2.23.2010

கிருபாநந்தினியும் இலங்கைத் தமிழர்-இந்தியத் தமிழர் மேலும் சில அபத்தங்களும்….

நண்பர்களோடு உரையாடும்போது அடிக்கடி ஒரு வாசகத்தைப் பிரயோகிப்பதுண்டு: “உறங்கும்போதும் கால்களை ஆட்டிக்கொண்டே உறங்கவேண்டும்; இல்லையெனில் இறந்துவிட்டோமென்று நினைத்து எடுத்துப் புதைத்துவிடுவார்கள்”. நான் ஒரு மாதகாலமாக சென்னையிலே இல்லை. போய்த் தங்கியிருந்த இடத்திலோ இணையவசதி கிட்டியும் கிட்டாததுமான சூழல். செய்திக்குருடாய் இருப்பது வருத்தமாகவும் அதேசமயம் அதிலொரு அஞ்ஞான நிம்மதியும் இருப்பதாய் உணர்ந்தேன். நான் குமுதத்தில் எழுதியிருந்த ‘இங்கு ஈழம் விற்கப்படும்’என்ற கட்டுரையைக் கிண்டலடித்து கிருபாநந்தினி என்றொரு பதிவர் எதிர்வினையாற்றியிருப்பதாக நண்பர் ஒருவர் தொலைபேசியூடாகச் சொன்னதையடுத்து, இணையத்தொடர்புள்ள இடமொன்றுக்குச் சென்று அதை வாசித்துத் தொலைத்தேன். முதலில் வருத்தமாக இருந்தது. பிறகு, எப்போது எதை எழுதினாலும் சர்ச்சைக்காளாகும் நச்சுச்சூழலை நினைத்து களைப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது. சர்ச்சைகளால் பிரபலமாகும் சிறுபிள்ளைத்தனமான ஆர்வக்கோளாறு முற்றிலும் தீர்ந்துபோன நிலையில் உண்மையிலேயே அயர்ச்சியாக இருந்தது.

சுண்டைக்காய்/பிசாத்து தமிழ்நதிக்கே இந்த நிலையெனில் ஜெயமோகன், சாரு வகையறாக்களுக்கு எந்த நிலை என்று நினைத்துப் பார்த்தேன். இனியொருபோதும் அவர்களது பெயர்களை இழுத்து எழுதக்கூடாதென்று நினைக்கும்படியான பரிவும் பரிதாபமும் மேலிட்டது. (இதற்குள் ஈழப்பிரச்சனையில் சாரு-ஜெயமோகனின் நிலைப்பாடு பற்றி நான் எப்போதோ எழுதியிருந்த கட்டுரைக்கு புதிய பின்னூட்டங்கள் வந்திருந்தன. அதன் பின்னணி யாது? யாராவது அந்தக் கட்டுரையை எடுத்து எங்காவது போட்டிருக்கிறார்களா? எனது தலையை உருட்ட புதிதாக எவரேனும் கிளம்பியிருக்கிறார்களா? என்ற கேள்விகளுக்குப் பதில் அறியாத நிலையில் இதனை எழுதவாரம்பித்திருக்கிறேன்.)

கிருபாநந்தினிக்குப் பதில்சொல்லிக்கொண்டிருந்தால் நேரவிரயந்தான் மிஞ்சுமெனத் தெரிந்தும், அன்றைக்கிருந்த வரண்ட மனோநிலையில் எழுந்த கொதிநிலையில் மனதில் தோன்றிய எதையோ போய்ப் பதிலாக எழுதிவிட்டு வந்தேன். அப்படிக்கூடப் பதிலளித்திருக்க வேண்டியதில்லை என்பதைக் காலந்தாழ்த்தி உணர்ந்துகொண்டேன். ஆகவே, கிருபாநந்தினி வரலாற்றைத் தெரிந்துகொள்ளும்வரை காத்திருக்கலாமென முடிவுசெய்து அவரைக் கடந்துசெல்கிறேன். ஆனால், அவருடைய பதிவுக்கு வந்த பின்னூட்டங்களில் சில என்னை ஆழ்ந்து யோசிக்கத் தூண்டின. மனித மனம் எவ்வளவு காற்றோட்டமில்லாத குறுகிய பரப்பினுள் இயங்குகிறது என்பதை நினைக்குந்தோறும் வியப்பாக இருக்கிறது.

பின்னூட்டங்களில் ‘நாங்கள்’, ‘நீங்கள்’என்ற பதங்களைப் பிரயோகித்திருந்தோம். ‘இலங்கைத் தமிழர்கள்’, ‘இந்தியத் தமிழர்கள்’என்று வேறு சிலர் பிரித்துப் பேசியிருந்தார்கள். முன்பொரு பதிவில் குறிப்பிட்டிருந்ததுபோல, “நான் நாடு, மொழி, இனம், எல்லைகளைக் கடந்த பெருந்தன்மையானவள்; உலகிலுள்ள அனைத்து உயிரையும் ஒன்றுபோலவே நேசிக்கிறேன் என்று நான் சொல்லமாட்டேன்”. எனது இனம், எனது மொழி, எனது மக்கள் என்ற தனிப்பட்ட வாஞ்சை எனக்குண்டு. அதேசமயம், காரணமற்ற காழ்ப்புணர்வை மற்றவர்கள்மீது ஊற்றும்படியாக நடந்துகொள்ளும்பட்சத்தில் என்னை நானே மதிக்கத் தவறுவேன் என்பதிலும் சந்தேகமில்லை.

‘இலங்கைத் தமிழர்கள்’ என்றோ ‘இந்தியத் தமிழர்கள்’என்றோ யாருமில்லை; ‘தமிழர்’என்றொரு இனம் மட்டுமே உண்டு என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு. இந்தத் ‘தொப்பூள்கொடி உறவுகள்’, ‘இரத்தத்தின் இரத்தம்’, ‘உடன்பிறப்பு’இன்னோரன்ன உணர்ச்சிவசப்பட்ட அரசியல் வணிகச் சொற்களுக்கு அப்பாற்பட்ட உறவு நம்முடையது.

“நீங்கள் எங்களைக் கைவிட்டீர்கள்; நீங்கள் எங்களைச் சாகக்கொடுத்தீர்கள்; நீங்கள் எங்களைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை”என்று ஆற்றாமையால் பிதற்றுவதெல்லாம் இழப்பின் வலியினாலேயன்றி, இன்னொரு நாட்டவர் என்ற வன்மத்தினாலல்ல. “எங்களை ஏன் கைவிட்டீர்கள்?”என்று இஸ்ரேலியர்களைப் பார்த்து எங்களால் கேட்கமுடியாது. பதவிக்கும் பணத்துக்கும் வெட்கம்கெட்டு விலைபோன அரசியல்வாதிகள் வாழ்ந்துகொண்டிருக்கும் இதே மண்ணில்தான் தன்னினத்துக்காக தன்னுடலைக் கொழுத்திக் கருகிய முத்துக்குமார் என்ற மாவீரன் வாழ்ந்து மறைந்தான்.

எந்தச் சமரசத்தையும் இலாபத்தையும் முன்னிட்டு மேற்கண்ட வரிகளை நான் எழுதவில்லை. எனக்கு எவரிடமிருந்தும் எந்தக் காரியமும் ஆகவேண்டியிருக்கவில்லை. ஆற்றியிருக்க வேண்டிய ஒரு வரலாற்றுக் கடமையிலிருந்து தமிழகம் வாழ் தமிழர்கள் தவறிவிட்டார்கள்; அவர்களது அரசாங்கங்கள் என்ற அதிகாரங்கள் தமது இரும்புக்கரங்களினால் அடக்கியபோதிலும் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும் என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால், ‘நீங்கள் வேற்று நாட்டவர்’என்று பாகுபாடாக ஒருபோதும் கருதியதில்லை. “சிலோன்காரங்களுக்கு வீடு கொடுக்கக்கூடாது”என்று பேசுகிற தமிழகம்வாழ் சிலரையும், “வயிற்றுவலியை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பக்கூடாது”என்று சொல்கிற யாழ்ப்பாண வேளாளச் சிந்தனாவாதிகளையும் புறங்கையால் ஒதுக்கிவிட்டுப் பொதுப்படையாகப் பார்க்கலாம்.

கிருபாநந்தினி உட்பட பலரும் இராஜீவ் காந்தி கொலையைத் தலைமேல் தூக்கிப்பிடித்துக்கொண்டு ஆடுகிறார்கள். ஆ… வூவென்றால் ‘இராஜீவ் காந்தியைக் கொன்னுப்புட்டாங்களே… கொன்னுப்புட்டாங்களே’என்கிறார்கள். அமைதிப்படைக் காலத்தில் பல்லாயிரக்கணக்கில் ஈழத்தில் பலியெடுக்கப்பட்ட மக்களை அத்தகையோர் வசதியாக மறந்துவிட்டார்கள். ஒரு நாட்டை ஆளும் (அன்றேல் ஆண்ட) பிரதமரின் உயிர் மட்டுமே உயிர் மற்றதெல்லாம் மயிர் என்று சொல்வது விசித்திரமாக இருக்கிறது. மனித உயிரின் மதிப்பைப் பணத்தினாலும், பதவியாலும், அதிகாரத்தினாலும் அளப்பதுபோலிருக்கிறது. இந்தப் பாரபட்சப் பாவத்தை எந்தக் கங்கையிலே கொண்டுபோய்க் கழுவுவது? சேலத்தைச் சேர்ந்த ஒரு கவிஞர் (செல்வக்குமார் என்று நினைக்கிறேன்) எழுதினார்.
“ஒரு பிணத்தை
பத்தொன்பது ஆண்டுகளாக
தோண்டித் தோண்டி எடுத்து
ஒப்பாரி பாடிக்கொண்டிருக்கிறார்கள்”

கறுப்பனென்றால் கள்ளன்; பாகிஸ்தானி ஊத்தை; ஈழத்தவன் வன்முறையாளன்; இந்தியன் ஏமாற்றுபவன்; வெள்ளைக்காரன் சுத்தம் பரிசுத்தம் என்றெல்லாம் பொதுப்புத்தியிலே ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது। எல்லா இனங்களிலும் எல்லா நாடுகளிலும் அனைத்து மொழி பேசுபவர்களிடையேயும் கள்ளன்களும்(ளிகளும்), ஊத்தையன்களும், வன்முறையாளர்களும், கொலைகாரர்களும், ஊழல்பேர்வழிகளும், பாலியல் கொடூரன்களும், சமூக விரோதிகளும், புனிதர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். துரோகி-தியாகி என்ற பதங்களையெல்லாம் பிரேதப்பரிசோதனை செய்துகொண்டிருக்கும் இந்தத் திசைமாறுகாலகட்டத்திலே, பெரும்பாலான ஈழத்தமிழர்களால் துரோகி என்று சுட்டப்படுகிற, வெறுக்கப்படுகிற துரோகிகள் ஈழத்தமிழர்களுக்குள்ளேயே இருக்கிறார்கள். இந்நிலையில், “நீரே குற்றவாளி”என்று தமிழகத் தமிழர்களை எங்கள் ஆற்றாமையினால் சாடுகிறோம். இந்திய அரசின் கைகளில் படிந்துள்ள இரத்தக்கறை மிகத் துல்லியமானது. அதைத் தட்டிக் கேட்கத் தகுதியற்றுப்போன தமிழக அரசின் ‘அதிகார எல்லை’களும் நாமறிந்ததே.

இந்நிலையில், “எங்களை நீர் கைவிட்டீர்…எங்களை நீர் பலிகொடுத்தீர்…”என்று மீண்டும் மீண்டும் தமிழகத்தாரைக் குற்றஞ்சாட்டக் காரணம், இத்தனை கோடிப் பேரிருந்தும் ‘என்னய்யா கிழித்தீர்கள்?’என்ற ஆற்றாமைதான். கோபந்தான்.கையறு நிலை கையறு நிலை என்றொரு கடைகெட்ட, அர்த்தம்கெட்ட சொல்லை வெறுக்கிறோம். அந்தத் தார்மீகக் கோபத்தில் ‘நீங்கள்’, ‘நாங்கள்’, ‘இந்தியர்’, ‘ஈழத்தவர்’ என்றொரு புண்ணாக்குப் பாகுபாடுமில்லை.

கிருபாநந்தினியும் குப்பன் யாகூ போன்ற மிகச்சிலரும் (நல்லவேளையாக பெரும்பான்மையான பதிவுலக நண்பர்கள் மிகத் தெளிவோடு இருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்) நான் ஏதோ தமிழகத்தமிழர்களுக்கு எதிரி என்ற தோற்றப்பாட்டைக் கொணரப்பார்த்தார்கள். அதில் தோற்றுப்போனார்கள் என்பது வேறு விடயம்.

