Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

5.13.2010

மரணக்கூடு திரும்பும் பறவைகள்....




ஞாபகக்கிணற்றின் ஆழத்துள்ளிருந்து
சுரந்தபடி இருக்கும் ஊற்றினை
‘உயிர்ப்பயம்’ என்ற ஒற்றைச்சொல்லால்
மூடாதே என் அம்மா!

அச்சம் சுமந்தலையும் காற்று…
கிணற்றில் மிதந்த பிணம்…
அகதிமுகாம்களில் கரைந்துமறையும் மனிதர்கள்…
நடுநிசியழகை விழுங்கும்
நாய்களின் குரைப்பொலி…
எல்லாம் சரிதான்
எனின்
காகக்கூட்டிலிருந்து கொத்தி விரட்டப்படும்
குயில்குஞ்சு நான் அம்மா!

உயிர்சுமந்து அலைபவளை
ஊருக்குத் திரும்பவிடு.

கருணைப் பசுமையிலா
பாழ்வெளியில்
குந்தவொரு மரமுமிலை
அந்தரத்து வானத்தில்
நெடுங்காலம் சஞ்சரிக்கவியலாது.

உயிர்த்தெழுவதாய்ச் சொன்ன
பீனிக்ஸ் பறவைகளின்
கரிந்துபோன சிறகுகளை
பொறுக்கிக் களைத்தேன்
போதும் இனித் திரும்புகிறேன்.

பெருமிதவெளிச்சம் அணைந்த விழிகளும்
துரோகிக்கப்பட்ட இதயமும்
தீர்ந்துபோன சொற்களுமாய்
வாழ்வென்ற பெயரில்
எப்படியோ நாட்களை நாம்
எரித்துவிட்டுச் சாகலாம்.

உன் மூக்குத்திக்கல் பதிய
முத்தமிட்டு வாவெனச் சொல்.

பளிங்குமாளிகை முன்
தொட்டிச்செடியாயிருப்பதிலும்
எனது தாழ்வாரத்தினோரம்
சிறுபுல்லாய் சீவித்தல் சுகம் அம்மா.

முள்ளிவாய்க்கால் குருதி தொட்டு
எழுதப்படவிருக்கும்
‘செம்மொழி’யின் பேரிரைச்சல்
செவிகிழித்து நெருங்குது கேள்!
மரணக்கூடெனினும்
என் மண் இனிது தாயே
மறுக்காதே! வருகின்றேன்.

4.22.2010

அம்மா! வரவேண்டாம்


கடற்படை காலாட்படை
விமானப்படை வேவுப்படை
நாலாபுறம் எல்லைப்படை
எல்லாம் இருந்தென்ன?
தாய்க்கு எங்கள் தாய்க்கு
எழுபத்தொன்பது பிராயம்
இந்திய இறையாண்மைக்கு
அவரால் நேருமாம் அபாயம்!

மனிதம் மறந்தீரே
மருந்தை மறுத்தீரே
ஏனிப்படி இழிந்தீர்
அழியாப் பழி சுமந்தீர்

மானத் தமிழ் மகனை ஈன்ற
எம் தாய் வெடி குண்டா?
வன்மம் வளர் அரசே!-உன்
நோய்க்கோர் மருந்துண்டா?
காந்தி பிறந்தாராம்-இங்கு
புத்தர் மலர்ந்தாராம்
கருணை சிறிதில்லா மண்ணில்
கல்கி பிறப்பாராம்!!!

மனிதம் மறந்தீரே
மருந்தை மறுத்தீரே
ஏனிப்படி இழிந்தீர்
அழியாப் பழி சுமந்தீர்

'அறியோம் யாம் அறியோம்'என
சொரிவார் பல பொய்கள்
சரியோ இது முறையோ எனில்-கலைஞர்
அதற்கும் எழுதுவார் அஞ்சல்.

தமிழை ஈன்ற தமிழே-எங்கள்
தாயுன் மலர்ப்பாதம்
இம்மண்ணில் படவேண்டாம்-விழி
நீரில் எழும் தீயில் அநியாயம் வெந்துபோகும்!

6.03.2009

கோடை இரவுகள்


அணைக்கவியலாத பெருந்தீயாய்
பகல் பற்றியெரிகிறது.
வெயிலுறிஞ்சிய சுவர்களுள்
ஒரு சொல்லும் உயிர்பெறாமல்
வீணே கரைகிறது காலம்.
பாதி இரவில்
மூளை கரைந்தொழுகும்
கனவைக் கலைக்கிறது
மின்வெட்டு.
நரம்புகளுள் ஓடுவது
குருதியில்லை; அனல்குழம்பே!

