Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

2.12.2012

35ஆவது, சென்னை புத்தகக் கண்காட்சியும் இன்னுஞ் சில நினைவுகளும்…


இன்னுமொரு புத்தகக் கண்காட்சி, கோடிக்கணக்கான புத்தகங்களோடு வந்திருக்கிறது. கடந்த ஆண்டும் அதற்கு முன்னமும் வாங்கிய புத்தகங்களே இன்னமும் வாசித்துத் தீராத நிலையில், மீண்டும் அந்தக் குரல் இழைந்து குழைந்து அழைக்கிறது. வாழ்வின் பிடிமானமாகக் கற்பித்துக்கொண்டிருக்கும் இலக்கியமும் வாசிப்பும் இன்னமும் எத்தனை காலம் கூடவரும் என்ற சுயவிசாரணையை வசதியாக, தற்காலிகமாக மறந்தாயிற்று. ஜனவரி மாதம் நெருங்கத் தொடங்க பரவசம் கலந்த பதட்டம் தொற்றிக்கொள்வதைத் தவிர்க்கமுடிவதில்லை. திருவிழாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கிராமத்துக் குழந்தையைப் போல, புத்தகங்கள் நடுவில் நடந்து திரியும் கனவுகளோடு காலைகள் புலர்ந்தன.

34ஆவது (கடந்த ஆண்டு) சென்னை புத்தகக் கண்காட்சியின்போது, பெருநகரின் தெருக்களிலும் கண்காட்சியின் நுழைவாயிலிலும் ‘தமிழே… அமிழ்தே’என்ற பெருமித விளிப்புடன் கூடிய கலைஞரின் ‘கட் அவுட்’கள் உயர்ந்தோங்கியிருந்தன. திரும்பிய திசைகளில் எல்லாம் கலைஞர் ஸ்டாலின் சகிதம் சிரித்துக்கொண்டிருந்தார். கடந்த தேர்தலின்போது, மக்கள் அமிர்தத்தைக் குடித்துத் ‘தீர்த்து’விட்டார்கள். இந்நாள் முதல்வரோ கண்காட்சி விடயத்திலும் அலட்டிக்கொள்ளவில்லை. அவரது ஆர்வங்கள் சமச்சீர் கல்வி, நூலக மூடுவிழா என, அறிவிலும் செறிவானவை! கண்காட்சி நடக்கும் பிரமாண்ட கூடாரத்திற்கு இட்டுச்செல்லும் வழிநெடுகிலும் எஸ்.ராமகிருஷ்ணனும் சாரு நிவேதிதாவும் ஜெயமோகனும் பாலகுமாரனும் சுஜாதாவும் வைரமுத்துவும் உருவப்படங்களாக உயரங்களில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை பெருந்திரளான சனங்கள் புத்தகச் சந்தையில் கலந்துகொண்டார்கள் என்பது எனது அனுமானம். புத்தகச் சந்தை நிறைவுற்றதும் ஆட் கணக்கெடுப்பு, பதிப்பகங்களின் இலாப நட்டத் தகவல்கள் (அண்ணளவாக) தெரியவரும். அதற்கியைபுற அனுமானத்தையும் முன்பின் நகர்த்திக்கொள்ளலாம். கடைசி இரண்டு நாட்களிலும் ஆளோடு ஆளுரசி தோளோடு தோளுரசி நடக்க வேண்டியிருந்தது. புத்தகக் கடலினுள் இறங்குவதன் முன்பாக நுழைவாயிலிலிருந்து பார்த்தபோது ‘இதனுள் நுழைந்து வெளிவந்துவிட முடியுமா?’என்ற ஐயம் எழுமளவிற்குக் கடைசி இரண்டு நாட்களிலும் கூட்டம் திரண்டிருந்தது. இலக்கியக் கூட்டங்களில் காணக்கிடைக்காத அரிய காட்சியை புத்தகக் கண்காட்சியில் காணமுடிந்தது. பெண்கள் அதிகளவில் வந்திருந்தார்கள். குழந்தைகளுக்கோவெனில் கடற்கரை போல பொழுதுபோக்கும் இடங்களில் கண்காட்சியும் ஒன்றாயிருந்தது. விற்பனை நிலையங்களில் சில பிள்ளைகள் புத்தகங்களில் கண்பதித்து ஆழ்ந்த வாசிப்பில் ஈடுபட்டிருந்ததைக் காணமுடிந்தது. சோப்புக் குமிழிகள் மிதந்து வந்து முகத்தில் மோதி உடைந்தபோது ஒரு கணம் குழந்தைமை மீண்டு திரும்பிற்று. மாங்காய்ச் சீவல், பாலுள் முக்கிப் பொரித்த கடலை, வீண்தீனி விலக்குவோருக்கென பழங்கள் என அங்கு வயிற்றுக்கும் நிறையவே ஈயப்படுகிறது. தத்தம் வணிகத் தகவல்களைத் தாங்கிய துண்டுப் பிரசுரங்களை வழி நெடுகிலும் நின்று சிலர் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். கழிப்பறைகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் சுத்தமாகவும் நிறைந்த நீர்வசதியோடும் இருக்க, பெண்கள் கழிப்பறை அருகில் பெண் காவலர்கள் லத்திகளோடு அமர்ந்திருக்கிறார்கள்.

சுற்றவர இருந்த மனிதர்கள் மறைந்துபோக, புத்தகங்கள் நடுவில் கனவில் நடப்பதைப்போல அலைந்த பலரைப் பார்த்தேன். புத்தகங்களைப் புரட்டிக் கொண்டோ அல்லது புரட்டாமல் வெறுமனே முகப்பட்டைகளை உற்றுநோக்கிக் கொண்டோ காலம் உறைந்தாற் போல அவர்கள் நின்றிருந்தார்கள்.

பார்க்கப் பார்க்க, ‘சென்னை மாநகரத்தில் இவ்வளவு பேர் புத்தகங்களில் ஈடுபாடு கொண்டிருக்கிறார்களா?’என்று வியப்பாக இருந்தது. வருபவர்கள் எல்லோரும் புத்தகம் வாங்குபவர்களல்லத்தான். வேடிக்கை பார்க்கவும் பொழுதுபோக்கவும்கூட சிலர் அங்கு வருகிறார்கள். ஆனாலும், இவ்வளவு ஆயிரம் பேருள் ஓராயிரம் பேர் இலக்கியம் என்று எங்களால் விளிக்கப்படுவதை வாங்கினாலும் பிரதிகள் தீர்ந்துபோகுமே…! ஆனால், ஒரு பதிப்பு விற்றுத் தீர ஆண்டு பல காத்திருப்பதே (ஒரு சில நட்சத்திர எழுத்தாளர்களது படைப்புகள் விதிவிலக்கு) தமிழுக்கு விதிக்கப்பட்ட விதி. சாகித்திய அகாதமி விருது இன்னபிற அறிவிக்கப்படும்போது மட்டும் திடீரென்று விழித்துக்கொண்டாற் போல அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் விற்பனை எண்ணிக்கை உயர்கிறது. கடந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களது ‘சூடிய பூ சூடற்க’நான்காயிரத்து ஐந்நூறு பிரதிகள் விற்கப்பட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். இவ்வாண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’இதுவரையில் ஏறத்தாழ மூவாயிரத்து நூற்றியம்பது பிரதிகள் விற்கப்பட்டிருப்பதாக இணையத் தகவலொன்றில் வாசித்தேன். ஆக, திடீர் நன்னிமித்தங்கள் ஏற்பட்டாலன்றி, இலக்கியம் என்று எங்களைப் போன்றவர்களால் நம்பப்படுகிற எழுத்தை சராசரி மனிதர்கள் கண்டுகொள்வதில்லையோ…? அப்படித்தான் இருக்கவேண்டும்! நிலைமை இவ்விதமிருக்க, எதை முன்னிட்டு இத்தனை குறுங்குழுவாதக் குமுறல்கள், குடுமிப்பிடிச் சண்டைகள், தம்மைத்தான் பிரேரித்தல், சொற்போர்கள், மற்போர்கள், அங்கீகார ஆரவாரங்கள், அடையாள அரசியல்கள், பிதாமகத் தோரணை தொனிக்கும் பட்டியல்கள், அற்பப் புகழ்ச்சிகள், இருட்டடிப்புகள், மனம் செத்துச் சரிதல்கள்….? எல்லாவற்றுக்கும் பதிலாக, ‘ஆத்ம திருப்திக்காக எழுதுகிறோம்’என்றொரு வாக்கியம் எப்போதைக்குமாக நம்மைத் தாங்கிக்கொள்ளக் காத்திருக்கிறது. எந்தவொரு சொல்கொண்டு போர்த்தியும் மூடமுடியாத அம்மணமாம் நுகர்வுக் கலாச்சாரத்தின் அகராதியில் எழுத்தெனப்படுவது யாதுமில்லை.