ஒப்பீட்டளவில் கனடாவைவிட, ஈழத்தைவிட எனக்குத் தமிழகத்தில்தான் நண்பர்கள் அதிகம்। பட்டியலிடப் போனால் நூற்றுக்கணக்கில் வரும். கொஞ்சம் ‘படம் காட்டுவது’போலவுமிருக்கும். அதனால் பெயர்களைத் தவிர்க்கிறேன். எனது வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தவர்களும், துயரத்தைப் பரிசளித்தவர்களும்கூட அந்த நண்பர்களுள் உள்ளடங்குவர்.
இதைத் தன்னிலை விளக்கமாக எடுத்துக்கொள்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம். ‘இதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டியது அவசியமா?’என்று கேட்கும் அக்கறையுள்ள நண்பர்கள் என்னை மன்னித்துவிடுங்கள். ஈழம்-தமிழ்நாடு என்பது தமிழ்நதி சார்ந்த தனிப்பட்ட விடயமல்ல. ஒருசிலருக்காவது என்மீது ஏற்படக்கூடிய கசப்பு எனது மக்களைப் பாதிக்கக்கூடாது என்பதில் நான் கவனமாயிருக்கிறேன்.
கடைசியாக ஒன்று:
“இதன் மத்தியில் எல்லாப் பத்திரிகையாளர்களும் தொழில்ரீதியாக எழுத முடிந்ததை எழுதிக் காசு பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்। நீங்கள் உட்பட.”என்று,
கிருபாநந்தினியின் பதிவில் தனது பெயரை வெளியிடத் துணிச்சலற்ற அனானி ஒருவர் வந்து பின்னூட்டியிருந்தார்.

அனானி நண்பரே,

தமிழில் எழுதிக் ‘காசு பார்ப்பது’அத்தனை எளிதென்றா நினைக்கிறீர்கள்? நீங்கள் ஏன் இவ்வளவு அறிவிலியாக இருக்கிறீர்கள் ஐயா அல்லது அம்மணி? வெளியூரில் நடக்கும் ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு எவ்வளவு செலவழிக்க வேண்டியிருக்கிறது என்பதை உங்களால் ஊகிக்க முடிகிறதா? இதுவரையில் எனது நான்கு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிய ‘கானல் வரி’, ‘இரவுகளில் பொழியும் துயரப்பனி’பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கில்லை.புத்தகம் வெளியாகிய கையோடு நான் ஊருலாத்தக் கிளம்பிவிட்டேன். மற்ற இரண்டும் வெளியாகி ஆண்டுகளாகியும் எனக்கு ‘ராயல்டி’தொகை என்று ஒரு சதமும் கிட்டவில்லை. (ஒருவேளை அப்படி ஒன்று இல்லவே இல்லையோ?) ‘எழுத்தாளர் பிரதிகள்’என்று சில கிடைத்ததோடு சரி. ஆனந்தவிகடனிலோ குமுதத்திலோ வெளியாகும் கட்டுரைகள், கவிதைகளுக்கு சில ஆயிரங்கள் கிடைத்திருக்கின்றன. (அண்மையில் ஆனந்தவிகடனில் கவிதைகள் வெளியாகியிருந்ததற்குச் சன்மானமாக ஆயிரத்தைந்நூறு ரூபாய் அனுப்பியிருந்தார்கள்) எனது வாழ்க்கை முறையை, பயணங்களை, ஊதாரித்தனத்தை, செலவழிக்கும் தன்மையை நீங்கள் அறிந்தவராக இருந்திருந்தால் மேற்கண்ட உயரிய கருத்தை உதிர்த்திருக்க மாட்டீர்கள். நான் எழுதுவது ‘காசு பார்ப்பதற்காக’இல்லை. அது வரைவிலக்கணங்களுக்கு உட்படாத, வார்த்தைகளில் புரியவைக்கமுடியாத திருப்தி கலந்த ஓருணர்வு. ஆத்மார்த்தம் என்ற வார்த்தை எழுதித் தேய்ந்துபோயிற்று. அந்தப் பிடிமானத்தில்தான் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். ஒருவேளை ‘நான் வாழ்ந்தேன் என்பதற்குச் சாட்சியமாக’ எதையாவது விட்டுச்செல்ல முயல்கிறேனோ என்னவோ…

கிருபாநந்தினி ஆரம்பித்து வைத்த சர்ச்சை இப்படியொரு பதிவில் முடிகிறது. ஏதோவொரு ஆர்வக்கோளாறினால் அவர் எழுதிவிட்டார். அவருக்குக் கிடைத்த எதிர்வினைகள் அவரை எழுத்தினின்று பின்வாங்கச் செய்துவிடக்கூடாதென்பதே ஒரு பெண்ணாக எனது ஆதங்கம். அதேசமயம், பரபரப்பு வேண்டி ஒருவரைக் குறித்து அவதூறு செய்வதன் முன் ஒன்றுக்குப் பல தடவைகள் அவர் சிந்தித்திருக்க வேண்டும்.

நான் இல்லாதபோதும் என்னோடு இருக்கும் நண்பர்களாகிய ரதி, செந்தழல் ரவி, புளியங்குடி, சந்தனமுல்லை, தீபா, ஸ்வாதி மற்றும் தங்களது பின்னூட்டங்களின் வழியாக ஈழப்பிரச்சனையின் ஆழத்தையும் நியாயத்தையும் எடுத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

60 comments:

அகநாழிகை said...

//ஏதோவொரு ஆர்வக்கோளாறினால் அவர் எழுதிவிட்டார்//

தமிழ்நதி,
இதுதான் சரி என்று நினைக்கிறேன். முழு அக்கறையற்று பொதுப்புத்தியோடு எழுதப்பட்ட மூன்றாந்தர மட்டமான விமர்சனம் அது. இதனால் கிருபா நந்தினிக்கும், இதை மேலும் புகையச்செய்து பற்றியெரிய விட்டு குளிர்காய்கிறவர்களக்கும், அளவிட இயலாத புகழும், சந்தோஷமும் கிடைத்திருக்கும்.
0
போகிற போக்கில் ராயல்டி பற்றிய ஒரு போடு போட்டுவிட்டீர்கள். இதுபற்றி தனிப்பதிவாகவே எழுதவேண்டும்.

- பொன்.வாசுதேவன்

Anonymous said...

கடைசி இரண்டு பத்திகளும் உங்கள் மனநிலையை சொல்லியது.
என் பின்னூட்டம் கிருபாநந்தினி வெளியிடவில்லை.
ஆர்வக்கோளாறு என்று பெரிது பண்ணாதது உங்கள் பரந்த மனப்பான்மையைக்காட்டுகிறது.

தமிழ்நதி said...

"போகிற போக்கில் ராயல்டி பற்றிய ஒரு போடு போட்டுவிட்டீர்கள். இதுபற்றி தனிப்பதிவாகவே எழுதவேண்டும்."

ஆஹா! பண்ணுங்க வாசுதேவன்.இதுவொரு சர்ச்சையாகக் கிளம்பாமலிருக்க வேண்டுமே என்பதுதான் எனது இப்போதைய பிரார்த்தனை:) என்ன சொன்னாலும் எதையாவது கிளப்பிவிட்டுவிடுகிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல.

நன்றி சின்ன அம்மிணி,

நீங்கள் செந்தழல் ரவியின் வலைப்பூவில் இட்டிருந்த பின்னூட்டம் பார்த்தேன். அல்லது புளியங்குடியிலா? நீங்கள் யாராக இருக்குமென்று மூளையைத் தட்டிப் பார்த்தேன். தெரியவில்லை. ஆனால், உங்களை நான் அறிவேன் என்றே நினைக்கிறேன். இப்படியான சமயத்தில் தரும் ஆதரவு உண்மையில் மனதை நெகிழவைப்பதாக இருக்கிறது.

சந்தனமுல்லை said...

நீங்கள் பொருட்டாக எண்ணாமல் கடந்தது குறித்து மகிழ்ச்சி. தொடர்ந்து எழுத வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

butterfly Surya said...

சரிதான். ஆர்வ மிகுதியாயால் வந்த கோளாறுதான்.

பொறுமையுடன் கையாண்ட விதம் நல்லதே.

வாசு .. ராயல்டி பற்றிய உங்கள் பதிவிற்காக காத்திருக்கிறோம்.

Anonymous said...

புளியங்குடியில்தான்.

ராஜ நடராஜன் said...

//ஆற்றியிருக்க வேண்டிய ஒரு வரலாற்றுக் கடமையிலிருந்து தமிழகம் வாழ் தமிழர்கள் தவறிவிட்டார்கள்; அவர்களது அரசாங்கங்கள் என்ற அதிகாரங்கள் தமது இரும்புக்கரங்களினால் அடக்கியபோதிலும் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும் என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக்கருத்தில்லை.//

கடந்த ஒரு வருடகால வரலாற்று நிகழ்வுகளை திரும்பிப் பார்த்தால் முத்துக்குமார் போன்று தனிமனிதனாகவோ,மாணவர்கள்,நீதி
துறை சார்ந்த சட்ட ஆலோசகர்களோ ஏனைய தமிழ் உணர்வாளர்கள் அனைவரது போராட்டங்களும்,அரசு அதிகார பீடத்தின் சூழ்ச்சியாலும்,அரசியல்வாதிகளின் தூரப்பார்வையில்லாத சுயநல நோக்காலும் தோல்வியடைந்து போனது.தமிழகம் வரலாற்றுக் கடமையிலிருந்து தவறியது என்பதில் உண்மையே.

சின்னப்பயல் said...

"கிருபாநந்தினியும் - தமிழர்களும்" ங்ற தலைப்பு தான் சரி.

//அதெல்லாம் இருக்கட்டும்... , பின்னூட்டங்களுக்கு யாராவது ராயல்ட்டி குடுக்கிறாங்களான்னு விசாரிச்சு சொல்றீங்களா ?//

Unknown said...
This comment has been removed by the author.
தமிழ்நதி said...

வாசுதேவன்,

நீங்கள் KVR இன் கேள்விக்குப் பதிலளித்துவிட்டதாக அவர் சொல்லி தனது பின்னூட்டத்தை நீக்கியிருக்கிறார். அதையொட்டி நீங்கள் எழுதிய பின்னூட்டத்தைப் பிரசுரிப்பதா என்னவென்று தெரியவில்லை. தயவுசெய்து பதிலளியுங்கள்.

250ரூபாவிற்கு காப்பி விற்கும் கடையில் போய் புத்தகம் வாங்கக்கூடாதா? அல்லது தமிழ்நதியாகிய நான் ஆளுயரக் காப்பிக் கோப்பையுடன் சிரித்தபடி தோன்றினேன் என்று கிருபாநந்தினி சொன்னதைத்தான் நீங்களும் சொல்ல வருகிறீர்களா? எனக்குப் புரியவில்லை. மீண்டும் மீண்டும் நான் சொல்ல நினைப்பது ஒன்றுதான். என்னால் 'சிற்றுவேசன் போஸ்'கள் கொடுக்கமுடியாது. கட்டுரைக்கேற்றபடி முகபாவங்களை மாற்றிக் கொடுக்க எனக்குத் தோன்றுவதில்லை. அப்போதைய மனநிலை எவ்விதம் இருக்கிறதோ அப்படியே புகைப்படங்களும் அமைந்துவிடுகின்றன. 'இங்கே ஈழம் விற்கப்படும்'கட்டுரையில் பாவிக்கப்பட்ட புகைப்படம் உண்மையில் புத்தகக் கடை விளம்பரக் 'கதை'க்காக எடுக்கப்பட்டது. அதை இதற்காகப் பாவித்ததுதான் தவறோ? குமுதக்காரர்கள் கவனிக்கட்டும்.

தவிர, 'இரக்கப் போனாலும் சிறக்கப் போ'என்று என் அம்மா சொல்வார்கள். சிந்தனையில் தெளிவு எத்தனை அவசியமோ அத்தனை அவசியம் நம்மை நாம் கவனித்துக்கொள்வதும். இல்லையா? அதற்காக ஜிங்கிச்சா, ஜிகினா வேலைப்பாடுகள் கொண்ட உடைகளை அணிந்துசெல்வேன் என்றில்லை. சுத்தமும் நேர்த்தியான உடைதெரிவும் உண்டல்லவா? இந்த காப்பிக் குவளைதான் உறுத்துகிறதெனில், அதை இனிவருங் காலத்தில் தவிர்த்துக்கொள்கிறேன். யாராருக்கோ எதெதிலோ எல்லாம் கண்டம் வருகிறது. எனக்கு காப்பிக் குவளையில்... ம்... எங்கே போய் முட்டிக் கொள்வது?

Sanjai Gandhi said...

//(இதற்குள் ஈழப்பிரச்சனையில் சாரு-ஜெயமோகனின் நிலைப்பாடு பற்றி நான் எப்போதோ எழுதியிருந்த கட்டுரைக்கு புதிய பின்னூட்டங்கள் வந்திருந்தன. அதன் பின்னணி யாது? யாராவது அந்தக் கட்டுரையை எடுத்து எங்காவது போட்டிருக்கிறார்களா? எனது தலையை உருட்ட புதிதாக எவரேனும் கிளம்பியிருக்கிறார்களா? என்ற கேள்விகளுக்குப் பதில் அறியாத நிலையில் இதனை எழுதவாரம்பித்திருக்கிறேன்.)//

செந்தழல் ரவி தான் அவர் பதிவின் பின்னூட்டத்தில் சுட்டி கொடுத்திருந்தார்..

