Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

8.28.2010

ஒரு பயணம் ஒரு புத்தகம்




அன்புள்ள மாதங்கி,

கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனால் மட்டுமென்றில்லை; ஏன் என்பதைக் கடைசியில் சொல்கிறேன். எதிரில் இருக்கும் ஆளோடு கதைப்பதைக் காட்டிலும் கடிதத்தில் நெருக்கமாக உரையாட முடிகிறது. ஆனால், இப்போதெல்லாம் கைப்பட யார்தான் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்? கணினியில் தட்டச்சி அனுப்புவதை மின்னஞ்சல் என்று அழகாகச் சொல்லிக்கொண்டாலும் இயந்திரவரிகள் என்பதே அதற்குப் பொருந்தும். ஒரு எழுத்து எழுதுவதாயிருந்தாலும் சுழியும் வளைவும் விசிறியும் நினைத்துத் தவிர்த்துவிடுகிறேன்.

எந்த வடிவத்தில் எழுத நினைத்தாலும், அதற்குள் இழந்த நிலம் எங்ஙனமோ புகுந்துவிடுகிறது. கண்ணீரும் இரத்தமும் சொரியவாரம்பித்துவிடுகிறது. அலைவுறும் சனங்களின் முகங்கள் எழுத்தாக உருத்திரளத் தொடங்குகின்றன. ‘விடுதலைஎன்ற சொல் தண்ணீரில் எழுத்தாகிவிட்டது. இழிவுசெய்யப்பட்டதன் கழிவிரக்கம் எழுதித் தீராதது. எல்லோரையும் சாகக்கொடுத்துவிட்டு தொலைவில் மூசிச் சுழன்றெரியும் தீயின் பெருநாக்கைப் பார்த்தபடி மயான மண்டபத்தில் அமர்ந்திருப்பதான மனோநிலை என்றும் இப்போதிருப்பதைச் சொல்லலாம்.

எல்லாம் ஓய்ந்துபோனதாக உணர்கிற இந்த இருண்ட காலத்தில் இதே தொனியில் தொடர்ந்து எழுதும் எழுத்தில் சலிப்பின் நிழல் படர்வதை அவதானிக்க முடிகிறது. ‘ஒப்புக்கு மாரடிக்கிறகுற்றவுணர்வும் நாளாக நாளாக மிகுந்துவருகிறது. மேலும், ஈழச்சிக்கலில் கையாலாகாமல் எழுதிக் கிழித்ததைத் தவிர என்ன கண்டோம்; ‘புலிவால்என்று பெயர்பெற்றதன்றி. புலி அழிக்கப்பட்டதெனில், வால் மட்டும் காற்றில் தனியாக இழைந்துகொண்டிருக்கலாகுமோ?

அபூர்வமாக எப்போதாவதுதான் மனம் பூக்கிறது. அண்மையில் பூத்தது இரயில் பயணத்தின்போது. (இரயிலுக்கு புகையிரதம் ஈடாகாது இல்லையா?) முதல்நாளிரவு பெய்த மழையில் பச்சையொளி விசிறி அசைந்துகொண்டிருந்த வயல்வெளிகளையும் மழை மிஞ்சிய பெருமரங்களையும் மேகங்கள் ஒய்யாரமாகத் துஞ்சிக் கிடந்த மலைகளையும் கண்பருகி கண்சொருகும் பயணம் வாய்த்தது. தனதழகை உணராத குழந்தைபோல இயற்கை செழித்துக் கிடந்தது. அதன்முன் மனிதர் ஒன்றுமேயில்லை என்று தோன்றியது. அப்படியொரு பச்சை. அப்படியொரு சோபிதம். அப்படியொரு ஒயில். அப்படியொரு வாளிப்பு. புகாருள் வரைந்து வைத்திருந்தாற்போலிருந்த புகையிரத நிலையங்களில் மழை பொறுக்கிக்கொண்டிருந்த புறாக்களைப் பார்த்தபோது அனாரின் கவிதையொன்று நினைவுக்கு வந்தது. தண்டவாள இரும்பில் தங்கத்துளியாகத் தொங்கிக்கொண்டிருந்தது மீத மழை. மழை கழுவிவிட்டிருந்த கருநீள வீதியில் அத்தனை அதிகாலையில் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தவன், இரயிலின் கண்ணாடிச் சட்டகத்துள் கச்சிதமான சித்திரமாக அடங்கினான். இந்த பத்தியில் மட்டும் இதுவரையில் ஐந்து இடங்களில்மழைதூறியிருக்கிறது. எல்லோருக்கும் மழையைப் பிடிக்கிறது. ஆனால், சில மனிதர்களைப்போல தனக்கு எந்த ஊரைப் பிடிக்கிறதோ அங்குதான் மழையின் கால்களும் சென்று இறங்குகின்றன போலும். ‘வடக்கில் வசந்தம்கொஞ்சம் மாற்றுக் குறைந்தாற்போலவே இருக்கிறது. சிங்களவர்கள் அதிகமும் வாழும் தென்பகுதி ஆறுகளின் கருணையால் அப்படிப் பொலிகிறது.

நினைத்ததற்கும் எழுதுவதற்கும் இடையிலிருக்கும் கடக்கமுடியாத இடைவெளியைப் போலவே வாசிக்க நினைத்ததற்கும் வாசித்ததற்கும் இடையில்கூட இடைவெளி அதிகந்தான். ‘வண்ணதாசன் கடிதங்கள்உம், ‘கிருஷ்ணன் வைத்த வீடும் உள்ளடங்கலாக இம்முறை அறுபத்தொரு புத்தகங்களை எடுத்துவந்திருந்தேன். ஒவ்வொரு பயணத்தையும் ஒவ்வொரு புத்தகங்களுடனேயே நினைத்துப் பார்க்க முடிகிறது. புத்தகவாசனை இல்லாத பயணங்கள் நினைவில் நிற்பதுமில்லை. மேற்கண்ட இரயில் பயணத்தை என்றைக்கும் ஞாபகத்தில் இருத்தியதுவண்ணதாசன் கடிதங்கள்’. வண்ணதாசன்(கல்யாண்ஜி), நண்பர்களுக்கு (33 பேருக்கு) எழுதிய கடிதங்களின் தொகுப்பே அந்நூல். நாட்குறிப்புகளுக்கும் கடிதங்களுக்கும் எப்போதுமே தனித்த வசீகரம் உண்டு. அவை அந்தக் குறிப்பிட்ட மனிதரின் வாழ்வு வரைந்த சித்திரங்கள் என்பதை நீயறிவாய். ‘வண்ணதாசன் கடிதங்கள்இல் ஒரு மெல்லிய மனதின் நுண்ணிய உணர்வுகளைப் படிக்க முடிந்தது. தாமரபரணியின் ஈரம் ஒவ்வொரு சொல்லிலும் ஊறியிருந்தது. எழுத்துக்கும் எழுதுபவருக்கும் இடையிலான ஊடாட்டங்கள், மங்கலம், மரணம், இலக்கியக் கூட்டங்கள், யார் யாருக்கு சிநேகிதம் இன்னபிறமுன்சுவட்டுக் குறிப்புகளை இவ்வாறான எழுத்துக்கள் வழியாகவே அறிந்துகொள்ள முடிகிறது. மதுவும் இலக்கியமும்பெருக்கெடுக்கும்விடுதியறை இரவுகள் நம்மைப் போன்ற பெண்களுக்கு விலக்கப்பட்ட கனிகள். ஆகையினால், பழங்கதையெல்லாம் புத்தகங்களைப் படித்தே அறியவேண்டியதாயிருக்கிறது.

மாதங்கி, ஆன்மாவின் கூப்பிடலுக்கும் அடையாள விழைதலுக்கும் இடையில் நடக்கும் இழுபறியில் முறுகித் திரிபிரிந்துகொண்டிருக்கும் மனதுக்கு அந்த எழுத்து எவ்வளவு இதந்தந்ததென்கிறாய்! வாசிக்கத் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் நமது மனோநிலைக்கியைபுற நம்மை வந்தடையும் உடனிகழ்வு உனக்கு என்றேனும் நேர்ந்ததுண்டா?

குறுங்குழுவாதத்திற்கு இலக்கிய உலகமும் விதிவிலக்கன்று. அதன் எழுதா விதிகள் புதிதாக எழுத வருபவர்களைத் திகைப்பூட்டுகின்றன. ‘நான் நினைத்தால் உன்னைத் தூக்கி நிறுத்தமுடியும்என்று மார்தட்டுகிறவர்களுக்கும்நினைத்தால் என்னால்
உன்னைச் சாய்த்துவிட முடியும்என்று கண்ணுக்குள் சுட்டுவிரல் நீட்டி ஆட்டுபவர்களுக்கும் குறைச்சலில்லை. நதி என்று கால்கழுவ கழிவு காலில் தட்டுப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. யாரையும் சாராதிருந்து எழுதுவதனால் உண்டாகும் தனிமைக்கு நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ளவில்லையானால், பிறகென்னதேக்கந்தான்! இந்நிலையில், வண்ணதாசனின் கடிதங்களில் வாசிக்க நேர்ந்த வரிகள் ஆறுதலளிப்பனவாக அமைந்திருந்தன. வல்லிக்கண்ணனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

மலைச்சுனை போலவும் வனச் சிற்றோடை போலவும் எங்கோ, யாருக்காகவோ என்ற நிச்சிந்தையில் அழுக்கற்றுக் காலம் கழிந்துவிடுமாகில் எனக்கும்கூட அது உவப்பானதுதான்

ரவி சுப்பிரமணியனுக்கு எழுதிய கடிதத்திலும் அத்தொனியே.

இந்த மழைக்கால இருட்டில் இந்தப் படிக்கட்டுகள் போல வாழ்வும், இந்த மண் விளக்குகள் போல நானும் இருந்துவிடலாம். யாராவது ஏற்றுவார்கள். யாருக்காவது வெளிச்சம் தெரியும்.

பிறகொரு கடிதத்தில் ரவிக்கு இப்படி எழுதியிருக்கிறார்.

மேடையில் உன்னதக் கலைஞர்கள் இசைத்துக்கொண்டு இருக்கையில், நான்ஆம்ப்ளிபயர்மேற்பார்க்கிற இரண்டு சிறுவர்களில் ஒருவனாக இருந்துவிடச் சம்மதம். மினுமினுக்கிற நட்சத்திரங்களின் கீற்று முனைகள் அழகுதான். நான் எருக்கலஞ்செடியோரம் வீசப்பட்டிருக்கிற பிளிஸ்டர் தகடாக, மாத்திரைக் காகிதமாகக் கிடந்தால் போதும்.”