‘புத்தகங்களின் விலைகளைப் பார்க்கும்போது பதிப்பகங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களாக ஆகிவிட்டனவோ என்று எண்ணத் தோன்றுகிறது’ என்ற அதிருப்தி கலந்த குரல்களை இவ்வாண்டு அதிகளவில் செவிமடுக்க நேர்ந்தது. பணப்பற்றாக்குறையால் வாங்கமுடியாமல் போன புத்தகங்களின் சுமையை மனதில் சுமந்துகொண்டு திரிவதென்பது உண்மையில் கொடுமையானது.

கைநிறையப் புத்தகப் பைகளைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு போனவர்களை, தனது ஏக்கம் வழியும் கண்களால் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை ஒருநாள் கண்டேன். அவனது கைகளில் ஒரு ஆங்கில-தமிழ் அகராதி மட்டும் இருந்தது. தந்தையின் சைக்கிளின் பின்னால் அமர்ந்து திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போனான். ‘இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது?’என்று வேதனையாக இருந்தது.

இலக்கியம் என்பது உன்னதம், கலை அது இதுவென்று நம்பிக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான வாசகர்களை ஒரு சில பதிப்பகங்கள் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன. விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் புத்தகத்தை மலிவான தாளில், இலகுவில் கிழிந்துவிடும் அட்டைகளோடு அச்சிட்டு ‘உயர்ந்த’விலையில் தலையில் கட்டும் சிலரது அறம் துணுக்கிற வைக்கிறது. அதே புத்தகம் அதனிலும் நேர்த்தியான அட்டை,காகிதம்,நேர்த்தியான வடிவத்தில் அதனிலும் குறைவான விலையில் வேறொரு பதிப்பகத்தில் காண நேர்கிறபோது, ‘எழுத்தின் அறம் இதுவோ!’என்று நொந்து நடப்பதன்றி வேறென்ன செய்வதற்கியலும்?

புத்தகங்களைப் ‘பண்டங்களாக’க் கருதுபவர்கள் மத்தியில் இன்னமும் சில மனிதர்கள் எஞ்சியிருக்கிறார்கள் என்றவகையில் மகிழ்ச்சி. ‘க்ரியா’பதிப்பகமானது ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்களையே ஒவ்வோராண்டும் வெளியிட்டு வருகிறது என்று (எனது அவதானத்தின்படி) எண்ணுகிறேன். க்ரியாவின் புத்தகங்கள் மட்டுமல்லாது, அதன் விலைப்பட்டியல் கையேடுகூட கலைநயத்தோடு, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கவிதை நூலொன்றின் சாயலுடன் மிளிர்ந்தது. கடந்த ஆண்டினைப்போலவே இவ்வாண்டும் விகடன், கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு ஆகிய விற்பனை நிலையங்களில் அதிக கூட்டம் குழுமியிருந்ததை அவதானிக்க முடிந்தது. அத்துடன், நற்றிணை போன்ற பதிப்பகங்களும் உற்சாகமான வரவேற்பைப் பெற்றதாக அறிந்தேன்.

எனது நண்பரும் எழுத்தாளருமாகிய பாஸ்கர் சக்தியிடம் “இம்முறை நிறையப் புத்தகங்கள் வாங்கினீர்களா?”என்று கேட்டபோது, “அதிகம் இல்லை”என்று பதில் வந்தது. “குறுகிய காலப் பயிராகிய குறுவைச் சாகுபடி போல, ஆகஸ்டில் எழுத ஆரம்பித்து டிசம்பரில் எழுதிமுடித்து புத்தக வெளியீட்டு விழாவும் நடத்தி, ஜனவரியில் புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டுவரப்படும் தயாரிப்புகளில் எனக்கு ஆர்வமில்லை”என்றார் அவர். அத்தகைய படைப்புகளில் எனக்குந்தான் ஆர்வமில்லை. கலையின் ஆவேசம் பிடரி பிடித்துத் தள்ள, படைப்பெழுச்சியால் உந்தப்பட்டு ஒரு பித்துநிலையில் அமர்ந்து ஒரே மூச்சில் உன்னதங்களைப் படைக்கக்கூடியவர்கள் மேற்குறித்த விமர்சனக் கத்தியை வைத்துத் தங்கள் கழுத்தை அறுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