ராஜிவ்காந்தி கொலை பற்றி சொல்லி இருப்பதில், சொல்வதற்கு என்னை போன்ற பாமரனுக்கும் கூட கருத்து இருப்பினும் , சொல்லி சொல்லி அயர்ச்சியாக இருக்கிறது. பல சமயங்களில் பின்னூட்டங்கள் பதிவின் நோக்கத்தை சிதைத்துவிடுவதால், இன்னொரு சமயம் பேசுவோம்..
( மலைப்பகுதி, வனப்பகுதி பெண்கள் தமிழக காவல் துறையால் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். அதற்கு தண்டனையாக அந்ததந்த காலத்தில் ஆட்சி செய்த தமிழக முதல்வர்களை கொல்ல சொல்வீர்களா?)

நாங்கள்( இந்தியத் தமிழர்கள்) என்றும் நானும் அங்கு சொல்லி இருந்தேன். அது ரதி என்பவரின் அனாவசியமான ஒரு கமெண்டுக்காக மட்டுமே.. மற்றபடி யாரையும் பிரித்துப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடெல்லாம் இல்லை.

ஸ்டாலின் குரு said...

உங்களது கதை,கட்டுரைகள்,விளககங்களுக்கும்
உங்கள் கவிதைகளுக்கும் வேறுபாடு காண்பதே
கடினமாக இருக்கிறது.அணைத்திலும் கவித்துவமே
நிரம்பிக் கிடக்கிறது.மற்றபடி உங்கள் மீது
விமர்சனங்கள் என்கிற பெயரில் வருகின்ற,
வடிவேலு வார்த்தைகளில் சொன்னால் சின்னப்
புள்ளைத்தனமான பதிவுகளுக்கு பதில் எழுதி உங்கள்
நேர்மையை நிருபிக்க வேண்டியது இல்லை
என்பதே எனது தாழ்மையான கருத்து.


tchaaa எழுத்தாளருக்கான கெத்தே இல்லாம
இப்படி இருக்கீங்களே :)

குட்டிபிசாசு said...

//பெரும்பாலான ஈழத்தமிழர்களால் துரோகி என்று சுட்டப்படுகிற, வெறுக்கப்படுகிற துரோகிகள் ஈழத்தமிழர்களுக்குள்ளேயே இருக்கிறார்கள். இந்நிலையில், “நீரே குற்றவாளி”என்று தமிழகத் தமிழர்களை எங்கள் ஆற்றாமையினால் சாடுகிறோம். //

புரிந்துணர்வுக்கு நன்றி. பொதுப்புத்தியில் ஈழ விடயத்தில் இந்திய பத்திரிகைகளின் பெருந்தன்மையை பற்றி பேசும் அந்தப் பெண்பதிவர் உங்களின் முந்தைய பதிவுகளை வாசித்தாரா என்பது தெரியாவிடினும், ஒரு சக பெண்பதிவர் குறித்து யோசியாமல் எழுதியிருந்தார். தமிழ்நதியைப் போல் தனக்கெல்லாம் குமுதம், ஆவியில் எழுதும் வாய்ப்பில்லையே என்று தன்னுடைய இரு பதிவிலும் குறிப்பிட்டு எழுதி இருந்தமை அவருடைய எண்ணத்தின் பிரதிபலிப்பு.

padmanabhan said...

i want to quote kavipperarasu vairamuthu's kavithai.

"kathum naaikku karanam vendaam
thannizhal paarthu thane kuraikum'
...............................

ulagin vaayai thaipathu kadinam
unthan sevigal mooduthal sulabam"

with regards
padmanabhan.r

விஷ்ணுபுரம் சரவணன் said...

தோழமைமிக்க தமிழ்நதி..

கிருபா நந்தினிக்கு நானும் பின்னூட்டம் அனுப்பியிருந்தேன் முதல்முறை சரியாக அனுப்பவில்லை இரண்டாவதுமுறை சரியாக அனுப்பினேன் அவர் போடவில்லை. கோவை நண்பர் யுவனிடன் விசாரித்தேன் .

குமுதத்தில் உங்களின் பதிவினை தோழர் பாமரனும் சரியாக வந்திருப்பதாக சொல்லியிருந்தார்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கவிதையின் மீதி பகுதியா அல்லது தனி கவிதையா என தெரியவில்லை அதில் வரும் இரு வரிகள்.

ஒரு சவத்திற்கு
தோண்டிய குழியில்
எத்தனை ஆயிரம்பேர்களைத்தான்
புதைப்பது..

பழமைபேசி said...

வணக்கம்! நான் இன்றைக்குத்தான், இது குறித்த அனைத்து இடுகைகளையும் வாசித்தேன். அதன்பொருட்டு, எமது தாழ்மையான எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எவருக்கும் எவருடைய படைப்பையும் நல்ல முறையில் விமர்சனம் செய்யும் உரிமை உண்டு. அந்த வகையிலே, கிருபாநந்தினியின் விமர்சனம் சரியே. ஆனால் அவர் வைத்திருக்கும் வாதம் எமக்கு ஏற்புடையது அன்று.

அதற்கு எதிர்வினையாக, எம் நண்பன் செந்தழல் இரவி இட்ட இடுகையும் சரியே. ஆனால், அதில் தனிமனிதச் சிறுமைப்படுத்தலை மேற்கொண்டு இருக்கிறார். அது ஏற்புடையது அல்ல! வாதத்தை வாதத்தால் வெல்ல முடியாமல், வெற்றுக்கூச்சல் இடுவது நலம் பயக்காது. அதிலும், அவரது
இடுகையில் பின்னூட்டம் இடுகிறேன் பேர்வழி என்று, அவர்கள் நடத்தி இருப்பது Character assassination! அதைத் தாங்கள் குறிப்பிட்டுச்
சொல்லாதது எமக்கு ஏமாற்றமே!!கூடவே, அதற்கு எம் கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்!!!

அடுத்து, அவர்கள் தவறான தகவல்களை வைத்துப் புத்தகம் எழுதி இருப்பின், அதைச் சுட்டிக் காட்டிச் சாடுவதற்கு எவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர்கள் எழுதினால், எழுதிச் சோறு தின்கிறார்கள். தாங்கள் எழுதுவதை யாரோ ஒரு அனாமதேயர் வினவினால், ‘உயரிய கருத்து’ என இடித்துரைக்கிறீர்கள். முரணாகத் தெரிகிறதே??

தனிப்பட்ட முறையில், பதிவர்களைச் சிறுமைப்படுத்துவதற்கு தாங்கள், தங்களுடைய ஆட்சேபத்தைத் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

பணிவுடன்,
பழமைபேசி.

M.Rishan Shareef said...

தமிழ்நதி அக்கா,

தன்னால் சாதிக்க முடியவில்லையே என்ற பொறாமையின் வீச்சும், இளைத்ததற்கு அடித்தால் கேட்க நாதியில்லை என்ற தைரியமும் (அல்லது திமிரும்)இப்படியாக அவர்களை எழுதவைக்கிறது.

நீங்கள் இனிமேல் கண்டுகொள்ள வேண்டாம் அக்கா. உங்கள் பெயரைக் கொண்டு அவர்கள் பிரபலமடைவது அவர்கள் நோக்கம்..அதற்கு நீங்களும் உதவ வேண்டாம் அக்கா.

Jerry Eshananda said...

நாங்கெல்லாம் இருக்கோம்ல....எதுக்கு இம்புட்டு வருத்தம், உங்களுக்கு ஒண்ணுன்னா சும்மா விட்டுருவமா?

பதி said...

இவைகளையும் கடந்து வாருங்கள்..

நீங்கள் குறிப்பிடும் இடுகை மற்றும் ரவியின் குறிப்பிட்ட இடுகைகளை படிக்க உண்மையிலேயே அப்பொழுது நேரம் இல்லை...

//‘இதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டியது அவசியமா?’என்று கேட்கும் அக்கறையுள்ள நண்பர்கள் என்னை மன்னித்துவிடுங்கள்.//

உங்கள் மன்னிப்பு ஏற்கப்பட்டது !!! :-)

VR said...

உங்களின் மேலான எண்ணத்துக்கு நன்றிகள். இன்னும் சில புத்தி ஜீவிகளுக்கு ஈழ வரலாறும், சமுக கலாசார உறவும் புரியவில்லை. தங்களை அதி புத்திசாலிகளாக காட்ட வேண்டி இது போல சிறு பிள்ளை தனமாக எழுதுகிறார்கள். சாரு மற்றும் ஜெமோ மட்டும் தான் அவ்வாறு எழுதும் சுதந்திரம் பெற்றவர்களா? தங்களும் புத்தி ஜீவிகள் என காட்டவே எது போன்ற பதிவுகள். பொறுப்பற்ற புரிதல்கள், சார்பு நிலை, சுய சிந்தனை இல்லா பொது புத்தி, அரை வேக்காட்டு தனம் இது எல்லாவற்றையும் விட, மற்றவர்களை புண்படுத்தி இன்பம் காணும் இழி எண்ணம் - போன்றவை தான் இது போன்ற பதிவுகளை போட வைக்கின்றன. எது போல பல அறிவு சீவிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

இது போன்ற நாகரீகம் பண்பாடு அற்ற எண்ணங்களை அப்பாவி போல அற்புதமாக எழுதும் இழி செயல்களை, நச்சுச்சூழலை நினைத்து எங்களை போன்றவர்களுக்கும் களைப்பாகவும் எரிச்சலாகவும் இருக்கிறது. வேதனை என்ன வென்றால், இது போன்ற அவதுறுகளுக்கும், பின்னுட்டம் என்ற பெயரில் வரும் சொம்பு துக்கிகளும், ஜொள்ளர்களும் சொல்லும் கருத்து பாடவதிகள் - polluted statements.

எவ்வளவு பாழ் பட்டு போய் இருக்கிறது இந்த சமுகம்?

Swamy.

Anonymous said...

தமிழ்,

நந்தினியின் அந்தப்பதிவை வாசித்துப் பின்னூட்டமிடுமுன் அவரது மற்ற பதிவுகளையும் வாசித்திருந்தால் அவரது ஆளுமையை நீங்கள் அவதானித்திருக்கலாம் தேவையில்லாத சர்ச்சையைத் தடுத்திருக்கலாம்.

Ok then life is nothing but ifs and buts. Go ahead.

Sivamoorthy Kishokumar said...

நல்லதொரு பதிவு.

தெளிவான பார்வையுடன் நிதானமாக உங்கள் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

நட்புடன்
கிஷோர்.

Anonymous said...

என்ன காரணம் சொன்னாலும் ராஜீவைக் கொன்றதை எம்மால் ஏற்கவே முடியாது. தயவு செய்து அதை ஞாயப்படுத்தாதீர்கள்.

ஈழப் போர் நடைபெற்றபோது தமிழ்நாட்டிலும் கொந்தளித்து மக்கள் வன்முறையில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? எம்மிடம் உங்கள் எதிர்பார்ப்புத்தான் என்ன? வன்முறை வழிக்கு ஒரு போதும் நாங்கள் தயாரில்லை.

இலங்கையில் எல்லாப் பிரிவுத் தமிழர்கள் ஆதரவையும் திரட்ட முடிந்ததா உங்களால்? அதை சொல்லுங்கள் முதலில்

மலையகத் தமிழரை என்றேனும் ஒரு நாளாகிலும் உமக்குச் சமாக பாவித்திருக்கிறீரா? மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். அவர்களை ஒரு படி கீழாகவேதானே மதித்து வந்தீர்கள்?

உங்கள் போராட்டம் தோல்வியடைந்ததற்கு முழுக் காரணமும் நீங்களேதான்.

KP Suresh said...

//மனித மனம் எவ்வளவு காற்றோட்டமில்லாத குறுகிய பரப்பினுள் இயங்குகிறது என்பதை நினைக்குந்தோறும் வியப்பாக இருக்கிறது. // எவ்வளவு உண்மை!

ஏளனம், வக்கிரம், மன சாட்சியற்ற வாதம் பற்றி கவலைப்படாதீர்கள்.

உங்கள் பதில் நேர்மையானது! கவலைபடாதீர்கள் இந்த அற்ப வாதங்களை பற்றி.
மனசாட்சி உள்ளவர்கள் நிறைய பேர் இங்கு உள்ளார்கள்.


நண்பர் சஞ்சய் காந்தி,
--------------------
/// ராஜிவ்காந்தி கொலை பற்றி சொல்லி இருப்பதில், சொல்வதற்கு என்னை போன்ற பாமரனுக்கும் கூட கருத்து இருப்பினும் , சொல்லி சொல்லி அயர்ச்சியாக இருக்கிறது. பல சமயங்களில் பின்னூட்டங்கள் பதிவின் நோக்கத்தை சிதைத்துவிடுவதால், இன்னொரு சமயம் பேசுவோம்..
( மலைப்பகுதி, வனப்பகுதி பெண்கள் தமிழக காவல் துறையால் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். அதற்கு தண்டனையாக அந்ததந்த காலத்தில் ஆட்சி செய்த தமிழக முதல்வர்களை கொல்ல சொல்வீர்களா?) ///

IPKF வரலாறு தெரியாத உங்களுக்கு! இந்த வாந்தி எடுப்பதை நிறுத்த மாட்டீர்களா?