என்னளவில் இது போதும்என எத்தனை பேரால் இருந்துவிட முடிகிறது? ஓட்டப்பந்தயத்தில் உன்னதங்கள் பின்தங்கிவிடக்கூடும். ஆயின், அது பின்னடைவா எனில் இல்லைத்தானே? பேய்க்கூச்சல்களைச் சிம்பொனியென்று கொண்டாடும் பொய்மையுலகத்திலிருந்து நாம் விலகியிருப்பதொன்றே உய்வதற்கு ஒரே வழி என்று நான் நினைத்துக்கொண்டேன்.

வர வர அரசியல்வாதிகள் பரவாயில்லை என்று தோன்றவாரம்பித்துவிட்டது.

என் ஒரே ஆறுதல், உண்மையும் பாசாங்கு அற்றதும் ஆன என் முகமும் என் வரிகளும் அங்கீகரிக்கப்படுவதுதான். இதே முகத்துடனும் இதே வரியுடனும்தான் எங்கும் இருக்கிறேன்.”

எனக்கு சொல்லத் தெரியவில்லை மாதங்கி. தரவரிசைகள், பட்டியல்கள் ஆக்கம் சார்ந்து இல்லாமல் ஆட்கள் சார்ந்ததாக வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில், வண்ணதாசனின் மேற்கண்ட வரிகளை நான் கடன்வாங்கிக்கொள்ளலாமென்றிருக்கிறேன்.

நிறைய வாசிக்கவும் நிறைவாய் எழுதவும் எப்போதும்போல ஆசை. நம்மால் விசிறியடிக்கப்படும் ஒரு குவளைத் தண்ணீரில் மூழ்கிப்போவோம் என்பதறியாமல் சின்னஞ்சிறிய தேங்காய்த் துண்டைப் பெரும்பிரயத்தனத்தோடு தூக்கிப் போய்க்கொண்டிருக்கும் எறும்புகளைப் போலத்தானே நாமும்? எங்கே எப்போது இந்த இருப்பும் சிதறும் என்பதறியா அநித்திய வாழ்வு. எனது சிக்கல்கள் தீரும் நாள் தொடுவானம் போல தள்ளித் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. அதேசமயம், ‘துயரமே எழுத்தின் ஊற்றுக்கண்என்று யாரோ(தாஸ்தயேவ்ஸ்கி?) சொன்ன நினைவும் வருகிறது.

எப்படி இருக்கிறாய் மாதங்கி?’ என்று உன்னிடம் சம்பிரதாயத்திற்குக் கேட்டு வைக்கிறேன். மாதாமாதம் அம்ருதா பத்திக்காக நினைவுறுத்தும் தளவாய் சுந்தரத்திடம்இனி கடிதமே எழுதித் தருகிறேன்என்று சொல்லிவிடட்டுமா? கட்டுரை வடிவம் திடீரென்று பிடிக்காமற் போய்விட்டதற்கு கூடுதல் காரணம் என்னவென்கிறாய்…‘வண்ணதாசன் கடிதங்கள்வாசித்த பாதிப்பன்றி வேறென்ன?


பிரியங்களுடன்
தமிழ்நதி

நன்றி: அம்ருதா

அன்பு நண்பர்களுக்கு,

நீண்ட இடைவெளியின் பின் இணையத்திற்குத் திரும்பியிருக்கிறேன். இனித் தொடர்ந்து எழுதவேண்டுமென்று நினைத்திருக்கிறேன். நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன:)

12.10.2009

தாய்நாட்டிலிருந்து தப்பிவருவது…


இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்களின் புகைப்படங்களை (சஞ்சிகையொன்றில் கட்டுரை எழுதுவதற்கென சேமிக்கப்பட்டது) முதல் வேலையாக மடிக்கணினியிலிருந்து அழித்தேன். தலை சிதைந்து, கழுத்தின் கீழான உடற்கூழ் மட்டும் எஞ்சிய குழந்தையின் புகைப்படத்தையும், சிதறுண்ட மேலும் பல உடல்களையும் அழித்தேன். சில நிமிடங்கள் தயங்கியபிறகு, குறிப்புப் புத்தகத்தைப் பயணப் பெட்டியிலிருந்து எடுத்து வெளியில் வைத்தேன். மொஹம்மூத் தார்வீஷ், அஸ்வகோஸ், சேரன் முதலானோரின் கவிதைத் தொகுப்புகளை எடுத்துச் செல்வதும் உகந்ததாகத் தோன்றவில்லை. கசப்போடு அவற்றைத் தூக்கிப் போட்டேன். மேற்குறித்த வேலைகளின் பின், இலங்கைக்குப் பயணப்பட ஓரளவு தகுதியுள்ளவளாக என்னை ஆக்கிக்கொண்டுவிட்டதாக உணர்ந்தேன். இலங்கை அரசினால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஊடக சுதந்திரத்தில் அவ்வளவு நம்பிக்கை!

விமானம் தரையிறங்கிக்கொண்டிருந்தபோது, என்றுமில்லாத பயமும் துயரமும் மனதைத் தின்னத்தொடங்கின. மூண்டெரியும் தீயிலிருந்து இலட்சக்கணக்கான குரல்கள் வெடித்துக் கிளம்பி வானத்தை நோக்கிப் பிரலாபிப்பதான கால மயக்கம் சூழ்ந்தது. ‘எங்களது… எங்களதும்…’என்ற உரிமை தளர்ந்து, இராணுவ ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் அந்நிய நாடொன்றினுள் பிரவேசிப்பதான கலக்கத்தோடு உள்நுழைந்தேன். விடுதலைப் புலிகள் அகற்றப்பட்ட (பேரினவாதத்தின் வார்த்தைகளின்படி) நிலத்தில் பிரவேசிக்கிறோம் என்பதானது, நிராதரவான தனிமையை மனதளவில் தோற்றுவித்திருந்தது. அகதி முகாம்களுள் அடைபட்டிருக்கும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களது- பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் காணக்கிடைத்த- புகைப்படங்கள் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன. முள்வேலிக்கு அப்பால், துயரம்-ஏக்கம்-கோபம்-பயத்தில் இறுகிய விழிகளுடன் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள், இழப்புகளில் தரித்துவிட்டாற்போன்ற விழிகளுடன் முதியவர்கள் அக்கணத்தில் நினைவில் மின்னி மறைந்தார்கள். விமான நிலையத்தினுள் அடையாள அட்டைகளுடனும், சந்தேகக் கண்களுடனும் தங்களை இனங்காட்டிக்கொள்ளாமலே - இனங்காட்டிக் கொடுக்க அலைந்த சிலரைக் காணமுடிந்தது.

ஜேர்மனியில் எங்களோடு விமானமேறிய சுற்றுலாப் பயணிகளில் அநேகரை குடிவரவு-குடியகல்வு வரிசையில் காணவில்லை. இலங்கையின் ‘மயான அமைதி’யை அவர்கள் நம்பத் தயாராகவில்லை. இலங்கை விமான நிலையம் இடைமாறு தளமாக இயங்குவதைக் காணமுடிந்தது.

‘பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த’ மகோன்னதர்-மகாவீரர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ‘சல்யூட்’அடிக்கும் பென்னாம்பெரிய ‘கட்-அவுட்’கள் எங்களை வரவேற்க, நகரை நோக்கி விரைந்தோம். இராணுவப் படை-புடை சூழ அவர் பெருமிதம் வழிய நின்றிருந்தார். கோத்தபாய, பசில் சகோதரர்களும் அழிவில் பங்கெடுத்த மகிழ்வில் பேருருக்களாக நின்றிருந்தனர். சென்ற வழிகளில் எங்களை ‘புலிகளல்லாத தமிழர்’என்று, கடவுச்சீட்டைக் காட்டி நிரூபிக்க வேண்டியிருந்தது. நான் என்ன வேலை செய்கிறேன் என்பதில், எனது கணவர் எங்கிருக்கிறார் என்பதில், நான் எங்கே தங்கப் போகிறேன் என்பதில், எனக்கு எத்தனை குழந்தைகள் என்பதில் இராணுவத்தினர் அக்கறையோடிருந்தார்கள். “சிங்களம் தெரியுமா?”என்ற கேள்விக்கு, “தெரியும்” பதில் அவர்களுக்கு மிகத் திருப்திகரமாக இருந்திருக்கக்கூடும். “தெரியாது”என்ற பதிலை உள்ளடங்கிய மகிழ்ச்சியோடு சொன்னேன். ஆங்கிலம், அவர்களை அறியாமையின் பின்வாங்கலுள் தள்ளுவதை உணரமுடிந்தது. பிரயோகிக்கக்கூடாத இடத்தில் மந்திரத்தைப் பிரயோகித்து மாண்டவர்களைப்போல, கணப் பெருமைக்காகப் ‘படம் காட்டும்’ கடவுச்சீட்டுக்களே மரணத்திற்கான அழைப்பிதழாகவும் ஆகிவிடுவதுமுண்டு என்பதனால், எல்லா இடங்களிலும் கடவுச்சீட்டைப் பிரயோகிக்கவில்லை. இலங்கைக்குப் போகும்போது பழைய, ஓரம் நைந்துபோன தேசிய அடையாள அட்டைகளைத் தேடி எடுத்துவைத்துக்கொள்வது மிக நன்று। கொழும்பு போன்ற இடங்களில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகள் அவர்களது கண்களில் கொஞ்சூண்டு போலி மரியாதையைக் கொணர, ‘ஒழி’என்ற பாவனையோடு அனுப்பிவைக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகள் வைத்திருந்தோரே கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அசாத்திய சாத்தியங்கள் இலங்கையில் மிகச்சாதாரணம்.

கொழும்பு மாநகரத்தில், பெரும்பாலான தமிழர்கள் வாழும் பகுதியான வெள்ளவத்தையில் துப்பாக்கி ஏந்திய பொலிசார் எந்நேரமும் காவலுக்கு இருக்கிறார்கள். எப்போதாவது இராணுவத்தினரையும் காணமுடிகிறது. அவர்களது கரும்பச்சை நிறச் சீருடையை, ஆட்கொல்லித் துப்பாக்கியை, கனத்த காலணிகளை, தொப்பிகளுக்கு அடியில் அச்சுறுத்தும் கண்களைக் கடந்து செல்கையில் ஒரு இருட்டுப் பந்து வயிற்றுக்குள் உருள்வதை உணரமுடிகிறது. அது காரணமற்ற அச்சம் போல மேலுக்குத் தோன்றினாலும், வன்னியின் குரூர நிகழ்வுகளுக்குப் பிறகு அதை காரணத்தோடு கூடிய அச்சமாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. வீதியில் செல்வோரைத் தடுத்து நிறுத்தி நெற்றிப்பொட்டை அன்றேல் இதயத்தைச் சிதறடிக்கக்கூடிய சர்வவல்லமை பொருந்திய எமதூதர்களாகவே அவர்கள் தோற்றமளித்தார்கள். அந்நிலத்தில் கொல்வதற்கான-கொன்றதற்கான காரணங்கள் வேண்டியிருக்கவில்லை. சிறு சலனத்திற்கும் விழித்துக்கொள்ளக்கூடிய மரணம், துப்பாக்கிகளின் நிழலில் அங்கே தூங்கிக்கொண்டிருக்கிறது.