இம்முறை புத்தகச் சந்தையில் வெளியிடப்பட்டிருக்கும் நூல்களுள் முக்கியமானவைகளாகக் கருதுவது (என்னளவில்) மொழிபெயர்ப்புகளையே. ‘ராதுகா’பதிப்பகம் என்ற பெயரும் மக்கினாற்போன்ற நிறத்தினாலாகிய காகிதத்தில் விரிந்த மஞ்சள் பூச்சொரியும் புல்வெளிகளும் கோதுமை வயல்களும் மறக்கக் கூடியனவா? ஒவ்வொரு ஆண்டும் தஸ்தயேவ்ஸ்கியின் “கரமசோவ் சகோதரர்கள் வந்துவிட்டதா?”என்று விசாரிப்பது வழக்கமாக இருந்தது. ஈற்றில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் இவ்வாண்டு அந்நூல் வந்திருக்கக் கண்டேன். தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் கவிஞர் புவியரசு. அதே பதிப்பகம், டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’இனை அழகிய முகப்பும் கெட்டி அட்டையுமாய் மூன்று தொகுதிகளாகப் பதிப்பித்திருக்கிறது. டி.எஸ்.சொக்கலிங்கம் மொழிபெயர்த்திருக்கிறார். 1957ஆம் ஆண்டு முதற்பதிப்பு வெளிவந்ததாக விவரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘போரும் அமைதியும்’(சீதை பதிப்பகம்) என்ற பெயரில் ஏற்கெனவே என்னிடம் இருந்த மூன்று தொகுதிகளையும் அலைந்துலையும் வாழ்வில் எங்கோ தொலைத்துவிட்டேன். ‘குற்றமும் தண்டனையும்’ஐ தமிழில் மொழிபெயர்த்த எம்.ஏ.சுசீலா தஸ்தயேவ்ஸ்கியின் Idiot ஐத் தமிழில் ‘அசடன்’ஆக மொழிபெயர்;த்திருக்கிறார். பாரதி புக் ஹவுஸ் அந்நூலை வெளியிட்டிருக்கிறது. மாக்ஸிம் கார்க்கியின் ‘யான் பெற்ற பயிற்சிகள்’ (தமிழாக்கம்: ஆர்.ராமநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்), ஜெர்மெயின் கிரீரின் ‘பாலற்ற பெண்பால்: பெண்பால் நபும்சகம்’ (தமிழாக்கம்: ராஜ்கௌதமன், விடியல்), சார்த்தரின் ‘சொற்கள்’ (தமிழாக்கம்: பரசுராம், தோழமை), ‘கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு’ (கையில் ஏந்தி வைத்துப் படிக்க இயலாத அளவு கனமுடையது- தமிழாக்கம்: ஏ.சீனிவாசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்), மாம்மே ப்ராடர்சனின் ‘வால்ட்டர் பெஞ்சமின்: நிலை மறுக்கும் வாழ்வு’ (தமிழாக்கம்:எஸ்.பாலச்சந்திரன், விடியல்), கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம் (எஸ்.வி.ராஜதுரை-வ.கீதா – விடியல்), டிராட்ஸ்கி என் வாழ்க்கை (தமிழில்:துரை.மடங்கன் - விடியல்) ஆகிய நூல்கள் இம்முறை வாங்கியவைகளுள் குறிப்பிடத்தகுந்தவை.

மொழிபெயர்ப்பென்பது மிகக் கடினமான கலை. அதைச் செய்ய அளவிறந்த பொறுமையும் மூலமொழியிலும் பெயர்க்கும் மொழியிலும் தெளிந்த அறிவும் அவசியம். மூலமொழிக்கு நியாயம் சேர்க்கும் அதேசமயம், பெயர்க்கப்படும் மொழியின் உச்சபட்ச பயன்பாட்டிலும் கவனஞ் செலுத்த வேண்டும். மூலமொழியின் நிலம், அரசியல் பின்புலம், பண்பாடு என்பன பற்றியும் அறிந்திருத்தல் வேண்டும். உலக இலக்கியங்களையும், மானுடத்தைச் செழுமையுறச் செய்த (அல்லது, தம்மால் முடிந்தவரை முயற்சித்த) கோட்பாடுகளையும் தத்துவங்களையும் தமிழில் மொழியாக்கம் செய்துதரும் கைகளைத் தொட்டு வணங்கத் தோன்றுகிறது. எந்தவொரு படைப்பும் தாய்மொழியில் வாசிக்கும்போது மூளையில் சென்று படிவதுபோல, பிறமொழிகளில் வாசிக்கும்போது படிவதோ நிலையாகப் பதிவதோ கிடையாது.

இம்முறை புத்தகச் சந்தையில் ஈழம் பற்றிய புத்தகங்கள் நிறையக் காணக் கிடைத்தன. ‘இலங்கையின் பேரினவாதிகளால் காலகாலமாக ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளைத் தமது எழுத்தில் கொணர்ந்து தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்தத் தவறினார்கள்’ என்றொரு அதிருப்தி பாதிக்கப்பட்டவர்களிடத்தில் நிலவியது. அதே நேரத்தில், 2009 மே மாதம், பேரழிவு நிகழ்ந்து குருதியின் சூடு ஆறுவதற்குள்ளாகவே கிழக்குப் பதிப்பகம் ‘பிரபாகரன்:வாழ்வும் மரணமும்’என, ‘சுடச் சுட’ஒரு புத்தகம் போட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும். எந்த தி.மு.க. இனப்படுகொலைக்கு முதுகு காட்டிக்கொண்டு காங்கிரஸோடு நாற்காலி பேரத்தில் ஈடுபட்டிருந்ததோ, அந்த தி.மு.க.வோடு தோளோடு தோள்நின்ற அருட்தந்தை ஜெகத்கஸ்பர் ‘வீரம் விளைந்த ஈழம் - மறக்க முடியுமா?’என்ற புத்தகத்தின் மூலம் தனது ஆறாத் துயரத்தை 2009இல் வெளியிட்டார். நந்திக்கடலோரத்தில் ஒரு சகாப்தம் நிறைவுற்றது என்ற செய்தி வெளியாகிச் சில நாட்களிலேயே, தலைவர் பிரபாகரன் தமது பத்திரிகையைப் படித்துக்கொண்டிருப்பதுபோல அட்டைப் படம் வெளியிட்டு, மக்களின் எதிர்பார்ப்பைக் காசாக்கி கல்லாவை நிரப்பியது ‘நக்கீரன்’. ஈழத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள, தமிழகத்திலுள்ள சாதாரண சனங்களுக்கு புத்தகங்களன்றி வேறு கதியில்லை என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனாலும், கொலைபடுகளத்தின் ஓலம் ஓய்வதற்குள், ஒரு இனம் தாம் வீழ்ந்துபட்டோம் என்ற திகைப்பிலிருந்து மீள்வதற்குள், அதை விலை பேசி விற்றுவிடும் சில பிழைப்புவாதிகளின் வணிக தந்திரம் சகித்துக்கொள்ளற்பாலதன்று.

2009ஆம் ஆண்டுவரை, ஈழச்சிக்கல் குறித்து விவாதங்களை முன்னெடுக்கும் புத்தகங்கள் குறைவாகவே வெளிவந்திருந்தன. இம்முறை கண்காட்சியில் அந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டிருந்தது. சொல்லப்பட்டு வரும் பல்வேறு வரலாறுகளிலிருந்து தீர்க்கமான வரலாற்றை (அப்படியொரு வரலாறு மனிதர்களால் அறிந்கொள்ளச் சாத்தியமற்றதெனினும்) வந்துசேரும் நோக்கில் ஈழம் பற்றி மேலும் சில அபுனைவு (அவற்றுள் அதிபுனைவுகளும் உண்டு) நூல்களை வாங்கினேன். ஏனையவர்களுக்குப் பயன்படக்கூடும் என்பதனால் அந்தப் புத்தக விபரத்தைத் தருகிறேன்.