அது தவறு என்றால், 19 வருடங்களுக்கு பின் இப்பொழுது நீங்கள் செய்த 50000 கொலைகள் "பழிவாங்கல்" இல்லாமல் என்ன?

ராஜீவ் கொலை தவறென்றால், 50000௦௦௦௦ கொலைகள் நாகரிக உலகத்தின் கொடுஞ்செயல்!

அன்புடன்
கே பி சுரேஷ்

Bibiliobibuli said...

கிருபா நந்தினி பற்றிய பின்னூட்டங்களை அவருடைய தளத்தில் நானும் படித்தேன். ஒர் பெண் என்பதால் அவரை சமையல் குறிப்பு எழுது, பிள்ளை பராமரி என்கிற மாதிரியும் தனி நபர் தாக்குதலாகவும் கருத்துகள் பதியப்பட்டிருந்தன. இது கண்டிக்கப்படவேண்டியதுவே. அது பற்றி உஙள் பதிவில் நீஙகள் குறிப்பிடாதது ஏமாற்றத்தையும் வருத்ததையும் அளிக்கிறது, தமிழ்நதி.


அவர் ஒர் விடயத்தை அறியாமல்,ஆராயாமல் எழுதுகிறாரா இல்லையா என்பதை சொல்வதிலிருந்து விலகி, அவர் என்ன எழுதுவது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்?

Unknown said...

தோழமையுடைய தமிழ்நதி,

முதலில் உங்கள் பெருந்தன்மைக்கு ஒரு பெரிய வணக்கம். இந்த அரைவேக்காட்டு பதிவுகளும் அதில் தெரிந்த குருரமான வன்மமும் (கவனிக்க - நக்கல் அல்ல) எனக்கு சொல்ல முடியாத அசூசை உணர்வையும் அருவருப்பையும் தந்தது. கொடுமை என்னவென்றால் ஒரு சில பூட் லிக்கெர்ஸ் பின்னுடம் என்ற பெயரில் கும்மி அடித்தது. செந்தழல் ரவியின் பதிவை படித்த பின்பு தான் எனக்கு இந்த குமட்டல் நின்றது. இப்போ உங்கள் பதிவை பார்த்தபின்பு ஒரு ஆசுவாசம்.

Unknown said...

தோழமையுடைய தமிழ்நதி,

முதலில் உங்கள் பெருந்தன்மைக்கு ஒரு பெரிய வணக்கம். இந்த அரைவேக்காட்டு பதிவுகளும் அதில் தெரிந்த குருரமான வன்மமும் (கவனிக்க - நக்கல் அல்ல) எனக்கு சொல்ல முடியாத அசூசை உணர்வையும் அருவருப்பையும் தந்தது. கொடுமை என்னவென்றால் ஒரு சில பூட் லிக்கெர்ஸ் பின்னுடம் என்ற பெயரில் கும்மி அடித்தது. செந்தழல் ரவியின் பதிவை படித்த பின்பு தான் எனக்கு இந்த குமட்டல் நின்றது. இப்போ உங்கள் பதிவை பார்த்தபின்பு ஒரு ஆசுவாசம்.

Sakthi Varun said...

அய்யோடா, இந்த நியாயவாதிகளின் தொந்தரவு தாள முடியலையே!

இங்கேயும் வந்துடங்களா? இவர்களுக்கு பதில் சொல்லியே பிராணன் போயிடும் போல.

...../ ஒரு நாட்டை ஆண்ட பிரதமரின் உயிர் மட்டுமே உயிர் மற்றதெல்லாம் மயிர் என்று சொல்வது விசித்திரமாக இருக்கிறது. மனித உயிரின் மதிப்பைப் பணத்தினாலும், பதவியாலும், அதிகாரத்தினாலும் அளப்பதுபோலிருக்கிறது. இந்தப் பாரபட்சப் பாவத்தை எந்தக் கங்கையிலே கொண்டுபோய்க் கழுவுவது?/ ............ இதுக்கு மேலே என்ன பதில் சொல்லுவது இவர்களுக்கு.....

இந்த பொது புத்தி இருக்குற வரை இந்த நாடு முன்னேறாது. இவர்களோடு பதில் சொல்லி பேசுவதே மனித விரோத செயல்.

@ V R .......... / வேதனை என்ன வென்றால், இது போன்ற அவதுறுகளுக்கும், பின்னுட்டம் என்ற பெயரில் வரும் சொம்பு தூக்கிகளும், ஜொள்ளர்களும் சொல்லும் கருத்து பாடாவதிகள் - polluted statements.

இல்ல இல்ல V R - They are rotten minded.

ரவி said...

எம் நண்பன் செந்தழல் இரவி இட்ட இடுகையும் சரியே. ஆனால், அதில் தனிமனிதச் சிறுமைப்படுத்தலை மேற்கொண்டு இருக்கிறார். அது ஏற்புடையது அல்ல! வாதத்தை வாதத்தால் வெல்ல முடியாமல், வெற்றுக்கூச்சல் இடுவது நலம் பயக்காது. அதிலும், அவரது
இடுகையில் பின்னூட்டம் இடுகிறேன் பேர்வழி என்று, அவர்கள் நடத்தி இருப்பது Character assassination! அதைத் தாங்கள் குறிப்பிட்டுச்
சொல்லாதது எமக்கு ஏமாற்றமே!!கூடவே, அதற்கு எம் கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்!!!&&&&&&&&&&&&&&????&


அன்புள்ள பழமைபேசி. ஆளுயர காப்பிக்கோப்பையுடன் ஒருவர் போஸு கொடுக்கிறார் என்று சொல்வதும், டமில் ரிவர் என்று சொல்வது, எழுத்தாளர், கவிதாயினி என்று கிண்டல் தொனியில் சொல்வதும், தமிழில் கூட தட்டச்ச முடியவில்லை கி கி கி என்று கெக்கலிகொட்டிச்சிரிப்பதும் கேரக்டர் அஸ்ஸாஸினேஷனே. அதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

வயிற்றுவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று புரியவைக்கவே அந்த கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் கைண்ட் பதிவு.

தனது எழுத்தினால் அடுத்தவ(ளு)ருக்கும் மன உளைச்சல் வரும் என்று கிருபாநந்தினி புரிந்துகொண்டால் சரி.

மேலும் என்னுடைய இடுகைகளிலும் கோபத்தினால் சில அநாகரீக வார்த்தைகள் வந்து விழுந்துவிட்டதை ஏற்றுக்கொள்கிறேன், சரியல்லதான். அதற்காக நிபந்தனை ஏதுமில்லாத தலைகுனிந்த மன்னிப்பை கிருபாநந்தினியிடமும் கோருகிறேன்.

ராஜீவ் செத்துவிட்டார் அதனால் நீங்கள் எல்லோரும் சாவுங்கள் என்ற அடிப்படையில் அவர் எழுதியபோது வடகரை வேலன் அவரது ஆளுமையை எந்த சொம்பை தூக்கொண்டு போயும் பாராட்டவில்லை. சமீபகாலமாக வடகரைவேலனின் பின்னூட்டங்களை பார்க்கும்போது அவரே இடுகிறாரா அல்லது அவரது அச்சகத்தில் மேயும் பூனை ஏதாவது இடுகிறதா என்று தெரியவில்லை.

ரவி said...

மேலும் இந்த இடுகை தமிழ்நதியின் பரந்த மனதையும், தெளிவான பார்வையையும் குன்றின் மேலிட்ட விளக்காக காட்டிவிட்டது பதிவுலகுக்கு என்பதையும் சொல்லிவிட்டுத்தான் போகவேண்டும்..

சின்னப்பயல் said...

ஐயா அனானி,சொந்தப் பெயரையே வெளிப்படுத்த தொடை நடுங்கும் நீங்கள் எது சொன்னாலும் எடுபடாது...இங்கே..

அருண் ஷோரி ,இன்டியன் எக்ஸ்ப்ரஸ் எடிட்டராக இருந்தபொழுது கொள்கையே வெச்சிருந்தார்..பெயரும் முழு முகவரியும் தெரிவிக்காத எவரின் கருத்துகளையும் பிரசுரிப்பதில்லைன்னு..

Anonymous said...

சஞ்சய் காந்தி,
மலைப்பகுதி, வனப்பகுதி பெண்கள் தமிழகக் ‘காவல்’ துறையால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, அது ‘கானக ஒப்பந்தத்’ தின் கீழ் காடுகளை காப்பதற்கு செய்யப்பட்ட நடவடிக்கை என்று கூறும் தேவாரங்களையும், அதற்கு ‘பதக்கங்கள்’ கொடுக்கும் முதலமைச்சரையும் நீதிமன்றத்தின் கீழ் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க இயலாத அளவு ‘சனநாயகம்’ நம்ம தமிழ்நாட்டில் வளர்ந்திருந்தால் அப்போது அந்த மலைப்பகுதி மக்களுக்கு முதல்வரைக் கொல்ல எல்லா ‘நியதி’களும் உண்டுதான். ‘சோளகர் தொட்டி’ என்றொரு நாவல் தமிழில் படித்திருக்கிறேன். அது நீங்கள் குறிப்பிட்ட காவல்துறையின் வனப்பகுதி வன்முறைகள் சம்பந்தப்பட்ட நிஜ நாவல். அதைப் படித்துவிட்டு தமிழக முதலமைச்சர்களை இதற்காக கொல்லலாமா வேண்டாமா என்று மீண்டும் யோசித்துச் சொல்லுங்கள்.

ஐயா அனானி,
வன்முறை வழிக்கு நீங்கள் ஒரு போதும் தயாரில்லை என்று எப்படி உறுதியாகச் சொல்றீங்க? கர்நாடகாவில் தமிழர்கள் மீது வன்முறை பாய்ந்த போது இங்கே எல்லாரும் சும்மாவா இருந்தீர்கள். சும்மான்னாச்சுக்கும் உதார் காட்டினீங்களா இல்லியா. இது அடிப்படையான விஷயம் ஐயா. நம்ம தெருக்காரன், நம்ம ஊர்க்காரன் மாதிரி நம்ம இனத்துக்காரன்கறது கொஞ்சப் பெரிய அளவிலாக வளர்ந்திருக்கும் உணர்வு. மொழி என்ற இயற்கையான ஊடகத்தால் கட்டமைக்கப்பட்டது. அதை மதிக்கக் கத்துக்கோங்க. இல்லாட்டி நாளைக்கு ஆஸ்திரேலியாவுல நீங்க அடி வாங்குனா கேவலம் ஒரு ப.சிதம்பரம் கூட கண்டிச்சு பேசமாட்டான்.
அடுத்து ஓற்றுமை பற்றி... இலங்கையில் உள்ள மலைவாழ் தமிழர்களைச் சுற்றி சிங்களர் வசிக்கும் பகுதிகள். அவர்களின் தோட்டத்து முதலாளிகளும் சிங்களவர்கள். மற்ற பகுதி தமிழர்களுடனான இந்தத் தொடர்பு துண்டித்த நிலைமையும், கல்வியறிவின்மையும், வறுமையும் அவர்களை ஈழப்போராட்டத்தில் தங்களின் நிலையை உறுதியாகக் கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளிவிட்டுவிட்டன. ஈழத்தில் தமிழரிடையே சாதிப் பாகுபாடு உண்டு; வெள்ளாள ஆதிக்கம் உண்டு: பிரிவினைகள் உண்டு; இதையெல்லாம் களைந்துவிட்டுதான் ராஜபக்சேகிட்ட சண்டை போடவே போகனும்னு நீங்க நினைக்கிறீங்களா... சரியாப் போச்சு.
தமிழ்நாட்டுல மட்டும் எல்லா விஷயத்திலும் எல்லாத் தமிழனும் ஒத்துமையாவா இருக்கான் சொல்லுங்க. அம்மாவும், ஐயாவும், இனமானத் தலைவரும் இத்தாலியம்மாவுக்கு கால்பிடிச்சி விடுறதுக்கு எல்லாத்தையும் அடமானம் வைக்க ரெடியா இருக்காங்களே.. இதுக்கு என்ன சொல்றீங்க. அதையும் தாண்டி கம்யூனிஸ்டுகள், சீமான், கொளத்தூர் மணி என்று பல்வேறு வகையில் தமிழருக்கான உரிமைகளுக்கு போராடத்தான செய்றாங்க. கூடாதுன்றீங்களா..

தமிழ்நதி said...

நன்றி வாசுதேவன்,

இடையில் ஏதேதோ நடந்துவிட்டன. உங்கள் பின்னூட்டங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். முதலில் குழப்பம்… பிறகு தெளிவு… ஒன்றும் பிரச்சனையில்லை.

‘ராயல்டி’பதிவை நிறையப் பேர் எதிர்பார்க்கிறார்கள் போலிருக்கிறதே!

சின்ன அம்மிணி,

வேறு சிலரும் தங்களது பின்னூட்டங்களை கிருபாநந்தினி வெளியிடவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆம். பார்த்தேன். புளியங்குடியேதான்.