இராணுவத்தினரைத் தவிர்த்து சாதாரண சிங்கள சனங்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த நெகிழ்ச்சியை எப்படி விளக்குவதெனத் தெரியவில்லை. பல நாடுகளில் பல இனங்களுக்கிடையில் பல மொழி பேசும் மக்களுக்கிடையில் வாழ்ந்து நாடு திரும்புமொருவராலேயே அந்த உணர்வை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். நான் உண்மையில் அவர்களை எனது சகோதரர்களாகவே உணர்ந்தேன். அவர்களை நோக்கிப் புன்னகைக்கவும் உரையாடவும் விரும்பினேன். ‘எங்களுக்காக உங்கள் குரல்கள் ஏன் உயரவில்லை?’ என்ற கேள்வி உதடுகளில் துருத்திக்கொண்டிருந்தது. அதே சமயம், அவர்களின் கண்களில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்களாகத் தோன்றுகிறோமோ என்ற ஐயமும் மறுவளமாக எழவே செய்தது. ஒரு கவளம் சோற்றுக்குக் கையேந்தும் ஒரு இனமாக மாற்றப்பட்டுவிட்ட அவமானம் உள்ளுக்குள் சுட்டுக்கொண்டிருக்கவே இருக்கிறது.

கனடா, இலண்டன், இந்தியா இங்கெல்லாம் ஈழத்திலிருந்து பெயர்ந்து வந்த உறவுகள், நண்பர்கள் வாழ்ந்தாலும், அவர்களோடு பேசிப் பழகிக்கொண்டிருந்தாலும்- பிறந்த மண்ணின் வீதிகளில் நானறியாத எனது தேசத்து மக்கள் ஈழத் தமிழ் பேசிக் கடந்து செல்கையில் அதைக் கேட்கப் பேரானந்தமாக இருந்தது. சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் நெகிழ்வது எனக்கே பிறழ்நடத்தையாகத் தோன்றினும், அதிலிருந்து என்னை விலக்கிக்கொள்ள முடியவில்லை. இறுகினாற்போலும் துயருற்ற முகத்தோடு கடந்துசெல்வோருள் என்னென்ன கதைகள் புதைந்திருக்கக்கூடுமோ என அஞ்சினேன். அப்படிச் செல்லும் பெண்களின்-ஆண்களின் மகனோ மகளோ கணவனோ மனைவியோஅன்றேல் அனைவருமே போரில் இறந்திருக்கக்கூடுமென நானாகவே நினைத்துக்கொண்டேன்.

கொழும்பில் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடுகிறது। பெரும்பாலான கடைகள் எட்டு மணிக்கே அடைக்கப்பட்டுவிடுகின்றன. சில கடைகள் நிரந்தரமாகவே பூட்டப்பட்டு, நாட்டின் பொருளாதார நிலையைப் பறையறிவித்துக் கொண்டிருந்தன. இல்லாமற் போனவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் மீது அரசாங்கத்துக்கு இருக்கின்ற அச்சமோ அளவிடற்கரியது.

எங்கோ தொலைவிலிருந்தபடி அழைத்துக்கொண்டிருந்த வீட்டின் குரலை மறுபடி மறுபடி மறுதலிக்க வேண்டியவளானேன்.வன்னியிலிருந்து தப்பி- அதிசயமாக வதைமுகாமிலிருந்து மீண்ட உறவினர்கள் வீட்டுக்கு வந்து போவதும், வாழைகள் குலைதள்ளியதும், தென்னைகள் காய்த்துத் தொங்குவதும், மல்லிகை பூத்துச் சொரிவதும், பூனை மூன்றாம் தடவை கருவுற்றிருப்பதும் எல்லாம் எல்லாம் தொலைபேசி சொன்னது.

கொழும்பில் விசாரணைச் சாவடிகள் நெருங்கும்போதெல்லாம் அச்சம் எனக்கு முன்னால் போனது. ஒரு கவிதையில் எழுதியிருப்பதுபோல அவர்கள்முன் ‘கேவலமாக’ப் புன்னகைக்க வேண்டியிருந்தது. கொழும்பிலிருந்து சென்னை செல்வதற்கான விமானத்தில் ஏறுவதற்காக விமான நிலையத்திற்குச் சென்ற வழியெங்கும் ஆசுவாசமாக உணர்ந்தேன். விமான நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக அமைந்திருந்த விசாரணைச் சாவடியில் பயணப்பொதிகள் இறக்கப்பட்டு கிளறப்பட்டுவிடக்கூடாதே என்ற எனது பிரார்த்தனைக்கு, இல்லாத கடவுள் செவிமடுத்தார். பிறந்த நாட்டிலிருந்து ‘தப்பிச் செல்லும்’இழிவு, எங்கள் சகோதர்களாகிய சிங்களவர்களுக்கும் நேராதிருக்கட்டும்.
---
விசாரணைச் சாவடி

எப்போதும் நானெழுதும் கடல்போல
விரிந்த அதிகாரத்தின் பெயரால்
தெருவொன்றில் என்னை நிறுத்துகிறாய்
“உனது பெயர் என்ன…?”
எனது கடவுச்சீட்டு உனது கையிலிருக்கிறது
‘ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்’
நகுலனை நினைத்தபடி
உச்சரிக்கும் எனது பெயர்
யாருடையதோ போலிருக்கிறது

உன்னிடத்தில் துப்பாக்கி இருக்கிறது

“இங்கெதற்கு வந்தாய்?”
எனது பூர்வீகக் கிராமத்து வீட்டில்
பாக்கு மரங்கள் நிழல்விழுத்தி
குளிர்ச்சியுற்ற கிணறுளது
அதில் எனது பாட்டனின் காலடித் தடமுளதை
1914 எனும் ஆண்டுப் பதிவுளதை
பகிர்ந்துகொள்ள அஞ்சுகிறேன்

உன் சீருடை அச்சுறுத்துகிறது

கைவிரல் மடித்து எனது வயதெண்ணும்
உன்னைக் குறித்தெழும் வசவு
உதடுகளில் கத்தியெனத் துருத்துகிறது
நான் பணிவானவள்
நகங்களும் விழிகளும் பிடுங்கப்படுவதில்
எனக்கும் ஒப்புதலில்லை

“உனக்கு சிங்களம் தெரியுமா…?”‘
'சிங்களம் மட்டும்’தெரியாமற் போனதற்காக
வருத்தத்தில் தோய்த்தெடுத்த புன்னகையோடு
தாழும் தலையை இடம் வலதசைக்கிறேன்
மேலும் பெண்ணுக்குரிய நளினம் மிளிர
கேவலமாகப் புன்னகைக்கிறேன்
எனக்கு அவசரமாகப் போகவேண்டும்

நீ கேள்விகளாலானவன்
நான் இணக்கமான பதில்களாலானவள்
நன்றி சொல்லிப் பிரியும்போது
இருவருக்கும் மகிழ்ச்சியே!

ஈற்றில் எஞ்சியிருக்கின்றன
இறுகிவிட்ட சில வார்த்தைகள் என்னிடத்திலும்
வெடித்திருக்கக்கூடிய குண்டொன்று உன்னிடத்திலும்.

-தமிழ்நதி
நன்றி: அம்ருதா


8.09.2009

இந்த நாள் இப்படிக் கழிந்தது


அவிழ்க்க முடியாத புதிர்களுள் முக்கியமானது மனித மனம். இந்தப் புதிர்த்தன்மையில் சினிமாப் பாடல்களில் வருவதுபோல ஆண் மனம், பெண் மனம் என்ற பேதங்கள் குறைவு. பைத்தியம் என எம்மால் கோடு பிரித்து ஒதுக்கப்படுபவர்களுக்கும் நமக்கும் இடையில் பெரிதாக வித்தியாசங்கள் இல்லை. காற்றில் ஆடும் மெல்லிய இழையினையொத்தது பைத்தியத்திற்கும் தெளிவுக்குமான இடைவெளி.

தொலைந்த ஒரு பொருளைத் தேடிக்கொண்டிருக்கும்போதே அது கிடைத்துவிடக்கூடாது என்று பிரார்த்திக்கும் ஒரு சிறிய பகுதி இயங்குவதை நான் அவதானித்திருக்கிறேன். வேண்டுமென்றே தடயங்களை விட்டுச்செல்லும் குற்றவாளிகளைப் பற்றி வாசித்திருக்கிறேன். மிக மிகப் பிடித்தமான ஒருவரைச் சந்திப்பதற்கு முன்னைய கணத்தில் அவரை நிராகரித்துச் சலிக்கும் மனதையும் உணரமுடிந்திருக்கிறது. அடைந்தே தீர்வதென்ற வெறி கையகப்படும் தருணத்தில் கண்ணெதிரில் கரைந்து ஒழுகுவதை நாம் யாவருமே கவனித்திருப்போம். நுட்பமான இழைகளாலான மனதில் உள்ளார்ந்து இயங்கும் வேட்கைகளில் ஒன்றாக தொலைந்துபோவதன்பாற்பட்ட ஈர்ப்பைச் சொல்லலாம்.

படிக்கும்போது கணக்குப் பாடத்தில் பல புதிர்களை நாம் விடுவித்திருப்போம். அதன் சூத்திரம் எளிதாகப் பிடிபடும்போது ஏற்படும் தெளிவினைக்காட்டிலும், தவறிழைத்துக் கணக்குக் காட்டினில் வழிதொலைத்துக் கண்டுபிடிக்கும்போது ஏற்படும் தெளிவும் நிறைவும் மிகப்பெரிது. மேல்வகுப்புகளில் கணக்கியல் படித்தவர்களுக்கு இந்த உற்சாகப்புள்ளி புரியும். இருபக்கமும் சமனான தொகையை வந்தடையும்போது உற்சாகக்கூச்சலொன்று உள்ளுக்குள் கேட்கும்.

வாழ்க்கைக்கும் வழிகளுக்கும் மேற்சொன்ன ‘தவறின் வழி கற்றல்’பொருந்தும். தொலைந்து போவது குறித்து பாஸ்கர் சக்தி எழுதிய கட்டுரை ஒன்றை நேற்று முன்தினம் வாசிக்க நேர்ந்தது. நேற்று அடிக்கடி தொலைந்துகொண்டிருந்தபோது எனக்கு அந்தக் கட்டுரையின் ஞாபகம் வந்தது. சுமார் ஒன்பதாண்டுகளின் முன் சுற்றிய அதே இலண்டன் நகரம்தான். அதே நிலக்கீழ், மேல் புகையிரதப் பாதைகள்தாம். என்றாலும் எல்லாம் புதிதாகத் தெரிந்தன. ‘மாப்’வாங்கி வழிபார்க்காமல் சுற்றவேண்டுமென்ற பைத்தியக்காரத்தனம் இயங்கிய-இயக்கிய நாள் அது.