நூல்களின் பட்டியல்: இலங்கையில் சமாதானம் பேசுதல்: முயற்சிகள், தோல்விகள், படிப்பினைகள் (கலாநிதி குமார் ரூபசிங்க – அடையாளம்), போர் உலா (கப்ரன் மலரவன் - விடியல்), கூண்டு (கார்டன் வைஸ் - தமிழில்: கானகன் - காலச்சுவடு, வாழ்புலம் இழந்த துயர் (மு.புஷ்பராஜன்-சாளரம்), ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா? (கலையரசன்-வடலி), இந்துமகா சமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சனையும் (உதயன்-விஜயன், விடியல் பதிப்பகம்), இலங்கை: தேசிய இனப்பிரச்சினையும் தீர்வுக்கான தேடல்களும் (சி.சிவசேகரம்-கீழைக்காற்று), இந்திரா மற்றும் ராஜீவ் காந்தி கொலையாளிகளும் அப்பாவிகளும் (ஜெய.ஆ.இராமநாதன்), இலங்கை: ஐக்கிய நாடுகள் அவையின் வல்லுநர் குழு அறிக்கை (தமிழில்:பூங்குழலி, புதுமலர் மற்றும் தலித் முரசு வெளியீடு),கொலை மறைக்கும் அரசியல் (சேனன் - உயிர்மை),தமிழினப் படுகொலைகள் 1956 – 2008 (வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் - மனிதம் வெளியீடு) இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? (நிதின் கோகலே – கிழக்கு), விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு (விடுதலை இராசேந்திரன் - பெரியார் திராவிடக் கழக வெளியீடு), ஈழம் போர்நிலம் (தீபச்செல்வன் - தோழமை வெளியீடு), ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (கணேசன் ஐயர் - இனியொரு வெளியீடு), மகாவம்ச: சிங்களர் கதை (வில்ஹெம் கெய்கர்- தமிழில்:எஸ்.பொ. – மித்ர பதிப்பகம்), வாய்மையின் வெற்றி: ராஜீவ் காந்தி படுகொலை புலனாய்வு (டி.ஆர்.கார்த்திகேயன், ராதா வினோத் ராஜூ - தமிழில்:எஸ்.சந்திரமௌலி – ராஜராஜன் பதிப்பகம்). மேற்குறிப்பிடப்பட்டவற்றுள் சில புத்தகங்கள் ஏற்கெனவே என்னிடம் இருந்து தொலைந்துபோனவை.

ஈழத்தில், இந்திய அமைதிப் படையின் காலத்துடன் தொடங்கி, 2003ஆம் ஆண்டுவரையான காலகட்டத்தைப் பேசிய சயந்தனின்‘ஆறாவடு’நாவல் (தமிழினி வெளியீடு) தமிழக வாசகர்களிடையேயும் எழுத்தாளர்களிடையேயும் பரவலான கவனத்தைப் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறுவருக்கான புத்தகங்கள் தமிழில் அருகிப் போய்க்கொண்டிருக்குங் காலத்தில், யூமா வாசுகியின் மொழிபெயர்ப்புப் பங்களிப்பினைப் பற்றிச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ‘இப்படியொரு கவித்துவ மொழி நடை கொண்ட கலைஞன், குழந்தைகள் இலக்கியத்தில் எதற்காக இவ்வளவு கவனஞ் செலுத்துகிறார்?’என்று வியந்தார் தோழியொருவர். யூமா வாசுகியின் ‘மஞ்சள் வெயில்’ஐ அண்மையிலே வாசித்து நெகிழ்ந்திருந்தார் அவர். இவ்விலக்கிய வகைமையுள் இரா.நடராசனும் குறிப்பிடத்தகு பங்களிப்பைச் செய்திருக்கிறார். ‘ஆயிஷா’வை வாசித்தவர்கள் அவளை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். குழந்தைகளை ஆத்மார்த்தமாக நேசிக்காமல் அவர்களது உலகைக் குறித்து எழுதவும் மொழிபெயர்க்கவும் முடியாது என்றவாறாக எங்களது உரையாடல் நீண்டது. சின்னஞ்சிறாரது மனவுலகம் குறித்த கவிதைகளையும் பதிவுகளையும் பற்றிப் பேசுகையில், அவ்வகைமையுள் எழுதிவரும் விஷ்ணுபுரம் சரவணன் நினைவில் வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றும் கோபிநாத்தின் ‘ப்ளீஸ்… இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க’என்ற புத்தகம் பல்லாயிரக் கணக்கில் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்ததாக நண்பரொருவர் சொன்னார். இந்தப் புத்தகக் கண்காட்சியில் கோபிநாத்தைப் பார்த்தேன். அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள பெரிய கூட்டமே கண்களில் ஆவல் கொப்பளிக்கக் காத்திருந்தது. அதன்பிறகு மேடையில் உரையாற்றிய கோபிநாத், தன் பலம் அறியாத யானையின் கதையைச் சொல்லி, ‘அப்படித்தான் இந்தியர்களாகிய நாமும்’என்றபோது, ‘சிறுகயிற்றில் கட்டப்பட்டிருந்த பெருங்களிறுகள்’ உற்சாகத்தில் கரவொலி எழுப்பினர். ஆக, புத்தகங்கள் விற்றுத் தீர்வதற்கும், உரையாற்றுகிறபோது நாற்காலிகள் நிறைந்திருக்கவும் நட்சத்திரப் பெறுமதி வேண்டும் என்பதறிக.

‘தாமரை’இதழின் ஆசிரியரும் கம்யூனிஸ்ட் தோழருமாகிய சி.மகேந்திரனின் ‘வீழ்வேனென்று நினைத்தாயோ…’புத்தக வெளியீட்டு விழாவின் ஆரம்பத்தில் பல நாற்காலிகள் காலியாகவே இருந்தன. கூட்ட முடிவில் ஏறத்தாழ எல்லா நாற்காலிகளும் நிறைந்திருக்கக் கண்டேன். அதற்கு தமிழருவி மணியனின் உரையும் ஒரு காரணம் என்று சொல்லின், அந்நேரம் அங்கிருந்தோர் அதை மிகையெனச் சொல்லார். மிகுந்த துயரமும் வெப்பியாரமும் கொதிப்பும் வெறுப்பும் வழியும் குரலில் அவர் சொன்னார்…”சமூக அக்கறையற்ற சொரணையிழந்த இந்த மக்கள் கூட்டத்தினிடையில் வாழ நேர்ந்தமைக்காக வெட்கப்படுகிறேன். விரைவில் செத்துப் போக வேண்டுமென விரும்புகிறேன்.” பிறர்மேல் தமிழெனும் மூச்சை விடும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சிலிருந்து மாறுபட்டு அது உண்மையின் குரலாக ஒலித்தது. பொய்யிலிருந்து அத்தகைய வெம்மை புறப்பட்டு வந்து நெஞ்சைத் தீய்த்திருக்க முடியாது.

ஒவ்வொரு நாட்களும் யாராவது ஒருவருடைய புத்தக வெளியீட்டு விழா கண்காட்சியில் நிகழ்ந்தபடியிருந்தது. மேடையில் அமர்ந்திருக்கும் கருத்துரையாளர்களிடம் மணிக்கணக்கில் செவிகளைக் கையளித்துவிட்டு ‘எப்போதடா கூட்டம் முடியும்?’என்று காத்திருப்பதிலும், புத்தகக் கண்காட்சியினுள் இடம்பெற்ற பதினைந்து நிமிட வெளியீட்டு விழாக்கள் மகிழ்ச்சியளிப்பனவாக இருந்தன. கடந்த ஆண்டு போல, கண்காட்சியைச் சாட்டாக வைத்து நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் குதூகலம் என்ன காரணத்தினாலோ இம்முறை அதிகளவில் கிட்டவில்லை.

முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுமிடத்து இவ்வாண்டு குறிப்பிடத்தகுந்த அளவில் ஈழத்து எழுத்தாளர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தார்கள். கொழும்பிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன், மட்டக்களப்பிலிருந்து உமா வரதராஜன் கல்முனையிலிருந்து அனார் (குடும்பத்துடன் வந்திருந்தார்) கனடாவிலிருந்து சேரன், சுவிட்சர்லாந்திலிருந்து சயந்தன், நோர்வேயிலிருந்து வ.ஐ.ச.ஜெயபாலனும் வந்திருந்தார்கள். ஈழவாணியும் சோமிதரனும் தீபச்செல்வனும் யாழ் தர்மினியும் நானும் சென்னைவாசிகள் என்ற கணக்கெடுப்பினுள் வருகிறோம். தமிழகத்தைச் சேர்ந்தவர்களுள் அமெரிக்காவிலிருந்து பெருந்தேவியும், நைஜீரியாவிலிருந்து நேசமித்ரனும் வந்திருந்தார்கள். அல்லது, அவர்களை மட்டுமே சந்திக்கவும் பேசவும் முடிந்தது.

கண்காட்சியிலிருந்து வெளியே வந்தபோது எதிர்ப்பட்ட கவிஞர் ஒருவர், “ஈழத்தமிழர்கள் ஏன் எப்போதும் புலம்புகிறீர்கள்?”என்று கேட்டார். அவர் குடித்திருந்தார். அந்தக் கேள்வி அவரால் மட்டும் கேட்கப்பட்டதாக அதன் தொனி உணர்த்தவில்லை. பல்லாண்டுகளாகக் கேட்கப்பட்டு வரும் கேள்விதான் அது. “உங்கள் உறவுகளில் சில பேரைக் கொன்றுவிடலாம். உங்கள் வீட்டை எரித்துவிடலாம். உங்களை வேறொரு மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ கொண்டுபோய் இறக்கிவிட்டு விட்டு உங்களிடம் இதே கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?”என்று கேட்க நினைத்தேன். ஆனால், கேட்கவில்லை. வயதானவர்களையும் குடித்திருப்பவர்களையும் வார்த்தைகளால் தானும் காயப்படுத்துவது பண்பாட்டுக்கு முரணானது. மேலும், அவர் நேசிக்கத்தகு கலைஞனாயிருக்கிறார் என்பதனாலும் எதிர்வினையாற்றுவதைத் தவிர்த்து விலகி விரையவேண்டியதாயிற்று. ‘குடி நீக்கம்’செய்யப்பட்ட வார்த்தைகளே பொருட்படுத்தத் தக்கனவாம்.

இனிமேல் புத்தகங்கள் வாங்குவதில்லை என்ற சங்கற்பம் சங்கற்பமாகவே நின்றுவிட்டது. வாங்கிக் குவித்திருக்கும் புத்தகங்கள் என்னைப் பரிகாசப் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றன. பட்டியலைக் கணனியில் சேமிக்கும் வேலைகூட இழுபறியாக இருக்கும் நிலையில், எப்படித்தான் இவ்வளவையும் வாசித்து முடிக்கப் போகிறோம் என்று மலைப்பாக இருக்கிறது. புத்தகங்களுக்குள்ளிருந்து, கொலையுண்டவர்களின் குருதி பெருக்கெடுக்கிறது. நம்பிய கொள்கைக்காக மாண்டவர்களது சாம்பல் பறந்து வந்து முகத்தை மூடுகிறது. சரிந்த சாம்ராஜ்ஜியங்களின் இடிபாடுகளுக்குள்ளிருந்து தீனமான குரல்கள் கேட்கின்றன. இழந்த காதலின் பாடல்கள் மிதந்து வருகின்றன. மொழியின் அழகு பித்தேற்றிப் பிதற்றத் தூண்டுகிறது.

புத்தகங்களுக்கு நடுவில் எப்போதும் இருக்க வாய்த்தவர்கள் பாக்கியவதிகள்-பாக்கியவான்கள்.

நன்றி - தீராநதி

5.24.2010

வாடகை வீடு




வெயில் மண்டையைப் பிளந்து உள்ளே இறங்கிவிடுவேன் என்பதுபோல ஆங்காரத்தோடு எரித்தது. பூதாகரமான வாகனங்கள் பாதசாரிகள் பிரமித்துச் செயலிழந்து நிற்கும்படியாக ஓசையெழுப்பியபடி குறுக்கும் நெடுக்குமாக விரைந்துகொண்டிருந்தன. பேருந்திலிருந்து இறங்கி, அகண்ட கரும்பாம்பாய்க் கிடந்த வீதியைக் கடக்கும்போது, உயிர் ஒரு நிமிடம் உதறலெடுத்து ஓய்ந்தது. நல்லவேளை கதிர் அவளது கையைப் பற்றியிருந்தான். பிரதான வீதியிலிருந்து அந்த அபார்ட்மென்ட் இருக்கும் சிறு வீதியினுள் இறங்கியதுமே ஆசுவாசமாக உணர்ந்தார்கள். அதற்கு, சாலையின் இருமருங்கிலிருந்தும் கிளைக்கைகளை நீட்டி ஒன்றையொன்று பற்ற முயன்றுகொண்டிருந்த மரங்கள் காரணமாயிருக்கலாம். ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்துவிட்டு திடீரென நினைத்துக்கொண்டாற்போல காற்று இலைகளை விசிறியது. வெயிலில் வந்த களைப்பை காற்றின் தடவல் துடைத்துப்போட்டது. இத்தனை அலைச்சலுக்குப் பிறகு ஒருவழியாக நல்லதொரு வீடு கிடைக்கவிருக்கும் நிம்மதி கதிரின் முகத்திலும் வெளிப்படையாகத் தெரிந்தது. வீடு தேடியலைந்த இந்த மூன்று வாரங்களில் அவன் மேலும் இளைத்துவிட்டாற்போலிருந்தது சுமதிக்கு.

வீட்டுச் சொந்தக்காரர் இரண்டு மணிக்கு வந்து சந்திப்பதாகச் சொல்லியிருந்தார். கதிர் வேலைக்கு அரைநாள் லீவு சொல்லிவிட்டு வந்திருந்தான். இந்த வீட்டை மூன்று நாட்களுக்கு முன் வந்து பார்த்திருந்தார்கள். காவலாளியிடம் சாவி இருந்தது நல்லதாய் போயிற்று. வாடகை உட்பட எல்லாவகைகளிலும் வீடு பிடித்திருந்தது.

அபார்ட்மென்ட் வாசலில் அவர்கள் காத்திருந்தார்கள். காவலாளி அரைத்தூக்கத்தில் இருந்தார். பின்மதியங்களுக்கேயுரித்தான சோம்பலும் வெயிலும் வீதியை வெறிச்சிடப் பண்ணியிருந்தன.

இப்போதிருக்கும் வீட்டை விட்டு வரவே மனதில்லை சுமதிக்கு. இந்த மூன்று வாரங்களில் முப்பது தடவையாவது அதைக் குறித்து வருந்தியிருப்பாள். தனிவீடொன்றின் முதல்தளம். அகலமான வராந்தாவும் வெளிச்சம் வாழும் அறைகளும் வேம்புகள் இழைந்து இழைந்து செல்லங்கொஞ்சம் பல்கனியுமாக அந்த வீட்டை எங்கோ கிராமத்திலிருந்து பெயர்த்தெடுத்துக் கொண்டுவந்து வைத்தாற்போலொரு நிறைவு. காலையில் நாற்புறமிருந்தும் யன்னல்கள் வழியாக வெயில் இறங்கிவந்து கோலமிடும் அழகே தனி. கூப்பிடு தூரத்தில் கடல். மழைக்காலத்திலே அலைகள் சளக்சளக்கென்று கரைமோதும் சத்தம் வீடுவரை கேட்கும். விடிகாலையில் படுக்கையறையை ஒட்டியிருந்த பூவரசில் குருவிகள் கெச்சட்டமிடும் ஓசை இடைவிடாமல் ஒலிக்கும். அங்கிருந்து கிளம்பி கடற்கரைச்சாலையில் கால் மிதித்தபிறகே நகரத்தின் பைத்தியப் பரபரப்பை உணரமுடியும்.