சந்தனமுல்லை,

தொடர்ந்து எழுதவேண்டுமென்பதே என் நினைவும் கனவும். நிறைய வாசிக்கவேண்டுமென்றும், இப்போது எழுதுவதைக் காட்டிலும் செறிவாக எழுதவேண்டுமென்றும் வழக்கமான ‘சரஸ்வதி சபதங்கள்’சிலவற்றை எடுத்திருந்தேன். இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. இதுவும் கடந்து போகும்.

சூரியா,

அந்தப் பதிவை வாசித்தவுடன் கொஞ்சம் பொறுமையிழந்தது உண்மைதான். அந்த வேகத்திலே போய்ப் பின்னூட்டமும் இட்டேன். பிறகு வேப்பிலை அடித்ததில் சரியாகிவிட்டது:)

ராஜநடராஜன்,

“அனைவரது போராட்டங்களும் அரசு அதிகார பீடத்தின் சூழ்ச்சியாலும், அரசியல்வாதிகளின் தூரப்பார்வையில்லாத சுயநலநோக்காலும் தோல்வியடைந்து போனது. தமிழகம் வரலாற்றுக் கடமையிலிருந்து தவறியது என்பது உண்மையே”

என்று சொல்லியிருந்தீர்கள். இதை நான் சொல்லப்போனால் ‘எம்மையா சொன்னீர்?’என்று சிலர் எகிறிக்குதிக்கிறார்கள். எங்கள் மீது பாயலாம். வரலாற்றின் மீது பாய்தல் சாத்தியமாகுமா?

சின்னப்பயல்,

பின்னூட்டங்களுக்கு யாராவது ‘ராயல்டி’கொடுப்பார்களாக இருந்தால், உங்கள் பெயரை நிச்சயமாகப் பரிந்துரை செய்கிறேன். எனது அண்மைய பதிவுகளுக்கெல்லாம் பஞ்சியைப் பாராமல் வந்து மொய்யெழுதிவிட்டுப் போவதற்கு இதைக்கூடச் செய்யாவிட்டால் ‘நன்றி மறந்தவள்’ என்று என்னை நீங்கள் நினைக்கமாட்டீர்களா என்ன:)

வாங்க சஞ்சய் காந்தி,

“மலைப்பகுதி, வனப்பகுதிப் பெண்கள் தமிழகக் காவல் துறையால் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். அதற்குத் தண்டனையாக அந்தந்தக் காலத்தில் ஆட்சிசெய்த தமிழக முதல்வர்களைக் கொல்லச் சொல்வீர்களா?”

என்று கேட்டிருந்தீர்கள். உங்களைப் போலவே எனக்கும் அயர்ச்சியாக இருக்கிறது. எத்தனை தடவைதான் நாம் இதைப் பற்றிப் பேசப்போகிறோம்? உங்கள் கேள்வி விதண்டாவாதமாக இருக்கிறது. நாகரிக மனோநிலை படைத்த எவரும் ‘கொலை செய்து கிடப்பதே என் பணி’என்று அலைவதில்லை.
முதலில் ராஜீவ் காந்தி கொலை என்பது பல்லாயிரம் படுகொலைகளின் எதிரொலி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதைச் செய்தவர்கள் விடுதலைப் புலிகள்தான் என்று வைத்துக்கொண்டால், பின்னாளில் அதற்காக அவர்கள் நிச்சயமாக வருத்தப்பட்டிருப்பார்கள். அவரைக் கொன்றுவிட்டோமே என்பதற்காக அல்ல; அந்தக் கொலையானது போராட்டத்தில் ஏற்படுத்திய பின்விளைவுகளை எண்ணி வருந்தியிருப்பார்கள்.

ராஜீவ் காந்தி கொலையின் பின்னரும் ஈழத்தமிழர்பால் அக்கறையுடைய தமிழகத்தார் இருக்கத்தான் செய்தார்கள். அவர்களுடைய அலைந்துலைவையிட்டு பெருந்துயரடைந்தார்கள். இதை யார் பயன்படுத்திக்கொண்டார்கள் என்றால், தமது அன்றாட வாழ்வின் சமநிலை குலைவதில் விருப்பமில்லாத சுயநலமிகள் ‘கொன்றீர்கள்… கொன்றீர்கள்’என்று சொல்லி சகமனிதரின் மீது இரக்கம்காட்டாமலிருப்பதனூடாக எழும் குற்றவுணர்விலிருந்து தப்பித்து நழுவிச்சென்றார்கள். மற்றபடி ராஜீவ் காந்தியின் மரணம் என்பது அவர்கள் அளவில் நூற்றாண்டுகளாகக் ‘கொண்டாடத்தக்கது’அல்ல.

அம்பேதனால் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘சோளகர் தொட்டி’யை நானும் வாசித்தேன். இப்படிக்கூட மனிதர்களை வதைக்கமுடியுமா என்ற வியப்பு எழுந்தது. சில பக்கங்களை வாசிக்கும்போது கோபத்தில் மனம் பதைத்தது.

நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு வருகிறேன். முதல்வர்களைக் கொல்வதொன்றே குறியாக யாரும் வெறிபிடித்து அலையவில்லை. பல்லாயிரம் கொலைகளின் எதிரொலி ஒரு கொலையில் முடிந்தது.

உங்களிடம் கேட்பதற்கென்று என்னிடமும் ஒரு கேள்வியுண்டு. அது பலரும் கேட்டுச் சலித்துப் புழுத்த கேள்விதான். ராஜீவ் காந்தியைக் காட்டிலும் ஆளுமையுடைய அன்னை இந்திரா காந்தியைச் சீக்கியர்கள் கொன்றார்கள். அதே சீக்கியர்களை நீங்கள் அரியணை ஏற்றி மகிழவில்லையா? ஆக, அவர்கள் வேற்றினத்தவராயினும் இந்தியர்கள். அதனால் அவர்களை மன்னித்து ஆளவும் அனுமதிப்பீர்கள். நாங்கள் உங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள். தமிழர்கள்; ஆனால், வெளியூர்க்காரர்கள். அதற்காக காலகாலமாக எங்களைக் கருவறுத்துச் சிதைப்பீர்கள். காடுமேடெல்லாம் கண்ணீரோடு அலையவிடுவீர்கள். எங்கள் குழந்தைகளைக் குண்டுபோட்டுக் கொல்வதற்கும் உரிமையுண்டு.

களைப்பாக இருக்கிறது நண்பரே… அதைவிட வருத்தமாக இருக்கிறது.

தமிழ்நதி said...

இன்றைய நாள் பதிலெழுத அனுமதித்தது இவ்வளவே. கணினி தொல்லை தருகிறது. மீண்டும் நாளை நாம் தொடர்பாடலாம்.

Sanjai Gandhi said...

குறைவான நேரத்திலும் விளக்கமான பதிலுக்கு நன்றி தமிழ்நதி.பல்லாயிரம் கொலைக்கு பதிலாக யாரையாவது ஒருவரைக் கொல்ல வேண்டுமா? ராஜிவ்காந்தி , அப்பாவிகளைக் கொல்லத்தான் அமைதிப் படையை அனுப்பினாரா?. இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி விமானம் மூலம் பாதிக்கப் பட்ட அப்பாவி மக்களுக்கு உணவு வழங்கியவர் ராஜிவ்காந்தி என்பதை மறந்திருக்க மாட்டிர்கள் என நினைக்கிறேன். அமைதிப் படட் செய்த தவறுகளுக்கு எதாவது ஒரு உயிர் வேண்டும் என ராஜிவை கொன்றதை எப்படி நியாயப் படுத்துகிறீர்கள் எனப் புரியவில்லை.

இந்திரா விஷயத்தில் நீங்கள் சொல்லி இருப்பது வருத்தம் அளிக்கிறது. 2 சீக்கியர்கள் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த சீக்கியர்களையே ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது போல் சொல்லி இருக்கிறிகள்.
// அன்னை இந்திரா காந்தியைச் சீக்கியர்கள் கொன்றார்கள். அதே சீக்கியர்களை நீங்கள் அரியணை ஏற்றி மகிழவில்லையா? //

புலிகள் ஈழத் தமிழர்கள் என்பதற்காகவே அவர்கள் செய்த கொலைக்கு பதிலாக ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களையும் பழிவாங்க வேண்டும் என்பது போல் உள்ளது உங்கள் பேச்சு.

2 சீக்கியர் செய்த கொலைக்காக எப்படி ஒட்டு மொத்த சீக்கியர்களையும் ஒதுக்கவில்லையோ அதே போல் தான் புலிகள் என்னும் பயங்கரவாத கும்பல் செய்த கொலைக்காக ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களையும் கொல்ல வேண்டும் என ஒரு போதும் நினைக்கப் போவதில்லை. பதிலாக புலிகள் என்னும் குற்றவாளிகளைக் கொன்றதில் மகிழ்ச்சியே. போரைக் காரணம் காட்டி ஒரு அப்பாவி உயிர் பலியானதையும் ஆதரிக்கவில்லை.


வாந்தி பின்னூட்டவாதிக்கு,

எந்தக் காரணத்திற்காவும் அப்பாவிகள் கொல்லப் படுவதை ஒரு போதும் ஆதரிக்கமாட்டேன்.. உங்களைப் போன்றவர்களின் உளறல்களுக்கு மதிப்பளிப்பதில்லை என்றாலும் கூட ”நீங்கள் கொன்றிர்கள்” என்ற உங்கள் வார்த்தைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். இணையத்தில் மட்டுமே தமிழர் பாசம் பொழியும் உங்களைப் போன்றவர்கள் தான் உண்மையானக் குற்றவாளிகள். ராஜபக்‌ஷே பொன்சேகாவைக் காட்டிலும்.

போட்டிப் போட்டுக் கொன்றொழித்த பொன்சேகாவையும் ராஜபக்‌ஷேவையும் மாறி மாறி ஆதரித்த ஈழத் தமிழர்களைவிட தமிழ்நாட்டுத் தமிழர்கள் மோசம் இல்லை என்றே நினைக்கிறேன். இதெல்லாம் நடந்தும் தமிழ்நதி அவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கொதித்தெழவில்லை என்பது போல் பேசி இருப்பது சரியாகத் தெரியவில்லை.

Dhanaraj said...

Rajiv Gandhi: Justification for Mass Murder in Sri Lanka.
Indira Gandhi: Justification for Mass Murder of Sikhs in 1984.
Godhra: Justification for Mass Murder of Muslims in 2002.

Where are we going? And Who are we?
If one is on the side of Justification I seriously have a doubt regarding the person's identity as a human being.

Let us not waste time for the braying and howling of members from zoo.

பழமைபேசி said...

//
அன்புள்ள பழமைபேசி. ஆளுயர காப்பிக்கோப்பையுடன் ஒருவர் போஸு கொடுக்கிறார் என்று சொல்வதும், டமில் ரிவர் என்று சொல்வது, எழுத்தாளர், கவிதாயினி என்று கிண்டல் தொனியில் சொல்வதும், தமிழில் கூட தட்டச்ச முடியவில்லை கி கி கி என்று கெக்கலிகொட்டிச்சிரிப்பதும் கேரக்டர் அஸ்ஸாஸினேஷனே. அதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்//

தங்களை மட்டுமே சுட்டுவதற்கு, “என்னோட நண்பனை, உரிமையுடன் சுட்டலாம்!” என்கிற ஒரு துணிச்சல்தான் காரணம்.... புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!

soorya said...

எனக்கும் தூக்கமும் துக்கமும் வருகிறது தோழி.
நாளையும் தொடரப் போறீங்களா?
ஏதும் ஒரு கவிதை எழுதுங்களேன்..தங்கள் கவி படித்து நாளாயிற்று.
நன்றி.
(என் தாத்தா தந்த சாட்டையைத் திருப்பித் தரவும்)

தமிழ்நதி said...

ஸ்டாலின் குரு,

"tchaaa எழுத்தாளருக்கான கெத்தே இல்லாமல்..." அப்படி என்றால் என்ன? சொல்லுங்களேன்.

வாங்க குட்டிப்பிசாசு, (இந்தப் பெயரையெல்லாம் எப்படித்தான் கண்டுபிடிக்கிறீங்களோ:) எனக்குப் பிசாசுகளைப் பிடிக்கும். காஸ்பர் என்றொரு குட்டிப் பிசாசு கார்ட்டூன் பார்த்திருக்கிறீர்களா? நான் இந்த காஸ்பரைச் சொல்லவில்லை. இது வேறு குட்டிப்பிசாசு:)

ம்... கிருபாநந்தினி விடயத்தில்... என்ன சொல்வது? குறுகிய காலத்தில் அறியப்படவேண்டுமென்ற ஆவலின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.

நன்றி பத்மநாபன்,

கவிப்பேரரசு அப்படியா சொல்லியிருக்கிறார்? இப்போது மட்டும் ஏன் இப்படி ஆனார்:)

வாங்க சரவணன்,

நீண்டநாள் உரையாடவில்லை. சின்ன அம்மிணி, நீங்கள் இன்னும் கிருபாநந்தினியால் வெளியிடப்படாத பின்னூட்டங்களில் என்னதான் எழுதப்பட்டிருக்கும் என அறிய ஆவலோடு இருக்கிறேன். உங்களைப்போன்றவர்கள் நாகரிகக் குறைவாக எழுத வாய்ப்பேயில்லை. ஏன் அதை அவர் வெளியிடாமல் பதுக்கி விட்டார் என்பது எனக்குப் புதிராகவே இருக்கிறது.