வெளியில்
ஓரிலையும் அசையவில்லை
நாய்களும் பேயுறக்கம்
சுடுகாட்டில் பிணமொன்று
தீவாயால் மினுக்மினுக்கென்று
அசைந்தசைந்து அழைக்கும்.
இரைந்து கடல் கூப்பிட
ஏதோ துயர் நினைவு....

பகிர
நீயுமில்லை! யாருமில்லை!

‘வான் பரந்த நட்சத்திரங்களுக்கு
வியர்க்குமா? வியர்க்காதா?’
இந்நேரம் எங்கேயோ
சைக்கிளில் பாய்ந்துழக்கி
ஓடி மறைகிறான்
ஒரு சிறுவன்.

நாளை அவன் கதைகளில்
மோகினிகள் உலவக்கூடும்.

5.19.2009

19.05.2009

இன்று
கண்கள் கண்ணீரில் மூழ்கி இறந்தன
காற்றை கண்முன்னால் யாரோ
திருடிக்கொண்டு போகிறார்கள்
நட்சத்திரங்கள் அறுந்து வீழ்ந்தன.

அழாதே என் தோழி!
அது அவனில்லை.
நாங்கள் பால்யத்தில் விளையாடித்திரிந்த
வீதிகளை இழந்தோம்
பூர்வீக வீடுகளிலிருந்து
தெருநாய்களைப் போல விரட்டப்பட்டோம்
நெல்மணிகளுக்குப் பதிலாக
கண்ணிவெடிகள் விதைக்கப்பட்ட
வயல்களைப் பிரிந்துவந்தோம்.
பிணங்களில் இடறிவிழுந்து
உடம்புக்குள் உயிர்
கூடுமறந்த குருவியெனப் பதகளிக்க
திசையெலாம் சிதறி விழுந்தோம்.
குடும்பப் புகைப்படம்…
கைப்பிடி மண்…
காதலனின் - காதலியின் கடிதம்…
யாதுமில்லை!

அவன் எங்களோடிருந்தான்
நாங்கள் உயிரோடிருந்தோம்
அவ்வளவே!

கண்களை நம்பாதே
நாசமாய்ப் போன கடவுளர் சாட்சியாய்
அது அவனில்லை.

ஏழுகோடித் தமிழர்களின் சொந்தக்காரன்
நந்திக்கடலோரம் நாதியற்றுக் கிடந்தானாம்
ஊடகக்காட்சிகளில் காறியுமிழ்ந்து சொல்
‘நாடகக்காரர்களை நம்பிலோம்’என்று.

மரணத்தை வென்றவன்
எங்கள் மானத்தின் காவலன்
தன்னுடலும் சரணடையச் சம்மதியாத
சரித்திர நாயகன்
சாய்ந்தானாம் என்றது
சாத்தான்களின் சதிவேலை!

கனவென்றுணர்ந்தும் கண்விழித்து
கதறியழுவதுபோல்
பொய்யென்று தெரிந்தும்
கண்ணில்பொங்குதே மாகடல்!

நீ அழாதே அம்மா!

கடல் வற்றிவிடுமென்று நீ நம்புகிறாயா?
இரவின் நீளம் ஓராண்டென்றால் ஒத்துக்கொள்வாயா?
பகலைச் சந்திரனும்
இரவைச் சூரியனும்
ஆளுமென்றால் ஆமாமென்றுரைப்பாயா?

தொழினுட்பம்
இழிநுட்பமானது இலங்கையில்தான்!

மகாவீரர்களுக்கு மரணமும் அஞ்சுகிறது
கோழைகளை அது வாழும் நாளெல்லாம்
வதைத்துக் கொல்கிறது.
சுடச் சுடப் பொன்னொளிரும்
எங்கள் மீட்பனும் அவ்விதமே.
காஸ்ட்ரோ சொன்னதே சரி!
'தோல்வியடைய நமக்கு அனுமதியில்லை'


கவிஞர் இளம்பிறைக்கு எழுதியது

5.18.2009

இது கவிதையல்ல; கோபம்!


எல்லாம் இனிதே நடக்கிறது.

இன்னும் சில மணிகளில்

முற்றிலும் மயானமாகிவிடும்

புகை மண்டலத்தினுள்ளிருந்து

சிங்கக் கொடி உயரும்

நிலத்தில் வீழ்ந்து

இறந்துகொண்டிருப்பவர்கள்

ஏலவே இறந்துபோனவர்களைப்

பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

ஒளி அவியும் விழிகளால்.


பாதுகாப்பு வலயங்கள்

கொலைக்களங்களாவதைப் பற்றி

சர்வதேசம் யாதொன்றும் செய்வதற்கில்லை.

அறிக்கை விடுவதில்

உள்ளுர்க்காரர்களுக்கு சளைத்ததாயில்லை

ஐ.நா. சபை.


எப்போதோ தயாரான கப்பல்களின் நங்கூரங்கள்

சிக்கிக்கொண்டிருக்கின்றன

தயக்கத்தின் வேர்களில்.


