கடுப்பு என்று எனக்குப் புரியத்தானில்லை. ஒருவேளை யாரை நான் வழிபடவேண்டும் என்பதற்கு உங்களிடம் விண்ணப்பம் அனுப்பி அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ என்னவோ… எனக்குப் பிடித்திருந்தால் சாத்தானைக்கூட வணங்குவேன். (இரண்டும் ஒன்றுதான் என்று நீங்கள் சொல்வதும் கேட்கிறது) சீரடி பாபாவையோ தெருவில் போகிற விறகுவெட்டியையோ தெருப்பொறுக்கியையோ கூட கும்பிடுவேன். உங்களுக்குக் கடுக்கிறதா என்ன? யாரை நாம் வணங்குவது என்பதுகூட நீங்கள் குறிப்பிடும் ‘தனிமனித புண்ணாக்கு’ உரிமையுள்தான் அடங்குகிறது என்றறிக.
என்ன செய்தாலும் நரி நரிதான். புலி புலிதான். நரி கோட்டும் சூட்டும் போட்டுக்கொள்ளட்டும். கழுத்துப்பட்டை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளட்டும். தம்மபதத்தை கையில் வைத்துக்கொண்டு கருணையைப் போதிக்கட்டும். சமவுரிமை, சமாதானம், புத்தம், காந்தியம் எதைவேண்டுமானாலும் பேசட்டும். எங்களைப் போன்றவர்களின் கண்களில் நரி நரிதான். புலி புலிதான். ஒருபோதும் நரிகளை வணங்குதல் செய்யோம். தொண்ணூறு வீதமான தமிழர்களின் நிலைப்பாடு இதுவாகவே இருக்கிறது. (கருத்துக்கணிப்பு வேண்டுமானால் நடத்திப்பாருங்கள் ஷோபா சக்தி)
களத்துப்புலிகள் இப்போது அரங்கில் இல்லை. பார்க்கலாம்…. காகிதப்புலிகள் நீங்கள் என்ன தீர்வை முன்வைக்கிறீர்கள் என்று. அதுதான் நாடு நாடாகப் போய்க் கூட்டம் போடுகிறீர்களே… இப்போது தமிழகத்திற்கு விஜயம் செய்திருப்பதாக அறிகிறேன்.
‘டெக்கான் குரோனிக்கல்’, ‘தீராநதி போன்ற ஊடகங்களில் உங்கள் நிலைப்பாட்டைப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறீர்களே… ‘செத்தும் கெடுத்தது இந்தப் புலி’என்ற வகையில். நண்பர்களே! ஷோபா சக்தி என்ன சொல்லியிருக்கிறார் என்று இங்கே போய்ப் பாருங்கள். http://www.shobasakthi.com/?p=470
முன்பு எழுதியதுபோலத்தான் பூனை இல்லாத வீட்டில் எலிக்குக் கொண்டாட்டம். அல்லது புலி இல்லாத காட்டில் நரிக்குக் கொண்டாட்டம் என்றும் சொல்லலாம். கொண்டாடுங்கள் ஷோபா சக்தி. தங்கள் இனவிடுதலைக்காகப் போராடி, பல்வேறு நாடுகளின் கூட்டுச் சதி என்ற வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட ‘மாவீரர்களின் வீழ்ச்சியைக் கொண்டாடிய மகோன்னதன்’ என்று உங்கள் பெயர் வரலாற்றில் பதியப்படத்தான் போகிறது. எங்களைப் போன்றவர்களின் வாயை உங்கள் வாதத்திறமையால் மூடிவிடலாம். வரலாற்றின் வாயை எதைக்கொண்டு மூடுவதாக உத்தேசம்?