ஒரு சவத்திற்கு
தோண்டிய குழியில்
எத்தனை ஆயிரம்பேர்களைத்தான்
புதைப்பது..

மேலே நீங்கள் கூறிய வரிகள்தான் சரியானவையாக இருக்கமுடியும். நான் அந்தக் கவிதையின் கருத்தினை மட்டுமே உள்வாங்கிக்கொண்டு அதை மீளஎழுதிப் பார்த்திருக்கிறேன். 'நாலுபேர் கவிதாயினி என்று சொன்னால் இப்படியா மற்றவர்கள் கவிதையிலே கையை வைப்பார் இவர்?'என்று அந்தக் கவிஞர் கோபித்துக்கொள்ளப் போகிறார்:) சாரம் மட்டுமே மனதிலிருந்தது. வந்ததும் தொடர்புகொள்கிறேன்.

பழமைபேசி,

தனிப்பட்ட முறையில் பதிவர்களைச் சாடுவதற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கிருபாநந்தினியும் அதற்கு விதிவிலக்கானவர் அல்ல. இன்னுஞ் சொல்லப்போனால் ஒரு பெண் என்ற வகையில் 'இந்தப் பெண் இப்படி எழுதப்போய் மனவுளைச்சலுக்கு ஆளாகிவிட்டதே'என்ற வருத்தம் உள்ளுக்குள் உண்டு.

"அவர்கள் தவறான தகவல்களை வைத்துப் புத்தகம் எழுதி இருப்பின், அதைச் சுட்டிக் காட்டிச் சாடுவதற்கு எவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர்கள் எழுதினால், எழுதிச் சோறு தின்கிறார்கள். தாங்கள் எழுதுவதை யாரோ ஒரு அனாமதேயர் வினவினால், ‘உயரிய கருத்து’ என இடித்துரைக்கிறீர்கள். முரணாகத் தெரிகிறதே?"

நண்பரே,

குமுதத்தில் வெளியான அந்தக் கட்டுரையின் அடிப்படையே புரிந்துகொள்ளப்படவில்லை. ஈழத்தில் இனப்படுகொலை மும்முரமாக நடந்துகொண்டிருந்த காலத்தில் பெரும்பாலான அறிவுஜீவிகள் மெளனமாக இருந்தார்கள். காரணம், ஈழத்தவர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட யுத்தத்தைத் தமிழக அரசு சரியான முறையில் தட்டிக் கேட்காமல் மத்திய அரசைத் தந்திகளாலும் கடிதங்களாலும் சிலமணி நேர உண்ணாவிரதங்களாலும் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தபோது, தாங்கள் குரலெழுப்பினால் அது 'அரசு விரோதமாக'க் கருதப்பட்டு புறக்கணிக்கப்படுவோமோ என்ற காரணத்தினால் அது நடந்தது.

பிறகு யுத்தம் நடந்து முடிந்து (?) இனச்சுத்திகரிப்பு ஆனபிற்பாடு 'இவர்கள் இப்படித்தான் செத்துப்போனார்கள்'என்று எழுதி அதைக் காசாக்குவது கடுப்பாக இருந்தது. நான் எனது எழுத்தை எங்கேயும் 'உயரிய கருத்து'என்று குறிப்பிடவேயில்லை. அப்படிக் குறிப்பிட்டிருந்தால் நிச்சயமாக அது நக்கலுக்காகத்தான் இருக்கும். முடிந்தவரை நான் சுயப்பிரஞ்ஞையுடன்தான் ஒவ்வொரு சொல்லையும் எழுதிவருவதாக நம்புகிறேன். தன்னை மிகைப்படுத்தல் எங்கே வருகிறதோ அங்கே நாம் முட்டாளாகிறோம் என்ற அடிப்படை எனக்குப் புரியும். மேலும், எழுத்தில் நான் 'காசு பார்த்தது'கிடையாது. இன்னுஞ்சொல்லப்போனால் வெளிநாடுகளிலிருந்து புத்தகம் அனுப்பிவைக்கச் சொல்லிக் கேட்கும் நண்பர்களுக்கு என் சொந்தச் செலவிலேயே அனுப்பிவைக்கிறேன். அது புத்தக விலையைக் காட்டிலும் ஆறேழு மடங்கு அதிகமானது.

கிருபாநந்தினி said...

\\அவருக்குக் கிடைத்த எதிர்வினைகள் அவரை எழுத்தினின்று பின்வாங்கச் செய்துவிடக்கூடாதென்பதே ஒரு பெண்ணாக எனது ஆதங்கம்.\\
நன்றி தமிழ்நதி! (அக்கா என்று சொல்ல ஆசை இருந்தாலும், சொல்லவில்லை. அதைக்கூட நக்கல் என்று வர்ணிக்கிறார்களே!)

\\ராஜீவ் செத்துவிட்டார் அதனால் நீங்கள் எல்லோரும் சாவுங்கள் என்ற அடிப்படையில் அவர் எழுதியபோது\\ மன்னிக்க வேண்டும் செந்தழல் ரவி! நான் அப்படி, அந்த அர்த்தத்தில் எழுதவில்லை!

ஸ்டாலின் குரு said...

ஸ்டாலின் குரு,

"tchaaa எழுத்தாளருக்கான கெத்தே இல்லாமல்..." அப்படி என்றால் என்ன? சொல்லுங்களேன்///

எப்படி சொல்ல ஒரு இயல்பான
தோழமையை உணர முடிகிறது.
அவ்வளவுதான்

Anonymous said...

நண்பர் சஞ்சய் காந்தி அவர்களுக்கு,

நான் ஒரு இந்திய தமிழன்.
'நீங்கள்' என்று நான் சொன்னது நீங்கள் வால்பிடிக்கும் இந்திய அரசின் சிங்கள ஆதரவு நடவடிக்கைகளைத்தான்.

நானும் உங்களை போல தான், ராஜீவ் உயிர் மட்டும்தான் உலகில் அதிசயம் என்று நம்பினேன். உங்களை விட அதிகமாகவே பேசி இருக்கிறேன். ஈழ மக்கள், அவர்களின் போராட்டத்தின் மீது கோபம் கொண்டு இருந்தேன்.

ஆனால் மனித குலம் வெட்கி தலைகுனியும் வெட்கம் கெட்ட செயலை இந்திய அரசாங்கம் கொலை வெறியோடு ஸ்ரீலங்கா அரசோடு கைகோர்த்து 50000 உயிர்களை பலி வாங்கியதை சக மனிதனாய், ராஜீவ் பெயரால் என்னால் வழி மொழிய முடியாது.
இந்திய தமிழனாய் வெட்கி தலை குனிகிறேன்.

புலிகள் என்னும் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்தீர்கள் என்றால், இந்திய அரசாங்கம் இன்றைக்கு குற்றவாளி.
தண்டனை யார் கொடுப்பது நண்பரே! இந்த பலி வாங்கும் நடவடிக்கைகளை இந்திய போன்ற ஜனநாயக நாடு செய்ய நாம் அனுமதிக்கலாமா? நாம் என்ன உகண்டா போன்ற சர்வாதிகார நாட்டிலா வாழ்கிறோம்.

50000௦௦௦௦ உயிர்களை ஈவு இறக்கம் இல்லாமல் பலி வாங்கியதை மனசாட்சியோடு ஏற்று கொள்ள முடிகிறதா நண்பர் அவர்களே.

உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டில் பிறந்தேன் என்று பெருமை கொள்கிறேன். ஆனால் இந்திய அரசின் நடவடிக்கைகள் ஜனநாயகதிற்கு அவமானத்தை தேடி தந்துள்ளது! வேடிக்கை மட்டுமே பார்த்த நாமும் குற்றவாளிகளே!

செய்த பாவத்திற்கு ஈழம் மக்களுக்கு சுதந்திரமான, சுபிட்சமான நல்ல தீர்வை வாங்கி தரவேண்டியது இந்தியாவின் கடமை, பரிகாரம்.

'மயக்கத்தில்' இருந்தால் மற்றவர்கள் கருத்துக்கள் எல்லாம் உளறல்கலாகதான் தெரியும்.

அன்புடன்
கே. பி.. சுரேஷ்

Bibiliobibuli said...

//அவருக்குக் கிடைத்த எதிர்வினைகள் அவரை எழுத்தினின்று பின்வாங்கச் செய்துவிடக்கூடாதென்பதே ஒரு பெண்ணாக எனது ஆதங்கம்.\\ நன்றி தமிழ்நதி!// அப்பாடா! இரண்டு பேருமே கசப்புகளை மறந்து பேசிட்டாங்க. I am really happy for both of you ladies. சரி, சரி, அடுத்து எப்போ சண்டை போடுறீங்க...............சும்மா, சும்மா,......பகிடி.....பகிடி. Just Kidding.

கிருபா நந்தினி, ஒரு suggestion யாரையாவது அக்கா என்று கூப்பிட வேண்டுமானால் உங்கள் பதிவில் கூப்பிடாமல், பின்னூட்டத்தில் கூப்பிட்டால் பொருத்தமாக இருக்கும். அது சரி, அக்கா என்று கூப்பிட்டே தீருவேன்னு ஏன் இப்படி அடம் பிடிக்கிறீங்க?

சின்னப்பயல் said...

//பதிவுகளுக்கெல்லாம் பஞ்சியைப் பாராமல் வந்து மொய்யெழுதிவிட்டுப் போவதற்கு// நன்றி நதி...

நன்றி "கே. பி.சுரேஷ்"..//பரிகாரம் /தேடிக்கொள்ளவும் பெயரை வெளியிட்டதற்கும்..!

இரவி சங்கர் said...

‘இலங்கைத் தமிழர்கள்’ என்றோ ‘இந்தியத் தமிழர்கள்’என்றோ யாருமில்லை; ‘தமிழர்’என்றொரு இனம் மட்டுமே உண்டு என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு.

வாழ்க தமிழ்!

தமிழ்நதி said...

"நாய்க்கு வேலையில்லை; நடக்க நேரமில்லை"என்பது பொருத்தமாக இருக்கும் சிலரில் நானும் ஒருத்தி. நடைமுறை வாழ்வின் அலைச்சல்கள் நேரத்தைத் தின்றுதொலைக்கின்றன. மிகுதிப் பேருடன் உரையாட இன்றுதான் நேரம் கிடைத்தது.

நன்றி ரிஷான்,

அந்தந்த நேரம் கோபமாக இருக்கும். பிறகு நினைத்தால், 'இதெல்லாம் எதற்கு?', 'சொல்லிவிட்டுப் போகிறார்கள்'என்ற மனோநிலை வந்துவிடும். சொல்லிவிட்டுப் போகிறார்கள் விடுங்கள். உங்களையும் ஏதோ சர்ச்சையில் இழுத்துப் போட்ட மாதிரித் தெரிந்தது. அடி நுனி தெரியாமல் எப்படிக் கதைப்பது என்று இருந்துவிட்டேன்.

ஜெரி,
அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி. 'நீங்கல்லாம் இருக்கீங்கதான்':)

பதி,

"உங்கள் மன்னிப்பு ஏற்கப்பட்டது"

கோபப்படாதவர்கள் தெய்வங்கள். நான் தெய்வமில்லையே...:)அதுதான் இந்தப் பதிவு எழுதவேண்டிவந்தது. நண்பர்கள் புரிந்துகொண்டு மன்னித்துவிட்டார்கள்.

நன்றி ஸ்வாமி (V.R.)

தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி.(தவிர்க்கமுடியாமல் தேர்தல் ஞாபகம் வருகிறது. எல்லாவற்றையும் பாழ்பண்ணி வைத்திருக்கிறார்கள். சொற்கள் உட்பட)

"பொறுப்பற்ற புரிதல்கள், சார்பு நிலை, சுய சிந்தனை இல்லா பொது புத்தி, அரை வேக்காட்டு தனம்" என நீங்கள் பட்டியலிட்டிருக்கும் விடயங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. சிலசமயங்களில் நினைத்துப்பார்த்தால் 'எழுதி என்ன கிழிக்கப் போகிறோம்?'என்று தோன்றும். ஆனால், எழுதுவதன் மூலம் மேற்கண்ட குணங்குறி கொண்டவர்களைக் கிழிப்பதில் ஒரு மகிழ்ச்சியும் இருக்கவே செய்கிறது. ஆனால், யார் முழுமை? நாமும் இல்லை. யாரும் இல்லை.

நன்றி வடகரைவேலன்,

அவருடைய மற்றப் பதிவுகளையும் வாசித்தேன். தவிர்த்திருக்கலாம். என்றாலும், கோபம்... கோபம்:)

கருத்துக்கு நன்றி கிஷோர்.

அனானி நண்பரே,

"என்ன காரணம் சொன்னாலும் ராஜீவைக் கொன்றதை எம்மால் ஏற்கவே முடியாது. தயவு செய்து அதை ஞாயப்படுத்தாதீர்கள்."