சரக் சரக்கென வந்து நிற்கும் புகையிரதங்களில் மாறி மாறி ஏறி (நிச்சயமாக அதற்கு இலகுவழி இருந்திருக்கும்) ‘வெஸ்ட் மினிஸ்டர் அபே’யை வந்தடைந்தேன். சுருக்கமாகச் சொன்னால் ‘இங்கிலாந்தை ஆண்ட அரசர்களின்-அரசிகளின்-பிரபுக்களின்-கவிஞர்களின் கவித்துவமான கல்லறை’என்று அதைச் சொல்லலாம். அவற்றிலொரு பணக்காரச் செருக்கும் படாடோபமும் இருந்ததாக உணர்ந்தேன். (அது நம் துன்பங்களுக்கு நதிமூலமாக இருந்தவர்கள் என்ற கசப்பினால் ஏற்பட்டதாக இருக்கலாம்) ஆனால், பழமைக்கேயுரிய- தொடவியலாத காலத்தை ஏதோவொரு வகையில் தொடும் பிரமிப்பு அந்த நினைவகத்தினுள் உலவிய எல்லோருடைய முகத்திலும் இருந்ததைப் படிக்கமுடிந்தது. நமக்கு எட்டாததை ஆராதிக்கும் ‘திவ்ய தரிசன’ பாவத்துடன் உலவிய பலரைப் பார்த்தேன். தரையில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை மிதிக்கும்போது நூற்றாண்டுகளையே மிதிப்பதுபோல கூசியது. நீளநீளமாகப் படுத்தவாக்கில் கிடந்த சிலை மன்னர்களைத் தொடும்போது அமானுஷ்யமான ஒரு அதிர்வும் பயமும் உடலில் பரவியது. ஒவ்வொருவர் கையிலும் இருந்த இயந்திர வழிகாட்டியின் குரல்விளக்கம் (வார்த்தைகளை முடிக்காமல் இடையில் விழுங்கும் பிரிட்டனின் ஆங்கிலத்தில் எனினும்) உபயோகமாக இருந்தது. ‘கவிஞர்களின் மூலை’என்ற பகுதியில் சேக்ஸ்பியர், ஷெல்லி, கீட்ஸ் போன்ற கவிஞர்கள் சிலையாக நின்றிருந்தார்கள். நாடக ஆசிரியர்களும் நாவலாசிரியர்களும்கூட ஞாபகம் கொள்ளப்பட்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் பாரதி, வள்ளலார் தவிர யாராவது கவிஞர்களுக்குச் சிலை இருக்கிறதா என்று நினைத்துப் பார்த்தேன். ஞாபகத்தில் வரவில்லை. திரும்பும் திசையெல்லாம் அரசியல்வாதிகளின் கூப்பிய கைகளும் ‘கட் அவுட்’களில் கனிந்த புன்னகையும் ‘குடும்பத் தலைவனே’,(யாருக்கு யார் குடும்பத்தலைவன்?) ‘குத்துவிளக்கே’,(அது சரி) ‘பிடல் காஸ்ட்ரோவே’(இந்தத் திருவாசகத்தை எழுதியவரைப் பாராட்டியே ஆகவேண்டும்) என்று நெகிழ்ந்து வழிந்த வாசகங்களும்தான் நினைவிலிருக்கின்றன.

கால்கள் களைப்பிலும் பசியிலும் கெஞ்சியபோதிலும், கழிந்த காலம் இழுத்துக்கொண்டேயிருந்தது. ஒருவழியாக அதன் குரலைப் புறக்கணித்து வெளியில் வரும்போது நின்று கவனித்தேன். வெளியேறும் வாயில் நோக்கி வந்துகொண்டிருந்த ஒருவர் முகத்திலும் சிரிப்பில்லை. ஏதோவொரு நினைவு… ஏதோவொரு ஆழம்… சின்னதாய் ஒரு துயரம் தெரிந்தது. வெஸ்ட் மினிஸ்டர் அபேயின் உயர்ந்தோங்கிய கூம்புக் கோபுரங்களும் விதானங்களில் விரிந்திருந்த ஓவியங்களும் வர்ணக் கண்ணாடிகளும் ‘பிரமாண்டம் பிரமாண்டம்’என்றன. சில இடங்களில் கல்லறைகள்கூட கவித்துவத்தோடிருக்கின்றன. சில இடங்களிலோவெனில் கவிதைச்சாலைகள்கூட கல்லறைகளின் சூனியத்தோடிருக்கின்றன.

‘மடாம் துஸாட்’எனப்படும் மெழுகுச் சிலைகளாலான அருங்காட்சியகத்தை பல ஆண்டுகளுக்கு முன்னமே பார்த்திருக்கிறேன். உயிருள்ள மற்றும் இறந்த பிரபலங்களை உயிரோட்டத்துடன் சிலையாகச் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதன்றி பெரிதாக அங்கொரு சிறப்புமில்லை. ஆனால், அந்தச் சிலைகள் சத்தியத்திலும் சத்தியமான உயிர்ப்போடு இருந்தன. கண்ணில் ஒளிரும் புன்னகையும், கைகளில் ஓடும் நரம்பும், கன்னங்களில் அசையும் பூனை மயிரும் என மெழுகின் வார்ப்புக் கலை அதியற்புதமாயிருந்தது. பலரை ‘சிலையா?’என்று நிமிர்ந்து பார்த்தால் கை அசைந்தது. ‘உயிருள்ளவரா?’என்று குழம்பிக் கூர்ந்தால் சிரிப்பு உறைந்திருந்தது. வழியில் நின்ற ஒருவரிடம் ‘எக்ஸ்கியூஸ் மீ’என்றேன். அவர் அசையவேயில்லை. சிலைதான். நல்லவேளை அந்தச் சந்தடியில் யாரும் கவனிக்கவில்லை. சந்திக்க முடியாத, பழகமுடியாத, தொட்டுக்கொள்ள முடியாதவர்களோடு நிறையப் பேர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். இளைஞர்களும் குழந்தைகளும் விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். இளம்பெண்களோவெனில் சினிமாக் கதாநாயகர்களோடு. அரசியல் தலைவர்களை அணைத்தபடி நின்றவர்கள் நடுவயதைக் கடந்தவர்களாக இருந்தார்கள். இந்திரா காந்தியும் மகாத்மா காந்தியும் பக்கத்தில் பக்கத்தில் நின்றிருந்தார்கள். நிறைய இந்தியர்கள் அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். என்னை ஈர்த்தவர் ஃபிடல் காஸ்ட்ரோதான்.

அதுவொரு கிழமை நாளாக இருந்தபோதிலும் கூட்டம் நெருக்கித்தள்ளியது. நிறைய வல்லெழுத்து கலந்து பேசிய கூட்டமொன்றின் பின்னால் நடக்கையில் காது கிழிந்தது. உண்மையில் நான் வெளியில் வந்து விழுந்துவிட விரும்பினேன். ஆனால், இடையில் பிய்த்துக்கொண்டு வெளிவரும் வழிதான் தெரியவில்லை. கூட்டம் என்னை இருண்ட பயங்கரமான பாதாள உலகத்திற்குள் இழுத்துக்கொண்டு இறங்கியது. இருளென்றால் இருள்… அப்படியொரு கட்டி இருள். பன்னிரண்டு வயதிற்குக் குறைந்த பிள்ளைகள், கர்ப்பிணிகள், இதயநோய்-இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதற்குள் செல்லவேண்டாம் என எதிர்ப்பட்ட அறிவிப்பில் கேட்கப்பட்டிருந்தது. இருளான பகுதிக்குள் மிக இருளான இடத்திலிருந்து கோரமான ஒரு உருவம் எங்கள் முன் பாய்ந்து கத்தியது. அதை எனக்கு முன்னால் சென்ற வல்லெழுத்து மொழிக்காரர்கள் பயத்தில் பன்மடங்காக்கி எதிரொலித்தார்கள். திடீரெனக் காலடியில் ஒரு சிதைந்த முகக்காரனோ காரியோ தவழ்ந்து வந்து பயமுறுத்தினார்கள். இவர்கள் அலறியடித்துக்கொண்டு அரண்டோடினார்கள். ஆடைகளில் இரத்தம் பூசிய இன்னொருவன் நடந்துகொண்டிருந்தவர்கள் மீது எங்கிருந்தோ வந்து உலாஞ்சிப் போனான். ‘ஹ_ய் ஹ_ய்’ என்று ஒரே பயஇரைச்சல். பி.டி.சாமி கதையை எல்லாம் விஞ்சக்கூடிய பயங்கரமாயிருந்தது. கொஞ்சம் உள்ளுக்குள் நடுக்கமாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். இருந்தபோதிலும், வெளியில் இதைவிட ஆனானப்பட்ட பேய்களை எல்லாம் பார்த்திருப்பதால் நான் பயந்துபோய்க் கத்தவில்லை. எங்கிருந்து எது வந்து மேலே விழுமோ என்ற பயத்தில் உறைந்தவாறு நடந்தோம். என்னென்ன விதங்களில் மனிதர்களைக் கொல்லலாம் என்பதைச் சிலைகளைக் கழுவிலேற்றியும், கத்தியால் தலைகளைத் துண்டாக்கியும் செய்முறையில் விளக்கியிருந்தார்கள். பிணக்குவியலினுள் யாரையோ தேடிக்கொண்டிருந்தாள் விளக்கேந்திய தாயொருத்தி. எல்லாவற்றையும் எதனோடோ பொருத்திப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தேன்.

வெளியேறும் வழியில் மெழுகு நாய் ஒன்று, வரும் ஒவ்வொருவரையும் வியந்து பார்த்து தன்பாட்டில் தலையாட்டிக்கொண்டிருந்தது. அறிவாளி ஒருவர் (கையில் எழுதுகோல் இருந்ததால் அப்படியொரு ஊகம். ஊகங்கள் பிழைக்கும் காலமிது) எழுதுவதும் பிறகு தலையாட்டிச் சிந்தனையைத் தொடர்வதுமாயிருந்தார். தொடராய் வந்துகொண்டிருந்த ‘டாக்ஸி’களில் ஏறி பிறகொரு புராதன அதிசய உலகினுள் பயணித்தோம். பிய்த்தோடும் வழியற்ற நானும் அதிலொன்றில் ஏறிக்கொண்டேன். பண்டைய அரசர்கள், பிரபுக்கள், மகாராணிகள், பிச்சைக்காரர்கள், சாரட் வண்டிகள், வாள்கள், செங்கோல்கள், கோமாளிகள், அறிஞர்கள், வித்தைகள் எல்லாம் மெழுகுச்சிலைக் காட்சிகளாய் விரிந்தன அந்தப் பயணத்தில். “பயணத்தின் முடிவிலுள்ள புகைப்படக் கருவிக்குச் சிரியுங்கள்” என்ற ஆரம்ப வாசகத்தை ஞாபகத்தில் வைத்து பலர் சிரித்தார்கள். ‘உங்கள் புகைப்பட இலக்கத்தைக் குறித்துக்கொள்ளுங்கள்’என்ற அறிவிப்பை எனது டாக்ஸி தாண்டும்போது கவனித்தேன். 58இல் தொடங்கிய புகைப்படத்தில் என்னைப் பார்த்தேன். அப்புறாணியாகத் தோன்றினேன். நாம்தான் புகைப்படங்களில் எவ்வளவு பாவமாக இருக்கிறோம்!