எல்லா சுகமும் கதிரை கே.கே.நகர் அலுவலகத்திற்கு இடம்மாற்றும்வரைதான் நீடித்தது. இரண்டு மாதங்களாக பேருந்தில்தான் அலுவலகத்திற்குப் போய்வருகிறான். அண்மைய நாட்களில் பயணக் களைப்பு அவனது முகத்தில் எழுதி ஒட்டப்பட்டாற்போல புலப்படத்தொடங்கிவிட்டிருக்கிறது. வெயில்காலத்தில் பேருந்துகள் நெருப்பினால் வேயப்பட்ட தகரச் சிறைகளாகக் கொதித்தன. அனல் உலைகளாக ஆளை உருக்கின. முன்பெனில் வேலையிலிருந்து திரும்பியதும் புத்தகத்தோடு அமர்ந்துவிடுவான். இப்போதோ ஓரிலையும் ஆடாமல் மௌனத்தவமியற்றும் மரங்களை, புல்கருகி அனல்பறக்கும் வெளியை வெறிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறான். பிறகு மாலை கருகியதும் தூங்கவாரம்பிப்பவன் இரவு ஒன்பதரைக்கே எழுந்திருக்கிறான். இரவு உணவு முடிந்ததும் மறுபடியும் தூங்கத்தொடங்கிவிடுகிறான். அவனுக்கு மிகப் பிடித்தமான புத்தகங்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.

சுமதிக்கு வருத்தமாக இருந்தது. நிரம்பவும் யோசித்தபிறகு அவள்தான் அந்த முடிவுக்கு வந்தாள்.

நாம வேணா கே.கே.நகர் பக்கமே போயிடலாங்க…”

அவனது கண்கள் மலர்ந்து முகம் விகசித்தது.

உனக்கொண்ணும் சிரமம் இல்லையே…?”

எனக்கென்னங்கபுள்ளைங்களுக்குக்கூட நல்ல பள்ளிக்கூடம்லாம் அங்க இருக்காம்

அவனது முகத்தில் எப்போதாவது மலரும் அந்த அபூர்வமான புன்னகை பரவியது. சிரிக்கும்போது அழகாகத் தோன்றாத மனிதர்கள் இல்லவே இல்லை என்று சுமதி நினைத்துக்கொண்டாள். கல்யாணமான புதிதில் அவள் வீட்டில்கூடக் கேட்டார்கள்.

என்னதுஒம் புருசன் சிரிக்கிறதுக்கும் பேசுறதுக்கும் காசு கேப்பாராக்கும்…”

பேசி என்ன வாழ்ந்தது?’என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். சொல்லவில்லை. ஒரு சிரிப்போடு நகர்ந்துவிட்டாள். பேச்சு பெரும்பாலான சமயங்களில் பாவனைப்பூச்சுக்களோடு இருப்பதை அவளறிவாள். சளசளவென்று பேசுவதைவிட பேசாமலே இருப்பது நன்றாகத்தானிருக்கிறது. விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டுவிட்ட பிற்பாடு இரவு சிந்தும் மெல்லிய ஒளியில் அவன் மார்பினுள் ஒடுங்கும்நேரம் கூந்தலுள் நுழையும் அந்த விரல்கள் சொல்லாததையா வார்த்தைகள் வெளிப்படுத்திவிடப்போகின்றன? நோய்வாய்ப்பட்டு மரணத்தின் கத்தி நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்தபோது,அருகிருந்து இரவெல்லாம் ஒளிசிந்திக்கொண்டிருந்த கண்களின் கனிவொன்று போதாதா அவளுக்கு? அவன் அதிகம் பேசுவதில்லை என்பதில் அவளுக்கு ஒரு குறையுமில்லை.

அவன் அதிகம் பேசிச் சிரிக்கும் ஒரே நபர் உண்டென்றால் எப்போதாவது கிராமத்திலிருந்து வந்துபோகும் சுப்பிரமணியுடன்தான். தமிழ்ச்சினிமாக்களில் காண்பிப்பதுபோல அவன் பலாப்பழத்தோடோ வாழைத்தாரோடோ வந்து இறங்குவதில்லை. புத்தகங்களாக அள்ளிக்கொண்டு வந்துசேர்வான்.
சிறுவயது முதற்கொண்டு சிநேகிதன்.

இதைப் படிச்சுப் பாருடா மாப்ளஐயோ! என்னமா எழுதியிருக்கான்…”

அந்தஐயோவின் பரவசம் கண்களின் மினுக்கத்தில், உதடுகளின் துடிதுடிப்பில், தனக்குப் பிடித்த பக்கத்தைப் பிரித்துப் பிடித்த விரல்களின் மெல்லதிர்வில் தெரியும்.

புத்தகம் படிக்கிறது இருக்கட்டும்டா.. ஒம் பேர்ல இருக்கிற பிள்ளையைத் தூக்கிடலாமா? அதென்ன சுப்பிரமணியம்பிள்ளை?” வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பான்.

அது கெடக்கு மாப்ளஒம் புள்ளைகளுக்கு கல்யாணம் காட்சின்னு வரும்போது சாதி குறுக்க வரும்லாஅப்ப பேசிக்கிறேன்

சாதியென்ன பூனையா குறுக்க வர்றதுக்குஎன் ரெண்டு பிள்ளைங்களும் யாரைக் கூட்டிட்டு வந்தாலும் அவங்க என் மருமகள்கதான்

இவரு என்ன உலகந் தெரியாத ஆளாயிருக்காருஎன்று சுமதி நினைத்துக்கொள்வாள். ஆனாலும், ‘உலகந் தெரியாதஆட்கள்தான் நிம்மதியாக இருக்கிறார்கள் என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது. நிறையத் தெரிந்தவர்கள் அல்லது அப்படிப் பாவனை பண்ணுகிறவர்கள் ஏதோ சேட்டை பண்ணுகிற குரங்கைப் பிடித்துத் தலையில் ஏற்றிவைத்துக்கொண்டிருக்கிறவர்களைப்போல விழிபிதுங்கித் திரிவதைக் கண்டிருக்கிறாள்.

அவன் ஒற்றைப்பிள்ளை. ஊரில் சொந்தவீடு இருந்தது. சென்னைக்கு வந்ததிலிருந்து ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள். வீட்டுச் சொந்தக்காரரை சாவி கையில் வாங்கும்போது பார்த்ததுதான். முதலாம் திகதி தவறாமல் வாடகைப்பணம் வங்கிக்கணக்குக்குப் போய்விடுகிறது. எப்போதாவது தொலைபேசியில்இன்னும் அங்கேதான் இருக்கீங்களா?’ என்பதாக ஒரு குரல் கேட்கும். அவருடனான தொடர்பு அவ்வளவே.