இந்த 'ஞாயம்' யார் போடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். இப்போதெல்லாம் அழிச்சாட்டியம் பண்ணும் அனானிகளின் கருத்துகளைக் கேலியாகவே பார்க்கத் தோன்றுகிறது. அனானியாக வந்து பின்னூட்டமிடுகிறவர்கள் ஒன்று. தன் கருத்தைத் தானே நம்பாதவர்கள். தான் சொல்லவருவதில் நெருடல் உள்ளவர்கள். இரண்டு.என்னில் உள்ள கோபத்தை நேரடியாக வெளிப்படுத்தத் தைரியமில்லாமல், எனக்கெதிராக ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிடுவது அவர்களது நோக்கமாக இருக்கிறது. உங்கள் கேள்விகள் யாவற்றுக்கும் என்னிடம் பதில் உண்டு. எனது நேரத்தை நான் விரயம் செய்யவிரும்பவில்லை. இதற்காக நீங்கள் இன்னொரு பின்னூட்டத்தின் வழியாக வந்து குதித்தாலும் இதுவே என் பதிலாக இருக்கும்.

"உங்கள் போராட்டம் தோல்வியடைந்ததற்கு முழுக் காரணமும் நீங்களேதான்."

சரிங்க.

நன்றி கே.பி.சுரேஷ்

"ராஜீவ் கொலை தவறென்றால், 50000௦௦௦௦ கொலைகள் நாகரிக உலகத்தின் கொடுஞ்செயல்!"

நாகரிக உலகமா? இதன் பிறகுமா? இந்த உலகத்தில் வாழ்ந்து மடியவேண்டியிருப்பதற்காக நாங்கள் வெட்கப்படவேண்டும் நண்பரே!

அன்புள்ள ரதி,

"ஒர் பெண் என்பதால் அவரை சமையல் குறிப்பு எழுது, பிள்ளை பராமரி என்கிற மாதிரியும் தனி நபர் தாக்குதலாகவும் கருத்துகள் பதியப்பட்டிருந்தன. இது கண்டிக்கப்படவேண்டியதுவே. அது பற்றி உங்கள் பதிவில் நீஙகள் குறிப்பிடாதது ஏமாற்றத்தையும் வருத்ததையும் அளிக்கிறது, தமிழ்நதி."

ஆம் குறிப்பிட்டிருக்க வேண்டும். மிக மனவேதனையுடன் அந்தப் பதிவை நான் எழுதினேன். அப்போது கிருபாநந்தினியை அப்படிச் சாடி எழுதியிருந்ததைப் பற்றி நான் குறிப்பிட மறந்துவிட்டேன். ஒருவேளை அப்படிச் சாடி எழுதியிருந்தது 'எனக்குச் சார்பாகப் பேசியிருக்கிறார்கள்'என்ற உள்ளார்ந்த திருப்தியை எனக்கு அளித்திருந்ததனால் சுலபமாக மறந்துவிட்டேன் போலும். மனித மனத்தின் விசித்திரத்தை யார்தான் புரிந்துகொள்வது? தவறுக்கு மன்னிக்கவும். பெண் என்றால், சமையல், அழகுக்குறிப்பு, பிள்ளை வளர்ப்பு போன்ற விடயங்கள் மனதுள் படிந்துபோய்விட்டிருக்கின்றன. இது அகல நூற்றாண்டுகள் ஆகும்.

தமிழ்நதி said...

Roshma,

கிருபாநந்தினியின் பதிவிலும் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். ஆறுதலாக இருக்கிறது. சரியான புரிந்துணர்வுள்ளவர்கள் சிலராவது இருப்பது ஆசுவாசமாக இருக்கிறது. நன்றி.

வாங்க சக்தி வருண்,

உங்கள் 'பதைப்பில்'இருந்து இந்த 'நியாயவாதிகள்'நிறைய இடங்களில் கூவியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். கூவுகிறவர்கள் கூவிக்கொண்டிருக்கட்டும். சாகிறவர்கள் செத்துக்கொண்டிருக்கட்டும். யாராலும் எவரையும் மாற்றமுடியாது நண்பரே.

அன்புள்ள செந்தழல் ரவி,

(இந்த 'அன்புள்ள'என்பதை போகிற போக்கில் எழுதவில்லை. நமக்காகப் பேசுகிறார்கள் என்றால், எங்கிருந்தோ அன்பு வந்துவிடுகிறது பாருங்கள்.:) மனுசங்க கொஞ்சம் சுயநலவாதிகள்தான் இல்லையா?

எனது பக்கத்தில் இருக்கும் நியாயத்திற்காகப் பேசியமைக்காக மிகவும் நன்றி. அற்பத்தனங்களையெல்லாம் கடந்து போய்ட்டே இருக்கணும். ஆனா அப்படிப் போகமுடியுதா என்ன? நல்லாருக்கட்டும்!!!

சின்னப்பயல்,

அருண் ஷோரி பண்ணலாம். நாம பண்ணலாமா?:)))

அம்பேதன்,

அனானியைப் பிரித்து மேய்ந்திருக்கிறீர்கள். அல்லது வெளுத்து வாங்கியிருக்கிறீர்கள். 'சோளகர் தொட்டி'உண்மையிலேயே வாசிக்கக் கடினமான -ஆனால் வாசித்தே ஆகவேண்டிய ஒரு படைப்பு. சட்டம் என்பது பொதுமக்களுக்கு மட்டுந்தான். அதுவும் வசதியில்லாத பொதுமக்களுக்கு மட்டுந்தான். அதை நாம் முதலில் தெரிந்துவைத்திருக்க வேண்டும்:) அரசுகளுக்கும் அதிகாரத்தைத் தமது கையில் வைத்திருப்பவர்களுக்கும் எதையும் விலைக்கு வாங்கக்கூடியவர்களுக்கும் சட்டம் என்பது சட்டைப்பையில் உள்ள பேனா மாதிரி. 'ஊத்திக்கக்கூடிய'விஷயந்தான்.

தமிழ்நதி said...

சஞ்சய் காந்தி,

உங்களுக்குச் சரியெனத் தோன்றுவது எனக்குத் தவறெனத் தோன்றுகிறது. இப்படியே விவாதம் இழுத்துக்கொண்டுபோய்க் குழப்பத்துக்குள் விழுத்திவிடும். விவாதங்கள் சிலசமயங்களில்தான் தெளிவைக் கொடுக்கும் என்பதை இங்கு சொல்லியாகவேண்டும். உங்கள் முயலுக்கு மூன்று கால்கள் என்றால், எனது முயலுக்கு ஒன்றரைக் கால் எனலாம்.

"ராஜிவ்காந்தி , அப்பாவிகளைக் கொல்லத்தான் அமைதிப் படையை அனுப்பினாரா?"

அவர் அனுப்பியது அதற்காக இல்லாமலிருக்கலாம். ஆனால், அதுதானே நடந்தது? நடக்கவில்லை என்கிறீர்களா?

ஆமாம். வானத்திலிருந்து அரிசி போட்டார்கள். பிறகு வாய்க்கரிசி போட்டார்கள். அந்நேரம் நான் அங்குதானிருந்தேன். அதன்போது மட்டுமில்லை... நாய்கள் பிணங்களின் தலைகளைக் கடித்து இழுத்துத் தின்பதை நாங்கள் பார்த்தோம். எங்களது பக்கத்து வீட்டிலிருந்து 'ஐயோ!எங்களை விடுங்கடா... அல்லது கொல்லுங்கடா'என்று கத்தியழுத பெண்களின் கூக்குரலை நாங்கள் கேட்டோம். பிரம்படி ஒழுங்கையில் சனங்களை நிற்கவைத்து உயிரோடு கனரக வாகனங்களை ஏற்றிக்கொன்றபோதும் நாங்கள் அங்குதானிருந்தோம். இரும்புச் சக்கரங்களின் அடியிலிருந்து இரத்தம் பீறிட்டதாகவும், உடற்கூழ் மட்டுமே தரையில் ஒட்டிக்கிடந்ததாகவும் நாங்கள் அறிந்தோம். உடல்சோதனை என்ற பெயரில் இராணுவத்தால் எங்கள் உடல்கள் தடவப்பட்டபோது காமத்தில் ஒளிர்ந்த கண்களை நாங்களே பார்த்தோம். ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து திலீபன் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் உண்ணாவிரதமிருந்து (இது றியல்... றீல் இல்லை) சிறுகச் சிறுகத் துடிப்படங்கிப் போனபோது, நாங்கள் சில அடிதூரத்தில்தான் இருந்தோம். கண்டதும் கேட்டதும் அனுபவித்ததும் செத்ததும் சொல்லி உங்கள் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கவில்லை. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? அழிந்துபோன பிற்பாடு அனுதாபத்தை வைத்துக் கொண்டு ஒன்றும் பிடுங்கமுடியாது.

"அமைதிப் படை செய்த தவறுகளுக்கு எதாவது ஒரு உயிர் வேண்டும் என ராஜிவை கொன்றதை எப்படி நியாயப் படுத்துகிறீர்கள் எனப் புரியவில்லை."

என்று நீங்கள் சொல்லியிருப்பது மாபெரிய அபத்தம். அமைதிப்படை யாருடைய கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்தது என்கிறீர்கள்!!! அல்லது இந்திய இராணுவம் தலைமைக்குக் கட்டுப்படாதது என்று சொல்லவருகிறீர்களா? எனக்கும் புரியவில்லை.

"சீக்கியர் செய்த கொலைக்காக எப்படி ஒட்டு மொத்த சீக்கியர்களையும் ஒதுக்கவில்லையோ அதே போல் தான் புலிகள் என்னும் பயங்கரவாத கும்பல் செய்த கொலைக்காக ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களையும் கொல்ல வேண்டும் என ஒரு போதும் நினைக்கப்போவதில்லை."

அப்படியா? நினைக்கப்போவதில்லையா? 50,000 கொலைகள் நினையாப்பிரகாரமாக, தற்செயலாக நடந்தேறிவிட்டனவா? அதற்கு யார் பக்கபலம், பின்புலம், முன்பலம் கொடுத்தார்கள் என்று நினைக்கிறீர்கள்? இவ்வளவு பெரிய பூசணிக்காயை ஏன் இத்தனூண்டு சோற்றில் மறைக்கப் பார்க்கிறீர்கள்? புலிகள் வேறு, மக்கள் வேறு என்றால்- நீங்கள் மக்களை ஏன் காப்பாற்றவில்லை? ராஜீவ் காந்தியைக் கொன்ற புலிகளை ஆதரித்த மக்கள்கூட்டம் என்றுதானே போட்டுத் தள்ளினீர்கள்? அது 'நாங்கள்'இல்லை; இராணுவம் என்று சொல்வீர்களா? புலிகளின் தவறுகளுக்கெல்லாம் தலைவர் பிரபாகரன் அவர்களைக் குற்றஞ்சாட்டும் உங்களைப் போன்றவர்கள், இந்திய இராணுவ விடயத்தில் மட்டும் ஏன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறீர்கள்?

"சீக்கியர்கள் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த சீக்கியர்களையே ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது போல் சொல்லி இருக்கிறீர்கள்."

நான் எங்கே அப்படிச் சொன்னேன்? அசந்தால் தலையில் கல்லைத் தூக்கிப்போடுகிறீர்கள். அவர்களுக்கொரு நீதி.... ஈழத்தமிழர்களுக்கொரு நீதியா என்றுதான் கேட்டிருந்தேன்.

"புலிகள் ஈழத் தமிழர்கள் என்பதற்காகவே அவர்கள் செய்த கொலைக்கு பதிலாக ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களையும் பழிவாங்க வேண்டும் என்பது போல் உள்ளது உங்கள் பேச்சு."

தயவுசெய்து காமெடி பண்ணாதீர்கள். அதுதான் நடந்தது. ஒன்றுமே நடக்காதது போல பாசாங்கு செய்வது அருவருப்பாக இருக்கிறது.

தமிழ்நதி said...

சஞ்சய் காந்திக்கான பதிலின் பிற்பகுதி

"போட்டிப் போட்டுக் கொன்றொழித்த பொன்சேகாவையும் ராஜபக்‌ஷேவையும் மாறி மாறி ஆதரித்த ஈழத் தமிழர்களைவிட தமிழ்நாட்டுத் தமிழர்கள் மோசம் இல்லை என்றே நினைக்கிறேன்."

அப்படியா? 'இவன் கொல்றான். இவனைவிட அதிகமா அவன் கொல்றான்'என்ற உயிர்ப்பயம்தான் எங்களை இயக்கியது. ஒன்று பேய் என்றால் மற்றது பிசாசு. இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் சொற்ப எண்ணிக்கையில் வாக்களித்த ஈழத்தமிழர்களுக்கு இருந்தது.

மேற்படி உயிர் மற்றும் இருப்பு பற்றிய பிரச்சனை இல்லாத தமிழகத் தமிழர்கள் தி.மு.க., அ.தி.மு.க.வை மாற்றி மாற்றித் தேர்ந்தெடுப்பது ஏன்? உத்தம ஆட்சியைத் தருவார்கள் என்ற நம்பிக்கையிலா? நீங்கள் மிகப் பாரபட்சமாகப் பேசுகிறீர்கள். அல்லது கண்ணை வலுக்கட்டாயமாக மூடிக்கொண்டிருக்கிறீர்கள். எனக்குக் களைப்பாக இருக்கிறது.