தோழியின் குழந்தைகளுக்காக ‘பூமராங்’ஒன்றை வாங்கிக்கொண்டு புகையிரத நிலையத்தை நோக்கி நடந்தேன். உடல் இற்றுவிழுமளவு களைத்திருந்தது. இம்முறை திரும்பிச் செல்லும் வழி மிக எளிதாக இருந்தது. எங்கேயும் தொலையவில்லை. நின்று நிதானித்து வரைபடங்களை உற்றுநோக்கிக்கொண்டிருக்கவில்லை. சென்றடையும் வழிகள்தான் சிரமம். பயணங்களில் மட்டுமென்றில்லை… காதலில், காமத்தில், நட்பில், எழுத்தில் எல்லாவற்றிலும் திரும்பும் வழிகள் மிக எளிதானவை.

8.04.2009

அந்தரத்தில் இருக்கிறது வீடு


‘எல்லாப் பாதைகளும் உன் வீட்டு வாசலில் கொண்டு சேர்க்கும்’என்ற வரிகளை அதில் தொனிக்கும் காதலுக்காக அன்றி வேறேதோ காரணத்திற்காகப் பிடிக்கும். பெரும்பாலும் வீடு பற்றிய கவிதைகள் ஈர்ப்பனவாக இருக்கின்றன. சுற்றியலைவதை வேண்டுமென்றே தேர்பவர்களுக்குள்ளும் வீடு உயிர்ப்போடு துடித்துக்கொண்டுதானிருக்கிறது. அதன் வழிகளில் மானசீகமாக நடந்து நடந்து வீடு நோக்கிப் போய்க்கொண்டுதானிருக்கிறோம் எல்லோரும். பிறகொருநாள் உண்மையாகவே போகும்போது ஒன்றும் புதிதாய் தோன்றாமலிருப்பதற்கு அந்த மானசீகத் திரும்புதல்கள்தான் காரணம்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வீடு என்பதன் பொருள் பல்பரிமாணமுடையது. புலம்பெயர்ந்த புகலிடங்களில் தங்களைச் சிக்கென்று பொருத்திக்கொண்டவர்களுக்கு அத்தகைய சிக்கல்கள் இல்லை. அத்தகையோர் இலகுவாக தத்தம் ‘வீடு’களுக்குத் திரும்பிவிடுகிறார்கள். ‘எனது வீடு எங்கோ தொலைவில் திரும்பவியலாத தேசத்தில் இருக்கிறது’என்ற அகதி அந்தரிப்பில் இருப்பவர்களின் வீடு தரையில் இல்லை. அது அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அது தரையிறங்கும் சாத்தியங்களும் அறுந்துபோய்விட்டன. ஈழத்திற்குள்ளேயே புலம்பெயர்க்கப்பட்டு அலைக்கழிபவர்களின், முகாம்களில் இருப்பவர்களின் வீடுகளோ கல்லறைகளாகவோ அன்றேல் இராணுவ முகாம்களாகவோ மாற்றப்பட்டுவிட்டன. கூரை, நாற்புறம் சுவர்கள், வாசல், முற்றத்து நிலவு, பூச்செடி, கிணறு, நாய்க்குட்டி இன்னபிற இனிக் கனவுகளில் வந்தால்தான் உண்டு.

வெளியூர்களுக்கு, வெளிநாடுகளுக்குப் புறப்படும்போது இருக்கும் குறுகுறுப்பு ஒரு வாரத்திலேயே தீர்ந்துபோய்விடுகிறது. வந்து சேர்ந்த இடம் சொர்க்கமாகவே இருந்தாலும், சொந்தங்கள் அன்பைச் சொட்டினாலும் தனக்குள் ஒடுங்க ஆரம்பித்துவிடுகிறது உள்ளம். பழகிய படுக்கை கூப்பிட ஆரம்பித்துவிடுகிறது. புத்தகங்கள் மாயக் கரங்களைக் காற்றில் அசைக்கின்றன. வேம்பின் பச்சையை உள்ளிழுத்தபடி பருகும் தேநீர் ஏடு படர்த்தி நமக்காகக் காத்திருப்பதுபோல தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. அதுவரை இரைச்சலிட்டுக் கொண்டிருந்த மனமும் உதடுகளும் மௌனத்தில் விழுந்துவிடுகின்றன.

மேலைத்தேயம் எத்தனை அழகோடிருக்கிறது! எவ்வளவு மரங்கள்! எத்தகைய நேர்த்தியான சாலைகள்! குறைசொல்லவியலாத போக்குவரத்து வசதிகள்! பிரமாண்டமான பேரங்காடிகள்! நடக்கத் தோதான பூங்காக்கள், இடிபடாத-இடிக்காத நாசூக்கான மனிதர்கள், சுத்தம் வாழும் இடங்கள் இவை. ஆனால், திப்புசுல்தானைப் போல எத்தனை தடவை படையெடுத்தாலும் வெளிநாடுகள் மனதில் விழுத்தும் அந்நியத்தன்மையை அகற்றமுடிவதில்லை. யாரும் யாரோடும் ஒட்டாததுபோன்ற விலகல். மேலும்,தாழ்வுணர்ச்சிக்குத் தள்ளும் மிகைமனிதர்கள் நடுவில் நம்மியல்போடு இருக்கமுடிவதில்லை.

யாரோவுடைய நிலத்தில் யாரோபோல இருப்பதில் என்ன இருக்கிறது?

உணர்ந்திருக்கிறீர்களா நீண்ட இன்மையின்பின் உங்கள் வீட்டுக்குத் திரும்பும் சாலை வளைவில் நெஞ்சுக்குள் நிறைந்து வழியும் உவகையை? ‘இல்லை’எனக் கருதிய எல்லாம் இருப்பதை? முகர்ந்ததுண்டா நீண்ட நாட்களுக்குப் பின் திரும்பும் உங்களை அணைத்துக்கொள்ளும் பிள்ளைகளின் மென்வாசனையை?
திரும்பவியலாத வீட்டைக் கொண்டவளை, அவள் வீடென வரித்துக்கொண்ட ஒன்று கூப்பிடுகிறது தன் ஈரக்கண்களால். தெருக்களெங்கும் நெருநெருக்கும் மனிதர்களை, தூசியை, ‘ங்கோத்தா’என்றாலும் இனிக்கும் மொழியை, பிள்ளைகளை, அரிய சில நண்பர்களை அவள் ‘மிஸ்’பண்ணுகிறாள். (மிஸ் பண்ணுவதை எந்தத் தமிழ்ச்சொல்லால் இட்டு நிரப்பலாம்?)
அந்தரத்தில் இருக்கிறது வீடு. அது தரையிறங்கும்வரை அந்தரத்தில் அலைகின்றன கால்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்று சொன்ன கணியன் பூங்குன்றா! நாடிழந்து அலையும் துயரின்முன் யாதோ ஊர்? எவரோ கேளிர்?

3.18.2009

பயணம்: அழைத்துக்கொண்டே இருக்கிறது வெளி

வீட்டிலிருக்கும்போது வெளியும், வெளியில் இருக்கும்போது வீடும் மாற்றி மாற்றி நமக்கு மட்டுமே கேட்கக்கூடிய அந்தரங்கமான குரலில் அழைத்துக்கொண்டே இருக்கின்றன. ‘நீண்ட நாட்களாக வெளியில் போகவில்லையே’என்ற நினைப்புத் தொட்ட கணத்திலிருந்து மளமளவென்று வளரத் தொடங்கியது பயணக் கிறுக்கு. அப்போது பார்த்து ‘மணல் வீடு’ சஞ்சிகையும் ‘களரி’தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறையும் இணைந்து சேலத்தில் நாட்டுப்புறக் கலைஞர்களைக் கௌரவிக்கும் ஒரு விழா நடத்துகிறோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார் ஹரிகிருஷ்ணன். முதலில் நாங்கள் ஐந்து பெண்கள் ஒன்றாகக் கிளம்புவதாக இருந்தது. மூவரை வீடு ‘பிடித்துக்கொண்டுவிட’ நாங்கள் இருவர் மட்டும் கிளம்பிப்போனோம்.

போகும் வழியெங்கும் பேச்சு…பேச்சுத்தான். இலக்கியம், அரசியல், மனித மனங்களின் அடியாழ இருட்டுக்கள், வெளிச்சங்கள்… ஏறத்தாழ எட்டு மணிநேரம் பயணக் களைப்பே தெரியவில்லை. நாங்கள் போனது ஜனவரி 23ஆம் திகதி. மலையும் குளிருமாய் அந்த இரவில் அழகாக இருந்தது சேலம் மாநகர். அன்றிரவும் அடுத்தநாள் பகலும் விடுதியில் ஓய்வு எடுத்துவிட்டு மாலையானதும் ஏர்வாடியை நோக்கிக் கிளம்பிப்போனோம். இந்தியா வந்ததற்கு நான் இறங்கிப் பார்க்கப்போகிற முதல் கிராமம் என்று அதைச் சொல்லலாம். போகிற போக்கில் பார்த்ததெல்லாம் சேர்த்தியில்லை அல்லவா? ஊருக்கு இறங்கும் வழியில் கோவணம் கட்டிய தாத்தா தோளில் மண்வெட்டியோடு வீதிக்கரையில் நிற்பதைப் பார்த்ததும் சொல்லத்தெரியாத ஒரு நெகிழ்வு பிறந்தது. ஒட்டாத நகரமனிதர்களிடமிருந்து கிடைத்த உவப்பற்ற அனுபவங்கள் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

