1.30.2007

இன்றொருநாள் எனினும்…



கண்ணாடிக் குவளையிலிருக்கும் உவகை
செந்நிறத்தில் சொட்டுச் சொட்டாக
எனக்குள் பெருகி வழிய
இலையுதிர்த்த மரம்
புசுக்கெனத் துளிர்க்கிறது.
தரையே! என் மாயக்கம்பளமே!
இந்தப் பூமி போதும் எனக்கு.

கனிவு பொங்கும் கெட்டவார்த்தைகளின்
கதவு திறக்கிறது.
உலகம் முழுவதும்
நண்பர்களாலும் காதலர்களாலும் ஆன
இந்த உலகத்தைக் கொண்டாடுகிறேன் ஓஷோ!

மூர்க்கத்தின் தந்திகள்
உடலெங்கும் அதிர
ஒரே இசைப்பிரவாகம்…!
மிதக்கிறதா… மூழ்கிடுமா என்னறை?

அம்மா! மண்டியிட்டுக் கேட்கிறேன்
உணவருந்தும் இந்தப் பீங்கானை
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே!
சிலீரென்றெழும் ஓசையில்
என் பால்யத்தை நினைவுகொள்ள.