இந்த வீடு தேடும் படலம் ஆரம்பித்ததிலிருந்து அவன் கண்ணெதிரில் விரிந்த உலகம் அவனுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. வாடகை விளம்பரங்கள் வரும் பத்திரிகையிலிருந்து சில தொலைபேசி இலக்கங்களைக் குறித்துவைத்துக்கொண்டு அழைத்தான். முதலாவது அழைப்பிலேயே கசங்கிவிட்டது முகம்.

வெஜ்ஜா நான் வெஜ்ஜா அதை மொதல்ல சொல்லுங்கோஅப்பறம் வீட்டைப் பத்திப் பேசலாம்என்றார் தொலைபேசியை எடுத்தவர்.

நான் வெஜ்தாங்க

நான் வெஜ் சாப்பிடுறவங்களுக்கு வீடு குடுக்கமுடியாதுமுகத்திலறைந்தாற்போல வந்தது பதில்.

அவன் படக்கென்று தொலைபேசியை வைத்துவிட்டான்.

ஏதோ அவர் வீட்டை எம் பேருக்கு எழுதிக்குடுக்கச் சொல்ற மாதிரில்ல பேசுறாரு…”

கே.கே.நகர், அசோக் நகர், மாம்பலம் பக்கம்லாம் பிராமின்ஸ்தா நெறயப் பேர் இருக்காங்க.”என்றாள் சுமதி.

இப்பிடியா பதில் சொல்றது? எல்லாத்துக்கும் ஒரு வகை முறை உண்டில்லையா?”என்றான் அவன். குரல் சுரத்திழந்திருந்தது.

தனி வீடா? அபார்ட்மென்டா?”சுமதி கேட்டாள்.

அபார்ட்மென்ட்தாம்மா…”

அடுத்துப் பேசியவரின் குரல் அத்தனை தண்மை.

வந்து பாருங்களேன்பிடிச்சிருந்தா முடிச்சுடலாம்என்றார்.

தனிவீடு. இரண்டு பெரிய அறைகள், இரண்டு குளியலறைகள், கிணற்றடிதுவைகல்வாடகை பன்னிரண்டாயிரம் சொன்னார். தென்னையொன்று குனிந்து கிணற்றைப் பார்த்துக்கொண்டிருந்தது. துவைகல்லில் சுமதி தன் பால்ய நாட்களைக் கண்டாள். குழந்தையின் குதூகலத்துடன் அதில் அமர்ந்துபார்த்தாள்.

பிடிச்சிருக்குங்க…”கதிர் இறந்தகால ஞாபகங்களில் மினுங்கும் சுமதியின் கண்களைப் பார்த்தபடி சொன்னான்.

செரிவீட்டுக்குப் போய் யோசிச்சிட்டு போன் பண்ணுங்கஎன்றார் அவர்.

அன்றிரவே தொலைபேசியில் அழைத்தார்கள். அவரது தொனி மாறிப்போயிருந்தது.

வேற பார்ட்டி பதிமூவாயிரத்துக்குக் கேக்கிறாங்க... உங்களுக்குப் பிடிச்சிருந்தா நீங்க எடுத்துக்குங்க…”

விளம்பரத்துலயே பன்னெண்டாயிரம்னுதான போட்டிருக்கீங்க?”

இப்ப எல்லாம் விலை ஏறிப்போச்சுவீட்டு வாடகை மட்டும் அப்பிடியேவா நிக்கும்?”

மொதல்ல பன்னண்டாயிரத்துக்கு சரின்னீங்க

ஆமாம் சரின்னேன். இப்ப இல்லைங்கிறேன்

கதிர் தொலைபேசியைப் பட்டென்று வைத்தான்.

பேராசைபேராசைஅவனது உதடுகள் முணுமுணுத்தன.

கிணற்றின் ஆழத்தில் விழுந்து கிடந்த தென்னங்கீற்று முளைத்தெழுந்து வந்து கழுத்தைச் சுற்றிக்கொள்வதாக சுமதி விடிகாலையில் கனவொன்று கண்டாள்.

மரங்களுக்காக மனம் ஏன் இத்தனை ஏங்கிச் சாகிறது என்று அவள் தன்னையே கடிந்துகொண்டதுண்டு. எத்தனை பார்த்தும் சலிக்காத பச்சைகாற்றில் மென்னடனிக்கும் நளினம்வெள்ளிவெயிலில் பகட்டி அழைக்கும் சாகசம்மழைக்காலத்தில் இலைகளின் அதீத பச்சையைக் கடித்துச் சாப்பிட்டுவிடலாம் போலிருக்கும் அவளுக்கு.

நான்கு நாட்களுக்கு முன்னால் விருகம்பாக்கத்தில் ஒரு வீடு இருக்கிறதென்று பார்க்கப் போனார்கள். போகும் வழியில், முகப்பில் பெரிதாக பெயர் பொறிக்கப்பட்ட அந்த அபார்ட்மென்ட் தென்பட்டது. வாசலில்தான் அத்தனை மரங்கள்! ‘டு லெட்என்று எழுதப்பட்ட அட்டை மரமொன்றின் இடுப்பில் தொங்கியது.

கேட்டுப் பாக்கலாம்பா…”

இங்கெல்லாம் நமக்குக் கட்டுப்படியாகாது சுமதிஎன்றவன், ஏமாற்றம் கவியத் தாழ்ந்த அவளது கண்களில் சரிந்தான். ‘நாம வேலைக்குப் போயிடுறோம்அவதான நாள் முழுக்க வீட்ல இருக்கப்போறவஎன்ற நினைவு பிடரியில் உந்த அந்தக் கட்டிட வளவினுள் நுழைந்தான்.

வயதான காவலாளி தொப்பியைத் தலைமேல் அழுத்திக்கொண்டே எழுந்து வந்தார்.

இங்க வாடகைக்கு வீடு இருக்கா சார்?”

ஆமா இருக்கு. நீங்க நான் வெஜ் சாப்பிடுவீங்களா?”

ஆமாங்கஅப்பப்ப சாப்பிடுவோம். ரொம்பல்லாம் இல்லை

அப்ப கெடைக்காதுங்க.”

ஏன்?”

இங்க நூற்றிருபது வீடு இருக்கு. அதுல தொண்ணூறு பர்சன்டேஜ் பிராமின்ஸ். இந்த ஹவுஸ் ஓனர் பிராமின் கெடயாது. ஆனா பிராமின்ஸ் தவிர வேற யாருக்கும் வாடகைக்குக் குடுக்கக்கூடாதுன்னு இங்க இருக்கிறவங்க சொல்லியிருக்காங்க சார்அவர் என்ன பண்ணுவார் பாவம்
காவலாளி தொப்பியைக் கழற்றிக் கையில் எடுத்தபடி மீண்டும் அந்த நாற்காலியில் போய் அமர்ந்து அசிரத்தையாக வீதியை வெறிக்கவாரம்பித்தார்.

கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்…”கதிர் குறுகிப் போனவனாக உணர்ந்தபோதிலும் அருகில் போய்க் கேட்டான்.