நாங்கள் போகும்போது விழா களைகட்டி, கலைஞர் கௌரவிப்பு நடந்துகொண்டிருந்தது. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் ஆகியோர் அக்கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்கள். ஆங்காங்கே இலக்கியவாதிகள் நின்று இலக்கியமும் இன்னபிற அக்கப்போர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். எழுத்தாளர்கள் பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், ஆதவன் தீட்சண்யா, ச.தமிழ்ச்செல்வன், பொதியவெற்பன், குணசேகரன், அஜயன் பாலா, ‘அந்திமழை’ அப்துல் காதர், க.சீ.சிவகுமார், புதிய மாதவி, ஷாஜகான், கவிஞர்கள் குட்டி ரேவதி, ச.விஜயலட்சுமி, தேவேந்திர பூபதி, இசை, லஷ்மி சரவணகுமார், சேலம் சரவணகுமார்- ஸ்ரீதேவி, தமிழ்ச்செல்வன், சக்தி அருளானந்தம் ஆகியோர் வந்திருந்தார்கள்.
சற்றைக்கெல்லாம் ‘வாலி மோட்சம்’என்ற தோல் பொம்மலாட்டம் ஆரம்பமாகியது. கொஞ்ச நேரம் ஆட்டம் பார்ப்பதும் எழுந்திருந்து அப்பால் போய்ப் பேசுவதுமாகச் சுற்றிக்கொண்டிருந்தோம். ‘ஆட்டிவைப்பவர்’யாரெனப் பார்க்கும் ஆவலில் திரைக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்த மறைப்புக்குள் புகுந்து விடுப்புப் பார்த்தோம். ராமனையும் வாலியையும் சுக்கிரீவனையும் ஒருவர் வைத்து ஆட்டிப் ‘படைத்து’க்கொண்டிருந்தார். அவர் கையில் அவர்கள் சுழன்றதும் ‘தொம்…தொம்’எனச் சத்தமெழ மோதிக்கொண்டதும் பார்க்க பார்க்க உண்மையேபோல உருமாறத்தொடங்கியது. பக்கத்திலிருந்து சட்சட்டென்று பாத்திரங்களை எடுத்துக்கொடுத்ததுமல்லாமல் உணர்ச்சி மிகும் குரலில் பின்னணி பேசிக்கொண்டிருந்த வயதான மூதாட்டியைப் பெருவியப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன். ‘தேவரீர் கருணை பாலிக்க வேண்டுகிறேன்’என்ற அழுங்குரல் இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. நரம்பு தெறிக்கும் அவரது தோற்றத்தில் தெரிந்த ஏழ்மையும்கூட.

இரவுக்கே உரித்தான வசீகரம் எங்கும் பரவியிருந்தது. ஜனவரி மாதக் குளிர் தாங்காமல் கையோடு கொண்டுபோயிருந்த கம்பளிகளால் போர்த்திக்கொண்டோம். பொம்மலாட்டம் முடிந்து ‘லங்கா தகனம்’கூத்து ஆரம்பித்தது. கூத்துப் பார்க்க கிராமத்திலிருந்தும் நிறையப்பேர் வந்திருந்தார்கள். தாளவாத்தியமும் ஆர்மோனியமும் இழைந்து இழைந்து எங்களை உருவேற்றின. நான் அன்றைக்கு வழக்கத்தைவிட அதிகமாகச் சிரித்தேன் என்று இப்போது நினைத்துப் பார்க்கும்போது தோன்றுகிறது. அடிக்கடி காப்பி என்ற பெயரில் ஒரு பானம் அருந்தக் கிடைத்தது. இரவு ஏற ஏற அதில் பால் குறைந்து தண்ணீர் அதிகரித்தது. அந்தக் குளிருக்கு அது காப்பியைவிடவும் மேலானதாக இருந்ததை மறுப்பதற்கில்லை. பார்வையாளரின் உச்சபட்சக் கவனத்தை ஈர்த்திருந்தவர் மண்டோதரியாக வேடமேற்றிருந்த கனகராஜ் என்ற அரவாணிதான். அவர் சிவந்த நிறமும் மெல்லிய விரல்களும் சின்ன இடையுமாக வளைந்து நெளிந்து ஒயிலாக ஆடினார். ‘சுவாமீ…!’என்று அழைத்தபோது எங்களுக்குப் பக்கத்திலிருந்த பையன்கள் தாங்கள் ‘சுவாமி’களாயிருக்கக்கூடாதா என்று அந்தக் கணம் ஏங்கினார்கள். சீதை வந்தபோது சபையோர் தலைகள் தூக்கத்தில் ஆடியதையும் மண்டோதரி வந்தபோது மலர்ந்து விழித்ததையும் காணமுடிந்தது. உற்சாக மிகுதியால் ஆண்கள் சட்டைப்பைகளிலிருந்த ரூபாய்த்தாள்களை மண்டோதரியின் மேற்சட்டையில் குத்தினார்கள். ‘பெண்கள் குத்தக்கூடாதா’என்ற குரலையடுத்து அதுவும் நடந்தது.

தனியொருவராக அப்படியொரு கலை நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்துவதென்பது சாதாரண செயலல்ல என்று அன்றைக்கு எல்லோரும் பேசினார்கள். ஹரிகிருஷ்ணன் சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். உப்பும் உறைப்புமான சாம்பாரை அன்றைக்குத்தான் முதன்முதலில் சாப்பிட்டேன். சாப்பாடு முடிந்ததும் அரசமரம் ஒன்றின் கீழ் மேடை போட்டு அமர்ந்திருந்த பிள்ளையார் அருகில் வந்தமர்ந்தேன். அரசிலைகளின் சலசலப்பும் ஆர்மோனியக் குழைவுமாய் அந்த இரவு என்றைக்கும் மறக்கமுடியாததாகக் கழிந்துகொண்டிருந்தது.
************
‘இந்த ஒரு வாரமும் திட்டமிடாமல் சுற்றலாமே’என்று தோழி சொன்னதை நான் வழிமொழிந்திருந்தேன். சேலம் நிகழ்ச்சி ஏற்கெனவே முடிவெடுத்த ஒன்று. அதைத் தவிர்த்து அன்றைக்கு எங்கே போகலாமெனத் தோன்றுகிறதோ அங்கே போவதாக உத்தேசம். ஆனால், ஒரு தொலைபேசி அழைப்பால் எங்கள் பாதை திசை மாறப்போகிறதென்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை.

மறுநாள் மதியம் சேலம் வாழ் கவிதைத் தம்பதிகளான சரவணகுமார்-ஸ்ரீதேவி ஏற்பாட்டில், அவர்களது அலுவலகத்தில் ஒரு சின்னக்கூட்டம் நடைபெற்றது. பிரபஞ்சன், குட்டி ரேவதி, லஷ்மி சரவணகுமார், தமிழ்ச்செல்வன்(ச.தமிழ்ச்செல்வன் அல்ல) ஆதவன் தீட்சண்யா, சரவணகுமார், ஸ்ரீதேவி எனக்குப் பெயர்தெரியாத மேலும் சிலர் கலந்துகொண்டார்கள். ‘குறைவான ஆட்களைக்கொண்ட நிறைவான கூட்டம்’என்று அதைச் சொன்னால் மிகையில்லை. அரசியல் பிரபலங்கள் புத்தகம் போட்டாலன்றி இலக்கியக்கூட்டங்களுக்கு அப்படியொன்றும் கூட்டம் எகிறுவதில்லை என்பது நாமறிந்ததே. இந்தக் கூட்டத்தில் யாரும் அரங்கிற்கு வெளியில் போய் நிற்கவில்லை. யாரும் கொட்டாவி விடவில்லை. யாரும் ‘எப்படா இவன் நிறுத்துவான்’என்று ஏங்குமளவிற்குத் தனக்குத் தெரிந்ததையெல்லாம் நீட்டி முழக்கிக் கொட்டவுமில்லை. ஈழப்பெண்களின் கவிதைகள் கவனிக்கப்படுமளவிற்கு உயர்ந்ததொரு தளத்தை நோக்கிப் பயணிப்பதாகக் கவிஞர் குட்டி ரேவதி குறிப்பிட்டார். கவிதை என்பதே ஒரு ‘கிராப்ட்’தான்; அது கட்டமைக்கப்படுவதாக இருக்கிறது என்று ஆதவன் தீட்சண்யா சொன்னார். எனக்கு அதில் ஒப்புதல் இருக்கவில்லை. கவிதை என்பது இயல்பான ஒரு பொறியில் இருந்து தோன்றுவது என்பதே எனது கருத்தாக இருந்தது. ஏதோவொரு உணர்விலிருந்து முகிழ்க்கும் ஒரு சொல்லை அடிப்படையாக வைத்து, அதைச் சுற்றிச் சுற்றி நாம் வனைவதாகவோ புனைவதாகவோதான் கவிதை இருக்கமுடியும். முற்றிலும் கவிதை கட்டமைக்கப்படுவதில்லை என்பது எனது கருத்து. என்னுடையது ஒன்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் இரும்புக்கம்பிகளையொத்த அசைக்கமுடியாத கருத்தில்லை. விவாதிக்கத்தக்கதே.

நாங்கள் நினையாப்பிரகாரமாக திருச்சியில் இலக்கியக் கூட்டமொன்றில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டோம். ஏற்கெனவே ஆதவன் தீட்சண்யாவும் பிரபஞ்சன் அவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தைப் பற்றிச் சொல்வதாயின், பிரபஞ்சன் அவர்களது நகைச்சுவை கலந்த பேச்சைத்தான் குறிப்பிடவேண்டும். ‘சிரிப்பால் வெட்டுவது’என்றும் அப்பேச்சைச் சொல்லலாம். ‘நடுநிலை என்றொரு புண்ணாக்கும் இல்லை’என்ற தொனிப்பட ஆதவன் தீட்சண்யா பேசினார். ஒரு பத்திரிகை என்றால் அதற்கென்றொரு நிச்சய நிலைப்பாடு இருக்கவேண்டும். அதையொட்டியே படைப்புகளும் வெளியிடப்படவேண்டும். ‘ஆதிக்கக் குரல்களும், பாதிக்கப்படுவோரின் குரல்களும் எப்படி ஒரே தளத்தில் ஒலிக்கமுடியும்?’என்பது ஆதவனின் கேள்வியாக இருந்தது.

இரண்டுநாட்களும் இலக்கியவழியில் நடந்தோம். அவர்கள் பேசியதில் எனக்குப் பாதி புரியவில்லை. இந்திய சாதியமைப்பு பற்றி ஐயந்திரிபறப் படித்துவிட்டு இம்மாதிரி ஆட்களோடு பேச அமரலாம் என்று தோன்றியது. சில சமயங்களில் நித்திரையில் சாமியாடிவிட்டு படுக்கையைச் சேரவேண்டியிருந்தது.

