9.17.2007

பரவாயில்லை


பசியில் சுருண்ட ஒரு மனிதனின்
கடைசி உயிர்த்துளி சொட்டும் ஓசைக்காக மலைமுகடுகளில் காத்திருக்கின்றன
வல்லூறுகள்

வன்புணரப்பட்ட சிறுமியின்
கால் வழி பெருக்கெடுக்கும் குருதியை
இரகசியமாகத் துடைத்துக்கொண்டிருக்கிறாள்
எங்கோ ஓர் தாய்

காதலனின் மார்பு மயிரளைந்தபடி
கணவனின் நெஞ்சுவலி குறித்து விசனித்துக்கொண்டிருக்கிறாள்
தொலைபேசியில் ஒருத்தி

வீடு திரும்பச்சொல்லி இறைஞ்சும்
முதியதாயின் நெஞ்சில் கால்பதித்து
சாக்கடையில் தள்ளுகிறான்
ஒரு குடிகாரன்

பனங்கூடல்களுக்கிடையிலிருந்து
ஒலி்த்துக்கொண்டிருக்கிறது
இன்னமும் கண்திறக்காத பூனைக்குட்டிகள்
கத்தியலையும் சத்தம்

பாரவண்டிச் சாரதியிடம் திருட்டுக்கொடுத்த
அம்பது ரூபாவை நினைத்து விசும்பியபடி
வீடு திரும்பிக்கொண்டிருக்கிறாள்
நடுநிசி மல்லிகைப் பூக்காரியொருத்தி

இந்தக் குரூர உலகில்
நீயும் விடைசொல்லிப் பிரிகிறாய்
அதனாலென்ன…
பரவாயில்லை!

16 செப்டெம்பர் 2007