சர்வதேசத்தின் செவிட்டுச் செவிகள்

காத்துக்கொண்டிருக்கின்றன

எப்போதும் வரமாட்டாத ஒரு செய்திக்காக.


ஒரு மரணம் = சமாதானம் என்ற சமன்பாட்டை

மூன்று முட்டாள்களுடன்

சில சுயமோகிகளும் நம்பிப் பரப்புகிறார்கள்.


புதிய சண்டியனோடு பொருதமுடியாமல்

வெள்ளை மாளிகை கனவானாகி

அறிக்கை விடுகிறது.


இந்துசமுத்திரத்தின் செல்லப்பிள்ளை

துள்ளிக்கொண்டிருக்கிறது மமதையில்

சாதாரண காலத்திலேயே கையில் பிடிக்கமுடியாது

சங்கார வெறியில்

அகங்காரம் உரத்து அறிவிக்கும் உளறல்களுக்கு

‘ஜெயவேவா’பின்னணி இசைக்கிறது.


தலைநகர வீதிகளில்

பொங்கி வழிகிறது

தமிழர்களின் குருதிகலந்த

‘கட்ட’ சம்பலும் பாற்சோறும்.

வெட்டப்படப்போகும் ஆடுகள் பாவம்

மஞ்சளில் குளிக்கின்றன.


இங்கும் (தமிழகத்தில்) யாவரும் நலம்!

தங்களை விற்றுக்கொண்டவர்களும்

விலைகொடுத்துப் பெற்றுக்கொண்டவர்களும்

உதடுகளை அகலவிரித்துக் களிக்கின்றனர்.

பிரியாணிகளும் பியர் போத்தல்களும் இணைந்து

சுட்டுவிரல் அழுத்த

கொட்டி அள்ளியது கூட்டுக்களவு.

தமுக்கடித்து ஆடுகின்றனர் துதிபாடிகள்

தொண்டரடிப் பொடிகளின் தோள்முனைகளில்

சிறகுகள் முளைத்ததாகவும் தகவல்.

பொய்மையாளரைப் பாட

கவிக்குயில்களும் பேரரசுகளும்

கனத்த தொண்டைகளை

மேலும் கனைத்துக்கொள்கின்றனர்.

இனி கைதட்டத் தோதான வரிகளைத்தேடவேண்டியதில்லை.

‘வீழ்க’என்றாலும் விசுக்கென்றெழுந்து

கையொலி எழுப்ப அனைவரும் தயார்!


சில தொலைக்காட்சிகளும் பத்திரிகைளும்

பரப்புரைகளில்

கோயபல்சின் ‘குளோனிங்’ஆக போட்டியிடுகின்றன.


புரட்சியின் நெருப்பு

மண்ணிற்குள் மறைந்து கனிகிறது

வைரமாய்.


‘எங்களைப் பொறுத்தளவில் இனி விடுதலைப்புலிகள் இல்லை’என்ற கோத்தபாயவுக்கு நன்றி!

இல்லாதவர்களால் குண்டுகளாக முடியாது

இல்லாதவர்களால்

உங்கள் வேட்டிகள் நனைவது சாத்தியமில்லை

இல்லாதவர்களால்

உங்கள் கனவுகளுள் புகுந்து இனிஅச்சுறுத்த முடியாது.

உங்கள் கண்ணெதிரில் கட்டிடங்கள்

யாருமற்றவர்களால் தகர்ந்துசரிவது எத்தனை அழகு!


மரணமற்றவனின் மரணத்தை

எதிர்பார்த்துக் காத்திருக்கிறவர்களே!

எதிர்வு கூறுவோரே!

தேம்ஸ் நதிக்கரையோரத்தில் அவனே நடந்து செல்கிறான்

பாரிஸின் வீதிகளில் அவன்தான் பாடிக்கொண்டிருக்கிறான்

ரொறன்ரோவில்

அவனொரு தொழிற்சாலையில் இயங்கிக்கொண்டிருக்கிறான்

பேர்ளினில் நெருப்பொளிர்வது யாருடைய விழிகளில்?

சூரிச்சில்

டென்மார்க்கில்

நோர்வேயில்

ஈரோட்டில்

நீங்கள் யாரென்று நினைக்கிறீர்கள்?


நினைவிருக்கட்டும்

இல்லாதவர்கள் என்று உங்களால் சொல்லப்படுபவர்கள்

வரலாற்றில்

எப்போதும் இருந்துகொண்டுதானிருக்கிறார்கள்

பகத்சிங்காக

நேதாஜியாக

பிரபாகரனாக!

பிற்குறிப்பு: இதி்ல் கவித்துவத்தைத் தேடவேண்டாம். இது கவிதையன்று. என் கோபம்.