திருச்சியை ஏறக்கட்டிவிட்டு இராமேஸ்வரம் புறப்பட்டோம். இதற்கிடையில் எனக்கும் எங்கள் வண்டியோட்டிக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரமடைந்துவிட்டிருந்தது. எப்போதும் வண்டியின் வேகமுள் நூறைத்தாண்டுவதில் குறியாயிருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. “நாங்கள் போகவேண்டிய இடத்திற்குத்தான் போகவிரும்புகிறோம். வைத்தியசாலைக்கு அல்ல”என்று ஒன்றுக்குப் பத்துத் தடவைகளுக்கு மேல் சொல்லியும் அவருக்குப் புரியவில்லை. பயணங்களில் வேகம் பதட்டமளிக்கிறது. வெளியில் எதையும் நிதானமாகப் பார்த்து ரசிப்பதை அது தடைசெய்கிறது. வண்டி நசுங்கி எங்கள் உடல்கள் வாழைக்குலைகள் போல வெளியில் தொங்கும் கற்பனை அடிக்கடி வர ஆரம்பித்தது. நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியபிறகு வண்டியோட்டி ‘நிதானமாக’ச் செலுத்த ஆரம்பித்தார். அதாவது நாற்பதில் வண்டி நகர்ந்து (நடந்து)கொண்டிருந்தது. ஆக, நான் போகச் சொன்ன எண்பதில் அவருக்குப் பாதிதான் புரிந்திருக்கிறது. ‘இந்தப் பொட்டைக் கழுதைங்க நம்மை என்ன சொல்வது?’என்ற வரிகளை அவரது முகத்திலிருந்து வாசித்தறிய முடிந்தது. ‘வண்டியை நிறுத்து. நாங்கள் இறங்கிக்கொள்கிறோம்’என்று குரலை உயர்த்தியபிறகே, தனது வீட்டுப் பெண்களை அதட்டுவதுபோல எங்களை அதட்டமுடியாது என்பதை உணர்ந்தவராக எண்பதில் ஓட்டவாரம்பித்தார். அதன்பிறகு வீடு வந்து சேரும்வரை வேகமுள் எண்பதிலிருந்து இம்மியும் அங்கிங்கு அசையவில்லை.

எங்கே போனாலும் இணையத்தில் ஈழம் தொடர்பான செய்திகளை ஒருநாளுக்கு ஒருமுறையேனும் பார்த்துவிடவேண்டும் என்ற தவிப்பில் இருந்தோம். அன்று தமிழ்நெற்றைப் பார்த்தபோது தலைசுற்றியது. வன்னியில் அகதிகளாக இருந்த மக்கள் மீது இலங்கை இராணுவம் எறிகணை வீச்சு நடத்தியதில் முன்னூறுக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நாளில் இறந்திருந்தார்கள். ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தார்கள். அந்தக் காட்சிகளையெல்லாம் நேரடியாகப் பார்த்த ஒருவரது குரலைப் பதிவுசெய்து இணையத்தில் இட்டிருந்தார்கள். “என்னைச் சுற்றவர மனிதர்கள் இறந்து கிடக்கிறார்கள். சதைத்துண்டுகள் சிதறியிருக்கின்றன. இரத்தம் வீதிநெடுகிலும் ஓடுகிறது. குழந்தைகள் பயத்தாலும் பசியாலும் அலறிக்கொண்டிருக்கிறார்கள். எனது கண்முன்னால் ஒருவர் உயிரிழந்த உடலொன்றைத் துவிச்சக்கரவண்டியின் பின்பக்கத்தில் வைத்து கயிற்றினால் கட்டி எடுத்துப்போய்க்கொண்டிருக்கிறார். இரவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. இங்கே எனக்குப் பக்கத்தில் இந்த மரணக்களத்தில் எஞ்சியிருக்கும் இத்தனை ஆயிரக்கணக்கானவர்களுக்கு சாப்பிடுவதற்கு ஒன்றுமேயில்லை”என்று குரல் நடுங்க அவர் சொன்னார். வண்டியிலிருந்து குதித்து இறங்கி எங்காவது ஓடிப்போய்விட வேண்டும் போலிருந்தது. கைகளை மடக்கி எதிரிலிருக்கும் எதனையாவது துவம்சம் செய்யவேண்டும்போலிருந்தது. நான் விம்மி வெடித்து அழுதேன். அது ஒன்றுதான் என்னால் செய்யமுடிந்தது. தோழி செய்வதறியாமல் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். ‘அழுவாதீங்க அக்கா’என்றார் வண்டியோட்டி. அழுது முடித்து வேறு வேலைக்குத் திரும்ப நாங்கள் இப்போதெல்லாம் பழகியிருக்கிறோம். பல்துலக்குவதுபோல, தலைவாருவதுபோல அழுவதும் பின் தெளிவதும் சாதாரண நிகழ்வாகிவிட்டிருக்கிறது.

பாம்பன் பாலத்தில் காற்று சுழற்றியடித்தது. கடல் பச்சை நிறமாயிருந்தது. எங்களைப் போலவே நிறையப் பேர் கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ‘கப்பல் வரும்போது இந்தப் புகையிரதப் பாதை விலகி வழிவிடும்’என்றார் தோழி. அதே போல ஒரு பாதை கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சிக்குப் போகும் வழியில் இருப்பது நினைவில் வந்தது.

இராமேஸ்வரம் யாத்திரீக நகரங்களுக்கேயுரிய முகக்களையோடிருந்தது. கடலில் முங்கிக் குளித்துக்கொண்டிருந்தவர்களுள் அநேகர் வடநாட்டுக்காரர்களாக இருந்தார்கள். உள்ளுர் பிராமணர்கள் வெளியூர் பிராமணர்கள் போல தோற்றமளித்தவர்களின் இறந்த உறவினர்களை மந்திரங்களால் குளிர்மைப்படுத்திக்கொண்டிருந்தார்கள். காற்று பல மொழிகளை ஏந்தி வந்தது. கடற்கரை துணிக்குவியலும், குப்பையுமாக கால்வைக்கக் கூசுமளவு அழுக்காக இருந்தது. அந்த அழுக்குக்குள் எதையோ கிண்டியபடி மாடுகள் வாயசைத்துக்கொண்டிருந்தன. இராமேஸ்வரத்திலும் சிவப்பு நிறச் சேலை கட்டிய நிறையப் பெண்களைப் பார்த்தேன். அவர்கள் மேல்மருவத்தூர் போய்விட்டு அப்படியே வந்தவர்களாயிருக்கும். அதே போல திரும்பும் வழியில் மஞ்சள் நிறச் சேலை கட்டிய பெண்கள் கூட்டமொன்று இளைப்பாறிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். ‘அவர்கள் சமயபுரம் போய்விட்டு வருகிறார்கள்’என்றார் தோழி. ஆக, பெண்களின் சுற்றுலா மையங்களும் கோயில்களாகவே இருக்கின்றன.

இராமேஸ்வரத்தில் ஒதுக்கப்பட்டிருந்த விடுதி அறை பரவாயில்லை ரகம்தான். ஆனால், அறையின் பின்புறம் இருந்த கடல் குறைகளை மூழ்கடித்துவிட்டது. அவசரமாகக் கிளம்பி தனுஷ்கோடி பார்க்கப் போனோம். எல்லா இடங்களிலும் காசு பிடுங்கும் கூட்டமொன்று வாயைத் திறந்துவைத்துக்கொண்டு காத்திருப்பது போல இங்கேயும் இருக்கிறது. தனுஷ்கோடிக்கரைக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஒழுங்குசெய்பவர்கள் மிகுந்த தந்திரக்காரர்களாயிருந்தார்கள். இருபது பேர் சேர்ந்தவுடன் ஒரு வாகனத்தில் ஏற்றி அனுப்புகிறார்கள். எங்கள் இருவருக்கும் முதல் வந்த வாகனத்தில் இடம் கிடைக்கவில்லை. ‘தனி வாகனம் எடுத்துக்கொள்ளுங்கள் 1200ரூபாதான்’ என்றார்கள். நாங்கள் மறுத்துவிட்டோம். பிறகு வந்த வாகனத்திலும் எங்களுக்கு இடம் கிடைக்காதபடி அவர்களே முன்னின்று முகாமைத்துவம் செய்து சனங்களை அடைத்துவிட்டார்கள். எங்களுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. தனியாக அழைத்துச் செல்வதனால் அவர்களுக்கு இலாபம் 1200 மட்டுந்தானா…? அதற்கும் மேலா…? என்று நாங்கள் யோசிக்க ஆரம்பித்தோம். அப்போது பார்த்து ஒரு வாகனம் வந்தது. அதில் நாங்கள் ஏறிக்கொள்ளக் கேட்டபோது, அது ஒரு குடும்பத்திற்கு மொத்தமாக முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாகச் சொன்னார் அதில் இருந்தவர். அவருக்கு இளகிய முகம். நான் தோழியின் முகத்தைப் பார்த்தேன். அவர் அந்த மனிதரிடம் எங்கள் பிரச்சனையைச் சொன்னார். முதலில் அவர் மறுத்தாலும், ‘இவர்களை நம்பி நாங்கள் இரு பெண்கள் எப்படித் தனியாகச் செல்லமுடியும்?’என்ற கேள்வியின் பின் ஏற்றிக்கொள்ளச் சம்மதித்தார். எங்களை ஏமாற்றலாம் என்று காத்திருந்தவர்களின் முகங்களை, சூழ்ந்துவந்த இருள் முழுவதுமாக மூடிக்கொண்டாற்போலிருந்தது. சற்றைக்கெல்லாம் ஒரு பெரிய பெண்கள் கூட்டம் பொங்கி வழியும் சிரிப்பும் பேச்சுமாக வந்து வண்டியில் ஏறிக்கொண்டது. எல்லோரும் ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருந்தார்கள். அறுபதிலிருந்து ஒன்றரை வயது வரை என பிராயம் மட்டுந்தான் வித்தியாசம். தங்களுக்குப் பூர்வீகம் திருநெல்வேலி என்றார்கள். தோழி ‘எனக்கும் திருநெல்வேலி பக்கந்தான்’என்றதும் முகமெல்லாம் அப்படியொரு வெளிச்சம் மின்ன ஒட்டிக்கொண்டார்கள்.

ஒழுங்கற்ற பாதையில் வண்டி விழுந்தெழும்பிப் போனது. ஏறத்தாழ இருபது நிமிடங்கள் பயணித்தபின் தனுஷ்கோடிக் கரையைச் சென்றடைந்தோம். தனுஷ்கோடியில் சொல்லில் எழுதமுடியாத அதிர்வுகளை உணர்ந்தேன். அந்தக் கடல் நான் எங்கும் பார்த்த கடல்போல இல்லை. அலை வந்து உடையும் ஓசைகூட வித்தியாசமாக இருந்தது. அந்த மாலைப்பொழுதின் தனிமையில் அது என் மனதின் கற்பிதமாயிருக்கலாம். காலத்தின் மீதமென நின்றுகொண்டிருந்தன தூர்ந்த செங்கற் கட்டிடங்கள். காய்ந்து பொருக்குத் தட்டிய மலக்குவியல்களால் கவனமாகப் பார்த்து கால்வைத்து நடக்கவேண்டியிருந்தது.