ஈரொண்டு ரெண்டு... ஈர்மூன்று ஆறு வாய்ப்பாடு மாதிரி மாற்றமில்லாமல் போய்க்கொண்டிருக்கும் இவ்விவாதம் எனக்கு எரிச்சலைத் தருகிறது.

---

Your HTML cannot be accepted: Must be at most 4,096 characters

என்று பின்னூட்டப் பெட்டியின் கீழ் வருவதனால் நான்காகப் பிரித்துப் போட்டிருக்கிறேன். இது பின்னூட்டங்களை அதிகரிக்கும் உத்தி இல்லை என்பதை.... ப்ச்.

--
தன்ராஜ்,

Where are we going? And Who are we?

எந்தக் கொலையுமே நியாயப்படுத்தத் தக்கது அல்ல. எல்லாக் கொலகளிலிருந்தும் குருதி தெறிக்கத்தான் தெறிக்கிறது. காட்டுமிராண்டிளை நம்மோடு ஒப்பிடவியலாது. நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்பதில் அனைவருக்கும் குழப்பமே மிஞ்சியிருக்கிறது. குழப்பத்தில் வாழ்ந்து குழப்பத்திலேயே இறந்துபோகலாம்.


சூரியா,

கவிதைகள் உயிரோடில்லை. இறந்துவிட்டன. இனி எழுதப்போவதெல்லாம் பிணங்களைக் கிண்டும் வேலையே.

உங்கள் தாத்தாவின் சாட்டை எனக்கு வேண்டாம்.:) முடிந்தால் திருப்பிப் பெற்றுக்கொள்ளுங்கள்.

வாங்க கிருபாநந்தினி,

வருகைக்கு நன்றி. நீங்கள் தாராளமாக 'அக்கா'என்று கூப்பிடலாம் என்று சொல்லும்போது கொஞ்சம் நாடகத்தனமாக உணர்கிறேன். நீங்கள் விரும்பியபடி கூப்பிடலாம். ஆனாலும், 'இந்தப் பெண்கள் ஏன் குழாயடிச் சண்டை போடுகிறார்கள்?'என்று மற்றவர்கள் நக்கலடிக்காமல் இம்மட்டில் 'சுபம்'ஆனதில் எனக்கு மகிழ்ச்சியே.

ரதி,

"அடுத்து எப்போ சண்டை போடப்போகிறீர்கள்?"

ஆஹா! நான் வரேல்லை:) இதில் ஒரு விசயம் சொல்லியாகவேண்டும். நான் பெரும்பாலும் பெண்களோடு சண்டை போடமாட்டேன். அது என்ன மாயமோ மந்திரமோ அவர்களைக் கோபித்துக்கொள்ள மனசு வருவதில்லை. ஒருவேளை 'இருக்கிற பிரச்சனைகள் போதும்'என்ற காரணமாக இருக்கலாம். ஆனால், அடிக்கடி எனக்கும் எனது நண்பர்கள் மற்றும் என்னுடைய எதிரிகளாகத் தங்களை நினைத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கும் சண்டை வரும். அடிக்கடி சண்டை பிடிக்காவிட்டால் பத்தியமில்லை:) அலட்சியப்படுத்துவதை விடக் கோபம் பெரிதாக ஒன்றும் செய்துவிடப்போவதில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இரவி சங்கர்.

ஒருவழியாக எல்லோருக்கும் பதில்சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

Sanjai Gandhi said...

//ஈரொண்டு ரெண்டு... ஈர்மூன்று ஆறு வாய்ப்பாடு மாதிரி மாற்றமில்லாமல் போய்க்கொண்டிருக்கும் இவ்விவாதம் எனக்கு எரிச்சலைத் தருகிறது.//

டூ லேட்.. இதனால் தான் நான் எப்போதோ நிறுத்திக் கொண்டேன். வி.புலிகள் மனித கேடயங்களாக மக்களை பயன்படுத்தியதால் தான் இப்போதைய உயிர் பலிகளுக்குக் காரணம் எனத் தெரிந்தும் இந்திய அரசை குறை சொல்வதையே நோக்கமாகக் கொண்டவர்களிடன் என்னத்தை விவாதிப்பது.

//பின்னுட்டம் என்ற பெயரில் வரும் சொம்பு துக்கிகளும், ஜொள்ளர்களும் சொல்லும் கருத்து பாடவதிகள் - polluted statements.//

உங்கள் கட்டுரையில் உடன்பாடில்லாமல் அந்தப் பதிவரின் மனநிலையில் பிறரும் இருந்திருக்கலாம். அதனால் அவர் பதிவை சிலர் ஆதரித்திருக்கலாம். அவர்கள் எல்லாம் சொம்பு தூக்கிகள் ஜொள்ளர்கள் என ஒருவர் கருத்து?! சொல்லி இருக்கிறார். அதை அனுமதித்திருக்கிறீர்கள். நீங்களும் பெண் தான். உங்களுக்கும் பலரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். நீங்கள் இந்த விஞ்ஞான பூர்வ கண்டுபிடிப்பை அனுமதித்திருப்பதன் மூலம் அவர்களுக்கும் இது பொருந்தும் என்று மறைமுகமாக உணர்த்துவது போல் இருக்கிறது. நான் இந்த பதிவுக்கான பின்னூட்டங்களைத் தொடர விரும்பாமல் தான் இதை சொல்ல நினைத்தும் சொல்லாமல் தவிர்த்தேன். உங்களின் எனக்கான சமீபத்திய பின்னூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டி வந்ததால் இப்போது இதையும் சொல்ல வேண்டியதாகிவிட்டது. ( இந்தப் பின்னூட்டம் திசை திருப்பப்படும் என எதிர்பார்க்கிறேன். நாமெல்லாம் சராசரிகள் தானே )

குறிப்பு: நான் அந்தப் பதிவரின் பதிவை ஆதரிக்கவில்லை என்பதால் சொம்பு தூக்கி , ஜொள்ளர் பட்டியலில் இல்லை என்பதை மேன்மை தங்கிய VR அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்..

VR said...

ஆஹா! மிக்க மகிழ்சி சா. காந்தி. என்னுடைய கருத்தை விஞ்ஞான பூர்வ கண்டுபிடிப்பு என அங்கீகரித்ததுக்கு.

Swamy.

Sakthi Varun said...

தோழமைமிக்க தமிழ்நதி,

காங்கிரஸ் நியாயவாதி ஒருவருக்கு நீங்கள் இவ்வளவு மெனக்கிட்டு நீளமாக பதில் சொல்ல அவசியம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. முதலில் அவர் கே பி சுரேஷ் மற்றும் அம்பிதன் கருத்துகளுக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லட்டும். அதை விட்டு விட்டு VR எழுதிய கருத்துக்களை தாக்குவதன் மூலம் (மைய கருத்தை திசை திருப்பி விட்டு விட்டு) ஏன் ஓடி ஒளிய வேண்டும்?

சரி சரி ..... காங்கிரஸ் அரசு செய்த மாபாதக செயல்களை நியாய படுத்துவதையே நோக்கமாகக் கொண்டவர்களிடம் என்னத்தை விவாதிப்பது.

Sreeni said...

நாமெல்லாம் சராசரிகள் தான்.



குறிப்பு: நான் சராசரி என ஒப்பு கொண்டதால் காங்கிரஸ் சொம்பு தூக்கிகள் பட்டியலில் இல்லை என்பதை மேன்மை தங்கிய SanjaiGandhi™ அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

Uma said...

வணக்கம் தமிழ் நதி,

பின்னுடம் என்ற பெயரில் நச்சு விதைகளை தூவுவவர்களின் கருத்துகளுக்கே இங்கு இடம் இருக்கும் போது, VR கூறிய கருத்துக்கு என்ன குறைச்சல்? மேன்மை தங்கிய சஞ்சய்யின் பின்னுட்ட கருத்துகளின் ஊடாக பல நச்சு பாம்புகள் ஊர்ந்து கொண்டு இருக்கின்டிரான. அவர் தன் கைகளில் இருக்கும் அழுக்கை முதலில் பார்க்கட்டும். பிறகு முதுகில் இருப்பத்தை.

தடித்தனமான வார்த்தைகளை பயன்படுத்தும் மொந்தை தோல் (திக் ஸ்கின்) நபர்களுக்கு கருத்து சுதந்திரம் பற்றி எதுவும் தெரிய போவது இல்லை. இவர்கள் சோனியாவுக்கு காவடி தூக்கி கும்மி அடிக்கட்டும். அது பற்றி நமக்கு அக்கறை இல்லை. ஆனால் ஈழ போராட்டத்தை பற்றி இழிவாக பேசி தங்கள் நாற்றம் அடிக்கும் கழிவுகளை இங்கு கொட்ட வேண்டாம் என வேண்டி கொள்கிறேன்.

திறந்த மனமும், நியாய உணர்வும் இல்லாத ஒருவரின் பின்னுட்ட குப்பைகளுக்கு இவ்வளவு தூரம் விளக்கமாக பதில் கூறியது உங்களுக்கு ஒரு வேண்டாத வேலை. இவர்களுக்கு இப்போதும் அல்லது எப்போதும் சரியான கண்ணோட்டம் வர போவது இல்லை.

Muniappan Pakkangal said...

Nice post Tamilnathy.What you say is correct ,there should not be a word like Eezha tamilar & India tamilar.

விஷ்ணுபுரம் சரவணன் said...

தோழமை தமிழ்..

இவ்வுரையாடல் இந்தளவு நீண்டுக்கொண்டிருப்பதை இன்றுதான் கவனித்தேன். சஞ்சய் காந்தி நோக்கம் ஏதுமின்றி பேச்சினை நீட்டிக்கிறார் என்றே எனக்கு தோன்றுகிறது. அவரின் இந்த கருத்திற்கெல்லாம் எப்போதோ பலரால் பதிலளித்தாகிவிட்டது. அவரின் இடுகையிலிருந்து அதனை அவர் வாசித்திருக்ககூடும் என்றே எண்ணத்தோன்றுகிறது. எதையும் அவரின் கருத்தாக பதிவதில் யாருக்கும் மறுப்பில்லை அந்த கருத்தை இந்திய குடியுறுமையுள்ளவர்களில் நிலைபாடாக காட்டமுயலுவது மெலிதாக தெரிவதிலிருந்துதான் இங்கு எதிர்குரல்காரர்களின் மறைமுகத்திட்டமாக இருந்துவருகின்றன.

சுருக்கமாக பதிலிடுங்கள் தமிழ்.. ஏனெனில் அப்பதிலிடுகளின் வரிகளிலிருந்து கிளப்பிவிடுவர் குதர்க்கத்தை..

விஷ்ணுபுரம் சரவணன்

Sreeni said...

இதேபோன்ற ஒரு தளத்தில் ஒரு பொறுப்பான விவாதம் நிகழ்த்தும் தகுதி சஞ்சய் போன்றவர்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன். அவருடைய பின்னுட வாந்திகளுக்கு பதில் கிருபா நந்தினி யின் பதிவே பரவாயில்லை.

புளியங்குடி said...

தமிழ்நதி..

எங்களது நிபந்தனையற்ற ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. கிருபா நந்தினிக்கும்.

பிணத்தை மட்டுமல்ல, கசப்பான கவிதைகளை மேற்கோள் காட்டுவதையும் விட்டுவிடலாம் என நினைக்கிறேன். கடைசிக் கட்டத்தில் என்ன நடந்தது? ஏன் நடந்தது என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை எனும்போது யார்மீதும் குற்றஞ்சாட்டிப் பயனில்லைதானே.

தேர்தல் என்பதே வாக்காளர்கள் கையில் இல்லை என்கிற நிலையில் வெறும் வாக்குச்சீட்டை மட்டும் வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். நாங்களும் கையறுநிலையில்தான்.

ஆயுதங்களைத் தாண்டிய போர் முறைகள் வந்துவிட்டன என்பதைக் கவனிப்போம். நேபாளத்திடமிருந்து சிலவற்றைக் கற்க முடியும்.

மற்றபடி, ஸ்டாலின் குரு சொன்னதுபோல எளிமையாக இருக்கிறீர்கள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வெகு நாட்களாகிவிட்டது தோழி பதிவுகளுக்கு மறுமொழியிட்டு.. தாங்களே சொலவது போல் இது ஒரு ஆற்றாமையின் வெளிப்பாடு மட்டுமல்ல தன்னைத்தானே தேற்றிக்கொல்ளும் முயற்சியும் தான், வாழ்ந்தாகவேண்டுமே வேதனையோடாவது, எதிர்வினைகளை விமர்சனமென்று கொண்டால் வேதனைகள் கூடும்.. மெதுவாய் கடந்து செல்லுங்கள் உணர்ந்து கொள்பவர்கள் பலருண்டு..

padmanabhan said...

நாங்சள் தங்களிடமிருந்து அடுத்தப் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்