எனக்கு நல்லாத் தெரியுங்க சார்இங்க நான் நாலு வருசமா வேலை பாக்குறேன். நீங்களாவது பரவால்லஎப்டியாச்சும் வீடு கிடைச்சுடும். இந்த சினிமால வேலை பாக்கிறவங்கசிலோன்காரங்கமுஸ்லிம் பாய்ங்க இவங்களுக்கெல்லாம் வீடு வாடகைக்கு எடுக்கப் படுற பாடு இருக்கே…”பழி தீர்ப்பதுபோலக் காய்ந்துகொண்டிருந்த வெயிலைப் பார்த்தபடி சொன்னார். காங்கை பறந்தது. பார்த்துக்கொண்டிருக்கையிலேயே சுமதியின் கற்பனையில் அந்தக் காவலாளி எப்போதாவது நடந்து திரியும் மரமாக மாறித் தெரிந்தார். ஒரே இடத்தில் இருந்துகொண்டேயிருப்பதைக் காட்டிலும் கொடுமை என்ன இருக்கிறது?

அசோக்நகரிலிருந்து சுமதியோடு பேசிய பெண்ணுக்கு சிநேகிக்கும் குரல். அந்தக் குரலுக்குரிய முகத்தை அதைப் பார்க்காமலே நேசிக்கமுடிந்தது. ‘தோநாம பல்லாங்குழி ஆடுனதை மறந்துட்டியா…?’என்று செல்ல அதட்டல் போடுகிற குரல்.

வீடு உங்களுக்குத்தானபுரோக்கர்ஸ் இல்லையே…?”

இல்லைங்க எங்களுக்குத்தான்.... ஒரு விசயம் கேக்கணும்

கேளுங்க…”

ஒங்க வீட்ல நான் வெஜ் சமைக்கலாம் இல்லையா?”

யெஸ்தாராளமாமேல ரெண்டு வீடு. கீழ ரெண்டு வீடு. கீழ் வீட்ல ஒண்ணுதான் காலியா இருக்கு

எதிர் போர்ஷன்ல யார் இருக்காங்க?”சுமதி தயங்கியபடி கேட்டாள்.

அவங்க பிராமின்ஸ்தான். ஆனா நீங்க ஒங்க வீட்ல என்ன சமையல் பண்ணாலும் அவங்க கண்டுக்கமாட்டாங்க. ரொம்ப நல்ல டைப்

கதிரிடம் சொன்னபோது ஒருநொடிகூடத் தாமதிக்காமல் வேண்டாமென்றான்.

அவங்களுக்குப் பிடிக்காத வாடையை அவங்க சகிச்சுக்கிட்டிருக்கணும். நமக்கும் சமையல் பண்ணும்போதெல்லாம் உறுத்தலா இருக்கும். அது சரியா வராது..”

அத்தனை அலைச்சலுக்குப் பிறகு இந்த வீடு கிடைக்கவிருப்பதில் இருவருக்கும் மகிழ்ச்சியே. வீதி நெடுகிலும் மஞ்சள் பூக்களை உதிர்த்தபடி மரங்கள் நின்றன. இரவு எட்டு மணிக்குப் பிறகு அந்தத் தெருவில் கதிரோடும் குழந்தைகளோடும் நடந்துபோவது மனதின் திரையில் அடிக்கடி தோன்றி மறைந்துகொண்டிருந்தது.

மணி இரண்டைத் தாண்டிவிட்டிருந்தது. வெயிலை ஊடுருவி வீதியைப் பார்த்துச் சலித்திருந்தன கண்கள். கதிரின் முகத்தில் ஆரம்பத்தில் இருந்த ஆவலின் ஒளி மங்கியிருந்தது. சுமதிக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. பேசாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஊருக்குப் போய்விடலாமா என்றிருந்தது. ஊரில் வயல் இருக்கிறது. சோற்றுக்குப் பஞ்சமில்லை. பிள்ளைகளின் படிப்பு

ஒரு அடர்சாம்பல் நிறக் கார் அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தது. காவலாளி எழுந்திருந்துசல்யூட்வைத்தான். காரிலிருந்து இறங்கியவர் வெயில் கண்ணாடியைக் கழற்றிவிட்டு இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார். உயரமும் அகலமுமான மனிதர். முகத்தில் பணத்தின் செழுமை தெரிந்தது. இவர்கள் அருகில் போனதும் கதிரின் பெயரை விளித்துக் கைகுலுக்கினார்.

முதலாம் தேதி வீடு ரெடியாகிடும்ஒய்ட் வாஷ் பண்ணிக் குடுத்துடுறேன்என்றார்.

ரொம்ப அலைஞ்சுட்டோம் சார்…”என்றான் கதிர் பொதுவாக. குரலில் அத்தனை களைப்பு!

இந்த ஏரியால வீடு கிடைக்கிறது கொஞ்சம் சிரமந்தான். எனக்கும் குடும்பமா நல்ல ஆட்களாக் கிடைக்கணுமேன்னுதான் இத்தனை நாளா வந்தவங்களை எல்லாம் வேணாம்னு சொல்லிட்டிருந்தேன். நான் புரோக்கர்ஸ்ட்ட ஒரேயொரு கண்டிசன் போட்டிருந்தேன்.”

என்ன சார் அது?”

பாய்ங்களுக்கு அதாங்க முஸ்லிம்களுக்கு வீடு காட்டக்கூடாதுன்னு சொல்லியிருந்தேன்.”

கதிரின் முகம் சுருங்கியது. அவனது உணர்ச்சியற்ற கண்ணாடிக் கண்கள் அவரை ஒருகணம் வெறித்துப் பார்த்தன. சுமதி அவனிடம் ஏதோ சொல்ல விரும்பினாள். அலைந்த அலைச்சல்களெல்லாம் நினைவில் வந்தன. அதற்குள் கதிரிடமிருந்து அந்த வார்த்தைகள் புறப்பட்டு வந்து விழுந்துவிட்டன.

உங்க வீடு வேண்டாங்க

அவர் ஒன்றும் புரியாமல் திகைத்துப்போனவராக ஒருணம் நின்றார். மறுகணம் ஏதோ சொல்ல வாயெடுத்தார். திகைப்பிலிருந்து கோபத்திற்கு மாறிக்கொண்டிருந்தது முகம். அவரைத் தாண்டிக்கொண்டு கதிர் வெளியே வந்தான். அவனது கைகள் சுமதியின் கைகளை இறுகப்பற்றின. ஏதோ பிரளயத்திலிருந்து தப்பித்து ஓடுபவனைப்போல பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகவேகமாகப் போனான்.

மதியவேளையாதலால் இருக்கைகள் காலியாக இருந்தன. ஏறியமர்ந்துகொண்டபோது உடலும் மனமும் பிடித்துலுப்பினாற்போலிருந்தன. உலகம் சட்டெனக் குறுகிச் சிறுத்துவிட்டதுபோலவும் அதில் எல்லோரும் பூச்சிகளாக மாறி ஊர்ந்து திரிவதுபோலவும் கதிர் உணர்ந்தான்.

நான் பஸ்லயே வேலைக்குப் போய்ட்டு வந்துடனேன்மாஎனக்கொண்ணும் சிரமமில்லைஎல்லாம் பழக்கந்தான…”

அவள் அவனது விரல்களைப் பிடித்து தனது மெலிந்த கைகளுக்குள் வைத்து அழுத்திக்கொண்டாள். வேப்பமிலைகள் இழைந்து அழைக்கும் பால்கனியைப் பிரியவேண்டியதில்லை என்ற நினைப்பொன்றே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அயர்ச்சியோடு கதிரின் தோளில் சாய்ந்து கண்ணயரவாரம்பித்தவளின் கனவில் அடித்துப் பொழியத்தொடங்கியது மழை.


-யாவும் கற்பனையல்ல.

நன்றி: ஆனந்த விகடன்