இந்த இடத்தை வாழத் தேர்ந்தெடுத்த மனம் எத்தகையதாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இங்கே குழந்தைகள் விளையாடியிருக்கும்… இங்கே காதலர்கள் அமர்ந்திருந்திருப்பார்கள்… இங்கே முழுநிலவில் கூடிப் பேசியிருப்பார்கள். இத்தனை சாதுவாக இருக்கும் கடலா இவர்களை விழுங்கியிருக்கும்? அடியறுத்திருக்கும்?

தனுஷ்கோடி என்றதும் எப்போதும் நினைவில் வருவது குழந்தைகளும் கையுமாக வந்து இறங்கும் அகதிகள்தான். இந்தக் காற்றில் அவர்களின் அழுகுரல் கலந்திருக்குமோ…? நான் இப்போது நின்று கொண்டிருக்கும் இடத்தில் அவர்கள் ஏங்கிய விழிகளுடன் காத்திருந்திருப்பார்களோ? கடல் முடியும் இடத்தில் மரங்களின் சாயல் சாம்பல் நிறத்தில் தெரிந்தது. தனுஷ்கோடி எனக்கு மன்னாரை ஏதோவொரு விதத்தில் நினைவுபடுத்துவதாகத் தோழியிடம் சொன்னேன். அக்கரையைக் கொஞ்சநேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். மனம் பாரமேறிக் கிடந்தது. ‘தனுஷ்கோடியைப் பற்றி கோணங்கிக்குத்தான் நிறையத் தெரியும்’ என்றார் தோழி.

இருள் முழுவதுமாக மூடவாரம்பித்தது. நாங்கள் எங்களோடு வந்தவர்களுடன் வாகனத்தில் ஏறிக்கொண்டோம். சிறுபுதர்களும் கடல் மணமும் மணல்வெட்டைகளும் அன்று கனவில் வந்தன.

**** ***** ****
காலையிலேயே எழுந்து சிவன் கோயிலுக்குப் போய்விட்டு மண்டபம் அகதி முகாமுக்குச் செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். கோயில் முழுவதும் சொதசொதவென்று ஈரமாக இருந்தது. இராமேஸ்வரக் கடலில் மூழ்கியெழுந்து அப்படியே ஈர உடைகளோடு கோயிலை வந்து தரிசித்தால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாம். ஈரச்சேலை காலைப் பிடித்து இழுக்க, முக்காடு போட்ட நிறைய வடநாட்டுப் பெண்கள் சுடுமணல் நடையில் சுவாமி தரிசனம் செய்தார்கள். தொந்தி பெருத்த ஆண்களுக்கும் குறைவில்லை. ஆன்மீகம் என்பது கேள்வி கேட்கப்படாத பல விசித்திரமான பழக்க வழக்கங்களை உடையதென்பதைத் தவிர்த்து எனக்குப் பெரிய அபிப்பிராயங்கள் இல்லை. இந்த விடயத்தை யாராவது இருத்தி வைத்து உபதேசித்தாலும் எழுந்தோடவே பார்க்கிறது மனம்.

மண்டபத்தில் எங்களுக்குக் கிடைத்த ‘மண்டகப்படி’யை வாழ்வில் மறக்கமுடியாது. அனுமதி பெற்றே உள்ளே செல்லவேண்டும் என்று பலர் சொல்லியிருந்தாலும், நாங்கள் பார்த்துவரப் போன பெண் ‘இல்லை.. முகாமில் தங்குவதென்றால் மட்டுந்தான் அனுமதி பெறவேண்டும். நீங்கள் எனக்குப் பின்னால் வாருங்கள்’என்று சொல்லியதை நம்பி உள்ளே காலடி எடுத்துவைத்தோம். வாசற்காவலர் போலிருந்த ஒருவர் ‘யாரைக் கேட்டு உள்ளே போறீங்க?’என்றார். அத்தோடு நிறுத்தியிருந்தாலாவது பரவாயில்லை. ‘இந்த மண்ணுல நிக்கிறவரைக்கும் நீ அகதிதான்… அது நினைப்புல இருக்கட்டும்… ஏதோ தொறந்த வூட்டுல நொழையுற மாதிரி நொழையுற’என்றார். ‘தேவையில்லாத டயலாக்கை எங்கள் மீது ஏன் பிரயோகிக்கிறார்… இதை வேறு யாருக்காவது முற்கூட்டியே தயார்செய்துவைத்துக் கொண்டு காத்திருந்து, அவர் வராமற் போன கடுப்பில் அவ்வார்த்தைகளை வியர்த்தமாக்கக்கூடாதென்று எங்கள் மீது பிரயோகிக்கிறாரா?’என்றெல்லாம் யோசனை எழுந்தது. சூடாக ஏதாவது சொல்லவேண்டுமென்று உதட்டுக்குள் சொற்கள் முண்டியடித்தன. ஆனால், காரியம் முக்கியம் என்பதனால் அப்பாவிகளாக முகத்தை வைத்துக்கொண்டு நின்றோம். ‘போய் கலெக்டர்ட்ட பர்மிசன் வாங்கிட்டு வாங்க’என்றார். பக்கத்துப் பெட்டிக்கடையில் அனுமதிப்பத்திரம் வாங்கி நிரப்பி கலெக்டரின் வாசல் முன் காத்துக்கிடந்தோம். அதற்கிடையில் ‘எதுக்கு வந்தீங்க?’என்று வெளியில் நின்றவர் ஒரு குட்டி விசாரணை நடத்தினார். சுவர்களுக்கும் அங்கே காதுகள் இருந்தன. அருகிலும் தொலைவிலும் பல கண்கள் எங்களைக் கவனித்துக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது. திரும்பிப் போய்விடலாமென்று தோன்றிக்கொண்டேயிருந்தது. கலெக்டர் ஒரு மணி நேரம் உள்ளே போய்வர அனுமதி தந்தார்.

நுழைந்தவுடன் ஒரு சிறிய எட்டடிக்கு எட்டடிக் கூடம். அதனையடுத்து சின்னதாய் ஓர் அறை. அதுதான் சமையலறையும் படுக்கையறையும். அதைப் பார்த்தபோது ‘பொங்க ஒரு மூலை… புணர ஒரு மூலை’என்ற கவிதை நினைவில் வந்தது. மின்விசிறி காற்றுக்குத் தவியாய் தவித்துக்கொண்டிருந்தது. அப்படியொரு அறைக்குள் மூன்று மாதக் குழந்தையொன்று வெகு அழகாய் ஒரு பெரிய தக்காளிப்பழம் போல என் மடியில் அமர்ந்திருந்தது. அதன் முகத்தைப் பார்க்கப் பார்க்கக் கலங்கியது. ஆனால், அவர்கள் உயிரோடிருக்கிறார்கள்; சாப்பிடுகிறார்கள்; நிம்மதியாக உறங்குகிறார்கள். இன்றைய கொலைக்காலத்தில் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

**** ***** *****
இராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்குப் போய், அந்த ‘உறங்கா நகரத்தை’அனுபவிப்பது என்ற எங்கள் திட்டம் மதுரை இளவரசர் மு.க.அழகிரியால் பிழைத்துப் போயிற்று. நாங்கள் நகரத்திற்குள் நுழைந்தபோது திரும்பிய இடமெல்லாம் மு.க.அழகிரியின் ‘கட் அவுட்’களைக் கண்டோம். ‘எங்கள் பிடல் காஸ்ட்ரோவே’, ‘எங்கள் குடும்பத் தலைவனே’(?), ‘எங்கள் நேதாஜியே’, ‘மதுரையின் மாமன்னனே’என்ற ஆளுயர எழுத்துக்களாலான அதியுயர்ந்த ‘கட் அவுட்’கள் எங்களைக் கலங்கடித்தன. விசாரித்ததில் மறுநாள் அவருக்குப் பிறந்தநாள் என்று சொன்னார்கள். ஓரளவு மரியாதைப்பட்ட விடுதிகளெல்லாம் ‘கொண்டாட’ வந்திருந்தோரால் நிறைந்திருந்தன. நேரே திருச்சிக்குப் போய்விடலாம் என்று நான் சொன்னேன். வந்ததுதான் வந்தோம் மதுரை மீனாட்சியைப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடலாமென்று போனோம். சுற்றி மாளாத கருங்கல் காவியம் அது.
திருச்சிக்கும் எங்களுக்கும் அப்படியொரு பிராப்தம். திட்டத்தில் இல்லாத நகரம் எங்களைத் திரும்பத் திரும்பத் தன்னிடம் இழுத்தது. நள்ளிரவு கடந்து நாங்கள் விடுதியை வந்தடைந்தபோது ஊர் உறங்கியிருந்தது. அறைப்பையன் ஒருவன் சுவரில் சாய்ந்து வாய்திறந்து தூங்கிக்கொண்டிருந்தான். மணிச்சத்தத்தில் விழித்து பைகளை எடுத்துக்கொண்டு அறைக்கு விரைந்தவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. எந்தக் கிராமத்து மடியிலோ உறங்கிக்கொண்டிருந்தவனை பணத்தேவை நகரத்தின் பெருவாயுள் திணித்திருக்கும்.
**** **** ****
நாங்கள் திரும்பிவந்த வழி மிக அழகானது. பச்சை ததும்பி வழியும் வயல்களைக் காற்று சலிக்காமல் வருடிக்கொண்டேயிருந்தது. மரங்களின் செழிப்பைப் பார்த்து ‘அப்படியே கடித்துத் தின்னவேண்டும் போலிருக்கிறது’என்றேன். தோழி வினோதப் பிராணியைப் பார்ப்பதுபோல என்னைப் பார்த்தார். ஆடுகள் கூட்டம் கூட்டமாகக் சாலையைக் கடந்துபோயின. தமிழ் சொட்டும் பெயர்களோடு ஊர்கள் எதிர்ப்பட்டன. தமிழகம் இத்தனை அழகானதா என்று அடிக்கடி வியக்கத் தூண்டிய பாதை அது. நிறைய சிற்றோடைகளை வழியில் நாங்கள் பார்த்தோம்.

வீடு வந்து சேர்ந்து சில நாட்களுக்கு ஓடிக்கொண்டிருப்பதுபோலவே இருந்தது. கண்ணை மூடினால் காடும் மரமும் வயலுமாய் கூடக் கூட ஓடிவந்தன. சில மாதங்களுக்கேனும் வீட்டோடு இருந்து இம்முறை வாங்கிய புத்தகங்களை வாசித்து முடித்துவிடவேண்டுமென்று சங்கற்பம் செய்துகொண்டேன். சங்கற்பங்களின் ஆயுளைப் பற்றி நானும் நீங்களும் அறியாதவர்களா என்ன? நாம் உறங்கிப்போனபிறகு, நம்மைக் குறித்து புத்தகங்கள் தமக்குள் கிசுகிசுத்துச் சிரித்துக்கொள்ளும்போலும்!
நன்றி: உயிரோசை